திருமூலநாதா்

திருமந்திரம் எழுதிய திருமூலா் வணங்கியதால் இத்தல ஈசனுக்கு திருமூலநாதா் எனும் திருநாமம் ஏற்பட்டதாக கோயில் தல புராணம் சொல்கிறது. திருவள்ளுர் புழல் பகுதியில் இக்கோயில் உள்ளது. நாகாபரணம் அணிந்தபடி திருமூலநாதா் கிழக்கு நோக்கிய கருவறையில் சதுர வடிவிலான ஆவுடையாா் மீது லிங்கத் திருமேனியாக எழுந்தருளியுள்ளாா். லிங்கம் பெரியது. கிழக்கு நோக்கி உள்ளது. இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வருடத்திற்கு இரண்டு முறை புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் சூரியன் தன் ஒளிக் கற்றைகளை நீட்டி திருமூல நாதரை வழிபட்டு செல்கிறார். அம்பாள் ஶ்ரீஸ்வா்ணாம்பிகை. தென்திசை நோக்கி அருள் பாலிக்கின்றாள். கருவறை மற்றும் அா்த்தமண்டபத்தின் பஞ்ச கோஷ்டங்களில் முறையே விநாயகா் தட்சணாமூா்த்தி விஷ்ணு பிரம்மா மற்றும் துா்க்கை ஆகிய சிலாரூபங்கள் காட்சியளிக்கின்றன. தீா்த்தம் ஸ்வா்ண புஷ்கரணி. தல விருட்சம் வில்வம். துவஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் நந்தி சன்னதியுடன் கிழக்கு நோக்கிய ஆலயம். அகத்திய மகரிஷி ஈசனின் திருமணக் கோலத்தை இத்தலத்தில் கண்டிருக்கிறார்.

மகேந்திரி வாராஹி, பிராமினி, மகேஸ்வரி மற்றும் நாராயணி ஆகியோருடன் தனி சன்னதியில் கருவறைச் சுவரைச் சுற்றி கோஷ்ட விக்கிரகங்களாக வீற்றிருக்கிறார்கள். வெளிப் பிரகாரத்தில் மகா கணபதி, ஸ்ரீ ஆஞ்சநேயர், மகா பிரத்தியங்கரா தேவி, சரபேஸ்வரர், காசி விஸ்வநாதர் விசாலாக்ஷி, நாகர், நவகிரகங்கள், பைரவர், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. உள்பிரகாரத்தில் சக்தி கணபதி, சிவலிங்கம், கஜலட்சுமி, வீரபத்ரர், முருகன் சன்னதிகள், வள்ளி, தேவசேனா, அஷ்டோத்திர லிங்கம், மகா சரஸ்வதி, 63 நாயன்மார்கள், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், சந்திரன், சூரியன் உள்ளார்கள். கோயிலுக்கு எதிரே கோயில் குளம் உள்ளது. பைரவர் சதுா் புஜங்களுடன், விரிந்த அனல் மகுடம், கண்டிகை, மணிவடம், தோள்வளை, அரைஞாண் போன்ற அணிகலன்க ளுடன் காணப்படுவதோடு இவரது வாகனமான நாய் மிகவும் எழிலாக அமைந்துள்ளது. பைரவரின் மேல் வலது திருக்கரம் உடுக்கையைப் பற்றியுள்ளது. இடது திருக்கரம் பாசக் கயிற்றைப் பிடித்துள்ளது. கீழ் வலது திருக்கரம் திரிசூலத்தையும் இடது திருக்கரம் கபாலத்தையும் ஏந்தி காட்சி தருகிறார். இச்சிலையின் காலம் 19 ஆம் நூற்றாண்டு தொல்லியல் ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா்.

