தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 83 நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 83 வது தேவாரத்தலம் நல்லூர் புராணபெயர் திருநல்லூர். மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர். இங்கு சிவன் சதுர ஆவுடையாராக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் தினமும் ஐந்து தடவை நிறம் மாறுகிறார். 1. தாமிர நிறம் 2. இளம் சிவப்பு 3. தங்க நிறம் 4. நவரத்தின பச்சை 5. இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம். இப்படி ஐந்து வண்ணத்தில் காட்சி தருவதால் இவர் பஞ்சவர்ணேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சிவலிங்கத் திருமேனி ஒரு நாளில் பகல் ஒன்றில் 6 நாழிகைக்கு ஒரு முறை ஐந்து தடவை நிறம் மாறுகிறார். பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை வழிபட்டதால் லிங்கத்தில் துளைகள் இருப்பதைக் காணலாம். மூலவருக்குப் பக்கத்தில் ஒரு சிறிய லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இது அகத்திய லிங்கம் எனப்படுகிறது. உற்சவர் கல்யாண சுந்தரேஸ்வரர். அம்பாள் கல்யாணசுந்தரி கிரிசுந்தரி. தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். தலவிருட்சம் வில்வம் மிகவும் பழமையானது. முதன் முதலாக தோன்றிய வில்வமரம் என்பதால் இதற்கு ஆதிமரம் என்ற பெயரும் உண்டு. தீர்த்தம் சப்த சாகரம். பிரம்மதேவர் இத்திருக்குளத்தின் கிழக்குத் திசையில் ரிக் வேதத்தையும் தெற்கு திசையில் யசூர் வேதத்தையும் மேற்குத் திசையில் சாம வேதத்தையும் வடக்கு திசையில் அதர்வண வேதத்தையும் நடுவில் சப்தகோடி மகா மந்திரங்களையும் பதிணென் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தலபுராணம் கூறுகிறது. திரிபுர சுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். முருகப் பெருமான் ஒரு முகம் நான்கு கரங்களுடன் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். எட்டு கைகளுடன் கூடிய அஷ்டபுஜ மகாகாளி இங்கு அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் ஆடும் நடராஜர் அகத்தியர் காசிவிஸ்வநாதர் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் காசி விஸ்வநாதர் கணநாதர் காசிவிநாயகர் பாணலிங்கம் விஸ்வநாதர் முருகன் நால்வர் குந்திதேவி தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா துர்க்கை சண்டிகேஸ்வரர் ஆகியோரை மண்டபங்களிலும் பிராகாரத்திலும் தரிசிக்கலாம். முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடமிருந்து தியாகராஜரைப் பெற்று திருவாரூர் செல்லும் போது இத்தலத்தில் 3 நாள் இருந்து தியாகராஜரை வைத்து பூஜை செய்துள்ளார். கொடிய அரக்கனாகிய இரண்யனைக் கொல்ல நரசிம்ம வடிவம் வேண்டி திருமால் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தார். அப்போது இத்தல இறைவன் தோன்றி நரசிம்ம வடிவத்தை திருமாலுக்கு அளித்தார். இரணியனை மாய்ந்த பின் தன் கருவறை விமானத்தின் உச்சியில் மேற்கு முகமாய் இருக்கவேண்டும் என்று இறைவன் பணித்தார். அதன்படி அந்த வடிவத்தை இன்றும் இந்த விமானத்தில் காணலாம்

பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் கோச்செங்கட் சோழன் கட்டிய ஒரு மாடக்கோவிலாகும். ஐந்து நிலை அழகான ராஜ கோபுரம் மற்றும் 3 நிலைகளையுடைய உள் கோபுரத்துடன் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் ஒரு விசாலமான இடம் உள்ளது. இந்தப் பிரகாரத்தில் கவசமிட்ட கொடிமரமும் அதற்கு முன்னால் கொடிமர விநாயகரும் உள்ளார். இதையடுத்து வடபுறம் வசந்த மண்டபமும் தென்புறம் அமர்நீதி நாயனார் தராசுத் தட்டில் ஏறி அமர்ந்த துலா மண்டபமும் உள்ளன. 63 நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனார் தனது மனைவி மற்றும் மகனுடன் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு முக்தி பெற்ற தலம் திருநல்லூர். இத்தலத்தில் அமர்நீதி நாயனார் அவர் மனைவி மகன் அருகில் அந்தணர் உருவில் இறைவன் ஆகியோர் உருவச் சிலைகள் உள்ளது. ஒருசமயம் ஆதிசேசனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேசன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேசன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் ஒன்றை திருநல்லூரிலும் மற்றொன்றை அருகிலுள்ள ஆவூரிலும் விடுவித்தார். நல்லூரில் விழுந்த அம்மலைச் சிகரமே இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எழுந்தருளியுள்ள மலையாகும். தென் கயிலாயம் என்று இத்தலமும் வழங்கப்படுகின்றது.

இமய மலையில் பார்வதியை சிவன் திருமணம் செய்யும் காட்சியைக்காண உலகில் உள்ள உயிரினங்களும் திரண்டு நின்றன. இதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென் திசைக்கு செல்லும் படி சிவபெருமான் ஆணையிட்டார். தனக்கு திருமணத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என எண்ணிய அகத்தியருக்கு நினைக்கும் போது திருமண காட்சியை கொடுப்பதாக இறைவன் வரமளிக்கிறார். அதன்படி இத்தலம் வந்து திருமணக் காட்சியை காண எண்ணிய அகத்தியருக்கு இறைவன் இத்தலத்தில் திருமணக்காட்சி காட்டியருளினார். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்தார். சிவலிங்கத்தின் பின்னால் அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய கல்யாண சுந்தரர் உருவம் சுதை வடிவில் காட்சியளிக்கின்றது. இருபக்கத்திலும் திருமாலும் பிரம்மாவும் காட்சி தர அகத்தியர் வழிபடும் நிலையில் நிற்கின்றார். அகத்தியர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலலிங்கத்தின் பின்புறம் கருவறையில் காணலாம். திருநாவுக்கரசர் திருச்சத்திமுற்றத்தில் இறைவன் தன்னுடைய திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்து அருள வேண்டும் என்று இறைவனிடம் பதிகம் பாடி வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இறைவன் இத்தலத்தில் திருநாவுக்கரசருக்கு பாத தரிசனம் தந்தார். அன்று முதல் இங்கு பெருமாள் கோயிலைப் போல சடாரி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி மாசி மகத்தின் போது கோயிலுக்குள் உலா வருவார். மாடக்கோயிலின் படிகள் வழியாக இவர் இறங்கும் போது அடியார்கள் வெண்சாமரமும் விசிறியும் வீசுவார்கள். ஆனாலும் கூட பெருமாளின் முகத்தில் வியர்வை துளிகள் அரும்புவதைக் காணலாம். இத்தலத்தின் மேற்கு கோபுர வாயிலில் மேல்புறம் பலிபீட வடிவில் கணநாதர் வீற்றிருக்கிறார். இந்த வடிவத்துடன் இத்தலத்திலும் காசியிலும் மட்டுமே கணநாதர் வழிபடப்படுகிறார். ஆண்டுக்கு ஒருமுறை இரவில் நடக்கும் கணநாதர் பூஜை சிறப்பானது. அன்றைய தினம் இந்த ஊரிலும் பக்கத்து ஊரிலும் உள்ள மக்கள் தங்கள் பசு ஒரு வேளை கறக்கும் பாலை அப்படியே கொடுத்து இப்பூஜையில் கலந்து கொள்கின்றனர். இந்த பூஜையை பக்தர்கள் பார்க்க முடியாது.

பாண்டவர்களின் தாய் குந்திதேவி பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் என்பதால் அவளுக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க குந்தி தேவி நாரதரிடம் யோசனை கேட்கிறாள். ஏழு கடல்களில் நீராடினால் தோஷம் நீங்கும் என நாரதர் கூறினார். நான் பெண் என்னால் எப்படி ஏழு கடல்களில் சென்று நீராட முடியும் எனவே வேறு ஏதாவது வழி கூற வேண்டும் என்கிறாள் குந்தி. அப்படியானால் கும்பகோணம் அருகிலுள்ள நல்லூர் சென்று 48 நாட்கள் கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபடு. அதற்குள் நான் வேறு வழி சொல்கிறேன் என்கிறார் நாரதர். குந்தி வழிபாடு செய்து வருவதற்குள் நல்லூர் தலத்திலுள்ள குளத்தில் ஏழு கடல்களின் நீரையும் நாரதர் சேர்த்து விடுகிறார். மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி தன் தோஷம் நீங்க நல்லூர் குளத்தில் நீராடி தன் தோஷங்கள் நீங்கப் பெற்றாள். மகம் நட்சத்திரத்திற்குரிய கோயில் நல்லூர் என்றும் இக்குளத்தில் நீராடினால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்று தல புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தில் முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடல்கள் பாபாடியுள்ளனர்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -7

பாஞ்சால நாட்டில் பாண்டவர்கள் இருக்கும் பொழுது அவர்களை அழைத்து வர விதுரருக்கு திருதராஷ்டிரர் கட்டளையிட்ட போது மகிழ்ச்சியுடன் சென்ற விதுரர் இப்பொழுது திருதராஷ்டிரன் ஆணைப்படி இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அஸ்தினாபுரத்திற்கு பாண்டவர்களை அழைத்து வர தயங்கினார். ஆயினும் அரசனுடைய ஆணைக்கு உட்பட்டு விதுரர் அங்கு சென்றார். பாண்டவர்கள் கருத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கும் விதுரருடைய வருகை யுதிஷ்டிரனுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் அவருடைய முகத்தில் அமைந்திருந்த கவலையை யுதிஷ்டிரன் கவனித்து விட்டான். அவரின் கவலைக்கு காரணம் என்ன என்று கேட்ட பொழுது அதற்கு அஸ்தினாபுரம் அருகே புதிய சபை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் பகடை விளையாட பாண்டவர்களை திருதராஷ்டிரன் அழைக்கிறார் என்று விதுரர் விஷயத்தை விளக்கி கூறினார்.

