ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 686

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

மகாசக்தி மகா பரம்பொருள் தன்னுடைய பரிபூரண அனுக்கிரகத்தை எதன் மீது முழுமையாக செலுத்துகிறதோ அது எப்பொழுதுமே உயர்ந்ததுதான். எல்லா நல்ல விஷயங்கள் மீதும் எல்லா நல்ல உள்ளங்கள் மீதும் இறைவனின் அனுக்கிரகம் என்றும் இருக்கிறது. எனவே நல்ல உள்ளங்கள் அனைத்தும் திருவண்ணாமலையே. நல்ல உள்ளங்கள் அனைத்தும் கயிலேயே. நல்ல உள்ளங்கள் அனைத்தும் அறுபடைவீடே நல்ல உள்ளங்கள் அனைத்தும் இங்குள்ள புனித தலங்களும் ஒன்றேயாம்.

நெல்லிக்காய் பசவண்ணன் நந்தி

நந்தி மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோயில். யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது. ஆறு கல் தூண்களில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் மையத்தில் ஒரு நந்தி அமர்ந்த நிலையில் உள்ளது. நந்தி சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. நந்தி 10 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்டது. கோவில் சோழர் பாணியில் உள்ளது. கோயிலின் முன்புறம் நெல்லி மரம் உள்ளது. ஆகவே இக்கோயில் நெல்லிக்காய் பசவண்ணா என்று அழைக்கப்படுகிறது. 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக இருக்கலாம் என்று கருத்தப்பட்டுகிறது. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டுள்ளது. இடம் நந்தி மலை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 685

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

எப்பொழுதெல்லாம் ஒரு மனிதன் பிறரிடம் உள்ள நன்மை தரும் செயல்களையெல்லாம் பொதுவில் பாராட்டுகிறானோ எப்பொழுதெல்லாம் ஒரு மனிதன் தன்னிடம் உள்ள குறைகளை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறானோ அப்பொழுதே அவன் தன்னை உணரத் துவங்கி விடுகிறான். இதிலிருந்து அவன் இறைவனை நோக்கி செல்வதற்குண்டான முதல் அடியை எடுத்து வைக்கிறான் என்பது பொருளாகும்.

நான் என்ற தனித்தன்மை இல்லாத ஒழிந்து போன பிறகுதான் அங்கே சித்தன் முளைக்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 684

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

உண்மையாகவே ஒரு மனிதன் மனஉளைச்சல் கொள்ள வேண்டியது அறிய வேண்டியதை விட்டுவிட்டு ஹரியை அறிய வேண்டியதை விட்டுவிட்டு அறியாதவற்றையெல்லாம் அறிந்து கொண்டிருக்கிறார்களே. இந்த அறியா சனங்களை எண்ணி உண்மையில் வேதனை கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. மனிதன் மெய்யாக மன அழுத்தம் கொள்ள வேண்டியது மெய்ப் பொருளை அறியாமல் பொய்ப் பொருள் பின்னால் செல்கிறோமோ என்றுதான். ஆனால் அவனுக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரியாமல் பொய் பொருள் பின்னால் அழியக் கூடிய வாழ்க்கைக்கு பின்னால் சென்று கொண்டே அதனால் தன்னைத் தானே சுயa சித்திரவதைக்கு ஆளாக்கிக் கொள்வதும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கிக் கொள்வதும் ஒரு வகையான அறியாமை தான். அந்த அறியாமையை அவனுக்கு தருவது அவன் செய்த பாவ வினைகள் தான். அந்த வினைகளின் எதிரொலி தான் சுற்றி சுற்றி மனிதனை பலவீனப்படுத்துகிறது. இதற்கு மீண்டும் மீண்டும் வழியென்றால் இறைவனை நோக்கி செல்வதும் பக்தி செலுத்துவதும் தர்மம் செய்வதும். இது ஒன்றேத் தவிர வேறு வழி இல்லையப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 683

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

சித்தர்கள் கணத்திற்கு கணம் உருவாகிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அப்படி உருவாக்கப்படுவது அப்படி சித்து நிலைக்கு போக நினைக்கிற ஆன்மாவிற்கு ஏதாவது ஒரு வழியில் வழி காட்டுவதற்காக. ஏற்கனவே சித்தத் தன்மை அடைந்த ஆத்மாக்கள் சித்தத் தன்மை அடைய அருகிலுள்ள ஆத்மாவிற்கு ஏதாவது ஒரு வழியை வழிகாட்டி கொண்டே தான் இருக்கின்றன இறைவன் கருணையால்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 682

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

அளவு பார்க்காமல் நாள் பார்க்காமல் திதி பார்க்காமல் நாழிகை பார்க்காமல் இரவு பகல் பார்க்காமல் பிறர் குறிப்பறிந்து தந்து கொண்டே இருக்க வேண்டும். இது சித்தர்கள் வழி. எது அளவில் உயர்வோ அதை முதலில் தருவது சித்தர்கள் வழி. அதைப்போல் மனதளவிலே அணுவளவும் எந்தவிதமான தடுமாற்றம் இல்லாமல் கொடுப்பதும் கொடுக்கின்ற பொழுதிலே இந்த அளவா? அந்த அளவா? என்று எண்ண அலைகளின் ஏற்ற இறக்கம் இல்லாமல் கொடுப்பதும் சித்தர்கள் வழியில் வருபவர்களின் தன்மையாகும். சற்றும் அஞ்சற்க (பயம் வேண்டாம்) சலனம் வேண்டாம். இதுபோல் எதிர்காலத்தில் இன்னும் அதிகம் செய்ய செய்ய அதுபோல் நிலையை இறைவன் நல்குவார் அருளுவார் என்றெண்ணி தொடர்ந்து சராசரி மனித சிந்தனையிலிருந்து விடுபட்டு எமது வழியில் வருகின்ற சிந்தனையை வளர்த்துக் கொள்ள அனைவருக்கும் நன்மையாம்.

சிவதனுசை உடைத்த ராமர்

சுயம்வரத்தில் சிவதனுசை உடைத்த ஸ்ரீராமருக்கு மாலை அணிவிக்கும் சீதை. இடம்: பரிமளரங்கநாதர் கோவில். திருஇந்தளூர் மயிலாடுதுறை.