இத்திருக்கோயில் பல்லவா் காலம் முதலே சிறப்புடன் இருந்தது என்பதற்கு ஆதாரமாக கிபி 8 ஆம் நூற்றாண்டினைச் சாா்ந்த பல்லவா் கால சுப்ரமண்யரின் சிற்பம் ஒன்று இன்றும் இத்தலத்தில் காணப்படுகின்றது. சதுா்புஜங்களுடன் மேல் இரு திருக்கரங்களில் அக்கமாலையும், கெண்டியும் முன்கரங்களில் ஒன்றினை அபய ஹஸ்தமாகக் கொண்டு அமா்ந்த திருக்கோலத்தில் சுப்ரமண்யர் காட்சி கொடுக்கிறார். பல்லவா் காலத்தைத் தொடா்ந்து சோழ மன்னா்களின் ஆட்சிக் காலத்திலும் இக்கோயில் சிறப்புற்றிருந்தது என்பதற்கு ஆதாரமாக சோழ மன்னா்களால் வணங்கப்பட்ட ஜேஷ்டாதேவியின் புராதன சிற்பமும் இத்தலத்தில் உள்ளது. (தற்போது இந்த சிலை கோயிலுக்கு அருகே தனியாக கோயில் எழுப்பப்பட்டு அங்கே உள்ளது) இக்கோயில் முகமண்டபத்தை அலங்கரிக்கும் சித்திரத் தூண்கள் பன்னிரெண்டிலும் எழில் வாய்ந்த சிற்பவடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் கிபி 17−18 ஆம் நூற்றாண்டினைச் சாா்ந்தவையாகும். இத்திருக்கோயிலில் ஒரு சுரங்கப் பாதை உள்ளது. இச்சுரங்கப்பாதை இந்தத் தலத்திலிருந்து திருமுல்லைவாயில் கொடியுடையம்மன் மற்றும் திருவொற்றியூா் வடியுடையம்மன் மீஞ்சுர் திருவுடையம்மன் தலத்திற்கும் செல்வதாகக் கூறப்படுகின்றது. இதற்கு சான்றாக திருவுடையம்மன் கோயிலில் சுரங்கப்பாதை இருந்ததற்கான சுவடுகள் தற்போதும் காணலாம்.

தெற்கு கோஷ்டத்தில் கல்லால விருட்சத்தின் கீழ் தட்சணாமூா்த்தி வீராசனத் திருக்கோலத்தில் அருளுகின்றாா். இவரது மேல் இரு திருக்கரங்கள் நாகப்பாம்பினையும் அக்னி தண்டினையும் பற்றியிருக்கிறது. கீழ் வலது திருக்கரம் சின் முத்திரை தாங்கியும் இடது திருக்கரம் புத்தக முத்திரையில் ஏடு ஏந்திய திருக்கரமாகவும் காணப்படுகின்றது. சிரசினை ஜடாபாரம் அலங்கரிக்கிறது. வலது செவியில் அணிகள் ஏதும் இன்றி நீள் செவியாகவும் இடது செவியில் பத்ர குண்டலமும் அலங்கரிக்கின்றது. திருக்கழுத்தில் உருத்திராட்ச மணி, தோள்களில் தோள்வளை, முன்கைகளில் கைவளை, இடையில் தொடை வரை இடைக்கச்சை ஆகிய அணிகலன்கள் அலங்கரிக்கின்றன. இச்சிற்ப வடிவம் 15 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்தது என தொல்லியல் ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா்.

பாரதம் பாடிய பெருந்தேவனாா் என்ற புலவா் புழல் திருத்தலத்தில் வாழ்ந்தவா். இவா் சங்க காலப் புலவா்கள் வரிசையில் இல்லை என்றாலும் சங்க நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தை சேர்ந்தவர். இவரால் எட்டுத் தொகை நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அகநானூறு ஐங்குறுநூறு குறுந்தொகை நற்றிணை மற்றும் புறநானூறு ஆகிய ஐந்து நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்களாக இவரது பாடல்கள் அமைந்துள்ளன. இவரது காலம் கிபி 700 க்கு முன்பு என்றும் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவா் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன.