யுதிஷ்டிரனுக்கு இந்த சூழ்ச்சியின் உட்கருத்து உடனே விளங்கியது. பல தீமைகளுக்கு காரணம் சூதாட்டம் என்பது அவனுக்குத் தெரியும் அவன் மேலும் விசாரித்த போது சகுனியும் இன்னும் சில திறமை வாய்ந்தவர்கள் அந்த விளையாட்டில் கலந்து கொள்வார்கள் என்பது தெரிந்தது. பகடை விளையாட்டில் யுதிஷ்டிரன் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் இருந்தான். விளையாட்டில் ஈடுபடும்படி மன்னராகிய பெரியப்பாவிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. அவருடைய உத்தரவுக்கு அடிபணிவது தன் கடமை என யுதிஷ்டிரன் எண்ணினான். மேலும் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள அவன் கடமைப் பட்டிருந்தான். க்ஷத்திரர்களை விளையாட்டுப் போட்டிக்கு கூப்பிட்டால் அதற்கு மறுப்பு கூறுவது முறை ஆகாது. அழைப்பை ஏற்றுக் கொள்வதே முறை. இவ்வாறு வடிவெடுத்து வந்த சூழ்நிலைகள் யுதிஷ்டிரனுக்கு கேடுகாலமாக உருவெடுக்க ஆரம்பித்தது. அமைதியாக இதனை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி எதுவும் அவனுக்கு தெரியவில்லை. தெய்வச் செயலாக வருவது வரட்டும் என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய உற்றார் உறவினருடன் அவன் அஸ்தினாபுரம் புறப்பட்டுச் சென்றான்

தன் தம்பியாகிய பாண்டுவின் புதல்வர்களை திருதராஷ்டிர மன்னன் பேரன்புடன் வரவேற்றான். வசதிகள் நிறைந்த மண்டபங்களில் ஆங்காங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். உள்ளன்போடும் ஊக்கத்தோடும் கௌரவர்கள் அவர்களோடு நடந்து கொண்டனர். அவர்களுக்கிடையில் இருந்த மன வேறுபாடுகள் எல்லாம் அறவே அகற்றப்பட்டது போன்று தென்பட்டது. அத்தகைய அமைப்பே பாண்டவர்களை அழிப்பதற்கு முதல் சூழ்ச்சியாக இருந்தது.

பாண்டவர்களை படுகுழியில் ஆழ்த்தும் துர்தினமும் வந்தது. புதிதாக அமைக்கப்பட்டிருந்த சபாமண்டபத்தை பார்க்க அழைத்துச் சென்று அதன் அமைப்பு அவர்களுக்கு காட்டப்பட்டது. அதன் பிறகு பொழுது போக்காக பகடை விளையாடலாம் என்று சகுனி சொன்னான். யுதிஷ்டிரனுக்கு அந்த விளையாட்டின் மீது சிறிது நாட்டம் இருந்தது. எனினும் அதை குறித்து அவன் இப்பகடை விளையாட்டு ஏமாற்றுவதற்கென்றே அமைந்துள்ளது. பிறரை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சூதாட்டம் மனிதனுடைய பகுத்தறிவை விரட்டுகிறது. அது மதுபானத்திற்கு நிகரான மயக்கத்தை உண்டு பண்ணவல்லது என்று யுதிஷ்டிரன் சகுனியிடம் சொன்னான்

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 51 திருஐயாறு (திருவையாறு)

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 51 வது தேவாரத்தலம் திருஐயாறு (திருவையாறு) ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால் இப்பெயர் பெற்றது. மூலவர் பஞ்சநதீஸ்வரர் ஐயாற்றீசர் செம்பொற்சோதீஸ்வரர் பிரணதார்த்திஹரன் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த லிங்கம் ஒரு பிருத்வி லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். அம்பாள் அறம்வளர்த்த நாயகி தர்மசம்வர்த்தினி. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும். உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள். எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும் மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள். எனவே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது.

சுவாமி பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட தட்சிணாமூர்த்தி தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவரை ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சினாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வலது கரங்களில் கபாலம் அபய முத்திரையும் இடது கரங்களில் சூலம் வேதச்சுவடிகள் தாங்கியும் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து தட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் இது. திருவீழிமிசையில் கண் மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால் வேதங்களின் பெருமைகளை உணர்ந்து இந்தத் தலத்துக்கு வந்து தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. எனவே இக்கோவில் குரு ஸ்தலம் என்று போற்றப்படுகிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழே முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளார். தலமரம் வில்வம். தீர்த்தம் சூரியபுட்கரணி மற்றும் காவிரி. சிவனின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலுள் ஐயாறப்பர் கோயில் தென் கயிலைக் கோயில் ஒலோகமாதேவீச்சரம் என்று மூன்று கோயில்கள் உள்ளன. கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. அந்த அளவிற்கு இந்த கோயிலில் கட்டடக்கலை அமைந்துள்ளது. வெளிநாட்டில் உள்ள இன்ஜினியர்கள் இந்த சப்தம் கேட்பது பற்றி ஆய்வு செய்தனர். ஆனால் இதற்கான காரணத்தை அறிய முடியவில்லை.

கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளையுடைய ராஜகோபுரமும் 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். இரண்டாம் பிரகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுர மண்டபத்தில் பஞ்சபூதலிங்கங்களும் சப்தமாதர்களும் ஆதிவிநாயகரும் நவகிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் இச்சுற்றில் விநாயகர் சுப்பிரமணியர் சோமஸ்கந்தர் தட்சினாமூர்த்தி நடராஜர் ஆகிய திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன. நான்காம் பிரகாரத்தில் சூரியபுஷ்கரணி தீர்த்தமும் அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் அமைந்துள்ளன. இச்சுற்றின் 4 புறமும் கோபுரங்கள் இருக்கின்றன. ஐந்தாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும் அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி கருவறை விமானத்தின் பின்புறக் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சற்று மாறுபட்டது. வழக்கமாக அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களில் சிவபெருமான் வலப்புறமும் உமையம்மை இடப்புறமும் தான் காணப்படுவர். ஆனால் இங்கு சிவன் இடப்புறமும் உமை வலப்புறமும் அமைந்திருப்பதைக் காணலாம். இத்தலத்தில் முருகப்பெருமான் வில் வேல் அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக தனுசுசுப்ரமணியம் என்ற பெயருடன் விளஙகுகிறார். இவர் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில் விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர். நவக்கிரகங்களில் இக்கோவில் சூரிய தலமாகும். சூரியன் இந்த கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.

இத்தலத்திலுள்ள வடகயிலாயம் தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை. இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடபுறம் ஓலோக மாதேவீச்சுரம் என்ற கற்கோவில் உள்ளது. இது வட கைலாயம் எனப்படும். அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் முதலாம் ராஜராஜசோழனின் பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது. மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் தென் கைலாயம் எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் ராஜேந்தர சோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன் மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே இந்த ஆட்கொண்டாரின் உருவம். இவருக்கு வடைமாலை சாத்துகிறார்கள். சில சமயங்களில் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் சாற்றப்படுவதுண்டு. இங்குள்ள தியான மண்டபம் கட்டப்பட்ட விதம் அபூர்வமானது. சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து இது கட்டப்பட்டது. அப்போது அங்கு நான்கு குழிகள் தோண்டி அதில் தங்கமும் வெள்ளியும் போட்டு வைத்திருந்தனர். இதனை கட்டியவர்கள் தங்களுக்கு கூலியாக தங்களால் முடிந்த அளவு இவற்றை அள்ளிச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இந்த நான்கு குழிகளும் இப்போதும் உள்ளன.

இக்கோவில் இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அவ்வூர் அரசனுக்கு சென்றது. அவன் உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்த போது சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊரிலிருந்து திரும்பினார். ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். இறைவன் இந்த அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரிய வந்தது. திருநாவுக்கரசர் கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க விரும்பினர். காசியில் தன்னுடன் வந்த அடியார்களை தங்கியிருக்குமாறு சொல்லிவிட்டு தனித்துப் புறப்பட்டார். கைலாயப் பயணம் மிகவும் கடினமாக இருந்ததால் முதலில் நடந்து சென்ற அவர் பிறகு நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப் பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். அருகில் ஒரு குளத்தை ஏற்படுத்தி ஒரு முனிவர் வேடத்தில் அவரை நெருங்கி கைலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கைலைநாதனைக் காணாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை ஆகாயத்தில் இருந்து அசரீரியாக அழைத்த சிவபெருமான் அங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய் அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார். அதே போல் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் சூரியபுஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்தார். சிவபெருமான் தான் கூறியபடி அவருக்கு கைலாயக் காட்சி தந்து அருளினார்.

சிலாத முனிவர் என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. அவரது தந்தை குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால் நந்தி வாய்நுரைநீர் அமிர்தம் சைவ தீர்த்தம் சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். நந்திகேசர் தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதை அறிந்து கழுத்தளவு குளத்தின் நீரில் நின்று கடுந்தவம் புரிந்தான். ஏழுகோடி முறை ஓம் நமசிவாய உருத்திர ஜபம் செய்தார். தவத்தை ஏற்றுக் கொண்ட இறைவன் ஞானோபதேசமும் நந்தீசர் எனும் தீட்சாநாமமும் சிவகணத் தலைமையும் முதல் குருநாதன் என்ற தகுதியையும் அருளினார். அத்துடன் இறைவன் தாமே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் மகளை சுயசாம்பிகையை பங்குனிப் புனர்பூச நட்சத்திரத்தன்று திருமணம் செய்துவைத்தார். சுந்தரரும் சேரமான் நாயனாரும் அக்கோவில் இறைவனை தரிசிக்க வரும்போது காவிரியின் இரு பக்கத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுந்தரர் பதிகம் பாடியதும் வெள்ளம் ஒதுங்கி நின்று இருவருக்கும் வழி தந்தது. பிற்காலச் சோழர் பாண்டியர் மற்றும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. திருநந்தி தேவர் லட்சுமி இந்திரன் வருணண் வாலி சேரமான் பெருமாள் ஐயடிகள் காடவர்கோன் பட்டினத்துப் பிள்ளையார் அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். அருணகிரிநாதர் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 50 திருப்பழனம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 50 வது தேவாரத்தலம் திருப்பழனம். அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த இடமாதலால் திருப்பழனம் என்று பெயர். கதலிவனம் மற்றும் பிரயாணபுரி என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. மூலவர் ஆபத்சகாயர். பிரயாணபுரீசர் அமுதலிங்கேசர் சுதாலிங்கமூர்த்தி கரிதலேஸ்வரர் பழனநகரார் என்ற பெயர்களும் உண்டு. சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன்பின் இரண்டு நாட்களிலும் நிலா சுவாமியின் மேல்படுகிறது. அம்பாள் பெரியநாயகி. ஆபத்சகாயர் சன்னிதிக்கு சற்று முன்பாகவே சிறிய மண்டபத்தில் சுந்தர நாயகி அருள் பாலிக்கிறார். தலமரம் வாழை வில்வம். தீர்த்தம் மங்களதீர்த்தம் (தற்போது இல்லை). பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கொடிமரம் இல்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர் சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளது. முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பக்கம் பிரகாரத்தில் சப்த மாதர்கள் விநாயகர் வேணுகோபாலர் சந்நிதிகளும் பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும் நடராஜர் சபையும் பைரவர் நவக்கிரகமும் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களில் மேல் தளத்தில் கிழக்கே சிவன் மற்றும் பார்வதி நின்ற நிலையிலும் தெற்கே வீணாதர தக்ஷிணாமூர்த்தி நின்ற நிலையிலும் மேற்கு திசையில் அண்ணாமலையார் நின்ற நிலையிலும் வடக்கே பிரம்மா நின்ற நிலையிலும் உள்ளனர். அர்த மண்டபத்தில் தென்திசை நோக்கி அதிகார நந்தி கூப்பிய கரத்துடன் உடைவாளுடன் உள்ளார். சுவாமி சன்னிதிக்குப் பின்புரம் பிரகாரத்தில் சுப்பிரமணியர் இருக்கவேண்டிய இடத்தில் வேணுகோபாலர் குழலுடன் இருக்கிறார்.

