ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 49

ராமனிடம் சென்ற லட்சுமணன் முனிவர் ஒருவர் வந்திருக்கிறார். யார் என்று தெரியவில்லை. தங்களைக் காண அனுமதி கேட்கிறார் என்று தெரிவித்தான். இதைக் கேட்ட ராமர் முனிவரைக் காண அரண்மனை வாயிலுக்கு வந்தார். மிகுந்த தேஜசுடன் இருந்த முனிவரை கண்ட ராமர் அவருக்கு தக்க மரியாதை செய்து வரவேற்றார். ராமரின் மரியாதைகளை ஏற்றுக் கொண்டு அவரை வாழ்த்தினார் முனிவர். ராமர் முனிவரிடம் பேச ஆரம்பித்தார். மகா முனிவரே தாங்கள் வந்த நோக்கத்தைச் சொல்லுங்கள். என்னால் தங்களுக்கு என்ன காரியம் ஆகவேண்டும் தயங்காமல் கேளுங்கள் என்னால் இயன்றதை செய்கிறேன் என்றார் ராமர். அதற்கு முனிவர் நான் உனக்கு ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன். அதனை உன்னிடம் சொல்ல வேண்டுமானால் சொல்வதற்கு முன்பாக நீ எனக்கு ஒரு உத்திரவாதம் கொடுக்க வேண்டும் அதற்கு சம்மதித்தால் சொல்கிறேன் என்றார். ராமரும் சம்மதிக்க நாம் பேச ஆரம்பித்ததும் இடையில் நம்மை யாரும் பார்த்தாலோ நாம் பேசுவதைக் கேட்டாலோ நீ அவர்களை கொன்று விட வேண்டும் என்றார். உடனே ராமர் லட்சுமணனிடம் சென்று வாசலில் நீ காவலுக்கு நில். மற்ற காவல்காரர்களை அனுப்பி விடு. நாங்கள் உள்ளே பேசிக் கொண்டிருக்கும் போது யார் இடையில் வந்தாலும் அவர்களை கொல்வதற்கு கட்டளையிட வேண்டியிருக்கும் ஆகையால் எச்சரிக்கையுடன் காவலுக்கு இரு என்று சொல்லி விட்டு முனிவருடன் தனது தனி அறைக்கு வந்தார். இனி நீங்கள் கொண்டு வந்த தகவலை என்னிடம் சொல்லலாம் நமக்கு இடையில் யாரும் வர மாட்டார்கள். நீங்கள் கொண்டு வந்த தகவலை கேட்க ஆவலாக இருக்கிறேன் சொல்லுங்கள் என்றார்.

ராமரிடம் பேச ஆரம்பித்தார் முனிவர் வேடத்தில் இருந்த யமதர்மர். பிரம்மா என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார். சகலத்தையும் சம்ஹாரம் செய்யும் காலன் நான். உயிராகப் பிறந்தவர்களின் இறுதி காலத்தில் அவர்களை அழைத்துச் சென்று விடுவது எனது தொழில். ராவணனால் உலகில் மக்கள் பயந்து நடுங்கும் போது அவர்களை காக்க விஷ்ணுவாகிய தாங்கள் மனிதனாக பிறக்க திருவுள்ளம் கொண்டீர்கள். நூறாயிரம் வருடங்கள் மேலும் பல நூறு ஆண்டுகள் நீங்கள் இங்கு வாழ்ந்து விட்டீர்கள். இந்த யுகத்திற்கான மனிதர்கள் கணக்கில் பூர்ண ஆயுள் இது. இப்போது நீங்கள் உங்களின் இருப்பிடமான வைகுண்டத்திற்கு திரும்பிச் செல்லும் காலம் நெருங்கி வந்து விட்டது. நீங்கள் உடனடியாக வைகுண்டம் திரும்பலாம் இல்லையென்றால் தங்களின் விருப்பம் போல சில காலம் இங்கு நீங்கள் தங்கியிருக்கலாம் முடிவு உங்களுடையது. இந்த செய்தியை பிரம்மா என்னிடம் சொல்லி அனுப்பினார் என்று சொல்லி முடித்தார் முனிவர் வடிவில் வந்த யமதர்மர்.

ராமர் முனிவரிடம் பேச ஆரம்பித்தார். பிரம்மாவிடமிருந்து அற்புதமான செய்தியை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். பிரம்மாவின் கூற்றுக்கு நான் சம்மதம் தெரிவிக்கிறேன். அரசனுக்காக இந்த பதவியை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு விரைவாக இங்கிருந்து கிளம்புகிறேன் என்றார் ராமர். ராமரும் முனிவரும் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போது தவ வலிமை மிக்க துர்வாச முனிவர் அங்கு வந்தார். அவருக்கு தகுந்த மரியாதைகள் செய்து வரவேற்றான் லட்சுமணன். ராமரிடம் முக்கியமான தகவலை சொல்ல வேண்டும் எனவே நான் விரைவில் அவரை பார்க்க வேண்டும் என்று ராமரின் அறைக்குள் செல்ல முயற்சித்தார் துர்வாச முனிவர். இதனைக் கண்ட லட்சுமணன் துர்வாச முனிவரிடம் பணிவாக பேச ஆரம்பித்தான். ராமர் மிகவும் முக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார். இடையில் யாருடைய குறுக்கிடும் இருக்கக்கூடாது என்று எனக்கு கட்டளை யிட்டிருக்கிறார். எனவே தங்களுக்கு என்ன காரியம் ஆக வேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள். என்னால் இயன்ற வரை தங்களுக்கு செய்து கொடுக்கின்றேன். என்னிடம் சொல்ல இயலாது என்றால் ராமரின் அனுமதிக்காக சிறிது நேரம் காத்திருக்கள் என்று மரியாதையுடன் கூறினான். இதைக் கேட்ட முனிவர் கோபம் கொண்டார். ஆத்திரம் கண்களை மறைக்க கண்களாலேயே லட்சுமணனை எரித்து விடுபவர் போல பார்த்தார்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 48

ராமர் பிரம்மாவின் வார்த்தைகளில் அமைதியடைந்தார். லவ குசர்களை அழைத்துக் கொண்டு அரண்மனை திரும்பினார். அயோத்திக்கு லவ குசர்கள் வந்ததை மக்கள் திருவிழாவைப் போல் கொண்டாடினார்கள். அரண்மனைக்கு திரும்பிய ராமர் தனது குழந்தைகள் தன்னுடன் வந்திருப்பதை நினைந்து மகிழ்ச்சி அடைந்தாலும் இந்த உலகத்தை விட்டு சீதை சென்றது இந்த உலகமே சூன்யமாக இருப்பதைப் போல் உணர்ந்தார். வால்மீகி முனிவர் எழுதிய ராம கானத்தை பிரம்மா சொன்னபடி தினந்தோறும் கேட்க ராமர் ஏற்பாடுகளை செய்தார். அஸ்வமேத யாக குதிரை உலகம் முழுவதும் சுற்றி யாக சாலைக்குள் வந்தது. யாகத்தை நிறைவு செய்த ராமர் யாகம் செய்த அந்தணர்களுக்கும் வேதியர்களுக்கும் யாகத்திற்கு உதவி செய்தவர்களுக்கும் தட்சணைகள் தானங்கள் கொடுத்து வழி அனுப்பி வைத்தார். யாகம் இனிதாக நிறைவு பெற்றது. ராமர் அனைத்து அரசர்களுக்கு எல்லாம் அரசனான சக்ரவர்த்தி என்று தன்னை அறிவித்துக் கொண்டார். ஆனாலும் ராமருக்கு மன அமைதி அருகில் கூட வர மறுத்தது மிகவும் வேதனையை அனுபவித்தார். லவ குசர்கள் இருவருடனும் மேலும் மேலும் பல யாகங்களைச் செய்தார். இரவு பகல் பார்க்காமல் யாகம் செய்யும் அந்தணர்களுக்கும் வேதியர்களுக்கும் கணக்கில்லாத பசுக்களையும் பெரும் செல்வத்தையும் தானம் கொடுத்து திருப்தி செய்தார். ராமரது ஆட்சியில் நாட்டில் காலத்திற்கு சரியாக மழை பொழிந்தது. மக்கள் ஆரோக்யத்துடன் வாழ்ந்தார்கள். எந்த பிராணியும் வியாதியால் கூட வாடவில்லை. யாரும் அகால மரணம் அடையவில்லை. இந்த விதமான துர்சம்பவங்களும் நடைபெறவில்லை. அனைவருக்கும் நன்மை மட்டுமே கிடைத்தது, மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.