புழல் கோட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளதால் இத்தலத்து இறைவனது பெயர் கல்வெட்டுகளில் புழல் நாயனாா் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலுள்ள கல்வெட்டுகள் தமிழ் மொழியிலேயே காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் சம்புவராய மன்னரான ராஜநாராயண சம்புவராயா், விஜயநகர மன்னர்களான முதலாம் தேவராயன், அச்சுதராயன் போன்ற அரசா்களின் கல்வெட்டுகளாகும். புழல் கோட்டத்திற்கு விக்கிரம சோழவளநாடு என்ற பெயா் இருந்ததை ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது. விஜயநகர மன்னா்கள் காலத்தில் இவ்வூா் மக்கள் இக்கோயிலுக்கு அளித்த நிலதானங்கள் மற்றும் கொடைகள் பற்றியும், இக்கோயிலில் நடந்த திருவிழாக்கள் பற்றியும் அவற்றிற்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றியும் கல்வெட்டுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. புழல் கோட்டத்தின் தலைமை இடமான புழல் சோழ மன்னா்களின் ஆட்சிக்காலத்தில் ராஜசுந்தரி நல்லூா் என்று வழங்கப்பட்டுள்ளது. சோழ மன்னன் வீரராஜேந்திரன் மகனான கிழக்கு கங்கத்தை அரசாண்ட ராஜேந்திரனின் மனைவி ராஜசுந்தரி என்பவரது பெயரால் இவ்வூா் ராஜசுந்தரி நல்லூா் என்று அழைக்கப்பட்டுள்ளது.

பல்லவ மன்னா்களின் ஆட்சிக் காலம் முதலே இத்திருக்கோயில் விளங்கினாலும் 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்கோயில் புனரமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சோழா் காலத்தின் புனரமைக்கப்பட்ட இக்கோயில் மீண்டும் அழிவினைச் சந்தித்ததால் விஜயநகர மன்னா்களின் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள கோயில் 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியைச் சாா்ந்தது என்பதையும் வரலாற்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா். சுந்தரா் இத்தல இறைவனை தரிசித்து பாடல்கள் பாடியுள்ளார்.

