மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -17

துரோணர் ஏகலைவனை பார்த்து என்னை குருவாக எண்ணுகிறாயா என்று கேட்டார். அவன் துரோணருடைய பாதங்களில் வீழ்ந்தான். அவனுடைய கண்களில் தண்ணீர் வழிந்தது தங்களுடைய அருளால் தாங்கள் எனக்கு குருவானீர்கள் என்று ஏகலைவன் தெரிவித்தான். எனக்கு குரு தட்சணை தருவாயா என்று கேட்டார் துரோணர். குரு தட்சணை கேட்பதன் வாயிலாக நீங்கள் என்னை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டீர்கள். நான் பாக்கியவான் ஆனேன். என்னுடைய அனைத்தும் தங்களிடம் சமர்ப்பிக்கின்றேன் என்று ஏகலைவன் துரோணரிடம் தெரிவித்தான். உன்னுடைய வலக்கை கட்டை விரலை தட்சணையாக நான் வேண்டுகிறேன் என்றார் துரோணர். உடனே குருவின் மீதுள்ள பக்தியின் வேகத்தால் ஏகலைவன் தன்னுடைய வலது கை கட்டை விரலை வெட்டி இரத்தம் சொட்ட துரோணரின் பாதங்களின் முன் சமர்ப்பித்தான். ஏகலைவன் குருவின் மீது வைத்த பக்தியின் உண்மை அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் வில் வித்தைகள் மற்றும் தனூர் வேதத்தின் மேலான ரகசியங்கள் அனைத்தும் அவனை விட்டு விலகியது. கொடூர செயல் போல தெரியும் இந்த நிகழ்வைப்பற்றி துரோணாச்சாரியார் சில அடிப்படை கோட்பாடுகளை தெரிவித்தார்.

ஒவ்வொரு ஜீவாத்மாவும் நிறைஞானம் வாய்க்கப்பெற்றவர்களே. அதனை தக்க முறையில் நாடினால் அது உள்ளத்திலிருந்து வெளியாகின்றது. அந்த தத்துவத்தின் படி ஏகலைவனும் குரு பக்தி மூலம் தக்க முறையில் நாடி வில்வித்தைகளையும் தனுர் வேதத்தையும் அடைந்தான். குருபக்தியின் வாயிலாக ஏகலைவன் வில்வித்தையில் அர்ஜூனனைவிட மேலானவன் ஆகின்றான். அவனுடைய கட்டை விரலை கேட்டு அவனுடைய வில்வித்தையை பாழ்படுத்தியது போல பார்ப்பதற்கு தோன்றலாம். ஆனால் ஏகலைவனின் நன்மைக்காகவே அவ்வாறு செய்ய அவனது குருவாய் எமக்கு சூழ்நிலை அமைந்தது. தனுர் வேதத்தைக் கற்றுக்கொண்டால் அந்த வேதத்தின் நியமங்களை கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்கவில்லை என்றால் அது வேதத்தைக்கற்றவரை மேன்மை நிலையிலிருந்து கீழ் நிலைக்கு தள்ளி விடும். பெற்ற ஞானங்கள் அனைத்தும் மறந்து போகும். வேடுவனாய் இருக்கும் ஏகலைவன் வேதத்தின் நியமங்களை கடைபிடிக்கும் சூழ்நிலை அவனுக்கு இல்லை. இப்போது அவன் குருபக்தியின் விளைவாக தனுர் வேதத்தை கற்றவனாகின்றான். குருவிற்கு தனது விரலை வெட்டி காணிக்கை கொடுத்ததின் விளைவாக மேலும் இறை ஞானத்தை பெற்றவனாகின்றான். குருவாய் அவனுக்கு தேவையானதை அவனுக்கு செய்து விட்டேன். ஏகலைவனின் குரு பக்தியை உலகம் அறிந்து கொள்ளும். அவன் புகழ் நிடுழி பல்லாண்டு காலம் இருக்கும் என்று அனைவரிடமும் சொல்லி முடித்தார்.

தம்முடைய சிஷ்யர்கள் வில்வித்தையில் அடைந்திருந்த திறமையை சோதிக்கும் பொருட்டு துரோணாச்சாரியார் ஒருநாள் அம்மாணாக்கர்களுக்கு இடையில் பரிட்சை ஒன்று வைத்தார். குருவும் சிஷ்யர்களும் மரச்சோலையில் கூடினர். மரக்கிளைகளின் இடையே அடர்ந்து வளர்ந்திருந்த பச்சை இலைகளுக்கு இடையில் உலர்ந்து போன சில இலைகள் ஒன்றுபட்டு ஒரு பறவை போல தென்பட்டன. அதனை துரோணாச்சாரியார் சிஷ்யர்களுக்கு சுட்டிக்காட்டினார். மேலே முக்கோணம் போன்று தென்படுகின்ற மரக்கிளையை பாருங்கள் அதற்குள் ஒரு சிறிய பறவை ஒன்று அமர்ந்திருப்பது போன்று தென்படுகிறது பாருங்கள் என்று கூறினார். அனைவருக்கும் அக்காட்சி தெரிந்தது. ஒவ்வொருவராக அப்பறவையின் மீது குறிவைத்து வில்லில் அம்பை பூட்ட வேண்டும். அதன் பிறகு தான் கேட்கின்ற கேள்விகளுக்கு விடை கொடுக்க வேண்டும். தாம் ஆணையிடுகின்ற போது அந்த பறவை போல் இருக்கும் குறியின் மீது அம்பை விட வேண்டும் என்று மாணாக்கர்களுக்கு கூறினார்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -16

