சுலோகம் -171

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-9

அர்ஜூனா என்னுடைய பிறப்பும் செயலும் தெய்வீகமானவை. அப்பழுக்கற்றவை. உலகியலுக்கு அப்பாற்பட்டவை. இவ்விதம் எவன் தத்துவரீதியாக அறிந்து கொள்கிறானோ அவன் உடலைத் துறந்து மறுபடியும் பிறவி எடுப்பதில்லை. என்னை அடைந்து விடுகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா பிறப்பு உள்ளது போன்று தோன்றும் எனது உருவத்திலும் நேர்மையாக இருப்பவர்களை காக்கும் எனது செயலிலும் இந்த உலகிற்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்து தனது பாவங்களை அதிகரித்து கொள்பவர்களை அழிக்கும் எனது செயலிலும் எவன் உள்ளது உள்ளபடி எனது தெய்வீகத் தன்மையை அறிந்து கொள்கிறானோ அவனுக்கு பிறப்பு என்பது இல்லை. அவன் என்னை வந்து அடைந்து விடுகிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 305

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

முக்தி குறித்தும் முக்தி போன்ற ஒரு உயர்நிலை குறித்தும் அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு யோக நிலை குறித்தெல்லாம் மனிதர்கள் எம்போன்ற ஞானிகளை பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவது இயல்பு என்றாலும் கூட யாங்கள் (சித்தர்கள்) எதையெல்லாம் முதலில் கூறுகிறோமோ அதையெல்லாம் பூர்த்தி செய்யாத நிலையில் மனம் மேல் ஏறாத நிலையில் மனம் பக்குவம் பரிபக்குவம் பரிபரிபக்குவம் அடையாத நிலையில் எத்தனை யோக வித்தைகளை யாங்கள் எடுத்துக் கூறினாலும் அது வெறும் செவியாறலாக இருக்குமே தவிர அதை உள்வாங்கி ஒருவன் நடை முறைப்படுத்த இயலாது. எனவே சுருக்கமாக இங்குள்ள ஒவ்வொரு சேய்களுக்கும் (பிள்ளைகளுக்கும்) நாங்கள் கூறுவது என்னவென்றால் பிரச்சனை எது வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். கர்ம தாக்கம் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். சினத்தை விட்டு தன்முனைப்பை விட்டு சாத்வீக எண்ணத்தை வளர்த்துக் கொண்டு தன்னை அமைதியாக்கி இயன்ற வழிபாடு இயன்ற தர்மம் இயன்ற தொண்டு என்று தொடர வாழ்க்கை நன்றாகவே ஒவ்வொரு சேய்களுக்கும் இருக்கும். இதுபோல இன்னும் எதிர்காலத்தில் விதி அமைப்பு உள்ள சேய்களுக்கு யாம் சோழ தேசத்திலே இறைவன் அருளால் வாக்கினை இயம்புவோம். அது காலம் இன்னும் பல்வேறு நுணுக்கங்களை அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து இதுபோல வாக்குகளை கேட்பது மட்டும் அல்லாது தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயல்வதே சிறப்பாகும். ஆகுமப்பா இதுபோல வாக்கினை கேட்டு நடப்பதெல்லாம் விதியென்றால் எதற்கு சித்தர்களை நாட வேண்டும்? நடப்பது விதியாகவே இருந்து விட்டுப் போகட்டுமே? என்று எண்ணலாம்.

விதி கடுமையாக இருக்குங்கால் விதி வாயிலாக வருகின்ற துன்பம் தாங்க முடியாத நிலையில் இருக்கின்ற மனிதர்களுக்கு அதனை எவ்வாறு தாங்கிக் கொள்வது? அதனை எப்படி தகர்த்து எறிவது? என்றுதான் யாங்கள் (சித்தர்கள்) பொது வாக்கிலும் அல்லது தனிப்பட்ட வாக்கிலும் வழிகாட்டுகிறோம். சற்றே சிந்தித்தால் அந்த வழிமுறை ஒவ்வொரு சேயின் மனதிலும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் புரியும். ஆனாலும் குழப்பமும் வேதனையும் சினமும் இவற்றோடு போராடும் மனிதனுக்கு யாங்கள் (சித்தர்கள்) கூறுகின்ற நல் உபதேசம் சட்டென்று புரியாமல் போய் விடுகிறது. இதனை நன்றாக மனதிலே பதிய வைத்தால் வாழ்வு சுபமாக செல்லும். காலம் அரவு காலம் என்பதால் இதுபோல யாங்கள் இறைவனருளால் வாக்கினை பூர்த்தி செய்கிறோம். வாய்ப்பு உள்ள சேய்கள் தொடரட்டும் பிரம்ம நாழிகை வாக்கிற்கு. வாய்ப்பு இல்லாதவர்களுக்கு எமது வாக்கு வேறு வகையில் கருவி மூலம் வந்து சேரும் என்பதால் அனைவரும் மூத்தோனை (விநாகயரை) வணங்கி அவரவர் கடமையாற்றலாம் ஆசிகள் சுபம்.

