அம்மை காண ஆனந்த நடனம் புரியும் ஆடல்வல்லான்

ஆடல்வல்லான் சிவகாமி காண உயிர்களுக்கு அருள் வழங்க ஆனந்த தாண்டவம் புரிந்ததை தத்ரூபமாக செதுக்கியுள்ளனர். மேற்புறத்தில் சுடர்களுடன் திருவாச்சி. ஜடாமகுடத்துடன் விரிசடையில் வலதுபுறம் வானிலிருந்து இறங்கும் வணங்கிய நிலையில் கங்கை இடப்புறத்தில் பிறை நிலவு. உடுக்கையும் தீயும் வலது இடது பின்கரங்களில் ஏந்தி அபய கரத்துடன் தூக்கிய திருவடியைப் பற்றிக்கொள் என்று காட்டி ஆணவமாகிய முயலகன் மேல் நின்று அகிலமெல்லாம் இயங்க ஆடிக் கொண்டிருக்கிறார். புலித்தோல் ஆடை ஆடும் வேகத்தில் முடிந்தும் நீண்டும் பறந்து கொண்டிருக்கின்றன. ஓரத்தில் கரை குஞ்சம் போன்ற அமைப்பு. வலத்தோளின் பின்புறம் படமெடுக்கும் நாகம், தோள் மாலை, கழுத்தணி, கையணி, இடையணி, காலணியுடன் அம்மையும் அவள் பங்கிற்குப் பேரழகுடன் நிற்கிறாள். குடவரைகளில் அம்மை காண ஆனந்த நடனம் புரியும் நடராஜரின் சிற்பம். இடம்: மூவரைவென்றான் மொட்டமலை பல்லவா் கால குடைவரை கோவில் விருதுநகா் மாவட்டம்.

யோகினி

64 யோகினிகளில் ஒருவரான யோகினி யமுனை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறாள். இந்த யோகினி ஒரு ஆமையின் மேல் ஒரு காலையும் அதன் வால் முனையின் மேல் மற்றொரு காலையும் வைத்து தன்னை சமநிலைப்படுத்திக் கொள்வதைக் காணலாம். இந்த யோகினிக்கு நான்கு கைகள் உள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பான அம்சம் இவளது தலையை சுற்றி சுருண்டு எழும்பியுள்ள ஜடாமுடி தான்.

அமைவிடம்: சௌசாத் யோகினி கோவில் ஹிராபூர் ஒடிசா மாநிலம்.

புராண முருகர்

மயில் மீது இரு புறமும் கால்கள் போட்டு அமர்ந்த வடிவில் நுக்கேஹள்ளி எனும் இடத்தில் உள்ள ஹொய்சளர் கலைப்பாணி முருகன் சிலை இது. பொதுவாக ஹொய்சளர்கள் மிக அரிதாகவே முருகன் சிலையை உருவாக்கியுள்ளனர். இது 13-ம் நூற்றாண்டு சிலையாகும். இங்கே நமக்கு மிகவும் பரிச்சயமான அழகான வேல் ஒரு கையிலும் மறு கையில் பாசக்கயிறு மற்றொரு கையில் அக்கமாலை நான்காம் கையில் ஹொய்சளர் சிலைகள் அனைத்திலும் இருக்கும் ஒருவித எலுமிச்சைவகைப் பழம் இருக்கிறது. ஆறு முகத்தில் மூன்று முகத்தை காண முடிகிறது. மயிலை அதன் தோகைகளுடன் மிக மிக அழகாக உருவாக்கியுள்ளனர்.

ஆறுமுகன்

தமிழகத்தில் 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் ஆறு தலையும் பன்னிரு கைகளும் மயிலும் முருகன் படிமத்தில் நுழைகின்றன. பின்னர் விஜயநகர நாயக்கர் காலத்தில் ஆறுமுகனை மயில் மீது அமர்ந்த கோலத்தில் காணமுடிகிறது. தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள இச்சிலை சோழர் கலைப்பாணியில் அமைந்ததாகும். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

சேத்திரபாலர் – பைரவர்

பைரவரை சேத்ரபாலர் என்ற பெயரில் குறிப்பிட்டு ஒவ்வொரு ஊரையும் அங்கு திகழும் திருக்கோயிலையும் தீமைகளிலிருந்து காக்கும் கடவுளாக வணங்கப்படுகிறார். எட்டுக் கரங்களுடன் திகழும் பைரவ வடிவமே சேத்திரபாலர் திருமேனிகளில் உத்தமமானதாகும். எரிசுடர்கள் (ஜ்வாலாமகுடம்) பிறைச்சந்திரன் ஆகியவை தலைமேல் திகழ எட்டுக் கரங்களுடன் சேத்திரபாலர் திகழ்கின்றார். திரிசூலம் வாள் வில் அம்பு டமருகம் மணி (காண்டா) கேடயம் ஆகியவற்றைத் தரித்திருக்கிறார். ஆடையின்றி இடுப்பிலும் கரங்களிலும் பாம்புகளை ஆபரணமாகப் பூண்டுள்ளார். தோளிலிருந்து நீண்ட மணிமாலை கணுக்கால் வரை உள்ளது. இந்த அற்புத திருமேனியின் முன் கரங்கள் உடைக்கப் பட்டுள்ளது. இடம் பெருவுடையார் கோவில் தஞ்சை.

லலிதை

பிள்ளையார் முருகனுடன் லலிதை சிதிலமடைந்த நிலையில் சிற்பம். தற்போது பிரித்ததானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 11 ஆம் நூற்றாண்டு ஒடிசா கோயிலில் இருந்த சிற்பம்.