மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -32

துரியோதனன் மற்றும் அவனுடைய மந்திரி புரோச்சனன் இவர்களது கொடிய சதித்திட்டத்தை விதுரர் தெளிவாக அறிந்தார். எனவே சுரங்கம் அமைப்பதில் சிறந்த பொறியாளனான கனகன் என்பவன் ஒருவனே வாரணவதத்திற்கு அனுப்பி வைத்தார். கனகன் யுதிஷ்டிரனை தனியாக சந்தித்து விதுரர் தன்னை சுரங்கம் அமைக்க அனுப்பி வைத்ததாக சொன்னான். அந்த அரக்கு மாளிகையில் இருந்து அருகில் இருந்த வனத்திற்கு போகும் படியான ரகசிய சுரங்கம் ஒன்றை கட்டுவதற்கான திட்டத்தைப் பற்றி யுதிஷ்டிரனிடம் பேசினான். இருவரும் திட்டம் ஒன்றை திட்டினார்கள்.

அந்த திட்டத்தின்படி புரோச்சனனிடம் யுதிஷ்டிரன் இந்த மாளிகையிலேயே தாங்கள் நிரந்தரமாக வசித்து இருக்கப்போவதாகவும் ஆகையால் பாதுகாப்பிற்காக அகழியை வலிமைப்படுத்த வேண்டும் என்றும் இங்கு இருக்கும் காலம் முழுவதும் புரோச்சனன் அவர்களுக்கு நிர்வாக காரியதர்சியாக இங்கேயே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டார்கள். இவர்களது திட்டப்படி கனகன் மாளிகையை சுற்றி இருந்த அகழியை திருத்தி அமைக்கும் வேலையில் நியமிக்கப்பட்டான். புரோச்சனன் அதற்கு ஆட்சேபம் எதுவும் செய்யவில்லை. காலையிலிருந்து இரவு வரையில் காட்டில் சென்று வேட்டையாடுவதில் பாண்டவர்கள் ஈடுபட்டார்கள். புரோச்சனனையும் அவர்களோடு நாள்தோறும் அழைத்துச்சென்றனர். இவர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வேறு யாருக்கும் தெரியாதபடி அதிவிரைவில் சுரங்கம் ஒன்று அமைக்கப்பட்டது.

அரக்கு மாளிகைக்கு தீ மூட்டும் நாள் ஒன்றை துரியோதனனும் புரோச்சனனும் குறித்து வைத்திருந்தனர். அந்த நாளும் வந்தது. அந்நாளில் குந்திதேவி ஊரில் இருப்பவர்கள் அனைவருக்கும் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தாள். விருந்திற்கு வந்தவர்களில் வேடுவச்சி ஒருத்தியும் அவளின் ஐந்து புதல்வர்களும் வந்திருந்தனர். அன்னமும் பானமும் அனைவருக்கும் தாராளமாக வழங்கப்பட்டது. உணவை உண்டு முடித்தபின் வேடுவச்சி மற்றும் அவளது ஐந்து மைந்தர்களை தவிர அனைவரும் சென்று விட்டனர். விதிவசத்தால் உண்ட மயக்கத்தில் வேடுவச்சியும் அவர்களது புதல்வர்களும் அங்கேயே தங்கி விட்டனர். நள்ளிரவு வந்தது. புரோச்சனனும் அயர்ந்து தூங்கி போனான்.

குந்தி தேவியையும் மற்ற சகோதரர்களையும் சுரங்கத்தின் வழியாக வெளியே போகும்படி பீமன் கூறினான். அவர்களும் அவ்வாறே சென்றனர். பிறகு அரக்கு மாளிகையின் அனைத்து பகுதிக்கும் தீ மூட்டிவிட்டு பீமனும் அச்சுரங்கத்தின் வழியாக வெளியே வந்தான். அரக்கு மாளிகை முற்றிலும் எரிந்த பின்பு சுரங்கத்தின் அமைப்பின்படி இவர்கள் வெளியேறிய நுழைவுப்பகுதியின் வாயிலை மூடியது. பாண்டவர்களும் சுரங்கத்தின் மறுபகுதியை வந்தடைந்தனர். பின் இவர்கள் வெளியே வந்த வாயில் இருக்கும் இடம் தெரியாமல் அதனை மூடிவிட்டனர். அடுத்தபடியாக காட்டில் இருந்த நதிக்கரைக்கு வந்தனர். அங்கு விதுரரின் ஏற்பாட்டின்படி அவர்களுக்காக படகு ஒன்று இருந்தது. நதியில் நெடுந்தூரத்துக்கு அப்பால் இருக்கும் அடையாளம் தெரியாத ஒரு நாட்டிற்கு அவர்கள் வந்து சேர்த்தனர்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -31

பாண்டவர்கள் தங்கள் ஊருக்கு விஜயம் செய்ததை குறித்து வாரணவதத்தில் வசிக்கும் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பாண்டவர்களுக்கு ஆர்வத்தோடு கூடிய வரவேற்பு செய்தார்கள். முக்கியமான பிரமுகர்கள் பலருடைய இல்லங்களில் விருந்துக்கு அவர்கள் அழைக்கப்பட்டனர். அவைகளை எல்லாம் நிறைவேற்றி வைத்து விட்டு ஏற்கனவே அவ்வூரில் இருந்த ராஜகுடும்ப விடுதியில் அவர்கள் தங்கியிருந்தார்கள். அதற்கிடையில் ஏற்கனவே கட்டப்பட்ட அரக்கு மாளிகையைச் சுற்றிலும் அகழி ஒன்று வெட்டப்பட்டது. உள்ளே வசிப்பவர்களின் பாதுகாப்புக்காக என்று வெளியில் காட்டிக் கொள்ள நல்ல திட்டம் அது. ஆனால் உள்ளே அகப்பட்டுக் கொண்டவர்கள் உயிரோடு வெளியே தப்பித்து வர முடியாத படி அது கட்டப்பட்டிருந்தது. அதில் வந்து வசிக்கும்படி ராஜகுமாரர்களை மந்திரி புரோச்சனன் வரவேற்றான். மாளிகை வசதி மிக வாய்க்கப்பெற்று இருந்தாலும் புதிய கட்டிடத்திற்கு வந்த உடனே யுதிஷ்டிரன் மற்றும் பீமன் இருவருக்கும் இந்த மாளிகையில் ஆபத்து மிக அமைந்திருக்கிறது என்று சந்தேகப்பட்டார்கள். அரக்கு மெழுகு குங்கிலியம் போன்ற விரைவில் தீப்பற்றி சுடர்விட்டு எரியும் பொருளைக் கொண்டு அம்மாளிகை கட்டப்பட்டு இருந்ததை அவர்கள் கவனித்தார்கள். அவ்வீட்டில் உள்ள வாசனையும் அதற்கு அறிகுறியாக இருந்தது. பாண்டவர்களாகிய தங்களுக்கென்று அமைக்கப்பட்ட இந்த பொறி என்று உணர்ந்தார்கள்.

