மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -21

உடலில் உண்டு பண்ணுகின்ற வதையையும் வலியையும் பொறுத்துக்கொள்ளும் மனவலிமை சூத்திரியர்களுக்கே உண்டு வேறு யாருக்கும் கிடையாது. அடே சிறுவனே நீ சூத்திரியனா என்று பார்கவ மகரிஷி கர்ணனிடம் கோபமாகக் கேட்டார். கர்ணன் குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். தேம்பித் தேம்பி அழுதான். என் பெற்றோர் யார் என்று எனக்கு தெரியாது. ஒரு தேரோட்டியின் என் குடும்பம் என்னை வளர்த்து வருகிறது. ஆதலால் நான் சூத புத்திரன் என்று அழைக்கப்படுகின்றேன். ஞான வேட்கையினால் தூண்டப் பெற்று கல்வி கற்க நான் தங்களிடம் பொய் கூறினேன். வேறு பாவம் எதையும் நான் செய்யவில்லை. நான் கொண்டிருக்கும் நோக்கத்தின் புனிதத்தை கருத்தில் கொண்டு என்னை மன்னித்து அருளும் படி வேண்டுகின்றேன். கல்வியை இணத்தோடும் கொள்கைழோடும் இணைக்கலாகாது என கூறப்படுகிறது. தாங்கள் எனது தந்தைக்கும் தாய்க்கும் மேலானவர் தங்களிடம் அடைக்கலம் அடைகிறேன். கிருபை கூர்ந்து தாங்கள் என்னை தங்களுக்கு உற்றவனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினான்.

பார்கவ ரிஷிக்கு கோபமடைந்தார். அவருக்கு பண்பிலும் மிக்கது பிறப்பு. மாணவன் ஒருவன் எத்தகைய பிறப்பில் இருக்கின்றான் என்பது அவருக்கு முக்கியமானதாக இருந்தது. பிராமண குலத்தில் பிறந்தவனுக்கு மட்டுமே கலையை கற்றுக் கொடுப்பது என்ற கொள்கையை அவர் வைத்திருந்தார். கர்ணன் கூறியதை கேட்டதும் பார்கவரிஷிக்கு கர்ணன் மீது வைத்திருந்த அன்பு ஒரு நொடிப்பொழுதில் மாயமாக மறைந்து போயிற்று. அவனைப் பற்றிய நல்ல எண்ணத்தை அறவே மறந்து விட்டார். கர்ணன் இவ்வளவு நாள் குருவிற்கு செய்த பணிவிடையும் ஒப்பற்றது. அதையும் அவர் பொருட்படுத்தவில்லை. அவருடைய தலை சிறந்த மாணவனாக திகழ்ந்த கர்ணன் மீது சாபம் ஒன்றை சுமத்தினார். உன்னை ஒரு பிராமணன் என்று பாசாங்கு பண்ணிக்கொண்டு என்னிடத்தில் இருந்து கற்றுக் கொண்ட அர்த்தசாஸ்திர வித்தைகளை அனைத்தையும் கற்றுக் கொண்டாய். இந்த வித்தைகள் பயன்படுத்த வேண்டிய நெருக்கடியான நேரத்தில் இவை யாவும் உன் ஞாபகத்தில் இருந்து மறைந்து போகும் என்று சாபமிட்டார்.

பார்கவரிஷி கூறியதை கேட்டதும் கர்ணன் மயக்கமடைந்து கீழே விழுந்தான். நெடுநேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்து அவன் எழுந்து பார்த்த பொழுது பார்கவரிஷி அங்கு இல்லை. ஆதரிப்போர் அற்றவனாக ஊக்கத்தை முற்றிலும் இழந்தவனாக அவன் ஆகிவிட்டான் வீட்டுக்கு திரும்பி போய்க் கொண்டிருந்த பொழுது தன்னுடைய நிலையை எண்ணி கவலையுற்றான். அவனை பெற்றவர் யார் என்பது அவனுக்கு தெரியாது. வளர்ப்பு பெற்றோர்களோ அன்பே வடிவெடுத்து இருந்தனர். ஆயினும் சூதபுத்திரன் என்னும் நாமம் அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது. திறமைசாலிகளின் கூட்டத்தில் அவன் ஒட்டி உறவாடுதற்கு அந்த நாமம் இந்த நாமம் அவனுக்கு இடைஞ்சலாய் இருந்தது. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே வீடு நோக்கி சென்றான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -20

கல்வி அறிவிலும் வில் வித்தையிலும் கர்ணன் கொண்டிருந்த ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. ஆனால் சூதபுத்திரன் என்னும் நாமம் அவனுடைய ஆர்வத்திற்கு இடைஞ்சலாக இருந்தது. அவனை வாட்டி வந்த இந்த பெயரை முன்னிட்டு கர்ணன் தன்னை ஒரு கீழோனாக ஒருபோதும் கருதவில்லை. தன்னை ஓர் சூத்திரியனாகவே எண்ணிக்கொண்டான். தனுர் வேதத்தில் பிரசித்தி பெற்ற பார்க்கவ ரிஷியை பார்க்கலாம் என்ற எண்ணம் அவனுடைய உள்ளத்தில் உதித்தது. பிறகு அந்த எண்ணம் உறுதியாக நிலைத்து அவரை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தான். பார்க்கவ ரிஷி சூத்திரியர்களுக்கு வித்தைகளை கற்றுக்கொடுப்பதில்லை பிராமணர்களுக்கு மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருந்தார். தன்னை ஒரு சூத்திரன் என்று சொல்லிக் கொள்வதில் கர்ணனுக்கு விருப்பமாக இருந்தது. ஆனால் அவரிடம் தன்னை ஒரு பிராமணன் என்று பொய் கூற தீர்மானித்தான். ஞான வேட்கையை முன்னிட்டு கல்வி கற்கவும் வில்வித்தையை கற்கவும் பொய் கூறுவதில் குற்றமில்லை என்று அவன் எண்ணினான்.

