முருகன் தெய்வானையுடன்

முருகனும் தெய்வானையும் சுகாசனத்தில் உள்ளனர். இறைவனின் சிதைந்த நிலையில் வலக்கால் உள்ளது. கைகளில் தோள் வளைகளும் பட்டை வளைகளும் உள்ளன. உயரமான சடை மகுடம் சடைப் புரிகள் இருபுறமும் தோள்களில் தவழ்கின்றன.

முருகனின் இடப்புறம் அவரைப் போலவே வலக்காலைக் கீழிறக்கி இடக்காலைக் இருத்தி சுகாசனத்தில் தெய்வானை அமர்ந்திருக்கிறார். இவரது கால்களும் சிதைந்த நிலையில் உள்ளது. சிதைந்துள்ள இடக்கை தொடை மீதும் வலக்கையில் மலர் உள்ளது. செவிகளில் மகர குண்டலங்கள் கழுத்தைச் சரபளியும் பதக்க மாலையும் உள்ளன. தலையில் அணிந்துள்ள சிறிய அளவிலான கரண்ட மகுடத்தை மீறிய சடைப்புரிகள் வலப்புறம் நெகிழ்ந்துள்ளன. இறைவனுக்காக தலையைச் சாய்த்தவாறு தேவியின் முகம் குனிந்திருக்கிறது. இடம் கந்தன் குடைவரை கோவில் (லாடன் கோயில்) ஆணைமலை மதுரை.

நாகபைரவர்

தெலுங்கானா மாநிலம் யதாத்ரி மாவட்டத்தில் உள்ள போங்கிர் கோட்டைக்கு செல்லும் படிகளுக்கு அருகில் இச்சிலை உள்ளது. பச்சை நிற பாசால்ட் சிற்பம் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மலையடிவாரத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் கட்டுமானப் பணியின் போது தோண்டி எடுக்கப்பட்டு தற்போது போங்கிர் கோட்டையின் அடிவாரத்தில் நிறுவப்பட்டுள்ளது. 850 ஆண்டுகள் பழமையான சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்த இந்த சிற்பம் புவனேஸ்வரி கோயிலின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. நாக பைரவர் அஷ்ட பைரவர்களில் ஒருவராவார். சிவனின் எட்டு உக்கிரமான பைரவ அவதாரங்கள் எட்டு திசைகளையும் பாதுகாத்து கட்டுப்படுத்துகிறார்கள். நாக பைரவா தெற்கு திசையின் பாதுகாவலராக அறியப்படுகிறார்.

விநாயகர் தனது துணையுடன்

திருநெல்வேல்லியில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் மூலவராக விநாயகர் தனது துணைவியான நீல வாணியை தனது இடது மடிமீது வைத்து அருள் பாலிக்கிறார். வட இந்தியாவில் விநாயகரின் துணைவிகளாக சித்தி புத்தி இருவர் இருப்பார்கள். ஆனால் விநாயகர் துணைவி நீல வாணியை இக்கோயிலை தவிர வேறு எங்கும் காண முடியாது.

சுவர்ண ஆகார்ஷண பைரவர்

திருநெல்வேல்லியில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் உள்ள சுவர்ண ஆகார்ஸன பைரவர் தனது துணைவியான பைரவியை தனது இடது மடிமீது வைத்து அருள் பாலிக்கிறார்.

வலம்புரி விநாயகர்

செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வல்லம் என்ற ஊரில் சிறிய குன்றில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூன்று குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தவையாகும். பாறை முகப்பில் காணப்படுகிறார் இந்த விநாயகப் பெருமான்.

விநாயகர் இடக்காலை மடக்கி வலக்காலை குத்திட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். நான்கு கரங்கள் விரிந்த அழகான காதுகள் திண்டு போன்ற அமைப்பின் மீது வைத்து சாய்ந்த நிலையில் அழகிய வடிவுடன் ஒய்யாரமாக அமர்ந்து இருக்கிறார்.

ஆதிசேஷன்

ஆதிசேஷன் தான் குழந்தை செல்வத்தை பெற ஓர் முனிவரின் அறிவுறுத்தலின்படி மகா சிவராத்திரி நன்னாளில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய எண்ணினான். அதன்படி முதல் காலத்தில் கும்பகோணம் குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகநாதசுவாமி திருக்கோவிலிலும் இரண்டாம் காலம் திருநாகேஸ்வரதிலும் மூன்றாவது காலத்தில் திருப்பாம்புரம் திருத்தலத்திலும் நான்காம் காலத்தில் நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வர சுவாமியை வழிபட்டு பின் தனியாக லிங்கப் பிரதிஷ்டை செய்து தீர்த்தம் அமைத்து வழிபட்டு வந்தார். இறைவனும் மனமிரங்கி ஆதிசேஷனுக்கு காட்சியளித்து பிள்ளை வரமளித்தார். நாகர்களின் குலம் செழிக்க காரணமான இந்த ஊருக்கு அவர்களது பெயராலே நாகப்பட்டிணம் என வழங்கலாயிற்று.

