சதுரகிரி

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலை சதுரகிரியாகும். சதுர் என்றால் நான்கு. கிரி என்றால் மலை நான்கு திசைகளிலும் திசைக்கு நான்கு மலைகள் வீதம் மொத்தம் பதினாறு மலைகள் இருக்கின்றன. சதுரகிரி தன்னுள் கிழக்கே சூரிய கிரி குபேர கிரி சிவகிரி சக்தி கிரி மேற்கே விஷ்ணுகிரி சந்திர கிரி வடக்கே கும்ப கிரி மகேந்திர கிரி இந்திர கிரி சஞ்சீவி கிரி தெற்கே பிரம்ம கிரி சித்தி கிரி இராம கிரி உதய கிரி இருக்கிறது.

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன் திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் தன் மாமனார் வீட்டிற்கு தினமும் அவர்களுக்குத் தேவையான பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள். வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார் இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான்.

தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட துறவி அவளுக்கு சடதாரி என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால் மனம் திருந்தி சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் தரிசனம் கொடுக்க நினைத்த இறைவன் ஒருநாள் சிவன் ஒரு துறவியின் வேடத்தில் சிவ பூஜைக்கு பால் கொடுக்கும் காராம் பசுவின் மடுவில் வாய் வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்து விட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன் என்று தெரிவித்து மறைந்தார்.

சதுரகிரி மலையில் ஐந்து கோவில்கள் உள்ளன. 1. மகாலிங்கம் 2. சுந்தரமூர்த்தி லிங்கம் 3. சந்தன மகாலிங்கம் 4. இரட்டை லிங்கம் 5. காட்டு லிங்கம். சதுரகிரி மலையில் கிடைக்கும் பல அற்புத மூலிகைகள் உள்ளது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும். பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சம் சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள் மூலிகைகள் இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

சதுரகிரி மலையில் வாழும் மலைவாழ் மக்கள் பளியர்கள் வழிபட்டு வந்து பின்னர் மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் இராமகாடையா நாயக்கர் என்பவரால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் கோவில்கள் கட்டப்பட்டது. சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருக்கிறார். 1950 ஆம் ஆண்டு வரை இக்கோவில் பாளையக்காரர் பராமரிப்பில் இருந்து வந்தது. இம்மலை பகுதி 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப் பாட்டில் இருந்து வருகிறது.

கோரக்க முனிவரால் உதகம் என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குணம் கொண்ட மரம் செடி கொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கிய சுனைகளாக இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் உதகம் என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர் போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்தவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்களின் மூலமும் துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 384

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் கால காலம் வாழ்வியல் துன்பங்களுக்கு தீர்வு தேடி மாந்தர்களில் சிலர் எம்மை நாடுவது உண்டு . துன்பங்கள் எல்லாம் ஒரு கணப்பொழுதில் அல்லது விழி மூடி விழி திறப்பதற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே மனிதனின் நோக்கமாக இருக்கிறது. அணுவளவும் துன்பமே இல்லாமல் வாழ வேண்டும் சதா சர்வகாலமும் இன்பமும் சாந்தியும் வாழ்வில் நிலவ வேண்டும் என்பதே மனிதர்களின் எண்ணமாக இருக்கிறது. இதை தவறு என்று நாங்கள் கூறமாட்டோம். ஆனால் இந்த இன்பமும் நிம்மதியும் இந்தந்த விதத்தில்தான் இருக்க வேண்டும் என்று மனிதன் எதிர்பார்க்கிறானே அந்த எதிர்பார்ப்புதான் குறையாக மாறி விடுகிறது. எனவே மனிதர்கள் எதிர்பார்க்கக் கூடிய நீடித்த இன்பமும் நிலைத்த சாந்தியும் இறைவனின் பாதாவிந்தங்களை சரண் அடைந்து இறையோடு சாயுச்சமோ சாரூபமோ சாலோகமோ சாமீபமோ ஏதாவது ஒரு ஆன்ம பரிணாம வளர்ச்சி நிலை அடைந்தால் ஒழிய மனிதனுக்கு கிட்டாது.

