ராமாயணம் 7. உத்தர காண்டம் முன்னுரை பகுதி – 1

ராமாயணம் வடமொழியில் வால்மீகி எழுதிய இதிகாசமும் தமிழில் கம்பர் எழுதிய கம்பராமாயணமும் யுத்த காண்டம் பகுதியுடன் நிறைவு பெறுகிறது. ராமர் பல்லாண்டு நெறி தவறாமல் ஆட்சி செய்ததை விளக்கி ராமாயணத்தை வால்மீகியும் கம்பரும் நிறைவு செய்து விட்டார்கள். உத்தர காண்டம் பகுதி வால்மீகி மற்றும் கம்பரின் காலத்திற்குப் பின்னால் வந்தவர்களே எழுதினார்கள். உத்தர என்ற சொல்லுக்கு பின்னால் என்றும் கடைசி என்றும் பொருள். உத்தர காண்ட வரலாற்றை உத்தர ராமசரிதம் என்ற பெயரில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பவபூதி என்ற வடமொழி அறிஞர் நாடகமாக இயற்றினார். தமிழில் கம்பரின் சீடரான ஒட்டக் கூத்தர் உத்தர காண்ட வரலாற்றை இயற்றினார். ஒட்டக் கூத்தருக்கு வாணிதாசன் என்ற பெயரும் உண்டு என்று சோழ மண்டலச் சதகத்தில் சொல்லப்படுகின்றது. இவர் இயற்றிய பாடல்களின் மாண்பைக் கண்டு சோழன் இவரைத் தம் அரசவைப் புலவராக ஆக்கிக் கொண்டார். இவர் தக்கயாகப் பரணி, மூவருலா ஆகிய நூல்களை இயற்றினார். உத்தர காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டது.

ராமர் தான் ஆட்சி செய்யும் அயோத்தியில் இருக்கும் ஒரு சலவைத் தொழிலாளி அவரது மனைவியிடம் சீதையைப் பற்றித் தவறாக பேசிய பேச்சினால் வருத்தமுற்று கர்ப்பிணியான சீதையை காட்டிற்கு அனுப்புவதும், காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகத் தங்குவதும், ஆசிரமத்தில் சீதை லவன் குசன் எனும் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதும், இரு குழந்தைகளுக்கும் வால்மீகி முனிவர் கல்வியும் போர்க்கலைகளையும் கற்பித்தலும், சீதையின் உருவ பொம்மையைத் தனதருகில் வைத்துக் கொண்டு ராமர் அயோத்தியில் அசுவமேத யாகம் செய்ததும், பல நாடுகளை சுற்றி வர அனுப்பப்பட்ட அசுவமேத யாகக் குதிரைகளை லவ குசர்கள் கட்டி வைத்தலும், யாகக் குதிரைகளை மீட்க வந்த சத்துருக்கனன் பரதன் லட்சுமணன் ஆகிய மூவரையும் லவ குசர்கள் போரில் வெல்வதும், இறுதியில் ராமரே நேரில் வந்து லவ குசர்களை சந்தித்து அவர்கள் தனது குழந்தைகள் என்பதைத் தெரிந்து கொண்டு யாகக் குதிரைகளுடன் லவ குசர்களையும் அயோத்திக்கு அழைத்துச் செல்வதும், ராமருடன் திரும்பி செல்வதை விரும்பாத சீதை பிளவுண்ட பூமியில் இறங்கி உடலை விடுவதும், ராமர் பல ஆண்டுகள் அயோத்தியை ஆண்ட பின்னர் தனது நாட்டின் பகுதிகளை லவ குசர்களுக்குப் பிரித்துக் கொடுத்தலும், ராமர் வைகுந்தம் செல்லும் நேரம் நெருங்கி விட்டதை அறிந்து பூமியை விட்டு வைகுந்தம் செல்லுவதும் ஆகிய இவை அனைத்தும் உத்தர காண்டத்தில் கூறப்படுகிறது.

