போகர்

பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி வேறு செய்திகள் இல்லை. அகத்தியரின் சீடனாக இருந்தார். திருமூலரின் சீடரான நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவராகவும் இருந்தார். இவர் பதினெட்டு சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு நவசித்தர்களே பிரதானமாகக் கருதப்பட்டனர். மேரு மலையும் இமய மலையும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு இடமாகவே விளங்கியது. இங்கே தான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர் காலாங்கி நாதர். போகர் வந்த சமயம் அவர் மகாசமாதியில் இருந்தார். போகர் சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும் வானவெளியில் பறப்பது நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது. காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால் அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள் என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார். இதனால் இமய மலையில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர் நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார். மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம் போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண் விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள் பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது. அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி தான் கற்ற தாதுவித்தை எல்லாம் அந்த தவத்தின் முன்னால் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள் போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள். ஒரு சித்தர் போகர் மீது பெரும் கனிவு கொண்டு அமிர்தமணிப்பழம் என்னும் தேவக்கனி மரம் ஒன்றை காட்டி அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள் முழுக்க பசிக்காது நரைக்காது முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை சாப்பிட்டு விட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறினார்கள்.

போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய பசி தாகம் மூப்பு என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார். தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் போகர் ஏழாயிரம் போகர் நிகண்டு 17000 சூத்திரம் 700 யோகம் போன்றவை. நோயின்றி வாழ வைக்கும் பல அரிய குறிப்புகளை எழுதினார். இதனால் இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர் அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார். அந்த மந்திரம் தம்பணா மந்திரம் எனப்படுகிறது அமிர்தத்துக்கு இணையான ஆதி ரசத்தையே இவர் கண்டறிந்தார். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர். தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குவதற்காக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.

போகர் எழுதியதை போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர் போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவே செய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள் குளிகைகள் பெற்றுச் சென்றனர். மொத்தத்தில் மனித சமூகத்தை இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார். அண்டை நாடான சீன தேசமும் நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும் புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால் மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே போ யாங் என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள் கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து சீனராகவே வாழ்ந்தார். போகர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார். அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.

  1. போகர் – 12,000
  2. சப்த காண்டம் – 7000
  3. போகர் நிகண்டு – 1700
  4. போகர் வைத்தியம் – 1000
  5. போகர் சரக்கு வைப்பு – 800
  6. போகர் ஜெனன சாகரம் – 550
  7. போகர் கற்பம் – 360
  8. போகர் உபதேசம் – 150
  9. போகர் இரண விகடம் – 100
  10. போகர் ஞானசாராம்சம் – 100
  11. போகர் கற்ப சூத்திரம் – 54
  12. போகர் வைத்திய சூத்திரம் – 77
  13. போகர் மூப்பு சூத்திரம் – 51
  14. போகர் ஞான சூத்திரம் – 37
  15. போகர் அட்டாங்க யோகம் – 24
  16. போகர் பூஜாவிதி – 20

இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் 1799 1800 ஆம் பாடலில் விமான தொழில் நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளத் தெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார் அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின் (steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் மாடலையும் குறிப்பிட்டிருக்கிறா­ர்.

போகர் தான் உருவாக்கிய மரக்கப்பலில் என்னனென்ன எப்படி இருக்கிறது என்று தன்னுடைய நூலில் விவரித்திருக்கிறார். அதன்படி ஒரு மரக்கப்பல் 2400 அடி நீளம் 300 அடி அகலம் 300 அடி உயரம் 7 மாடிகள் 64 அறைகள் அவற்றிற்கு கிழக்கும் மேற்குமாய் வாயில்கள் தெற்கும் வடக்குமாக ஜன்னல்கள் ஒவ்வொரு மாடியிலும் 128 வாயில்கள் இவற்றை சிந்தித்து பார்த்தால் ஒரு அரண்மனை போல் இருக்கும். இந்த கப்பல் நீராவியின் மூலம் இயங்கும் தொழில் நுட்பத்தில் செய்திருக்கிறார். சீனாவில் இருந்தபோது அமைத்த அந்த கப்பலில் சீன மக்களையும் ரிஷிகள் பலரையும் ஏற்றிக்கொண்டு உலகைச் சுற்றி ஏழு கடல்களையும் காண்பித்ததாக பல பாடல்களின் மூலமாக அறிந்து கொள்ளலாம். போகர் தனது மரக்கப்பலில் உலகைச் சுற்றிய அனுபவம் உலகுக்கும் பற்பல அறிவியல் நன்மைகளை வழங்கின. நிலம் ஒரு பங்கு நீர் மூன்று பங்கு என்று புவிச்சூழல் அமைப்பை முதலில் சொன்னவர் போகர். கடல் பயணத்தின் போது கடும் பாறையை பாயும் சுறாவைக் கண்டறிந்து விலகிச் செல்ல கப்பலுக்குள் கண்ணாடிக் கருவி கண்டுபிடித்து அமைத்திருந்தார் போகர்.

போகர் தான் உருவாக்கிய விமானத்தில் என்னனென்ன எப்படி இருக்கிறது என்று தன்னுடைய நூலில் விவரித்திருக்கிறார். இதற்கு அவர் பட்டம் என்று பெயரிட்டிருக்கிறார். 30 அடி நீளம் 30 அடி அகலம் என சதுர பரப்பில் பட்டம் செய்தார். ஒரு குடை ராட்டினம் போல் அதை அமைத்து பறக்க வைத்தார். காந்த கொலுசுகளும் நார்ப்பட்டு கயிறுகளையும் வைத்து உருவான தொழில்நுட்பத்தில் பட்டம் செய்து பறக்கவிட்டார். மக்களை ஏற்றிக் கொண்டு முதலில் முப்பது மைல் தூரம் பறந்து இருக்கிறார். போகர் இந்த பட்டத்தின் துணையுடன் சென்ற நாடுகள் அதன் வழியாக சித்தர்கள் அதிகமான பாடங்களை கற்றிருக்கிறார்கள். இதனைப் பற்றி சித்தர்கள் பாடல்கள் பல உள்ளன. பட்டம் தயாரிப்பதற்காகவே போகர் அஸ்வினி மகரிஷியை சந்தித்ததாக புலிப்பாணியார் ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார். அஸ்வினி மகரிஷி பஞ்சலோகத்தை உருக்கிச் செய்தவர். போகரின் பெருமைகளையும் திறமைகளையும் அஸ்வினி மகரிஷி ஏற்கனவே அறிந்திருந்ததால் போகரை வாழ்த்திப் போற்றியதோடு தான் வைத்திருந்த ஆகாயப் புரவியையும் அதிலிருந்த தொழில்நுட்பத்தையும் அதற்கேற்ற சித்த மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார். இந்த பட்டம் பறக்கும் போது ஒளி பொருந்திய சிவரதம் போல் இருக்குமாம். இந்த வானரதம் தயாரித்த போகர் அன்பர்களை நண்பர்களை ஏற்றிக்கொண்டு உலகம் சுற்றி வந்தார்.

தானான ரோமாபுரி சுற்றி வந்தேன்
தக்காண எண்ணாயிரம் காதமப்பா
வேனான சித்தர்களை ஏற்றிக்கொண்டு
வேகமுடன் தானடத்தி வந்தேனப்பா
கோடி பேர் சமாதிநிலை தன்னைக் கண்டேன்
கொற்றவனாம் ரோமாபுரி சமாதியோரம்.

இப்படித் தொடர்கிறது போகரின் வான்வெளிப் பயணம். போச்சா என்பவர் தென் அமெரிக்கா வந்து எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்ததாக கலாச்சார மாற்றம் ஏற்படுத்தியதாக எழுதி வைத்திருக்கிறார். சிலி நாட்டு வரலாற்றாசிரியர் மைகாஸ் என்பவர் தன் வரலாற்று ஆய்வின் மூலம் அந்த போச்சா என்பவர் தான் போகர் என்கிறார். வெப்பக் காற்றை நிரப்பி உயரே பறக்கும் பலூனை போகர் கண்டுபிடித்தார். அதற்கு அவர் வைத்த பெயர் கூண்டு வித்தை. பாராசூட்டை கண்டு போகர் பிடித்தார். அதற்கு அவர் வைத்த பெயர் குடை வித்தை.

போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர். பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார். யார் நீ அந்தப்பக்கம் போ அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொடங்கியது. அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார். போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர் முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம் முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார். போகர் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாசாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரரையும் போகர் உருவாக்கினார். பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது. போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்று உள்ளது.