கோவில் புராணத்தில் இத்தலத்து இறைவனுக்கு லட்சுமி வணங்கி வரம் பல பெற்றுத் தன் இருப்பிடம் புறப்பட்டதால் இத்தலத்திற்குப் பிரயாணபுரி என்றும் இறைவனுக்கு பிரயாணபுரீசர் என்றும் பெயர் வந்தது. பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமுதத்தில் கெளசிகர் பங்கைப் பத்திரமாக ஒரு பாத்திரத்தில் மூடி வைத்திருந்தார். இதனை அறிந்து கொள்ளையடிக்க வந்த அசுரரை இத்தலத்து இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட ஐயனார் காளி மூலம் அளிக்கப்பட்டார்கள். பின்பு கௌசிகர் அமுதத்தை கொண்டு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார்.

கௌதம நதி தீர்த்தத்தில் இருந்து சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன் பெற்றோரை இழந்து அமைதி நாடி தல யாத்திரையாக வந்தான். அச்சிறுவன் திருப்பழனத்தில் ஒரு இரவு தங்கினான். அன்று கனவில் எமதர்மன் தோன்றி இன்று முதல் ஐந்தாம் நாள் நீ மரணம் அடைவாய் எனக் கூறி மறைந்தான். இதனைக் கேட்ட சிறுவன் பயம் கொண்டு திருப்பழனப் பிரானை சரணடைந்தான். சிவபெருமான் அசிரீரியாக நீ திருவையாற்றுக்குச் சென்றால் உயிர் பிழைத்துக்கொள்வாய் என்று அச்சிறுவனுக்கு ஏற்ப்பட்ட ஆபத்திற்கு உதவி செய்ததார். எனவே இத்தல இறைவன் ஆபத்சகாயர் என அழைக்கப்பட்டார். சந்திரன் குபேரன் திருமால் திருமகள் ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். தர்மசர்மா என்னும் அந்தணன் பூசித்து பேறுபெற்ற தலம். இத்தலம் சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும். அப்பூதி அடிகளின் அவதாரத் தலம். திருநாவுக்கரசர் தனது பதிகங்களில் அப்பூதி அடிகளின் தொண்டினைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 48 திருவைகாவூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 48 வது தேவாரத்தலம் திருவைகாவூர். மூலவர் வில்வவனேஸ்வரர் வில்வவனநாதர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சர்வஜனரக்ஷகி வளைக்கைநாயகி. அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீ சக்கரம் உள்ளது. தலமரம் வில்வம் தீர்த்தம் எமதீர்த்தம். புராண பெயர் வில்வவனம். மகா சிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவ விழாவுக்கு காரணமான தலம். இத்தலத்தில்தான் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நந்திகேசுவரர் எதிர்புறமாக திரும்பி இருக்கிறார். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை. அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும் பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள். அருகில் கையில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தி இருக்கிறார். பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படுகிறது. வேதங்கள் வில்வ வடிவில் நின்று இத்தலத்தில் தவம் புரிவதாக புராணம் கூறுகிறது. ஊழிக் காலத்தில் அனைத்து மழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள் சிவபெருமானை வணங்கி தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் அப்பெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு வில்வவனேசுவரர் என்றும் பெயர் வந்தது.

இக்கோவிலில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகின்றார். முகப்பு வாயில் மட்டுமே ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது. உள் நுழைந்தால் நந்தி நம்மை நோக்கி திரும்பி (கிழக்கு நோக்கி) இருப்பதைக் காணலாம். உள் கோபுரவாயில் நுழைந்தால் வாயிலில் இடது பக்கம் வேடன் நிகழ்ச்சி கதையால் சித்தரிக்கப்பட்டுள்ளது. வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சன்னதியும் சுந்தரமூர்த்தி விநாயகர் சன்னதியும் வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சன்னதியும் உள்ளன. இங்குள்ள சுப்பிரமணியர் சிலை கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. சிக்கல் எண்கண் எட்டுக்குடி பட்டுகுடி ஆகிய தலங்களிலுள்ள முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது. முருகன் கையிலுள்ள ரேகைககள் மயிலின் தோகைகள் மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. ஒரே கல்லில் மயில் திருவாட்சி ஆகியன ஒன்றாக அமைந்த ஆறுமுகம் கொண்ட சண்முகர் இங்கு உள்ளார். கை ரேகை நகம் எல்லாமே அந்த சிற்பத்தில் தெளிவாக தெரியும். இதில் மயில் இடப்புறமாக திரும்பியிருக்கிறது. அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.

பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படும் தலம் இது. மணக்கோலத்தில் மணமக்கள் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் உட்கார்ந்திருப்பரோ அது போல் சுவாமி அம்பாள் சந்நிதிகள் நேர்கோட்டில் உள்ளன. உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும் இங்கு சிவனை வேண்டி சாபநிவர்த்தி பெற்றார்கள். மற்ற கோவில்களில் சப்த மாதாக்கள்தான் வழிப்பட்டதாக வரலாறு இருக்கும். இத்தலத்தில் சப்த கன்னிகள் வழிபட்டுள்ளனர். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை. யம பயம் தீர்த்த தலமாக திருவைகாவூர் விளங்குகிறது.

இந்த ஊரில்தான் சிவராத்திரி பிறந்தது. சிவனுக்கு விசேஷ பூஜைகளுடன் சிவராத்திரி விழா இங்கு விமரிசையாக நடக்கும். நான்காம் யாமத்தில் வேடன் வேடுவச்சி இறைவன் காட்சி புறப்பாடு நடைபெறுகிறது. மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி மூலஸ்தானத்தில் சிவனுக்கும் அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவார்கள். வேடன் மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன் வேடன் வேடுவச்சியும் புறப்பாடாவார்கள். மதியம் எம தீர்த்தத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார்கள். இரவில் சுவாமி அம்பாள் இருவரும் ஒரு ஓலைச் சப்பரத்தில் எழுந்தருளுவார்கள். இந்த சப்பரம் விசேஷமாக மூங்கில் கீற்றில் தென்னை ஓலைகளைக் கட்டி பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.

தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றை துரத்திக் கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலி வடிவமெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறு வழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்து விடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன. அன்று மகா சிவராத்திரி நாள் ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனை அறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவர் யமன் வருவதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி யமனை விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். இறைவனுக்கு பயந்த நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவர் விடுவிக்கப்பட்டார். பின்பு ஆலய எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது. கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நந்திகேசுவரர் கோவிலுக்குள் யார் வருகிறார்கள் என்று பார்ப்பதற்காக எதிர்புறமாக திரும்பி இருக்கிறார்.

குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோயில். சோழர் காலப் பாணியில் இக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 47. திருக்கடையூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 47 வது தேவாரத்தலம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆகும். புராண பெயர்கள் திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமாந்திரத்தலம். திருமால் முதலிய தேவர்கள் தூய்மையான இடத்தில் அமிர்தத்தை உண்ண வேண்டுமென்று அமிர்த குடத்தை இங்குக் கொண்டு வந்து வைத்தமையால் இத்தலம் கடபுரி அல்லது கடவூர் என்று பெயர் பெற்றது. மூலவர் அமிர்தகடேஸ்வரர் வேறு பெயர் அமிர்தலிங்கேசுவரர். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். உற்சவர் காலசம்காரமூா்த்தி. அம்பாள் அபிராமியம்மன். வேறு பெயர்கள் அபிராமி தேவி, அபிராமசுந்தாி, அபிராமநாயகி, அபிராமவல்லி, அபிநயசரசநாயகி, அபிநயசுந்தாி, அமுதகடேஸ்வாி, அமுதநாயகி, அமுதாதேவி, அழகியமுலைநாயகி இடையழகுசுந்தாி, அஞ்சுகமொழியாள், ரத்னதொடுடையாள், ரத்னாம்பிகை, சுகுந்தகுளாம்பிகை, சுகந்தினாவதி, சுகம்தந்தநாயகி, சுகுணாம்பிகை, சந்திரஜோதி, சந்திரஆா்த்தி, சந்திரசேகாி, ஞானசோரூபினி, கனிமொழியாள் என பல பெயர்கள் உள்ளது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இக்கோயில் கால சக்தி பீடம் ஆகும். தல விருட்சம் வில்வம் மற்றும் பிஞ்சிலம் என்ற ஜாதிமுல்லை. தீர்த்தம் அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம், சிவகங்கை, மார்க்கண்டேய தீர்த்தம், கால தீர்த்தம். பிரகாரத்தில் ஒரு சன்னதியில் பார்வதி முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் குகாம்பிகையாக அருள் பாலிக்கிறாள்.