இந்த உலக வாழ்விலே உன்னதங்களை அடைந்தால் நிம்மதி சந்தோஷம் என்று அதை அடைவதற்கு முன்னால் ஒரு மனிதன் எண்ணுவான். அடைந்த பிறகு அப்படி அவனால் நிம்மதியாக சந்தோஷமாக வாழ இயலாது. மனித மனம் பக்குவம் பக்குவம் பக்குவம் என்று பக்குவத்தின் உச்ச நிலையிலே நின்று பார்க்கும் பொழுது அவன் எதிர் பார்க்கின்ற அனைத்தும் அபத்தமாகத் தெரியும். யாங்கள் மிகத் தெளிவாகக் கூறுகிறோம் என்றாலும் மனிதனால் புரிந்து கொள்ள முடியாத நிலை அவன் கர்மாவில் அடங்கி இருக்கிறது. பெற்று வந்த கர்ம பாவத்தை நுகர்வதற்காக வந்த உடல் சார்ந்த விஷயங்களுக்கு மட்டும் வாழ்வது என்பது மனிதனின் இயல்பான விஷயம். அதை எதிர்த்து இறை நோக்கி செல்வதுதான் மகான்களின் ஆன்ம போதனையாகும். எனவே இயல்பான விஷயங்களுக்காக ஒரு மகானையோ ஞானியையோ மனிதன் நாட வேண்டியதில்லை. அதற்காக இயல்பான விஷயங்களே வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை.

விதி போக்கில் எப்படியெல்லாம் அவை கிட்டுகிறதோ அப்படியே மனிதன் அதை ஏற்றுக் கொள்ளட்டும். ஒரு வேளை அவன் விரும்புவது போல் அது கிட்டாமல் போனாலும் மிகப் பெரிய இழப்பு ஏதும் இல்லை. ஆனால் ஆன்மீக வழியில் வராமல் வரும் சிந்தனை கூட இல்லாமல் பாவம் புண்ணியம் என்கிற பேதம் தெரியாமல் வெறும் விலங்குகளைப் போல் உண்டு உறங்கி சந்ததிகளை உற்பத்தி செய்து வாழும் மனிதர்கள் அனைவரும் எம் பார்வையில் பரிதாபத்திற்கு உரியவர்கள் அவர்கள் இன்னும் எத்தனையோ பிறவிகள் எடுத்துதான் ஆன்ம ஞான வழியை நோக்கி செல்ல இயலும். அது போன்ற மனிதர்களை கூட சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பல்வேறு பிறவிகளில் சேர்த்த ஓரளவு புண்ணியத்தின் காரணமாக ஏதாவது ஒரு பிறவியிலே நல்ல வழியை இறைவன் காட்டிக் கொடுத்தாலும் கூட தடுமாற்றத்தாலும் குழப்பத்தாலும் வேறு வேறு வாழ்வியல் சிக்கலை முன்னிறுத்தி அந்த ஆன்மீக வழியை புரிந்து கொள்ள மாட்டேன் என்றோ அல்லது புரிந்தாலும் அதன் வழியாக வரமாட்டேன் என்று சில மனிதர்கள் வாழ்கிறார்களே அதுதான் விதியின் கொடுமையிலும் கொடுமை ஆகும். எனவே உலகியல் வாழ்விற்காக கடுமையாக ஒருவன் போராடக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. கடுமையாக ஒருவன் உழைக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அந்த செயலின் காரணமாக மறந்தும் பாவத்தை சேர்க்கக் கூடாது என்பதுதான் எமது கோட்பாடாகும்.

கூடுமானவரை யாரையும் பாதிக்காமல் யார் மனதையும் புண்படுத்தாமல் தத்தம் கடமைகளை நேர்மையாக ஆற்றி தன்னால் முடிந்த தர்ம காரியங்களை ஆற்றி அன்றாடம் இறை நாமாவளியை ஆழ் மனநிலையில் நிறுத்தி சிந்தித்து ஒரு மனிதன் வாழ்ந்தாலே தேடுகின்ற நிம்மதியும் சந்தோஷமும் அவனைப் பின்தொடரும். இறைவனின் அருளாசியும் வந்து சேருமப்பா. இதை சரியான விகிதாசாரத்திலே புரிந்து கொண்டு எந்த விதமான காழ்ப்புணர்ச்சிக்கும் இடம் தராமல் எம் வழியில் வர முயற்சி செய்தால் இறைவன் அருளைக் கொண்டு யாமே அதுபோல் மனிதனை கரை சேர்ப்போம் அப்பா.

