அர்ஜூனன் தேரின் கொடியில் அனுமன்

அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது. ராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி என்றால் ஏன் அவர் தன் வில்லினால் அம்பைக்கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை. வானரங்களை வைத்து கல்லினால் ஏன் பாலம் கட்டினார் எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்பினான். பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்தபோது ஒரு நதியின் அருகே அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருவம் கொண்டு அமர்ந்து ராமநாமம் ஜபம் செய்து கொண்டிருப்பதை பார்த்தான். அவரிடம் சென்று ஏய் வானரமே உன் ராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார் என்றான் கர்வமாக. தியானம் கலைந்த அனுமன் எதிரே நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்துகொள்கிறார். அவன் கர்வத்தை ஒடுக்க எண்ணுகிறார்.

வில்லினால் கட்டப்பட்ட சரப்பாலம் என் ஒருவன் பாரத்தையே தாங்காது எனும் போது எப்படி ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தையும் தாங்கும். ஆகையால் கல்லினால் வானரங்களை வைத்து பாலம் கட்டினார் என்றார் அனுமன். அதற்கு அர்ஜூனன் இந்த நதியின் குறுக்கே நான் அம்பினால் ஒரு பாலம் கட்டுகிறேன். நீயல்ல எத்தனை வானரங்கள் அதில் ஏறினாலும் அந்த பாலம் உறுதியாக நிற்கும் என்கிறான் அர்ஜூனன். பாலம் உடைந்துவிட்டால் வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறப்பேன் என்கிறான். பாலம் உடையவில்லை என்றால் என் ஆயுளுக்கும் உனக்கு அடிமையாக உன் தேர்க்கொடியில் இடம்பெறுவேன் என்கிறான் அனுமன். அர்ஜூனன் அம்பினால் சரப்பாலத்தை கட்டத் துவங்கினான். அனுமன் ஒரு ஓரத்தில் அமர்ந்து ராமநாமம் ஜெபம் செய்யத் தொடங்கினார். அர்ஜூனன் பாலத்தை கட்டி முடித்ததும் அனுமன் அதன் மீது ஏற தனது காலை எடுத்து வைத்தார் உடனே பாலம் தகர்ந்து சுக்குநூறானது. பார்த்தாயா என் ராமனின் சக்தியை என்ற அனுமன் ஆனந்தக் கூத்தாட அர்ஜூனன் வெட்கித் தலைகுனிந்தான்.

போரில் வெற்றி பெற பாசுபாதாஸ்திரத்தை தேடி வந்த நான் தேவையின்றி ஆணவத்தால் ஒரு வானரத்திடம் தோற்றுவிட்டேனே நான் உயிர் துறந்தால் என் சகோதரர்களை யார் காப்பாற்றுவார்கள் கிருஷ்ணா என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறியவாறு சொன்னது போலவே வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறக்க எத்தனித்தான். அனுமன் தடுத்தபோதும் தனது வாக்கிலிருந்து பின்வாங்க அர்ஜூனன் தயாராக இல்லை. அர்ஜூனன் குதிக்க எத்தனித்தபோது என்ன நடக்கிறது இங்கே என்ன பிரச்சனை என்று ஒரு குரல் கேட்டது. குரல் கேட்ட திசையில் ஒரு அந்தணர் தென்பட்டார். இருவரும் அவரை வணங்கி நடந்ததை கூறினார். பந்தயம் என்றால் சாட்சி என்ற ஒன்று வேண்டும். சாட்சியின்றி நீங்கள் பந்தயத்தில் ஈடுபட்டதால் அது செல்லாது. மற்றொருமுறை நீ பாலம் கட்டு மற்றொருமுறை இந்த வானரம் அதை உடைத்து நொறுக்கட்டும் பிறகு முடிவு செய்துகொள்ளலாம் யார் பலசாலி என்று அந்தணர் கூற இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இரண்டாவது முறை கட்டுவதால் மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்று கருதிய அர்ஜூனன் கிருஷ்ணனரை நினைத்துக்கொண்டு கிருஷ்ண கிருஷ்ண என்று சொல்லியபடி பாலம் கட்டினான். தன் பலம் தனக்கே தெரியாது அனுமனுக்கு. இருப்பினும் முதல்முறை பாலத்தை உடைத்திருந்தபடியால் கர்வம் சிறிது தலைக்கு ஏறியிருந்தது. இம்முறை ராம நாம ஜெபம் செய்யவில்லை. அர்ஜூனன் பாலம் கட்டியவுடன் அதில் ஏறுகிறார் நிற்கிறார் ஓடுகிறார் ஆடுகிறார் பாலம் ஒன்றும் ஆகவில்லை. அனுமனுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

