மகாபாரதம் 14. அசுவமேத பருவம் பகுதி -2

கீரிப்பிள்ளை நடந்த நிகழ்வு ஒன்றை கூற ஆரம்பித்தது. சிறிது காலத்திற்கு முன்பு பக்கத்தில் இருந்த நாடு ஒன்றில் பயங்கரமான பஞ்சம் உண்டானது. பட்டினி கிடந்து பலர் மாண்டு போயினர். உணவு போதவில்லை. அந்த ஊரில் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் அவருடைய மனைவி அவருடைய மகன் மருமகள் என நால்வர் வாழ்ந்து வந்தனர். பஞ்சத்தை முன்னிட்டு அந்த ஆசிரியர் தம்முடைய தர்மமாகிய கல்வி புகட்டும் செயலை நிறுத்தி விடவில்லை. ஆசிரியரின் குடும்பம் பட்டினியால் வாடுவது பற்றி அறிந்த மாணவன் ஒருவன் அந்த ஆசிரியருக்கு கொஞ்சம் கோதுமை மாவு கொடுத்தான். அதை கொண்டு நான்கு சப்பாத்திகள் செய்தனர். உணவை அவர்கள் அருந்த போகும் தருவாயில் பட்டினியுடன் ஒருவன் விருந்தாளியாக வந்து சேர்ந்தான். விருந்தாளிக்கு ஆசிரியர் தனது பங்கு சப்பாத்தியை கொடுத்து அதை ஏற்கும் படி வேண்டினார். அந்த சப்பாத்தியை சாப்பிட்டதன் விளைவாக அவனுக்கு பசி அதிகரித்தது. ஆசிரியரின் மனைவி தனக்குரிய பங்கு சப்பத்தியை வந்தவனுக்கு எடுத்து வழங்கினாள். அதன் விளைவாக விருந்தினருக்கு பசி மேலும் அதிகரித்தது. மகன் தனக்குரிய பங்கை வழங்கினான். விருந்தாளிக்கு மேலும் உணவு தேவைப்பட்டது. மருமகள் தனது உணவை விருந்தாளியின் இலையில் வைத்து அவனை வணங்கினாள். அதனையும் சாப்பிட்ட விருந்தாளி மிகவும் திருப்தி அடைந்தவனாக அனைவரையும் வாழ்த்திவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

தங்களது உணவை விருந்தாளிக்கு கொடுத்த ஆசிரியரின் குடும்பம் பசியில் சாகும் நிலையில் கிடந்தனர். அவர்கள் செய்த தியாகத்தை அறிந்த விண்ணுலகத்தவர்கள் வியந்தனர். தேவர்கள் ரதம் ஒன்றை மண்ணுலகிற்கு கொண்டு வந்து ஆசிரியர் குடும்பத்தார் உடலிலிருந்து அவர்களை விடுவித்து விண்ணுலகத்திற்கு அழைத்துச் சென்றனர். தேவலோகத்தில் அவர்கள் பசியில்லாமல் தாகமில்லாத மேல் நிலைக்கு சென்றனர்.

கீரிப்பிள்ளை தொடர்ந்து பேசியது. நான் என் வலையில் இருந்து வெளியே வந்து அவர்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப்பட்ட தரையின் மீது படுத்து உருண்டேன். தரையில் சிதறிக் கிடந்த கோதுமை மாவின் புனிதம் சிறிதளவு என் உடலின் ஒரு பகுதியில் ஒட்டியது. மாவு ஒட்டிய பகுதிகள் அனைத்தும் பொன்நிறமாக மாறியது. எனது உடலின் மீதி பகுதியையும் பொன்நிறமாக மாற்றுவதற்காக தானதர்மங்கள் செய்யும் யாகசாலை எங்கேனும் இருக்கிறதா என்று நான் தேடி பார்த்து ஒவ்வொரு இடமாக படுத்து உருண்டு கொண்டிருக்கின்றேன். எங்கும் எனது உடல் பொன்நிறமாக மாறவில்லை. யுதிஷ்டிரன் செய்த இந்த யாகம் நடந்த இடத்திலும் படுத்து உருண்டேன். இங்கும் எனது உடலின் மீதிப்பகுதி பொன்நிறமாக மாறவில்லை. ஆகவே சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆசிரியரின் தானத்திற்கு நிகராக யுதிஷ்டிரனின் இந்த யாகம் இல்லை. இந்த யாகத்தை நீங்கள் அனைவரும் மிகவும் பெருமையாக பேசுகின்றீர்கள். ஆகவே நீங்கள் பொய் பேசுகின்றீர்கள் என்று கூறினேன் என்று தனது பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியது.

கீரியின் இக்கூற்றை கேட்ட பெருமக்கள் அனைவரும் திகைத்துப்போய் மௌனத்துடன் இருந்தனர். ஆசிரியர் செய்த தர்மம் ஆடம்பரமான எந்த வேள்விக்கு நிகராகாது என்பதை அனைவரும் அமைதியாக ஏற்றுக் கொண்டனர். எந்த சிறிய செயலானாலும் செய்யும் மனநிலை பொருத்தே அதன் சிறப்பு என்னும் கோட்பாடு இங்கு நிரூபிக்கப்பட்டது. யுதிஷ்டிரனுடைய அசுவமேத யாகத்திற்கு வந்திருந்த கிருஷ்ணன் சிறிது காலம் ஹஸ்தினாபுரத்தில் தங்கியிருந்தார். யுதிஷ்டிரனை சிம்மாசனத்தில் அமர்த்துவது கிருஷ்ணனின் முக்கியமான செயலில் ஒன்று. அந்த அரிய செயலும் இப்பொழுது நிறைவேறியது. எனவே கிருஷ்ணனை பாண்டவர்கள் அரைமனதோடு துவாரகைக்கு வழி அனுப்பி வைத்தார்கள்.