ராமரின் ஆட்சிக் காலம் தர்மத்தின் ஆட்சி என்று போற்றப்பட்டது. ராமர் இவ்வாறு பல ஆண்டு காலம் சிறப்பாக ராஜ்யத்தை ஆண்டார். லட்சுமணனுக்கும் பரதனுக்கும் சத்ருக்கனனுக்கும் திருமணம் நடந்தி வைத்தார் ராமர். மூவருக்கும் தலா இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். லட்சுமணனின் மகன்கள் இருவருக்கும் அங்கதன் சந்திரகேது என்று பெயரிட்டார்கள். பரதனின் மகன்களுக்கு தட்சன் புஷ்கரன் என்று பெயரிட்டார்கள். சத்ருக்கனனின் மகன்களுக்கு சுதாகு சுருதசேனன் என்று பெயரிட்டார்கள். பல ஆண்டு காலம் சென்ற பின் பல விதமான தானங்களும் தர்மங்களும் செய்து வாழ்ந்தவளான ராமரின் தாய் கௌசலை சொர்க்கம் சென்றடைந்தாள். அவளைத் தொடர்ந்து சுமித்ரையும் கைகேயியும் சென்றனர். இவர்களுக்கான பித்ரு தானங்களை ராமர் செய்து முடித்தார். ஒரு நாள் ராமர் தனது சகோதரர்கள் மூவரையும் அழைத்தார். உங்களது மூவரின் மகன்களும் கல்வி கற்று தேர்ந்து விட்டார்கள். தர்மம் நீதி முறைகளைத் தெரிந்து கொண்டு விட்டார்கள். அங்கதனும் சந்திர கேதுவும் தற்சமயம் ராஜ்யத்தை ஆளும் தகுதி பெற்று விட்டனர். இவர்களை ஒரு தேசத்திற்கு முடி சூட்டி அரசர்களாக அமர்த்த வேண்டும். எதிரிகளின் தொந்தரவு இல்லாத நலமாக இருக்கும் இடமாகப் பார்த்து இவர்களுக்கு தகுதியான தேசம் எது என்று தெரிந்து கொண்டு வா என்று லட்சுமணனை கேட்டுக் கொண்டார் ராமர்.

ராமர் இவ்வாறு சொன்னதும் அதற்கு பரதன் பதில் கூறினான். இங்கு காரூபதம் என்ற ஒரு அழகிய தேசம் ஆரோக்யமாக இருக்கிறது அங்கு அங்கதனை நியமிக்கலாம். அதே போல் சந்திர காந்தம் என்ற பெயரில் ஒரு தேசம் இருக்கிறது அங்கு சந்திரகேதுவை நியமிக்கலாம் என்றான். பரதன் சொன்னபடியே அங்கதனையும் சந்திரகேதுவையும் அரசனாக்கி முடி சூட்டினார் ராமர். அங்கதனுக்கு லட்சுமணனும் சந்திரகேதுவுக்கு பரதனும் சென்று நிர்வாகம் செய்வதைப் பற்றி சொல்லிக் கொடுத்தார்கள் சில காலம் சென்றது. பரதனும் சத்ருக்கனனும் ராமருக்கு சேவை செய்வதையே தங்கள் பாக்யமாக கருதி வாழ்ந்து வந்தனர். மூவரும் அரசு நிர்வாகத்தை ஒற்றுமையாக செய்து வந்தனர். ஒரு நாள் எமதர்மர் முனிவரின் வேடத்தை தரித்து அரண்மனை வாசலில் வந்து நின்றார். வாசலில் நின்ற முனிவரை லட்சுமணன் வரவேற்றான். லட்சுமணனிடம் முனிவர் ராமரை பார்க்க வேண்டும் அனுமதி பெற்று வா என்று கேட்டுக் கொண்டார்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 47

ராமர் என்ன நடக்கப் போகிறது என்பதை யுகித்துக் கொண்டவராக சீதையை பிடிக்க அவளருகில் ஓடினார். அந்த கண நேரத்தில் பூமி இரண்டாகப் பிளந்தது. பூமிக்குள்ளிருந்து உத்தமமான சிம்மாசனத்தில் பூமித்தாயான தரணி தேவி திவ்யமான அலங்காரத்துடன் வெளி வந்தாள். சீதையின் கைகளைப் பிடித்து அழைத்துக் கொண்டு தன்னுடைய சிம்மாதனத்தில் அருகில் அமர்த்திக் கொண்டாள். தேவர்கள் இடை விடாமல் மலர் மாரி பொழிந்தனர். பூமித்தாய் தன்னுடைய பூமியிலிருந்து சீதையை ஜனகருக்கு எப்படிக் கொடுத்தாலோ அது போலவே தற்போது சீதையுடன் பூமிக்குள் சென்று விட்டாள். முனிவர்களும் ரிஷிகளும் தேவர்களும் சீதையை வாழ்த்திய சத்தம் விண்ணை முட்டியது. அங்கு ராமருடன் வந்த படைகள் பூமிக்குள் சீதை சென்ற இடத்தையே பார்த்தபடி என்ன செய்வது என்று தெரியாமல் ராமரைப் பார்த்தவாறு திகைத்து நின்றனர். ராமர் ஒன்றும் செய்ய இயலாதவராக துக்கத்துடன் லவ குசர்களை பார்த்தவாறு நின்றார். லவ குசர்கள் வால்மீகி முனிவரை பார்த்தவாறு நின்றனர். ஒருவருக்கொருவர் பார்த்தபடி யாரும் எதுவும் செய்ய இயலாத நிலையில் அந்த இடம் மிகவும் நிசப்தமானது. அனைத்தையும் அறிந்த வால்மீகி முனிவர் அமைதியுடன் நின்றிருந்தார்.