பீமன் தனது சகோதரர்களிடம் துரியோதனன் எனக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து நீரில் மூழ்கவைத்து கொல்ல முயன்றான். தெய்வாதீனமாக நச்சுப்பாம்புகள் கடித்ததில் விஷம் முறிந்து மரணத்திலிருந்து நான் தப்பித்துக் கொண்டேன். இப்பொழுது நாம் அனைவரையும் நெருப்புக்கு இறையாகும் திட்டமொன்றை துரியோதனன் வகுத்து வைத்திருக்கின்றான். சித்தப்பா விதுரருடைய எச்சரிக்கை இங்கே உண்மை ஆகின்றது. இப்பொழுதே நாம் பழைய அரச விடுதிக்கு திரும்பி போய்விடுவோம். பிறகு அஸ்தினாபுரத்திக்கு சென்று துரியோதனனிடமிருந்து ராஜ்ஜியத்தை பறிமுதல் செய்து பெற்றுக் கொள்வோம் என்றான்.

அதற்கு யுதிஷ்டிரன் துரியோதனனுடைய சூழ்ச்சி நமக்கு தெளிவாக விளங்குகின்றது. ஆனால் இப்பொழுதே சூழ்ச்சி செய்து அவர்கள் நம்மை கொன்று விட்டால் கொலை பாதகன் என்னும் பழி துரியோதனனுக்கு வந்து சேரும். ஆகையால் சிறிது நாட்கள் கழித்து அவன் தன் திட்டத்தை செயல்படுத்துவான். அதற்குள்ளாக அவனுடைய சூழ்ச்சியை தோற்க்கடிக்கும் திட்டம் ஒன்றை நாம் வகுப்போம். கேடு ஏதும் இன்றி நாம் தப்பித்துக்கொள்வோம். இந்த மாளிகையினுள் நாம் கொளுத்தி கொல்லப்பட்டோம் என்னும் நம்பிக்கையை துரியோதனனுக்கு உண்டாக்க வேண்டும். நாம் தப்பித்துக் கொண்டு வெளியே தூரத்தில் உள்ள பிரதேசம் ஒன்றில் மாறு வேஷம் பூண்டு நாம் வாழ்ந்திருப்போம். நெருக்கடியில் நமக்கு உதவிபுரியும் நண்பர்களை நாம் தேடிக் கொள்வோம். அதன் பிறகு நாம் நம்முடைய பங்காளிகளான கௌரவர்களுக்கு நாம் உயிருடன் வாழ்ந்து கொண்டு இருப்பதை வெளிப்படுத்துவோம் என்றான்.

இத்திட்டத்தை பீமன் ஆமோதித்தான். ஆபத்தான மாளிகையில் எச்சரிக்கையாக வாழ்ந்திருக்க சகோதரர்கள் தீர்மானித்தார்கள். அந்த ராஜகுமாரர்களுக்கு ஏற்ற வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் செய்து வைப்பது போன்று பாசாங்கு பண்ணிய அமைச்சர் புரோசனன் உண்மையில் அவர்கள் தப்பித்து ஓடாத படி காவல் காத்திருந்தான். சகோதரர்களும் அவனிடத்தில் பூரண நம்பிக்கை வைத்திருப்பது போன்று பாசாங்குடன் நடந்துகொண்டார்கள்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -30

திருதராஷ்டிரர் இளவரசன் யுதிஷ்டிரனை வரவழைத்தார். என் அருமை செல்வா வாரணவதத்தைப் பற்றி எல்லோரும் புகழ்ந்து பேசுகிறார்கள். வசிப்பதற்கு ஏற்ற ஊர் என்று அதைப் பாராட்டி கூறுகிறார்கள். ஆகையினால் நீ உன் தாயையும் தம்பிகளையும் அங்கு அழைத்துச் சென்று சிறிது காலம் அங்கு வசித்திரு. அதன் மூலம் நீ நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவாய். இப்பட்டணத்திலே நீ படாதபாடுபட்டு களைத்துப் போய் இருக்கிறாய். உனக்கு உற்சாகத்தை ஊட்டுவதற்கு இங்கு ஒன்றும் இல்லை. ஆகவே நீ வேறு ஊருக்குச் சென்று ஓய்வு பெறுவது முற்றிலும் அவசியமாகும் என்று திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனிடம் கூறினார்.

குறிப்பறிந்து கொள்ளும் யுதிஷ்டிரனுக்கு விஷயம் நன்கு விளங்கியது. புத்திமதி புகட்டுவது போன்று தனக்கு இடப்பட்டிருக்கும் உத்தரவு அது என்பதை உணர்ந்தான். அங்கு செல்ல அவனுக்கு விருப்பம் இல்லாத போதிலும் வேறு உபாயம் அவனுக்கு இல்லை. அரைமனதுடன் அந்த உத்தரவுக்கு அவன் இணங்கினான். பாண்டவ சகோதரர்களும் அவர்களுடைய அன்னையும் முதியோர்களாகிய பீஷ்மர் விதுரர் துரோணர் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டு போனார்கள். போகும் வழியில் அரசன் எங்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார். அதனை ஏற்று நாங்கள் போகின்றோம் என்று பாண்டவர்கள் அனைவரிடமும் தெரிவித்தார்கள். நகர வாசிகளில் சிலர் பாண்டவர்கள் ஊர் கடந்து செல்வதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று யோசித்தார்கள். அவர்களில் அனுதாபம் காட்டி சிலர் பாண்டவர்களை தொடர்ந்து சென்றார்கள். யுதிஷ்டிரன் அவர்களுக்கு ஆறுதல் கூறி அஸ்தினாபுரத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தான்.