அசுவமேத பருவம் முற்றியது. அடுத்து அசிரமவாசிக பருவம்.

மகாபாரதம் 14. அசுவமேத பருவம் பகுதி -1

அரச சிம்மாசனத்தில் அமர்ந்த யுதிஷ்டிரன் ராஜ தர்மங்களில் தன் மனதைச் செலுத்தினான். ஆட்சி முறையின் ஒரு பகுதியாக அஸ்வமேத யாகம் நிகழ்த்துவது அவசியமாக இருந்தது. வியாசர் அவன் முன்னிலையில் தோன்றி அதன் அவசியத்தை அவனுக்கு எடுத்து விளக்கினார். பல அரசர்கள் தேடி வைத்திருந்த செல்வத்தில் பயன்படாமல் இருந்ததை சிற்றரசர்களிடமிருந்து சேகரிக்க வேண்டியது இந்த யாகத்தின் ஒரு பகுதி ஆகும். சிற்றரசர்களிடமிருந்து செல்வத்தையும் யாகத்திற்கு தேவையான திரவியங்களை சேகரிக்கும் பணிக்கு அர்ஜுனன் நியமிக்கப்பட்டான். யுதிஷ்டிரன் செய்யும் அந்த யாகத்திற்கு அறிகுறியாக அவன் குதிரை ஒன்றை அக்கம் பக்கங்களில் இருந்த நாடுகளுக்கு அர்ஜுனன் ஓட்டிச் சென்றான். யாகம் செய்ய தடை கூறுபவர்கள் தங்கள் நாட்டிற்குள் குதிரையின் நடமாட்டத்திற்கு ஆட்சேபனே கூறலாம். அவர்களை வெல்லுவது அர்ஜுனனின் கடமையாக இருந்தது. ஆனால் அத்தகைய தடை யாரும் கூறவில்லை. அனைத்து அரசர்களும் தங்கள் தேவைக்கு மேலிருந்த செல்வத்தை அளித்தனர். யாகத்திற்கு தேவையான திரவியங்களையும் ஏனைய பொருட்களையும் அவன் பெரிதும் இமாசலப் பிரதேசத்திலிருந்து சேகரித்துக்கொண்டான்.

அஸ்வமேதயாகம் அரங்கில் சிறப்பாக நிகழ்ந்தது சிற்றரசர்களும் நாடாளும் மன்னர்கள் பலரும் அழைக்கப்பட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்த அரசர்களும் நெடுந்தூரத்துக்கு அப்பால் இருந்த அரசர்களும் அந்த யாகத்தில் கலந்து கொண்டார்கள். சாஸ்திரங்களில் உள்ளபடியே நடைமுறைகள் அனைத்தும் ஒழுங்காக நிகழ்ந்தது. ஏழை எளியவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. சமுதாய முன்னேற்றத்திற்கு என புதிய திட்டங்களுக்கு தேவையான செல்வம் வழங்கப்பட்டது. பயன்படாமல் இருந்த செல்வங்களை எடுத்து நல்வழியில் பயன்படுத்துவது இந்த யாகத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. சான்றோர்கள் வகுத்து வைத்திருந்த முறைப்படி யாகம் நிறைவேறியது. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். யுதிஷ்டிரன் செய்த அஸ்வமேயாகம் ஒப்புயர்வு அற்றது என்று அனைவரும் கூறினர்.

அப்பொழுது யாகசாலையில் கீரிப்பிள்ளை ஒன்று வந்து சேர்ந்தது. அதனுடைய மேல்பகுதி சாம்பல் நிறமாகவும் மற்ற பகுதிகள் பொன் நிறமாகவும் இருந்தது. இந்த அதிசயத்தை பார்த்து அனைவரின் கவனமும் அதன்மேல் சென்றது. கீரிப்பிள்ளை தரையில் படுத்து புரண்டது. பிறகு எழுந்து நின்று அங்கு கூடியிருந்த அனைவரிடமும் நீங்கள் அனைவரும் அறிந்தோ அறியாமலோ யாகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்று பொய் பேசினீர்கள் என்று அது குற்றம் சாட்டியது. தாங்கள் அறிந்து பொய் ஏதும் சொல்லவில்லை என்று அனைவரும் தெரிவித்தார்கள். மேலும் கீரிப்பிள்ளை சாட்டிய குற்றச்சாட்டை தெளிவு படுத்தும்படி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

மகாபாரதம் 13. அனுசாஸன பருவம்

பீஷ்மர் தானறிந்த ஞானம் அனைத்தையும் அழிந்து போகாதவாறு யுதிஷ்டிரனிடம் கூறினார். பீஷ்மர் தான் அறிந்த அரிய ஞானத்தை யுதிஷ்டிரன் வாயிலாக உலகிற்கு எடுத்து வழங்கினார். யுதிஷ்டிரருக்கும் திருதராஷ்டிரருக்கும் பீஷ்மர் ஆறுதல் அளித்தார். மகாபாரத யுத்தம் முற்றுப் பெறும் வகையில் பீஷ்மர் ஆத்மா நிட்டையில் அமர்ந்த அவர் நிமிர்ந்திருந்த தியானத்தில் அமர்ந்தார். அவருடைய மேனியிலிருந்து அம்புகள் தானாக உதிர்ந்தது. இவ்வுலகை விட்டு வெளியேற பீஷ்மர் கிருஷ்ணனுடைய அனுக்கிரகத்தை நாடினார். கிருஷ்ணரும் அவரை ஆசிர்வதித்தார். பீஷ்மர் வடிவத்திலிருந்து ஆன்மா விண்ணுலகை நோக்கி மேலே சென்றது. அப்பொழுது விண்ணுலகிலிருந்து பூமாரி பொழிந்தது. அங்கு கிளம்பிய இசை மண்ணுலகுக்கு எட்டியது. குரு வம்ச தலைவர் பீஷ்மரை எண்ணி திருதராஷ்டிரரும் பாண்டவ சகோதரர்களும் கண்ணீர் சிந்தினர். அவருக்குச் சிராத்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து யுதிஷ்டிரன் வருந்தினான். அப்போது யுதிஷ்டிரரிடம் வியாசர் வருந்தாதே ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும் துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள் என்று ஆறுதல் சொன்னார். பின்பு தக்க முறையில் அவருடைய தேகத்தை தகனம் செய்தார்கள்.