கர்ணன் தன்னை ஒரு பிராமண இளைஞன் என்று பார்க்கவ ரிஷியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். அதன் விளைவாக அவன் அக்கணமே தங்குதடையின்றி மாணாக்கனாக ஏற்றுக் கொள்ளப்பட்டான். வில்வித்தைக்கு முற்றிலும் தகுதி வாய்ந்தவன் என கர்ணன் தன்னை நிரூபித்தான். சில ஆண்டுகளாக அவன் குருகுல ஆசிரம வாசத்தில் இருந்து அனைத்தையும் கற்று தலை சிறந்த மாணவனாக திகழ்ந்தான். பார்க்கவரிஷி கர்ணனுக்கு பிரம்மாஸ்திரம் உட்பட பல மந்திரசக்தி வாய்க்கப்பெற்ற அஸ்திரங்களை கற்றுக் கொடுத்தார். கல்வியை பூர்த்தி செய்த பொழுது குருவானவர் சீடனுக்கு உபதேசம் செய்தார். தகுதி மிக வாய்க்கப் பெற்ற மாணாக்கன் என உன்னை நீ நிரூபித்துள்ளாய். என் வசம் இருக்கும் ஞானம் அனைத்தையும் நான் உனக்கு கற்பித்து உள்ளேன். நீ சத்தியம் பேசுபவனாகவும் முதியோர்கள் இடத்தில் வணக்கம் மிக படைத்தவனாகவும் இருக்கின்றாய். தர்மத்தை நிலைநாட்டுவதற்காக நீ பெற்றுள்ள ஞானத்தை பயன்படுத்துவாயாக என்று கூறினார்.

ஒரு நாள் நண்பகலில் பார்க்கவரிஷி சிறிது நேரம் கர்ணனின் மடிமீது தலைவைத்து படுத்திருந்தார். அப்பொழுது கர்ணனுடைய தொடையை வண்டு ஒன்று கடித்தது. அதன் விளைவாக ரத்தம் பெருக்கெடுத்து ஒடியது. குருவின் தூக்கத்திற்கு பங்கம் ஏற்பட கூடாது என்று கர்ணன் வலியை பொறுத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். ரிஷியின் உடம்பில் இரத்தம் பட்டு அவரது தூக்கம் கலைந்தது. தன் உடம்பில் ரத்தம் பரவியதற்கு என்ன காரணம் என்று கர்ணனிடம் கேட்டார். அப்போது கர்ணன் தனது தொடையை வண்டு ஒன்று குடைந்தது என்றும் அதன் விளைவாக இரத்தம் வழிந்து தங்கள் உடலில் பட்டு தங்களது தூக்கம் கெட்டது தன்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினான். அதற்கு அவர் வண்டு கடித்ததும் நீ ஏன் கத்தி குதித்து எழவில்லை என்று கேட்டார். தங்கள் உறக்கத்திற்கு இடையூறு வரக்கூடாது என்பதை பொறுத்து வலியை தாங்கிக் கொண்டேன் என்றான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -19

இன்னொரு நாள் பழங்காலத்துப் பண்புகளுக்கு ஏற்ப பரிட்சை ஒன்றை துரோணர் ராஜகுமாரர்களுக்கிடையே நடத்தினார். துரியோதனனை துரோணாச்சாரியார் தம்மிடம் அழைத்தார். இவ்வுலகில் தேடிப்பார்த்து நல்லவன் ஒருவனைக் கண்டு பிடித்து தம்மிடம் அழைத்து வரும்படி உத்தரவு பிறப்பித்தார். அதே முறையில் பாண்டவ சகோதரர்களுள் மூத்தவனாகிய யுதிஷ்டிரனை தம்மிடம் அழைத்து அவனிடம் மற்றொரு உத்தரவை பிறப்பித்தார். இவ்வுலகில் தேடிப்பார்த்து கெட்டவன் ஒருவனை தம்மிடம் அழைத்து வருமாறு உத்தரவு பிறப்பித்தார். சில நாட்கள் கழித்து திரும்பி வந்த துரியோதனன் தனக்கு வாய்த்த அனுபவத்தை துரோணரிடம் தெரிவித்தான். பரந்த இவ்வுலகில் தான் தேடிப்பார்த்தும் நல்லவர் ஒருவருமே இல்லை என்று தன்னுடைய அனுபவமாக துரோணரிடம் தெரிவித்தான். அடுத்ததாக யுதிஷ்டிரன் திரும்பி வந்தான். உலகம் முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு உலகில் கெட்டவர் ஒருவர் கூட இல்லை என்று துரோணரிடம் தெரிவித்தான்.

துரியோதனன் யுதிஷ்டிரன் ஆகிய இருவருமே ஒரே ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒரே குருவிடம் கல்வி பயின்றவர்கள். இருவரும் ஒரே உலகத்தில் தேடிப் பார்த்தார்கள். துரியோதனன் கண்ணுக்கு நல்லவன் யாருமே தென்படவில்லை யுதிஷ்டிரன் கண்ணுக்கு கெட்டவர்கள் யாரும் தென்படவில்லை. மனதில் தீய எண்ணம் இருப்பவனுக்கு எங்கும் தீமையே காட்சி கொடுக்கின்றது. மனதில் நன்மை நிறைந்தவனுக்கு எங்கு பார்த்தாலும் நன்மையே தெரிகின்றது என்பதை துரோணர் ராஜகுமாரர்களுக்கு சொல்லி நன்மையை மட்டுமே நினைக்க வேண்டும் என்று பாடம் நடத்தினார்.

அதிரதன் என்னும் பெயர் படைத்திருந்த தேர்ப்பாகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ராதை எனும் மனைவி இருந்தாள். இருவரும் இன்புற்று வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் காலை அதிரதன் நதியில் கங்கா ஸ்நானம் செய்து கொண்டிருந்தான். அப்போது அழகிய பெட்டகம் ஒன்று மிதந்து வந்தது. அதில் தெய்வீகம் திகழும் குழந்தை ஒன்று இருந்தது. தேர்ப்பாகன் அக்குழந்தையை தன்னுடைய குழந்தையாக சுவீகாரம் பண்ணி கொண்டான். அக்குழந்தைக்கு கர்ணன் என்று பெயரிட்டான். வளர்ந்த கர்ணன் சூதபுத்ரன் என்றும் அழைக்கப்பட்டான். சூதபுத்ரன் என்னும் சொல் தேரோட்டியின் மகன் என பொருள்படும். ராதையின் வளர்ப்பு குழந்தையாக இருப்பதினால் அவனுக்கு ராதேயன் என்னும் பெயரும் ஏற்பட்டது. அவனுக்கு வயது அதிகரித்துக் கொண்டு வந்த பொழுது தந்தையின் தொழிலான தேர் ஓட்டுவதில் அவனுடைய நாட்டம் குறைந்து போயிற்று. கல்வியிலும் யுத்தப் பயிற்சியிலும் அவனுக்கு நாட்டம் அதிகரித்து வந்தது.