விதுரர் மட்டும் தனியாக பாண்டவர்களுடன் நெடும் தூரம் நடந்து சென்றார். போகும் போது சூழ்ச்சிகளை பற்றியும் தீ விபத்துகளை பற்றியும் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். ஒரு வனமே தீப்பற்றி எரிந்த பொழுது எலிகள் பூமிக்குள் வளை தோண்டி அந்த விபத்தில் இருந்து தப்பித்து கொண்டதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ராஜகுமாரர்கள் இந்த எச்சரிக்கையின் உட்பொருளை நன்கு உணர்ந்து கொண்டார்கள். பாண்டவ சகோதரர்களுக்கு நலன் உண்டாகுக என்று வாழ்த்தி விதுரர் அஸ்தினாபுரத்திற்கு திரும்பிச் சென்றார். சில நாட்களில் சகோதரர்களும் அவருடைய அன்னையும் மிகவும் விளம்பரம் செய்யப்பட்டிருந்த வாரணவதத்தை சென்றடைந்தனர்.

பாண்டவர்கள் வாரணவதத்திற்கு கிளம்பி சென்றதைக் குறித்து துரியோதனன் மகிழ்ச்சியுற்று இருந்தான். அவனுடைய மாமாவாகிய சகுனியின் சதிஆலோசனையின்படி பாண்டவர்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தை நன்கு நிறைவேற்றினான். புரோச்சனன் என்பவன் அஸ்தினாபுரத்தின் ஒரு அமைச்சர் ஆவார். துரியோதனன் அவனை தனது சதியாலோசனைக்கு உட்படுத்தி வைத்திருந்தான். அந்த அமைச்சர் வாரணவதத்திற்கு பாண்டவர்கள் செல்லும் முன் விரைந்து சென்று அரக்கு மாளிகையை ஒன்றை கட்டி முடித்திருந்தான். பாண்டவர்களை அந்த மாளிகையில் வசித்து இருக்கும்படி வேண்டிக் கொள்ளுதல் வேண்டும். சிறிது காலத்திற்கு பிறகு அதற்கு தீமூட்டி விடுதல் வேண்டும். அதில் வசித்தவர்கள் தீக்கு இரையாகி மடிந்து போவார்கள். அந்த விபத்து தெய்வாதீனமாக நிகழ்ந்தது என அனைவராலும் கருதப்படும். இதுவே அவர்கள் அமைத்திருந்த கொடிய திட்டமாகும்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -29

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -29

திருதராஷ்டிரன் துரியோதனனிடம் உனது மாமா சகுனி மன்னன் தன்னுடைய ஆட்சிக்கு உறுதுணையாக மந்திரி ஒருவனை வைத்திருகின்றான். அவன் கல்வியில் தேர்ந்தவன். அவனுடைய பெயர் கணிகன். இவ்வுலக விவகார ஞானத்தில் அவனுக்கு ஈடானவர்கள் யாருமில்லை. அவனைப் பற்றிய எண்ணம் இப்போது என் உள்ளத்தில் உதிக்கிறது. அவன் இப்பொழுது அஸ்தினாபுரத்திற்கு வந்திருக்கிறான். விரைவில் சென்று அவனை யாருக்கும் தெரியாமல் அழைத்து வா என்றார்.

திருதராஷ்டிரன் அறைக்கு கணிகன் வேறு யாருக்கும் தெரியாதபடி ரகசியமாக அழைத்து வரப்பட்டான். ராஜ குடும்பத்தில் இருந்த சிக்கலான பிரச்சினைகள் அனைத்தும் அவனுக்கு எடுத்து விளக்கப்பட்டது. கணிகன் சிறிது நேரம் அமைதியாக சிந்தனையில் மூழ்கி இருந்தான். பின்னர் அவன் திருதராஷ்டிரனிடம். நீங்கள் இரண்டு வித மனப்பான்மைகளை உங்களிடத்தில் வரவழைத்து கொள்ளுங்கள். சூழ்ச்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அது முற்றிலும் அவசியமானது. முதலாவது பாண்டவர் பிள்ளைகளை நன்கு நேசிப்பதாக பாசாங்கு பண்ணுங்கள். எவ்வளவுக்கெவ்வளவு தங்களுக்கு அவர்களிடம் வெறுப்பு இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அன்பு இருப்பதாக பாசாங்கு பண்ணுங்கள். எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றுவதற்கு உள்ளத்தில் புதைந்து கிடக்கும் வெறுப்பே தூண்டுகோலாய் இருக்கவேண்டும். இரண்டாவது எதிரிகளை எப்படியாவது ஒழித்து தள்ளவேண்டும். சிறிது நாள் காத்திருங்கள். காலதாமதம் நமக்கு பிரதிகூலமாக முடியும். இவ்வாறு கூறிவிட்டு கணிகன் அரண்மனையை விட்டு வெளியேறினான்.

சிறிது நாட்களுக்கு பின்பு திருதராஷ்டிரனிடம் துரியோதனன் தந்தையே நான் ஒரு சதித் திட்டம் வைத்திருக்கிறேன். தயைகூர்ந்து தாங்கள் பாண்டவர்களையும் அவர்களுடைய தாய் குந்தி தேவியும் ஒரு வருட காலத்திற்கு நமது நாட்டில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் வாரணாவதம் என்னும் இடத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள். அவர்கள் நம் நாட்டில் இல்லாத பொழுது எனக்கேற்றவாறு நாட்டை நான் ஆயத்தப்படுத்திக் கொள்கிறேன். அவர்கள் இங்கு திரும்பி வராமல் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறேன். ஒருவேளை அவர்கள் திரும்பி வந்து சேர்ந்தால் அஸ்தினாபுரம் அவர்களுக்கேற்ற நகரம் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்கிறேன் என்றான். திருதராஷ்டிரர் மௌனமாய் இருந்தார். அவருடைய மௌனம் சதியாலோசனைக்கு அனுமதி போன்று இருந்தது. அதற்கு காரணம் காலம் சென்ற பாண்டுவின் புதல்வர்கள் மீது அவர் வைத்திருந்த பொறாமை அளவு கடந்து இருந்தது. தம்முடைய சொந்த மகனே நாட்டை ஆள வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது. துரியோதனன் மந்திரிகள் சிலரை தனது கையாட்களாக அமைத்துக் கொண்டான். பின்பு வாரணாவதம் இடத்தைப் பற்றியும் அதன் சிறப்பை பற்றியும் அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்கள். அவ்வூர் ஒரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலம். அங்கே நிகழும் விழா மிக மிக கவர்ச்சிகரமாக எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது. அந்த இடத்தின் சீதோஷ்ணம் மிக மிக ஆரோக்கியமானது என பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் விளைவாக எங்கு கேட்டாலும் வாரணாவதம் பற்றிய பேச்சாக இருந்தது.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -28