பீஷமருடைய சாம்பலை அவர்கள் கங்கையில் கரைக்க கங்கைக்கு கொண்டு சென்றனர். கங்காதேவி மானிட வடிவெடுத்து வந்து அந்த சாம்பலை ஏற்றுக் கொண்டாள். அப்போது அவளுடைய முகத்தில் துயரம் தென்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு சொர்க்கத்தில் உள்ள அஷ்ட வசுக்களில் ஒருவனை சந்தனுவுக்காக மகனாக பெற்றேன். இவன் தலை சிறந்த தரமான பயிற்சிகள் பல பெற்று நிறை ஞானத்தை பெற்றான். யாராலும் தோற்கடிக்க முடியாத வல்லமையை பெற்றான். மானிடர்கள் எவராலும் சாதிக்க முடியாத அரும்பெரும் செயல்கள் சாதிப்பான் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் இவனோ தன் வாழ்க்கையை எளிமையாக முடிவுக்குக் கொண்டு வந்து விட்டான் என்று வருத்தத்துடன் கூறினாள்.

கிருஷ்ணன் கங்கையிடம் தாயே உன்னுடைய தமையன் தேவவிரதன் செயற்கரிய செயலை செய்து பீஷ்மர் என்னும் பெயர் பெற்றார். அவருடைய மண்ணுலக வாழ்வு ஒப்பு உயர்வு அற்றது. தர்மத்திற்கு விளக்கமாக அவர் திகழ்ந்தார். தீயவர்களை அழிக்க பரம்பொருளின் கையில் கருவியாக அமைந்திருந்தார். அம்முறையில் அவருடைய தியாகம் உச்சநிலையை அடைந்தது. அதன் பிறகு தன்னுடைய சந்ததிகளில் பொருத்தமான யுதிஷ்டிரரிடம் தம்முடைய ஞான பொக்கிஷத்தை அவர் ஒப்படைத்துள்ளார். யாவற்றுக்கும் மேலாக தர்மமே வடிவெடுத்துள்ள யுதிஷ்டிரனை அவர் சிம்மாசனத்தில் அமர்த்தி வைத்துள்ளார். இவருக்கு நிகரான மூர்த்தி மண்ணுலகிலும் விண்ணுலகிலும் இல்லை என்று கிருஷ்ணர் கங்கா தேவியிடம் கூறினார். தன் வீரச்செல்வனை பற்றிய இந்த விமர்சனத்தை கேள்விப்பட்ட கங்காதேவியும் மகிழ்வடைந்தாள். தன் செல்வனை பெருமை பாராட்டி அங்கிருந்து கிளம்பினாள்.

அனுசாஸன பருவம் முற்றியது. அடுத்து அஸ்வமேதிக பருவம்.

மகாபாரதம் 12. சாந்தி பருவம் பகுதி -3

கிருஷ்ணர் பீஷ்ரிடம் தர்மத்திற்கு உரிய பாங்குகள் அனைத்தையும் தாங்கள் யுதிஷ்டிரனுக்கு எடுத்து புகட்ட வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டுகிறேன் என்றார். அதற்கு பீஷ்மர் தர்மத்தை எடுத்து புகட்டுவதற்கு உங்களைவிட மிக்கவர் யாரும் இல்லை. தாங்கள் முன்னிலையில் வைத்து இந்த விஷயத்தை நான் எப்படி எடுத்து விளக்குவது? மேலும் என் ஞாபக சக்தியும் மங்கி வருகிறது. உடலில் வேதனையும் அதிகரித்து வருகிறது. இந்த உடலை நான் ஒதுக்கித்தள்ள நான் ஆயத்தமாக இருக்கிறேன் என்றார். அதற்கு கிருஷ்ணர் உங்கள் ஞாபக சக்தியை நான் மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். உங்கள் உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட நிலையில் நீங்கள் எப்பொழுதும் இருந்து வருகின்றீர்கள். உங்கள் உடல் வலிமையான ஆற்றலை நெறி பிறழ்ந்து போன ஒரு பேரனுக்கு கொடுத்தீர்கள். உடல் வலிமை ஆற்றலை விட மிகவும் பெரியது அறிவு. தங்களிடம் உள்ள அறிவு தங்களோடு மறைந்து போக கூடாது. அப்படி போனால் நீங்கள் இவ்வுலகிற்கு வந்துள்ள நோக்கமும் நிறைவேறாமல் போகும். ஆகையால் அந்த அறிவை இந்த தகுதி வாய்ந்த மற்றொரு பேரன் யுதிஷ்டிரனுக்கு கொடுத்து உதவுங்கள். அதன் மூலம் இந்த அறிவு இந்த உலகிற்கு சொந்தமாகும். இந்த அறிவு ஞானத்தை கொடுப்பதின் வாயிலாக தாங்களின் பெயர் நிலவுலகில் எப்பொழுதும் நிலைத்திருக்கும். தாங்கள் வழங்குகின்ற ஞானம் நான்கு வேதங்களுக்கு நிகராகும் என்றார் கிருஷ்ணர்.

பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு தர்மத்தை கூற சம்மதம் தெரிவித்தார். யுதிஷ்டிரன் கேட்ட கேள்விகளும் அதற்கு பீஷ்மர் கொடுத்த பதில்களும் சாந்தி பருவம் என்று பெயர் பெறுகின்றது. இவை அனைத்தையும் கற்று உணர்வதற்கு மனிதனுக்கு ஒரு ஆயுள் போதாது அவற்றுள் சில மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது

  1. ஊழ்வினை மிகவும் வலியது முயற்சியால் அதை ஓரளவு மாற்றலாம்.
  2. பரம்பொருளுக்கு நிகரானது சத்தியம். சத்தியத்தை கடைபிடிப்பவன் வாழ்க்கையில் தோல்வி அடைய மாட்டான்.
  3. வாழ்வில் வெற்றியடைய விரும்புகின்றவன் தன்னடக்கம், பணிவு, தர்மம், ஆகியவற்றை கடைபிடித்தல் வேண்டும்.
  4. மானுடன் ஒருவன் மிகவும் கோழை மனம் படைத்தவனாகவோ கல் நெஞ்சம் படைத்தவனாகவோ இருக்க கூடாது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னுடைய பாங்குகளை அவன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
  5. தளர்வுற்று சோம்பலுடன் இருப்பது ஒழுக்கமாகது. அதிலிருந்து கேடுகள் பல உருவாகின்றன.
  6. சோம்பலுடன் இருப்பது துருப்பிடித்து போவதற்கே நிகராகும். உழைப்பின் வாயிலாக உலக வாழ்வு ஓங்குகிறது.
  7. இரக்கமும் கண்டிப்பும் ஒன்றையொன்று சார்ந்திருத்தல் வேண்டும்.
  8. ஒழுக்கமின்மைக்கு இடம் கொடுப்பது மனிதனை வீழ்ச்சியில் கொண்டு சேர்க்கும்.
  9. மனிதனுக்குள் உண்டாகும் வெறுப்பு விஷமாக மாறிவிடுகின்றது.
  10. அன்பு வல்லமை மிகவாய்க்கப் பெற்றது. அன்பு மனிதனை அக்கத்துறையில் எடுத்துச் செல்கின்றது. வீழ்ந்து கிடப்பவனை மீட்டெடுக்கும் வல்லமை வாய்ந்தது அன்பு

யுதிஷ்டிரனுக்கு புகட்டப்பட்ட இந்த கோட்பாடுகள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. இவைகளை மக்கள் கடைபிடிப்பதற்கு ஏற்ப மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். யுதிஷ்டிரனுக்கு பீஷ்மர் புகட்டிய தர்ம சாஸ்திரத்தில் பெரும்பகுதி மோட்ச தர்மத்தை பற்றியதாகும்.

சாந்தி பருவம் முற்றியது. அடுத்து அனுசாஸன பருவம்.

மகாபாரதம் 12. சாந்தி பருவம் பகுதி -2

யுதிஷ்டிரன் இப்போது மனத்தெளிவு அடைந்திருந்தான். உலக சம்பந்தமான இன்ப துன்பங்களை பொருட்படுத்தாத நடுநிலையான மனநிலைக்கு இப்பொது அவன் வந்துவிட்டான். பொது நல சேவையில் அமைதியுடன் ஈடுபட ஆயத்தமானான். சிரார்த்தம் செய்யும் ஒரு மாத காலம் முடிவற்றது. நதிக்கரையிலிருந்து நகரத்தை நோக்கி அரச குடும்பம் அமைதியாக நகர்ந்தது. திருதராஷ்டிரரின் ரதம் முதலில் சென்றது. அதனை தொடர்ந்து யுதிஷ்டிரன் ரதமும் மற்றவர்களெல்லாம் முறையாக பின் தொடர்ந்து வந்தனர்.

முடிசூட்டும் மண்டபத்திற்கு கிருஷ்ணன் யுதிஷ்டிரனை அழைத்து வந்து குருகுலத்தின் அரச சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தான். அந்த முடிசூட்டு விழா ஆடம்பரமில்லாமல் மிகவும் சுருக்கமாக முடிந்தது. அரச பதவியை ஏற்றுக்கொண்ட யுதிஷ்டிரன் பெரியப்பா திருதராஷ்டிரரின் பிரதிநிதியாக இருந்து பொதுமக்களுக்கு உள்ளன்போடு பணிவிடை செய்வதாக உறுதி கூறினான்.

பீஷ்மர் தன் தேகத்தை விட்டுவிட உத்ராயண புண்ணிய காலத்திற்காக காத்திருந்தார். அதிவிரைவில் அவரிடம் சென்று தங்கள் நிலைமையை அவருக்கு தெரிவிப்பது என்று பாண்டவர்கள் முடிவு செய்தனர். கிருஷ்ணனையும் அழைத்துக்கொண்டு பீஷ்மர் இருக்கும் இடத்திற்குச் சென்றனர். பீஷ்மர் போர்க்களத்தில் கூரிய அம்பு படுக்கையில் படுத்திருந்தார். முதலில் கிருஷ்ணன் பீஷ்மரிடம் தான் வந்திருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டான். இருவரிடமும் பரஸ்பரம் பாராட்டுதலும் விசாரிப்பதும் அமைதியாக நடந்தது. அதன்பிறகு கிருஷ்ணன் பீஷ்மரிடம் யுதிஷ்டிரன் தங்களைப் பார்க்க அஞ்சுகிறான். ஏனென்றால் மானுடர்ளை பெருவாரியாக அழித்த யுத்தத்திற்கு காரணமாக இருந்தவன் என்று எண்ணி தங்கள் முன்னிலையில் வர அஞ்சுகின்றான் என்றார். அதற்கு பீஷ்மர் இந்த யுத்தத்திற்கு யுதிஷ்டிரன் மட்டும் காரணம் இல்லை. இந்த பழி பாவத்துக்கு நானும் காரணமாக இருந்திருக்கின்றேன். என் முன்பு யுதிஷ்டிரன் வரலாம் என்றார் பீஷ்மர்.