ஒரு நாள் துரோணாச்சாரியார் முன்பு இளைவன் ஒருவன் தோன்றினான் அவன் பெயர் ஏகலைவன். அவன் வேடர்களின் தலைவனுடைய மகன் ஆவான். துரோணாச்சாரியரின் பாதங்களை வணங்கி தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். துரோணர் அவனைப்பார்த்தார். வேடுவனாக இருந்த அவனுக்கு ராணுவப்பயிற்சி தேவையில்லை என்று எண்ணினார். ஆகவே அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். ஆயினும் ஊக்கமே வடிவெடுத்த ஏகலைவன் ஏமாற்றமடையவில்லை. காட்டிற்கு சென்றான் அங்கு துரோணாச்சாரியார் போல் மண்ணில் ஓர் உருவம் செய்தான். அந்த உருவத்தை குருவாக நினைத்து தினந்தோறும் வழிபாடுகள் செய்தான். அதைத்தொடர்ந்து வில்வித்தைகள் பயிற்சி செய்தான். அவனுடைய குருபக்தியும் வில்வித்தையின் மேல் கொண்ட ஆர்வமும் ஒன்றுகூடி வியப்பிற்குரிய பலனைத்தந்தது. செடிகளில் மலர்கள் தோன்றுவது போல அவன் உள்ளத்தில் வில்வித்தைக்கான கலைத்திறன்கள் உருவெடுத்தன. அதிவிரைவில் தனுர் வேதத்தின் ரகசியங்கள் அவனுக்கு தோன்றி தெளிவானான். தலைசிறந்த வில்லாளியாக உருவெடுத்தான்.

குருவம்சத்து ராஜகுமாரர்கள் குருவின் அனுமதி பெற்று காட்டிற்கு வேட்டையாட சென்றார்கள். அவர்கள் வளர்த்து வந்த நாயும் அவர்களுடன் காட்டிற்கு சென்றது. அங்கும் இங்கும் ஓடிய நாய் காட்டில் இருந்த ஏகலைவனைப்பார்த்து பயங்கரமாக குரைத்தது. ஏகலைவன் தன்னுடைய திறமையை காட்டும் விதமாக ஒரு கட்டு நிறைய அம்புகளை எடுத்து வில்லில் பூட்டி ஒரே தடவையில் நாயின் மீது அம்பெய்தான். அந்த அம்புகள் நாயின் வாயில் மொத்தமாக சென்று நாயின் வாயை அடைத்தது. பயந்து போன நாய் ராஜகுமாரர்களிடேயே திரும்பி ஓடி வந்தது. இந்த நூதான காட்சிகளைப்பார்த்து குரு வம்சத்து ராஜகுமாரர்கள் திகைத்துப்போயினர். இத்தகைய அதிசய செயலைப்பார்த்து அக்காட்டில் எந்த மானுடனாலாவது இது போல் செய்ய இயலுமா என்று வனம் முழுவதும் தேடிப்பார்த்தார்கள். வனத்தில் அவர்கள் ஏகலைவனை சந்தித்தார்கள். அவன் யார் என்று விசாரித்த பொழுது தன்னை துரோணாச்சாரியாரின் சீடன் என்று அறிமுகம் செய்து கொண்டான். அவன் கூறியது ராஜகுமாரர்களை மேலும் குழப்பமடைய செய்தது.

ராஜகுமாரர்கள் அனைவரும் குருநாதரிடம் நடந்தது அனைத்தையும் சொன்னார்கள். துரோணாச்சாரியாரும் சிறிது திகைத்தார். துரோணாச்சாரியார் ராஜகுமாரர்களுடன் காட்டிற்கு சென்று அந்த இளைஞனை பார்த்தார். பார்த்ததும் அவருக்கு இந்த இளைஞனை பற்றிய அனைத்தும் ஞாபகம் வந்தது. துரோணர் நடந்தவைகள் அனைத்தையும் ராஜகுராரர்களுக்கு தெரிவித்து குருபக்தியின் மகிமையையும் மேன்மையையும் எடுத்துரைத்தார்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -15

இளமைக்காலத்தில் இருக்கும் நட்பு ஆயுள்காலம் முழுவதும் நிலைத்து இருக்கும் தன்னுடைய வறுமைகள் சென்று விடும் என்ற எண்ணத்துடன் துரோணர் பாஞ்சால மன்னனாகிய துருபதனை காண அவனுடைய ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றார். அங்கு துருபதன் மன்னனைப் பார்த்து மன்னா நான் துரோணர். தாங்கள் என்னுடைய சிறு வயது நண்பர். சிறுவயதில் தாங்கள் எம்மிடம் மன்னனானதும் செல்வங்கள் அளிப்பதாக சொன்னீர்கள். ஆனால் எனக்கு தங்களின் செல்வங்கள் எதுவும் வேண்டாம். ஒரு குடும்ப ஜீவனத்திற்கு தேவையானதை கொடுத்து உதவினால் போதும் என்று கூறினார். துருபதனுடைய பாங்கு இப்போது முற்றிலும் மாறியிருந்தது. துரோணரே நீ என்னோடு அன்யோன்யமாக இருப்பது இப்போது பொருந்தாது. விளையாட்டுப்பிள்ளை கூறியதை உண்மை என்று எண்ணி கற்பனை செய்வது மடமையாகும். நாடோடியாய் இருந்து யாசகம் பெறுகின்ற ஒருவன் அரசனுக்கு நண்பன் ஆவனா? வறியவன் ஒருவன் வேந்தனோடு எவ்வாறு உறவு கொண்டாட முடியும்? இணையில்லாத இருவருக்கு இடையில் நட்பு எற்படுவது ஆகாத காரியம். பிள்ளைப்பருவ கதைகளை எல்லாம் என்னிடம் சொல்லி என்னை உபத்திரப்படுத்தாதே. இந்த இடத்தை விட்டுச்செல் என்று துரோணரை அவமரியாதை செய்தான். போற்றுதலுக்குரிய துரோணர் அவமானப்படுத்தப்பட்டார்.