அஸ்தினாபுரத்தில் தனுர்வேத பாடசாலை ஒன்று இருக்கிறது என்று அவன் கேள்விப்பட்டான். வில்வித்தையில் ஆர்வமாக இருந்த கர்ணன் பாடசாலையில் ஆசிரியராக இருந்த துரோணரை நேரில் சென்று சந்தித்து யுத்த கல்வியை கற்றுத்தருமாறு பக்திபூர்வமாக தன்னுடைய வேண்டுகோளை தெரிவித்தான். ஊக்கமும் அறிவும் மிக படைத்திருந்த இச்சிறுவனுடைய பெற்றோர் பற்றிய வரலாற்றை துரோணர் விசாரித்தார். கர்ணன் தேரோட்டி ஒருவருடைய மகன் என தெரியவந்ததும் இப்பாடசாலையில் மாணாக்கனாக அவனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவனை புறக்கணித்தார். தோல்வியடைந்த கர்ணன் துயரத்துடன் தன் வீட்டிற்கு திரும்பி வந்தான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -18

துரோணர் விளக்கமாக கூறியது அனைத்து மாணவர்களுக்கும் புரிந்தது முதலில் துரோணர் யுதிஷ்டிரனை கூப்பிட்டு வில்லில் அம்பை பூட்டி குறி வைக்கும்படி கூறினார். யுதிஷ்டிரன் அம்பால் குறி வைத்த பின்பு துரோணர் அவரிடம் உனக்கு என்ன தெரிகிறது என்று கேள்வி கேட்டார். அதற்கு யுதிஷ்டிரன் எனக்குப் பக்கத்தில் தாங்கள் இருக்கின்றீர்கள். சுற்றிலும் மரங்கள் இருக்கின்றன. மேலே முக்கோணமாக மூன்று கிளைகள் தெரிகின்றது. அதனுள் பறவை போன்ற அமைப்பு தெரிகின்றது என்று சொல்லிக்கொண்டே சென்றான். உடனே துரோணர் யுதிஷ்டிரனைப் பார்த்து நீ அம்பை எய்ய வேண்டாம் தனியாக சென்று அமர்வாயாக என்று சொல்லி உத்தரவிட்டார். அடுத்தபடியாக துரியோதனன் அழைக்கப்பட்டான். அவனும் அதே இடத்தில் இருந்து வில்லில் அம்பை பூட்டி குறி வைத்தான். என்ன பார்க்கிறாய் என்று துரியோதனனைப் பார்த்து கேட்டார். யுதிஷ்டிரன் கூறியதைப் போலவே துரியோதனும் கூறினான். அவனையும் அம்பு எய்ய வேண்டாம் எழுந்து செல் என்று உத்தரவிட்டார். மூன்றாவது முறையாக பீமனுடைய முறை வந்தது. பீமனைத் தொடர்ந்து அதே கேள்விகளும் விடைகளும் அடுத்தடுத்த மாணவர்களிடையே தொடர்ந்து வந்தது. அனைவரும் அம்பு எய்யாமல் அருகில் சென்று அமர்ந்தார்கள்

அர்ஜுனனுடைய முறை வந்தது. என்ன பார்க்கிறாய் என்று விளக்கமாக சொல் என்று அர்ஜுனனை பார்த்து துரோணர் கேட்டார். அதற்கு அர்ஜுனன் பறவை என்று மட்டும் பதிலளித்தான். என்ன பார்க்கின்றாய் என்று நன்றாக விளக்கு என்று துரோணர் அர்ஜுனனை பார்த்து கூறினார். அர்ஜுனன் ப என்று மட்டும் சொன்னான். அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. என்ன என்ன பார்க்கின்றாய் என்று துரோணர் அர்ஜுனனை அதட்டினார். அர்ஜுனனிடம் இருந்து விடை ஒன்றும் வரவில்லை. அவனுடைய மனது குறியின் மீது மட்டுமே இருந்தது. துரோணர் அம்பை விடு என்றார். அம்பு குறியை துளைத்துக்கொண்டு போனது. இந்த நிகழ்வு மாணவர்களிடையே இருந்த பாகுபாட்டை நன்கு விளக்கி காட்டியது. மனதை ஒருமுகப்படுத்துவதில் அர்ஜுனன் தலை சிறந்தவனாக திகழ்ந்தான். யார் ஒருவன் தன் மனதை அடக்கி ஒருமுகப்படுத்தி தனது பயிற்சியில் ஈடுபடுகின்றானோ அப்பயிற்சியில் அவன் மேன்மை அடைந்தவன் ஆகின்றான்

துரோணர் மாணாக்கர்களை அழைத்துக் கொண்டு நதிக்கரைக்கு நீராடச் சென்றார். நீரில் மூழ்கி அவர் நீராடிய போது முதலை ஒன்று அவர் காலை பிடித்துக் கொண்டது. தம்மை விடுவித்துக் கொள்ளும் திறமை துரோணருக்கு இருந்தது ஆயினும் ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர் போல அவர் பாசாங்கு பண்ணி சிஷ்யர்களை உதவிக்கு வரும்படி அழைத்தார். ஆச்சாரியாரின் நிலையைப் பார்த்த ராஜகுமாரர்கள் அனைவரும் பரபரப்பும் பதைபதைப்பும் மனக்குழப்பம் உடையவர்களாக அங்குமிங்கும் ஓடினர். அர்ஜுனன் ஒருவன் மட்டுமே மனம் கலங்காது இருந்தான். ஐந்து அம்புகளை விடுத்து முதலையை துண்டு துண்டாக வெட்டி தள்ளினான். விடுபட்ட ஆச்சாரியார் மகிழ்வுடன் அர்ஜுனனை பாராட்டினார். பிரம்மாஸ்திரம் உட்பட பல அஸ்திர சாஸ்திர நுட்பங்களை அர்ஜுனனுக்கு புகட்டி வந்தார். நெருக்கடியான சூழ்நிலை வந்தால் மட்டுமே மேலான இந்த அஸ்திர சாஸ்திரங்களை பயன்படுத்த வேண்டும். சாமானியமான சூழ்நிலையில் பயன்படுத்தக்கூடாது என்று அர்ஜுனனுக்கு பாடம் புகட்டி வந்தார். மேலும் சில அஸ்திரங்களை மனிதர்கள் மீது பிரயோகிக்க கூடாது என்றும் ராட்சஷர்கள் போன்ற எதிரிகள் மீது மட்டுமே அத்தகைய அஸ்திர சாஸ்திரங்களை கையாள வேண்டுமென்றும் அவனுக்கு பாடம் புகட்டி வந்தார். அவ்வாறு இல்லாமல் முறையில்லாமல் அந்த அஸ்திர சாஸ்திரங்களை உபயோகப்படுத்தினால் உலகுக்குக் கேடு விளைவிக்கும். அவ்வாறு உலகுக்குக் கேடு செய்பவன் பெரும் குற்றவாளி ஆவான் என்றும் அர்ஜுனனுக்கு பாடம் புகட்டி வந்தார்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -17