பீஷ்மர் முன்னிலையில் வந்த யுதிஷ்டிரன் தனது வணக்கத்தை தெரிவித்துக்கொண்டான். சிம்மாசனத்தில் அரசனாக வீற்றிருக்க தான் விரும்பவில்லை என்றும் செய்த பாவத்தில் இருந்து என்னை விடுவித்து கொள்ள வனத்திற்கு சென்று தவம் புரிய விரும்புகிறேன் என்றான். அதற்கு பீஷ்மர் இந்த யுத்தத்தை தூக்கியவன் நீ அல்ல. அது உன் மீது சுமத்தப்பட்டது. கொடியவர்களை நீ அழித்துள்ளாய். நீ செய்தது பாவம் அல்ல. அது க்ஷத்திரிய தர்மம். ஆள்பலமும் படைபலமும் அதிகம் இருந்த கௌரவர்களுக்காக அதர்மத்தின் பக்கம் நின்று போர் புரிந்த நான் வெற்றியடையவில்லை. தீயவர்களுக்காக நான் போர் புரிந்தும் அந்தப் பாவம் என்னை வந்து சேரவில்லை. ஏனென்றால் என்னிடத்தில் சுயநலம் எதுவும் இல்லை. அது போல் சுயநலம் இல்லாமல் நீ சிம்மாசனத்தில் அமர்ந்து பொதுநல கடமையை நிறைவேற்றுவயாக. வனத்திற்குச் சென்று தவம் பிரிவதை விட மேலானது பொது நல சேவையில் தன்னை ஒப்படைப்பது ஆகும். அந்த நலனுக்காக அரசனாக நீ இருப்பாயாக. இது நான் உனக்கு இடும் ஆணையாகும் என்று பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் கூறினார். தங்களின் அணைக்கு அடிபணிந்து வணங்கி தங்கள் கட்டளையை ஏற்கின்றேன் என்று யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் கூறினான்.

மகாபாரதம் 12. சாந்தி பருவம் பகுதி -1

கங்கை கரை ஓரம் கூடியிருந்த கூட்டம் மிகப்பெரியதாக இருந்தது. கூட்டம் ஒரு மாதகாலம் தங்கியிருந்து ஈமக் கடமைகளை பக்தியுடன் சிரத்தையுடன் செய்தனர். சடங்குகள் செய்து கொண்டிருந்த பொழுது யுதிஷ்டிரனுக்கு மனவருத்தம் மிக அதிகமாக இருந்தது. இதற்கு காரணம் சிறிதும் இரக்கமின்றி மானிட வர்க்கம் அழிக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் காரணம் நாடு ஒன்றை கைப்பற்றுவதற்கும் வெறும் பகட்டுக்கும் பெருமைக்கும் என எண்ணி யுதிஷ்டிரன் மிக வருத்தப்பட்டான். மேலும் கர்ணனுடைய வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக இருந்தது. தன்னுடைய நண்பனாகிய துரியோதனனுக்கு பணி விடை செய்தல் பொருட்டு இறுதிவரை தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாது தன்னை மறைத்து வைத்தான். தன்னை இது ஒரு தேரோட்டி மகன் என்று எண்ணி ஏளானம் செய்துவந்த தன்னுடைய சொந்த சகோதரர்களோடு அவன் மிகப்பெருந் தன்மையோடு நடந்து கொண்டான். இத்தகைய பரிதாபகரமான சம்பவங்களைக் குறித்து மன வேதனை அடைந்த யுதிஷ்டிரன் நாடு ஆள்வதைக் காட்டிலும் காட்டிற்குச் சென்று கடும் தவம் புரிவது சிறந்தது என்று அவன் எண்ணி காட்டிற்கு செல்வதாக தனது சகோதரர்களிடம் கூறினான். அதற்கு சகோதரர்கள் அனைவரும் ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

நாரதரும் வியாசரும் இன்னும் சில ரிஷிகளும் யுதிஷ்டிரனுக்கு ஆசி கூற அங்கு வந்தார்கள். அவர்களுக்கு யுதிஷ்டிரன் பரிதாபத்துக்கு உரியவனாக காட்சி கொடுத்தான். யுதிஷ்டிரனின் வருத்தத்தை கண்ட அனைவரும் அவனுக்கு புத்திமதி கூறினார்கள். உலகிலேயே தீமைகள் பல அதிகரிக்கும் போது சண்டைகளை தவிர்க்க முடியாது என்று அவர்கள் எடுத்துக் காட்டினர். தர்மத்திற்காக சண்டை சச்சரவுகளை கண்டு அஞ்சுகின்றவன் இந்த உலகத்தில் வாழ தகுதியற்றவன் ஆகின்றான். வேந்தன் ஒருவன் தனக்கு உரியவன் அல்ல. அவன் மக்களுக்கு கடமைப்பட்டவன் ஆகின்றான். அரசன் தனக்கு உரியவன் எனக்கு என கருதுவது சுயநலத்தோடு கூடிய அகங்காரமாகும். அரசனுக்கு அத்தகைய மனநிலை அவனைக் கீழ்நிலைக்கு கொண்டு செல்லும். ஆகையால் சொந்த துயரங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சமுதாய பணியில் ஊக்கத்தோடு ஈடுபட வேண்டும் என்று அவர்கள் யுதிஷ்டிரனுக்கு ஆசி கூறினர். யுதிஷ்டிரன் மனத் தெளிவை அடைந்தான். தன்னுடைய துயரத்தை சிறிது சிறிதாக ஒதுக்கித் தள்ளினான்.