ராமாயணத்தை பல இடங்களில் உபன்யாசங்கள் செய்யும் போது யுத்த காண்டத்துடன் முடித்து விடுவார்கள். உத்திர காண்டம் உபன்யாசத்தில் யாரும் செய்வதில்லை. இதற்கான காரணத்தை காஞ்சி மகா பெரியவரிடம் கேட்ட பொழுது அதற்கு அவர் உத்தர காண்டத்தில் ராமர் வைகுண்டம் சென்றார் என்று இருக்கிறது. ராமர் எப்போதும் நம்முடனே இருக்க வேண்டும் வைகுண்டம் செல்லக் கூடாது என்பதால் யாரும் உத்தர காண்டத்தை உபன்யாசமோ பாராயணமோ செய்வதில்லை என்று பதில் அளித்துள்ளார். உத்தர காண்டத்தில் அறிந்து கொள்ள வேண்டிய பல அபூர்வமான செய்திகள் நிறைய இருக்கிறது அதை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு உதாரணமாக அயோத்தியில் ஒரு குடிமகன் சீதையை சந்தேகமாக பேசிய காரணத்திற்காக சீதையை காட்டிற்கு ராமர் அனுப்பி விடுவதிலிருந்து ஒரு நாட்டின் அரசனாக இருப்பவன் 100% மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதோடு மக்களுக்கு ஒரு நாட்டின் அரசியின் மேல் சந்தேகம் இருக்கும் வரை அவள் அந்த நாட்டின் அரசியாக இருக்கக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 50

ராமர் சீதை லட்சுமணன் மூவரும் தண்டகாருண்ய காட்டில் பரத்வாஜர் ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார்கள். அங்கிருந்து தங்களுக்கு நல்ல செய்தி ஒன்று சொல்லி அனுப்பியிருக்கிறார் என்று அனுமன் பரதனிடம் தெரிவித்தார். ராமரிடம் இருந்து நல்ல செய்தி என்ற வார்த்தையை கேட்ட பரதனுக்கு மகிழ்ச்சியில் பேச வார்த்தைகள் வரவில்லை. அனுமன் தொடர்ந்து பேசினார். ராமர் தங்களின் நலனை விசாரித்து விட்டு நாளை இங்கே வருவதாக தகவல் சொல்லி அனுப்பினார். ராமருடன் சீதையும் லட்சுமணனும் அவர்களுடன் அவரது நண்பர்கள் பலரும் வருகிறார்கள் என்றார். இதனைக் கேட்ட பரதன் அனுமனைப் பார்த்து பேரின்பத்தை கொடுக்கும் செய்தியை தாங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள். என்னுடைய அரசராகிய ராமர் என்னை விட்டு பிரிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகாலம் ராமர் என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் தாங்கள் யார் தங்களிடம் ராமருக்கு எப்படி நட்பு ஏற்பட்டது என்றும் தயவு கூர்ந்து சொல்லுங்கள். இத்தனை ஆண்டுகள் ராமரைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த நான் மேலும் அவரைப் பற்றி கேட்டு தெரிந்து மகிழ்ச்சி அடைந்து கொள்கிறேன் என்றான். சீதையை ராவணன் தூக்கிச் சென்றது முதல் ராவணனை அழித்து புஷ்பக விமானத்தில் பரத்வாஜர் ஆசிரமத்தில் ராமர் வந்தது வரை நடந்தவைகள் அனைத்தையும் அனுமன் பரதன் சொல்லி முடித்தார்.

ராமரின் பராக்கிரமத்தை கேட்டு பேரானந்தமடைந்த பரதன் சத்ருக்கனை அழைத்து ராமர் நாளை வருகிறார் இந்த செய்தியை மக்களுக்கு சொல்லி அயோத்தியின் எல்லையிலிருந்து ராமர் வரும் வீதிகள் தோறும் அலங்காரங்கள் செய்து இசை நடனம் என்று அனைத்திற்கும் ஏற்பாடுகள் செய்துவிடு என்று கட்டளையிட்டான். அடுத்த நாள் காலையில் கைகேயி சுமத்ரை கௌசலை மூவருடனும் பரதன் சத்ருக்கனன் மற்றும் மந்திரிகள் படைகள் என்று ஆயிரக்கணக்கான யானைகளுடன் அயோத்தியின் எல்லைக்கு ராமரை வரவேற்க புறப்பட்டார்கள்.