சித்தர்கள்

  1. வல ஓரம் இருப்பவர் ஆந்திரா அணந்தப்பூரூக்கு அருகில் ஜீவசமாதி ஆன ஸ்ரீ ஏரிநாத சுவாமிகளின் சீடர் ஸ்ரீலஸ்ரீ பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள். இவர் வள்ள ளாரின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இவர் சென்னை திருவெற்றியூரில் ஜுவசமாதி பெற்றுள்ளார்.
  2. மையத்தில் இருப்பவர் நேபாள நாட்டு மன்னர். ஸ்ரீலஸ்ரீ ராஜாராம் சுவாமிகள். இவர் பிரம்ம நிலை உணரப்பெற்றவுடன் நொடியில் நாட்டை துறந்து உலக வாழ்வை விட்டு விலகியவர். இவர் நேபாளநாட்டிலேயே சமாதி ஆனவர்.
  3. இடஓரம் இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ சரவணானந்த பவர் இவர் பல ஆன்மயோகிகளுக்கு வழிகாட்டியாகவும் மன்னருக்கு நன்பராகவும் ஒருஆன்மஞான தூண்டு கோளாகவும் இருந்துள்ளார் இவர் இமயலைச்சரிவில் ஜீவசமாதி கொண்டுளார். இந்த இருவரும் ஸ்ரீலஸ்ரீ பாடகச்சேரி சுவாவாமிகளை சந்திக்க சென்னை வந்த போது கிடைக்கப்பட்ட படம் இது 18ம் நூற்றாண்டின் நிகழ்வு ஆகும்.

பட்டினத்தார் வரலாறு

பட்டினத்தார் வரலாற்றை பார்ப்பதற்கு முன்னர் இவரது முற்பிறப்பை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ராவணனின் தம்பி முறை கொண்டவன் குபேரன். ராவணன் தன் தம்பிகளோடு சிவனை நோக்கி தவம்புரிய சிவபெருமானும் ராவணனின் கடும் தவத்தை மெச்சி வேண்டும் வரம் தருவதாக கூறினார். அதன்படி சிவனின் பக்தனான ராவணன் ஈஸ்வரர் பட்டம் பெற்று ராவணேஸ்வரன் என அழைக்கப்பட்டதோடு எப்படிபட்டவரையும் கொல்லும் இரண்டு நாகாஸ்திரத்தையும் சிவதனுசு என்ற வில்லையும் பெற்றான். கும்பகர்ணன் பிரம்மதேவன் சூழ்ச்சியால் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வரம் பெற்றான். விபூஷ்ணனும் வரம் பெற்றான். கடைசியாக குபேரனுக்கு என்ன வரம் வேண்டுமென சிவன் கேட்டார். அதற்கு சிவனோடு இருக்கும் பாக்கியம் கிடைத்தால் அதுவே போதும் என குபேரன் கூறினான். சிவனும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உன்னிடத்தில் என் சிவலோகத்தில் உள்ள அனைத்து செல்வத்தையும் காக்கும் பொருப்பில் அமர்த்துகிறேன் என கூறி செல்வத்திற்கு அதிபதியாக குபேரனை நியமித்தார்.

குபேரன் ஒரு முறை பூமியை காண வலம் வந்தான். காவிரி வளம் கொழிக்கும் ஊரினை கண்டதும் குபேரனுக்கு நம் தேவலோகத்தில் இதுபோன்ற எழிலை காண முடியவில்லையே. குயில்களின் இசையும் மயில்களின் நடனமும் நதியின் இசையும் அழகிய மலர்களின் நறுமணமும் அழகிய வயலும் பொய்கையும் வாழை மா பலா என பழுத்த முக்கனிகள் அன்பான மக்கள் சிவனின் ஆலயம் இத்தனையும் அனுபவிக்க அப்பப்பா ஒரு பிறவி போதாதே என ஒருகணம் நினைத்தான் குபேரன். இதனை கண்ட சிவன் குபேரா நினைத்தது போலவே ஒரு பிறவி இப்பூமியில் பிறந்து உனது ஆசையை தீர்த்துகொண்டு வா என கூறிவிட்டார் சிவன். குபேரனும் பட்டினத்தாராக இப்பூமியில் அவதரித்தார். இதுவே பட்டினத்தாரின் முற்பிறப்பு வரலாறு.

காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர் ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். பிறந்த குழந்தைக்கு திருவெண்காட்டில் இருக்கும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிட்டார்கள். பெரும் செல்வந்தர்களான வணிகக் குடும்பம் என்பதால் கடல் கடந்து வியாபாரம் செய்து பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க செல்வந்தராக இருந்தார் சுவேதாரண்யன். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்கள் பட்டினத்தார் என்று அழைத்தார்கள். பட்டினத்தார் தனது 16 வது வயதில் சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார் பட்டினத்தார். அந்த ஊரில் இருந்த சிவசருமர் என்பவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன் குளக்கரையில் கண்டெடுத்த குழந்தை என்று கூறி பட்டினத்தாருக்கு குழந்தையை தத்து கொடுக்கும்படி கூறி மறைந்தார். சிவன் கூறியபடியே சிவசருமர் திருவெண்காடரிடம் குழந்தையை கொடுத்து விட்டார். மகிழ்ந்த பட்டினத்தார் இறைவன் அளித்த குழந்தையாக எண்ணி குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பட்டினத்தார் கடல் கடந்து நவரத்தினங்களை வாணிபம் செய்து வந்தார். மருதவாணருக்கு வாலிப வயது வந்ததும் தானும் வாணிபம் செய்ய கடல் கடந்து செல்கிறேன் என்று தந்தையிடம் அனுமதி பெற்று வாணிபம் செய்ய சென்றார்.

பட்டிணத்தார் குபேரன் அவதாரம் என்பதால் அவர் பிறக்கும் போதே மிகுந்த செல்வந்தர். அவரது வீட்டின் கதவும் வாயிற்காலும் வெள்ளியில் செய்யப்பட்டு இருக்கும். வாசலில் முத்துக்களால் ஆன பந்தல் அமைத்திருப்பார். அந்நாட்டு அரசர் நகர்வலம் வந்தபோது இதனை கண்டு திகைத்துபோய் பட்டினத்தாரை அழைத்து நாளை முதல் நீங்கள் வெள்ளிகதவை உபயோகிக்ககூடாது கழற்றிவிடவும் என கூறினார். மறுநாள் பட்டினத்தார் வெள்ளிகதவை கழற்றி தங்கத்தால் ஆன கதவை பொருத்தினார். மன்னர் நகர்வலம் வந்தபோது தங்ககதவை பார்த்து மேலும் அதிர்ந்துபோய் பட்டினத்தாரிடம் உங்களை வெள்ளிகதவை கழற்ற சொன்னேனே என கேட்டார். பட்டினத்தாரும் ஆம் மன்னா தங்கள் உத்தரவுப்படி வெள்ளி கதவை கழற்றி தங்ககதவை மாட்டியுள்ளேன் என கூறினார். இதனைக்கேட்ட மன்னர் பொறாமையால் முத்துப்பந்தலை எரிக்க காவலாளிகளுக்கு உத்தரவிட்டார். காவலாளிகள் முத்துப்பந்தலை எரித்துவிட்டனர். இதனைக்கண்ட பட்டினத்தார் அடுத்தநாள் வைரங்களால் ஆன பந்தலை போட்டுவைத்தார். இதனைக்கண்ட மன்னர் அதற்கு மேலும் பேச வழியின்றி பட்டினத்தாரிடம் மன்னிப்பு கேட்டார். அவ்வளவு பெரிய செல்வந்தராக வாழ்ந்திருந்தார் பட்டினத்தார்.

சில நாட்கள் கழித்து திரும்பிய மருதவாணர் வியாபாரம் செய்யும் இடத்தில் தந்தையிடம் பெட்டி பெட்டியாக கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார். மகன் சம்பாதித்து கொண்டு வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் தவிடு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எருவரட்டி இருந்தது. மகனை சம்பாதிக்க அனுப்பினால் தவிட்டு எருவைக்கொண்டு வந்திருக்கின்றானே என்று கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில் வைரங்களும் வைடூரியங்களும் இருப்பதை பார்த்து அதிர்ந்த பட்டினத்தார் மகனைக்காண வீட்டிற்கு வந்தார். மருதவாணர் தனது தாயிடம் ஒரு பெட்டியை கொடுத்து தந்தை வருவார் அவரிடம் இதனைக் கொடுத்துவிடுங்கள் இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார். மருதவாணரை தேடி வீட்டுக்கு வந்த பட்டினத்தார் நடந்தவைகள் அனைத்தையும் கேள்விப்பட்டு மருதவாணர் கொடுத்த பெட்டியை திறந்து பார்த்தார். அதில் ஒர் ஓலைசுவடி இருந்தது. அதில் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது. அதைப்படித்ததும் பட்டினத்தாருக்கு ஞானம் பிறந்தது. மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது என்ற உண்மையை உணர்ந்தார்.

பட்டினத்தார் இல்லற வாழ்க்கையை துறந்து இடுப்பில் துணியை மட்டும் கட்டிக்கொண்டு ஆண்டி கோலம் பூண்டார். இதனைகண்ட அவரது தாய் எனக்கு செய்ய வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது அக்கடமையை செய்யாமல் நீ செல்லவேண்டாம் என்று தடுத்தார். தாயாரிடம் தங்களுக்கான கடமை வரும் நேரம் நானே உங்களிடம் வந்து என் கடமையை செய்வேன் என்று உறுதியளித்துவிட்டு வீட்டைவிட்டு கிளம்பினார். பட்டினத்தாரின் செல்வத்தை காக்கும் பொருப்பில் இருந்தவர் சேந்தனார் என்பவர் பட்டினத்தாரிடம் வந்து உங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் யாரிடம் எப்படி கொடுக்க வேண்டும் சொல்லிவிட்டு செல்லுங்கள் என்றார். இந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்கு சொந்தம் இல்லை என்று எண்ணிவிட்டேன். எனக்கு சொந்தம் இல்லாத சொத்தை நான் எப்படி என்ன செய்யவேண்டும் என்று கூறமுடியும் என்று சொல்லி விட்டு ஊருக்கு வெளியே ஒரு கோவிலில் அமர்ந்துவிட்டார்.