அந்தணரை நோக்கி வந்து யார் நீங்கள் என்று கேட்கிறார் அனுமன். அந்தணரின் உருவம் மறைந்து அங்கு சங்கு சக்ரதாரியாக கிருஷ்ணர் காட்சியளிக்கிறார். இருவரும் அவர் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்றனர். நீங்கள் இருவருமே தோற்கவில்லை. வெற்றி பெற்றது கடவுள் பக்தியும் இறைவனின் நாமமும் தான். அர்ஜூனன் முதல் தடவை பாலம் கட்டும்போது தன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்கிற அகந்தையில் என்னை மறந்து பாலம் கட்டினான். அனுமன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று ராம நாமத்தை ஜபித்தான். ராம நாமம் தோற்காது. எனவே முதல் முறை அனுமன் வென்றான். இரண்டாம் முறை அகந்தை அழிந்த அர்ஜூனன் கிருஷ்ணா கிருஷ்ணா என்று நினைத்தபடி பாலம் கட்டினான். அனுமன் தன் பலத்தாலே தான் வென்றோம் என்று கருதி ராமநாமத்தை மறந்தான். எனவே இரண்டாம் முறை அர்ஜூனன் வென்றான். எனவே இருமுறையும் வென்றது இறைவனின் நாமம்தான் தவிர நீங்கள் அல்ல என்றார்.

கர்வம் தோன்றும் போது கடமையும் பொறுப்புக்களும் மறந்து விடுகின்றன. உங்கள் இருவருடைய பக்தியும் அளவுகடந்தது சந்தேகமேயில்லை. ஆனால் தன்னால் முடியும் என்று கர்வத்துடன் எண்ணும் போது இறை நாமத்தையும் அனைதுத்தும் அவர் செயலே என்பதையும் மறந்துவிட்டீர்கள். அதை உணர்த்தவே இந்த சிறிய நாடகம். மேலும் அர்ஜூனா இந்த வானரன் வேறு யாருமல்ல சிரஞ்சீவி அனுமனே என்றார். உடனே அனுமன் தனது சுய உருவைக் காட்டினார். அர்ஜூனன் அவரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். அனுமனை நோக்கி திரும்பிய கிருஷ்ணர் ஆஞ்சநேயா பாரதப்போரில் அர்ஜூனனுக்கு உன் உதவி தேவை. நீ போர் முடியும்வரை அவன் தேர் கொடியில் இருந்து காக்கவேண்டும். அதன் பொருட்டே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினேன். நீ இருக்கும் வரை அந்த இடத்தில எந்த மந்திர தந்திரங்களும் வேலை செய்யாது என்றார். அப்படியே ஆகட்டும் பிரபோ என்று அவரிடம் மறுபடியும் ஆசிபெற்றான் அனுமன்.