ராமர் கங்கை கரையின் அருகை குகன் இருக்கும் இடத்தில் புஷ்பக விமானத்தில் வந்து இறங்கினார். வேடவர்களின் தலைவன் குகன் ராமரை வரவேற்று உபசரித்தான். குகனின் மரியாதையை ஏற்றுக்கொண்ட ராமர் சீதையுடன் கைகேயி சுமத்ரை கௌசலை மூவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். ராமருடன் இத்தனை ஆண்டு காலம் இருந்த லட்சுமணனை அனைவரும் பாராட்டினார்கள். ராமர் சீதையின் கால்களில் வீழ்ந்து வணங்கிய பரதனும் சத்ருக்கனனும் அவருக்கு தகுந்த மரியாதை செய்தார்கள். பரதன் ராமரிடம் தங்களின் பாதுகைகளை வைத்து இத்தனை ஆண்டு காலம் தங்களின் உத்தரவுப்படி ஆட்சி செய்து வந்திருக்கிறேன் இனி நீங்கள் அரசனாக பதவி ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான். ராமர் பரதனிடமும் சத்ருக்கனனிடமும் தன்னுடன் வந்த அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அனைவரும் அரண்மனை திரும்பினார்கள். ராமரின் வரவினால் அயோத்தி மகிழ்ச்சியில் திளைத்தது. அரண்மனைக்கு சென்றதும் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள். வசிஷ்டர் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனத்தில் ராமரையும் சீதையையும் அமர வைத்து வாழ்த்தினார். ராமர் தன்னுடன் வந்த வானரங்களுக்கும் விபீஷணனுக்கும் தகுந்த மரியாதைகள் செய்து பரிசுகள் அளித்து கௌரவப்படுத்தினார். சுக்ரீவனும் விபீஷணனும் தங்களது இருப்பிடத்திற்கு சென்றார்கள். ராமர் அயோத்தியின் அரசராக நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தார்.

யுத்த கண்டம் முற்றியது. அடுத்து உத்திர காண்டம்

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 49

ராமர் சீதை லட்சுமணன் மூவரும் தங்களது வணக்கத்தை அனைவருக்கும் சொல்லி விட்டு புஷ்பக விமானத்தில் ஏறினார்கள். ராமரின் வேண்டுகோளுக்கிணங்க விபீஷணன் வானரங்கள் அனைவருக்கும் அவர்களது தகுதிக்கேற்றபடி செல்வங்களை கொடுத்து கௌரவித்தான். இதனைக் கண்டு திருப்தி அடைந்த ராமர் அனைவரிடமிருந்தும் விடை பெற்றார். புஷ்பக விமானம் கிளம்ப ஆயத்தமாக இருந்த போது விபீஷணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். வானர தலைவர்கள் அனைவரும் தங்களுடன் அயோத்திக்கு வர விரும்புகின்றார்கள். அவர்களுடன் நானும் தங்களுடன் வர விரும்புகின்றேன் தயவு செய்து எங்களையும் அழைத்துச் செல்லுங்கள் சிறிது நாள் உங்களுடன் இருந்து விட்டு எங்கள் இருப்பிடம் திரும்பி விடுவோம் என்று கேட்டுக் கொண்டான். இதனைக் கேட்ட ராமர் உங்களுடன் அயோத்திக்கு செல்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி அனைவரும் புஷ்பக விமானத்தில் ஏறுங்கள் என்றார். சுக்ரீவன் தனது படைகளை கிஷ்கிந்தை செல்லுமாறு உத்தரவிட்டு அனுமனுடனும் சில வானர தலைவர்களுடனும் விபீஷணனுடனும் புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டான். புஷ்பக விமானம் அங்கிருந்து கிளம்பியது.