துரோணர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்பு அவ்விடத்தில் இருந்து பின் வாங்கினார். கர்வம் பிடித்த துருபத மன்னனுக்கு ஆயுள் முழுவதும் மறக்க முடியாத படி பாடம் ஒன்றை புகட்ட வேண்டும் என்று மனதில் ஓர் தீர்மானத்தை எண்ணிக்கொண்டார். அங்கிருந்து தனது மைத்துனரான கிருபாச்சாரியார் இருக்கும் அஸ்தினாபுரத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு தான் துரோணரை பீஷ்மர் ராஜ குருவாகவும் ராஜ குமாரர்களுக்கு ஆச்சாரியராகவும் நியமித்தார். துரோணருக்கு ராஜகுமாரர்கள் பல பேர் சிஷ்யர்களாக வாய்த்தார்கள். அவர்களுள் குரு வம்சத்தை சேர்ந்த பாண்டுவின் குமாரர்களும் திருதராஷ்டிரரின் புதல்வர்களும் தலைசிறந்தவர்களாக திகழ்ந்தார்கள். அருகில் இருக்கும் நாடுகளில் இருந்தும் நெடுந்தூரத்தில் இருக்கும் நாடுகளில் இருந்தும் பல ராஜகுமாரர்கள் இந்த குருகுலத்தை நாடி வந்தனர். அந்தந்த மாணாக்கனின் திறமைக்கேற்றவாறு அவர்களுக்கு போர்க்கலை கற்ப்பிக்கப்பட்டது.

மாணாக்கர்களின் கூட்டத்தில் அர்ஜூனன் தலைசிறந்த மாணவனாக திகழ்ந்தான். அவனுடைய குரு பக்தி போற்றுவதற்கு உரியதாயிருந்தது. கல்வியிலும் வில்வித்தையிலும் அவன் தளராத ஊக்கம் பெற்றவனாயிருந்தான். அவனுடைய ஆர்வத்தை முன்னிட்டு துரோணருக்கு அர்ஜூனன் விருப்பமான மாணாக்கனாக இருந்தான். வில்வித்தைக்கு விஜயன் என்னும் பெயர் பெற்று இருந்தான். மற்ற மாணவர்களுக்கு விளங்காத வில்வித்தைகள் அர்ஜூனனுக்கு எளிதில் விளங்கியது.

Image may contain: 4 people
Image may contain: one or more people

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -14

குழந்தைகள் கூறியவைகள் அனைத்தையும் கேட்ட பீஷ்மர் வந்திருப்பவர் துரோணாச்சாரியார் என்பதை யூகித்தார். ஆகவே தானே நேரில் சென்று அவரிடம் பேசினார் பேசியதில் அவர் தான் துரோணாச்சாரியார் என்பதை உறுதி செய்தார். தக்க மரியாதையுடன் அவரை அரண்மனைக்கு வரவேற்றார் பீஷ்மர். பின்பு ராஜகுமாரர்களுக்கு ஆச்சாரியார் ஆக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். துரோணாச்சாரியார் அதற்கு சம்மதம் கொடுத்தார். பீஷ்மருக்கு மட்டில்லா மகிழ்ச்சி உண்டாயிற்று. எனெனில் அக்காலத்தில் துரோணாச்சாரியாருக்கு நிகரான வில்வித்தைக்காரர் அப்போது யாரும் இல்லை.

பிரசித்தி பெற்ற பரத்வாஜ மகரிஷிக்கு பிள்ளையாகப் பிறந்தவர் துரோணர். இவர் வேதங்களை எல்லாம் கற்று உணர்ந்த பின்பு தனுர் வேதத்தைக் கற்க ஆரம்பித்தார். அக்கலையிலும் நிபுணன் ஆனார். துரோணாச்சாரியார் இளைஞனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த பொழுது பாஞ்சால நாட்டு இளவரசனோடு நெருங்கிய நண்பனாக இருந்தார். ஆஸ்ரம வாசத்தில் இருவருடைய நட்பு மிகவும் நெருங்கிய நட்பாக உருவெடுத்தது. இருவரும் மகிழ்ச்சியாக இருந்த பல வேளைகளில் இளவரசர் துரோணாச்சாரியாரிடம் தான் ராஜாவாக பட்டம் சூட்டிய பின்பு தன்னுடைய செல்வங்களை தாராளமாக தருவதாக கூறிவந்தான். ஆண்டுகள் பல சென்றன.

கௌதமரின் புதல்வியும் கிருபாச்சாரியாரின் சகோதரியுமான கிருபியை துரோணர் மணந்து கொண்டார் அவர்களுக்கு அசுவத்தாமன் என்னும் மகன் பிறந்தான். தனுர் வேதத்தில் வில்வித்தைகளின் நுணுக்கமான பலவற்றை கற்றுக்கொள்ள துரோணாச்சாரியார் விரும்பினார், அதன் படி மகாவித்துவான் பரசுராமரை குருவாக வேண்டி அணுகினார். பரசுராமரும் துரோணாச்சாரியாரை சீடராக ஏற்றுக்கொண்டு தனுர் வேதத்தின் வில் வித்தைகள் அனைத்தையும் அவருக்கு கற்றுக்கொடுத்தார். அனைத்தையும் கற்றுக்கொண்ட துரோணாச்சாரியார் ஆயுத பிரயோகங்களின் அற்புத மூர்த்தியாகி வீடு வந்து சேர்ந்தார். போர் நிபுணனாகிய அவருக்கு வறுமையோடு போர் புரிய தெரியவில்லை. பரம ஏழையாக இருந்தார்.