பயத்தை எதிர்த்து நில்

காசி திருத்தலம் கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது. இங்கு காசி விசுவநாதரும் விசாலாட்சியும் எழுந்தருளியிருக்கிறார்கள். ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் காசியில் துர்க்கை கோயிலின் மதில்சுவரையொட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை அங்கிருந்த ஒரு குரங்குக் கூட்டம் பார்த்தது. உடனே குரங்குக் கூட்டம் கீறிச்சிட்டு பெரும் கூச்சலுடன் விவேகானந்தரைச் சூழ்ந்துகொண்டது. இந்த நிலையில் அவர் முன்னேறுவதற்குத் தயங்கிப் பின்வாங்கினார். அதைப் பார்த்த சில குரங்குகள் அவர் மீது முரட்டுத்தனமாகப் பாய்ந்தன. சில குரங்குகள் அவரைப் பிறாண்டின சில குரங்குகள் அவரைக் கடித்தன சில குரங்குகள் அவரது உடையைப் பிடித்திழுத்தன. இந்த இக்கட்டான நிலையில் விவேகானந்தர் குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்கு அங்கிருந்து ஓட ஆரம்பித்தார். ஆனால் அவர் ஓடினாலும் குரங்குகள் பின்தொடர்ந்து அவரை விடாமல் துரத்தின. இந்தக் குரங்குகளிடமிருந்து தப்புவதற்கு வழியில்லை என்று அவர் நினைத்தார். விவேகானந்தர் ஓடிக்கொண்டிருப்பதையும் ஒரு குரங்குக் கூட்டம் அவரைத் துரத்துவதையும் சற்று தூரத்திலிருந்த சந்நியாசி ஒருவர் பார்த்தார்.

உடனே அவர் விவேகானந்தரைப் பார்த்து நில் குரங்குகளை எதிர்த்து நில் என்று உரத்த குரலில் கூவினார். அந்தச் சொற்கள் விவேகானந்தரின் காதுகளில் விழுந்தன. அவர் புதிய ஓர் ஊக்கம் பெற்றார். உடனே ஓடுவதை நிறுத்தி துணிவுடன் குரங்குகளை நோக்கித் திரும்பினார். இப்போது அவர் குரங்குளை நோக்கி முனைப்புடன் முன்னேறத் தொடங்கினார். அவர் உறுதியுடன் வீறுடன் குரங்குகளை எதிர்க்கும் நிலையில் இருந்தார். அவ்வளவுதான் அவரது தோற்றத்தைப் பார்த்து குரங்குக் கூட்டம் பயந்துவிட்டது இப்போது அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இவர் நம்மைத் தாக்குவார் இவரிடமிருந்து இப்போது நாம் எப்படியும் தப்பிக்க வேண்டும் இவரிடமிருந்து நாம் தப்பித்தால் போதும் என்று குரங்குகள் நினைத்து அங்கிருந்து பின்வாங்கி மிகவும் வேகமாக வந்த வழியில் திரும்பி ஓட ஆரம்பித்தன. இந்த நிகழ்ச்சி விவேகானந்தரின் உள்ளத்தில் மிகவும் நன்றாகப் பதிந்துவிட்டது.

இதை அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் நியூயார்க்கில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் கூறினார். அந்தச் சொற்பொழிவில் அவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினையைப் பற்றியும் இவ்விதம் குறிப்பிட்டார்: இது நம் வாழ்க்கை முழுவதற்கும் நல்ல ஒரு படிப்பினையாகும். பயத்தை எதிர்த்து நில் தைரியமாகப் பிரச்னைகளை எதிர்த்து நில் ஒருபோதும் அவற்றுக்கு பயந்து ஓடாதே இவற்றுக்கு நாம் பயந்து ஓடாமல் இருந்தால் அந்தக் குரங்குக்கூட்டம் போலவே துன்பங்களும் நம்மிடமிருந்து விலகி ஓடிவிடும். மனிதனைக் கீழ்நிலைக்கு இழுத்துச் செல்லும் இயற்கையின் வேகங்களையும் பிரச்னைகளையும் நாம் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றிற்கு ஒருபோதும் பணிந்துவிடக் கூடாது. கோழைகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. அச்சத்தை எதிர்த்து நில்லுங்கள் துன்பங்களை எதிர்த்து நில்லுங்கள் அறியாமையை எதிர்த்து நில்லுங்கள்.