துரோணர் ஏகலைவனை பார்த்து என்னை குருவாக எண்ணுகிறாயா என்று கேட்டார். அவன் துரோணருடைய பாதங்களில் வீழ்ந்தான். அவனுடைய கண்களில் தண்ணீர் வழிந்தது தங்களுடைய அருளால் தாங்கள் எனக்கு குருவானீர்கள் என்று ஏகலைவன் தெரிவித்தான். எனக்கு குரு தட்சணை தருவாயா என்று கேட்டார் துரோணர். குரு தட்சணை கேட்பதன் வாயிலாக நீங்கள் என்னை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டீர்கள். நான் பாக்கியவான் ஆனேன். என்னுடைய அனைத்தும் தங்களிடம் சமர்ப்பிக்கின்றேன் என்று ஏகலைவன் துரோணரிடம் தெரிவித்தான். உன்னுடைய வலக்கை கட்டை விரலை தட்சணையாக நான் வேண்டுகிறேன் என்றார் துரோணர். உடனே குருவின் மீதுள்ள பக்தியின் வேகத்தால் ஏகலைவன் தன்னுடைய வலது கை கட்டை விரலை வெட்டி இரத்தம் சொட்ட துரோணரின் பாதங்களின் முன் சமர்ப்பித்தான். ஏகலைவன் குருவின் மீது வைத்த பக்தியின் உண்மை அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் வில் வித்தைகள் மற்றும் தனூர் வேதத்தின் மேலான ரகசியங்கள் அனைத்தும் அவனை விட்டு விலகியது. கொடூர செயல் போல தெரியும் இந்த நிகழ்வைப்பற்றி துரோணாச்சாரியார் சில அடிப்படை கோட்பாடுகளை தெரிவித்தார்.

ஒவ்வொரு ஜீவாத்மாவும் நிறைஞானம் வாய்க்கப்பெற்றவர்களே. அதனை தக்க முறையில் நாடினால் அது உள்ளத்திலிருந்து வெளியாகின்றது. அந்த தத்துவத்தின் படி ஏகலைவனும் குரு பக்தி மூலம் தக்க முறையில் நாடி வில்வித்தைகளையும் தனுர் வேதத்தையும் அடைந்தான். குருபக்தியின் வாயிலாக ஏகலைவன் வில்வித்தையில் அர்ஜூனனைவிட மேலானவன் ஆகின்றான். அவனுடைய கட்டை விரலை கேட்டு அவனுடைய வில்வித்தையை பாழ்படுத்தியது போல பார்ப்பதற்கு தோன்றலாம். ஆனால் ஏகலைவனின் நன்மைக்காகவே அவ்வாறு செய்ய அவனது குருவாய் எமக்கு சூழ்நிலை அமைந்தது. தனுர் வேதத்தைக் கற்றுக்கொண்டால் அந்த வேதத்தின் நியமங்களை கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்கவில்லை என்றால் அது வேதத்தைக்கற்றவரை மேன்மை நிலையிலிருந்து கீழ் நிலைக்கு தள்ளி விடும். பெற்ற ஞானங்கள் அனைத்தும் மறந்து போகும். வேடுவனாய் இருக்கும் ஏகலைவன் வேதத்தின் நியமங்களை கடைபிடிக்கும் சூழ்நிலை அவனுக்கு இல்லை. இப்போது அவன் குருபக்தியின் விளைவாக தனுர் வேதத்தை கற்றவனாகின்றான். குருவிற்கு தனது விரலை வெட்டி காணிக்கை கொடுத்ததின் விளைவாக மேலும் இறை ஞானத்தை பெற்றவனாகின்றான். குருவாய் அவனுக்கு தேவையானதை அவனுக்கு செய்து விட்டேன். ஏகலைவனின் குரு பக்தியை உலகம் அறிந்து கொள்ளும். அவன் புகழ் நிடுழி பல்லாண்டு காலம் இருக்கும் என்று அனைவரிடமும் சொல்லி முடித்தார்.

தம்முடைய சிஷ்யர்கள் வில்வித்தையில் அடைந்திருந்த திறமையை சோதிக்கும் பொருட்டு துரோணாச்சாரியார் ஒருநாள் அம்மாணாக்கர்களுக்கு இடையில் பரிட்சை ஒன்று வைத்தார். குருவும் சிஷ்யர்களும் மரச்சோலையில் கூடினர். மரக்கிளைகளின் இடையே அடர்ந்து வளர்ந்திருந்த பச்சை இலைகளுக்கு இடையில் உலர்ந்து போன சில இலைகள் ஒன்றுபட்டு ஒரு பறவை போல தென்பட்டன. அதனை துரோணாச்சாரியார் சிஷ்யர்களுக்கு சுட்டிக்காட்டினார். மேலே முக்கோணம் போன்று தென்படுகின்ற மரக்கிளையை பாருங்கள் அதற்குள் ஒரு சிறிய பறவை ஒன்று அமர்ந்திருப்பது போன்று தென்படுகிறது பாருங்கள் என்று கூறினார். அனைவருக்கும் அக்காட்சி தெரிந்தது. ஒவ்வொருவராக அப்பறவையின் மீது குறிவைத்து வில்லில் அம்பை பூட்ட வேண்டும். அதன் பிறகு தான் கேட்கின்ற கேள்விகளுக்கு விடை கொடுக்க வேண்டும். தாம் ஆணையிடுகின்ற போது அந்த பறவை போல் இருக்கும் குறியின் மீது அம்பை விட வேண்டும் என்று மாணாக்கர்களுக்கு கூறினார்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -16