துரோணாச்சாரியாரின் குழந்தை அசுவத்தாமன் பசும்பாலை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறான். ஆனால் அவற்றை அவன் குடித்தது கிடையாது. ஒரு கவளம் பாலையாவது சுவைத்து பார்க்க வேண்டும் என்றும் தனக்கு பசும்பால் வேண்டும் என்றும் அஸ்வத்தாமன் தனது தாயிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டான். மகனின் பரிதாபநிலை தாய் கிருபியின் உள்ளத்தை உருக்கியது. இந்த நெருக்கடியில் துரோணாச்சாரியாருக்கு தன் இளமைப்பருவ பாஞ்சாலகுறிச்சி இளவரசன் ஞாபகத்திற்கு வந்தான். அப்போது அவர் கிருபியிடம் பாஞ்சால நாட்டு அரசன் துருபதன் தன்னுடைய இளம் வயது பள்ளி தோழன். அரசன் ஆனதும் தனக்கு செல்வங்கள் தந்து உதவி செய்வதாக பல முறை கூறியுள்ளான். ஆகவே நாம் மூவரும் பாஞ்சால நாட்டிற்கு செல்வோம் அங்கு நமது வறுமை முற்றிலும் நீங்கும் என்று சொன்னார். மூவரும் பாஞ்சால நாட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -13

நதிக்கு உள்ளே போடப்பட்ட பீமன் விஷத்தின் வீரியத்தால் மயக்கம் கலையாமல் இருந்தான். நீருக்குள் இருக்கும் பாம்புகள் பீமனைத் தீண்டியது. பாம்பின் விஷம் மூலிகையின் விஷத்தை முறித்தது. அதன் விளைவாக பீமன் விழித்தான். ஒரு உதறு உதறி தன் கை கால்களை கட்டியிருந்த கொடிகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளினான். பிறகு அங்கிருக்கும் விஷப் பாம்புகளை கொன்றான். பாம்புகளில் சில தப்பித்துக் கொண்டு ஆழத்தில் இருந்த நாகலோகத்துக்கு போயின. அங்கு பாம்புக்கு அரசனாக இருந்த வாசுகியிடம் ஒரு மனிதன் செய்த அட்டகாசத்தை எடுத்து விளக்கின. அந்த மனிதனுடைய துணிச்சலைப் பார்க்க வாசுகி குறிப்பிட்ட அந்த இடத்துக்கு வந்தது. இச்செயலை செய்த மானுடன் குந்தியின் மைந்தன் என்பதை வாசுகி அறிந்துகொண்டது. அவனுக்கு அமிர்தத்தை வழங்கி அவனுடைய பலத்தை பன்மடங்கு அதிகப்படுத்தி திருப்பி அனுப்பியது. இதற்குள் எட்டு நாட்கள் சென்றது. கவலையுடன் இருந்த குந்திதேவி ஆனந்த கண்ணீருடன் தன் மகனை வரவேற்றாள். ஆனால் கொடூர தன்மையோடும் குதூகலத்தோடும் இருந்த துரியோதனன் பீமன் திரும்பி வந்ததை பார்த்து ஏமாற்றம் அடைந்தான்.

காலம் சென்ற சந்தனு மன்னன் வேட்டையாட வனத்திற்குச் சென்று இருந்த பொழுது அங்கு சிறுவனும் சிறுமியும் ஆகிய இரட்டையர்களை கண்டான். கவனத்துடன் அவர்களை கொண்டு வந்து பராமரித்து வந்தான். அந்த சிறுவர்களை அவன் கிருபன் என்றும் கிருபி என்றும் பெயர் வைத்து வளர்த்து வந்தான். அந்த கிருபன் பிரசித்திபெற்ற கௌதமருடைய புதல்வன் ஆவார். வில்வித்தையில் அவர் சாமர்த்தியசாலி ஆகையால் கிருபாச்சாரியாரை பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளுக்கு வில்வித்தையை பயிற்சி கொடுப்பதற்கு பயன்படுத்திக்கொண்டார் கிருபாச்சாரியார் திருதராஷ்டிரருடைய புதல்வர்கள் பாண்டுவின் புதல்வர்களுக்கு மட்டுமின்றி விருஷ்ணி வம்சத்து அரசகுமாரர்கள் போஜனுடைய புதல்வர்கள் அந்தகனுடைய புதல்வர்கள் ஆகிய ராஜகுமாரர்களுக்கும் பாடசாலையில் பயிற்சி அளித்து வந்தார். அவர்கள் அனைவரும் அதிவிரையில் வில் வித்தையில் நிபுணர்கள் ஆனார்கள். ஆனால் அவர்கள் பெற்ற பயிற்சி போதவில்லை என்று உணர்ந்த பீஷ்மர் தனுர் வேதத்தில் தலை சிறந்த மற்றோர் ஆச்சார்யாரை தேடிக் கொண்டு இருந்தார்.

ஒரு நாள் ராஜகுமாரர்கள் மும்முரமாக பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த ஒரு கிணற்றுக்குள் தற்செயலாக அவர்கடைய பந்து விழுந்தது. அதன் விளைவாக விளையாட்டு திடீரென்று முடிவுக்கு வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் திகைத்து நின்று கொண்டு இருந்தார்கள். இந்த பிரச்சினையை அகற்றுவதற்கான வில்வித்தை உங்களுக்கு தெரியவில்லையா என்று பக்கத்தில் நின்று நிகழ்ந்ததை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் கேட்டார். நாங்கள் எல்லோரும் வில்வித்தகர்களே. ஆனால் வில்லுக்கும் பந்துக்கும் என்ன சம்பந்தம் என்று அந்த மாணாக்கர்களில் ஒருவனான யுதிஷ்டிரன் கேட்டான். வந்திருந்தவர் தான் அணிந்திருந்த மோதிரத்தைக் கழட்டி கிணற்றுக்குள் போட்டார். மோதிரம் பந்து ஆகிய இரண்டையும் வில்வித்தையின் மூலம் எடுக்கலாம் என்றார். ஒரு கையளவு தர்ப்பை புற்களை எடுத்து ஜெபித்து அவைகளை ஒன்றன் பின் ஒன்றாக பந்தின் மீது போட்டார். தர்ப்பைப்புல் ஒன்றன் பின் ஒன்றாக பந்து மேல் ஒட்டிக் கொண்டு ஒரு கயிறு போல் ஆகி அதன் ஒரு நுனி பந்திலும் இன்னொரு நுனி வந்திருந்தவர் கையிலும் இருந்தது. மிகவும் சுலபமாக பந்து மேலே எடுக்கப்பட்டது மோதிரத்தை என்ன பண்ண போகிறீர்கள் என்று இளைஞர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் அந்த அம்பு ஒன்றை எய்தார். அம்பு மோதிரத்தை எடுத்துக் கொண்டு அவரிடம் வந்தது. இதை பார்த்து திகைத்து போன குழந்தைகள் ஓடி சென்று நிகழ்ந்ததை எல்லாம் பீஷ்மரிடம் தெரிவித்தார்கள்.