சுலோகம் -170

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-8

சாதுக்களை கடைத் தெற்றுவதற்காகவும் பாவச் செயல்களை செய்கிறவர்களை அழிப்பதற்காகவும் தர்மத்தை நன்கு நிலைநாட்டுவதற்காகவும் யான் யுகம் தோறும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை அனுபவித்துக் கொண்டு இறைவனை சென்று அடைய வேண்டும் என்று நேர்வழியில் செல்பவர்களுக்கு துன்பம் ஏதும் நேராதபடி சரியான வழியை காண்பித்து அவர்கள் இறைவனடி சேர்வதற்காகவும் பாவச் செயல்களை செய்கின்றவர்கள் மேலும் பாவம் சேர்த்துக் கொள்ளாதபடி அவர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டி அனைவரும் தர்மத்தை கடைபிடிக்க செய்வதற்காகவே யுகம் தோறும் நான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 304

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு யாங்கள் (சித்தர்கள்) மீண்டும் கூறுவது யாதென்றால் முன்னரே வாக்கறிந்த சேய்கள் அதனை மீண்டும் நாங்கள் வாக்கினை கூறும் வரை பின்பற்றி வந்தால் அதுவே இறைவன் அருளை பெற்றுத் தரும். புதிதாக வந்துள்ள சேய்கள் அதுபோல இயன்ற இறை வழிபாடும் இயன்ற தொண்டும் இயன்ற தர்மமும் செய்து வந்தால் அது நலத்தை சேர்க்கும். தொடர்ந்து இதுபோல் ஜீவ அருள் ஓலை மூலம் சில ஆத்மாக்களின் பாவ கர்மாக்களை இறைவன் அருளால் குறைப்பதற்கென்று பல்வேறு அறப்பணிகளை யாம் (அகத்திய மாமுனிவர்) அருளாணையிட்டு செய்து வந்தாலும் கூட பலருக்கும் விதி வசத்தால் அதில் ஆர்வம் இல்லை என்பதை யாங்கள் (சித்தர்கள்) அறிவோம். வேறு எளிய வார்த்தையில் கூற வேண்டும் என்றால் ஜீவ அருள் ஓலையை பின்பற்ற வேண்டுமென்றால் சராசரி மனித சிந்தனை கடுகளவும் கூட ஒத்து வராது. அதிக அளவு பெருந்தன்மை ஒவ்வொரு சேயிடமும் யாங்கள் (சித்தர்கள்) எதிர்பார்க்கிறோம். எம்மிடம் அமரும் போது மட்டும் பணிவு எம்மிடம் அமரும் போது மட்டும் பக்தி இருந்தால் போதாது. அல்லும் பகலும் 60 நாழிகையும் சாத்வீக குணத்தை வளர்த்துக் கொண்டு இறை நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு கூடுமானவரை சத்தியத்தைப் பேசிக்கொண்டு எந்த விஷயத்திலும் மிகவும் கடுமையான சிக்கனத்தைக் கடைபிடிக்காமல் இல்லை எங்களால் அவ்வாறெல்லாம் முடியாது என்றால் அவர்கள் அவர்கள் விதி வழியில் அவர்கள் அவர்கள் மதி செல்லட்டும் என்றுதான் நாங்கள் (சித்தர்கள்) வாக்கினைக் கூற வேண்டியிருக்கிறது.