ஒரு நாள் துரோணாச்சாரியார் முன்பு இளைவன் ஒருவன் தோன்றினான் அவன் பெயர் ஏகலைவன். அவன் வேடர்களின் தலைவனுடைய மகன் ஆவான். துரோணாச்சாரியரின் பாதங்களை வணங்கி தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். துரோணர் அவனைப்பார்த்தார். வேடுவனாக இருந்த அவனுக்கு ராணுவப்பயிற்சி தேவையில்லை என்று எண்ணினார். ஆகவே அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். ஆயினும் ஊக்கமே வடிவெடுத்த ஏகலைவன் ஏமாற்றமடையவில்லை. காட்டிற்கு சென்றான் அங்கு துரோணாச்சாரியார் போல் மண்ணில் ஓர் உருவம் செய்தான். அந்த உருவத்தை குருவாக நினைத்து தினந்தோறும் வழிபாடுகள் செய்தான். அதைத்தொடர்ந்து வில்வித்தைகள் பயிற்சி செய்தான். அவனுடைய குருபக்தியும் வில்வித்தையின் மேல் கொண்ட ஆர்வமும் ஒன்றுகூடி வியப்பிற்குரிய பலனைத்தந்தது. செடிகளில் மலர்கள் தோன்றுவது போல அவன் உள்ளத்தில் வில்வித்தைக்கான கலைத்திறன்கள் உருவெடுத்தன. அதிவிரைவில் தனுர் வேதத்தின் ரகசியங்கள் அவனுக்கு தோன்றி தெளிவானான். தலைசிறந்த வில்லாளியாக உருவெடுத்தான்.

குருவம்சத்து ராஜகுமாரர்கள் குருவின் அனுமதி பெற்று காட்டிற்கு வேட்டையாட சென்றார்கள். அவர்கள் வளர்த்து வந்த நாயும் அவர்களுடன் காட்டிற்கு சென்றது. அங்கும் இங்கும் ஓடிய நாய் காட்டில் இருந்த ஏகலைவனைப்பார்த்து பயங்கரமாக குரைத்தது. ஏகலைவன் தன்னுடைய திறமையை காட்டும் விதமாக ஒரு கட்டு நிறைய அம்புகளை எடுத்து வில்லில் பூட்டி ஒரே தடவையில் நாயின் மீது அம்பெய்தான். அந்த அம்புகள் நாயின் வாயில் மொத்தமாக சென்று நாயின் வாயை அடைத்தது. பயந்து போன நாய் ராஜகுமாரர்களிடேயே திரும்பி ஓடி வந்தது. இந்த நூதான காட்சிகளைப்பார்த்து குரு வம்சத்து ராஜகுமாரர்கள் திகைத்துப்போயினர். இத்தகைய அதிசய செயலைப்பார்த்து அக்காட்டில் எந்த மானுடனாலாவது இது போல் செய்ய இயலுமா என்று வனம் முழுவதும் தேடிப்பார்த்தார்கள். வனத்தில் அவர்கள் ஏகலைவனை சந்தித்தார்கள். அவன் யார் என்று விசாரித்த பொழுது தன்னை துரோணாச்சாரியாரின் சீடன் என்று அறிமுகம் செய்து கொண்டான். அவன் கூறியது ராஜகுமாரர்களை மேலும் குழப்பமடைய செய்தது.

ராஜகுமாரர்கள் அனைவரும் குருநாதரிடம் நடந்தது அனைத்தையும் சொன்னார்கள். துரோணாச்சாரியாரும் சிறிது திகைத்தார். துரோணாச்சாரியார் ராஜகுமாரர்களுடன் காட்டிற்கு சென்று அந்த இளைஞனை பார்த்தார். பார்த்ததும் அவருக்கு இந்த இளைஞனை பற்றிய அனைத்தும் ஞாபகம் வந்தது. துரோணர் நடந்தவைகள் அனைத்தையும் ராஜகுராரர்களுக்கு தெரிவித்து குருபக்தியின் மகிமையையும் மேன்மையையும் எடுத்துரைத்தார்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -15

இளமைக்காலத்தில் இருக்கும் நட்பு ஆயுள்காலம் முழுவதும் நிலைத்து இருக்கும் தன்னுடைய வறுமைகள் சென்று விடும் என்ற எண்ணத்துடன் துரோணர் பாஞ்சால மன்னனாகிய துருபதனை காண அவனுடைய ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றார். அங்கு துருபதன் மன்னனைப் பார்த்து மன்னா நான் துரோணர். தாங்கள் என்னுடைய சிறு வயது நண்பர். சிறுவயதில் தாங்கள் எம்மிடம் மன்னனானதும் செல்வங்கள் அளிப்பதாக சொன்னீர்கள். ஆனால் எனக்கு தங்களின் செல்வங்கள் எதுவும் வேண்டாம். ஒரு குடும்ப ஜீவனத்திற்கு தேவையானதை கொடுத்து உதவினால் போதும் என்று கூறினார். துருபதனுடைய பாங்கு இப்போது முற்றிலும் மாறியிருந்தது. துரோணரே நீ என்னோடு அன்யோன்யமாக இருப்பது இப்போது பொருந்தாது. விளையாட்டுப்பிள்ளை கூறியதை உண்மை என்று எண்ணி கற்பனை செய்வது மடமையாகும். நாடோடியாய் இருந்து யாசகம் பெறுகின்ற ஒருவன் அரசனுக்கு நண்பன் ஆவனா? வறியவன் ஒருவன் வேந்தனோடு எவ்வாறு உறவு கொண்டாட முடியும்? இணையில்லாத இருவருக்கு இடையில் நட்பு எற்படுவது ஆகாத காரியம். பிள்ளைப்பருவ கதைகளை எல்லாம் என்னிடம் சொல்லி என்னை உபத்திரப்படுத்தாதே. இந்த இடத்தை விட்டுச்செல் என்று துரோணரை அவமரியாதை செய்தான். போற்றுதலுக்குரிய துரோணர் அவமானப்படுத்தப்பட்டார்.