ராமர் மனம் கலங்கியபடி பேச ஆரம்பித்தார். இது போல் சீதைக்கு எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காகத் தான் சீதையின் காதுகளில் இந்த செய்தி விழுந்து விடாமல் பார்த்துக் கொண்டேன். இப்போது வால்மீகி முனிவரிடன் சொல்ல வேண்டிய சூழ்நிலையால் நானே சொல்லி விட்டேன். என்னுடைய சீதையை நான் இனி மேல் பார்க்க மாட்டேன். இது வரை நான் அனுபவிக்காத வேதனை என் மனதை வாட்டுகிறது. கூரிய ஆயுதம் கொண்டு மனதை கீறி கிழிப்பது போல் இந்த வேதனை என்னை தாக்குகிறது. என் சீதை கண் எதிரில் காணாமல் போவதை பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல் நின்று விட்டேன் என்று புலம்பிய ராமர் திடீரென்று கோபத்துடன் பேச ஆரம்பித்தார். முன்பு இலங்கையிலிருந்து சீதையை மீட்டு வந்தது போல இப்பொழுது பாதாளத்திலிருந்து சீதையை எனக்கு மீட்டு வரத் தெரியும் என்ற ராமர் பூமித்தாயே நீ தான் சீதையை ஐனகருக்கு கொடுத்தாய். உன்னுடைய மகளான சீதை புனிதவதி என்று உலகத்திற்கு எடுத்துக் கட்ட உன்னுடனேயே அழைத்துச் சென்று விட்டாய். உலகமும் சீதையைப் பற்றி தெரிந்து கொண்டு விட்டது. அதனால் என்னுடைய சீதையை இப்போது எனக்கு திருப்பிக் கொடுத்துவிடு. நீ திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் என்னையும் உன்னுடனேயே அழைத்துச் சென்று விடு பூமிக்கு அடியில் சீதை இருக்கும் இடத்தில் நானும் இருந்து கொள்கிறேன். இரண்டினில் எதாவது ஒன்றை செய்து விடு. என்னுடைய பேச்சை நீ அலட்சியம் செய்தால் இந்த வனம் மலைகள் எல்லாவற்றையும் சேர்த்து உன்னையும் நாசம் செய்து விடுவேன். பூமியே இல்லாதபடி எங்கும் தண்ணீரால் நிரப்பி விடுவேன் அதற்கு எற்ற தவ பலனும் வலிமையும் என்னிடம் இருக்கிறது விரைவாக சீதையை என்னிடம் கொடுத்து விடு என்றார்.

ராமரின் வருத்தத்தையும் கோபத்தையும் பார்த்த பிரம்மா அவரை சமாதானம் செய்ய தேவர்கள் சூழ அங்கு வந்து ராமரிடம் பேச ஆரம்பித்தார். ராம இப்படி வருத்தப்படாதே சூழ்நிலையை சமாளித்துக் கொள். உன்னுடைய இயல்பான தன்மைக்கு வா உன்னுடைய அவதாரத்தை சிறிது நினைவு படுத்திப்பார். சீதை உன்னையே தெய்வமாக துதித்து வாழ்ந்தவள். இந்த உலகத்தில் பெண்ணானவள் எந்த சோதனைகள் வந்தாலும் இப்படியும் வாழ முடியும் என்று அனைவருக்கும் எடுத்துக் காட்டி விட்டுச் சென்று விட்டாள். தற்சமயம் தன் தவ வலிமையால் பூமாதேவியுடன் பாதாள லோகம் சென்று விட்டாள். உன்னுடைய வைகுண்டத்திற்கு நீ செல்லும் போது நிச்சயம் உன்னுடன் வந்து சேருவாள் கவலைப்படாதே. ஒரு நிகழ்ச்சியையும் விடாமல் விவரித்து உனது வரலாற்றை வால்மீகி முனிவர் திவ்யமாக சத்ய வாக்கியமாக தெளிவாக அற்புதமாக ராம காவியமாக படைத்திருக்கிறார். நீ உன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு முழுவதுமாக இதனைக் கேள். இனி நடக்க இருப்பதையும் தெரிந்து கொள். உனக்காகத் தான் வால்மீகி முனிவர் இதனை இதனை இயற்றினார். இதனை படித்து கேட்டு விமர்சிக்க உன்னைத் தவிர வேறு யாராலும் முடியாது. உன்னை நம்பி இப்போது லவ குசர்கள் இருக்கிறார்கள். அவர்களை வளர்க்க வேண்டிய கடமை இப்போது உனக்கு இருக்கிறது. எனவே அமைதி கொள். அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதில் உன்னுடைய கருத்தை செலுத்து என்று ராமரை அமைதிப்படுத்திய பிரம்மா அங்கிருந்து சென்றார்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 46

ராமர் தொடர்ந்து பேசினார். இவ்வாறு மக்கள் பேசுவது சீதைக்கு தெரிந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் அரசனுக்கான தர்மத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையக் கூடாது என்ற காரணத்திற்காவும் சீதையை காட்டிற்கு அனுப்பினேன். இப்போது உங்கள் சத்திய வாக்கே இவள் புனிதமானவள் என்று இந்த மக்களுக்கு நிரூபிக்கப் போதுமானது என்று நம்புகிறேன். முக்காலமும் அறிந்த தாங்கள் சீதையை அயோத்திக்கு அழைத்துச் செல் என்று கூறியதால் இனி தர்மத்திற்கு எந்த இடையூரும் வராது சீதையின் மீது எந்த பழிச்சொல்லும் வராது என்று நம்புகிறேன். ஆகையால் உங்கள் சொல்படி சீதையை அயோத்திக்கு அழைத்துச் செல்கிறேன் என்றார் ராமர். ராமர் வால்மீகி முனிவரிடம் பேசியதைக் கேட்ட சீதை என் மீது குற்றம் சொல்லி விட்டார்களா? என்று நடுங்கியபடி நின்றாள். சீதையிடம் வந்த வால்மீகி முனிவர் அயோத்திக்கு நீ ராமருடன் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் செல்வது உனது விருப்பம் எதுவாக இருந்தாலும் அதில் எனக்கு சம்மதமே யோசித்து நல்ல முடிவாகச் சொல் என்று கேட்டுக் கொண்டார். சீதை ராமருடன் செல்வாரா அங்கே என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் அங்கு வந்து சேர்ந்தார்கள். சீதை என்ன செய்யப் போகிறார் என்று அவளின் முடிவைத் தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமுடன் இருந்தார்கள். நன்கு யோசனை செய்த சீதை லவ குசர்களை ராமரிடம் ஒப்படைத்தாள். இத்தனை காலம் என்னுடன் இருந்த நம்முடைய இரண்டு குழந்தைகளையும் உங்களிடம் ஒப்படைக்கின்றேன். இனி நீங்கள் இவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி ராமரை வணங்கிவிட்டு சிறிது தூரத்தில் சென்று நின்றாள். ராமர் சீதையின் வார்த்தைகளை எதிர்பார்த்த படி ஆவலுடன் இருந்தார்.