இறைவன் அருளால் ஆதிஷேசன் ஓர் பெண் குழந்தையை பெற்றார். அக்குழந்தை வளர்ந்து பருவம் எய்திய போது மூன்று தனங்களுடன் இருப்பதை அறிந்து மன வேதனை கொண்டு இறைவனிடம் முறையிட்டார். அப்போது அசரீரியாக ஆதிசேஷனே வருந்தாதே அப்பெண்ணிற்கு உரிய மணாளனே அவள் காணும் பொழுது மூன்றாவது ஸ்தனம் மறையும் என ஒலித்தது. ஆதிசேஷனின் மகளான நாககன்னிகை காயாரோகண சுவாமியையும் நீலாயதாட்சி அம்மனையும் நாள்தோறும் வழிபட்டு வந்தாள். ஒரு நாள் தேவ தீர்த்தக்கரையில் சோழர் குலத்தில் உதித்த அரசகுமாரன் சாலிசுகனை கண்டபோது அவள் மூன்றாவது தனம் மறையவே இவனே தனது மணாளன் என உணர்ந்து தன் பெற்றோரிடம் தெரிவித்தாள். சாலிசுகனை நாக லோகத்திற்கு வரவழைத்து தனது மகளுக்கு மணமுடித்துக் கொடுத்தார் ஆதிசேஷன். இடம்: காயாரோகணேசுவரர் கோவில் நாகப்பட்டிணம்.

மிருதங்கம் வாசிக்கும் நந்திகேஸ்வரர்

சிவனின் இந்தக் காளை வாகனம் கைலாசத்தின் காவல் தெய்வம். தர்மத்தின் தத்துவமாக சிவபெருமானின் முன் அமர்ந்திருக்கிறார். 10 ஆம் ஆண்டு முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட பஞ்சேஷ்டி அகஸ்தீஸ்வரர் கோயிலின் ராஜகோபுரத்தில் செதுக்கப்பட்ட நந்திதேவரின் அரிய காளை மாட்டு தலையும் மனித உடலும் கொண்ட நந்திகேஸ்வரர் சிற்பம். வலது மேல் கரம் திரிசூலத்தை ஏந்தியும் இடது மேல் கரம் உடுக்கை ஏந்தி உள்ளதையும் கீழ் வலது மற்றும் இடது கைகள் மிருதங்கம் வாசிக்க 4 கைகளுடன் இந்த சிற்பம் உள்ளது. ஊர் திருவள்ளூர்.

சோமாஸ்கந்தமூர்த்தி

சிவபெருமானின் பல்வேறு வடிவங்களில் ஒன்று சோமாஸ்கந்த மூர்த்தி. இந்த உருவில் சிவன் உமையம்மையுடன் கந்தனும் சேர்ந்து மூன்று கடவுளரும் கொண்டு அருள்பாலிப்பார். முருகர் அன்னை உமையம்மை மடியில் சிறு பிள்ளையாக அவளை ஒட்டியபடியே அமர்ந்திருப்பார். ஆனால் திருமழபாடியில் உள்ள சோமாஸ்கந்தமூர்த்தி சிற்பத்தில் முருகன் சிவன் மடியில் அமர்ந்திருக்கிறார். இச்சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. இடம் அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசாமி திருக்கோயில் திருமழபாடி அரியலூர் மாவட்டம்.

அதியேந்திர விஷ்ணு குடைவரை கோயில்

நாமக்கல் மலையின் கிழக்கு பக்கம் ஒரு குகைக் கோயில் உள்ளது. இம்மலையின் பாதி வழியில் வடபால் அனந்தாச்சாரி விஷ்ணு குகை இருக்கிறது. இக்குகைக் கோயிலில் வாமன அவதாரமும் கேவல நரசிம்மன், விக்கிரம அவதாரம், சங்கர நரசிம்ம அவதாரம் முதலிய சிற்பங்கள் சிறந்த வேலைப்பாட்டுடன் விளங்குகின்றன. இங்கு பெருமாள் கார்கோடகன் என்னும் திருநாமத்தில் தெற்கில் தலையும் வடக்கே கால் நீட்டியும் பள்ளிகொண்டு திருச்சேவை சாதிக்கிறார்.

நான்கு தெய்வங்களுடன் சிவலிங்கம்

சிவலிங்க பாணத்தின் நான்கு பக்கங்கிலும் பிரம்மா விஷ்ணு சிவன் மற்றும் சூரிய தேவரின் உருவங்கள் உள்ளது. 10 – 11 ஆம் நூற்றாண்டு கலத்திய ராஜஸ்தானை சேர்ந்ததாக கருதப்படும் இந்த சிவ லிங்கம் தற்போது அமெரிக்காவில் உள்ள பெருநகர கலை அருங்காட்சியகத்தில் உள்ளது.