அஸ்தினாபுரத்து மக்கள் அரச குடும்பத்தை பற்றிய விஷயங்களை வெளிப்படையாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர். திருதராஷ்டிரன் அரசராக இருக்கலாகாது. அவருக்கு தகுதி போதவில்லை. ஆட்சிக்கு முற்றிலும் பொருத்தமானவர் பீஷ்மர். ஆனால் தாம் ராஜ்யத்தைப் துறந்து விட்டதாக அவர் நெடுநாளைக்கு முன்பே விரதம் பூண்டு கொண்டார். எக்காரணத்தை முன்னிட்டும் அந்த விரதத்திலிருந்து விலகமாட்டார். துரியோதனிடம் சில குறைபாடுகளை மக்கள் உணர்ந்தனர். ஆகையால் யுதிஷ்டிரன் ஒருவனே நாட்டை ஆள தகுதி வாய்ந்த மன்னன் ஆவான் என்று மக்களிடம் பேச்சாக இருந்தது.

துரியோதனன் நாட்டில் வேவுக்காரர்கள் பலரை நியமித்து வைத்திருந்தான். பொதுமக்களுடைய அபிப்பிராயம் முற்றிலும் தனக்கும் தனது தந்தைக்கும் அனுகூலமாக இல்லை என்பதை அறிந்து அவன் மிகவும் மனம் நொந்து இருந்தான். தன் தந்தையிடம் தனியாக சந்தித்து தன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்த உணர்ச்சிகளை எல்லாம் அவன் வாரிக் கொட்டி தள்ளினான். தாங்கள் ஏன் யுதிஷ்டிரனை இளவரசனாக்கினீர்கள். நாட்கள் ஏற ஏற அவன் ஆட்சி தரத்திலும் கீர்த்தியிலும் அதிவேகமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றான். தங்களுக்கு கண் தெரியாத காரணத்தினாலும் அவன் மக்களுக்கு செய்யும் நன்மை காரணமாகவும் மக்கள் அவனை அரசனாக்க விரும்புகின்றார்கள். அப்படி என்றால் ராஜகுமாரன் ஆகிய நான் ஒரு அடிமையாக ஒதுக்கப்படுகின்றேன். இத்தகைய பரிதாபகரமான நிலையில் வாழ்ந்து இருப்பதைக் காட்டிலும் நான் மடிந்து போவதை மேல். நிலைமை வரம்பு கடந்து போவதற்கு முன்பே ஏதாவது செயலில் ஈடுபட்ட ஆக வேண்டும். தயவு செய்து தீர்மானம் பண்ணுங்கள் என்று துரியோதனன் தன் தந்தையிடம் கூறினார்.

அதற்கு திருதராஷ்டிரன் எனக்கு கண் பார்வை இல்லை என்றாலும் இந்த நெருக்கடியான நிலைமையை என்னால் புரிந்து கொள்ள இயலுகிறது. மக்கள் எல்லோரும் என்னுடைய சகோதரன் பாண்டுவின் மகன்கள் ஆட்சி செய்வதை விரும்புகின்றார்கள். அவசரப்பட்டு நாம் ஏதாவது செயலில் இறங்கினால் அது நமக்கே கேடாக வந்து அமையும் என்றார். அதற்கு துரியோதனன் தந்தையே தயவு செய்து என் சொல்லுக்கு சிறிது செவி சாயுங்கள். நமது பாட்டனாராகிய பீஷ்மர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடுநிலையுடன் இருக்கின்றார். என்னையும் என் சகோதரர்களையும் கிட்டத்தட்ட செத்துப் போகும் நிலையில் வைத்து பீமன் எங்களை நசுக்கிய பொழுதும் பாட்டனார் அது தலையிடவில்லை. பிறகு பீமனுக்கு நான் விஷம் வைத்ததை அவர் அறிந்தும் அதில் அவர் தலையிடவில்லை. ஆகவே அவர் நம்மை ஒருபோதும் எதிர்க்க மாட்டார். துரோணரின் மகன் அஸ்வத்தாமன் என்மீது வைத்திருக்கும் அன்பு மிகவும் உறுதியானது. நலம் கேடு அனைத்திலும் அவன் என்னுடன் இருப்பான். அவனைப் பின்பற்றி அவருடைய தந்தை துரோணரும் தாய்மாமா கிருபரும் நம் பக்கமே சார்ந்து இருப்பார்கள். சித்தப்பா விதுரர் நிச்சயமாக பாண்டவர்களுக்கு உரியவர் ஆவார். ஆயினும் அவரிடம் உறுதிப்பாடு எதுவும் இல்லை. தர்மத்தைப் பற்றி பேசுவதில் அவர் நிபுணர். தர்மத்தை மட்டுமே அவர் பேசிக்கொண்டு இருப்பார். நல்லதோ கெட்டதோ எதையும் சாதிக்க அவரால் இயலாது. ஆகையால் அவரை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை நமக்கு உறுதி வாய்ந்த தக்க பின் பலத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டு அவர்களை தோற்கடிக்க நாம் திட்டம் போட வேண்டும். இதில் காலதாமதம் உதவாது. காலதாமதம் செய்தோம் என்றால் நாம் அழிந்து போவோம் என்றான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -27