ஆயிரம் காளியம்மன்

பல நூறு ஆண்டுகளுக்கு முன் கலிங்க தேசத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் தன்நாடு செழிக்கவும் மக்கள் நலமாக இருக்கவும் என்ன வழி என்று சான்றோர்களையும் சாஸ்திர வல்லுநர்களையும் கேட்டான். அன்னை காளி தேவிக்கு ஓர் ஆலயம் அமைத்து தினமும் ஆயிரம் பொருட்களால் அர்ச்சனை ஆராதனை செய்ய வேண்டும். ஒரு நாள் பூ வைத்தால் அடுத்த நாள் பழம். அதற்கு மறு நாள் பலகாரம் இப்படி மாற்றி மாற்றி வைக்க வேண்டும். ஒரு நாள் வைத்து அதே பொருள் அடுத்த நாள் கூடாது. இப்படி தொடர்ந்து பூஜித்தால் அம்பிகை மனம் இரங்குவாள். நீ வேண்டுவதெல்லாம் கிடைக்கும். அவர்கள் சொன்னார்கள். அப்படியே அரசன் ஐந்து ஆண்டுகள் பொறுமையாக வழிப்பட்டான். அதற்கு அடுத்த நாள் பூஜைக்கான நேரம் நெருங்கியது. அவசர அவசரமாக ஓடி வந்தார் மந்திரி. மன்னா நேற்று வரை விதவிதமான பொருட்களை காணிக்கையாக வைத்து விட்டோம். ஆனால் இன்று எதை வைத்து பூஜை செய்வது என்றே தெரியவில்லை. எல்லாம் முன்பு வைத்த பொருட்களாகவே இருக்கின்றன. பதட்டாமாக அவர் சொன்னது அரண்மனை முழுக்க எதிரொலித்தது. அது நகரம் நாடு என பரவி எல்லோரையும் தொற்றிக்கொண்டது. என்ன செய்ய போகிறார் மன்னர் என்று எல்லோரும் பதைபதைத்தார்கள். செய்யத் தவறினால் தெய்வ குற்றம் வந்துவிடுமே என்று தவித்தார் அரசர்.

அரசன் முன்னிலையில் மொத்தம் ஆயிரம் பேர் வந்தார்கள். வந்தவர்களில் தலைவர் சொன்னான். வேந்தே கவலைப்பட வேண்டாம். நானும் எங்கள் இனத்தவருமாக மொத்தம் ஆயிரம் பேர் இதோ வந்திருக்கிறோம். எங்களையே காளி தேவிக்கு காணிக்கையாக அர்பணித்து பூஜைசெய்யுங்கள். சிலிர்த்துபோனான் அரசன். பரவசபட்டார்கள் ஊர்மக்கள். நாட்டுக்காக இப்படி ஓர் அர்ப்பணிப்பா ஆச்சரியப்பட்டார்கள். பூஜையை ஆரம்பித்தான் மன்னன். ஆயிரம் பேரும் தயாராக வந்து அம்மன் முன் நின்றார்கள். அப்போது ஓர் அசரீரி எழுந்தது. மன்னா உன் வேண்டுதலை ஏற்றேன். உன் நாடு இனி எந்த பஞ்சமும் இல்லாமல் செழித்து விளங்கும். எனக்கு மனப்பூர்வமாக தங்களை அர்ப்பணிக்க வந்தவர்களை நான் என் மக்களாகவே கருதுகிறேன். நீ பூஜிக்கும் என் திருவடிவை உன் இறுதிகாலத்தில் ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிடு அசரீரியாக அம்மன் வாக்கு வந்தது.