அந்நாட்டின் மன்னர் பட்டினத்தாரின் செய்கையை கேள்விப்பட்டு அவரை தேடி சென்றார். மரத்தடியில் அமர்ந்தருந்த பட்டினத்தாரிடம் இந்நாட்டின் அரசன் நான் என்னுடைய சொத்துக்களால் வைத்து என்னால் கூட தங்களுடன் போட்டி போட முடியவில்லை. இவ்வளவு பெரிய செல்வந்தரான நீங்கள் சிறிய இடுப்பு வேட்டியுடன் அமர்ந்திருக்கின்றீர்கள் தங்களுக்கு இதனால் என்ன மகிழ்ச்சி கிடைத்துவிட்டது. தாங்கள் மீண்டும் பழையபடி வீட்டுற்கு செல்லுங்கள் என்று சொன்னார். இதனைகேட்ட பட்டினத்தார் அன்று என்னுடைய வீட்டிற்கு தாங்கள் வந்தபோது நான் எழுந்துவந்து உங்கள் முன் நின்றுகொண்டு பேசினேன். நீங்கள் பல்லாக்கில் அமர்ந்திருந்தீர்கள். ஆனால் இன்று நான் அமர்ந்துகொண்டு இருக்கிறேன். மன்னராகிய தாங்கள் என்முன் நின்றுகொண்டு இருக்கிறீர்கள் இதுவே நான் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சி என்றார். இதனை கேட்ட மன்னன் தலைகுனிந்து அங்கிருந்து சென்றுவிட்டர்.

பெரும் செல்வந்தராய் இருந்த பட்டினத்தார் மாளிகையை இழந்து ஆடை அணிகலன் இழந்து ஒருவேலை உணவிற்கு அடுத்தவரிடம் யாசகம் பெற்று பரதேசி போன்று இருப்பதை கண்ட பட்டினத்தாரின் சகோதரி தனக்கு அவமானமாக இருப்பதால் அப்பம் செய்து அதில் கொடிய விஷத்தை கலந்து பட்டினத்தார் உண்பதற்காக கொடுத்தார். தன் ஞானத்தால் நஞ்சு கலந்திருப்பதை அறிந்த பட்டினத்தார் அந்த அப்பத்தை தன் சகோதரி வீட்டின் கூறைமீது வீசி எறிந்து தன் அப்பன் தன்னை சுட்டால் வீட்டப்பன் ஓட்டை சுடும் என கூறினார். சகோதரியின் வீட்டின் கூறையில் தீ பிடித்து மளமளவென எரியத்துவங்கியது. பட்டினத்தாரின் ஞானத்தை உணர்ந்த சகோதரி இவரிடம் மன்னிப்பு கேட்டார். மனம் அறிந்து திருந்தினால் நெருப்பு அணையும் என்று பட்டினத்தார் சொல்ல நெருப்பு உடனே அணைந்துவிட்டது. ஊரில் இருக்கும் அனைவரும் பட்டினத்தாரின் ஞானத்தை அறிந்து கொண்டார்கள். பட்டினத்தார் தான் வாழ்ந்த ஊரில் இருந்து கிளம்பி பல சிவ தலங்களுக்கு சென்று கொண்டிருக்கும் போது திருவெண்காடு என்னும் ஊரில் இருக்கும் திருவெண்காடரை தரிசித்து பாடல்கள் பாடினார். இத்தலத்தில் பட்டினத்தாருக்கு திருவெண்காட்டு நாதரே குருநாதராக வந்து சிவதீட்சை கொடுத்தார். இத்திருவிழா இகோவிலில் இப்போதும் நடைபெறுகிறது. திருவெண்காடர் என்ற பெயரை இக்கோவிலில் பட்டினத்தார் பெற்றார்.

மேலப்பெரும்பள்ளம் என்னும் ஊரில் வலம்புரநாதர் இறைவனை தரிசிக்க பட்டினத்தார் வந்திருந்தார். அவ்வூரில் இருந்த மன்னன் தனது தோசம் நிவர்த்திக்காக தினமும் 1000 பேருக்கு அன்னதானம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி அன்னதானம் தினந்தோறும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இங்கு வந்த பட்டினத்தார் தனக்கு உணவு வேண்டும் என்று கேட்டார். அன்னதானம் ஆரம்பிக்க சிறிது நேரம் இருக்கிறது காத்திருங்கள் என்று அவர்கள் உணவு தர மறுத்தனர். உடனே பட்டினத்தார் மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்தார். கோவிலில் பல நாட்கள் அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்தது. அன்னதானமே இன்னும் ஆரம்பிக்கவில்லை அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பட்டினத்தார் அக்கோவிலில் வந்திருப்பதை அறிந்த மக்கள் அவரை வணங்கி ஆசிபெற்றனர். மன்னனின் தோசமும் விலகியது.

உஜ்ஜனியின் மாகாளம் என்ற இடத்திற்கு வந்த பட்டினத்தார் அங்கு இருக்கும் ஒரு கோவிலில் அமர்ந்து தியானத் செய்து கொண்டிருந்தார். அந்த நாட்டின் அரசனாக இருந்தவர் பத்ருஹரி சிவபக்தியில் சிறந்தவராக இருந்தார். அவருடைய அரண்மனையில் புகுந்த திருடர்கள் விலையுயர்ந்த ஆபரணங்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றனர். தங்கள் இருப்பிடம் செல்லும் வழியில் இருந்த கோயிலில் தாங்கள் கொள்ளையடித்து வந்த ஆபரணங்களில் ஒரு மாணிக்கமாலையை இறைவனுக்கு காணிக்கையாக வீசிவிட்டுச் சென்றனர். அந்த மாணிக்கமாலை இறைவன் கழுத்தில் விழுவதற்கு பதிலாக அங்கே தியானத்தில் அமர்ந்திருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. விடிந்ததும் கொள்ளை போன செய்தியை அறிந்த பத்ருஹரி அரசன் வீரர்களை நாலாபுறமும் அனுப்பி கொள்ளையர்களைத் தேடச் சொன்னார். அனைத்து இடங்களிலும் வீரர்கள் திருடர்களை தேடிச்சென்றனர்.

கோயிலில் தியானத்தில் இருந்த பட்டினத்தாரையும் அவர் கழுத்தில் இருந்த மாணிக்கமாலையையும் பார்த்து அவர்தான் திருடன் என்று நினைத்து கைது செய்த வீரர்கள் அவரை அழைத்துச் சென்று அரசனின் முன்னிலையில் நிறுத்தினார்கள். மாணிக்கமாலை அவரின் கழுத்தில் இருந்ததை பார்த்த பத்ருஹரியும் தீர விசாரிக்காமல் பட்டினத்தாரைக் கழுவில் ஏற்றும்படி உத்தரவிட்டார். வீரர்கள் பட்டினத்தாரைக் கழுமரத்தின் அருகே கொண்டு சென்றனர். அப்போது பட்டினத்தார் என் செயலாவது ஒன்றுமில்லை என்று தொடங்கும் பாடலைப் பாடியதும் கழுமரம் தானாக தீப்பற்றி எரிந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பத்ருஹரி ஓடி வந்து பட்டினத்தாரின் பாதங்களைப் பணிந்து தன்னை மன்னித்து தீட்சை கொடுத்து சீடராக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். பத்ருஹரியின் மனப் பக்குவத்தை உணர்ந்த பட்டினத்தார் அவருக்கு தீட்சை வழங்கினார். பத்ருஹரி அரசன் பட்டினத்தாரின் சீடராகி பத்திரகிரியார் என பெயர் பெற்றார்.

பட்டினத்தார் பத்ரகிரியாரிடம் திருவிடைமருதூர் கோவில் சென்று துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுமாறும் காலம் வரும் போது அங்கு வந்து சந்திப்பதாகவும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பத்ரகிரியார் குருவின் கட்டளைப்படி திருவிடைமருதூர் வந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்து தினமும் பிச்சை ஏற்று மானசீகமாக குருவுக்கு சமர்ப்பித்த பிறகே தான் உண்டு வந்தார். ஒருநாள் அவர் தன் குருவுக்கு சமர்ப்பித்துவிட்டு உணவை உண்ணும் வேளையில் பசியால் வாடிய ஒரு நாய் அவருக்கு முன்பாக வந்து நின்றது. நாயின் பசியைக் கண்ட பத்திரகிரியார் அதற்கு சிறிது உணவு கொடுத்தார். அன்று முதல் அந்த நாயும் அவருடனேயே தங்கிவிட்டது. சில வருடங்கள் கழித்து பட்டினத்தார் திருவிடைமருதூர் கோவிலுக்கு வந்தார். பட்டினத்தார் வருவதை பார்த்த பத்ரகிரியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். குரு தனக்கு இறைவனை அடையும் வழியை காண்பிக்க போகிறார். இறைவனிடம் செல்லப்போகின்றோம் என்று மகிழ்ச்சியில் பட்டினத்தாரை வணங்கி நின்றார்.