யுதிஷ்டிரனுக்கு தக்க வயது வந்த பொழுது அவன் இளவரசனாக முடிசூட்டப்பட்டான். அவனுடைய பெரியப்பாவாகிய திருதராஷ்டிரனுக்கு இந்நிகழ்ச்சி பிடிக்கவில்லை. தன்னுடைய சொந்த மகனாகிய துரியோதனன் அப்பதவியை ஏற்றிருக்க வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது. ஆனால் விஷயங்கள் அதற்கு நேர்மாறாக இருந்தது. இறந்த குருவம்சத்து அரசன் பாண்டு மன்னனின் வாரிசில் மூத்தவனாக இருந்ததால் யுதிஷ்டிரன் இளவரசு பட்டத்துக்கு உரியவன் ஆனான். பீஷ்மர், விதுரர், துரோணர் ஆகிய பெருமக்கள் யுதிஷ்டிரனே ராஜபதவிக்கு தகுதி வாய்ந்தவன் எனக் கருதினார்கள். பொது மக்கள் எல்லோரும் அவனையே போற்றிப் பாராட்டினார்கள். ஆகையால் அவனுக்கு முடிசூட்டப்பட்டது. அவனது பங்காளிகளான கௌரவர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் பகிரங்கமாக அவர்களால் இதை எதிர்க்க இயலவில்லை.

யுதிஷ்டிரன் இளவரசர் பதவியை ஏற்று ஒரு வருடம் ஆகியது. குறுகிய காலத்தில் அவன் தன்னுடைய இளவரசன் தலைமையை முற்றிலும் நிரூபித்துக் காட்டினான். மன உறுதிக்கும் தளரா முயற்சிக்கும் நேர்மைக்கும் கடமைக்கும் இருப்பிடமாக அவன் இருந்தான். மக்கள் நலனுக்கு உரிய கடமைகளைநெறி பிறழாது அவன் நிறைவேற்றினான். ஆகையால் மக்கள் அனைவரும் அவனைப் பெரிதும் பாராட்டினர். காலம் சென்ற பாண்டு மன்னன் ஆட்சி முறையில் மிகச் சிறந்தவர் என உலகத்தவர் கருதினர். அச்செயலை நிறைவேற்றுவதில் தந்தையை மிஞ்சியவனாக யுதிஷ்டிரன் இருந்தான். அவனுடைய தம்பிமார்கள் அந்த ராஜ்ஜியத்தின் எல்லையை விரிவுபடுத்தினார்கள்.

அர்ஜுனன் பெற்றுவந்த வில்வித்தை பயிற்சியை துரோணாச்சாரியார் முற்றிலும் பூர்த்தி செய்து வைத்தார். வில்வித்தையில் விஜயன் என்னும் அவனுடைய பெயர் உலகெங்கும் பரவியது. இந்த திறமையை குறித்து அர்ஜுனன் கர்வம் கொள்ளக்கூடாது என்று துரோணாச்சாரியார் அவனுக்கு புத்தி புகட்டினார். மேலும் அவனிடத்தில் ஒரு விபரீதமான குரு தட்சணையை வேண்டினார். தக்க தருணம் வருகின்ற பொழுது அர்ஜுனன் துரோணரை எதிர்த்துப் போர் புரிய வேண்டும் என்பதே அவர் வேண்டியிருந்த குருதட்சணை ஆகும். அதன்பிறகு மேலும் ஒரு ரகசியத்தை கூறினார். வசுதேவன் என்னும் விருஷ்ணி வம்சத்தவர் அர்ஜுனனுடைய மாமா ஆவார். அந்த வசுதேவனுக்கு மகனாகப் பிறந்தவன் கிருஷ்ணன். அவனுக்கு பலராமன் என்னும் தமயன் இருக்கின்றான். கிருஷ்ணன் சாமானிய மானிடன் இல்லை. பரம்பொருளே கிருஷ்ணனாக வடிவெடுத்து வந்திருக்கிறான். ஆகையால் அர்ஜுனன் எப்பொழுதும் கிருஷ்ண பக்தியில் ஈடுபட்டு இருத்தல் வேண்டும் என்று துரோணர் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார்.

பீமனும் துரியோதனனும் கிருஷ்ணனுக்கு தமயனாகிய பலராமனுடைய மாணாக்கர்கள் ஆனார்கள். கதை யுத்தத்தில் பலராமன் மிகச்சிறந்த நிபுணன். பலராமனுக்கு மாணவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் அவன் துரியோதனனை மிக்க நேசித்தான். துரோணாச்சாரியாருக்கு எவ்வாறு அர்ஜுனன் அன்புக்குரிய சிஷ்யனாக இருந்தானோ அது போல் பலராமனுக்கு துரியோதனன் அன்புக்குரிய சிஷ்யன் ஆனான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -26

தன்னுடைய பாஞ்சால நாட்டின் மீது குருவம்சத்து ராஜகுமாரர்கள் போர்தொடுக்க வந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தி துருபதன் காதுக்கு எட்டியது. அத்தகைய எதிர்ப்புக்கு காரணம் என்ன என்று அந்த வேந்தனுக்கு விளங்கவில்லை. தன்னுடைய சகோதரர்களின் உதவியுடன் தன்னை எதிர்த்து வந்தவர்களை சிரமப்பட்டு முறியடித்து கடைசியாக கௌரவர்களை அவன் வென்று விட்டான். இந்த நெருக்கடியில் அர்ஜுனன் தன்னுடைய போர் தந்திரத்தை கையாண்டான். தன்னுடைய தமையனான யுதிஷ்டிரனை பின்னால் இருக்கும் படி செய்து ஏனைய நான்கு சகோதரர்களுடன் துருபதன் மீது போர் தொடுத்து அவனை சிறைபிடித்து துரோணரிடம் கொண்டு வந்து சேர்த்தான்.