வன்னிமரம்

வன்னிமரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று தலபராணம் சொல்கிறது. எப்படி என்றால் அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால், தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது தங்கமாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது.

Image may contain: tree and outdoor

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -12

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -12

பாண்டவர் சகோதரர்கள் ஐந்து பேரும் வாலிபப் பருவத்தை இன்னும் தாண்டவில்லை. அரண்மனையின் ராஜ போகங்களை அவர்கள் இப்போது தான் முதல் முதலாக அனுபவிக்க ஆரம்பித்தனர். சிற்றன்னைக்கு பிறந்த சகோதரர்களாகிய கௌரவர்கள் நூறு பேருடன் அவர்கள் இனிதே ஒட்டி உறவாடினார்கள். அரண்மனை கலகலப்புடன் இருந்தது. ராஜகுமாரர்கள் ஊக்கம் ததும்பிய பல விளையாட்டுகளில் ஈடுபட்டனர். அவர்களிடம் தான் எப்பொழுதும் தலைமை தாங்கி இருக்க வேண்டும் என்பது துரியோதனின் விருப்பமாக இருந்தது. ஆனால் தற்செயலாக பீமன் ஒவ்வொரு விளையாட்டிலும் மிகவும் சக்தி மிக்கவனாக இருந்தான். விளையாடும் போது கூட்டாளிகள் பத்து பேரே ஒரே நேரத்தில் வீழ்த்துவது அவனுக்கு சர்வசாதாரண செயலாக இருந்தது. கௌரவ சகோதரர்கள் பழம் பறிப்பதற்கு மரத்தில் ஏறி இருந்தபோது பீமன் அம்மரத்தை ஓங்கி ஒரு உதை உதைத்தான். அதன் விளைவாக அத்தனை பேரும் பழங்கள் விழுவது போன்று பொலு பொலுவென்று கீழே விழுவார்கள். மரத்தில் இருந்த பழங்கள் அத்தனையும் அவர்களோடு சேர்ந்து தரையில் விழும். நதியில் நீந்தி விளையாடிய போது இளைஞர்கள் 10 பேர் குடுமியை பிடித்து இழுத்துக்கொண்டு வந்து நீரின் அடியில் சென்ற பிறகு அதிக நேரம் அசைவற்று இருப்பான். அதன் விளைவாக அவன் கையில் அகப்பட்டுக் கொண்டவர்கள் திணறுவார்கள். கிட்டத்தட்ட சாகும் நிலைக்கு வந்துவிடுவார்கள். இது பீமனுக்கு விளையாட்டாக இருந்தது. அவனது கையில் அகப்பட்டு கொண்டவர்களுக்கு திண்டாட்டமாக இருந்தது.

தான் இளவரசனாக வேண்டுமென்பது துரியோதனின் ஆசையாக இருந்தது. ஆனால் யுதிஷ்டிரன் அவனுக்கு மூத்தவன் அவனே இளவரசு பதவிக்கு தகுதியானவன். அது துரியோதனனுக்கு இடைஞ்சலாக இருந்தது. இது ஒருபுறமிருக்க விளையாட்டில் பீமன் பெரும் துன்பத்தை விளைவித்து வந்தான். ஆகையால் முரடனாக இருந்த அந்த சகோதரன் பீமன் மீது வெறுப்பையும் பொறாமையையும் அவன் வளர்த்து வந்தான். சின்னஞ்சிறு வயதில் உருவெடுக்கின்ற நட்பும் பகையும் ஆயுட்காலம் முழுவதும் அசையாது உள்ளத்தில் உறுதி பெற்றிருப்பது மானிட வாழ்க்கையை பற்றிய கோட்பாடு ஆகும். காட்டில் பிறந்து வீட்டிற்கு வந்திருக்கும் சகோதரர்களை எப்படியாவது அழித்து விடவேண்டும் என்று துரியோதனன் திட்டமிட்டான்.

ஒருநாள் நதிக்கரையில் உணவு அருந்த துரியோதனன் ஏற்பாடு செய்தான். அது நிகழ்ந்து கொண்டிருந்த பொழுது விஷம் கலந்த உணவை துரியோதனன் பீமனுக்கு தானே எடுத்து வழங்கினான். உணவை ருசித்த பிறகு இளைஞர்கள் எல்லோரும் விளையாடிக்கொண்டிருந்தனர் விஷம் அருந்திய உணவால் மயங்கியிருந்த பீமனை யாரும் கவனிக்கவில்லை. பீமனின் கைகள் கால்கள் இரண்டையும் துரியோதனன் பசுமையான காட்டுக்கொடி போட்டு கட்டி நீருக்குள் போட்டுவிட்டான். அன்றைய விளையாட்டு முடிவுக்கு வந்தது. எல்லோரும் அரண்மனைக்கு திரும்பினார்கள். பீமன் முன்பே அரண்மனைக்கு சென்று இருக்கக்கூடும் என்று எண்ணி பாண்டவ சகோதரர்கள் அரண்மனைக்கு வந்து தனது சகோதரன் பீமன் பற்றி விசாரித்தார்கள். ஒரு மகன் திரும்பி வராது இருப்பதை கண்டு குந்திதேவி கவலை மிகக்கொண்டாள்.

விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு மற்ற சகோதரர்கள் வந்து இவனை தேடிப் பார்த்தார்கள் பீமனை எங்கு தேடியும் காணவில்லை. மனம் கலங்கி இருந்த குந்திதேவி விதுரரை வரவழைத்தாள். பொறாமைப் பட்டுக் கொண்டிருந்த துரியோதனனால் தன்னுடைய மகனுக்கு விபத்து ஏதும் இருக்குமோ என்று அவரிடம் தெரிவித்தார். இதற்கு ஆலோசனை ஒன்று விதுரர் கூறினார். அதாவது துரியோதனனை பற்றி அவளின் எண்ணத்தை வெளியிடாது மறைத்து வைத்திருக்க வேண்டுமென்றும் அப்படி செய்யாவிட்டால் மற்ற குழந்தைகளுக்கும் ஏதாவது விபரீதம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார். ஆனால் அவள் கவலையுற்று இருந்ததால் மற்றொரு கருத்தையும் அவர் கூறினார். ஐந்து சகோதரர்களும் தீர்க்க ஆயுளுடன் வாழ்ந்திருப்பார்கள் என்றும் அறிய பெரிய செயல்கள் அவர்கள் சாதிப்பார்கள் என்றும் ரிஷிகள் உறுதி கூறி இருக்கிறார்கள். அவர்கள் வாக்கு பொய்யாகாது என்றார். அதை கேட்ட குந்திதேவி ஒருவாறு ஆறுதல் அடைந்தாள். தன் மகனுக்கு கேடும் ஒன்றும் வராது என்று நம்பி இருந்தாள்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -11

அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரரின் மனைவியாகிய காந்தாரி கருத்தரித்தாள். ஆயினும் இரண்டு வருட காலம் மகப்பேறு பெறாமலேயே இருந்தாள். காட்டில் குந்திக்கு மகன் ஒருவன் பிறந்தான் என்ற செய்தி காந்தாரியின் காதுக்கு எட்டியது. அதைக் கேட்டதும் அவள் கோபம் கொண்டாள். கோபத்துடன் தன் வயிற்றை அவள் ஓங்கி அடித்தாள். அதன் விளைவாக மாமிசப் பிண்டம் ஒன்றைப் பெற்றெடுத்தாள். அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை. அந்த நேரம் வியாச மகரிஷி அங்கு பிரசன்னமானார். காந்தாரிக்கு தேவையான விமோசனத்தை அந்த ரிஷி செய்தார். நூற்றியொரு குடங்களில் நெய்யை நிரப்பி வைக்கும்படி உத்தரவிட்டார். அந்த மாமிச பிண்டத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து ஒவ்வொரு குடத்திலும் ஒரு மாமிச துண்டை போட்டு வைத்தார். நாளடைவில் நூறு ஆண்களும் ஒரு பெண்ணும் ஒன்றன்பின் ஒன்றாக பிறந்தனர். நாள் ஒன்றுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவைகளின் பிறப்புக்கு நூற்றியொரு நாள் தேவையாயிருந்தது. வனத்தில் பீமன் பிறந்த அதே நாளில் காந்தாரிக்கு மூத்த மகன் பிறந்தான். அவனுக்கு துரியோதனன் என்னும் பெயர் சூட்டப்பட்டது. யுத்தத்தில் அசையாதவன் என்பது அதன் பொருளாகும். ஆனால் துரியோதனன் பிறப்பை ஒட்டிய சகுனங்கள் கேடு உடையவைகளாய் இருந்தது. இது குறித்து விதுரரும் ஏனைய சான்றோரும் எச்சரிக்கை செய்தார்கள். குருவம்சத்தின் அழிவுக்கும் ஏனைய பல அரசர்களின் அழிவுக்கும் அவன் காரணமாய் இருப்பான் என்று எடுத்துக் கூறினார்கள். நாட்டு நலனை முன்னிட்டு துரியோதனன் தானாக மடிந்து போகும் முறையில் அவனை புறக்கணிப்பது சிறந்தது என்று சொன்னார்கள். ஆனால் புத்திர வாஞ்சை இருந்ததினால் திருதராஷ்டிரன் அதற்கு சம்மதிக்கவில்லை.

வனத்தில் வசித்து வந்த பாண்டுவின் புதல்வர்கள் ஐவரும் ஆரம்பக்கல்வியை ரிஷிகள் பலரிடம் இருந்து கற்று வந்தார்கள். பாண்டுவின் தவ வாழ்வு அமைதியாக நடைபெற்று வந்தது. ஆனால் நல்ல காலம் திடீரென்று கேடு காலமாக மாறியது. பாண்டு மன்னன் தனது சாபத்தை மறந்து தனது இரண்டாவது மனைவி மாத்ரியை அணுகினான். சாபத்தின் விளைவாக பாண்டு மன்னன் மாண்டு போய் கீழே விழுந்தான். மாத்ரியும் தன் கணவனுக்கு பணிவிடை பண்ண வேண்டும் என்று எண்ணி தீர்மானத்துடன் பாண்டுவின் உடலுடன் தானும் உடன் கட்டை ஏறி பரலோக ப்ராப்தி அடைந்தாள். சில காலத்திற்குப் பிறகு காட்டில் இருக்கும் ரிஷி புங்கவர்கள் ஒரு கூட்டமாக கூடி குந்தியையும் பாண்டுவின் ஐந்து புதல்வர்களையும் அஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். பாண்டு மன்னனுக்கும் மாத்ரிக்கும் நிகழ்ந்த துர்பாக்கியத்தை பீஷ்மரிடம் எடுத்து சொன்னார்கள். பிறகு புதல்வர்கள் ஐவரையும் பாட்டனாரான பீஷ்மரிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