வற்றாப்பளை கண்ணகி கோயில்

இலங்கையின் வடபகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை என்னும் கிராமத்தில் நந்தி கடலோரம் வற்றாப்பளை கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள விநாயகரின் பெயர் காட்டா விநாயகர். தன்னை நம்பி அடைக்கலமான பக்தன் ஒருவனை எதிரிகளுக்கு காட்டாமல் காத்ததால் அவருக்கு காட்டா விநாயகர் என பெயர் வந்தது. மூலஸ்தானத்துக்கு அருகே கோயிலின் தல மரம் அனிச்ச மரம் இருக்கிறது. இக்கோயிலில் வைகாசி மாத பெருவிழாவும் அதை தொடர்ந்து கடல் நீரில் விளக்கு எரியும் அதிசயமும் இப்போதும் ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் மகா ஆச்சரியமான புண்ணிய தலங்கள் பல உண்டு. அதில் வற்றாபளை கண்ணகி அம்மன் கோயிலும் ஒன்று. இந்த இடத்தில்தான் சீதை சிறை வைக்கப்பட்டாள் என்று கருதப்படுகிறது. அங்கு வைகாசி மாதம் பௌர்ணமி அன்று கடல் உப்பு நீரில் தீபம் அந்த ஒருவார காலம் விடாமல் தொடர்ந்து எரியும் காலம் காலமாக இந்த அதிசயம் நடந்து வருகிறது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலின் கதை ஒன்று உள்ளூர் புராணத்தில் உள்ளது. ஒரு முறை வற்றாப்பளைக் கிராமத்தின் கிழக்குப் பகுதிக்கு ஒரு வயதான மூதாட்டி வந்தாள். அங்கு கால் நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் அவளின் சோர்வை பார்த்து அவளின் பசியை போக்க தங்களிடம் இருந்த பொங்கல் உணவை அவருக்கு வழங்கி அவளைப்பற்றி விசாரித்தார்கள். வயதான மூதாட்டி தான் சோழ சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவள் என்று கூறி தனக்கு தங்குவதற்கு இடமில்லை என சிறுவர்களிடம் முறையிட்டாள். அவர்கள் மரத்திற்கு அருகே ஒரு குடிசை அமைத்து கொடுத்தார்கள். மாலைப் பொழுதானதும் குடிசைக்குள் விளக்கு ஏரிவதற்கு எண்ணெய் இல்லையே என்று சிறுவர்கள் மனம் வருந்தினர். அவர்கள் கவலைப் படுவதைக்கண்ட அம்மூதாட்டியர் பிள்ளைகளே கடல் நீரை எடுத்து எண்ணையாக பாவித்து திரி வைத்து விளக்கேற்றுங்கள் என்றார். அவர்களும் அது போல் செய்ய விளக்கு எரிந்தது. தனக்கு குடிசை அமைத்து விளக்கேற்றி கொடுத்த சிறுவர்களைப் பார்த்து தனது தலை கடிக்கிறது பேன் பார்த்து விடும்படி கேட்டார். மூதாட்டியாரின் தலை முடியை வகுத்த சிறுவர்கள் தலையெல்லாம் கணகளாயிருப்பதைக் கண்டு பயந்து அலர மூதாட்டி உடனே தான் இங்கு வந்த தினமான வைகாசி விசாகம் (வைசாக) பண்டிகையின் போது பொங்கல் தயாரித்து வணங்குங்கள் என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்தி ஒவ்வொரு வைகாசித் திங்களன்றும் இங்கே வருவேன் எனக் கூறி மறைந்தார். சிறுவர்கள் நடந்ததை ஊர் மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். மக்களும் அங்கே வந்து குடிசைக்குள் பார்த்த போது கடல் நீரில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த குடில் இருந்த இடத்தில் கண்ணகி அம்மனுக்கு கோவில் கட்டி வைகாசி பௌர்ணமி தினத்தன்று பொங்கல் பொங்கி கடல் நீரில் விளக்கேற்றி வழிபடத் தொடங்கினர். ஆதி காலத்தில் அம்மன் காட்சி கொடுத்த ஆடு மேய்க்கும் சிறுவர்களின் பரம்பரையை சேர்ந்தவர்களே கோவில் பூசை வழிபாட்டில் பிரதான பங்கு வகிக்கிறார்கள். கண்ணகி அம்மாள் வந்தமர்ந்த இடம் பத்தாம்பளை. இந்த பெயர் மருவி வற்றாப்பளையாயிற்று என்பது வரலாறு.

நந்தி ஏரியில் இருந்து தீர்த்தம் எடுத்து சென்று கண்ணகி கோவிலில் வைத்து வழிபட்டு பின்னர் விளக்கேற்றுவார்கள். அந்த விளக்கு 7 நாள் எரியும். 7 ஆம் நாள் அதை ஊர்வலமாக எடுத்து சென்று கண்ணகி கோவிலில் வைத்து பொங்கலிடுவார்கள். குறிப்பிட்ட இந்த காலம் மட்டும்தான் நீரில் விளக்கு எரியுமே தவிர மற்ற நாளில் எரியாது. 1964 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து வந்த ஆய்வாளர்கள் தீர்த்தத்தில் தீபம் எரிவதைப் பற்றி ஆய்வு செய்தனர். எனினும் எவ்வித முடிவும் கண்டறியப்படாது திரும்பினர். மீண்டும் 1970 ஆம் ஆண்டிலும் இவ்வாறான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் கடல் நீரிலே காணப்படும் உப்புக் கரைசல் தீபத்தை ஏற்றும் போது நெருப்பு எரியக் கூடிய ஒரு பொருளாக மாறுகின்றது என ஆதாரமற்ற கருத்தை முன் வைத்தனர். ஆனால் உப்பு நீர் எரியுமா? உப்பு நீரை எரியக் கூடிய பொருளாக மாற்ற முடியுமா? என்ற கேள்விக்கு பதில் சொல்லாமலே ஆய்வு முடிந்தது. இன்றுவரை தீர்த்த நீரிலே தீபமேற்றுவது பற்றிய விளக்கத்தை எந்த விஞ்ஞானிகளாலும் கொடுக்க முடியவில்லை. இறைவனை வணங்கிவிட்டு ஒதுங்கி கொண்டது ஆய்வாளர் குழு.