துரோணாச்சாரியாரின் திட்டம் இப்பொழுது பலித்து விட்டது. துருபத மன்னன் துரோணாச்சாரியாருக்கு இப்போது அடிமையானான். துரோணர் துருபதனைப்பார்த்து இளமைப்பருவத்தில் நாம் தோழர்களாக இருந்த பொழுது உன் தந்தையின் ராஜ்யம் உன்னுடைய ஆட்சிக்கு வரும்போது அதில் சரிபாதியை எனக்கு தருவதாக நீயே மனமுவந்து பல தடவை கூறி இருக்கின்றாய். நீ பதவிக்கு வந்தபிறகு நான் உன்னுடைய ராஜ்ஜியத்தில் பங்குக்கு வரவில்லை. என்னுடைய வறுமை நோயை களைந்து எனக்கு ஏதாவது உதவி செய்து வைக்கும்படி உன்னை வேண்டினேன். அரசனுக்கும் ஆண்டிக்கும் இடையே நட்பு சாத்தியப்படாது என்று என்னை விரட்டினாய். இப்பொழுது உனக்கு சொந்தம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. உயிரும் கூட உன்னுடையது இல்லை. நீதி முறைப்படி உன்னை நான் கொல்ல முடியும். ஆயினும் அஞ்சாதே உன்னுடைய உயிரை நான் எடுக்க மாட்டேன். அதற்கு பதிலாக என்னால் வெல்லப்பட்ட ராஜ்ஜியத்தின் சரி பாதியை உனக்குத் தந்து விடுகிறேன். இளமையில் நாம் இருவரும் கொண்டிருந்த நட்பை இனி சம அந்தஸ்தில் இருந்து கொண்டு இருவரும் பேணி வருவோம் என்றார். அவருடைய பரந்த மனப்பான்மையை எண்ணி துருபதனும் தன் இளமைப் பருவ நண்பனை கட்டி தழுவி கொண்டான்.

துருபத மன்னனும் துரோணாச்சாரியாரும் பரஸ்பரம் நட்பு பூண்டனர். ஆயினும் துருபதனுடைய மனதில் குறை ஒன்று உறுத்திக் கொண்டிருந்தது. தான் அடைந்த தோல்வியும் அவமானமும் அவனுடைய உள்ளத்தில் இருந்து அகலவில்லை. தோற்கடித்தவரோ தனுர் வேதத்தில் பரமாச்சாரியார் ஆவார். அவரை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது. தான் அடைந்திருந்த இழிவுக்கு ஈடு செய்யும் வழி தேடி துருபத மன்னன் கடும் தவத்தில் ஈடுபட்டான். அதன் விளைவாக தவசக்தியில் பன்மடங்கு மேல் நிலைக்கு வந்து துரோணரை எப்படி வெல்வது என்று தெரிந்து கொண்டான். அதன்படி துரோணரை வெல்ல அரியதொரு யாகம் வளர்ப்பதற்க்கான புரோகிதன் ஒருவனை நாடெங்கிலும் தேடி அலைந்தான். அத்தகைய புரோகிதர் ஒருவரும் அரசனுக்கு அகப்பட்டான். அவன் செய்த யாகத்தின் பலனால் திருஷ்டத்யும்னன் என்னும் மைந்தனும் திரௌபதி என்னும் மகளும் பிறந்தார்கள். திருஷ்டத்யும்னன் துரோணாச்சாரியார்க்கு சிஷ்யன் ஆனான். எதிர்காலத்தில் துரோணாச்சாரியாரை அழிப்பதற்கும் இவனே முக்கியமானவன் ஆகிறான். அர்ஜூனன் வில்வித்தைக்கு விஜயன் என பெயர் பெற்றவன். அவனது திறமையை பாராட்டி செல்வி திரௌபதியை அர்ஜுனனுக்கு மணம் செய்து கொடுத்து பாண்டவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது அடுத்தபடியாக துருபதனின் திட்டம் ஆகும்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -25

பீமனுடைய பேச்சு துரியோதனனுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. துரியோதனன் பீமனைப்பார்த்து வீரன் ஒருவன் இன்னொரு வீரனின் வீரியத்தை போற்றுவான். பீமா கர்ணன் செய்து காட்டிய வித்தைகளை நீ காணவில்லையா. பிறப்பு செருக்கிலும் பதவி செருக்கிலும் நீ மூழ்கி கிடக்கின்றாய். புண்ணிய நதி ஒன்று உற்பத்தியாகும் இடம் மிகவும் சிறுமையானது. அதை முன்னிட்டு அது புறக்கணிக்கப்படுவது இல்லை. ரிஷிகள் பல பேருடைய தோற்றம் மிகக் கீழானது அது விமர்சனத்திற்கு உதவாது. அக்காரணத்தை முன்னிட்டு அவர்களின் மகிமைகள் ஒதுக்கப் படுவதில்லை. நம்முடைய குருமார்களாகிய கிருபாச்சாரியார் துரோணாச்சாரியார் ஆகியோர்களின் பிறப்பை ஆராய்ந்து பார்த்தால் பாராட்டுக்குரிய பெரிய நிலையில் அவர்கள் பிறந்தவர்கள் அல்ல. ஆயினும் அவர்கள் மீது நாம் குருபக்தி வைத்திருக்கிறோம். அவர்களின் கலைத்திறமைகளை நாம் ஏற்று வருகின்றோம். மேலும் உன்னுடைய தந்தையும் உன் சகோதரர்களின் தந்தையும் குரு வம்சத்திற்கு உரியவர்கள் அல்ல. கர்ணனும் தனது போர் வித்தைகளின் மூலம் சத்திரியனே. அவன் ஒரு வீரன் உனக்கு துணிச்சல் இருக்குமானால் உன் தம்பி அர்ஜுனன் அவனோடு போட்டி போடட்டும் என்று துரியோதனன் பீமனைப் பார்த்து கூறினான். அமர்ந்திருந்தவர்களில் பலர் துரியோதனனின் பேச்சை பெரிதும் பாராட்டினர்.

குருமார்கள் ஆகிய கிருபர் துரோணர் மற்றும் பெரியவர்கள் சிலரும் ராஜகுமாரனான அர்ஜுனனுடன் கர்ணனை போட்டியிட அனுமதிக்கவில்லை.. மேற்கு திசையில் சூரியன் மறைந்தான். விளையாட்டு போட்டிகளும் ஒருவாறு முடிவுக்கு வந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் கடைசியாக வந்து தன் வில்வித்தையை செய்து காட்டிய கர்ணனை பற்றியே பேசிக்கொண்டு போனார்கள். சற்று முன்பு தலைசிறந்த வீரன் என்று சொல்லிய அர்ஜுனனை அவர்கள் இப்போது மறந்து போயினர். அர்ஜுனன் வில்வித்தையில் சிறந்தவன் என அனைவருக்கும் காட்ட வேண்டுமென்று துரோணாச்சாரியார் எண்ணியிருந்தார் ஆனால் அவர் எண்ணியபடி நிகழவில்லை..