நாடு செழிப்பாகவே இருந்ததால் மன நிறைவோடு ஆட்சி செய்தான் மன்னன். தன் வாழ்நாள் நிறைவடையும் காலத்தில் அம்மன் திருவடிவினை அழகான பேழையில் வைத்து ஆற்றில் விட்டான். அம்மனை சுமந்து கொண்டு தொட்டில் போல் அசைந்து ஆடியபடியே ஆற்றில் மிதந்தது பெட்டி உள்ளே ஆனந்தமாக உறங்கியபடி வந்த காளி தங்களையே காணிக்கையாக தர முன் வந்த மக்கள் வசிக்கும் இடத்திற்கு வந்ததும் விழித்தாள். இனத்தவரின் தலைவர் கனவில் தோன்றினால் காளிதேவி. பெட்டிக்குள் தான் இருப்பதை சொன்னாள். உடனே அனைவரும் ஓடினார்கள். அனைவரும் உரிய மரியாதைகளோடு அம்பிகையை அழைத்து வந்தார்கள். என் மக்கள் என்று சொன்ன தாயை தங்கள் வீட்டு பெண்ணாகவே பாவித்து சகல சீர்களுடன் கூட்டிக்கொண்டு வந்தார்கள். கோயில் கட்டினார்கள். பெட்டியை வைத்து திறக்க போனார்கள். இப்போதும் அசரீரி வாக்காக அம்மன் பேசினாள். ஐந்து ஆண்டுகள் மன்னன் பூஜித்த பின் நீங்கள் என் முன் வந்ததால் அந்த நாளில் மட்டுமே இனி நான் வெளியில் வருவேன். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளித்தாலும் என் அருள் என்றென்றும் இங்கே நிலைத்திருக்கும். உங்கள் இனத்தவரே என்னை தொடர்ந்து பூஜிக்கட்டும். அதே சமயம் இங்கே வந்து என்னை யார் வழிப்படாலும் அவர்கள் வேண்டுவன யாவும் கிடைக்கும் என்று அசரீரீயாக கூறினாள். ஐந்து வருடங்கள் கழித்து பேழையைத் திறந்து பார்த்து அதனுள் இருந்த ஓலைக் குறிப்பைக் கொண்டு அன்னைக்குத் தினமும் பூஜை செய்யும் முறையையும் அன்னைக்குப் படைக்கும் பொருட்கள் ஆயிரமாக இருக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டு பூஜைகளை நடத்தினர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூஜை செய்திட முடிவெடுத்து அதன்படி தற்போது பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.

பூஜை செய்து பேழையில் வைக்கப்படும் அம்மன் ஐந்து ஆண்டுகள் கழித்து திறக்கும் போது மஞ்சள் பூச்சி பிடிக்காமல் இருப்பதும் எலுமிச்சை கெடாமல் இருக்கிறது. காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள திருமலைராயன் பட்டினத்தில் இருக்கிறது ஆயிரம் காளியம்மன் ஆலயம்.

கலிபுருஷன்

பரீட்சித்து அரசன் மத்சய நாட்டு இளவரசி உத்தரைக்கும் அபிமன்யுவிற்கும் பிறந்தவன். குருச்ஷேத்திரப் போரில் கௌரவர்களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது பரிட்சித்து உத்திரையின் கர்ப்பத்தில் இருந்தவன். குருச்சேத்திரப் போர் முடிந்த நாளில் அசுவத்தாமன் பிரம்மாஸ்வரத்தை ஏவி உத்தரையின் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல முற்படும்போது கிருஷ்ணர் பரீட்சித்தை காப்பாற்றுகிறார்.

கிருஷ்ணரும் பாண்டவர்களும் கலியுகம் ஆரம்பிக்க போகிறது ஆகவே உலகைவிட்டு செல்ல முடிவெடுத்து பரீட்சித்துவை அரசனாக்கிவிட்டு செல்கின்றனர். குரு நாட்டின் அரசாட்சியை ஏற்கும் பரீட்சித்து கிருபரின் வழிகாட்டுதலில் நல்லாட்சி புரிகிறான். பரீட்சித்து மகாராசா தன் நாட்டை சுற்றிப்பார்த்து வரும்போது ஒரு இடத்தில் மூன்று கால்களை இழந்து ஒற்றைக்காலில் நிற்கும் ஒரு காளையையும் அருகில் கண்ணீர் விட்டுக்கொண்டு நிற்கும் பசுவையும் இவைகளின் அருகே சாட்டையுடன் ஒருவன் நின்று காளையை அடிப்பதையும் காண்கிறான்.