பத்ரகிரியாருக்கு ஆசி வழங்கிய பட்டினத்தார் மேற்கு வாசலில் அமர்ந்திருக்குமாறும் தான் கிழக்கு வாசலில் அமர்ந்திருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு கிழக்கு வாசலில் அமர்ந்துவிட்டார். சிலநாட்கள் சென்றபிறகு ஒருநாள் பட்டினத்தாரிடம் இறைவன் ஓர் ஏழை வடிவத்தில் வந்து பட்டினத்தாரிடம் பசிக்கிறது உணவு இருந்தால் கொடுங்கள் கேட்டார். அதற்கு பட்டினத்தார் மேற்கு கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான். அங்கே சென்று அவரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினார். இறைவனும் மேற்கு கோபுரத்துக்குச் சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் ஐயா எனக்குப் பசியாக இருக்கிறது கிழக்குக் கோபுரத்தில் இருந்த ஒருவரிடம் பசிக்கு உணவு கேட்டபோது அவர் மேற்கு கோபுரத்தில் ஒரு குடும்பஸ்தன் இருப்பதாகச் சொல்லி என்னை தங்களிடம் அனுப்பினார் உணவு ஏதேனும் இருந்தால் தாருங்கள் என்று கூறினார். பதறிப்போன பத்திரகிரியார் நாடு அரசபதவி சொத்துக்கள் என அனைத்தையும் துறந்த எனக்கு இந்தப் பிச்சை எடுக்கும் ஓடும் நாயும் என்னைக் குடும்பஸ்தனாக ஆக்கிவிட்டதே என்று வருந்தி பிச்சையோட்டை நாயின் மேல் விட்டெறிந்தார். அது நாயின் தலையில் பட்டு இறந்து போனது. பிச்சை ஓடும் உடைந்து போனது. பத்ரகிரியாருக்கு இருந்த சிறிய பற்றும் போனது. மேலும் சில வருடங்கள் பட்டினத்தாரும் பத்ரகிரியாரும் திருவிடைமருதூர் கோவிலிலேயே ஆளுக்கொரு வாசலில் அமர்ந்திருந்தார்கள்.

ஞானியாகிய பத்திரகிரியாரிடம் உணவு சாப்பிட்டதன் விளைவாக இறந்த நாய் தனது அடுத்த பிறவியில் காசி அரசருக்குப் பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குத் திருமணப் பருவம் வந்ததும் அரசன் வரன் தேட முயன்றார். அப்போது அந்த பெண்ணுக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் வந்தது. தனது தந்தையிடம் அப்பா நான் யாருக்கும் உரியவள் இல்லை. திருவிடைமருதூர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்திருக்கும் தவமுனிவருக்கே உரியவள் என்று கூறினாள். அரசரும் பெண்ணை விசாரிக்க பெண் தான் பிறப்பதற்கு முன்பு நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறினாள். மேலும் பெண் பிறப்பதற்கு முன் தன் நாட்டில் நடந்த சம்பவங்களை சில கூறினாள். ஆச்சரியமடைந்த அரசரும் பெண் கூறுவதில் உண்மை இருப்பதாக நம்பினார். தவமுனிவரையே திருமணம் செய்து கொள்வேன் என்ற பெண்ணின் மன உறுதியைக் கண்டு திருவிடைமருதூருக்கு அரசர் தனது பெண்ணை அழைத்துச் சென்றார்.

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் மேற்கு வாசலுக்கு வந்த இளவரசி பத்திரகிரியாரைக் கண்டு வணங்கினாள். தாங்கள் உணவு கொடுத்து பசி தீர்ந்த தங்களின் அடிநாய் வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினாள். நான் முதுமையில் இருக்கின்றேன். தங்களோ சிறு பிள்ளை. இறைவனை தேடி நாடு செல்வம் அரச சுகங்கள் அனைத்தையும் துறந்து சன்யாசியாகி இங்கு அமர்ந்திருக்கின்றேன். மீண்டும் உலக பந்த பாசத்திற்குள் செல்ல விருப்பம் இல்லை ஆகவே சென்றுவிடுங்கள் என்று கூறினார். இளவரசி பிடிவாதமாக இருந்தாள். பத்திரகிரியார் அவளை அழைத்துக்கொண்டு கிழக்குக் கோபுர வாசலில் இருக்கும் தம்மை ஆட்கொண்ட பட்டினத்தாரிடம் வந்தார். குருவே எனக்கு என்ன சோதனை இது. எனக்கு முக்திநிலை கிடையாதா என்று கேட்டார்.

பட்டினத்தார் எல்லாம் மகாலிங்கன் செயல் அவரை தரிசியுங்கள் என்று கூறினார். பத்திரகிரியாரும் மகாலிங்கேச என்று கோவிலின் மூலஸ்தானத்தில் இருக்கும் சிவனை நோக்கி செல்ல அவர் பின்னே இளவரசியும் சென்றாள் அப்போது லிங்கத்தில் தோன்றிய பேரொளி பத்திரகிரியாரையும் இளவரசியையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு மறைந்தது. பட்டினத்தார் எமக்கு முக்தி அளிக்காமல் தன்னுடைய சிஷ்யருக்கு முக்தி கொடுத்துவிட்டாய். தனக்கு எப்போது என்று முக்தி கிடைக்கும் என்று இறைவனை வேண்டினார். அப்போது அசிரிரியாய் இறைவன் குரல் கேட்டது. இறைவனை நம்புகிறவனை விட குருவை நம்பும் சீடன் மிகச்சிறந்தவர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டவே அவருக்கு முக்தி அளித்தோம் உமக்கு நுனிக்கரும்பு என்று இனிக்கிறதோ அன்று முக்தி கிடைக்கும் என்று இறைவன் கூறினார். மகிழ்ந்த பட்டினத்தார் அங்கிருந்து கிளம்பினார். பத்திரகிரியார் பாடிய பாடல்கள் மெய்ஞானப் புலம்பல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

பட்டினத்தார் தனது தாயாரின் இறுதி காலம் வந்துவிட்டதை அறிந்து தாயார் இருக்கும் ஊருக்கு வந்தார். தாயின் இறுதி சடங்கின்போது மரத்திலான விறகில் தனது தாயார் உடலை வைக்க வேண்டாம் வாழை மர மட்டையில் வையுங்கள் என்றார். அவர் கூறியபடியே உறவினர்கள் பச்சை வாழை மட்டையில் வைத்து சிதை அடுக்கினார்கள். அப்போது அவர் தாயை எண்ணி பாடல்கள் பாடினார். உடனே பச்சை வாழை மட்டை எரியத்தொடங்கியது. தனது தாயாருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி தனது கடமையை நிறைவேற்றினார் பட்டினத்தார்.

சேந்தனார் என்பவர் பட்டினத்தார் செல்வந்தராக இருக்கும் போது அவருக்கு கணக்கு பிள்ளையாக இருந்தவர். ஊருக்குள் பட்டினத்தார் வந்திருக்கும் தகவல் அறிந்த சேந்தனாரின் மனைவியும் மகனும் பட்டினத்தாரிடம் வந்து அழுது தொழுது முறையிட்டனர். ஜயா தங்களிடம் கணக்குப் பிள்ளையாக இருந்த சேந்தனாரின் மனைவி நான். இவன் எங்கள் பிள்ளை. தங்களின் செல்வத்தை ஏழை எளியவர்களுக்கு வாரிக் கொடுத்த தங்களின் கணக்குபிள்ளை சேந்தனாரை மன்னர் சிறையில் அடைத்து விட்டார். தாங்கள்தான் சிறையில் இருந்து அவரை விடுவித்து அருள வேண்டும் என வேண்டினார்கள். அனைத்தையும் கேட்ட பட்டினத்தார் திருவெண்காடு சுவாமி சந்நிதிக்கு அனைவரையும் அழைத்துச் சென்று இறைவனை துதித்து பாடினார்.

பட்டினத்தாரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட இறைவன் வினாயகரை அழைத்து அரசனின் சிறையில் இருந்து சேந்தனாரை விடுதலை செய் என்றார். வினாயகர் துதிக்கையை நீட்டி சிறைச்சாலையில் இருந்த சேந்தனாரை விடுதலை செய்து பட்டினத்தார் முன் விட்டார். நடந்தது எதையுமே அறியாமல் தூக்கத்தில் இருந்து விழித்ததைப் போல எழுந்த சேந்தனார் தன் எதிரில் பட்டினத்தார் இருப்பதைக் கண்டார். நடந்ததை உணர்ந்து கொண்டார். குருநாதா அரசர் வைத்த சிறையில் இருந்து விடுதலை அளித்ததைப் போல பிறவிப் பெருங்கடலில் இருந்தும் அடியேனை விடுவிக்க வேண்டும் என வேண்டினார். சேந்தனாரின் பக்குவ நிலையை அறிந்த பட்டினத்தார் சேந்தா குடும்பத்தோடு நீ தில்லைக்குப் போய் காட்டில் விறகு சேகரித்து வாழ்க்கை நடத்து. தினந்தோறும் ஒரு சிவனடியாருக்காவது உணவு அளித்து வா நீ நினைத்தது நடக்கும் என்று சொல்லி வழிகாட்டினார். குருநாதரையும் திருவெண்காட்டு ஈசனையும் வணங்கிய சேந்தனார் பட்டினத்தார் சொற்படி தில்லையை அடைந்து அதன்படியே வாழ்க்கை நடத்தி இறைவனடி சேர்ந்தார்.