ராமரிடம் சீதை பேச ஆரம்பித்தாள். என்னை ஏன் காட்டிற்கு அனுப்பினீர்கள் என்று தெரியாமல் இத்தனை ஆண்டு காலம் இருந்தேன். இக்காட்டில் என்னை தனியாக லட்சுமணன் விட்டுச் செல்லும் போதும் அதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள் என்று சொல்லி விட்டுச் சென்றான். நீங்கள் என்ன செய்தாலும் அதில் தர்மம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதினால் உங்களின் கட்டளையை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருந்து விட்டேன். இப்போது நான் ஏன் காட்டிற்கு வந்தேன் என்ற காரணத்தை தெரிந்து கொண்டேன். அயோத்தியில் உள்ள சில மக்களிடம் இருக்கும் தவறான எண்ணத்தை சரியான எண்ணமாக மாற்ற வேண்டிய கடமை ராமரின் மனைவியான எனக்கு இருக்கிறது. நான் தூய்மையானவள் என்பதை உலகிற்கு உணர்த்த என்னை அக்னியில் இறக்கினீர்கள். ஆனாலும் மக்கள் என்னைப் பற்றி தவறாக எண்ணி விட்டார்கள். அதற்கு காரணம் இலங்கையில் நடந்ததை இங்கிருக்கும் மக்கள் யாரும் பார்க்கவில்லை என்றீர்கள். இப்போது வால்மீகி முனிவர் தன்னுடைய ஆயிரக்கணக்கான வருட தவ பலன்களையே சாட்சியாக வைத்து நான் புனிதமானவள் என்று இங்கிருக்கும் மக்களிடம் சொல்லி விட்டார் அதனால் இனி மக்கள் என்னைப் பற்றி தவறாக பேச மாட்டார்கள் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்கிறீர்கள். உங்களின் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் வால்மீகி முனிவர் நம்முடைய வரலாற்றை கதையாக எழுதி வைத்திருக்கிறார். பிற்காலத்தில் வரும் சந்ததியினர் இக் கதையை படித்து விட்டு என்னை புனிதமற்றவள் என்று கூறுவதற்கு வாய்ப்பிருக்கிறது ஏனெனில் அவர்கள் இலங்கையில் நடந்தவற்றையும் பார்க்கவில்லை. வால்மீகி முனிவரின் சொல்லையும் கேட்கவில்லை. யாரேனும் அவ்வாறு சிந்தித்து விட்டால் கூட நீங்கள் கடைபிடித்த தர்மத்திற்கும் உங்களின் புகழுக்கும் சிறிதாவது கலங்கம் ஏற்பட்டு விடும். அதற்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. ஆகையால் எக்காலத்திற்கும் இருக்கும் அனைவருக்கும் தெரியும்படியாக நான் இப்போது ஒரு சத்தியம் செய்கிறேன். பூமித் தாயே நான் ராமரைத் தவிர வேறு யாரையும் நினைக்காமல் இருந்தது உண்மையானால் என்னுடைய மனம் வாக்கு காயம் செயல் அனைத்தும் ராமனை எண்ணிய படியே நான் இருந்தது உண்மையானால் ராமனைத் தவிர வேறு தெய்வம் என் மனதில் இல்லை என்பது சத்தியமானால் பூமித் தாயே எனக்கு அடைக்கலம் கொடு என்று பூமியைப் பார்த்தபடி நின்றாள்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 45

ராமரும் சிறுவர்களும் யுத்தம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்த வால்மீகி முனிவர் யுத்தத்தை நிறுத்துங்கள் என்றார். வால்மீகி முனிவரின் குரலைக் கேட்டதும் சிறுவர்கள் இருவரும் அவரது அருகில் வந்து அவரின் பாதங்களில் வீழ்ந்து தங்களின் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்கள். ராமரும் தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு அவருக்கு மரியாதைகள் செய்தார். ராமரை கண்ட மகிழ்ச்சியில் செய்வதறியாமல் சிலை போல் நின்றாள் சீதை. வால்மீகி முனிவர் ராமரிடம் பேச ஆரம்பித்தார். சீதை பாபமற்றவள் மாசற்றவள் எண்ணத்திலும் செயலிலும் பரிசுத்தமானவள் என்பதால் என் ஆசிரமத்தில் அடைக்கலம் கொடுத்து இத்தனை நாட்களாக பாதுகாத்து வந்திருக்கிறேன். கணவனே தெய்வம் என்று நம்பும் அபலைப் பெண் இவள். உன்னைத் தவிர வேறு யாரையும் மனதால் கூட நினைக்காதவள். உலகில் யாரோ சொன்னார்கள் என்பதற்காக நீ சீதையை தியாகம் செய்தாய். சீதை இக்காட்டிற்கு வரும் போது கருவுற்றிருந்தாள். இந்த வனத்தில் அவளுக்குப் பிறந்தவர்கள் தான் இந்த இரட்டையர்களான லவ குசர்கள். இருவரும் உன் வம்சத்தை விளங்கச் செய்ய வந்த உன் மகன்கள். பல ஆயிர வருட காலம் நான் தவம் அனுசரித்து வந்திருக்கிறேன். இப்பொழுது நான் சொல்வது தவறாக இருந்தால் என் தவப் பலன்கள் அனைத்தும் வீணாகப் போகட்டும். நான் சொல்வது சத்தியமே. இனியாவது சீதையை அயோத்திக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியுடன் இரு என்று சொல்லி முடித்தார்.

ராமர் தங்களது தந்தை என்று வால்மீகி முனிவரின் பேச்சில் தெரிந்து கொண்ட சிறுவர்கள் திகைத்து நின்றார்கள். லவ குசர்களிடன் வால்மீகி முனிவர் பேச ஆரம்பித்தார். ராமர் தான் உங்களது தந்தை. வன தேவியான உங்களது தாயின் பெயர் தான் சீதை. இவர்களது கதையை தான் நீங்கள் ராம கதையில் இசைத்துப் பாடினீர்கள். சீதையை ராமர் வனத்திற்கு அனுப்பி விட்டார் என்று அவரின் மீது இருந்த கோபத்தில் ராம கதையை இனி பாட மாட்டோம் என்றதில் இருந்து உங்களுக்கு அவரின் மீது எவ்வளவு கோபம் இருக்கிறது என்பதை நான் தெரிந்து கொள்கிறேன். நீங்கள் அயோத்திக்கு அரசனானதும் ராமர் ஏன் சீதையை காட்டிற்கு அனுப்பினார் என்ற காரணத்தையும் அதிலுள்ள தர்மத்தையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். இப்போது ராமரின் மீதிருந்த கோபத்தை விட்டுத் தள்ளுங்கள் என்றார். வால்மீகி முனிவரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட சிறுவர்கள் இருவரும் ராமரின் பாதங்களில் வீழ்ந்து தங்களது வணக்கத்தையும் மரியாதையும் தெரிவித்துக் கொண்டு குதிரையை பிடித்து வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

ராமர் லவ குசர்களை கட்டி அணைத்து மகிழ்ந்தார். ராமருடன் வந்த படை வரிவாரங்கள் அனைவரும் ராம சீதை லவ குசர்கள் வாழ்க என்று கோசமிட்டார்கள். அயோத்திக்கு ராமர் நம்மை அழைத்துச் சென்று விடுவார் இனி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்று சீதை மனதிற்குள் எண்ணிக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தபடி ராமரின் வார்த்தைகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். ராமர் சீதையைப் பார்த்தபடியே வால்மீகி முனிவரிடம் பேச ஆரம்பித்தார். நான் சீதையின் எண்ணங்களை முழுமையாக அறிந்து வைத்திருக்கிறேன். அவள் பரிசுத்தமானவள் என்று எனக்கு தெரியும். ஆனாலும் ராவண யுத்தம் முடிந்ததும் தேவர்கள் முன்னிலையில் ஒரு சோதனை வைத்து இவள் பரிசுத்தமானவள் என்று உலகத்திற்கு நிருபித்த பின்பே இவளை அயோத்திக்கு அழைத்து வந்தேன். இலங்கையில் ராட்சசர்களுக்கு மத்தியில் சீதை அக்னிக்குள் இறங்கியதை இங்கிருக்கும் மக்கள் பார்க்கவில்லை. அந்த நிகழ்வு செவிவழிச் செய்தியாகவே மக்களுக்கு கிடைத்தது. அதனால் இவர்கள் அயோத்தில் சீதையைப் பற்றிய அவதூறான வார்த்தைகளை பேசத் தொடங்கி விட்டார்கள் என்று எண்ணுகிறேன்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 44