ஒருசமயம் பிரம்மதேவர் ஞான உபதேசம் பெறும் எண்ணத்தோடு கயிலாய மலை சென்றார். சிவபெருமானும் பிரம்மதேவரின் வேண்டுகோளின்படி அவரிடம் வில்வ விதைகளை அளித்தார். பூவுலகில் எந்த இடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் (24 நிமிடங்கள்) வில்வ மரம் வளர்கிறதோ அந்த இடத்தில் ஞான உபதேசம் அளிப்பதாக உறுதி அளிக்கிறார். அதன்படி பிரம்ம தேவர் விதைத்த வில்வ விதை இத்தலத்தில் 24 நிமிடத்தில் மரமாக வளர்ந்தது. இங்கு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமானும் அவருக்கு அருட்காட்சி அளித்து ஞான உபதேசம் செய்து வைத்தார். கோயிலில் மூல மூர்த்தியாக சிவனே ஆதி வில்வநாதராக தனிசன்னநிதியில் அருள்பாலிக்கிறார். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் கிடைக்கப் பெற்ற தேவர்கள் மகிழ்ச்சியில் விநாயகப் பெருமானை தரிசிக்காமல் சென்றனர். இதில் கோபமடைந்த விநாயகர் அந்த அமிர்தக் கலசத்தை மறைத்து வைத்தார். தங்கள் தவற்றை உணர்ந்த தேவர்கள் விநாயகரை வணங்கி அவரிடம் இருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்று சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அப்போது அமிர்தக் கலசம் இருந்த இடத்தில் சிவலிங்கம் தோன்றியது. அப்படி அமிர்தத்தில் இருந்து தோன்றியதால் சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த அமிர்தத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும் முன் சிவபூஜை செய்ய எண்ணினார். சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.

திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள் அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின் புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும். அட்டவீரட்ட தலங்களில் இத்தலம் எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். முருகப் பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப் பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும். இந்த வினாயகர் துதிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார். இத்தலத்தில் காலசம்ஹாரமூர்த்தி சன்னதிக்கு நேரே எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் எருமை நிற்கிறது. கால சம்கார மூர்த்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம் கம்பீரம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார். நவகிரகங்கள் இங்கு கிடையாது. நவகிரக பூஜைகள் இங்கு கால சம்கார மூர்த்திக்கே செய்யப்படுகிறது.

திருமணம் செய்து கொண்டவர்கள் தங்களது 50 ஆம் திருமண விழா பூஜையும் 59 வயது பூர்த்தியாகி 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜையும் 60 வயது பூர்த்தியாகி 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜையும் 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜையும் 80 வயது பூர்த்தியாகி 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் 90 வயது பூர்த்தியாகி 91 வயது தொடங்குகிறவர்கள் கனகாபிஷேகம் பூஜையும் 100 வயது தொடங்குகிறவர்கள் பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் இக்கோயிலில் செய்யப்படுகிறது. இந்த பூஜைகள் செய்பவர்கள் திதி நாள் நட்சத்திரம் எதுவும் பார்க்கத் தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது. இந்த பூஜைகளை செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு வருகிறார்கள். மேலும் ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பூஜைகள் செய்யப்படுகிறது.

இந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டரான அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு தோன்றியவர் சுப்பிரமணியன் என்ற புதல்வன். தம் புதல்வனுக்கு சங்கீதப் பயிற்சியும் குடும்பத்தின் பரம்பரை யான தேவி உபாசனையும் அறியச் செய்தார் அமிர்தலிங்கம். இளமை முதல் அபிராமி அம்பாளின் மேல் தனிப்பற்றும் பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார் சுப்பிரமணிய ஐயர். தமிழ் தவிர வடமொழியிலும் சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். தம் உள்ளத்தில் அன்னையிடம் தோன்றும் அன்பின் விளைவாக பல பாடல்களைத் தாமே இயற்றிப் பாடி வந்தார். யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை கிரியை என்பவற்றைக் கடந்து யோக நிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச் சென்று சஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளி மயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும் அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் பைத்தியமாய் ஆகி போய்விட்டார் என்று சொல்லித் திட்ட ஆரம்பித்தனர். அதைக் காதில் வாங்காமல் அபிராமியைத் துதிப்பதும் பாடல்கள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார் சுப்ரமணிய ஐயர்.

தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறி அதற்கேற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வது அவரது தந்தையான அத்யான பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும். அக்காலத்தில் தஞ்சையைத் தலை நகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணி தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக் கடனை நிறைவு செய்தபின் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்ய என்று திருக்கடவூரை அடைந்தார். திருக்கோயிலில் தரிசனம் செய்யும் வேளையில் அங்கே அபிராமி அம்மன் சன்னதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும் தொழுவதும் கண்ணீர் பெருக்குவதுமாய் இருந்தார். தானே சிறிது சிரித்தும் கொள்ளுவார். சிரிப்பது அன்னையின் பரிபூரணப் பேரானந்தப் பேரொளியின் தரிசனத்தைக் கண்டு ஆனந்தத்தில் இருந்தார். மன்னர் வந்திருப்பதும் அறியாமல் மன்னரை வணங்கவும் வணங்காமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும் சிரித்துக் கொள்ளுவதும் அழுவதுமாய் இருக்கிறாரே என எண்ணி மன்னர் இவர் யாரெனக் கேட்டதும் இவர் ஒரு பைத்தியம் என்று சொல்லிவிட்டனர். மன்னர் இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் அதைச் சோதிக்க எண்ணியவர் போல் சுப்ரமணிய ஐயரிடம் இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது? என்று கேட்டார். அப்போதுதான் பரிபூரணப் பேரொளியாய் சஹஸ்ராரத்தில் ஒளிமயமாய் ஜொலிக்கும் அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அந்தச் சுடரின் பேரொளியிலே தன்னை இழந்து கொண்டிருந்தவர் காதில் அமாவாசையா என்ற சொல் மட்டுமே விழ ஆஹா இன்று பெளர்ணமி அல்லவோ? என்று சொல்லிவிட்டார்.

அபிராமி பட்டரைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். மன்னர் சரியாக கூறாத பட்டருக்கு அன்றிரவு பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும் இல்லாவிட்டால் பட்டருக்கு மரண தண்டனை எனத் தீர்ப்புச் சொன்னார். அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும் உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அபிராமி சன்னதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி அதில் விறகை அடுக்கி தீ மூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும் நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன் என்று சபதம் செய்து விட்டு அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார். உதிக்கின்ற செங்கதிர் என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே.

என்ற பாடலை பாடிய உடன் ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வான வீதியில் விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்று கூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம் நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு என்றாள். அம்பிகை அருள் பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு தம் அனுபூதி நிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார். அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார். அவ்விளை நிலங்களை ஏற்க மறுத்த அபிராமி பட்டரிடம் அவரின் பிற்காலச் சந்ததிகளின் நல்வாழ்வை உத்தேசித்து ஏற்குமாறு வற்புறுத்தி ஏற்கச் செய்தார். இவ்வுரிமை 1970 களின் கடைசி வரையிலும் அபிராமி பட்டரின் பரம்பரை அனுபவித்து வந்தது. தற்போதைய நிலவரம் சரிவரத் தெரியவில்லை. இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அபிராமி அந்தாதி என்றப்பெயரில் வந்தன. அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு. ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப் பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப் பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் முதல் வரி உதிக்கின்ற என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கும் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது. அபிராமி பட்டர் இயற்றிய வேறு நூல் அபிராமி அம்மைப் பதிகம்.

அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும் போது வெளியில் மின் விளக்கினை எரியச் செய்கிறார்கள்.

கௌசிக முனிவரின் மகனான மிருகண்டு ரிஷியும் அவரது மனைவி மருத்மதியும் சிறந்த சிவபக்தர்கள். சிவபெருமானிடம் ஆண் குழந்தை வேண்டும் என வேண்டி பிரார்த்தித்தார்கள். இறைவன் அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்து அவர்களுக்கு இரண்டு விருப்பங்களைக் கொடுத்தார். ஒன்று குறுகிய ஆயுளுடன் ஒரு புத்திசாலி மகனைப் பெறலாம் அல்லது குறைந்த புத்திசாலித்தனம் கொண்ட நீண்ட ஆயுளுடன் ஒரு மகனைப் பெறலாம். குறுகிய ஆயுளாக இருந்தாலும் புத்திசாலி மகன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளின்படி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டார்கள். அவனுக்கு 12 வயது வரை ஆயுள் இருந்தது.

மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடன் இருந்தான். தான் வளர வளர பெற்றோர் ஆனந்தப்படாமல் வருத்தப்பட்டுக் கொண்டுள்ளார்களே என்ன காரணம் என்றுக் கேட்டான். பெற்றோர்களும் அவனது வரத்தைப் பற்றிக் கூறினர். மார்க்கண்டேயன் பெற்றோரை சமாதனம் செய்து தாம் பூரண ஆயுளுடன் இருக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து வெற்றியுடன் திரும்புவதாக கூறி காசி சென்றார். அங்கு மணிகர்ணிகை அருகே ஒரு சிவலிங்கத்தைப் பூஜித்து வந்தார். சிவபெருமான் அவரது பூஜைக்கு மகிழ்ந்து எமபயம் நீங்க வரமளித்தார். பின் ஊர் திரும்பிய மார்க்கண்டேயன் அங்கும் தனது வழிபாட்டைத் தொடர்ந்து மகாமிருத்யுஞ்சய மந்திரத்தையும் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தார். அவரது 16 வது வயது ஆயுள் முடிவடையும் சமயத்தில் மார்க்கண்டேயன் திருக்கடவூர் சிவன் கோயிலுக்கு வந்து அங்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அமிர்தகடேஸ்வரரை வழிபட்டுக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்தான் எமதூதன். மார்க்கண்டேயரின் பூஜை பலனால் எமதூதனால் அருகே நெருங்கக் கூட முடியவில்லை. பின்னர் சித்ரகுப்தனும் எமனது மந்திரியான காலனையும் அனுப்பினான். ஆனால் மார்க்கண்டேயனை நெருங்க முடியவில்லை. முடிவாக எமனே வந்தார். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை உறுதியுடன் தழுவிக் கொண்டான். ஆனாலும் எமன் மார்க்கண்டேயனை இழுக்க மார்க்கண்டேயனோடு சிவலிங்கமும் வந்தது. உடனே சிவபெருமான் தோன்றி எமனை இடக்காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார். மார்க்கண்டேயனை நித்ய சிரஞ்சீவியார்க்கி என்றும் பதினாறு என்று வரமளித்தார்.