பன்னிரு திருமுறைகளின் வரலாறு

ராஜ ராஜ சோழன் என்னும் சோழப் பேரரசன் கோவில்களில் வாய் மொழியாகப் பாடப் பெற்ற தேவாரப் பாடல்களைக் கேட்டு இப்பாடல்களைத் தொகுக்க எண்ணினார். தேவாரப் பாடல்கள் இருக்கும் இடத்தை விநாயகரின் அருளுக்குப் பாத்திரமான நம்பியாண்டார் நம்பி என்பவர் மூலம் சிதம்பரம் கோவிலின் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்தார். தேவாரம் பாடிய மூவர் வந்தால் மட்டுமே அறையின் கதவினைத் திறக்க முடியும் என சிதம்பரம் கோவிலில் கூறினார்கள். காலம் சென்ற அம்மூவரையும் எவ்வாறு கொண்டு வருவது? என மன்னன் சிந்தித்தார். உடனே தேவார மூவரையும் சிலை வடிவில் அங்கு கொண்டு வந்து அறையினை திறக்கச் செய்தார். அங்கு ஓலை சுவடிகள் பல செல்லரித்து இருந்தன. மீதம் உள்ளவற்றை நம்பியாண்டார் நம்பி கிபி பதினோராம் நூற்றாண்டில் பதினோரு திருமுறைகளாகத் தொகுத்தார். பின் அநாபாயச் சோழ மன்னனின் வேண்டுகோளின்படி சேக்கிழார் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் பாடல்களைப் பாடினார். திருதொண்டர் புராணம் நூலானது 12 வது திருமுறையாக பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டது.

பன்னிரு திருமுறைகள்

1 2 3 – ஆம் திருமுறைகள்

திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் 1 2 3 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப்படுகிறது. சம்பந்தரின் பாடல்கள் தமிழ் இலக்கியத்தையும் இசையும் மிளரச் செய்கின்றன.

4 5 6 ஆம் திருமுறைகள்

திருநாவுக்கரசரால் பாடப்பட்ட பாடல்கள் 4 5 6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. அப்பரின் பாடல்கள் தொண்டின் மூலம் இறைவனை அடையலாம் என்பதை விளக்குகின்றன.

7 ஆம் திருமுறை

சுந்தரர் பாடிய பாடல்கள் 7 ஆம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சுந்தரரால் பாடப்பட்ட பாடல்கள் திருப்பாட்டு என்று அழைக்கப்படுகிறது. சுந்தரர் பாடிய பாடல்கள் சுந்தரர் தேவாரம் என்றும் அழைக்கப்படுகிறது.

8 ஆம் திருமுறை

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. தேன் ரசம் கொட்டும் இவரின் பாடல்கள் இறைவனைச் சரணடைதல் மற்றும் பக்தி பற்றி விவரிக்கிறது.

9 ஆம் திருமுறை

  1. திருமாளிகைத்தேவர் 2. கருவூர்த்தேவர் 3. பூந்துருத்தி நம்பிகாட்ட நம்பி 4. கண்டராதித்தர் 5. வேணாட்டடிகள் 6. திருவாலியமுதனார் 7. புருசோத்தம நம்பி 8. சேதிராயர் 9. சேந்தனார் ஆகிய ஒன்பது நபர்களால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டது. இத்திருமுறையில் உள்ள நூல்கள் திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகியவை ஆகும். சேந்தனார் மட்டும் திருப்பல்லாண்டு திருவிசைப்பா இரண்டையும் பாடியுள்ளார். ஏனையோர் திருவிசைபாவினை மட்டும் பாடியுள்ளனர்.

10 ம் திருமுறை

திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் இறைவனைப் பற்றியும் பக்தியோகம் அட்டாங்கயோகம் கர்ம யோகம் ஞானம் ஆகியவற்றை எடுத்துக் கூறுகிறது.

11 ஆம் திருமுறை

  1. திருஆலவாயுடையார் 2. காரைக்கால் அம்மையார் 3. ஐயடிகள் காடவர்கோன் 4. சேரமான் பெருமான் 5. நக்கீரர் 6. கல்லாடர் 7. கபிலர் 8. பரணர் 9. இளம்பெருமாள் அடிகள் 10. அதிராவடிகள் 11. பட்டினத்தடிகள் 12. நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரண்டு நபர்களால் பாடிய பாடல்கள் 11 ஆம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. 11 ஆம் திருமுறையில் உள்ள நூல்கள் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

12 ஆம் திருமுறை

63 நாயன்மார்களின் வரலாற்றைப் பற்றிய சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் 12 ஆம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது.

முதல் திருமுறையின் முதல் பாடல் தோடுடைய செவியன் எனத் தொடங்குகிறது. இப்பாடலின் முதல் எழுத்தான தோ என்பது த் + ஓ எனப் பிரிக்கப்படுகிறது. இதில் ஓ என்பது பிரவண மந்திரமான முதல் எழுத்தைக் குறிக்கிறது.