மூன்று காலை இழந்து நிற்கும் காளை தர்மதேவதை. கிருதயுகத்தில் தர்மதேவதையான இந்த காளைக்கு நான்கு கால்கள். திரேதாயுகத்தில் தர்மம் குறைந்ததால் ஒரு கால் குறைந்து கால்கள் மூன்றானது. துவாபரயுகத்தில் மற்றொரு காலை இழந்தது. கலியுகத்தில் கலிபுருஷனிடம் அதர்மம் கூடியிருந்ததால் இன்னொரு காலையும் இழந்து ஒற்றைக் காலில் நிற்கிறது தர்மதேவதை. அருகே நிற்கும் பசு தான் பூமாதேவி. கலிபுருஷனின் அதர்ம ஆதிக்கத்தைக் கண்டு கண்ணீர் விடுகிறாள் பூமித்தாய். தர்மதேவதையோ மனிதர்களைக் காப்பதற்காக உருவெடுத்து வந்துள்ளது. ஆனால் மனிதர்களோ தர்மத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கிறார்கள். இதனால் காளையின் மூன்று கால்கள் இல்லாமல் போய்விட்டன. சாட்டையுடன் காளையின் அருகில் நின்று காளையை மிரட்டி அடித்துக் கொண்டிருப்பவன் தான் கலிபுருஷன். தர்மத்தையே மிரட்டும் வலிமை கொண்டு அதர்மத்தை ஆட்சிபுரிய அனுமதித்தவன் தான் இந்த கலிபுருஷன். பரீட்சித்து மகாராஜாவுக்குப் புரிந்து விட்டது. எதிரே நிற்பவன் கலிபுருஷன்.

கிருஷ்ணர் மறைந்தவுடன் நிலவுலகில் அதர்மத்தை நிலைநாட்ட கலிபுருசன் அடி எடுத்து வைத்துவிட்டான். உடனே தனது வாளை எடுத்து நான் இருக்கும் வரையில் தர்மம் அடிபடுவதை அனுமதிக்கமாட்டேன் என்று கூறி கலிபுருசனை வெட்ட தயாராகிறான் பரீட்சித்து. கலிபுருஷன் அஞ்சுகிறான். பாண்டவர் வம்சத்தில் வந்தவன் இந்த பரீட்சித்து அவனை வெற்றி பெற இயலாது. கலிபுருஷன் பரீட்சித்து மகாராஜாவிடம் சரணடைகிறான். சரணடைந்தவனைக் காப்பது முறை. எனவே கொல்லாமல் விடுகிறான் பரீட்சித்து. இந்த நிலவுலகில் ஏதாவது ஓர் இடத்தைக் காண்பியுங்கள் நான் அங்கே போய் பிழைத்துக் கொள்கிறேன் என்று கலிபுருஷன் பரீட்சித்துவிடம் கெஞ்சுகிறான். பரீட்சித்து மகராஜா கலிபுருசனுக்கு நான்கு இடங்களை ஒதுக்கீடு செய்து கொடுக்கிறார்.

  1. சூதாட்டம் ஆடும் இடம்
  2. மது அருந்தும் இடம்
  3. பெண்களை அவமரியாதை செய்யும் இடம்
  4. பிராணிகளை வதை செய்யும் இடம்

கலிபுருஷனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. இந்த இடம் போதவில்லை என்று கூறி மேலும் சில இடங்கள் கேட்கிறான். பரீட்சித்து மகராஜா மேலும் நான்கு இடங்களை கொடுக்கிறார்.