சீடர் பத்திரகிரியார் முக்தி அடைந்த பிறகு பட்டினத்தார் சிதம்பரம் கனகசபையையில் நடராஜப் பெருமானின் நடனத்தை தரிசித்தார். அங்கிருந்து வெளிவந்ததும் பசி உண்டாயிற்று. பட்டினத்தாரின் பசியைப் போக்க அன்னை சிவகாமசுந்தரி பெண் வடிவில் வந்து உச்சிக்காலப் பிரசாதத்தை அவரிடம் தந்தாள். பட்டினத்தார் உண்டு பசியாறினார். பட்டினத்தார் பசியாறியதும் அம்பிகை அங்கிருந்து மறைந்தாள். அதன் பின்னரே அவருக்கு உண்மை தெரியவர உலகாளும் அன்னையே எதிரில் வந்து உணவு தந்தும் உணராமல் ஏமாந்து போனேனே என புலம்பி பாடல்கள் பாடினார்.

பட்டினத்தார் காஞ்சியை அடைந்து சுவாமி தரிசனம் செய்து கச்சித் திருவந்தாதி, திருவேகம்பமாலை, கச்சித் திருவகவல் முதலிய பாடல்களைப் பாடி சில நாட்கள் தங்கினார். ஒரு நாள் பசி தாங்காமல் இறைவனை நினைத்து பாடல்கள் பாட அம்பிகை காமாட்சி சுமங்கலி வடிவத்தில் வந்து அவருக்கு உணவளித்தாள்.

காளத்தி நாதனை தரிசிக்க காளாத்தி நோக்கி நடந்தார். இறைவனை தவிர வேறு எந்த நினைவும் இல்லாமல் பகல் இரவு பாராமல் எப்போது உன்னைக் காணவல்லேன் காளத்தி ஈஸ்சுரனே என்றபடி காட்டிற்குள் நடந்து கொண்டிருந்த பட்டினத்தாருக்கு காட்டில் இருந்த கொடூரமான ஜீவன்கள் கூட உதவி செய்தன. காட்டு யானைகள் முன்னால் நடந்து போய் முள் சிறுகட்டைகள் முதலியவற்றை நீக்கி வழியை உண்டாக்கின. புலிகள் தங்கள் வால்களால் தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்தன. வாயில் புல் கொண்ட மான்கள் அணிவகுத்து நின்று வழி காட்டின. மயில்கள் தோகைகளாலும் பறவைகள் சிறகுகளாலும் விசிறியும் நிழல் தந்தும் உதவின. குரங்கு முதலான விலங்கினங்கள் உணவுக்கு காய் கனி கிழங்குகளைக் கொண்டு வந்து தந்தன. பட்டினத்தாரின் உள்ளம் நெகிழ்ந்தது. என்ன செயல் என்ன செயல் அனைத்து பெருமையும் காளத்தி ஈசனுக்கே உரியது என்று பாடல்கள் பாடி காளாத்திஸ்வரரை தரிசித்தார்.

கரும்பை காணும் போதேல்லாம் நுனிக்கரும்பு இனிக்கிறதா என்று சாப்பிட்டு பார்த்து ஊர் ஊராக சிவனை தரிசித்துக்கொண்டு வந்தார். சென்னையில் இருக்கும் திருவொற்றியூர் வந்த பொழுது அவருக்கு நுனிக்கரும்பு இனித்தது. முக்தி அடைய நேரம் வந்துவிட்டதை அறிந்து மகிழ்ந்த பட்டினத்தார் அங்கிருக்கும் கடற்கரைக்கு சென்றார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களுக்கு தனது சித்துக்கள் மூலம் இனிப்புகள் கொடுத்து மகிழ்வித்தார்.
தன் அமர்ந்து கொள்கிறேன் என்னை ஒரு கூடை கொண்டு முடிவிடுங்கள் நான் வேறு இடத்தில் இருந்து வருகிறேன் இப்படியாக நாம் விளையாடலாம் என்றார். மகிழ்ந்த சிறுவர்கள் பட்டினத்தாரை ஒரு கூடையை வைத்து மூடிவிட்டு கூடையை பார்த்துக்கொண்டே இருந்தார்கள். பட்டினத்தார் வேறு இடத்தில் இருந்து வந்தார். குழந்தைகள் வியப்போடு ஓடி வந்தார்கள். மறுபடியும் தன்னை மூடிவிட சொன்னார். வேறு இடத்தில் இருந்து வந்தார். பல தடவைகள் இவ்வாறு நடந்தது. சிறுவர்களுக்கு உற்சாகம் உண்டானது. ஒரு முறை மூடிய பொழுது வெளியில் எங்கும் இருந்து பட்டினத்தார் வராததால் கூடையை திறந்து பார்த்தார்கள் சிறுவர்கள். அதனுள் பட்டினத்தார் இல்லை. சிவலிங்கமாக காட்சியளித்தார்.

பட்டினத்தார் பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவை

  1. கோயில் நான்மணிமாலை
  2. திருக்கழுமல மும்மணிக்கோவை
  3. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
  4. திருஏகம்பமுடையார் திருவந்தாதி
  5. திருவொற்றியூர் ஒருபா ஒருபது

மூன்று கால் சித்தர்

உலகிலேயே மூன்று கால்களை உடைய முனிவர் என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்த பிருங்கிரிஷி சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபடக்கூடாது என்கிற கொள்கை கொண்டவர். இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள். நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அம்மையப்பனாய் நின்றனர்.

அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து அம்மையப்பரின் தொப்புள் வழியே துளையிட்டு சிவனை மட்டும் வலம் வந்தார். இதைகண்ட சினம் உற்ற அம்மை பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். உடனே சிவ பெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளினார் .

அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திருப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்பதை புரிந்து கொள் என்றார். முனிவரும் அப்பனே என்னை அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்றும் பராசக்தியிடம் மன்னிப்பும் கோரினார். அறியாமற்செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் கூறினார்.

வால்மீகி முனிவர்

மகரிஷி கஷ்யப அதிதி தம்பதியருக்கு வருண் பிரசேதாஸ் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். வருண் பிரசேதாவிர்க்கு ரத்னாகர் பத்தாவது குழந்தையாக பிறந்தார். ரத்னாகர் பிறந்தவுடன் அவருடைய தந்தை மரணமடைந்தார். பெற்றோர்களை இழந்த ரத்னாகர் காட்டிற்கு சென்றார். காட்டிலுள்ளவர்கள் ரத்னாகரை வளர்த்தார்கள். ரத்னாகர் வயிற்றுப் பிழைப்பிற்காக திருட ஆரம்பித்தார்.

ஒரு தடவை கொள்ளையடிக்கச் சென்றபோது அவனிடம் நாரதர் மாட்டிக்கொண்டார். கையில் ஒரு தம்புரா வைத்துக்கொண்டு நாராயண நாராயண என்று பாடிக்கொண்டும் அந்த முனிவர் வந்து கொண்டிருந்தார். இவன் அவர் எதிரில் போய் எமன் போல் நின்றதும் இவனைப் பார்த்து யாரப்பா நீ. உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு அவன் நான் யாராய் இருந்தால் உமக்கு என்ன? உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வையும் என்றான். அப்பா நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குத் பதில் சொன்ன பிறகு என்னிடம் இருப்பதை எல்லாம் நீ கொண்டு போகலாம். நீ யாருக்காக இந்த கொடுமையான கொள்ளையும் கொலையும் செய்கிறாய் என்று கேட்டார். வேறு யாருக்காக என் மனைவி மக்கள் இவர்களுக்காகத்தான். அவர்கள் தானே என் எல்லா சுக துக்கங்களிலும் என்னுடன் இருக்கிறார்கள். எனக்காக அவர்கள் உயிரையும் கொடுப்பார்கள். அப்படியா உன் பாவங்களில் அவர்கள் பங்கேற்பார்களா? சொல் என கேட்டார். என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். அவர்கள் வாய் திறந்து எனக்காக உயிரைக் கொடுப்பதாய் சொன்னதில்லை தான். ஆனால் என் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பு கொஞ்சம் நஞ்சம் இல்லை. உன் பாவங்களில் அவர்கள் பங்கு கொள்வார்களா? அதனை முதலில் கேட்டுப்பார். அதிலென்ன சந்தேகம். நான் கொள்ளையடித்துக் கொண்டு வருவதைப் பங்கு கொள்ளும் அவர்கள் என் பாவத்திலும் பங்கு கொள்வார்கள். அதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டாயா? இல்லையே அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்கிறேன் நான். நீ அதை இல்லையென்று நிரூபிக்க முடியுமா? ஆகா முனிவரே தப்பித்துப் போக முயல்கிறீரா? இதெல்லாம் என்னிடம் முடியாது. இல்லையப்பா நீ வேண்டுமானால் என்னைக் கட்டிப் போட்டு விட்டுப் போ. போய் அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும். ரத்னாகர் யோசித்துப் பார்த்தான். அந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து அந்த முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான்.

திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் அவன். ஓடி வந்தவன் முனிவரின் காலில் விழுந்து சுவாமி நீங்கள் சொன்னது சரிதான் என்று கண்கலங்கிய படியே முனிவரின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான். என்னப்பா நடந்தது. சுவாமி நீங்கள் சொன்ன படி நான் போய் என் மனைவியர், குழந்தைகள், நண்பர்கள், உற்றார் உறவினர் எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் எங்களை காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிவிட்டார்கள். அவர்கள் சொன்னதில் தவறில்லையே. மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல் வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. ஆமாம் சுவாமி அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும் நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே சுவாமி என்ன நாமம் அது? ராம நாமம் என் வாயில் நுழையவில்லையே சுவாமி. இதோ இங்கிருக்கும் மரத்தின் பெயர் என்ன? இதுவா சுவாமி. இது மரா மரம். நீ இந்த மரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டிரு. அது போதும். ஆகட்டும் சுவாமி. நீங்கள் யார் என்று இன்னும் சொல்லவில்லையே என் பெயர் நாரதன். திரிலோக சஞ்சாரி என்றும் சொல்வார்கள். நல்லது சுவாமி. நீங்கள் சொன்ன படியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று வணங்கி நின்றான்.

நாரதரும் தன் வழியே சென்றார். அவர் போனபின் அந்த கொள்ளையர் தலைவன் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து மரா மரா மரா என்று ஜபிக்க ஆரம்பித்தான். அது ராம ராம ராம என்று ஒலித்தது. நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. அந்த ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான். அவர் தவம் முடிந்த பின் புற்றிலிருந்து வெளியே வந்தார். புற்றிலிருந்து வந்ததால் வால்மீகி என்று அழைக்கப் பட்டார். வால்மீகி முனிவரின் தன் ஆசிரமத்தை தமசா நதிக்கரையில் அமைத்தார். ஒருநாள் நாரதர் அங்கு வந்தார். அவருக்கு உபசாரங்கள் செய்து வரவேற்ற பிறகு வால்மீகி முனிவர் அவரை நோக்கி நாரதரே இந்த யுகத்தில் முப்பத்திரண்டு கல்யாண குணங்களும் பொருந்திய நேர்மையான் சத்தியம் தவறாத வீர தீர பராக்கிரமசாலியான புருஷன் யாராவது இருக்கிறானா? என்று கேட்டார். அதற்கு நாரதர் ராமபிரானுடைய வரலாற்றை முழுவதுமாக வால்மீகிக்கு எடுத்துரைத்தார். நாரதர் இறுதியில் விடைபெற்று சென்றபின் வால்மீகி தனது சீடர் பரத்வாஜருடன் தமசா நதிக்கரைக்குச் சென்றார்.

நதிக்கரையில் உல்லாசமாக அமர்ந்திருந்த ஒரு ஜோடி நாரைகளைப் பார்த்தார். அவற்றின் அந்தரங்க அன்புப் பிணைப்பினைக் கண்டு ரசித்தவாறே அவர் நீராடுகையில் எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு ஆண் நாரையின் மீது பாய்ந்து அதன் உயிரைக் குடித்தது. அதைக் கண்ட பெண் நாரை துக்கம் தாளாமல் ஓலமிட்டது. இதைக் கண்டு மனம் பதறிய வால்மீகி அம்பை எய்த வேடனை மிகுந்த சீற்றத்துடன் நோக்கி இதயமற்ற அரக்கனே என்ன காரியம் செய்து விட்டாய் நீ? வாழ்நாள் முழுதும் நீ அமைதியின்றி தவிப்பாய் என்று உணர்ச்சி வசப்பட அவருடைய வாயிலிருந்து வந்த சொற்கள் அவரையறியாமலே ஒரு கவிதை வடிவில் வெளிவந்தன. ஆசிரமத்திற்குத் திரும்பி வந்த பிறகும் அவருடைய படபடப்பு அடங்கவில்லை. சற்று நேரத்தில் பிரம்மா வால்மீகியைக் காணவந்தார். பிரம்மாவை விழுந்து வணங்கி வால்மீகி நின்ற போது பிரம்மா வால்மீகி என்னுடைய அருளினால் உனக்கு கவிதை பாடும் திறமை உண்டாகி விட்டது. ராமபிரானது வரலாற்றை இதற்கு முன் நீ கேட்டு இருக்கிறாய். அதை நீ காவியமாக இயற்று. இந்த உலகம் இருக்கும் வரை அவை காவியமாக நிலைத்திருக்கும் என்று வாழ்த்தி விட்டுச் சென்றார். பிரம்மாவின் அருளினால் வால்மீகி ராமாயணத்தை இயற்றினார். த்ரேதாயுக அவதாரமான ஸ்ரீராமபிரானின் வரலாற்றைச் எழுதினார். வால்மீகி 24000 ஸ்லோகங்களைக் கொண்ட ராமாயணத்தைப் படைத்தார்.

யோகவாசிஷ்டம்
அத்புத ராமாயணம்
கங்காஷ்டகம்
ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டன.

வால்மீகி இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவர் இயற்றிய இராமாயணம் அதன் பாத்திரங்கள் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள் விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள் அரசுகள் போன்றவற்றை ஆய்வு நோக்கில் பார்க்கும் போது வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது. இது கி.மு 4ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டுள்ளது. நான்கு பாதங்கள் கொண்ட செய்யுளில் வால்மீகியின் காவியத்தில் ஒரு பாதத்தைக் கூட மாற்ற முடியாது. இடைச் செருகல் செய்ய முடியாது என்பது மகாகவி பாரதியின் வாக்கு.

தன்வந்திரி

தன்வந்திரி பிறந்தது ஐப்பசி புனர்பூசம் நட்சத்திரத்தில். 800 வருடம் 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். தன்வந்தரி ஆயூர்வேத மருந்துகளின் அதிபதி. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி. அவர் தன் கையில் அமிர்த கலசத்தை எடுத்து வந்தார். வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார். அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர் சூடினார். தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிர்தத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார். நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே உனக்கும் தேவர்களில் ஒருவர் என்ற அந்தஸ்த்து கிடைக்கும். நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய். அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியாக ஏற்றுக் கொள்ளும் எனக் கூறியப் பின் மறைந்து போனார்.

வெகு காலத்துக்குப் பின் தன்வந்தரி காசியை ஆண்டுவந்த ஒரு மன்னனின் வம்சத்தில் அவர்களின் மகனாகப் பிறந்தார். அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். தன்வந்தரி இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். முதல் சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர். இவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு முதலியவையாம். அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். ஒருமுறை தன்வந்தரியும் அவருடைய சீடர்களும் கைலாசத்துக்குச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் அவர்களை தக்சன் என்ற நாகம் வழி மறைத்து தடுக்க முயன்று அவர்கள் மீது விஷத்தைப் பொழிந்தது. ஆகவே கோபமடைந்த அவர் சீடர்கள் அதன் தலையில் இருந்த மணிகளை பிடுங்கி தூர எறிந்தனர். அதைக் கேட்ட வாசுகி உடனேயே தன்னுடைய படையுடன் வந்து அவர்களுடன் யுத்தம் செய்தது. வாசுகி என்னும் பாம்பு விஷக் காற்றை ஊதிக்கொண்டே வந்து தன்வந்தரியின் அனைத்து சீடர்களையும் விஷக்காற்றால் மூர்ச்சி அடையச் செய்ய அந்த இடத்திலேயே தன்வந்தரி ஆயுர்வேத மருந்து தயாரித்து அதைக் கொடுத்து மூர்ச்சை அடைந்தவர்களை எழச் செய்தார். அதைக் கேட்ட வாசுகியுடைய சகோதரியான மானச தேவி வந்து அந்த சீடர்களை மீண்டும் மயக்கம் அடைய வைக்க அப்போதும் தன்வந்தரி தமது மருத்துவ மகிமையினால் அவர்களை உயிர் பிழைக்க வைத்தார். ஆகவே பாம்புகளுக்கு புரிந்தது தன்வந்தரி கைலாயம் செல்வதை இனி தடுக்க முடியாது என்பது மானச தேவி அவரைப் பற்றிய விவரத்தைக் கேட்டு அறிந்ததும் அவர் விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர். அவர் தேவர்களில் ஒருவர் என்பதை புரிந்து கொண்டு அவரை கைலாயத்துக்கு தாமே அழைத்துச் சென்றனர். அதன் பின் தேவலோகத்தில் அனைவரும் தன்வந்தரியை தம்முடைய ஆஸ்தான மருத்துவராக ஏற்றுக் கொள்ள தன்வந்தரியின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி அவரே ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபரானார். விஷ்ணு தந்த வரமும் பலித்தது. வைத்தீஸ்வரன் கோவிலில் சமாதியடைந்தார்.

Related image

பதஞ்சலி முனிவர்

பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும் ஒருவர். தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர்

நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம். என்கிறார்.

இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றி வரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும் மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார். இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்து வந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தை உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர். வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது. குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்றார் ஒரு சீடர். உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம் துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம் என்றார். குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா? என்று கேட்டார் இன்னொரு சீடர். பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் என்றார் பதஞ்சலி முனிவர்.

பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே என்று கண்ணீர் வடித்தார். குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனை நாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும் என்றார் பதஞ்சலி. படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்.