ராமர் கேட்ட கேள்விக்கு சிறுவர்கள் பதில் சொல்ல ஆரம்பித்தார்கள். நீங்கள் சிறுவனாக இருந்த போது தானே வசிஷ்டர் தன்னுடைய யாகத்தை பாதுகாக்க உங்களை அழைத்துச் சென்றார். சிறுவனாக இருந்த போது தானே நீங்கள் அரக்கர்களுடன் யுத்தம் செய்து வெற்றி பெற்று அவர்களை அழித்தீர்கள். அது போல் சிறுவர்களாக இருக்கும் நாங்கள் உங்களை வெற்றி பெற முடியும் என்று நம்புகிறோம். குதிரையின் மீது தாங்கள் எழுதி வைத்திருக்கும் வாசகத்திற்கு உட்பட்டுதான் நாங்கள் இந்த குதிரையை பிடித்து வைத்திருக்கிறோம். உங்களுக்கு குதிரை வேண்டுமென்றால் எங்களுடன் யுத்தம் செய்யுங்கள். வேண்டாம் என்றால் இங்கிருந்து நீங்கள் செல்லலாம் என்றார்கள். ராமர் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்தார். அப்போது அனுமன் ராமரிடம் பேச ஆரம்பித்தார். விளையாட்டுச் சிறுவர்களாக இருக்கிறார்கள். யாராலும் வெல்ல முடியாத ராவணனை வென்ற தாங்கள் இந்த சிறுவர்களிடம் சரிக்கு சமமாக யுத்தம் செய்ய வேண்டாம். சிறுவர்களை சமாளித்து நான் குதிரையை கொண்டு வருகிறேன். எனக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். சிறுவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்க வேண்டும் என்று எச்சரித்த ராமர் அனுமனுக்கு அனுமதி கொடுத்தார். அனுமன் யுத்தத்திற்கு வருகிறார் என்று தெரிந்ததும் சிறுவர்கள் இருவரும் கலந்தாலோசித்து ஒரு திட்டம் தீட்டினார்கள்.

ராம கதையில் அனுமனை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று வால்மீகி கூறியிருந்ததை நினைவு படுத்திக் கொண்டார்கள். எனவே ராம நாமத்தால் அனுமனை கட்டி வைக்க திட்டம் தீட்டினார்கள். அதன் படி ராம நாமத்தை சொல்லி அனுமன் மீது அஸ்திரத்தை எய்தார்கள் சிறுவர்கள். அஸ்திரம் அனுமனை கட்டி ராம நாமத்தை சொல்லிக் கொண்டே இருந்தது. ராம நாமத்தில் திளைத்த அனுமன் அனைத்தையும் மறந்த நிலையில் ராம ராம என்று சொல்லிய படியே வனத்திற்குள் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தார். சிறுவர்களின் சாதுர்யமான செயலைக் கண்டு திகைத்த ராமர் சிறுவர்களை பாராட்டினார். சிறுவர்களுக்கும் ராமருக்கும் யுத்தம் ஆரம்பமானது. சிறுவர்கள் அம்புகளை விட ஆரம்பித்தார்கள். ராமர் சிறுவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படாத வகையில் தற்காப்பு அம்புகளை எதிர் அம்புகளாக செலுத்தினார். சிறுவர்களின் துணிச்சல் சாதுர்யமான செயல் அம்பு விடும் வேகம் என அனைத்தையும் கவனித்த ராமர் அவர்களின் திறமைகளைக் கண்டு பாராட்டி மெய்சிலிர்த்தார்.

ராம நாமத்தை கேட்டுக் கொண்டே வனத்திற்குள் சென்ற அனுமன் சீதை குடியிருக்கும் பகுதி வழியாக சென்றார். அனுமனை கண்ட சீதை மகிழ்ச்சி அடைந்தாள். ராமரின் நலனைப் பற்றி விசாரிக்கலாம் என்று எண்ணிய சீதை அனுமன் என்று அழைத்தாள். சீதையின் குரலைக் கேட்ட அனுமன் சுய நினைவுக்கு வந்து தனது வலிமையால் தன்னை கட்டி இருந்த அஸ்திரத்தை அறுத்தார். சீதையின் கால்களில் வீழ்ந்து வணங்கினார். இக்காட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று சீதை அனுமனிடம் கேட்டாள். அதற்கு அனுமன் ராமர் அஸ்வமேத யாகம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து காட்டில் இரண்டு சிறுவர்கள் யாகக் குதிரையை கட்டி வைத்தது வரை சொல்லி தற்போது ராமர் சிறுவர்களுடன் யுத்தம் செய்வதற்காக வந்திருக்கிறார் என்றார். இதனைக் கேட்ட சீதை குதிரையை கட்டி வைத்தது லவ குசர்களே என்ற முடிவுக்கு வந்தாள். தந்தையுடன் மகன்களே யுத்தம் செய்கிறார்களா என்று பதைபதைத்த சீதை வால்மீகியின் குடிலுக்கு ஓடினாள். அனுமன் பின் தொடர வால்மீகியின் குடிலுக்கு சென்ற சீதை அவரிடன் நடந்தவற்றைச் சொல்லி உடனே இந்த யுத்தத்தை தடுத்து நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டாள். முக்காலத்தையும் அறிந்த வால்மீகி முனிவர் நடப்பவைகள் நல்லவைகளாகவே நடக்கும் லவ குசர்களுக்கு எந்த பதிப்பும் வராது கவலைப்படாதே என்று சீதைக்கு ஆறுதல் கூறினார். சீதை மற்றும் அனுமனுடன் யுத்தம் நடக்கும் இடத்திற்கு வால்மீகி முனிவர் வந்தார்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 43

ராமரின் படை வீரர்கள் சிறுவர்களான லவ குசர்களிடம் எப்படி யுத்தம் செய்வது என்று ராமரின் பிரநிதியாக வந்த லட்சுமணனிடம் சென்று ராமரின் அசுவமேத யாக குதிரையை இரு சிறுவர்கள் பிடித்து வைத்திருக்கின்றார்கள். அவர்கள் பார்ப்பதற்கு முனிவரின் குழந்தைகள் போல் இருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்கள். இதைக் கேட்ட லட்சுமணன் குதிரையை கட்டி இருக்கும் இடத்திற்கு வந்தான். குதிரை அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம் லட்சுமணன் சென்று பேச ஆரம்பித்தான். உலகத்தை ஆட்சி செய்யும் ராமரின் அசுவமேத யாகக் குதிரை இது. இந்தக் குதிரையுடன் ராமரின் பிரதிநிதியாக லட்சுமணனாகிய நான் வந்திருக்கின்றேன். நீங்கள் விளையாடுவதற்கு வேறு குதிரையைத் தருகிறேன் இந்தக் குதிரையை விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு லவ குசர்கள் சீதையை கோழைத்தனமாக காட்டிற்கு கொண்டு வந்து விட்டது நீங்கள் தானே எங்களோடு போரிடும் தைரியம் உங்களுக்கு இருந்தால் எங்களோடு போரிட்டு வென்று இந்தக் குதிரையை நீங்கள் அழைத்துச் செல்லலாம் என்றார்கள். லவ குசர்களின் பேச்சைக் கேட்டு கோபம் அடைந்த லட்சுமணன் மிகவும் மன உளைச்சல் அடைந்து அவர்களைத் தாக்க முற்பட்டான். லட்சுமணன் வில்லை வளைத்து நானை ஏற்றுவதற்குள் சிறுவர்கள் இருவரும் அம்பு எய்து அவன் தலையிலிருந்த கிரீடத்தை தள்ளி விட்டார்கள். இதனால் மேலும் கோபம் அடைந்த லட்சுமணன் சிறுவர்கள் மீது அம்பெய்தான். லட்சுமணன் எய்த அனைத்து அம்புகளுக்கும் சிறுவர்கள் பதிலடி கொடுத்து அம்பு மழை பொழிந்தார்கள். இதில் காயமடைந்த லட்சுமணன் மயங்கிக் கீழே விழுந்தான். இதைக் கண்ட படை வீரர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பி அயோத்திக்கு சென்றார்கள்.