பன்னிரெண்டாவது திருமுறையான திருத்தொண்டர் புராணத்தின் முதல் பாடல் உலகெல்லாம் என்று தொடங்குகிறது. இதில் கடைசி எழுத்து ம் என்பது பிரவண மந்திரமான கடைசி எழுத்தைக் குறிக்கிறது. எனவே இப்பாடல்கள் வேதங்களின் விளக்கங்கள் எனப் போற்றப்படுகின்றன.

பன்னிரு திருமுறைகள் முதல் ஒன்பது திருமுறைகள் இறைவனை வாழ்த்திக் கூறுவதால் இவை தோத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

10 ஆம் திருமுறை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக உள்ளதால் சாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

11 ஆம் திருமுறை பாடல்கள் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

12 ஆம் திருமுறை பாடல்கள் 63 ஆம் நாயன்மார்களின் வாழ்க்கையை விளக்குவதால் இது வரலாறு என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆவணி முதல் ஞாயிறுக்கு முன் 12 நாட்கள் பன்னிரு திருமுறைகள் பற்றிய உரையானது நிகழ்த்தப்படுகிறது. ஆவணி மாதம் முதல் ஞாயிறு அன்று திருமறை காண்டல் என்ற விழா சிவாலயங்களில் நடத்தப்படுகின்றது. நாமும் வாழ்விற்குத் தேவையான வளங்களை அள்ளித்தரும் பன்னிரு திருமுறைகளால் எல்லாம் வல்ல இறைவனை ஆராதித்து வாழ்வின் நன்னிலை அடைவோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 383

கேள்வி: திருவைகாவூர் ஸ்தலத்தை பற்றி

சிவராத்திரியின் புண்ணிய காலத்தை பறை சாற்றுகின்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. பொதுவாக இதுபோன்ற ஸ்தலங்களில் எல்லாம் ஆதிரை நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்பவர்களுக்கு பித்ரு தோஷங்கள் மட்டுமல்லாமல் நாகதோஷம் குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுபோல் ஸ்தலங்களிலே ஆதிரை மீனில் பிறந்தவர்கள் அல்லது ஆதிரை மீன் நடக்கின்ற காலத்திலே முழுமையான விரதத்தோடு வழிபட்டு வந்தால் இவன் கேட்ட காலசர்ப்ப தோஷமோ அல்லது வேறுவகையான நாகதோஷமோ கூடுமானவரை பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும்.

மேலும் இக்கோவிலைப் பற்றி அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

பாஞ்சசன்ய சங்கு

பாகல்பூரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் பங்க மாவட்டத்தில் மாந்தர் பர்பத் அமைந்துள்ளது. இங்கு உள்ள மலை 700 அடி உயரத்தில் உள்ளது. இந்த மலையைப் பற்றி புராணங்கள் மற்றும் மகாபாரதத்தில் பல கதைகள் உள்ளது. மலையின் நடுவில் நரசிம்மர் குகைக்கு அருகில் ஒரு சங்கு குளம் உள்ளது. இந்த குளத்தில் நீர் எப்போதும் வறண்டு போகாது. சிவராத்திரிக்கு ஒரு நாள் முன்பு நீர் வற்றி விடும். அப்போது இந்த குளத்தில் உள்ள சங்கை பார்க்கலாம். மீதி 364 நாட்கள் 70 லிருந்து 80 அடி தண்ணீருக்குள் இந்த சங்கு இருக்கும்.  இந்த ஒரு நாள் மட்டும் தண்ணீர் குறைந்து சங்கு வெளியே தெரியும் அடுத்த நாள் தண்ணீர் சேர்த்து குளம் நிரம்பி சங்கு மறைந்து விடும். இந்த பாஞ்சசன்ய சங்கு கடலை கடையும் போது கிடைத்த ஆலகால விஷத்தை சிவபெருமான் குடித்தாக கூறப்படுகிறது. கி.பி 11 முதல் 12 ஆம் நூற்றாண்டு காலத்திய சிவன் காமதேனு மற்றும் வராகி ஆகியோரின் பல அரிய சிற்பங்கள் இந்த கோவில் இருக்கும் மலையைச் சுற்றி சிதறிக் கிடப்பதைக் காணலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 382

கேள்வி: தர்மத்தில் எப்படி கர்ணனை பார்த்தால் பொறாமையாக இருக்கிறதோ அதைப் போல் பக்தியில் பிரகலாதன் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