ராமர் பரத்வாஜருக்கு மரியாதை செய்யும் பொருட்டு அவரது ஆசிரமத்திற்கு முதலில் வந்து இறங்கினார். ராமரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற பரத்வாஜர் ராமரிடம் பேச ஆரம்பித்தார். நீ இங்கிருந்து கிளம்பியது முதல் யுத்தத்தில் ராவணனை அழித்தது வரை நடந்த அனைத்து சம்பவங்களையும் எனது தவத்தின் சக்தியால் தெரிந்து கொண்டேன் அரிய பல செயல்களை செய்து உனது பராக்கிரமத்தை காட்டியிருக்கிறாய். இந்த நேரத்தில் எனது வேண்டுகோள் ஒன்றே இங்கே வைக்கின்றேன். இன்று ஒரு நாள் இங்கேயே தங்கி எனது விருந்து உபசாரங்களை ஏற்றுக் கொள்ளுமாறு ராமரிடம் கேட்டுக் கொண்டார். ராமரும் அங்கே தங்குவதற்கு சம்மதம் தெரிவித்து பரதனைப் பற்றியும் அயோத்தியில் உள்ளவர்களைப் பற்றியும் பரத்வாஜரிடம் விசாரித்தார். அதற்கு பரத்வாஜர் அனைத்து செல்வங்களும் வசதிகளும் இருந்தாலும் மருஉரி தரித்து தவ வாழ்க்கை வாழ்ந்து வரும் பரதன் உனது பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்துக் கொண்டே அரசாட்சி செய்து வருகின்றான். பரதன் உட்பட அயோத்தியில் உள்ளவர்கள் நீ எப்போது வருவாய் என்று உனது வருகைக்காக காத்திருக்கிறார்கள் என்றார்.

ராமர் பரத்வாஜர் சொன்னதைக் கேட்டு சிறிது நேரம் சிந்தித்து அனுமனை அழைத்து பேச ஆரம்பித்தார். இங்கிருந்து உடனடியாக கிளம்பி அயோத்திக்கு செல்லும் வழியில் இருக்கும் வேடர்களின் தலைவன் குகனை சந்தித்து எனது நலத்தை சொல்லிவிட்டு நாளை அயோத்திக்கு செல்லும் வழியில் சந்திப்பதாக செய்தி சொல்லிவிடு. அங்கிருந்து கிளம்பி அயோத்திக்கு சென்று பரதனை சந்தித்து ராமர் சீதை லட்சுமணனுடன் அவர்களது நண்பர்களுடன் அயோத்திக்கு நாளை வருகின்றார்கள் என்று செய்தியை சொல்லிவிடு என்றார். பரதனிடம் சொல்லும் போது அவனின் முகக்குறிப்புகள் பேச்சு ஆகியவற்றை வைத்து அவனது உள்ளத்தை அறிந்து கொள்ள முயற்சி செய். பதினான்கு ஆண்டு காலம் பரதன் அயோத்தியை ஆட்சி செய்திருக்கிறான். இனி வரும் நாட்களிலும் அயோத்திக்கு அரசனாக இருந்து ஆட்சி செய்ய விரும்பினால் அப்படியே ஆட்சி செய்யட்டும். இதனால் எனக்கு மகிழ்ச்சியே மீண்டும் காட்டிற்கு சென்று தவ வாழ்க்கை வாழ்ந்து கொள்வேன். இந்த காரியத்தை நாளை இங்கிருந்து நாங்கள் அனைவரும் கிளம்புவதற்குள் செய்து முடித்து விடு என்று கேட்டுக் கொண்டார். ராமரை வணங்கிய அனுமன் தன்னுடைய உடலை மானிட ரூபத்திற்கு மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். குகனிடம் செய்த்தியை சொல்லி விட்டு அயோத்தியை சென்றடைந்தார். நகரத்தின் வெளியே ஒரு கிராமத்தில் இளைத்த உடலுடன் முகம் வாடி மான் தோலை உடுத்திக் கொண்டு இருந்த பரதனைக் கண்ட அனுமன் அவர் இருக்கும் குடிலுக்குள் சென்றார்.

திருவாசகம்

  1. திருச்சாழல்

அம்பரமாம் புள்ளித்தோல்
ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர்
எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏது அடுத்தங்கே அமுது
செய்திடினும்
தம்பெருமை தானறியாத்
தன்மையன்காண் சாழலோ.

கேள்வி

உனது பிரானுக்கு பிடித்த உடை போயும் போயும் புலித்தோல் அவன் அமுதமாக விரும்பி அருந்துவது ஆலகால விஷம்? இதில் என்ன பெருமை என்று கூறடி

பதில்:

எம்பெருமான் சிவன் தன்னைக் கொல்ல தாருகா வன முனிவர்களால் ஏவி விடப் பட்ட புலியைக் கொன்று அதை ஆடையாக அணிந்ததையோ அல்லது உலகைக் காக்க ஆலகால விஷத்தை விரும்பி அருந்தியதையோ பறை சாற்றிக் கொண்டதேயில்லை. தனது பெருமையை தானே அறியாத தன்மையவன் அவன் தெரிந்து கொள்.