ராமரிடம் வந்த படை வீரர்கள் யாகக் குதிரையை பிடித்து வைத்துக் கொண்ட இரண்டு சிறுவர்கள் லட்சுமணனையும் காயப்படுத்தி விட்டார்கள் என்று நடந்தவைகள் அனைத்தையும் ராமரிடம் தெரிவித்தார்கள். லட்சுமணனை இரு சிறுவர்கள் தோற்கடித்து விட்டார்களா என்று ராமர் ஆச்சரியமடைந்தார். பரதனையும் சத்ருக்கனனையும் அழைத்தார் ராமர். சிறுவர்கள் யாகக் குதிரையை கட்டி இருக்கும் இடத்திற்கு சென்று குதிரையை மீட்டு வர நான் செல்கிறேன் ஆகையால் பரதன் நாட்டை பார்த்துக் கொள்ள வேண்டும் சத்ருக்கனன் அசுவமேத யாகத்தை பாதுகாக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். அப்போது பரதனும் சத்ருக்கணும் இதற்கு தாங்கள் ஏன் செல்ல வேண்டும் நாங்கள் போய் குதிரையை மீட்டு வருகிறோம் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு ராமர் ராவணனின் மகனான இந்திரஜித்தையே போரில் வென்ற லட்சுமணனையே இரு சிறுவர்கள் காயப்படுத்தி இருக்கின்றார்கள். ஆகையால் நானே சென்று குதிரையை மீட்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். ராமருடன் அனுமனும் சென்றார்.

ராமருடன் அனுமனும் வருவதைக் கண்ட சிறுவர்கள் யுத்தத்திற்கு தயாரானார்கள். ராமர் நேராக லட்சுமணன் இருக்குமிடம் சென்றார். லட்சுமணனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றதும் சிறுவர்கள் இருக்குமிடம் வந்தார். ராமர் சிறுவர்களிடம் நீங்கள் அரண்மனையில் ராம கதையை பாடலாக பாடிய வால்மீகியின் சீடர்கள் தானே நீங்கள் எந்த குலத்தை சேர்ந்தவர்கள்? உங்களது தந்தை தாயின் பெயர் என்ன? இந்த குதிரையை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சிறுவர்கள் எங்களின் தாயின் பெயர் வனதேவி. எங்களின் தந்தையின் பெயரும் குலமும் தெரியாது. நாங்கள் எங்களின் ஞான குருவான வால்மீகி முனிவரின் பாதுகாப்பில் இந்த வனத்தில் வசிக்கிறோம். நீங்கள் வந்தது குதிரையை மீட்கத்தானே வந்தீர்கள். எங்களைப் பற்றி விசாரித்து வந்த வேலையை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு குதிரை வேண்டுமென்றால் எங்களுடன் யுத்தம் செய்யுங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்கள். சிறுவர்களின் தைரியத்தை நினைத்து ஆச்சரியப்பட்ட ராமர் லட்சுமணனையே காயப்படுத்திய நீங்கள் மிகவும் பலசாலிகள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சிறுவர்களான உங்களிடம் எப்படி யுத்தம் செய்ய முடியும் என்று கேட்டார்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -42

ராமர் வேறு என்ன தங்களுக்கு வேண்டும் சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு சிறுவர்கள் இந்த ராம கதையில் வரும் தங்களை பார்த்து விட்டோம். அதை போல் கதையில் உள்ள சீதையின் தரிசனத்தை பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறோம். தாங்கள் இருவரும் சேர்ந்து எங்களுக்கு தரிசனம் கொடுத்து ஆசிர்வதியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். சபையில் இருந்த அனைவரும் திடுக்கிட்டார்கள். ராமர் தலை கவிழ்ந்து மௌனமானார். சிறுவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள். அப்போது கௌசலை நடந்தவற்றை சிறுவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முயற்சி செய்தாள். சீதை ராமரால் காட்டுக்கு அனுப்பப்பட்டார் என்ற செய்தியை கேட்டதும் மிகவும் கோபம் கொண்ட சிறுவர்கள் ராமரை இது நாள் வரை தர்மவான் சத்தியம் தவறாதவர் என்று எண்ணியிருந்தோம். ஆனால் தன்னை நம்பி வந்த சீதையை காட்டுக்கு அனுப்பி தர்மம் தவறி விட்டார் என்று கோபத்துடன் கூறினார்கள். அதற்கு ராமர் நான் இந்நாட்டின் அரசன். ஒரு நாட்டின் அரசன் என்பவன் எந்த விதமான பழிச்சொல்லுக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பது தர்மம். என்னை நம்பி வந்த சீதையை கைவிடக்கூடாது என்பதும் தர்மம் தான். ஆனால் இரண்டில் ஒன்று என்று வரும் போது இரண்டில் பெரிய தர்மத்தையே காப்பாற்ற வேண்டும் என்ற நியதிப்படியே நடந்து கொண்டேன். அரச பதவியை துறந்து சீதையுடன் நான் சென்றிருந்தால் என்னை நம்பி இருந்த நாட்டு மக்களின் நம்பிக்கையை ஏமாற்றியது போலாகும். சீதையின் நம்பிக்கையா மக்களின் நம்பிக்கையா என்று ஆராய்ந்தால் இரண்டில் ஒன்று என்று வரும் போது மக்களின் நம்பிக்கையை காப்பதே ஒரு அரசனுக்கு பெரிய தர்மம். ஆகவே வேறு வழியில்லாமல் சீதையை காட்டிற்கு அனுப்பி விட்டேன் என்றார்.

ராமரின் சமாதானத்தை ஏற்காத சிறுவர்கள் இருவரும் இனி நாங்கள் ராம காவியத்தை பாட மாட்டோம் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி வால்மீகி முனிவரின் இருப்பிடம் சென்று நடந்தவற்றைச் கூறி வனத்திற்கு செல்ல அனுமதி கேட்டார்கள். அனைத்தையும் அறிந்த வால்மீகி முனிவர் அயோத்தியிலிருந்து சிறுவர்களுடன் தானும் வனத்திற்கு வந்து விட்டார். ஒரு நாள் சிறுவர்கள் இருவரும் வனத்திற்குள் சுற்றி விளையாடிக் கொண்டிருக்கும் போது ராமர் அனுப்பிய அஸ்வமேத யாகக் குதிரை அக்காட்டைக் கடந்து சென்றது. குதிரையின் அழகில் மயங்கிய சிறுவர்கள் இருவரும் அக்குதிரையை பிடித்து தினந்தோறும் விளையாடலாம் என்று குதிரையை பிடித்தார்கள். அப்போது குதிரையின் முகத்தில் கட்டி வைத்திருந்த தங்கத் தகட்டில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை சிறுவர்கள் படித்தார்கள். இந்த குதிரை ராமரின் அஸ்வமேத யாகத்திற்கான குதிரை. அக்குதிரை செல்லும் பகுதியை ஆட்சி செய்யும் அரசர்கள் இக்குதிரைக்கு மரியாதை செலுத்தி ராமரை அரசனுக்கு அரசனான சக்ரவர்த்தியாக ஏற்றுக் கொண்டு அயோத்திக்கு வரி செலுத்த வேண்டும். ராமரை சக்ரவர்த்தியாக ஏற்றுக் கொள்ள மறுத்து குதிரையை பிடித்து வைத்துக் கொண்டு எதிர்த்தால் அவர்களை ராமரின் பிரதிநிதியாக இருப்பவர் எதிர்த்து சண்டையிட்டு வெற்றி கொண்டு அந்த நகரத்தினை தனதாக்கிக் கொள்வார் என்று எழுதப்பட்டிருந்தது.