பக்தியில் இடை எழுத்தை எடுத்து விட்டால் பதி என்று வரும். பதியை பக்தியோடு பார்ப்பது ஒரு நிலை ஒரு காலம். இன்றும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதுபோல் பதியும் பத்தினியை அவ்வாறுதான் நோக்க வேண்டும். பதி பக்தி என்று பதிக்கும் பத்தினிக்கும் ஒரு உடன்பாடு சம நிலையில் வந்து விட்டால் அந்த பதிக்குள் இருக்கின்ற இறையும் பத்தினிக்குள் இருக்கின்ற இறைத் தன்மையும் ஒன்றுபட அங்கே மெய்யான பக்தி உணர்வு என்பது வெளிப்படும். ஆனால் எனக்குள் இருக்கின்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் நீ பூர்த்தி செய்தால் என்னை அனுசரித்து நீ நடந்து கொண்டால் என் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் உன் செயல்கள் இருந்தால் மட்டுமே வாழ்க்கை என்று வெறும் புற செயலோடு ஒப்பிட்டுப் பார்த்து வாழ்வதால் இங்கு உறவுகள் உறவுகளாக இல்லாமல் துறவுகளாக ஆகிவிட்டன. எனவே பக்தி என்பது எதையும் எதிர்பார்க்காது. எந்த நிலையிலும் எதனாலும் பாதிக்கப்படாது. பக்தி என்பது பூரணத்துவத்தை மட்டும் உணரக் கூடியது. பக்தி என்பது அழியாத அன்பு மற்றும் கருணையின் கலப்பாகும். எனவே பக்தியில் செயல் பார்க்கப்படுவதில்லை நோக்கம் மட்டுமே பார்க்கப்படுகிறது.

ஆழ்ந்த நோக்கம் புற மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போனாலும் இறையால் புரிந்து கொள்ளப்படும். எனவே அதனால்தான் இறைக்கு முன்னால் வேடதாரிகள் தோற்று விடுகிறார்கள். வேடமிடாத மெய் பக்தர்கள் அங்கே வெற்றி பெறுகிறார்கள்.

பழமையான நவகிரகங்கள்

சிலி சான்டியாகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 1100 ஆண்டுகள் பழமையான நவகிரகங்கள் கொண்ட சிற்பம். இடமிருந்து வலமாக சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் சுக்கிரன் சனி ராகு மற்றும் கேது. ராகுவின் தலையில் பல நாகங்கள் கோபுரங்கள் போல் இருப்பதை காணலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 381

நேற்று திருவாசகம் ஓதினோம்:

வாசகம் என்றால் அது கலைவாணி தொடர்புடைய விஷயம். திரு என்றால் அது மகாலக்ஷ்மி தொடர்புடைய விஷயம். இரண்டும் ஒன்று சேர்ந்து இருப்பது சிறப்பல்லவா ? அதனால்தான் அது சிறப்பாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இந்த உலகிலே இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தே இருப்பதில்லை.

கனகாம்பரம் கறிவேப்பிலை

மகாமுனிவரான துர்வாசர் ஒருமுறை வைகுண்டத்துக்குச் சென்ற போது திருமாலின் திருமார்பில் எட்டி உதைத்துவிட்டார். திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் செய்யும் திருமகள் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்துவிட்டாள். திருமகளை இழந்த திருமகளை மீண்டும் அடைய ஸ்ரீநிவாஸமூர்த்தியாக பூமிக்கு வந்தார். வகுளாதேவியின் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் வேளையில் பத்மாவதி தேவியை ஸ்ரீநிவாஸர் சந்தித்தார். அவளையே மணந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார். ராமாவதாரத்தில் தோன்றி சீதாதேவியின் இன்னல்களையெல்லாம் தாங்கிக் கொண்ட வேதவதியின் தியாகத்தைப் போற்றும் வகையில் கலியுகத்தில் தாம் ஶ்ரீநிவாஸனாக அவதரிக்கும் போது திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார் ராமபிரான். அந்த வேதவதிதான் ஆகாசராஜனின் மகளாக பத்மாவதி என்ற பெயரில் பிறந்திருந்தாள். தாம் முன்னர் அவளை மணந்து கொள்வதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே ஶ்ரீநிவாஸர் பத்மாவதியை மணந்து கொள்ள விரும்பினார்.