தனக்கு ஆட்சிமுறையில் அனுபவம் போதாது என்றும் தனக்கு ஆட்சிமுறை பற்றி விளக்க வேண்டும் என்று வியாசரிடம் யுதிஷ்டிரன் விண்ணப்பித்தார். அதற்கு வியாசர் சர்வகாலமும் தத்துவ ஆராய்ச்சியில் தாம் ஈடுபட்ட காரணத்தினால் இவ்வுலக வாழ்க்கை சம்பந்தமான விஷயங்களை அனைத்திலும் சரியாக அறிந்து கொண்டவன் இல்லை என்றும் இத்துறையில் உள்ள நுட்பங்கள் அனைத்தையும் முற்றிலும் முறையாக அறிந்த பீஷ்மர் ஒருவரே என்று அவர் கூறினார். பீஷ்மர் உலகத்தைப் பற்றிய தத்துவங்களுக்கு ஞான கடலாக விளங்கினார். அத்தகைய ஞானத்தை அவர் பலரிடமிருந்து பெற்று பாதுகாத்து வைத்திருக்கிறார். சந்தர்ப்பம் மீறி போவதற்கு முன்பே பீஷ்மரை அணுகி அந்த ஞான பொக்கிஷத்தை அவரிடம் பெற்றுக்கொள்வது சரியானதாக இருக்கும் என்று வியாசர் கூறினார். கிருஷ்ணன் இந்த கருத்தை முற்றிலும் ஆமோதித்தார். இன்னும் தனது உயிர் தாக்குப் பிடித்து வைத்திருக்கும் பீஷ்மரை விரைவில் அணுக வேண்டும் என்று கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு ஆலோசனை கூறினான்.

மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -4

விதுரர் மற்றும் சஞ்சயனுடைய மேற்பார்வையில் மடித்து போனவர்களுடைய சடலங்கள் அனைத்தும் ஊழித்தீயில் தகனம் செய்யப்பட்டன. யுதிஷ்டிரரும் அவருடைய சகோதரர்களும் திருதராஷ்டிரனும் ஏனைய பிரமுகர்கள் அனைவரும் கங்கை தீர்த்தத்துக்கு போய் சேர்ந்தார்கள். காந்தாரியும் குந்தியும் திரௌபதியும் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அனைவரும் கங்கை நதியில் நீராடி மடிந்து போனவர்களுக்கு இறுதிக்கடன் முறையாக நிறைவேற்றினார்கள்.

இப்பொழுது உயிரை கொடுப்பதற்கு நிகரான கடமை ஒன்று குந்திக்கு வந்தது. துயரத்தில் இருந்த குந்திதேவி கர்ணன் தனக்கு பிறந்த முதல் செல்வன் என்பதையும் யுதிஷ்டிரனுக்கு மூத்தவன் என்பதையும் கர்ணனின் வரலாறு முழுவதையும் அனைவரிடம் கூறினாள். இச்செய்தி துயரத்தில் மூழ்கியிருந்த அனைவருக்கிடையில் சலசலப்பை உண்டு பண்ணியது. பாண்டவ சகோதரர்கள் கர்ணனை பலவிதங்களில் அவமானப்படுத்தி இருந்தனர். ஆனால் அதை அலட்சியம் செய்து பாண்டவர்கள் பேசியதை பொருட்படுத்தவில்லை. தன்னுடைய உண்மை வரலாற்றை வாழ்க்கையின் பிற்பகுதியில் கர்ணன் அறிந்தான். உயிர் இருக்கும் வரையில் துரியோதனனுக்கு சேவை செய்யும் பொருட்டு அந்த ரகசியத்தை மறைத்து வைத்திருந்தான். இத்தனை காலம் கர்ணனை யார் என்று அறிந்து கொள்ளாது அவனை அலட்சியப்படுத்திய பாண்டவர்கள் ஐவரும் கர்ணனின் மேல் இருந்த வெறுப்பு மாறி அவனிடம் மரியாதை கொண்டனர். உயிரோடு இருந்த காலமெல்லாம் சூழ்நிலையால் கர்ணனை வேற்றான் என்று எண்ணிய பாண்டவர்கள் இப்போது கர்ணனுக்கு சிரத்தையுடன் ஈமசடங்கை செய்து முடித்தனர்.

ஸ்திரீ பருவம் முடிந்தது அடுத்தது சாந்தி பருவம்.

மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -3

பாண்டவ சகோதரர்கள் 13 வருடங்களுக்கு பிறகு தங்களிடமிருந்து தாய் குந்தியை சந்தித்தனர். அவள் பாதத்தில் வீழ்ந்து வணங்கினர். காந்தாரியின் மருமகள்களும் அருகில் தனது கணவர்களை இழந்து நின்றனர். சோகம் ததும்பிய சந்திப்பாக அது காட்சி கொடுத்தது. காந்தாரியை பார்த்து திரௌபதி தாயே உங்களுடைய பேரர்கள் அனைவரும் நடந்த போரில் அழிந்துவிட்டனர் என்று தேம்பி அழுதாள். பெரும் துயரத்தில் மூழ்கி இருந்தவர்கள் தங்களது பரிதாபகரமான நிலையை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்

கொடிய யுத்தத்தின் முடிவை அறிந்து கண்டு கொள்வதற்காக காந்தாரிக்கு ஞானக்கண்ணை கொடுத்தருளினார் வியாசர். சிறிது நேரம் இதை பார்த்து திகைத்து போன காந்தாரி யுத்தத்தை உள்ளபடி கிருஷ்ணரிடம் விவாதித்தாள். இறுதியில் பார்த்த நிகழ்ச்சிகள் யாவும் மனைவிமார்கள் தங்களுடைய கணவன்மார்களை இழந்து விட்டதை குறித்து அழுகையின் குரலாகவே இருந்தன. இதற்கெல்லாம் காரணம் கிருஷ்ணனுடைய பாராமுகம் என்று காந்தாரி கிருஷ்ணரிடம் குற்றம் சாட்டினாள். கிருஷ்ணன் நினைத்திருந்தால் இந்த பெரும்போரை ஆரம்பத்திலேயே தடுத்து இருக்கலாம் என்பது காந்தியின் கருத்து. எண்ணிக்கையில் அடங்காத சேனைகள் சேனைத் தலைவர்கள் அரசர்கள் அழிந்து போனதற்கு காரணமாக இருந்தவன் கிருஷ்ணன் என்று காந்தாரி எண்ணினாள்.