  1. தங்கம் இருக்கும் இடம்
  2. பொய் பேசப்படும் இடம்
  3. ஆணவம் செருக்கு இருக்கும் இடம்
  4. காமம் கோபம் இருக்கும் இடம்

கலிபுருஷனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. இந்த இடம் போதவில்லை என்று கூறி மேலும் சில இடங்கள் கேட்கிறான். பரீட்சித்து மகராஜா மேலும் இரண்டு இடங்களை கொடுக்கிறார்.

  1. பேராசை இருக்கும் இடம்
  2. பகைமை இருக்கும் இடம்

திருப்தி அடைந்த கலி நான் இருக்கும் இந்த 10 இடங்களில் உங்களுடைய மக்கள் யாரும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். யாரையும் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று உத்திரவாதம் கொடுத்து உலகத்தில் கலியுகத்தை ஆரம்பிக்கின்றார் கலிபுருசன்.

சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சி

ரஷ்ய விஞ்ஞானி டாக்டர் விளாதி மீரின் என்பவரின் ஆராய்ச்சியில் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கூறுகிறார். லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் தனக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒரு பொருள் தருவதாகவும் இருக்கிறது என்கிறார். குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால் அது மழை தரும் நெருப்புத் தரும் காற்று தரும் கேட்ட எல்லாம் தரும் என்றும் கூறுகிறார்.

சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரம் என்கிறார். டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியது. இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளம். அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறது. ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும் ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த கூட்டுறவோடும் செயல்படுகிது. சிவமூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர் மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்.

இந்த பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும் இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன் நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப்புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. இந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா ஐரோப்பா கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் கிராண்ட் கன்யான் என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் சிவம், விஷ்ணு, பிரம்மன் மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றன. ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார். உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும் அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட அல்லது உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து. இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தவர்

கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதல் அவருக்குப் பணிவிடைகள் செய்து தேரோட்டி பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர் உத்தவர். இவர் தனது வாழ்நாளில் தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ வரங்களோ கிருஷ்ணரரிடம் கேட்டதில்லை. துவாபரயுகத்தில் தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில் கிருஷ்ணர் உத்தவரிடம் இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும் நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால் நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள் தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன் என்றார். தனக்கென எதையும் கேட்காவிட்டாலும் சிறு வயது முதலே கிருஷ்ணனின் செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருந்த பல கிருஷ்ணனின் லீலைகள் புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன. அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.

கிருஷ்ண நீ வாழச் சொன்ன வழி வேறு. நீ வாழ்ந்து காட்டிய வழிவேறு. நீ நடத்திய மகாபாரத நாடகத்தில் நீ ஏற்ற பாத்திரத்தில் நீ புரிந்த செயல்களில் எனக்குப் புரியாத பல விஷயங்கள் உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா என்றார் உத்தவர். கிருஷ்ணர் சம்மதிக்க உத்தவர் கேட்க ஆரம்பித்தார். கிருஷ்ணா நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக கடைசி வரை பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பவை மட்டுமல்ல நடக்கப் போவதையும் முன் கூட்டியே நன்கு அறிந்த ஞானியான நீ உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின் படி முன்னதாகவே சென்று யுதிஷ்டிரா வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் ஏன் அப்படிச் செய்யவில்லை. விளையாட ஆரம்பித்ததும் யுதிஷ்டிரர் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து வஞ்சகர்களுக்கு நீதி பாடம் புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. யுதிஷ்டிரன் செல்வத்தை இழந்தான். தன் நாட்டை இழந்தான். தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால்விட்டான் துரியோதனன். அப்போதாவது உனது தெய்வீக சக்தியால் அந்த பொய்யான பகடைக்காய்கள் யுதிஷ்டிரனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக திரௌபதியின் துகிலை உரித்து அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போது தான் சென்று துகில் தந்தேன் திரௌபதி மானம் காத்தேன் ஆடை தந்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன் குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து சூதர் சபையில் பலர் முன்னிலையில் அவள் ஆடையில் கை வைத்த பிறகு எஞ்சியமானம் என்ன அவளிடம் இருக்கிறது. அவள் அப்போதே இறந்து விட்டாள் உயிர் மட்டுமே ஊசலாடியது எதனைக் காத்ததாக எண்ணி நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்? ஆபத்தான இது போன்றசமயத்தில் உன் பக்தர்களுக்கு உதவாத நீ எப்படி ஆபத்பாந்தவன்? நீ செய்தது நியாயமா தருமமா? என்று மிகக் கடுமையாக குரலில் குழம்பிய மன நிலையில் கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