எமன் சம்காரம் செய்யப்பட்டு விட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை. தேவி ஈசனிடம் முறையிட கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும் திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன் ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும் மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர். காலசம்ஹார மூர்த்தியை தரிசிக்கும் போது எமனை பார்க்க முடியாது. பூஜை செய்யும் போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி கையில் சூலத்துடன் காட்சி தருவதை சம்ஹார கோலம் ஆகும். எமனுடன் இருப்பது உயிர்ப்பித்த அனுக்கிர மூர்த்தி கோலம் ஆகும். ஆக பீடம் திறக்கும் போது ஒரே சமயத்தில் சம்ஹார மற்றும் அனுக்கிர மூர்த்தியை தரிசிக்கலாம். இச்சன்னதியிலுள்ள பாலாம்பிகை சிறுமி வடிவில் இரு கரங்களுடன் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.

மார்க்கண்டேயர் சிவபூஜைக்காக தினமும் காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தார். அவருக்காக சிவன் திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகே ஒரு கிணற்றில் கங்கையைப் பொங்கும்படி செய்தார். மார்க்கண்டேயர் அந்த நீரை எடுத்து சுவாமிக்கு பூஜை செய்தார். தற்போதும் இங்கேயே தீர்த்தம் எடுக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் யாரும் நீராடுவது கிடையாது. பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று இத்தீர்த்தத்தில் கங்கை பொங்கியது. இதன் அடிப்படையில் அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள். மார்க்கண்டேயர் அமுதகடேசுவரர்க்கு அபிசேகம் செய்த போது கங்கை நீருடன் இப்பிஞ்சிலமும் சேர்ந்து வந்தது. பிஞ்சிலம் என்னும் சாதி மல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக் கூடியது.இங்கே இம்மலர் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுகிறது. மற்றவர்கள் இதை பயன்படுத்தக் கூடாது. இதன் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 தடவை அர்ச்சித்தற்கு சமம்.
அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் தற்போதும் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும் போது மட்டுமே பார்க்க முடியும். தினமும் சாயரட்சை பூஜையின் போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச் சென்ற பாதாள குகை இருக்கிறது. மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 108 வது தலமாகும்.

திருக்கடையூரில் இருந்து தென்மேற்கே சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள திருமணல்மேட்டில் மார்க்கண்டேயருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு மூல சன்னதியில் மார்க்கண்டேயர் சிலை உள்ளது. அந்த இடத்தில் மார்க்கண்டேயரின் பெற்றோர் மகன் பிறக்க வேண்டி கடவுளை வழிபட்ட கோவிலும் உள்ளது.

கோயிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ மன்னர்களில் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜதேவன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் இவர்கள் காலங்களிலும் பாண்டிய மன்னர்களில் மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி, எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரதேவன், கோனேரின்மை கொண்டான், பெருமாள் சுந்தரபாண்டியன் என்போர் காலங்களிலும்; விஜயநகரவேந்தர்களில் கிருஷ்ணதேவமகாராயர், வீரவிருப்பண்ண உடையார் என்போர் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக் கல்வெட்டுக்களில் இறைவனது பெயர்கள் திருவீரட்டானத்துப் பெருமானடிகள், திருவீரட்டானமுடைய பரமசுவாமி, காலகாலதேவர் என்னும் பெயர்கள் கூறப்பட்டுள்ளது. இந்த மன்னர்கள் கோயிலுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதற்கு திருக்கடையூர் ரகசியம் என்று பெயர். இக்கோயிலை தற்போது தரும்புரம் ஆதினம் நிர்வாகித்து வருகிறார்கள். 63 நாயன்மார்களில் காரி நாயனாரும் குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள். அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டரும் இங்குதான் அவதரித்தார். பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார். பிரம்மன் அகத்தியர் புலஸ்தியர் வாசுகி துர்க்கை பூமாதேவி முதலியோர் வழிபட்ட தலம் இது. இத்தலத்து முருகனை அருணகிரியார் தனது திருப்புகழ் பாடியிருக்கிறார். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 42 திருந்துதேவன்குடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 42 வது தேவாரத்தலம் திருந்துதேவன்குடி. நண்டாங்கோயில் திருத்தேவன்குடி திருவிசலூர் என வேறு பெயர்களும் உள்ளது. புராண பெயர் கற்கடேஸ்வரம் நண்டாங்கோயில். மூலவர் கர்க்கடகேஸ்வரர். கற்கடகம் என்றால் நண்டு என்று பொருள். உற்சவர் சோமாஸ்கந்தர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். அம்பாள் அருமருந்தம்மை அபூர்வநாயகி அருமருந்துநாயகி. பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகின்றார்கள். தல மரம் நங்கைமரம். தீர்த்தம் நவபாஷண தீர்த்தம் பங்கய தீர்த்தம் காவிரிநதி. இத்தல விநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் மற்றும் சுதை வடிவில் நடராஜர் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது. சிவனை வணங்கிய இந்திரன் தவறை உணர்ந்து திருந்தியதால் இத்தலம் திருந்து தேவன்குடி என்றழைக்கப்படுகிறது. நண்டான் கோயில் என்று தற்போது அழைக்கிறார்கள். அனைத்து சிவ ஆலயங்களிலும் சந்திரனுக்கு இருக்கும் தனி சன்னதியில் நின்ற நிலையில் இருப்பார். இக்கோவிலில் அமர்ந்த நிலையில் யோகத்தில் இருக்கிறார்.

ஒரு காலத்தில் இந்த இடத்தில் சுயம்புலிங்கம் மண்ணிற்குள் மறைந்து இருந்தது. ஒருசமயம் இப்பகுதியை சோழ மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு வாதநோய் உண்டானது. பல வைத்தியங்கள் பார்த்தும் நோய் குணமாகவில்லை. சிவபக்தனான அம்மன்னன் நோய் தீர அருளும்படி சிவனிடம் வேண்டினான். ஒருசமயம் வயதான மருத்துவ தம்பதியர் அவனது அரசவைக்கு வந்தனர். மன்னனிடம் சென்ற அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த விபூதியை தீர்த்தத்தில் கரைத்து கொடுத்தனர். அந்த மருந்தை சாப்பிட்ட உடனே மன்னன் நோய் நீங்கி எழுந்தான். மருத்துவ தம்பதியரை தனது அரசவையில் ராஜ வைத்தியராக தங்கும்படி வேண்டினான். அவர்கள் கேட்காமல் கிளம்புவதாக கூறினார்கள். எனவே மன்னன் அவர்களுக்கு பொன்னும் பொருளும் பரிசாக கொடுக்க எடுத்து வந்தான். அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. வியந்த மன்னன் அவர்களிடம் தாங்கள் விரும்புவது எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். அதை நிறைவேற்றி வைப்பது என் கடமை என்றான். பின்னர் அவர்கள் இவ்விடத்திற்கு அழைத்து வந்து சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பும்படி கூறினர். மன்னனும் ஒப்புக்கொண்டான். அப்போது லிங்கத்தின் அருகில் சென்ற இருவரும் அதனுள் ஐக்கியமானார்கள். மருத்துவர்களாக வந்தது சிவ பார்வதி என உணர்ந்த மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பினான். மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பிய போது ஏற்கனவே இங்கிருந்த அம்பிகையை காணவில்லை. எனவே புதிதாக ஒரு அம்பிகையை பிரதிஷ்டை செய்தான். மருத்துவர் வடிவில் வந்து அருளியவள் என்பதால் அருமருந்து நாயகி என்று பெயர் சூட்டினான். ஆனால் சிறிது நாட்களிலேயே தொலைந்த அம்பிகை சிலை கிடைத்தது. அதனையும் இங்கு பிரதிஷ்டை செய்தான் மன்னன். இவள் அபூர்வநாயகி என்று அழைக்கப்பட்டாள். இவளே இங்கு பிரதான அம்பிகையாக கருதப்படுகிறாள்.

ஒரு சமயம் துர்வாச மகரிஷி சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் முதிய தோற்றத்தைக் கண்டு பரிகாசம் செய்தான். அவரது பூஜைகளையும் பரிகாசிக்கும் விதமாக கை தட்டி அழைத்தான். ஆனாலும் துர்வாசர் திரும்பவில்லை. கந்தர்வனோ விடுவதாக இல்லை. நண்டு போல நடந்து காட்டி அவரை மேலும் கேலி செய்தான். கோபம் கொண்ட துர்வாசர் அவனை நண்டாக பிறக்கும்படி சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். சிவலிங்க பூஜை செய்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி நண்டு வடிவில் இத்தலம் வந்த கந்தர்வன் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருப்பதைக் கண்டான். தினமும் அருகிலுள்ள புஷ்கரிணியில் மலர் பறித்து சுவாமிக்கு படைத்து வழிபட்டு வந்தான். இதனிடையே அசுரர்களை அழிக்கும் சக்தி வேண்டி இந்திரன் தன் குருவின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்ய வந்தான். இங்கிருந்த புஷ்கரிணியில் தாமரை பயிரிட்டு தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து பூஜித்து வந்தான். நண்டு வடிவில் வந்த கந்தர்வன் சிவனுக்கு மலர் படைக்கவே தினமும் இந்திரனின் பூஜையில் ஒரு மலர் குறைந்தது. இந்திரனுக்கு காரணம் புரியவில்லை. ஒருசமயம் நண்டு பூஜை செய்வதை பார்த்துவிட்டான். அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுகிறதே என்று கோபம் கொண்டான். தான் பூஜை செய்யும் லிங்கத்தை பூஜிக்கும் தகுதி பிறருக்கு கிடையாது என ஆணவம் கொண்ட அவன் நண்டை கொல்ல முயன்றான். நண்டு சிவபூஜைக்காக லிங்கத்தின் பாணம் மீது ஏறியபோது வாளால் வெட்ட முயன்றான். அப்போது சிவன் லிங்கத்திற்குள் துளை ஏற்படுத்திக் கொடுக்கவே கந்தர்வன் அதற்குள் புகுந்து விமோசனம் பெற்றான். அப்போது இந்திரனின் வாள் லிங்கத்தின் மீது பட்டு காயம் உண்டானது. தவறை உணர்ந்த இந்திரன் மன்னிப்பு வேண்டினான். சிவன் அவனை மன்னித்ததோடு ஆணவத்துடன் இருப்பவர்களால் ஒரு செயலிலும் வெற்றி பெற முடியாது. பணிவு குணமே நன்மை தரும் என்று அறிவுறுத்தி காட்சி தந்தார். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர் கற்கடேஸ்வரர் என்று பெயர் பெற்றார். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும் இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது. சந்திரன் இத்தலத்தில் வழிபட்டு சாப விமோசனம் பெற்றுள்ளான். திருஞானசம்பந்தர் இவரை பிணி நீங்கும் சிவன் என்று பதிகம் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் தேவார பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 41 சேங்கனூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 41 வது தேவாரத்தலம் சேங்கனூர். சத்தியகிரி குமாரபுரி சண்டேசுவரபுரம் என்று வேறு பெயர்களும் உள்ளது. புராண பெயர் சேய்ஞலூர் திருச்சேய்ஞலூர். சத்தியகிரி குமாரபுரி சண்டேசுவரபுரம் என்று வேறு பெயர்களும் உள்ளது. மூலவர் சத்தியகிரீஸ்வரர் சத்யகிரிநாதர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சகிதேவியம்மை. தலமரம் ஆத்தி. தீர்த்தம் மண்ணியாறு சத்திய புஷ்கரணி. கோச்செங்கட்சோழன் கட்டிய இந்த மாடக்கோயில் கோயில் கட்டு மலையின் மேல் உள்ளது. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் மலை மேல் ஒரு பிராகாரமும் சுற்றிக் கீழே ஒரு பிராகாரமும் உள்ளன. மேருமலையின் ஒரு சிறு பகுதி விழுந்த தலம் ஆகையால் கோவில் சிறு மலையில் அமைந்துள்ளதை போன்ற தோற்றத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