குரு வம்சம் முழுவதும் அழிந்து போனதற்கு நிகராக 36 வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ணரின் விருஷ்ணி வம்சம் தங்களுக்குள்ளேயே கலவரம் மூண்டு அழிந்துபோகும் என்று கிருஷ்ணன் மீது அவள் சாபத்தை சுமத்தினார். அதற்கு கிருஷ்ணன் தாயே நீ உள்ளன்போடு உனது கணவருக்கு நீ செய்திருந்த பணிவிடைகளின் விளைவாக ஓரளவு புண்ணியத்தை நீ பெற்றிருக்கிறாய். விருஷ்ணி வம்சத்தின் மீது சாபம் கொடுத்ததன் விளைவாக சேர்த்து வைத்த புண்ணியத்தை நீ இழந்து விட்டாய். விருஷ்ணிகள் யாராலும் வெல்லப்பட மாட்டார்கள் என்பது உண்மையே. ஆயினும் ஏதேனும் ஒரு விதத்தில் அவர்கள் இவ்வுலகை காலி பண்ணி ஆக வேண்டும். ஆகையால் உன்னுடைய சாபத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த யுத்தத்தில் நான் பாராமுகமாக இருந்து விட்டேன் என்று நீ குற்றம் சாட்டுவதில் உண்மை இல்லை. குரு வம்சத்தவர்களை காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்துக் கொண்டேன். உண்மையில் உங்கள் குடும்பத்தின் அழிவுக்கு காரணம் உங்களுடைய பாராமுகமும் உங்களுடைய கணவரின் பாராமுகம் மட்டுமே. உங்களுடைய புதல்வர்களின் கொடுரம் நிறைந்த அதர்மங்களே இந்த யுத்தத்திற்கு காரணம். இந்த அதர்மங்களுக்கு துணை நின்ற இனைத்து அரசர்களும் தடுக்க முடியாதபடி அழித்துவிட்டனர். அது குறித்து இனி ஆவது ஒன்றுமில்லை. ஆகையால் துயரத்திலிருந்து விடுபட்டு தெளிவடைந்து இருப்பாயாக என்று கிருஷ்ணன் கூறினார்.

மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -2

பாண்டவர்கள் தங்களது பெரியம்மாவாகிய காந்தாரியை சமரசம் செய்து கொள்ள கடமைப்பட்டிருந்தார்கள். அது மிக கடினமான காரியம் ஏனென்றால் இந்த யுத்தத்தில் அவனுடைய நூறு புதல்வர்களையும் பாண்டவர்களால் இழந்து விட்டாள். பிரத்யேகமாக பீமன் மீது அவள் அதிகமாக கோபம் கொண்டிருந்தாள். பீமன் ஒருவனே அனைவரையும் அழித்தவன். அதை முன்னிட்டு பீமன் மீது காந்தாரி சாபமிடுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருந்தது. காந்தாரியின் சாபத்தை தடுத்தல் பொருட்டு வியாசர் முதலில் காந்தாரியிடம் சென்று அவளை சமாதானப்படுத்தினார். நிகழ்ந்த யுத்ததிற்கு காரணம் துரியோதனனும் அவனது சகோதரர்களும் என்பதை அவள் ஒத்துக்கொண்டாள். யுத்தத்தை கிளம்பியவர்கள் அந்த யுத்தத்தில் மடிந்து போனது முறையே என்று வியாசர் ஆறுதல் கூறி அங்கிருந்து கிளம்பினார்.

பீமன் கௌரவ சகோதரர்களை கொல்ல கையாண்ட முறையை ஆமோதிக்க அவளால் இயலவில்லை. துச்சாதனனுடைய ரத்தத்தை குடித்தான். கதையுத்தத்தில் முறையற்ற பாங்கில் துரியோதனனின் தொடையில் அடித்து அவனை வீழ்த்தினான். எனவே பீமன் மீது கோபம் மிகவும் கொண்டிருந்தாள். பெரியம்மாவாகிய காந்தாரியின் காலில் விழுந்து பீமன் வணங்கினான். தாயே தாங்கள் என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தையும் குற்றமாகவே நான் ஏற்றுக் கொள்கின்றேன். நான் செய்துள்ள குற்றங்களுக்கு என்னை மன்னிப்பார்களாக. மற்றும் ஒரு விஷயத்தை நான் உங்களிடம் கூறுகின்றேன். 13 வருடங்களுக்கு முன்பு இச்செயலை சபை நடுவே நான் செய்திருந்தால் அப்போது தாங்கள் ஆமோதித்து இருப்பீர்கள். அப்போது என் தமையன் யுதிஷ்டிரன் செய்த தடையால் நான் இத்தனை காலம் காத்திருந்தேன். அன்று அவமானப்படுத்தப்பட்ட திரௌபதிக்கு ஆறுதல் தரும் பொருட்டு நான் செய்திருந்த சபதத்தின்படி துச்சாதனனின் ரத்தத்தை குடித்துவிட்டு யாருக்கும் தெரியாத வண்ணம் துப்பிவிட்டேன்.