மன்னரின் மகளை தான் மணந்துகொள்ள வேண்டும் என்பதால் திருமணத்தை விமர்சையாகச் செய்ய விரும்பிய ஶ்ரீநிவாஸர் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் பொன் வராகன்களைக் கடனாகப் பெற்றார். தான் பெற்ற கடனுக்குக் கலியுகம் முடியும்வரை வட்டி செலுத்துவதாகவும் வாக்களித்தார். குபேரனிடம் பெற்ற நிதியைக் கொண்டு நாரதரும் வகுளாதேவியும் ஶ்ரீநிவாஸர் பத்மாவதி திருக்கல்யாணத்தை மிகவும் விமர்சையாக நடத்தினர். தேவர்களும் முனிவர்களும் சித்த புருஷர்களும் கலந்து கொண்ட திருமண விழாவில் மாப்பிளை வீட்டார் சார்பாகச் செய்யப்பட்டிருந்த அற்புதமான அலங்காரமும் அருமையான அறுசுவை விருந்தும் எல்லோரும் போற்றும்படி இருந்தன. எந்தக் குறையுமில்லாமல் ஶ்ரீநிவாஸர் பத்மாவதி திருமணம் நடைபெற்றாலும் கலகம் ஏற்படுத்தும் நாரதர் தன் பணியை ஆரம்பித்தார்.

தன் மகனுக்கு நடத்திய திருமணத்தில் எந்தக் குறையுமே இல்லை என்ற கர்வத்தில் இருந்த வகுளாதேவியாரின் கர்வத்தைப் போக்க நினைத்த நாரதர் பத்மாவதித் தாயாரிடம் சென்று திருமணத்தில் கறிவேப்பிலையும் கனகாம்பரப் பூவும் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். அவ்வளவுதான் திருமணத்துக்குப் பின்னர் இது தொடர்பாகப் பெருமாளுக்கும் பத்மாவதி அன்னைக்கும் ஊடல் உண்டானது. இந்த ஊடலே பெரிதாகி பத்மாவதி தாயார் பிரிந்து சென்று திருச்சானூரை அடைந்து தனிக்கோயிலில் வீற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால்தான் திருமலை ஆலயத்தில் இன்றும் எந்த விதத்திலும் கனகாம்பர மலரையும் கறிவேப்பிலையையும் சேர்ப்பதில்லை என்கிறார்கள்.

இரு தேவியர்களை ஸ்ரீநிவாஸ பெருமாள் கொண்டிருந்தாலும் திருமலையில் மூலவராகத் தனித்தே நின்றிருக்கிறார். இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற ஊடலில் திருமகள் கரவீரபுரத்திலும் பெருமாளே தன்னை வந்து பார்க்கட்டும் என்ற ஊடலில் திருச்சானூரில் பத்மாவதியும் தனித்தனியே கோயில் கொண்டிருக்கிறார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 380

அகத்ததிய முனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இறை வழிபாட்டை மறவாது ஆழ்ந்து நுண்ணியமாய் தீவிரமாய் நுணுக்கமாய் எவ்வாறு லோகாய ஆசைகளை மனிதனை விட்டு பிரிக்க முடியவில்லையோ அதைப்போல மனித மனம் இறைவனின் திருவடி மீது ஒரு பிரிக்க முடியாத பற்றை வளர்த்துக் கொண்டால் ஒரு மாறாத அன்பை வளர்த்துக் கொண்டால் அதே ஒவ்வொரு ஆத்மாவிற்கும் கரை சேருகின்ற வழியாகும். ஆனால் ஞானியர்கள் இதனையும் தாண்டி ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் என்றுதான் கூறுகிறார்கள். ஆனாலும் இந்த உயர்ந்த நிலையை நோக்கி செல்வது கடினம் என்பதால்தான் மனிதன் நடப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு ஊன்றுகோல் தேவை ஒரு பிடிமானம் தேவை என்பதுபோல இறைவனின் அருள் கருணை கல்யாண குணங்கள் ரூபம் இறைவன் இத்தன்மை கொண்டவர் போன்றவற்றை மனதிற்குள் எண்ணி அந்த நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளின் உயர் குணத்திற்குள் அந்த ஆத்மா ஐக்கியமாக முயல வேண்டும்.