உத்தவரே விவேகம் உள்ளவனே வெற்றி பெற வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் யுதிஷ்டிரனுக்கு இல்லை. அதனால் தான் யுதிஷ்டிரன் தோற்றான். துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால் பணயம் வைக்க அவனிடம் பணமும் ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி பகடையை உருட்டிச்சூதாடுவார் என்றான் துரியோதனன். அது விவேகம் யுதிஷ்டிரனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு நானும் பணயம் வைக்கிறேன். ஆனால் என் சார்பாக என் கிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான் என்று சொல்லியிருக்கலாம். யுதிஷ்டிரன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்து விட்டான். இதனை மன்னித்து விடலாம். ஆனால் அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். விதி வசத்தால் சூதாடஒப்புக் கொண்டேன். இந்த விஷயம் கிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது கடவுளே என்று மனதில் எண்ணிக்கொண்டான். கிருஷ்ணன் மட்டும் சூதாட்டமண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன். பீமனையும் அர்ஜுனனையும் நகுல சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும் தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர என்னைக் கூப்பிடவில்லை. அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது திரௌபதியும் என்னை கூப்பிடவில்லை. அவளும் தனது பலத்தையே நம்பி சபையில் வந்து வீண் வாதங்கள் செய்து கொண்டிருந்தாள். என்னைக் கடைசி வரை கூப்பிடவில்லை. துச்சாதனன் துகிலுரித்த போது தனது பலத்தால் போராடாமல் அபயம் கிருஷ்ணா அபயம் எனக் குரல் கொடுத்தாள் திரௌபதி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போது தான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்சம்பவத்தில் என் மீது என்ன தவறு என்று பதிலளித்தார் கிருஷ்ணர்.

அப்படி என்றால் நீ கூப்பிட்டால் தான் வருவாயா கிருஷ்ணா. நீயாக நீதியை நிலை நாட்ட ஆபத்துகளில் கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு வரமாட்டாயா என்று கேட்டார். உத்தவா மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை. அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் சாட்சி பூதம் மட்டுமே நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவன் மட்டுமே. அது தான் தெய்வ தர்மம் என்றார். அப்படியானால் நீ அருகில் நின்று நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்று கேட்டார் உத்தவர். அதற்கு கிருஷ்ணர். உத்தவரே நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நீங்கள் நன்றாக கவனியுங்கள்.

நான் உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் மனப்பூர்வமாக உணரும் போது உங்களால் தவறுகளையோ தீவினை செயல்களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. நான் உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் மறந்துவிடும் போதும் எனக்குத் தெரியாமல் ஏதாவது தீவினையைகளை மறைத்து எதையாவது செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செய்கிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அப்போதுதான் நடக்கிறது. எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று யுதிஷ்டிரன் நினைத்தானே அது அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும் எல்லோருடனும் இருப்பவன் என்பதை யுதிஷ்டிரன் உணர்ந்திருந்தால் இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் என்றார் கிருஷ்ணர். உத்தவர் தனது கேள்விக்கு கிடைத்த பதிலில் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். அவனின்றி ஓர்அணுவும் அசையாது என்ற நம்பிக்கையுடன் சரணாகதி அடைபவனுக்கு எந்த துன்பமும் இல்லை.