ஒருநாள் வியாசர் தனியாக சத்தியவதியின் முன் தோன்றி குரு வம்சத்தின் நற்காலத்திற்கு முடிவு வந்துவிட்டது என்றும் இனி கேடு காலம் தொடர்ந்து வரப்போகிறது என்றும் தெரிவித்தார். விதவையாய் இருந்த ராணியும் அச்செய்தியை அமைதியாக ஏற்றுக் கொண்டு தவம் செய்யும் பொருட்டு காட்டிற்கு செல்ல தீர்மானித்தாள். தவத்தின் வாயிலாக இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை அடைவது அவள் கொண்டிருந்த குறிக்கோளாகும். தங்களுடைய மாமியாரை பின்தொடர்ந்து போக அம்பிகாவும் அம்பாலிகாவும் தீர்மானித்தார்கள். தனக்கு வாய்ந்த பேரன்கள் அத்தனை பேரையும் நன்கு பராமரிக்க வேண்டும் என்று பீஷ்மரிடம் சத்தியவதி தெரிவித்தாள். கண் தெரியாத திருதராஷ்டிரனை அரசனாக்கி விட்டு குரு வம்சத்து சிம்மாசனத்தின் மீது தகுதிவாய்ந்த அரசன் ஒருவனை அமர்த்தும் வரையில் அவருடைய கடமையை புறக்கணித்து விடலாகாது இன்று பீஷ்மரிடம் சத்தியவதி தெரிவித்தாள். சத்தியவதியின் ஆணையை தலைவணங்கி ஏற்றுக் கொண்ட பீஷ்மர் தமக்கு வாய்த்த கடமையை நிறைவேற்றுவதில் இன்புற்று இருந்தார்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -10

பாண்டு மன்னன் மணம் முடித்துக் கொண்ட ஒரு மாதத்திற்கு பிறகு அஸ்தினாபுரத்திற்க்கு கப்பம் கட்டாமல் இருந்த நாடுகள் மீது படை எடுத்து சென்றான். அப்படிச் சென்றவன் அந்தந்த நாட்டு மன்னர்களை அடக்கி ஆண்டான். அவர்களும் முறையே அஸ்தினாபுரத்துக்கு கப்பம் கட்டினார்கள். பாண்டு புரிந்த இந்த வீரச் செயலை பீஷ்மரும் நாட்டு மக்களும் பெரிதும் பாராட்டினார்கள்.

பாண்டு மன்னனுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் மிக இருந்தது. ஆகையால் அவன் தன் காலத்தின் பெரும் பகுதியை வனத்தில் வேட்டையாடுவதிலேயே கழித்தான். அவனுடைய மனைவிமார்களாகிய குந்தியும் மாத்ரியும் தங்கள் கணவனோடு காட்டிலேயே காலம் கழித்து வந்தார்கள். ஒரு நாள் இரண்டு மான்கள் ஒன்றாக இன்பத்துடன் இருக்கும் போது பாண்டு மன்னன் அவைகள் மீது அம்பு எய்து கொன்றான். அதன் விளைவாக பாண்டு மன்னனுக்கு சாபம் ஒன்று வந்தது. இன்பத்தின் வசப்பட்டு பாண்டு தன் மனைவியை தழுவினால் அவனுக்கு மரணம் ஏற்படும் என்பது அந்த சாபம். அந்த சாபம் அவனை துயரத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால் ஆயுள் காலம் முழுவதிலும் அவன் மகப்பேறு அற்றவனாய் இருக்கும் நிர்ப்பந்தம் அவன் மீது சுமத்தப்பட்டது. ஆகவே பாண்டுவும் அவனுடைய மனைவிகள் இருவரும் தவ வாழ்வில் ஈடுபட எண்ணினர். இச்செய்தி அஸ்தினாபுரத்திற்க்கு எடுத்து செல்லப்பட்டது. ராஜரீதிக்கு உரிய நகைகளும் பிறவும் வேலைக்காரர்கள் மூலம் அரண்மனைக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

சிறிது காலத்திற்குப் பிறகு பாண்டு மன்னன் தனக்கு வாரிசு இல்லாததை குறித்து கவலையுற்று இருந்தான். இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்வது எப்படி என்று குந்தியோடு ஆலோசனை செய்தான். குந்தியும் தான் சிறுமியாய் இருந்த பொழுது துர்வாச மகரிஷி தனக்கு மந்திரம் ஒன்று உபதேசம் செய்தார் என்று தெரிவித்தாள் அதன்படி அந்த மந்திரத்தை பயன்படுத்தி எந்த தெய்வத்தை வேண்டினாலும் அந்த தெய்வாம்சத்தோடு மகப்பேறு பெறுவது சாத்தியம் என்று அவள் தெரிவித்தாள். புத்துயிர் வந்தது போன்று உற்சாகம் பிறந்தது பாண்டு மன்னனுக்கு. தர்மதேவதையை வரவழைத்து மகப்பேறு தரும்படி வேண்டிக் கொள்ளுமாறு குந்தியிடம் பாண்டு மன்னன் தெரிவித்தான் அதன்படியே அவர்களுக்கு செல்வன் ஒருவன் பிறந்தான். அவனுக்கு யுதிஷ்டிரன் என்று பெயர் கொடுத்தார்கள். யுத்தத்தில் ஆசையாக இருப்பவன் என்பது அந்த பெயரின் பொருளாகும். தர்மத்தை கடைபிடிப்பதிலும் அவன் தளராது இருந்தான். பிறகு வாயு தேவதையை வரவழைத்து பீமன் என்னும் இரண்டாவது மகனை பெற்றெடுத்தாள். வல்லமை பெற்றவன் என்பது அந்த பெயரின் பொருளாகும். பீமன் பிறந்த பொழுதே அரசர்களுக்கு தங்களை அறியாமலேயே நடுக்கம் உண்டாயிற்று என புராணம் கூறுகின்றது. அதற்கடுத்தபடியாக தேவேந்திரனுடைய வரப்பிரசாதத்தால் அர்ஜுனன் பிறந்தான்.