இக்கோயில் இருக்கும் பிரதேசத்தை வன்னி மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். இந்த மன்னர்கள் காலத்தில் கோயில் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. கோயிலின் பெருமைகளை குறையாமல் இந்த மன்னர்கள் காத்தார்கள். பிற்காலத்தில் அந்நிய படையெடுப்பின் போது இந்த இடத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்றினார்கள். போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது முல்லைத்தீவுப் பகுதியும் அவர்களது ஆட்சிக்கு கீழ் இருந்தது. நெவில் என்ற போர்த்துக்கேய அதிகாரி ஒவ்வொரு முறையும் கோவிலை குதிரையில் தாண்டிச் செல்லும் போது அம்மனை பரிகாசம் செய்வார். ஒரு நாள் கோவில் அருகே வந்தவர் உங்கள் கடவுள் அதிசயங்கள் செய்வதாக கேள்விப்பட்டேன். அது உண்மையானால் எங்கே இப்போது செய்து காட்டட்டும் என்றார். அனிச்ச மரத்தின் கீழ் குதிரையில் அமர்ந்தபடியே அம்மனை அகங்காரத்தோடு தூற்றினார். உடனே தீடிரென அனிச்ச மரம் குளுங்கத் தொடங்கியது. காற்று பயங்கரமாக வீசத் தொடங்கியது. மரத்தில் இருந்த அனிச்சம் காய்கள் அம்மனைப் பரிகாசம் செய்த அதிகாரி மேல் விழுந்தன. வேறு யார் மீதும் இந்த காய் விழவில்லை. அனிச்சம் காய்களின் தாக்குதலால் காயமடைந்த அதிகாரி குதிரையிலிருந்து மூர்ச்சித்து கீழே விழுந்தான். அவன் அகங்காரம் அடங்கியது. அதன் பின் இன்றுவரை அந்த அனிச்ச மரம் பூப்பதும் காய்ப்பதும் இல்லை. இந்த அற்புத நிகழ்வை ஆலயத்தின் புராண வரலாற்றை சொல்லும் இன்றும் கோயிலில் படிக்கப்படும் பன்னிச்சை ஆடிய பாடற்சிந்து பாடல்கள் மூலம் அறியலாம். பிற்காலத்தில் பல அதிசயங்களை உணர்ந்த சிங்களவர்களும் வற்றாப்பளை ஆலயத்திற்கு யாத்திரை செல்லும் மரபை ஏற்றுக் கொண்டனர். வருடாந்த பொங்கல் பண்டிகையின் போது ​​சிங்களவர்களும் தமிழர்களும் வழக்கமான சடங்குகளில் பங்கேற்பது கண்ணகியின் பாரம்பரியத்தின் பகிரப்பட்ட கலாச்சார முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில் இமயமலையில் இருந்து கொண்டு வந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்தான். கிபி 178 இல் நடந்த அவ்விழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பணாகிய இலங்கை அரசன் கஜபாகு விழாவில் கலந்து கொண்டான். விழாவில் கலந்த கஜபாகு கண்ணகியின் அற்பதங்களைக் கண்டு வியந்தான். கஜபாகு கண்ணகியை செங்குட்டுவனைப்போல் நித்தியபூசை செய்து வலம் வந்து தன் நாட்டிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என்று அவன் கேட்டு பிரார்த்தித்தான். அவன் விரும்பியபடி எல்லாம் நடக்குமென அசிரீரி கேட்டு கஜபாகு உள்ளம் நெகிழ்ந்து கண்ணகி மேல் கூடிய நம்பிக்கை கொண்டான். இலங்கையில் கண்ணகி வழிபாட்டினை பரப்ப தன் விருப்பத்தை செங்குட்டுவனிடம் கஜபாகு தெரிவித்தான். செங்குட்டுவன் சந்தன மரத்தால் செய்த கண்ணகி சிலையையும் ஒரு கால் சிலம்பையும் சந்தன மரப்பேழையில் வைத்து கஜபாகுவிடம் கொடுத்தான். கஜபாகு கண்ணகி விக்கிரகத்துடன் இலங்கைக்குத் திரும்பும் போது தன்னுடன் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பல் குடிமக்களையும் அழைத்துச் சென்றான். இலங்கையில் கோயில் கட்டினான். இந்த கண்ணகி கோயில் வற்றாப்பாளை கோயிருக்கு சிறிது தூரத்தில் இருக்கிறது. இந்த செய்தியை கிபி 171 முதல் கிபி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது என இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது.