இதை ஒவ்வொரு மனிதனும் கடுமையாக முயற்சி செய்து போராடித்தான் பெறவேண்டும். அது எடுத்த எடுப்பிலேயே சாத்தியப்படாது என்பது எமக்கும் தெரியும். அது முடியாது என்பதால் முயற்சிக்காமல் இருக்கத் தேவையில்லை. எத்தனை முறை தோற்றாலும் தொடர்ந்து அந்த உயர்ந்த விஷயத்தை நோக்கி செல்வதில் தவறில்லை. தீய பின் விளைவுகள் இல்லாத ஒரே உறவு இறைவன்தான். நேற்றும் இன்றும் நாளையும் ஒரே நிலையில் எல்லா உயிர்களையும் சம அளவில் பார்க்கக் கூடியவர் பராமரிக்கக் கூடியவர். தன்னை உணர்ந்தாலும் உணரா விட்டாலும் உயிர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்பவர். உயிருக்கு உயிராய் இருக்கக் கூடியவர். அந்த உயிரையும் தாண்டி உணர்வுகளால் ஐக்கியப்பட்டு இருக்கக் கூடியவர். எப்பொழுதும் எங்கும் தீர்க்கமாய் திடமாய் ரூபமாய் அரூபமாய் நம்பிக்கையிலும் நம்பிக்கையின்மையிலும் அவர்தான் இருக்கிறார். அப்பேற்பட்ட அந்த உயர்ந்த இறைவனிடம் மனிதன் எந்த அடிப்படையில் தோற்று விடுகிறான் என்றால் லோகாய விஷயங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து பரம்பொருளை நோக்கி சென்று பழக்கப்பட்டு விட்ட மனிதனுக்கு ஒருவேளை அவன் எண்ணிய எண்ணம் அவன் விரும்புகின்ற விஷயம் கிட்டவில்லை என்றால் இறை நம்பிக்கை பொய்த்துப் போய் விடுகிறது.

எனவேதான் ஒரு மனிதனுக்கு இத்தகைய ஆசைகள் இருந்தாலும் கூட அவைகள் நடந்தாலும் சரி நடக்கா விட்டாலும் சரி இறைவா இன்னின்ன விஷயங்கள் எனக்குத் தேவை என்று என் சிற்றறிவுக்கு எட்டுகிறது. இவைகள் எல்லாம் கிடைத்தால் நான் சந்தோஷமாக வாழலாம் என்று எண்ணுகிறேன். இயன்றால் இதனைத் தந்து உதவு. இல்லையென்றால் எது கிடைத்தால் தடையற்ற சந்தோஷமோ திருப்தியோ தொடர் நிம்மதி எங்களுக்குக் கிட்டுமோ அதைத் தா என்று ஒரு வேண்டுகோளை வைக்கலாம். அதிலும் நுணுக்கமாய்ப் பார்த்தால் ஏதாவது வந்தால்தான் தந்தால்தான் நிம்மதி சந்தோஷம் என்றாலே அதற்கு ஒரு எல்லை வகுக்கப்பட்டு விடுகிறது. எனவே பெறுவதிலோ அல்லது வெளியிலிருந்து வருவதிலோ சந்தோஷமில்லை. ஒரு மனிதன் தன்னிடம் இருப்பதிலிருந்து எப்படியெல்லாம் இழக்கிறானோ தன்னை இழந்தால்தான் ஆனந்தம். தன் உணர்வு தான் என்ற நினைவு எப்பொழுது நூற்றுக்கு நூறு விழுக்காடு அற்றுப் போகிறதோ அப்பொழுதுதான் அவன் தூய நித்திய ஆனந்தத்தை பிரம்மானந்தத்தை உணர முடியும் நுகர முடியும்.

நான் அற்றுப் போன பிறகு அங்கு உணர்வதற்கு எது இருக்கிறது? நான் இருந்தால்தானே அந்த நான் எதையாவது உணர முடியும்? என்ற ஒரு வினா வைக்கலாம். உண்மைதான் நான் கடுகளவாவது இருந்தால்தான் உணரமுடியும். ஆனால் அப்படி உணரக் கூடியது என்றென்றும் தொடர்ந்து சந்தோஷமாக மட்டும் இருக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அது துக்கமாக துன்பமாக துயரமாக உளைச்சலாக விரும்பத்தகாத நிகழ்வாக இருக்கலாம். இரண்டையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவமான மனிதன் நான் என்ற உணர்வில் இருக்கலாம். இரண்டில் ஒன்று மட்டும்தான் வேண்டும். அதாவது துயரம் வேண்டாம் சந்தோஷம் வேண்டும் துக்கம் வேண்டாம் நிம்மதி வேண்டாம் என்று எந்த மனிதன் எண்ணுகிறானோ அப்பொழுது அவன் நான் அற்றுப் போக வேண்டும். நானில் இருக்கும்வரை அவன் நாணித்தான் வாழ வேண்டிய நிலைமை இருக்கும். எனவே நான் அற்றுப் போனால் அப்பொழுதுதான் நிரந்தர நிம்மதி. இல்லையென்றால் ஒரு மனிதன் தன்னுடைய நிம்மதிக்கும், சந்தோஷத்திற்கும் ஏதாவது ஒரு எல்லையை வகுத்துக் கொண்டே செல்ல வேண்டியிருக்கும்.