கோவிலின் மேலே ஒரு பிரகாரம் மற்றும் கீழே ஒரு பிரகாரம் என இரண்டு பிரகாரங்கள் உள்ளன. மேலே மூலஸ்தானம் அர்த்த மண்டபம் மகா மண்டபம் உள்ளன. மகா மண்டபத்தில் நடராஜர் நால்வர் சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தில் விநாயகர் சுப்பிரமணியர் கஜலட்சுமி சண்டேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. மகா மண்டபத்தில் தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர் சன்னதி உள்ளது. கந்தபுராணம் வழிநடைப்படம் பகுதியில் இதுதலம் பற்றிய வரலாறு உள்ளது. சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு உருத்திர பாசுபதப் படையைப் பெற்றார். அப்போது தேவதச்சன் இத்தலத்தை ஒரு நகரமாக ஆக்கினான். இதனால் இத்தலம் குமாரபுரம் என்றும் முருகன் வழிபட்டதால் சேய் – முருகன் நல் ஊர் – சேய்ஞலூர் என்ற பெயர் பெற்றது. வைணவத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு உரை எழுதிய பெரியவாய்ச்சான் பிள்ளை அவதார தலம் இது. கோவிலின் எதிரே இவருக்கு கோயில் உள்ளது. முருகனுக்கு பெரிய தனி சன்னதி உள்ளது. ஒரு காலத்தில் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் யார் பலம் வாய்ந்தவர் என்கிற போட்டியில் ஆதிசேஷன் பிடியில் இருந்த மேரு மலையை வாயு பகவான் தகர்த்த போது ஒன்பது சிகரங்களாக உடைந்து ஒன்பது கண்டங்களில் விழுந்தது. அதில் கந்தமாதனம் எனும் சிகரம் எழு சிகரங்களாக பாரதத்தில் எழு இடங்களில் விழுந்தன. அதில் சத்தியம் எனும் சிகரம் இவ்வாலயம் உள்ள இடத்தில் விழுந்தது. விழுந்தது மேருமலை என்பதால் இவ்வூர் புனிதம் மிக்கதாக கருதப்படுகிறது. எனவே முனிவர்களும் மகரிஷிகளும் இங்கு விலங்குகளாகவும் பறவைகளாகவும் மரங்களாகவும் இந்த தலத்தை வழிபட்டு வருகிறார்கள் பிற்காலத்தில் இங்கு கோவில் எழுப்பட்டது.

அனைத்து சிவன் கோயில்களிலும் அருள்பாலிக்கும் சண்டிகேஸ்வரர் இத்தலத்தில் தான் அவதாரம் செய்தார். எச்சதத்தன் என்கிற அந்தணருக்கு மகனாகப் பிறந்தவர் விசாரசருமர் (சண்டிகேஸ்வரர்). இவர் மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார். பசுக்கள் மேய்ச்சலின் போது விசாரசருமர் அத்தி மரத்தடியில் மணலால் லிங்கம் செய்து பால் அபிஷேகம் செய்து வந்தார். இதை பார்த்த ஊர்மக்களும் தந்தையும் கண்டித்தும் மீண்டும் மீண்டும் பால் வீணாவதை கண்டித்த தந்தையை பக்தி மயக்கத்தால் செய்வதறியாது அருகில் இருந்த கோலால் அடிக்க தந்தை இறந்தார். விசாரசருமர் முன் தோன்றிய தேவியும் பரமேஸ்வரரும் சிவபூசை தடைபட கூடாது என்பதற்காக ஈன்ற தந்தையை இழந்தாய். இனி யாமே உனக்கு தந்தையாய் இருப்பேன் எனக்கூறி கொன்றை மாலை ஒன்றை அனிவித்து நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்கே உரித்தானவை. என்னை வழிபட்டவர்கள் உன்னை வழிபட்டால்தான் என்னை வழிபட்ட பலன் கிடைக்கும். சண்டிகேசர் என்ற பட்டமும் அளித்தார். சிலகாலம் இங்கு தவம் செய்து இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருவாய்ப்பாடியில் மோட்சம் அடைந்தார். 63 நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். இவர் இத்தலத்தில் வேறெங்கும் காணாத நிலையில் அர்த்தநாரி திருக்கோலத்தில் உள்ளார். சிவன் காட்சி கொடுத்ததால் சண்டேஸ்வரரே பிறை சடை குண்டலம் கங்கையுடன் காட்சி தருகிறார். சிவன் நாயனாருக்கு காட்சித் தந்த சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்திருக்கிறது. சண்டிகேஸ்வரரின் வரலாற்றை தேவாரம் பாடல் பெற்ற சிவ தலம் 40 யிலும் அறிந்து கொள்ளலாம்.

பிரணவமந்திரத்தின் பொருள் தெரியாததால் பிரமனை சிறையில் அடைத்தார் முருகன். இதனால் பிரணவத்தின் பொருள் கூறும்படி சிவன் கேட்டார். அதற்கு சீடனாக கேட்டால் தான் கூறுவேன் என்றார் முருகன். இதனால் தந்தை சீடனாகவும் மகன் குருவாகவும் இருக்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டது. எனவே முருகனுக்கு சிவத்துரோக தோஷம் ஏற்பட்டது. இதை போக்க முருகன் இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி தினமும் நீராடி சிவனை வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டார்.

சிபிச்சக்கரவர்த்தி அரிச்சந்திரன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். சேக்கிழார் பெரிய புராணத்தில் இத்தல மகிமையை கூறியுள்ளார். சோழர்களின் முக்கிய ஐந்து நகரங்களுள் இதுவும் ஒன்று. நம்பியாண்டார் நம்பி சேக்கிழார் சிபிச்சக்கரவரத்தி அரிச்சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். சண்டேசுவர நாயனார் வரலாற்றைப் பற்றி தனது பதிகத்தின் 7 வது பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் தேவார பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 40 திருவாய்ப்பாடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 40 வது தேவாரத்தலம் திருவாய்ப்பாடி. புராண பெயர் வீராக்கண் திருஆப்பாடி. மூலவர் பாலுகந்தநாதர் பாலுகந்த ஈஸ்வரர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பிருகந்நாயகி பெரியநாயகி. தலமரம் ஆத்தி மரம். தீர்த்தம் மண்ணியாறு தீர குண்டம். கோவிலில் கொடிமரம் இல்லை.

கோவிலுக்கு இராஜகோபுரமில்லை. கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் ரிஷப வாகனத்தில் இறைவனும் இறைவியும் உள்ளனர். அவர்களுக்கு இருபுறமும் விநாயகரும் முருகரும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். வாயில் வழி உள்ளே நுழைந்து முதல் பிரகாரத்தை அடையலாம். இங்கு நந்தவனமும் வடகிழக்கு மூலையில் பஞ்சமூர்த்தி மண்டபமும் உள்ளது. பலிபீடம் நந்தி ஆகியவற்றைக் கடந்து முன் மண்டபத்தை அடையலாம். இம்மண்டபம் வெவ்வால் நெற்றி அமைப்புடையது. மண்டபத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. உட்பிரகாரம் நுழைந்து வலம் வரும்போது தென்மேற்கு மூலையில் தலமரமான ஆத்திமரம் உள்ளது. ஆத்திமரத்தின் அடியில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இந்த ஆத்திமர நிழலில் தான் அன்று சண்டேசர் இத்தல இறைவனை ஸ்தாபித்து வழிபட்டார். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா துர்க்கை ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கருவறை மேற்குப் பிரகாரத்தில் நால்வர் முருகர் மகாலட்சுமி விநாயகர் சுப்ரமணியர் சனீஸ்வரர் பைரவர் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. எல்ல சிவாலயங்களிலும் இருப்பதைப் போல வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. இதைத் தவிர கர்ப்பகிரகத்தின் முன்னுள்ள அர்த்த மண்டபத்தில் சண்டேசுவரர் அமர்ந்து ஆத்திமர நிழலில் இறைவனை வழிபடும் முறையில் தனிக் கோயிலில் உள்ளார். இக்கோயிலில் மட்டும் இரண்டு சண்டேசுவரர் திருவுருவங்கள் இருக்கிறது. மகா மண்டபத்தில் பைரவர் சூரியன் சனிபகவான் நடராஜர் சபை பைரவர் சன்னதிகள் உள்ளன.

எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் சிறு வயதிலேயே வேதாகமங்களையும் கலை ஞானங்களையும் ஓதி உணர்ந்தவரானார். ஒரு நாள் வேதம் ஓதும் சிறுவர்களுடன் பசுக்கள் மேய்க்கச் சென்ற இடத்தில் விசாரசர்மர் விளையாடிக்கெண்டு இருந்தார். அப்போது ஒருபசு தன்னை மேய்க்கும் இடையனைக் கொம்பினால் முட்டப் போயிற்று. இடையன் தன் கையிலுள்ள அப்பசுவை அடித்தான். விசாரசர்மரை அவனைக் கண்டித்து அவ்வூர் வேதியர்களின் அனுமதியுடன் பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார். விசாரசர்மரால் அன்பாக மேய்க்கப்பட்ட ஆநிரைகள் அதிகமான பாலைச் சொரிந்தன. அவ்வூர் வேதியர்களும் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால் மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர் வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன் பால் குடங்களையும் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன் பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப் பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன் என கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி சண்டிகேஸ்வரர் ஆக்கினார். இறைவன் விசாரசருமன் அபிஷேகம் செய்த பாலை விரும்பி ஏற்றதால் பாலுகந்தநாதர் ஆனார். விசாரசருமன் ஆ (பசு) மேய்த்த தலமாதலால் ஆப்பாடி ஆனது. 63 நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். அருகிலுள்ள சேய்ஞலூர் இவரது அவதார தலமாகவும் திருவாய்ப்பாடி லிங்கம் அமைத்து வழிபட்டு முக்தி பெற்ற தலமாகவும் போற்றப்படுகிறது. மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

ஆப்பாடியில் இருந்த இடையர் குலத்தை சேர்ந்த ஒருவன் பாலைக் கறந்து குடத்தைத் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் போது வழியில் தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் தடுக்கிப் பால்குடம் கவிழ்ந்தது. தினந்தோறும் இது போல் நடப்பதால் கோபம் கொண்ட இடையன் கையிலிருந்த அந்த இடத்தை அரிவாளால் வெட்டினான். அந்த இடத்திலிருந்து இரத்தம் பெருகியது. குருதி படிந்த திருமேனியுடன் சிவலிங்கத் திருவுருவில் இறைவன் வெளிப்பட்டு அருளினார். இவ்வதிசயத்தைக் கண்ட இடையன் தன் அறியாமையால் ஏற்பட்ட செயலை எண்ணி மனம் வருந்தினான். அவனது வருத்தத்தை தணித்த இறைவன் இன்னருள் புரிந்தார். இந்த இடத்திலே இருந்து வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனிக்கு கோவில் எழுப்பப்பட்டது.

சிவராத்திரி அமாவாசையில் சண்டேஸ்வரர் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட மிகவும் பழமையானத் திருக்கோயில். கல்வெட்டில் இறைவன் பெயர் ஆப்பாடி உடையார் என்றுள்ளது. சண்டேசுவரர் வழிபட்டுள்ளார். திருநாவுக்கரசர் தேவார பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 39 திருப்பனந்தாள்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 39 வது தேவாரத்தலம் திருப்பனந்தாள. மூலவர் செஞ்சடையப்பர் தாலவனேஸ்வரர் ஜடாதரர் அருணஜடேஸ்வரர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் சில நாட்களில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. அம்பாள் பிருகந்நாயகி பெரிய நாயகி தாலவனேஸ்வரி. தலமரம் பனைமரம் தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தை அடுத்துள்ள கிணறு நாககன்னிகை பிலம் எனப்படும். இதன் வழியாக நாககன்னியர் வந்து இறைவனை வழிபட்டுள்ளார். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஐராவத தீர்த்தம் தாடகை தீர்த்தம். ஆவணி அமாவாசையன்று இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் இறைவன் எழுந்தருள்வார். புராண பெயர் தாடகையீச்சரம். கோயிலுக்கு தாடகையீஸ்வரம் தாடகேச்சுரம் என்றும் உள்ளது. தாடகை பூசித்தமையால் இப்பெயர் பெற்றது. பனையின் தாளின் (அடிப்பகுதி) இறைவன் எழுந்தருளியிருத்தலாலும் பனைமரம் தலமரமாதலால் ஊரின் பெயர் பனந்தாள் என்று பெயர் பெற்றது. இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

திருப்பனந்தாளில் வாழ்ந்த நக்கன் தரணி என்பவனால் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டது. கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம் கிழக்கில் 5 நிலை கோபுரம் மூன்று பிரகாரகங்களுடன் கோயில் உள்ளது. இரண்டு ஆண் பனைமரங்கள் கோயில் பிரகாரத்தில் உள்ளன. சுவாமி விமானம் பிரணவ வடிவில் மூன்று ஸ்தூபிகளுடன் விளங்குகிறது. இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இரண்டு ஆண் பனைமரங்கள் கோயில் பிரகாரத்தில் உள்ளன. சுவாமி விமானம் பிரணவ வடிவில் மூன்று ஸ்தூபிகளுடன் விளங்குகிறது. இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு கோபுரத்தின் தெற்கு பக்கம் குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டில் இத்தலம் திருத்தாடகை ஈச்சரம் என்றும் இறைவன் பெயர் தாடகேச்சரத்து மகாதேவர் என்றும் குறிக்கப்படுகிறது. ஆஸ்தான மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவர் உள்ளார். தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான இக்கோயிலில் குமரகுருபரர் ஏற்படுத்திய காசிமடம் உள்ளது.

சிற்பங்கள் பல்லவர் கால வேலைப்பாடுடையன இராச கோபுரத்தின் மீது சுதை வேலைப்பாட்டுடன் கூடிய கந்தர்வர் கிம்புருடர் உருவங்கள் அமைந்துள்ளன. பதினாறு கால் மண்டபத்தில் தாடகையினால் சாத்தப்பட்ட மாலையினை ஏற்றுக் கொள்ள பெருமான் தலை குனிந்ததும் அதனை நிமிர்த்த அரசன் யானைகளைக் கட்டி இழுத்ததும் குங்குலியக்கலய அரிகண்டம் போட்டு நிமிர்ந்ததும் அப்போது சிவலிங்கத்திடையே இறைவரது திருக்கரம் தோன்றியதும் நாயனார் வழிபட்டதும் ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. சிங்க வாயிலினுள் நுழைந்ததும் வடபுற மதியில் திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றினையொட்டிச் சில உருவங்கள் அமைந்திருக்கின்றன. சுப்ரமண்யர் உற்சவருக்குப் பின் தாடகை பெருமானை வழிபட்டுப் பதினாறு கைகள் பெற்றது சிற்பமாக செதுக்கப் பட்டிருக்கிறது. கோயில் கட்டிய தரணி நக்கனார் சிற்பமும் அமைக்கப்பட்டிருக்கிறது. வெளவால் நெற்றி மண்டபத்தில் சுதையினால் பஞ்ச மூர்த்திகளும் வேலை செய்யப்பட்டிருக்கின்றன. அலங்கார மண்டபத்தின் முன் மேலே விதானத்தில் தாடகை வரலாறு ஒவியமாக வரையப்பட்டுள்ளது. அறுபத்து மூவர் வரிசையில் சிலைகளுக்குப் பின் அந்த அந்த நாயனாரின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. 1942 இல் திருப்பனந்தாளில் வாழ்ந்த துளசி ராஜா என்பவர் இவ்வோயித்தை வரைந்தவர் ஆவர். வெளவால் நெற்றி மண்டபத்தில் உள்ள பஞ்ச மூர்த்திகளின் சுதை உருவத்திற்கு எதிரே பஞ்ச பூதத்தலங்களின் படமும் அதனையடுத்து இறைவனின் தாண்டவங்களும் தத்ரூபமாக வரையப் பெற்றுள்ளன.

தாடகை என்ற பெண் மகப்பேறு வேண்டி பிரம்மனை நோக்கி தவம் இருந்தாள். அப்போது பிரம்மன் அவள் முன் தோன்றி நீ தாலவனேஸ்வரரை சென்று பூசித்து வழிபட்டால் விரும்பிய பேற்றைப் பெறுவாய் என்று அருளினார். தாடகையும் அவ்வாறே இத்தலத்திற்கு வந்து நியமம் தவறாமல் விதிப்படி இறைவனைப் பூசித்து வந்தாள். ஒரு நாள் பூஜை முடிவில் மாலையைச் சாத்த எழுந்த காலத்து அவள் அன்பை உலகத்திற்கு வெளிப்படுத்த இறைவன் அவளுடைய ஆடையை விலகச் செய்தனன். ஆடையை ஒரு கையால் பற்றிக்கொண்டு மாலை சாத்தமுடியாமல் இரண்டு கைகள் மட்டுமே இருக்கிறதே இன்னும் கைகள் இருந்தாள் இறைவனுக்கு மாலை சாத்தலாமே என்று அப்பெண் வருந்தி துதித்து வழிபட்டாள். அப்போது இறைவன் அந்த பெண்ணுக்காக இரங்கி தன் தலையை சற்று சாய்த்து கொடுத்தார். மேலு இறைவன் அவளுக்கு தரிசனம் கொடுத்து 16 கைகளை கொடுத்தார். மங்கையும் மாலையை அணிவித்து விட்டு மகிழ்ச்சியுடன் வணங்கிச் சென்றாள். அன்று முதல் சிவலிங்க திருமேனி சாய்ந்தே இருந்தது. அப்போது இந்தக் கோயிலில் சோழ மன்னனின் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிவன் தலை சாய்ந்திருக்கும் செய்தியை மன்னன் கேள்விப்பட்டான். உடனே தனது படையை அனுப்பி சிவனது தலையை நிமிர்த்த ஏற்பாடு செய்தான். யானைகளை சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஆனால் முடியவில்லை. மனம் வருந்தினான் மன்னன். 63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயானர் இத்தல சிவனை வழிபட வந்திருந்தார். அவருக்கும் இந்த செய்தி எட்டியது. நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி சிவனுக்கு குங்குலியப் புகையினால் தூபமிட்டார். பின் பூவினால் சுற்றப்பட்ட ஓர் கயிறை எடுத்து ஒரு முனையை சிவலிங்கத்தில் இணைத்து மற்றொரு முனையை தன் கழுத்தில் கட்டி பலமாக இழுத்தார். கயிறு இறுகியதால் இவரது உயிர் போகும் நிலை ஏற்பட்டது. ஆனால் நாயனார் கவலைப்படவில்லை. தன் முழு பலத்தையும் கொண்டு இழுத்தார். இவரது அன்புக்கு கட்டுப்பட்டார் சிவன். இதற்கு மேலும் நாயனாரை இறைவன் சோதிக்க விரும்பவில்லை. சிவலிங்கம் நேரானது. குங்குலியக்கலயனாரின் பக்தியையும் இறைவனிடம் கொண்ட அன்பையும் கண்ட மன்னன் மகிழ்ந்தான். நாயனாருக்கு பல பரிசுகள் கொடுத்து கவுரவப்படுத்தினான்.