துரோணர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்பு அவ்விடத்தில் இருந்து பின் வாங்கினார். கர்வம் பிடித்த துருபத மன்னனுக்கு ஆயுள் முழுவதும் மறக்க முடியாத படி பாடம் ஒன்றை புகட்ட வேண்டும் என்று மனதில் ஓர் தீர்மானத்தை எண்ணிக்கொண்டார். அங்கிருந்து தனது மைத்துனரான கிருபாச்சாரியார் இருக்கும் அஸ்தினாபுரத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு தான் துரோணரை பீஷ்மர் ராஜ குருவாகவும் ராஜ குமாரர்களுக்கு ஆச்சாரியராகவும் நியமித்தார். துரோணருக்கு ராஜகுமாரர்கள் பல பேர் சிஷ்யர்களாக வாய்த்தார்கள். அவர்களுள் குரு வம்சத்தை சேர்ந்த பாண்டுவின் குமாரர்களும் திருதராஷ்டிரரின் புதல்வர்களும் தலைசிறந்தவர்களாக திகழ்ந்தார்கள். அருகில் இருக்கும் நாடுகளில் இருந்தும் நெடுந்தூரத்தில் இருக்கும் நாடுகளில் இருந்தும் பல ராஜகுமாரர்கள் இந்த குருகுலத்தை நாடி வந்தனர். அந்தந்த மாணாக்கனின் திறமைக்கேற்றவாறு அவர்களுக்கு போர்க்கலை கற்ப்பிக்கப்பட்டது.

மாணாக்கர்களின் கூட்டத்தில் அர்ஜூனன் தலைசிறந்த மாணவனாக திகழ்ந்தான். அவனுடைய குரு பக்தி போற்றுவதற்கு உரியதாயிருந்தது. கல்வியிலும் வில்வித்தையிலும் அவன் தளராத ஊக்கம் பெற்றவனாயிருந்தான். அவனுடைய ஆர்வத்தை முன்னிட்டு துரோணருக்கு அர்ஜூனன் விருப்பமான மாணாக்கனாக இருந்தான். வில்வித்தைக்கு விஜயன் என்னும் பெயர் பெற்று இருந்தான். மற்ற மாணவர்களுக்கு விளங்காத வில்வித்தைகள் அர்ஜூனனுக்கு எளிதில் விளங்கியது.

Image may contain: 4 people
Image may contain: one or more people

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -14

குழந்தைகள் கூறியவைகள் அனைத்தையும் கேட்ட பீஷ்மர் வந்திருப்பவர் துரோணாச்சாரியார் என்பதை யூகித்தார். ஆகவே தானே நேரில் சென்று அவரிடம் பேசினார் பேசியதில் அவர் தான் துரோணாச்சாரியார் என்பதை உறுதி செய்தார். தக்க மரியாதையுடன் அவரை அரண்மனைக்கு வரவேற்றார் பீஷ்மர். பின்பு ராஜகுமாரர்களுக்கு ஆச்சாரியார் ஆக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். துரோணாச்சாரியார் அதற்கு சம்மதம் கொடுத்தார். பீஷ்மருக்கு மட்டில்லா மகிழ்ச்சி உண்டாயிற்று. எனெனில் அக்காலத்தில் துரோணாச்சாரியாருக்கு நிகரான வில்வித்தைக்காரர் அப்போது யாரும் இல்லை.

பிரசித்தி பெற்ற பரத்வாஜ மகரிஷிக்கு பிள்ளையாகப் பிறந்தவர் துரோணர். இவர் வேதங்களை எல்லாம் கற்று உணர்ந்த பின்பு தனுர் வேதத்தைக் கற்க ஆரம்பித்தார். அக்கலையிலும் நிபுணன் ஆனார். துரோணாச்சாரியார் இளைஞனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த பொழுது பாஞ்சால நாட்டு இளவரசனோடு நெருங்கிய நண்பனாக இருந்தார். ஆஸ்ரம வாசத்தில் இருவருடைய நட்பு மிகவும் நெருங்கிய நட்பாக உருவெடுத்தது. இருவரும் மகிழ்ச்சியாக இருந்த பல வேளைகளில் இளவரசர் துரோணாச்சாரியாரிடம் தான் ராஜாவாக பட்டம் சூட்டிய பின்பு தன்னுடைய செல்வங்களை தாராளமாக தருவதாக கூறிவந்தான். ஆண்டுகள் பல சென்றன.

கௌதமரின் புதல்வியும் கிருபாச்சாரியாரின் சகோதரியுமான கிருபியை துரோணர் மணந்து கொண்டார் அவர்களுக்கு அசுவத்தாமன் என்னும் மகன் பிறந்தான். தனுர் வேதத்தில் வில்வித்தைகளின் நுணுக்கமான பலவற்றை கற்றுக்கொள்ள துரோணாச்சாரியார் விரும்பினார், அதன் படி மகாவித்துவான் பரசுராமரை குருவாக வேண்டி அணுகினார். பரசுராமரும் துரோணாச்சாரியாரை சீடராக ஏற்றுக்கொண்டு தனுர் வேதத்தின் வில் வித்தைகள் அனைத்தையும் அவருக்கு கற்றுக்கொடுத்தார். அனைத்தையும் கற்றுக்கொண்ட துரோணாச்சாரியார் ஆயுத பிரயோகங்களின் அற்புத மூர்த்தியாகி வீடு வந்து சேர்ந்தார். போர் நிபுணனாகிய அவருக்கு வறுமையோடு போர் புரிய தெரியவில்லை. பரம ஏழையாக இருந்தார்.

துரோணாச்சாரியாரின் குழந்தை அசுவத்தாமன் பசும்பாலை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறான். ஆனால் அவற்றை அவன் குடித்தது கிடையாது. ஒரு கவளம் பாலையாவது சுவைத்து பார்க்க வேண்டும் என்றும் தனக்கு பசும்பால் வேண்டும் என்றும் அஸ்வத்தாமன் தனது தாயிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டான். மகனின் பரிதாபநிலை தாய் கிருபியின் உள்ளத்தை உருக்கியது. இந்த நெருக்கடியில் துரோணாச்சாரியாருக்கு தன் இளமைப்பருவ பாஞ்சாலகுறிச்சி இளவரசன் ஞாபகத்திற்கு வந்தான். அப்போது அவர் கிருபியிடம் பாஞ்சால நாட்டு அரசன் துருபதன் தன்னுடைய இளம் வயது பள்ளி தோழன். அரசன் ஆனதும் தனக்கு செல்வங்கள் தந்து உதவி செய்வதாக பல முறை கூறியுள்ளான். ஆகவே நாம் மூவரும் பாஞ்சால நாட்டிற்கு செல்வோம் அங்கு நமது வறுமை முற்றிலும் நீங்கும் என்று சொன்னார். மூவரும் பாஞ்சால நாட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -13