துரோணாச்சாரியார் உள்ளத்தில் ஓர் எண்ணம் ஆழ்ந்து புதைந்திருந்தது. கர்வமே வடிவமாக இருந்த துருபத மன்னனுடைய புகழுக்கு பங்கம் பண்ண வேண்டும் என்பதே அந்த எண்ணமாகும். அதற்கேற்ற காலம் இப்போது வந்தது. ராஜகுமாரர்களுக்கு துரோணர் கொடுத்து வந்த பயிற்சி முடிவற்றது. அவர்கள் அதற்கு தட்சணை செலுத்த வேண்டும் என்பது ஆச்சாரியார் விருப்பமாக இருந்தது. தாராளமாக தட்சணை வழங்க மாணவர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஆனால் துரோணர் கேட்ட குரு தட்சணை நூதனமானது. இந்த இளம் வீரர்கள் பாஞ்சால நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதை ஆண்டுவந்த துருபதனை பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்பது அவர் கேட்ட தட்சணையாகும். துரோணர் கேட்ட தட்சணை இளைஞர்களுக்கு பெரிய ஊக்கமாக இருந்தது. அதற்கு காரணம் அவர்களிடம் இருந்த போர் திறமைகளை நடைமுறையில் கொண்டு வருவதற்கும் அனைவரும் தெரிந்து கொள்ளவும் நல்ல சந்தர்ப்பத்தை அது ஏற்படுத்தியது. பெரிய சேனை ஒன்றைத் திரட்டிக்கொண்டு பாஞ்சால நாட்டின் மீது அவர்கள் படையெடுத்துச் சென்றனர். அவர்களின் செயலை வேடிக்கை பார்க்கும் நோக்கில் துரோணரும் சென்றார். பாண்டவ சகோதரர்கள் போகும் வழியில் மற்றொரு முடிவு செய்தனர். போராட்டத்தின் ஆரம்ப நேரத்தில் தாங்கள் ஒதுங்கியிருக்க தீர்மானித்தனர். துரியோதனின் தலைமையில் அவனுடைய சேனைகள் முதலில் போரிட துவங்கும். துரியோதனன் தளர்வுற்று போனால் பின் அர்ஜுனனுடைய சேனை அதற்கு உதவி பண்ண வேண்டும் என்பதே அவர்கள் கையாண்ட போர் திட்டமாகும். துரோணாசாரியாரும் இத்திட்டத்தை ஆமோதித்தார்

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -24

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -24

கர்ணன் தன்னோடு தனியாக போட்டி போடும் படி அர்ஜுனனை அறை கூவினான். இருவரும் போட்டி போட ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். அத்தருணத்தில் கிருபாச்சாரியார் மேடைமீது தோன்றினார். இருவருக்கிடையில் நடக்கும் போட்டிக்கு உரிய சட்டதிட்டங்களை கடைபிடித்தே ஆக வேண்டும் என்றார். மேலும் அர்ஜுனன் பிரசித்தி பெற்ற குரு வம்சத்திற்குரிய ராஜகுமாரன். அவன் பாமரனோடு போட்டியிட மாட்டான். ஆகவே நீ உன்னுடைய வம்சத்தைப் பற்றி விளக்குவயாக என்றார். கர்ணனுடைய தலை கவிழ்ந்தது. ஏனெனில் அவன் எந்த நாட்டைச் சேர்ந்த ராஜகுமாரனும் இல்லை.

நடந்தவைகள் அனைத்தையும் கவனித்து வந்த துரியோதனன் அர்ஜுனனை எதிர்த்து நிற்க ஒருவன் இருக்கிறான். அவனுடன் நட்பை உண்டாக்கி அர்ஜூனனை எதிர்க்க உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி போட்டி மேடைமீது வந்தான். மூன்று வித அரசர்களை அறநெறி அங்கீகரிக்கிறது. பிறப்பில் வேந்தன், பராக்கிரமத்தை முன்னிட்டு வேந்தன், வெற்றியை முன்னிட்டு வேந்தன் ஆகிய மூன்று வித வேந்தர்களை தர்மம் ஏற்றுக்கொள்கிறது. பராக்கிரமத்தை முன்னிட்டு இந்த இளைஞனை அரசனாக அங்கீகரித்து கொள்ளதகுதி வாய்ந்தவன் ஆகின்றான். ஆனால் அர்ஜூனனை எதிர்த்து போட்டியிட வந்திருப்பவன் ஒரு நாட்டுக்குரிய அரசனாக இருக்கவேண்டும் என்று இங்கு இருப்பவர்கள் வற்புறுத்துவார்கள் எனில் அந்த நிபந்தனையை இப்பொழுதே நிறைவேற்றுகின்றேன். என்னுடைய கட்டுப்பாட்டில் அரசன் இல்லாமல் இருக்கும் அங்க நாட்டுக்கு கர்ணனை அரசனாக முடி சூட்டுகிறேன் என்று அறிவித்தான். முடிசூட்டு விழா அப்பொழுதே அங்கு நடத்தப்பட்டது. தன்னுடைய கீரிடத்தை எடுத்து துரியோதனன் கர்ணனுடைய தலையில் வைத்தான். தன் உடைவாளை எடுத்து புதிதாக அரசனாக முடி சூட்டப்பெற்ற கர்ணனுடைய வலக்கையில் வைத்தான். அங்கு கூடியிருந்த பலபேர் ஒரு நொடிப்பொழுதில் நிகழ்ந்த பொருத்தமான செயலை பெரிதும் பாராட்டினார்கள்.