ராமரின் அஸ்வமேத யாகக் குதிரை என்றதும் சிறுவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். சிறிதும் பயப்படாமல் குதிரையை ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டு அருகில் விளையாட ஆரம்பித்தார்கள். குதிரையை தேடிக் கொண்டு வந்த வீரர்கள் குதிரை மரத்தில் கட்டிப் போடப்பட்டிருப்பதையும் அருகில் முனிவர்களைப் போல் இருந்த இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதையும் பார்த்து திடுக்கிட்டார்கள். இந்த குதிரையை யார் இங்கு கட்டி வைத்தது என்று வீரர்கள் அச்சிறுவர்களிடம் கேட்டார்கள். நாங்கள் தான் கட்டி வைத்திருக்கறோம் என்ற படி சிறுவர்கள் விளையாடிக் கொண்டே இருந்தார்கள். என்ன செய்வது என்று புரியாத வீரர்கள் சிறுவர்களிடம் இது ராமரின் அஸ்வமேத யாகக் குதிரை இதனை விட்டு விடுங்கள் என்று கெஞ்சுவது போல் கேட்டார்கள். இதனைப் பார்த்து சிரித்த சிறுவர்கள் குதிரையின் மீதுள்ள தங்கத் தகட்டில் என்ன எழுதியிருக்கிறது பாருங்கள் ராமரை சக்ரவர்த்தியாக ஏற்றுக் கொள்பவர்கள் குதிரைக்கு மரியாதை செலுத்த வேண்டும். இல்லை என்றால் யுத்தம் செய்யலாம் என்று எழுதியிருக்கிறது நாங்கள் ராமரை சக்ரவர்த்தியாக ஏற்றுக் கொள்ளவில்லை எனவே கட்டி வைத்திருக்கிறோம் உங்களால் முடிந்தால் எங்களுடன் யுத்தம் புரிந்து குதிரையை மீட்டுச் செல்லுங்கள். ராமரின் படை வீரர்களாக இருந்து கொண்டு எங்களிடம் கெஞ்சுகிறீர்களே என்று சொல்லிவிட்டு தங்களின் விளையாட்டில் கவனமாக இருந்தார்கள்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -41

ராமர் நடந்து கொண்டிருக்கும் அஸ்வமேத யாகத்தில் மிகவும் திருப்தி அடைந்தார். வெகு சிறப்பாக யாகம் நடந்து கொண்டிருக்கும் பொழுது வால்மீகி முனிவர் தன் சீடர்களுடன் அங்கு வந்தார். ராமர் அவருக்கான மரியாதைகளை செய்து அவருக்குரிய ஆசனத்தை கொடுத்து அமரச் செய்தார். வால்மீகி முனிவர் யாகத்தின் ஏற்பாடுகளைப் பார்த்து வியந்தார். யாக சாலைக்கு அருகில் தான் தங்குவதற்கு ஒரு குடிலை அமைத்துக் கொண்ட வால்மீகி முனிவர் அங்கேயே சில காலம் தங்கினார். தன் குடிலுக்கு தன் பிரதான சீடர்களாக இருந்த ராமரின் மகன்கள் லவ குசா இருவரையும் வரவழைத்த வால்மீகி முனிவர் உங்கள் இருவருக்கும் ராமர் கதை முழுவதும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் அதனை இருவரும் சேர்ந்து நகரத்திற்குள் சென்று ஆனந்தமாக பாடுங்கள். ஒரு நாளைக்கு இருபது அத்தியாயம் என்ற கணக்கிற்கு பாடுங்கள். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள் ரிஷிகள் வசிக்கும் இடங்கள் வேதம் அறிந்தவர்கள் கூடும் இடங்களிலும் பாடுங்கள். அயோத்தியின் அரசர் ராமர் இக்கதையை கேட்க விரும்பி அழைத்தால் அங்கு சென்று சபையில் பாடுங்கள். பசித்த பொழுது சாப்பிட யாரிடமும் எதையும் யாசிக்காதீர்கள். உணவுக்கு தேவையானதை காலையில் கிளம்பும் போதே ஆசிரமத்தில் இருந்து கொண்டு செல்லுங்கள். தனம் செல்வம் இவற்றில் சற்றும் மோகம் கொள்ளாதீர்கள் எதற்கும் ஆசைப்பட வேண்டாம். யாரும் குறை சொல்ல முடியாதபடி ராகம் அமைத்து ராமரின் கதையை கவனமாக பாடுங்கள். நீங்கள் யார் என்று யாரேனும் கேட்டால் வால்மீகி முனிவரின் சீடர்கள் என்று மட்டும் சொல்லுங்கள் என்று அனுப்பி வைத்தார்.

ராமரின் கதையை வால்மீகி முனிவர் சொல்லிக் கொடுத்தபடி அயோத்தி நகருக்குள் இருவரும் பாடல்களாக படிக்கொண்டே சென்றார்கள். லவ குசாவின் ராம கானத்தை அயோத்தி மக்கள் மிகவும் ரசித்து கேட்டார்கள். நகரத்திற்குள் இரண்டு சிறுவர்கள் ராமரின் கதையை பாடலாகப் பாடுகின்றார்கள் என்று ராமருக்கு அரண்மனை பணியாளர்கள் செய்தியை கூறினார்கள். தன் கதையே இரண்டு சிறுவர்கள் பாடுகின்றார்களா என்று ஆச்சரியப்பட்ட ராமர் அவர்களை சபைக்கு வரவழைத்தார். சபையில் பல இசை மேதைகளையும் அறிஞர்களையும் ரிஷிகளையும் வரவழைத்து அவர்களின் முன்பு பாட வைத்தார் ராமர். சபையில் கலந்து கொண்டவர்கள் லவ குசாவைப் பார்த்தால் ராமரைப் போலவே இருக்கிறார்கள் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ஜடா முடியும் மரவுரி உடையுடன் இருவரும் பாடிக்கொண்டு வராமல் இருந்திருந்தால் நாம் இவர்களை ராமரின் வாரிசு என்றே நம்பியிருப்போம் என்று பேசிக் கொண்டார்கள். சபையில் இருவரும் பாடல்களை பாட ஆரம்பித்தார்கள். நாரதரைக் கண்டதிலிருந்து பாடலை ஆரம்பித்து ராமர் சீதையுடன் அயோத்திக்கு அரசனாக பதவி ஏற்ற வரை பாடி முடித்தார்கள்.

ராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். லட்சுமணனனிடம் பதினெட்டாயிரம் பொன்னை இந்த கலைஞர்களுக்குக் கொடுத்து மேலும் ஏதேனும் வேண்டுமா என்றும் கேட்டு அவர்கள் விரும்பியதைக் கொடுத்துவிடு என்று சொல்லி விட்டு சிறுவர்களிடம் பேச ஆரம்பித்தார். நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்? இக்கதையில் மொத்தம் எத்தனை அத்தியாயங்கள் உள்ளது இதனை இயற்றியவர் யார் என்று கேட்டார். அதற்கு சிறுவர்கள் நாங்கள் வால்மீகி முனிவரின் சீடர்கள். அவரின் உத்தரவுப்படி அவர் இயற்றிய கதையை பாடலாக பாடி வருகிறோம். இக்கதையில் மொத்தம் இருபத்து நாலாயிரம் ஸ்லோகங்கள் உள்ளது. ஐநூறு அத்தியாயங்கள் ஆறு காண்டங்கள் என்றும் மேலும் சற்று அதிகமாகவும் வரிசைப் படுத்தி தங்களின் சரித்திரம் முழுவதும் எழுதியிருக்கிறார் என்றார்கள். லட்சுமணன் அந்த சிறுவர்களுக்கு சன்மானங்களை தனித் தனியாக கொண்டு வந்து கொடுத்தான். வனத்தில் எங்களுக்குத் தேவையான பழம் கிழங்குகள் கிடைக்கின்றன. எங்களிடம் உள்ளதில் நாங்கள் திருப்தியாக இருக்கிறோம். இந்த தங்கத்தை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று இருவரும் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -40

ராமரின் உத்தரவிற்கேற்க முனிவர்களும் வேத விற்பன்னர்களும் அயோத்தி நகருக்கு வந்தார்கள். அவர்களை அரண்மணை வாயிலுக்கே சென்று ராமர் வரவேற்றார். அனைவருக்கும் அவரவர்களுக்கேற்ப மரியாதைகள் செய்து அவர்களுக்குறிய ஆசனத்தை அளித்த ராமர் அவர்களிடம் பேச ஆரம்பித்தார். மக்களின் நலனுக்காக அஸ்வமேத யாகம் செய்ய விரும்புகிறேன். எப்படி செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் அனைவரும் அருகில் இருந்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து யாகத்தை நிறைவு செய்து கொடுங்கள் என்று அனைவரையும் வணங்கிய படி பணிவுடன் கேட்டுக் கொண்டார். ராமரின் இச்செயலுக்கு மகிழ்ந்த முனிவர்கள் ராமரை ஆசிர்வதித்து யாகத்தை செய்து கொடுப்பதாக வாக்களித்தார்கள். உடனடியாக ருத்ரனை வணங்கி அஸ்வமேத யாகத்தை தொடங்க அதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கினார்கள். யாகம் செய்வதற்கான இடம் நாள் நேரம் எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்ற அனைத்தையும் தீவிர ஆலோசனைக்கு பின்பு முனிவர்கள் முடிவு செய்தார்கள். யாகத்தின் நியதிப்படி ராமர் தனது மனைவியுடன் அமர்ந்தால் மட்டுமே அதற்கான பலன் என்று கூறி சீதையைப் போலவே தங்கத்தில் ஒரு உருவம் செய்து ராமரின் அருகில் வைத்து யாகத்தை செய்யலாம் என்று தீர்மானித்தார்கள். யாக சம்பந்தமான விவரங்களை ராமர் அவர்களிடம் கேட்டு குறித்துக் கொண்டு அதற்கேற்றார் போல் தனது சகோதரர்களுக்கு கட்டளைகள் பிறப்பித்தார். யாகத்தில் கலந்து கொள்ள சுக்ரீவன் விபீஷணன் உட்பட தனது நண்பர்களுக்கும் அரசர்களுக்கும் அழைப்புகளை அனுப்பினார்.

ராமர் அஸ்வமேத யாகம் செய்வதை முன்னிட்டு தானங்கள் பல செய்தார். அசுவமேத யாகம் என்பது பல வருடங்கள் செய்யும் ஒரு பெரிய வேள்வியாகும். யாகம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை யார் என்ன தானம் கேட்டாலும் அதனை அந்நாட்டு அரசன் கொடுக்க வேண்டும். அரசன் தனது அரச குதிரையில் தனது வெற்றிக் கொடியை அதன் முதுகுப்பகுதியில் கட்டி உலகம் முழுவதும் திரிய விடுவான். அந்தக் குதிரையுடன் அரசரது பிரதிநிதி பெரும்படையுடன் செல்வார்கள். அதைப் பிடித்து மடக்கும் வேற்று நாட்டு அரசன் மேல் படையெடுப்பு நடத்தி அவனை வெற்றி கொண்ட பின் குதிரை மேலும் தொடர்ந்து அடுத்த நாட்டிற்கு செல்லும். அனைத்து அரசர்களும் அவனது ஆட்சியை ஏற்றுக் கொண்ட பிறகு குதிரை யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து சேரும். குதிரை வந்ததும் யாகம் செய்த அரசன் தன்னை சக்கரவர்த்தி என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்வான். யாகத்தின் பலனாக அதில் கலந்து கொண்டவர்களும் அந்நாட்டு மக்களும் பல விதமான தோசங்களில் இருந்து விடுபடுவார்கள். அயோத்திக்கு முனிவர்களும் வேதம் சொல்லும் அந்தணர்களும் பண்டிதர்களும் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தார்கள். சுக்ரீவன் மற்றும் விபீஷணன் தங்களது உறவினர்களுடன் வந்து சேர்ந்தார்கள்.

ராமர் எல்லா முன்னேற்பாடுகளையும் சிறப்பாக செய்து யாகத்திற்கான குதிரையை விட்டார். ராமரது பிரதிநிதியாக லட்சுமணனும் படை வீரர்களும் குதிரையை பாதுகாத்துக் கொண்டு உடன் சென்றார்கள். நல்ல முறையில் யாக சாலை தயாராவதைக் கண்டு ராமர் திருப்தியடைந்தார். யாகம் ஆரம்பித்தது யாகத்திற்கு வந்தவர்கள் லட்சுமணன் நடத்திச் சென்ற குதிரையைப் பற்றியும் லட்சுமணனது வலிமையைப் பற்றியும் பேசிக் கொண்டர்கள். யாகம் செய்யும் அந்தணர்கள் என்ன பொருள் வேண்டும் என்று கேட்டு முடிப்பதற்குள்ளாக அவர்களிடம் அப்பொருட்களை வானரங்களும் ராட்சசர்களும் கொண்டு வந்து கொடுத்தார்கள். சிரஞ்ஜீவிகளான சில முனிவர்கள் இது போல யாகத்தைக் கண்டதுமில்லை கேட்டதும் இல்லை என்று பாராட்டினார்கள். யாருக்கு என்னத் தேவையோ அது கிடைத்தது. தங்கம் விரும்பியவனுக்கு தங்கம் ரத்தினம் விரும்பியவனுக்கு ரத்தினம் என்று கிடைக்கப் பெற்றார்கள். தங்கமும் வெள்ளியும் ரத்தினமும் வஸ்திரங்களும் கொடுக்க கொடுக்க குறையாமல் இருந்தது. உணவும் உடைகளும் வேண்டிய அளவு தானம் செய்தபடி யாகம் ஒரு வருட காலத்தைத் தாண்டிச் சிறப்பாக சென்று கொண்டிருந்தது.