நதிக்கு உள்ளே போடப்பட்ட பீமன் விஷத்தின் வீரியத்தால் மயக்கம் கலையாமல் இருந்தான். நீருக்குள் இருக்கும் பாம்புகள் பீமனைத் தீண்டியது. பாம்பின் விஷம் மூலிகையின் விஷத்தை முறித்தது. அதன் விளைவாக பீமன் விழித்தான். ஒரு உதறு உதறி தன் கை கால்களை கட்டியிருந்த கொடிகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளினான். பிறகு அங்கிருக்கும் விஷப் பாம்புகளை கொன்றான். பாம்புகளில் சில தப்பித்துக் கொண்டு ஆழத்தில் இருந்த நாகலோகத்துக்கு போயின. அங்கு பாம்புக்கு அரசனாக இருந்த வாசுகியிடம் ஒரு மனிதன் செய்த அட்டகாசத்தை எடுத்து விளக்கின. அந்த மனிதனுடைய துணிச்சலைப் பார்க்க வாசுகி குறிப்பிட்ட அந்த இடத்துக்கு வந்தது. இச்செயலை செய்த மானுடன் குந்தியின் மைந்தன் என்பதை வாசுகி அறிந்துகொண்டது. அவனுக்கு அமிர்தத்தை வழங்கி அவனுடைய பலத்தை பன்மடங்கு அதிகப்படுத்தி திருப்பி அனுப்பியது. இதற்குள் எட்டு நாட்கள் சென்றது. கவலையுடன் இருந்த குந்திதேவி ஆனந்த கண்ணீருடன் தன் மகனை வரவேற்றாள். ஆனால் கொடூர தன்மையோடும் குதூகலத்தோடும் இருந்த துரியோதனன் பீமன் திரும்பி வந்ததை பார்த்து ஏமாற்றம் அடைந்தான்.

காலம் சென்ற சந்தனு மன்னன் வேட்டையாட வனத்திற்குச் சென்று இருந்த பொழுது அங்கு சிறுவனும் சிறுமியும் ஆகிய இரட்டையர்களை கண்டான். கவனத்துடன் அவர்களை கொண்டு வந்து பராமரித்து வந்தான். அந்த சிறுவர்களை அவன் கிருபன் என்றும் கிருபி என்றும் பெயர் வைத்து வளர்த்து வந்தான். அந்த கிருபன் பிரசித்திபெற்ற கௌதமருடைய புதல்வன் ஆவார். வில்வித்தையில் அவர் சாமர்த்தியசாலி ஆகையால் கிருபாச்சாரியாரை பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளுக்கு வில்வித்தையை பயிற்சி கொடுப்பதற்கு பயன்படுத்திக்கொண்டார் கிருபாச்சாரியார் திருதராஷ்டிரருடைய புதல்வர்கள் பாண்டுவின் புதல்வர்களுக்கு மட்டுமின்றி விருஷ்ணி வம்சத்து அரசகுமாரர்கள் போஜனுடைய புதல்வர்கள் அந்தகனுடைய புதல்வர்கள் ஆகிய ராஜகுமாரர்களுக்கும் பாடசாலையில் பயிற்சி அளித்து வந்தார். அவர்கள் அனைவரும் அதிவிரையில் வில் வித்தையில் நிபுணர்கள் ஆனார்கள். ஆனால் அவர்கள் பெற்ற பயிற்சி போதவில்லை என்று உணர்ந்த பீஷ்மர் தனுர் வேதத்தில் தலை சிறந்த மற்றோர் ஆச்சார்யாரை தேடிக் கொண்டு இருந்தார்.

ஒரு நாள் ராஜகுமாரர்கள் மும்முரமாக பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த ஒரு கிணற்றுக்குள் தற்செயலாக அவர்கடைய பந்து விழுந்தது. அதன் விளைவாக விளையாட்டு திடீரென்று முடிவுக்கு வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் திகைத்து நின்று கொண்டு இருந்தார்கள். இந்த பிரச்சினையை அகற்றுவதற்கான வில்வித்தை உங்களுக்கு தெரியவில்லையா என்று பக்கத்தில் நின்று நிகழ்ந்ததை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் கேட்டார். நாங்கள் எல்லோரும் வில்வித்தகர்களே. ஆனால் வில்லுக்கும் பந்துக்கும் என்ன சம்பந்தம் என்று அந்த மாணாக்கர்களில் ஒருவனான யுதிஷ்டிரன் கேட்டான். வந்திருந்தவர் தான் அணிந்திருந்த மோதிரத்தைக் கழட்டி கிணற்றுக்குள் போட்டார். மோதிரம் பந்து ஆகிய இரண்டையும் வில்வித்தையின் மூலம் எடுக்கலாம் என்றார். ஒரு கையளவு தர்ப்பை புற்களை எடுத்து ஜெபித்து அவைகளை ஒன்றன் பின் ஒன்றாக பந்தின் மீது போட்டார். தர்ப்பைப்புல் ஒன்றன் பின் ஒன்றாக பந்து மேல் ஒட்டிக் கொண்டு ஒரு கயிறு போல் ஆகி அதன் ஒரு நுனி பந்திலும் இன்னொரு நுனி வந்திருந்தவர் கையிலும் இருந்தது. மிகவும் சுலபமாக பந்து மேலே எடுக்கப்பட்டது மோதிரத்தை என்ன பண்ண போகிறீர்கள் என்று இளைஞர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் அந்த அம்பு ஒன்றை எய்தார். அம்பு மோதிரத்தை எடுத்துக் கொண்டு அவரிடம் வந்தது. இதை பார்த்து திகைத்து போன குழந்தைகள் ஓடி சென்று நிகழ்ந்ததை எல்லாம் பீஷ்மரிடம் தெரிவித்தார்கள்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -12