அப்போது கையில் கழி ஒன்றைப் பற்றிக்கொண்டு வயதானவர் ஒருவர் தள்ளாடி மேடையில் ஏறினார். கர்ணனுடைய வளர்ப்புத் தந்தையாகிய அதிரதன் தான் அப்படி வந்தவர். ஆகையினால் அவருடைய வளர்ப்பு மகனான கர்ணன் விரைந்து ஓடி தான் புதிதாகப் பெற்ற அரசபதவிக்கான கீரிடத்தை தந்தையின் பாதங்களில் வைத்து வீழ்ந்து வணங்கினான். அப்பொழுது அதிரதன் கர்ணனை பார்த்து என் அருமை செல்வா கர்ணா நெடுநாட்களுக்கு பிறகு உனக்கு சௌபாக்கியம் வாய்த்திருப்பதை குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ராஜகுமாரனாகிய துரியோதனனை நான் போற்றுகின்றேன் என்றார். கர்ணன் சூதபுத்திரன் என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்தது.

பாண்டவர்களுக்கு இப்பொழுது உற்சாகம் ததும்பியது. அப்போது பீமன் தேரோட்டி மகனே கையில் சாட்டையை எடுத்து கொண்டு உன்னுடைய தொழிலை செய்வாயாக. அர்ஜுனனுடன் போட்டி போட தகுதி வாய்ந்தவன் நீ இல்லை என்றான். கர்ணனுடைய முகம் வாடியது. உணர்ச்சியினால் தூண்டப்பட்டு துடித்தான். ஆயினும் அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. அமைதியுடன் தான் வணங்கும் தெய்வமாகிய சூரிய பகவானை வானத்தை நோக்கி உற்று நோக்கினான். ஆனால் அதே சூரிய பகவான் தான் தனது தந்தை என்பது அவனுக்கு தெரியவில்லை. குந்திதேவி மட்டுமே அந்த உண்மையை அறிந்திருந்தாள் அந்த நெருக்கடியான நேரம் அவளுக்கு மிக்க துக்கத்தை விளைவித்தது.

தொடரும்……….

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -23

அர்ஜுனன் தலை சிறந்த வீரன் என்று அனைவரும் எண்ணிக் கொண்டு இருந்த பொழுது மைதானத்தின் வாசலில் திடீரென்று ஒரு ஓசை கேட்டது. அதன் விளைவாக அங்கு சிறு சலசலப்பு உண்டாயிற்று. வந்தவன் கர்ணன். ஆச்சாரியர்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்தினான். பிறகு தான் கற்றிருந்த வில்வித்தை திறனை மேடையில் செய்து காட்டுவதற்கு அவர்களுடைய அனுமதியை வேண்டினான். அரை மனதோடு அவனுக்கு அனுமதி தரப்பட்டது. அவன் அர்ஜுனன் செய்து காட்டிய அனைத்து வித்தைகளையும் திறமைகளையும் செய்துக் காட்டினான். அர்ஜுனனுக்கு ஒருவாறு தயக்கம் உண்டாயிற்று.

இதற்கிடையில் அரசர் குடும்பத்தினர்கள் அமர்ந்திருந்த மேடையில் பெண்களிடையே குழப்பம் ஒன்று உருவாயிற்று. அதற்கு காரணம் குந்திதேவி மயக்கமடைந்திருந்தாள். குந்தி தேவி சிறுமியாக இருந்த போது துருவாச மகரிஷிக்கு பணிவிடை செய்த பொழுது பரம திருப்தி அடைந்த மகரிஷி குந்திக்கு மந்த்ரோபதேசம் ஒன்று செய்து வைத்தார். அந்த மந்திரத்தை உச்சரிந்து எந்த தெய்வத்தை வேண்டினாலும் அந்த நெய்வம் தன்மீது பிரசன்னம் ஆகும் படி செய்யலாம். சிறுமியாய் இருந்ததினால் ஒரு தெய்வத்தை மந்திரம் சொல்லி வரவேற்பதினால் வரும் விளைவுகளை பற்றி அவள் அறிந்திருக்கவில்லை. ஒரு நாள் விளையாட்டுத்தனமாக சூரிய பகவானை எண்ணி அந்த மந்திரத்தை கூறினாள். சூரிய பகவானை வேண்டி செய்த மந்திரத்தின் பலனால் குண்டலத்துடனும் கவசத்துடனும் ஒரு குழந்தை பிறந்தது. மந்திரத்தின் பலனால் குழந்தை பிறந்ததும் அவள் முன்பு இருந்தபடியே கன்னியானாள். தனக்குப் பிறந்த குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தையை ஒரு பெட்டகத்தில் வைத்து ஆற்றில் மிதந்து போகும் படி செய்தாள்.

எதிர்காலத்தில் எங்கேயாவது அக்குழந்தையை காண வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது புதிதாக வந்தவன் குண்டல கவசத்துடன் அதே ஆபரணங்களை அணிந்திருந்தான். இந்த காட்சியைப் பார்த்ததும் அவள் மூர்ச்சையாகி விட்டாள். இதுவே பெண்களுக்கான மேடையில் நடந்த குழப்பத்திற்கு காரணமாயிருந்தது. குந்தியின் அருகே சென்ற பேரறிஞரான விதுரருக்கு விஷயம் முழுவதும் விளங்கியது. நீர் தெளித்து குந்திதேவியை மயக்கத்திலிருந்து தெளிவு பெறும்படி அவர் செய்தார். அப்போது அவர் கைசாடைகளின் வாயிலாக மற்றவர்கள் யாருக்கும் விளங்காத மொழியில் கர்ணனுடைய வரலாற்றை வெளிப்படுத்தலாகாது என்றும் அனைத்தையும் மறைத்து வைக்கும்படி கூறினார். சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு மகனுடைய ஆற்றல்களை பார்த்து மகிழ்ந்திருந்தாள். சில நிமிடங்களுக்கு பிறகு மறைத்து வைக்கப்பட்டிருந்த மகனுக்கும் உலகறிய வெளிப்படையாக வளர்த்து வந்த மகனுக்கும் இடையில் நிகழ்ந்த போராட்டத்தை குறித்து அவள் பரிதவிக்கும் படி நேர்ந்தது. ஆயினும் இந்த நெருக்கடியை அவள் சமாளித்துக் கொண்டாள்.