நாகச்சந்திரேஸ்வர்

உஜ்ஜயினி உள்ள நாகசத்திரேஸ்வரர் சிலை 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரமார் கால சிலையாகும். இந்த சிலை நேபாளத்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டது. செங்கற்களால் ஆன இந்த சிற்பத்தில் சிவனும் பார்வதியும் நாகத்தின் மீது அமர்ந்திருக்கிறார்கள். விஷ்ணுவைப் போல் சிவன் பார்வதியுடன் பாம்பு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிலை இக்கோயிலை தவிர்த்து வேறு எங்கும் இல்லை. சிவபெருமானை நோக்கி தவம் செய்த நாகராஜருக்கு அவரது தவத்தின் பலனாக இறைவன் அவருக்கு அழியாத தன்மையைக் கொடுத்தார்.

நாகம் அவர்கள் மீது குடை வடிவில் படர்ந்துள்ளது. சிவனுக்கு வலதுபுறம் விநாயகர் இருக்கிறார். இக்கோவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும். இந்த வருடம் முறை ஆகஸ்ட் 9ம் தேதி நாக பஞ்சமி கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாகசந்திரேஸ்வரர் சன்னதி திறக்கப்பட்டு மறுநாள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு 12 மணி வரை வழிபடப்பட்டு மீண்டும் சன்னதி மூடப்பட்டது. 1050 ஆம் ஆண்டு பர்மர் மன்னர் போஜ் என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. இதற்குப் பிறகு, சிந்தியாவின் மன்னர் ரானோஜி 1732 இல் மகாகல் கோயில் மற்றும் நாகச்சந்திரேஷ்வர் கோயில் உட்பட முழு அமைப்பையும் புதுப்பித்து பலப்படுத்தினார். உஜ்ஜயினி மாகாளர் கோயிலின் 3 ஆவது தளத்தில் இந்த சன்னதி உள்ளது.

ஞானமலை முருகப்பெருமான்

சென்னை வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பாக்கம் சோளிங்கர் பாதையில் மங்கலம் என்னும் ஊரில் இருந்து சுமார் ஒரு கிமீ தொலையில் கோவிந்தச்சேரி என்னும் கிராமத்தில் இந்த ஞானமலை உள்ளது. ஞானமலை முருகன் கோவில். 1300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலுக்குச் செல்ல 150 படிக்கட்டுகள் உள்ளன. இந்த ஆலயத்தின் வரலாறு மிகத் தொன்மையானது. வள்ளி மலையில் வள்ளியினை மணமுடித்த முருகப்பெருமான் திருத்தணிக்குச் செல்லும் வழியில் இங்கு எழுந்தருளினார். இந்த தலம் அக்காலத்தில் இருந்தே பல முனிவர்களாலும் ரிஷிகளாலும் வழிபடப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் ஞானசித்தி விநாயகர் அருள்பாலிக்கிறார். வழியில் கிராம தேவதை பொன்னியம்மன் ஆலயம் உள்ளது. வழியில் ஞான தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். மலை உச்சியில் ஒரு முகம் நான்கு திருக்கரங்கள் கொண்ட ஞான முருகப்பெருமான் வள்ளி தேவசேனாவோடு காட்சியளிக்கிறார். வள்ளியை கரம் பிடித்த முருகப்பெருமான் வள்ளி மலையிலிருந்து திருத்தணிகை மலைக்குப் புறப்பட்டார். வழியில் உள்ள இந்த மலையில் வள்ளியோடு முருகப்பெருமான் அந்தக் குன்றில் தங்கினார்.