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -12

பாண்டவர் சகோதரர்கள் ஐந்து பேரும் வாலிபப் பருவத்தை இன்னும் தாண்டவில்லை. அரண்மனையின் ராஜ போகங்களை அவர்கள் இப்போது தான் முதல் முதலாக அனுபவிக்க ஆரம்பித்தனர். சிற்றன்னைக்கு பிறந்த சகோதரர்களாகிய கௌரவர்கள் நூறு பேருடன் அவர்கள் இனிதே ஒட்டி உறவாடினார்கள். அரண்மனை கலகலப்புடன் இருந்தது. ராஜகுமாரர்கள் ஊக்கம் ததும்பிய பல விளையாட்டுகளில் ஈடுபட்டனர். அவர்களிடம் தான் எப்பொழுதும் தலைமை தாங்கி இருக்க வேண்டும் என்பது துரியோதனின் விருப்பமாக இருந்தது. ஆனால் தற்செயலாக பீமன் ஒவ்வொரு விளையாட்டிலும் மிகவும் சக்தி மிக்கவனாக இருந்தான். விளையாடும் போது கூட்டாளிகள் பத்து பேரே ஒரே நேரத்தில் வீழ்த்துவது அவனுக்கு சர்வசாதாரண செயலாக இருந்தது. கௌரவ சகோதரர்கள் பழம் பறிப்பதற்கு மரத்தில் ஏறி இருந்தபோது பீமன் அம்மரத்தை ஓங்கி ஒரு உதை உதைத்தான். அதன் விளைவாக அத்தனை பேரும் பழங்கள் விழுவது போன்று பொலு பொலுவென்று கீழே விழுவார்கள். மரத்தில் இருந்த பழங்கள் அத்தனையும் அவர்களோடு சேர்ந்து தரையில் விழும். நதியில் நீந்தி விளையாடிய போது இளைஞர்கள் 10 பேர் குடுமியை பிடித்து இழுத்துக்கொண்டு வந்து நீரின் அடியில் சென்ற பிறகு அதிக நேரம் அசைவற்று இருப்பான். அதன் விளைவாக அவன் கையில் அகப்பட்டுக் கொண்டவர்கள் திணறுவார்கள். கிட்டத்தட்ட சாகும் நிலைக்கு வந்துவிடுவார்கள். இது பீமனுக்கு விளையாட்டாக இருந்தது. அவனது கையில் அகப்பட்டு கொண்டவர்களுக்கு திண்டாட்டமாக இருந்தது.

தான் இளவரசனாக வேண்டுமென்பது துரியோதனின் ஆசையாக இருந்தது. ஆனால் யுதிஷ்டிரன் அவனுக்கு மூத்தவன் அவனே இளவரசு பதவிக்கு தகுதியானவன். அது துரியோதனனுக்கு இடைஞ்சலாக இருந்தது. இது ஒருபுறமிருக்க விளையாட்டில் பீமன் பெரும் துன்பத்தை விளைவித்து வந்தான். ஆகையால் முரடனாக இருந்த அந்த சகோதரன் பீமன் மீது வெறுப்பையும் பொறாமையையும் அவன் வளர்த்து வந்தான். சின்னஞ்சிறு வயதில் உருவெடுக்கின்ற நட்பும் பகையும் ஆயுட்காலம் முழுவதும் அசையாது உள்ளத்தில் உறுதி பெற்றிருப்பது மானிட வாழ்க்கையை பற்றிய கோட்பாடு ஆகும். காட்டில் பிறந்து வீட்டிற்கு வந்திருக்கும் சகோதரர்களை எப்படியாவது அழித்து விடவேண்டும் என்று துரியோதனன் திட்டமிட்டான்.

ஒருநாள் நதிக்கரையில் உணவு அருந்த துரியோதனன் ஏற்பாடு செய்தான். அது நிகழ்ந்து கொண்டிருந்த பொழுது விஷம் கலந்த உணவை துரியோதனன் பீமனுக்கு தானே எடுத்து வழங்கினான். உணவை ருசித்த பிறகு இளைஞர்கள் எல்லோரும் விளையாடிக்கொண்டிருந்தனர் விஷம் அருந்திய உணவால் மயங்கியிருந்த பீமனை யாரும் கவனிக்கவில்லை. பீமனின் கைகள் கால்கள் இரண்டையும் துரியோதனன் பசுமையான காட்டுக்கொடி போட்டு கட்டி நீருக்குள் போட்டுவிட்டான். அன்றைய விளையாட்டு முடிவுக்கு வந்தது. எல்லோரும் அரண்மனைக்கு திரும்பினார்கள். பீமன் முன்பே அரண்மனைக்கு சென்று இருக்கக்கூடும் என்று எண்ணி பாண்டவ சகோதரர்கள் அரண்மனைக்கு வந்து தனது சகோதரன் பீமன் பற்றி விசாரித்தார்கள். ஒரு மகன் திரும்பி வராது இருப்பதை கண்டு குந்திதேவி கவலை மிகக்கொண்டாள்.

விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு மற்ற சகோதரர்கள் வந்து இவனை தேடிப் பார்த்தார்கள் பீமனை எங்கு தேடியும் காணவில்லை. மனம் கலங்கி இருந்த குந்திதேவி விதுரரை வரவழைத்தாள். பொறாமைப் பட்டுக் கொண்டிருந்த துரியோதனனால் தன்னுடைய மகனுக்கு விபத்து ஏதும் இருக்குமோ என்று அவரிடம் தெரிவித்தார். இதற்கு ஆலோசனை ஒன்று விதுரர் கூறினார். அதாவது துரியோதனனை பற்றி அவளின் எண்ணத்தை வெளியிடாது மறைத்து வைத்திருக்க வேண்டுமென்றும் அப்படி செய்யாவிட்டால் மற்ற குழந்தைகளுக்கும் ஏதாவது விபரீதம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார். ஆனால் அவள் கவலையுற்று இருந்ததால் மற்றொரு கருத்தையும் அவர் கூறினார். ஐந்து சகோதரர்களும் தீர்க்க ஆயுளுடன் வாழ்ந்திருப்பார்கள் என்றும் அறிய பெரிய செயல்கள் அவர்கள் சாதிப்பார்கள் என்றும் ரிஷிகள் உறுதி கூறி இருக்கிறார்கள். அவர்கள் வாக்கு பொய்யாகாது என்றார். அதை கேட்ட குந்திதேவி ஒருவாறு ஆறுதல் அடைந்தாள். தன் மகனுக்கு கேடும் ஒன்றும் வராது என்று நம்பி இருந்தாள்.