திரௌபதிக்கு துரியோதனன் தன் தொடையை காட்டி அவமானப்படுத்தினான். அப்போழுதே துரியோதனனின் தொடையை துண்டிப்பேன் என்று நான் தீர்மானம் பண்ணினேன். அத்தீர்மானத்தையும் அன்றே துரியோதனனிடம் அனைவர் முன்னிலையிலும் தெரிவித்துவிட்டேன். கதையுத்த போராட்டத்தில் துரியோதனனை யாரும் நேர்மையான முறையில் தோற்கடிக்க இயலாது. கதையுத்தத்தில் அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. நான் கொண்டிருந்த தீர்மானத்தை நிறைவேற்றுதல் பொருட்டு முறை தவறி துரியோதனனின் தொடையில் அடித்தேன். அந்த குற்றத்திற்காக தாங்கள் என்னை மன்னித்தருள்வீர்களாக என்று பீமன் கூறினான். பீமனின் பேச்சை கேட்டதும் காந்தாரியின் கோபம் பெரிதும் அடங்கியது. பீமனுடைய அறிவு திறமையை கிருஷ்ணர் பாராட்டினார். பாண்டவ சகோதரர்கள் தங்கள் பெரியம்மா காந்தாரியின் காலில் விழுந்து வணங்கினார்கள்.

மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -1

விதுரரும் சஞ்சயனும் திருதராஷ்டிரனை சமாதானப்படுத்த பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். அஸ்தினாபுரம் துக்கத்தில் மூழ்கி இருந்தது. உற்றார் உறவினர் என அனைவரையும் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மடிந்து போனதை குறித்து பெண்கள் அழுது கொண்டிருந்தனர். போரில் எண்ணிக்கையில் அடங்காத வீரர்கள் அழிந்து போனதற்கு திருதராஷ்டிரன் தான் காரணம் என்று சஞ்சயன் எடுத்துரைத்தான் இதைக் குறித்து பெரியோர்கள் எச்சரிக்கை செய்தபொழுது திருதராஷ்டிரன் அதை ஏற்கவில்லை. பின்பு அதன் விளைவை அனுபவித்தே ஆகவேண்டும் என்று விதுரர் கூறினார். அப்போது வியாச பகவான் அங்கு பிரசன்னமாகி திருதராஷ்டிரருக்கு ஓரளவு ஆறுதலும் உறுதிப்பாடும் கூறினார். அம்மன்னன் போர்க்களத்திற்குச் சென்று தன்னுடைய புதல்வர்களின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என்றும் அழிந்து போனவர்களுக்கு ஈமக் கடன்களைச் செய்து முடிக்க வேண்டும் என்றும் வியாசர் புத்திமதி புகட்டினார். திருதராஷ்டிரன் தன் தம்பியின் பிள்ளைகளாகிய பாண்டவர்களை தன் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார் வியாசர்.

அஸ்தினாபுரத்தில் இருந்தவர்கள் கும்பல் கும்பலாக புறப்பட்டு போர்க்களம் நடந்த இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் நடந்து போன அதே பாதையில் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரௌபதி அழுது கொண்டு வனத்திற்குச் சென்றான். தமக்கு வந்த துயரம் நாளடைவில் அஸ்தினாபுரத்து மகளிருக்கு வந்தமையும் என்று கூறி இருந்தாள். திரௌபதி அப்பொழுது கூறியது இப்போது நடந்தது.

பதிமூன்று வருடத்திற்கு முன்பு வனவாசம் போன பாண்டவர்கள் இப்போது தங்களுக்கூறிய ராஜ்யத்தை மீட்டெடுத்து வெற்றி வீரர்களாக அஸ்தினாபுரத்திற்கு திரும்பி வந்தார்கள். அஸ்தினாபுரம் நுழைந்த உடனேயே பெரியப்பா திருதராஷ்டிரரோடு இணைந்து இருக்க பாண்டவர்கள் முயன்றனர். பாண்டவர்கள் மீது கோபத்திலும் சோகத்திலும் மூழ்கிக் கிடந்தான் திருதராஷ்டிரன்.

அரண்மனைக்கு வந்த பாண்டவர்களில் யுதிஷ்டிரனை கிருஷ்ணன் முதலில் திருதராஷ்டிரருக்கு அறிமுகப்படுத்தினார். அவனை அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டார். இரண்டாவது பீமனை அறிமுகப்படுத்துவதாக இருந்தது. பீமன் பெயரை கேட்டதும் திருதராஷ்டிரனுக்கு கோபம் அதிகமாக வரும் என்று கிருஷ்ணர் எதிர்பார்த்தார். அதை சமாளிக்க பீமனுக்கு பதிலாக அவனைப் போன்றே செய்யப்பட்ட பொம்மை ஒன்றை திருதராஷ்டிரன் முன் நிறுத்தி பீமன் என்று அறிமுகப்படுத்தினான். துரியோதனனையும் ஏனேய அனைத்து புதல்வர்களையும் கொன்றதை எண்ணிய திருதராஷ்டிரர் சினத்தை வளர்த்து அதை வெளிப்படுத்தும் வழியாக வெறுப்புடன் இறுகத் தழுவினான். அதன் விளைவாக அந்த பொம்மை நொறுங்கிப்போனது. திருதராஷ்டிரனும் மயங்கி தரையில் விழுந்தான். திருதராஷ்டிரனை சஞ்சயன் தேற்றுவித்தார். தெளிந்து எழுந்த மன்னன் தன் செயலை குறித்து வருந்தினார். பீமனை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய முறையை கிருஷ்ணன் எடுத்துரைத்தார். பீமன் மீது இருந்த வெறுப்பு தற்பொழுது திருதராஷ்டிரருக்கு விறுப்பாக மாறி அமைந்தது. அன்பு படைத்தவனாக திருந்தி தன் தம்பியின் பிள்ளைகள் ஐவரையும் தனக்கு உரியவர்கள் என அன்புடன் ஏற்றுக்கொண்டான்.