பதஞ்சலி இன்று உலகெங்கும் பிரபலமாகக் பின்பற்றப் படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் பதஞ்சலி ஆவார். இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவர் எழுதிய மூன்று நூல்கள்: யோகத்தினை விளக்கும் யோக சாஸ்திரம், மொழி இலக்கணமான மஹாபாஷ்யம், ஆயுர் வேத்மாகிய சரகம் என்ற ஆத்திரேய சம்ஹிதை. மனம், வாக்கு, உடலு(மெய்)க்கான மூன்று நூல்களைச் செய்திருக்கின்றார். இராமேஸ்வரம் 12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்று. இந்த ஆலயத்திற்குள் தான் இருக்கிறது பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதி மூலவரை தரிசித்துவிட்டு அவரின் சன்னிதானத்தை கடந்து பர்வதவர்தினி அம்மனை தரிசித்து விட்டு சுற்றி வரும்போது அடுத்த பிரகாரத்தில் வலது பக்கத்தில் ஒரு சந்நிதி இருக்கும். அதற்குள் ருத்ராட்ச மாலைகள் நிறைந்திருக்கும் மிகவும் அமைதியான சூழல் இருக்கும். ருத்ராட்சத்தால் ஒரு சமாதி முழுதும் நிறைந்திருக்கும். அதுதான் பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி.

திருமூலர்

திருக்கயிலாயத்தில் திருமூலருடைய பெயர் சுத்த சதாசிவர். சுந்தரநாதர் என்ற பெயரும் இவருக்கு உள்ளது. திருமால் பிரம்மா இந்திரன் முதலிய தேவர்க்கு நெறி அருளும் அசையா சக்தியாக இருக்கும் இறைவனேயே குருவாகப் பெற்றவர் இவர். இறைவனின் திருவருளால் அவரின் திருவடியில் இருந்த எட்டு யோகிகளுள் ஒருவராக இருந்தார். அவர்களது பெயர்கள் 1. சனகர் 2. சனந்தனர் 3. சனாதனர் 4. சனற்குமாரர் 5. சிவயோக மாமுனிவர் 6. பதஞ்சலி 7. வியாக்கிரமர் 8. திருமூலர் பாடல் 67 இல் இதற்கான குறிப்பு உள்ளது. இவர் அட்டமா சித்திகளை கைவரப்பெற்றவர் ஆவார். இவருக்கு 7 சீடர்கள் உள்ளார்கள். அவர்களது பெயர்கள் 1. மாலாங்கன் 2. இந்திரன் 3. சோமன் 4. பிரமன் 5. உருத்திரன் 6. காலாங்கி நாதன் 7. கஞ்ச மலையன் பாடல் 69 இல் குறிப்பு உள்ளது. எண்ணில் அடங்காத கோடிக்கணக்கான ஆண்டுகள் உடலுடன் இறைவனின் திருவடிக்குக் கீழே இரவு பகல் இல்லாத இடத்தில் (சூட்சும வெளி) அமர்ந்திருக்கிறார். (பாடல் 80 இல் காண்க) தன்னுடைய அமிர்தபாலால் 9 கோடி யுகங்கள் இறைவனுக்கு அர்ச்சனை செய்திருக்கிறார். (பாடல் 82 இல் காண்க) 70 கோடி 100 ஆயிரம் ஆகமங்கள் மொத்தம் உள்ளது. (பாடல் 60 இல் காண்க) இந்த ஆகமங்களை 9 பகுதியாக பிரிந்து இறைவன் இவருக்கு உபதேசித்தார். (பாடல் 62 63 இல் காண்க) அப்போது இறைவனின் திருநடனத்தை கண்டு அந்த பேரின்பத்திலேயே 1 கோடி யுகங்கள் பேரின்பத்தில் திளைத்திருக்கிறார். (பாடல் 74 இல் காண்க)

திருமூலர் தான் 1 கோடி யுகங்கள் பேரின்பத்தில் எப்படி இருந்தேன் என்று பின்வருமாறு விளக்குகின்றார். இறைவனின் திருவடிகளை தொழுத போது இறைவனின் மீது காட்டிய பக்தியினால் இறைவனே தன்னோடு இருந்ததினால் 1 கோடி ஆண்டுகள் தன்னால் பேரின்பத்தில் இருக்க முடிந்தது என்று கூறுகின்றார். (பாடல் 75 இல் காண்க) 1 கோடி ஆண்டுகள் பேரின்பத்தில் இருந்த பின் இறைவனே திருமூலரை எழுப்பி நீ பெற்ற ஆகமங்களை உலகில் உள்ளோர் உய்வவதற்காக இதனை எடுத்துச் சொல் என்று உணர்த்தினார். (பாடல் 76 இல் காண்க) இதனை தமிழில் எடுத்துச் சொல் என்று கட்டளையிட்டார். (பாடல் 81 இல் காண்க) 1. இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காகவும் 2. யான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவும் (பாடல் 85 இல் காண்க). 3. இந்த உலகம் உய்வதற்காகவும் இறைவன் உலகத்தில் வைத்திருக்கும் ரூபங்களை பார்க்க எண்ணம் கொண்டும் 4. அகத்தியரை காணவுமே இந்த உலகத்திற்கு திருமூலர் வந்தார். இறைவன் இருக்கும் இடத்திற்கும் இந்த உலகத்திற்கும் நடுவில் சூட்சும வழி ஒன்று இருக்கிறது அதன் வழியாக இந்த உலகத்திற்குள் தனது உடலுடன் வந்தேன் என்று திருமூலர் சொல்கிறார். (பாடல் 83 இல் காண்க)

திருமூலர் பசுபதிநாத் திருக்கேதாரம் கங்கைக் கரை வழியாக தென்னாட்டிற்கு காளஹஸ்திக்கு வந்தார். அங்கிருந்து திருவாலங்காடு பின்பு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை தரிசித்து விட்டு அங்கிருக்கும் முனிவர்களோடு கலந்துரையாடினார். அங்கிருந்து திருவதிகை வந்து அங்கிருக்கும் இறைவனை தரிசனம் செய்கிறார். அங்கிருந்து திருப்புலியூரில் இறைவனின் ஆனந்த நடன தரிதனத்தை கண்டு சில நாட்கள் அங்கே தங்குகிறார். அங்கிருந்து காவிரி நதிக்கரைக்கு வந்தார். அங்கிருந்து திருவாவடுதிறை வந்து இறைவனை வணங்கி சிறிது நாட்கள் தங்குகிறார். பின்பு அகத்தியரை பார்க்க வேண்டும் என்று அகத்தியர் இருக்குமிடம் நோக்கி கிளம்புகிறார்.

திருமூலர் பொன்னி நதிக்கரை வழியாக சென்று கொண்டிருக்கும் போது ஆடு மற்றும் பசுக்களின் கதறல் சத்தம் கேட்கிறது. சத்தத்தைக் கேட்ட திசை நோக்கி சென்றார். மூலன் என்ற பெயர் கொண்ட இடையன் அப்போது தான் தனது வினை முடிந்த காரணத்தினால் இறந்து கிடக்கிறான். அவனது உடலை காண்கிறார். அவனது உடலை சூற்றி வருத்தத்துடன் சுற்றி நிற்கும் பசுக்களையும் ஆடுகளையும் காண்டார். பசுக்களும் ஆடுகளும் கண்ணீர் விட்டபடி அந்த உடலைச் சுற்றி சுற்றி வந்து அவனை நக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த இடையன் எழுந்தால் தான் பசுக்கள் ஆடுகளின் வருத்தம் போகும் என்று எண்ணிய அவர் அதன் வருத்தத்தை போக்கும் வகையில் அட்டமா சித்தியில் ஒன்றான கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பயன்படுத்தி தன் உடலை ஓர் இடத்தில் பத்திரமாக ஒளித்து வைத்து விட்டு மூலனின் உடலில் சென்றார். பசுக்கள் ஆனந்தமடைவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த சுத்த சதாசிவர் திருமூலர் என்னும் பெயரைப் பெற்று பசுக்களையும் ஆடுகளையும் மேய்த்து விட்டு மாலை ஆனதும் பசுக்கள் இருக்கும் ஊரான சாத்தனூருக்கு அனைத்து ஆடுகளையும் பசுக்களையும் அழைத்து செல்கிறார்.