இது கிடைத்தால் ஆனந்தம் அது கிடைத்த பிறகு இன்னொன்று கிடைத்தால் ஆனந்தம் பிறகு கிடைத்தது நீடித்தால் ஆனந்தம். நான் எண்ணுவது போல என்னை சுற்றியுள்ளவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனால் துக்கம். அப்படி நடந்தால் ஆனந்தம் ஒருமுறை நடந்து மறுமுறை நடக்கவில்லை என்றால் துக்கம். என்னுடைய உணர்வுகள் எந்த விதத்திலும் காயப்படாமல் இருக்க வேண்டும். என்னுடைய உடல் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உடல் அவஸ்தை என்பதே இருத்தல் கூடாது. உணர்வுகள் எப்பொழுதும் ஒருவிதமான நல் உயர் சுக அனுபவத்தில் திளைத்திருக்க வேண்டும். அந்த அனுபவத்திற்கு குறுக்கே யாரும் வந்து விடக் கூடாது. நான் எந்த நிலையில் சிந்திக்கிறேனோ எந்த உச்சத்தில் இருந்து கொண்டு எதையும் பார்க்கிறேனோ என்னைச் சுற்றியுள்ளவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று இப்படி ஒரு மனிதன் எதை எண்ணினாலும் தோற்றுத்தான் போவான். நடப்பதையெல்லாம் இயல்பாகவே எடுத்துக் கொண்டு ஒரு பார்வையாளனாகவே பார்த்து கொண்டு உள்ளுக்குள் அவன் கரைந்து போய் விட்டால் அந்த பரம்பொருளோடு நீக்கமற இணைந்து விட்டால்தான் அவனுக்கு நிரந்தர சுகம் நிரந்தர நிம்மதி.

பிறகு தனக்குள் இருந்து தான் இன்னும் துடித்துக் கொண்டும் இருந்தால் அந்தத் தானில் ஏதாவது மிச்சம் மீதி இருக்கும் வரையிலும் அங்கு சந்தோஷமும் ஒருவேளை இருக்கலாம். துக்கமும் இருக்கலாம் அல்லது வேறு வகையில் கூறப்போனால் முட்டாள்தனமான அறியாமையில் தொடர்ந்து வாழக்கூடிய மனிதன் சந்தோஷமாக இருக்கலாம் அல்லது தெய்வீக அறிவின் உச்சத்தில் இருக்கக் கூடிய மனிதன் சந்தோஷமாக இருக்கலாம். அறியாமையால் கிடைக்கக்கூடிய சந்தோஷம் நீடிக்காது. தீய பின் விளைவுகளைத் தரும். நல்ல முறையிலே அறிவார்ந்த நிலையிலே மெய்யறிவை தெளிந்த தெய்வீக அறிவை பெற்ற பிறகு கிடைக்கக் கூடிய சந்தோஷம் நீடிப்பதாக இருக்கும். அதனையும் தாண்டி ஒரு நிரந்தர நிம்மதியும் சந்தோஷமும் பெற ஒருவனுக்கு அவன் என்ற உணர்வோ அவள் என்ற உணர்வோ அற்றுப்போக வேண்டும். அது அற்றுப் போகும் வரை அவனிடமும் அவளிடமும் எல்லாம் இருக்கும். எல்லா இருக்கின்ற அந்த நிலையிலே வாழ்விலே இவைகள் எல்லாம் வேண்டும் இவைகள் எல்லாம் வேண்டாம். எனக்கு தானியங்கள் வேண்டும் தவிடு வேண்டாம். எனக்கு நீர் வேண்டும் சேறு வேண்டாம். எனக்கு சுகந்த நறுமணமிக்க காற்று வேண்டும். ஆனால்
புயல் வேண்டாம். தேவையான அளவு நீர் வேண்டும். ஆனால் வெள்ளம் வேண்டாம் என்றால் அது சாத்தியமேயில்லை.

ஒவ்வொன்றின் உச்ச நிலையையும் அடுத்த நிலையையும் மனிதன் சந்தித்தே ஆக வேண்டும். இரண்டு தன்மையும் வேண்டாம் என்றுதான் ஒருவனால் இருக்க முடியுமே தவிர இரண்டில் ஒன்று என்பது இறை படைப்பில் எப்பொழுதுமே இல்லை. இரண்டையும் சமமாக பார்க்கின்ற பக்குவத்தைதான் மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணர்வை நோக்கி எமை நாடுகின்ற மனிதர்கள் மெல்ல மெல்ல வர இதுபோல் நல்விதமாய் முழுமதி தினம் தன்னிலே செவ்வாய்க்குரிய நட்சத்திரத்திலே இறைவன் திருவடியை வணங்கி யாம் அனைவருக்கும் நல்லாசி கூறுகிறோம்.