அதன் பிறகு துர்வாச மகரிஷியிடமிருந்து கற்றிருருந்த மந்திரத்தை மாத்ரிக்கு உபதேசித்தாள். இரட்டையர்களாகிய அசுவினிகளை எண்ணிக்கொண்டு மாத்ரி அந்த மந்திரத்தை ஜெபித்தாள். அதன் விளைவாக அவளுக்கு நகுலன் சகாதேவன் என்னும் இரட்டையர்கள் பிறந்தார்கள். இவ்வாறு பாண்டவ சகோதரர்கள் ஐந்து பேர் ஆனார்கள்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -9

சத்யவதி கூறியபடி வியாசரை வரவேற்கும் முறை அடுத்தபடியாக அம்பாலிகாவுக்கு வந்தது. கரடுமுரடாக தென்பட்ட அந்த உருவத்தை பார்த்து அவள் முகம் வெளுத்துப் போய்விட்டது. அதன் விளைவாக அவளுக்கு பிறந்தவன் நிறத்தில் வெளுத்து இருந்தான். அவன் பாண்டு என அழைக்கப்பட்டான். முதல் மகன் கண் தெரியாதவனாக இருக்கும் படியால் அம்பிகாவுக்கு மற்றொரு மகப்பேறு தரும் படி வியாசரிடம் சத்தியவதி வேண்டிக் கொண்டாள். வியாசரும் அதற்கு சம்மதித்தார். ஆனால் அந்த ஏற்பாட்டுக்கு இணங்காத மருமகள் தனக்கு பதிலாக தன்னுடைய அழகிய பணிப்பெண் ஒருத்தியை அனுப்பி வைத்தாள். வியாசரிஷியின் தெய்வீக பாங்கை கருத்தில் கொண்டு அந்த பெண் பக்திபூர்வமாக அவரை வரவேற்றாள். மூன்றாம் மகனாகிய விதுரன் அவளால் பெற்று எடுக்கப்பட்டான். அவனிடத்தில் ஞானம் நிறைந்து இருந்தது. ஆனால் ராஜரீதி அவனிடம் அமையவில்லை.

வியாசர் தம் தாய் சத்தியவதியிடம் இத்தகைய செயலுக்காக தம்மை மீண்டும் அழைக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார். இதற்கு சத்தியவதியும் ஒப்புக்கொண்டார். இவ்வாறு அமைந்த மூன்று குழந்தைகள் சிறுவர்களாக இருந்தார்கள். ஆகையால் பீஷ்மர் அவர்களின் பிரதிநிதியாக இருந்து அரசாங்க காரியங்களைக் கவனித்தார். மேலும் குழந்தைகளின் கல்வி விஷயத்திலும் அவர் கருத்தைச் செலுத்தினார். கல்வி ஆட்சிமுறை போர்த்திறமை போருக்கு உரிய ஆயுதங்களை கையாளுதல் ஆகிய கலைகள் அனைத்தையும் பீஷ்மர் அவர்களுக்கு புகட்டி வந்தார். தர்மத்தின் பாங்குகள் அனைத்தும் அவர்களுக்கு புகட்டினார். நாடு முழுவதும் மன திருப்தி ஓங்கியிருந்தது.

காந்தார நாட்டு ராஜ குடும்பத்தில் இருந்து திருதராஷ்டிரனுக்கு திருமணம் செய்து வைக்க பீஷ்மர் விதுரருடன் ஆலோசனை செய்தார். கண் தெரியாமல் இருந்த ராஜகுமாரன் ஒருவனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுக்க அந்த நாட்டு அரசனாகிய சுபலன் முதலில் தயங்கினான். பின்பு ராஜரீதியையும் மற்ற விஷயங்களையும் கருத்தில் கொண்டு தன் செல்வியை அவ்வரசனுக்கு விவாகம் செய்து வைத்தான். தனக்கு அமைய இருக்கும் அரசன் பிறவியில் இருந்தே கண் தெரியாதவன் என்பதை அறிய வந்த ராஜகுமாரியான காந்தாரி தன் கண்களை தானே துணியால் கட்டிக்கொண்டு பார்வையற்றவளாக இருக்க தீர்மானித்தாள். தனக்கு அமையும் கணவருடைய பாணியிலேயே தானும் பார்வையற்று இருப்பதே சரியானது என அவள் தீர்மானம் செய்து கொண்டாள். சகுனி என்பவன் காந்தாரியின் சகோதரன் அவன் மிகவும் மகிழ்வுடன் தன் உடன் பிறந்தவளான காந்தாரியை குரு வம்சத்தின் தலைமை பட்டணமான அஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் சென்றான்.

திருதராஷ்டிரன் கண் தெரியாத காரணத்தினால் அரசனாக சிம்மாசனத்தில் வீற்றிருக்க தகுதியற்றவன் ஆனான். ஆகையால் பீஷ்மர் இரண்டாவது சகோதரனாகிய பாண்டுவை நாட்டிற்கு அரசனாக்கினான். மேலும் நாட்டை ஆண்டு வந்த பாண்டு அரசனுக்கு மணமுடித்து வைக்க பீஷ்மர் தீர்மானம் பண்ணினார். அப்போது நிகழ்ந்த சுயம்வரமொன்றில் குந்தி என்ற இளவரசி பாண்டு மன்னனே தன் கணவனாக மாலை சூட்டி ஏற்றுக்கொண்டாள். இந்த நிகழ்ச்சி பீஷ்மருக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. சில காலத்திற்கு பிறகு பாண்டுவிற்கு இரண்டாவது மனைவியாக மாத்ரி என்பவளை பீஷ்மர் திருமணம் செய்து வைத்தார். மத்திர நாட்டு மன்னனாகிய சல்லியனுக்கு அவள் தங்கையாவாள்.

Related image