திருமூலர் சாத்தனூர் வந்ததும் பசுக்களும் ஆடுகளும் தங்களது இல்லத்திற்கு தானாகவே சென்று சேர்ந்து விடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார். பசுக்களும் ஆடுகளும் ஊருக்குள் வந்து விட்டது இன்னும் தனது கணவர் வீட்டிற்கு வரவில்லையே என்று தன் கணவரைத் வெளியே வந்து தேடுகிறார். தன்னுடைய கணவர் வெளியிலேயே நின்று பசுக்கள் ஆடுகள் செல்வதை பார்த்துக் கொண்டே இருக்கிறார். இதனைக் கண்ட மூலனின் மனைவி வீட்டிற்குள் வாருங்கள் என்று திருமூலரின் கையை பிடித்து அழைக்க முயற்சித்தாள். அப்போது திருமூலர் நான் உனது கணவன் இல்லை. உனது கணவன் உடலில் இருக்கும் சிவயோகி நான். உனக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றார். திருமூலரின் வார்த்தைகளை கேட்ட மனைவி அவரது வார்த்தைக்கு கட்டப்பட்டார் போல் தனியாக தனது வீட்டிற்குள் வந்தாள். திருமூலர் அந்த ஊரில் இருக்கும் ஒரு மடத்தில் தங்கி விட்டார். மூலனின் மனைவிக்கு இரவு முழுவதும் தூங்காமல் வருந்தத்துடன் இருந்தாள். காலை விடிந்ததும் ஊரில் உள்ள அந்தணர்களிடம் செய்தியை சொல்லி தன் கணவனை வீட்டிற்கு வரச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டாள். சாத்தனூர் இறைவனை அறிந்த அந்தணர்கள் அதிகமாக வாழும் ஊராக இருந்தது. அந்தணர்கள் பலர் ஒன்று சேர்ந்து மூலன் இருப்பிடத்திற்கு வந்து மூலனை வீட்டிற்கு ஏன் செல்ல மறுக்கிறாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் மூலன் இல்லை. மூலன் நேற்றே இறந்து விட்டான். அவனது உடலில் இருக்கும் சித்தயோகி நான். கூடு விட்டு கூடு பாய்ந்து இந்த உடலில் இருக்கிறேன். வருத்தத்துடன் இருந்த பசுக்கள் ஆடுகளுக்காக இந்த மூலனின் உடலுக்குள் வந்தேன். விரைவில் இந்த உடலையும் விட்டு எனது உடலுக்குள் சென்று விடுவேன் என்றார். இதனை அந்த ஊர் அந்தணர்கள் நம்ப மறுத்தார்கள். தன் சொல்லை மெய்ப்பிக்கிறேன் என்று கூறி அருகாமையில் பார்த்தார். அங்கு இறந்த ஒரு ஆடு இருந்தது. உடனே இந்த உடலை விட்டு ஆட்டின் உடலுக்கு சென்ற திருமூலர் மீண்டும் மூலனின் உடலுக்கு வந்தார். இதனைக் கண்ட அந்தணர்கள் வந்திருப்பவர் மூலன் இல்லை சித்த யோகி என்பதை உணர்ந்து மூலனின் மனைவிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி விட்டார்கள். பின்பு வந்திருப்பவர் சித்த யோகி என்பதை அறிந்து கொண்ட அந்தணர்கள் அவரிடம் பல கேள்விகள் கேட்டு தங்களின் சந்தேகங்களை நிவர்ந்தி செய்து கொண்டார்கள்.

திருமூலர் சாத்தனூரில் இருந்து கிளம்பி மீண்டும் பொன்னி நதிக்கரைக்கு வந்து தன் உடல் மறைத்து வைத்த இடத்திற்கு வந்து பார்த்தார். அங்கு தன் உடலைக் காணவில்லை. தன் உடலைத் தேடிய திருமூலர் தன் உடல் கிடைக்காததால் தன்னுடைய ஞான திருஷ்டியில் என்ன நடந்தது என்று பார்க்கிறார். இந்த உடலிலேயே இருந்து வேதங்களையும் ஆகமங்களையும் தமிழில் தொகுத்து அளிப்பதற்காக இறைவன் தன்னுடைய உடலை மறைத்து வைத்திருக்கிறார் என்று உணர்ந்து இறைவனின் எண்ணத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார்.

திருமூலர் இறைவனின் திருவடியில் தன் எண்ணத்தை வைத்து அங்கிருந்து கிளம்பி செருக்கை அழிக்கும் திருவாவடுதுறை இறைவன் இருக்கும் இடத்திற்கு வருகிறார். கோவிலில் இருக்கும் பரந்து விரிந்த படர் அரசு மரத்தின் கீழே இறைவனின் நாமத்தை ஓதிக்கொண்டே தியானத்தில் அமர்ந்தார். (பாடல் 79 இல் காண்க). வருடத்திற்கு ஒரு முறை விழித்து தான் தியானத்தில் உணர்ந்ததை பாடலாக எழுதினார். இப்பாடலுக்கு மந்திர மாலை என பெயரும் கொடுத்தார். (பாடல் 86 இல் காண்க). இது போல 3000 வருடங்கள் தியானம் இருந்து வருடத்திற்கு ஒரு பாடல் வீதம் 3000 பாடல்களை எழுதினார். இறைவனைப் பற்றியும் இறைவன் அருள் புரியும் விதத்தையும் உலகம் செயல்படும் விதத்தையும் இந்த உலகத்தில் உயிர்கள் இருக்கும் பிறவியை அறுத்து இறைவனிடம் எப்படி சேரலாம் என்பது பற்றியும் நான்கு வேதங்களில் உள்ளவற்றையும் தியானத்தில் உணர்ந்து அதனை தமிழில் பாடல்களாக எழுதினார். பல சூட்சுமமான செய்திகளை மறைமுகமாக தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் பல பாடல்களில் அருளியிருக்கிறார். இப்பாடல்களை மாலையாக கோர்த்து இறைவனுக்கு மாலையாக திருமூலர் சாற்றினார். இதற்கான குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது. திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை. யாரும் அறியாதவாறு தாம் யோக நிலையில் அமர்ந்திருந்த திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் ஆலயத்தின் கொடி மரத்தின் அடியில் புதைத்து வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சிதம்பரம் வந்தடைந்து தன் குருவான இறைவனுடன் கலந்து விட்டார்.

திருமூலரின் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது (கி.மு. 5000). திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது 3000 வருடங்கள். அதன் பிறகு தற்கால ஏழாம் நூற்றாண்டில் (கி.பி. 637 முதல் 653) அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவ சமயக் குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர்களில் ஒருவருமான திருஞானசம்பந்தர் உதித்தார். அவர் தென்னாட்டிலுள்ள சைவ ஆலயங்கள் அனைத்தையும் சென்று வழிபட்டு அதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடிச் சென்ற காலங்களில் திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்திருந்தார். அப்போது கோயிலுக்குள் நுழைந்தவுடன் இறைவனின் திருவருளால் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் அற்புதமான தமிழ் வாசனை அவரை வந்தடைந்தது. அதனால் ஈர்க்கப்பட்டுத் தன்னுடன் வந்தவர்களிடம் இங்கே அருமையான தமிழ் வாசனை வருகின்றது என்ன என்று பாருங்கள் என்று கூறி மண்ணைத் தோண்டச் செய்தார். அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளைக் கண்டு எடுத்தார். அவற்றை படித்து உணர்ந்து அதன் அருமை பெருமைகளை உலகோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று அதை வெளியிட்டு அருளிச் செய்தார். அவருக்கு பின்பு வந்த சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் திருமூலரின் வரலாற்றை அருளியிருக்கிறார். அவருக்குப்பின் வந்த சேக்கிழார் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை முப்பத்து ஒன்றாவதாகச் சேர்த்து திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும் திருமந்திரப் பாடல்களின் குறிப்பையும் எழுதி வைத்தார். அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியில் திருமூலரின் வரலாற்றை அருளியிருக்கிறார். சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி ஒன்றாகத் தொகுத்த போது திருமூலர் அருளிய திருமந்திரத்தையும் பத்தாவது திருமுறையாகத் தொகுத்து அருளினார்.

திருமூலர் எழுதிய திருமந்திர மாலை பாடல்களை உலகத்தவர்களால் முதலில் தமிழ் மூவாயிரம் என்ற பெயரிலேயே அழைத்தார்கள். பிற்காலத்தில் வந்த சான்றோர்கள் திருமந்திரத்தில் நிரம்பியிருந்த மந்திரங்களும் தந்திரங்களும் மனித சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால் அதை திருமூலர் அருளிய திருமந்திரம் என்று மாற்றி வைத்தாரகள். திருமூலர் பரம்பொருளாகிய இறைவனைப் போற்றிப் பாடியருளிய திருமந்திரத்தில் பாயிரம் தலைப்பு தவிர்த்து ஒன்பது தந்திரங்கள் அமைந்துள்ளது. இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து அவற்றின் பொருள் உணர்ந்து ஓதுவோர் பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர்கள் என்பது திருமூலரின் திருவாக்கு.

சர்வ மங்கள குருதேவா
சிவப்ப்ரியா மகாதேவா
ஞானரூபா அருள் தேவா
சத்குருவே நமோநமக

திருமூலர் திருவடிகளே சரணம்

சித்தர்கள்

சித்தர்கள்

சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர். மனிதன் முயன்றால் சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில் சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால் இக்கலிகாலத்தில் அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம். சித்தராவதற்கு முதற்படி தன்னையும் இந்த உலகையும் இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே.

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.

அகத்தியரும்..

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே.

என்கிறார். ஆக முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு. மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில் அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி பரிகாரம் போன்றவை செய்தாலும் சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால் அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்? இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே. சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும். வெறும் 18 பேர் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.

சித்தர்களை வெறும் தமிழர்கள் இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோமரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள் இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சித்தர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே. அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால் மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும் நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள். சித்தர்களைத் தியானித்தால் அவர்களின் திருவருள் கிடைத்தால் அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால் கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும்.

சராசரி மனிதனின் நிலையும் இறைநிலை நோக்கி உயரும். ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது? மனிதன் ஏன் பிறந்து இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது? தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்? ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன? மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது? தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம் கர்மவினையை வெல்வது எப்படி? இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம் விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.

சித்தர்கள் இறைவன் என்பவன் யார் அவனை அடையும் மார்க்கம் என்ன பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி? ப்ரம்மம் என்பது என்ன? இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான்? உலகிற்கு அடிப்படையாகவும் உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது? உடல் தத்துவங்கள் உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து பலபிறவிகள் எடுத்து கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள். சொல்லப்போனால் சித்தத்தை அடக்கி தாங்களும் சிவமாய் இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள். உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம். சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.