அருணகிரிநாதர் தன் கர்ம வினையால் கீழான வாழ்வில் சிக்கிச் சீரழிந்து பின் தற்கொலை செய்ய திருவண்ணாமலை வந்தபோது முருகப்பெருமான் அவரை தடுத்தாட் கொண்டார். அப்போது முருகப்பெருமானின் பாதங்களை அருணகிரிநாதர் கண்டார். அருணம் எனும் திருவண்ணாமலை மலை (கிரி) யில் ஞானம் பெற்றவர் என்பதால் அருணகிரிநாதர் என பெயர் பெற்றார். அதன் பின் அவர் ஒவ்வொரு முருகப்பெருமான் தலங்களுக்கும் சென்று பாடினார். அப்படி ஒவ்வொரு தலமாக செல்லும் போது இந்த தலத்துக்கும் வந்தார். அங்கேதான் அவருக்கு திருவண்ணாமலையில் முருகப்பெருமான் பாதம் கண்ட காட்சி நினைவுக்கு வந்து மீண்டும் முருகப்பெருமான் திருப்பாதம் காண ஆவல் கொண்டு முருகரிடம்

அடியனும் நினைத்து நாளும் உடலுயிர் விடுத்தபோது
அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே

என்று பாடலாகப் பாடி மன்றாடினார். அப்போது வந்த முருகப்பெருமான் அவர்முன் தோன்றி அவர் விரும்பிய அந்த பாதத்தை காண்பித்து அங்கே பதித்தும் வைத்தார். இதனை அருணகிரிநாதர் இத்தலத்தில் பாடிய தனது பாடல்களில் சொல்லியிருக்கிறார். முருகப்பெருமான் பாதம் பதிந்த ஒரே மலை இந்த ஞானமலை மட்டுமே. முருகரின் திருப்பாதம் ஞானத்தின் உறைவிடம். அந்த பாதம் இங்கு பதித்தபடியால் ஞானமலை என்று பெயர் பெற்றது. ஞானமலை திருப்புகழ் என அருணகிரியார் ஒன்றைப் பாடியதாக ஒரு கருத்து நிழவுகிறது. அந்த பாடல்கள் கொண்ட சுவடி கிடைக்கவில்லை. எனினும் திருப்புகழில் இந்த மலை பற்றிய குறிப்புகள் உண்டு.

கோவில் தெற்குச் சுற்றில் அருணகிரிநாதருக்குக் காட்சியளித்த நிகழ்வு சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நீல மயிலில் அமர்ந்த கோலக்குமரன் இடது புறம் மடி மீது வள்ளியை அணைத்தவாறு இருக்கும் அரிய வடிவம். அருகில் அருணகிரியார் கூப்பிய கரங்களுடன் இக்காட்சியைக் கண்டு இன்புறுவார். இந்த சிற்பத்திற்கு குறமகள் தழுவிய குமரன் என்று பெயர். இந்தக் கோயிலின் வடமேற்கில் வள்ளி மலையும் வடகிழக்கில் திருத்தணிகையும் சம தூரத்தில் உள்ளது. இந்த மூன்று மலைகளும் சேர்ந்து ஒரு முக்கோண அமைப்பில் உள்ளது. திருக்கோயிலைச் சுற்றி விட்டு இன்னும் மலையின் மீதேறிச் சென்றால் தேவசுனை, ஞானகிரீஸ்வரர் சந்நிதி, ஞானவெளி சித்தரின் ஜீவசமாதி, காடுவெளி சித்தர் சமாதி, முருகப்பெருமானின் திருவடித் தடங்கள் என்று மலையெங்கும் அருள்காட்சிகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. பல்லவர் காலத்து கோயில் என்று சொல்லப்படும் ஞானமலையில் 14 ஆம் நூற்றாண்டு காளிங்கராயன் காலத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. இந்த கல்வெட்டில் கோயிலின் திருப்பணி பற்றிய தகவல்கள் உள்ளது.