முன்னொரு கற்பத்தில் அம்பாள் இறைவனை வணங்கி ஞானோபதேசம் புரிந்தருளல் வேண்டும் எனப் பிரார்த்தித்தாள். அதற்கு இறைவன் நீ தாலவனம் சென்று எம்மை பூசித்தால் அருள் செய்வோம் என்று உரைத்தனர். அம்மையாரும் இறைவன் ஆணைப்படி இத்தலத்துக்கு வந்து எதிர்முகமாக வடக்கு திசையில் அமர்ந்து தவம் செய்தார். இறைவன் காட்சியளித்து அம்பாளுக்கு ஞானத்தை உபதேசித்து அருள் செய்தனர். இக்காரணத்தால் இறைவர் மேற்கு முகமாக எழுந்தருளியிருக்கிறார். இறைவி கிழக்கு முகமாக எழுந்தருளி இருக்கிறார். அம்பாள் உபதேசம் பெறுவதற்கு முன்பாக பாலாம்பிகை எனவும் உபதேசம் பெற்றபின் பிரகந்நாயகி எனவும் பெயர் அழைக்கப்படுகிறாள்.

அசுரர்களின் கொடுமைக்கு உட்பட்ட தேவர்கள் ஓடிவந்து இந்திரனிடம் முறையிட்டார்கள். இதனைக் கேட்ட இந்திரன் போர் புரிய ஐராவதத்தை வருமாறு அழைத்தான். ஐராவதம் போகத்தை விரும்பி மண்ணுலகில் மந்தர மலையைக்கு வந்திருந்தது. இதனை அறிந்த இந்திரன் தக்க சமயத்துக்கு உதவாத காரணத்தால் தெய்வ வலிமையை இழந்து மண்ணுலகத்தில் காட்டானையாக திரிவாய் என்று சாபமிட்டான். இதனால் காட்டில் ஐராவதம் காட்டுயானையாக திரிந்து கொண்டிருந்தது. அப்போது காட்டிற்கு வந்த நாரதரை வணங்கி சாபவிமோசணம் பெற அவரிடம் வழி கேட்டது. நாரதர் தாலவனேஸ்வரரை வணங்கினால் சாபத்தை போக்கிக் கொள்ளலாம் என்று கூறினார். அவரின் சொற்படி இத்தலத்திற்கு ஐராவதம் வந்து தாலவனநாதரை வணங்கித் தன் சாபத்தைப் போக்கிக் கொண்டது.

குங்குலியக்கலய நாயனார் இவ்வூரில் தங்கியிருந்த காலத்தில் அவரது மகன் இறந்தான். தன் மகன் இறந்த செய்தி கேட்டதும் இது இறைவன் செயல் என்று எண்ணி மகனை எடுத்துக் கொண்டு ஈமக்கடன் முடிக்கச் சென்றார். அப்போது விநாயகர் அசரீரியாக நாக கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி எடுங்கள் என்று அருளினார். வினாயகர் அருளியபடி நாயனார் அவ்வுடலைக் கொண்டு வந்து நாக கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி எடுக்க அவரது மகன் உயிர் பெற்று எழுந்தான். இவ்விநாயகர் இன்றும் பிணமீட்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் திருவீதியின் வாயு மூலையில் எழுந்தருளியுள்ளார்.

நாகலோகத்தில் வாசுகி தன் மகள் சுமதிக்கு திருமணம் செய்ய எண்ணினாள். சுமதி அதைப் பற்றிய முயற்சி எதையும் தற்போது செய்ய வேண்டாம் என்று கூறி கன்னி மாடத்தில் அமர்ந்திருந்தாள். இறைவன் அவளது கனவில் தோன்றி நீ தாலவனேஸ்வரரை பூசிப்பாய் என அருளினார். சுமதியும் அவ்வாறே அக்கோவிலின் கிணறு வழியாக இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு வந்தாள். அப்போது தல யாத்திரை செய்து வந்த அரித்துவசன் என்னும் அரசனும் இத்தலத்தை வந்தடைந்தான். சுமதி அவனைக் கண்டு விருப்பமுற்று நாகலோகத்திற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டாள். சில நாள் அங்கிருந்து மீண்டும் கிணற்றின் வழியாக வந்து அம்பாளுக்கு மேல்புறம் ஓர் தடாகம் அமைத்து தினந்தோறும் வழிபட்டு வந்தாள். அரித்துவசனும் ஆலயத்திற்குத் தெற்கு பக்கமு ஓர் தடாகமும் இலிங்கமும் அமைத்தான். இவ்வாறு இருவரும் பூசித்துப் பல திருப்பணிகளும் செய்து முத்தி பெற்றார்கள்.

நாகுன்னன் என்பவர் அந்தணர் குலத்தில் உதித்தவன் பிதுர்க்கடனுக்காக வைத்திருந்த பொருள்களை அபகரித்ததால் நரகத் துன்பமடைந்து இறுதியில் வேடுவனாகப் பிறந்தான். வழிப்போக்கர்களின் பொருள்களைக் கவர்ந்து உயிர் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் தலயாத்திரை செய்து வரும் முனிவர்களுடைய பொருள்களை அபகரிக்க எண்ணி அவர்களைப் பின் தொடர்ந்து வந்தான். இத்தலத்து எல்லைக்கு வந்ததும் தனது நல்வினைப் பயனாலே வந்த காரியத்தை மறந்து மூன்று நாட்கள் தாலவனேஸ்வரரை பூசித்துத் திருவாதிரைத் திருநாளன்று சிவலோகம் சென்று அடைந்தான். சங்குகன்னன் என்ற வேடுவர் தலைவன் நாரதர் ஆணைப்படி இத்தலத்திற்கு வந்து தீர்த்தங்களில் நீராடி தாலவனேஸ்வரரை பூசித்து விரும்பியபடி மகப்பேற்றை அடைந்தான்.

இக்கோயிலின் மண்டபங்களிலும் சுவர்களிலும் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவைகளெல்லாம் தொல்பொருள் துறையினரால் படியெடுக்கப் பெற்றுள்ளன. இத்திருக்கோயிலைக் கட்டியவன் திருப்பனந்தாள் நக்கன் தரணி என்பவனாவான். அவனே இதனைக் கருங்கல்லால் அமைத்தவனாவான். இதனைக் கோயில் கருங்கல்லின் அடிப்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டால் அறியலாம். சோழ மன்னன் இரண்டாம் இராசராசன் இத்திருக்கோயிலை மேலும் பெரிதாக எடுத்துக் கட்டினான். கல்வெடுக்களில் இறைவன் பெயர் திருத்தாடகையீச்சரத்து மகாதேவர் திருத்தாடகேச்சரத்துப் பெருமான் திருத்தாடகேச்சுரமுடைய நாயனார் என வழங்கப்படுகிறது. முதற் குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டிலிருந்து இறைவியின் பெயர் பெரிய நாச்சியார் என்பது தெரிய வருகிறது. இறைவியின் கோயிலைக் கட்டியவன் வெண்கூருடையார் அன்பர்க்கரசு மருத மாணிக்கமான வில்லவராசன் என்ற செய்தி இக்கோயில் மகா மண்டபத்து வாசலில் தெற்கு பக்கம் உள்ள கல்வெட்டினால் தெரிந்து கொள்ளலாம். சோழ மன்னர்களும் அவர்களது சேனைத் தலைவர்களும் இக்கோயிலுக்கு அடிக்கடி வந்து கோயிலைச் சுற்றிப் பார்த்தும் கோவில் பணியில் இருக்கும் பண்டாரத்தைச் சோதித்தும் வந்த செய்தி கல்வெட்டுக்களின் வழியாக தெரிந்து கொள்ளலாம். சோழமன்னர்கள் அதிராசேந்திர தேவன் குலோத்துங்க சோழன் ஆகியோர் காலத்தில் கோயில் நன்கு போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. அக்காலத்தில் இக்கோயிலில் இருந்த தேவகன்மிகள் கோயிலில் இருந்த திருவாபரணம் பரிகலச் சின்னம் முதலியவைகளைத் திருடிக் கொண்டார்கள். அதனைச் கண்டு பிடித்த மன்னன் அவர்களுக்கு அபராதம் விதித்தார். அவர்களால் அபராதம் கட்ட முடியாமையால் அவர்கள் தங்கள் கோயில் உரிமையை விற்று அபராதம் செலுத்தியதையும் கல்வெட்டால் அறியலாம். இவ்வூரில் பாயும் மண்ணி ஆற்றிற்கு குஞ்சர மல்லன் எனவும் ஊருடையப்பர் கோயிலுக்கு அசனீச்சரம் எனவும் குங்கிலியக் கலயனார் மனைவி பெயர் நீலாயி எனவும் பெயர் வழங்கியமை கல்வெட்டுக்களால் புலனாகிறது.

தாழம் பூவை சான்றாகக் காட்டி சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாகப் பொய் கூறிய பிரம்மனுக்கு அதனால் ஏற்பட்ட பாவம் மற்றும் இந்திரனுக்கு விருத்திராசுரனைக் கொன்ற பாவம் கெளதமர் மனைவியைக் களவாட முயற்சித்ததால் சேர்ந்த தோஷம் தக்கனுடன் கூடி இறைவனுக்கு எதிராக யாகத்தில் ஈடுபட்ட சூரியனுக்கு உண்டான பாவம் குருபத்தினியைக் கூடின சந்திரனுக்கு மாபாதகம் ஆகிய பாவங்ளை இத்தல இறைவன் போக்கியுள்ளார். இத்தல இறைவனை வாசுகியின் மகளாகிய சுமதி என்னும் நாக கன்னிகை மற்றும் அகத்தியர் ஆதிசேஷன் பார்வதி சங்கு கன்னன் நாகு கன்னன் நாக கன்னியர் பிரம்மன் திருமால் இந்திரன் ஐராவதம் அகத்தியர் சூரியர் சந்திரன் ஆதிசேஷன் நாககன்னிகை தாடகை குங்கிலியக்கலய நாயனார் பூசித்து வழிபட்டுள்ளார்கள். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஐயடிகள் காடவர்கோன் நம்பியாண்டார் நம்பி அருணகிரிநாதர் சிதம்பர முனிவர் காளமேகப்புலவர் செஞ்சடை வேதிய தேசிகர் தருமை சண்முகத்தம்பிரான் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளார்.