முருகப்பெருமானின் திருப்பாதம்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். மூலவர் சுப்பிரமணியர். உற்சவர் தண்டாயுதர். தீர்த்தம் வள்ளி தெய்வானை தீர்த்தம். ஊர் திண்டுக்கல் அருகில் சாணாா்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த திருமலைக்கேணி. புராண பெயர் மலைக்கிணறு. இக்கோயில் இரண்டு அடுக்காக அமைந்திருக்கிறது. மலை மீது ஒரு முருகரும் மலையின் கீழ் ஒரு முருகரும் அருள் பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் சக்தி விநாயகர் சன்னதி இருக்கிறது. கோயில் வளாகத்திலுள்ள மாமரத்தின் அடியில் அருணகிரியார் திருவுருவம் உள்ளது. இத்தலத்தில் மௌனகுரு சுவாமிகள் என்ற சித்தா் பல காலங்களுக்கு முன்னா் ஜீவசமாதி நிலை அடைந்துள்ளாா். அவருக்கென அருகில் தனிக் கோயில் உள்ளது.

ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன் முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினாா். ஒருசமயம் அவா் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தாா். இங்கிருந்த சுனையில் நீா் பருகியவா் சற்று நேரம் ஓய்வெடுத்தாா். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகன் தீா்த்தத்திற்கு அருகிலேயே கோயில் எழுப்பும்படி கூறினாா். அதன்படி மன்னா் இங்கு கோயில் எழுப்பினாா்.

மூலஸ்தானத்தில் முருகன் பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி இடக்கையை இடுப்பில் வைத்தபடி நளினமாகக் காட்சி தருகிறார். இவருக்கு எப்போதும் கிரீடம் வைத்து ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. உடன் வள்ளி தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி தெய்வானை தீர்த்தங்கள் உள்ளது. இந்த தீர்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியர்கள் அருளுகிறார்கள். கிணற்றில் வள்ளி தீர்த்தம் இருக்கிறது. மலையின் மத்தியில் உள்ள கிணறு என்பதால் இதன் பெயரால் தலம் மலைக்கேணி என்று பெயர் பெற்றது. கேணி என்றால் கிணறு என்று பொருள்.

மலையில் அடர் வனத்திற்கு மத்தியில் அமைந்த கோயில் இது. காலப்போக்கில் மூலவர் சிலை பின்னமாகியது. கோயிலும் சேதமடைந்ததால் முருகன் கோயில் ஒரு குடிசையின் கீழ் இருந்தது. முறையான பூஜைகளும் நின்று போனது. 1979ல் இங்கு வந்த கிருபானந்த வாரியார் கோயிலை மீண்டும் புனரமைக்கும் பணியைத் துவக்கினார். பிரதான மூலவர் சிலை பின்னமாகியிருந்ததால் வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால் பழைய சிலையை இங்கிருந்து எடுக்க முடியவில்லை. எனவே அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி அதற்கு மேலே புதிதாக ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறு கீழே ஒரு முருகன் மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது. மேலடுக்கிலுள்ள பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் கீழ் அடுக்கிலுள்ள ஆதி முருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை அமைத்துள்ளனர். இதற்காக முருகன் பாதத்திற்கு கீழே ஒரு துளையும் உள்ளது.

அடிமுடிகாணா அண்ணாமலை

மேலே அன்னப் பறவையாக படைக்கும் கடவுள் பிரம்மா தாழம்பூவுடன் விவாதிக்க கீழே வராக ரூபத்தில் பூமியை பிளந்து ஈசனின் அடியைக்கான காக்கும் கடவுளான விஷ்ணு பயணிக்க தீர்ப்பினை கூற ஜோதி பிழம்பாக எம்பெருமான் ஈசன் காட்சியளிக்கும் தத்ரூபமாக தூணில் வடிக்கப்பட்டுள்ள சோதி வடிவான அடிமுடிகாணா அண்ணாமலை சிற்பம். இடம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்படும் ஔஷதீஷ்வரர் கோயிலில் அமைந்துள்ளது.