எனவே வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து தொண்டினை புரிந்து வந்தாலே இதுபோல் எம்மை நாடினாலும் நாடாவிட்டாலும் பாவத்தின் தாக்கம் குறையத்தான் செய்யும். ஆயினும் கூட தர்மத்தின் நுட்பங்களையெல்லாம் ஒரே கணத்தில் எடுத்து இயம்புவது கடினம். எடுத்து இயம்பினாலும் மனிதர்கள் புரிந்து கொள்வது கடினம். மனிதர்கள் பார்வையில் தர்மமாக எவையெல்லாம் காணப்படுகிறதோ அவையெல்லாம் எமது பார்வையில் தர்மமாக இருக்குமென்று கூறுவது இயலாது. இதுபோல் நிலையிலே மீண்டும் மீண்டும் எம்மொத்த சேய்களுக்கு யாங்கள் (சித்தர்கள்) கூற வருவது இதுபோல் தர்மகாரியங்களில் தம்மை பிணைத்துக் கொள்வதும் தொடர்ந்து சுயநலம் விட்டு தன்முனைப்பு விட்டு சினம் விட்டு யார் மனதையும் புண்படுத்தாமல் இறைவனை எண்ணி தொடர்ந்து நேர்மையான வழியில் ஈட்டிய பொருளையெல்லாம் தக்க ஏழைகளுக்கும் வேறுவகையான சத்காரியங்களுக்கும் செலவிட்டால் பூர்வீக தோஷங்கள் பாவங்கள் படிப்படியாகக் குறைந்து இறையருளை உணரக்கூடிய ஒரு மனநிலை வரும் என்பதை இத்தருணம் யாம் (அகத்திய மாமுனிவர்) இறைவன் அருளைக்கொண்டு இயம்புகிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 303

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இப்பொழுது அரவு பொழுதாகும். இருந்த போதிலும் சில வாக்குகளை யாம் (அகத்திய மாமுனிவர்) கூறி பூர்த்தியினை இத்தருணம் செய்கின்றோம். இறைவன் அருளால் மீண்டும் பிரம்ம முகூர்த்த காலத்திலே இந்த உலகியல் வழக்கப்படி நாளை என்றும் எமது (அகத்திய மாமுனிவர்) வழக்கப்படி இன்று என்றும் வைத்துக் கொண்டால் நாளைய பொழுது பிரம்ம முகூர்த்தம் துவங்கி பிரம்ம முகூர்த்தம் பூர்த்தி வரை பொது வாக்கினை இறைவன் அருளால் இயம்ப இருக்கின்றோம். வாய்ப்பு உள்ள சேய்கள் (பிள்ளைகள்) இருக்கட்டும். பயணம் துவங்க உள்ள சேய்கள் மூத்தோனை (விநாயகரை) வணங்கி பயணம் துவங்கலாம். இதுபோல் நிலையிலே இறைவன் அருளாலே யாம் கால காலம் கூறி வருவது எம்முன்னே யார் அமர்ந்தாலும் இதுபோல பரிபூரண சரணாகதியான பக்தியும் இறை வழிபாடும் சத்தியமும் தர்மமும்தான். இதனையே விதவிதமான வார்த்தைகளில் யாங்கள் (சித்தர்கள்) எமை நோக்கி வருகின்ற மனிதர்களின் மனோ நிலைக்கு ஏற்ப இயம்பிக் கொண்டே இருக்கின்றோம். இதனை ஏற்கவும் ஏற்றுப் பின்பற்றுவும் கூட ஒருவரின் ஜாதகத்தில் விதிக்க இருக்க வேண்டும் என்று யாம் உணர்ந்தாலும் தொடர்ந்து நல்விஷயங்களைக் கூறிக்கொண்டே இருந்தால் இறைவன் கருணையினால் ஆத்மாவில் பதிந்து இப்பிறவி இல்லா விட்டாலும் அடுத்தடுத்த பிறவிகளில் நல்விஷயங்களை அந்த ஆத்மா புரிந்து பின்பற்றி மேலேறி வரட்டும் என்பதுதான் எம்போன்ற மகான்களின் நோக்கமாகும்.

ஆகுமே இதுபோல் ஜீவ அருள் ஓலையிலே கூறுகின்ற கருத்துக்களையெல்லாம் எல்லா மனிதர்களாலும் அப்படியே உள்வாங்கி ஜீரணித்துக் கொள்ள இயலாது என்று யாம் அறிந்தாலும் பொதுவில் யாங்கள் கூறிக்கொண்டே செல்வதால் இங்கு வந்து வாக்கு அறியாமலேயே பலரும் ஏற்று நடப்பவரும் உண்டு. நடவாமல் போகின்ற மாந்தர்களும் (மனிதர்களும்) உண்டு. அனைத்தும் விதிப்பயன் என்று நாங்கள் (சித்தர்கள்) இறைவனருளால் மௌனமாக பார்வையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறைவன் கருணையைக் கொண்டு சேய்களுக்கு நல்லாசிகளைக் கூறுகின்ற இத்தருணம் தொடர்ந்து எங்கள் வாழ்விலே பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. எங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாக்கினை தர வேண்டும் என்று பலரும் வினா எழுப்புகின்ற இத்தருணத்தில் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் இயம்புகின்றோம். தொடர்ந்து இறை வழிபாடும் தர்மத்தையும் கடைபிடித்தால் எத்தனை கடுமையான கர்ம வினையென்றாலும் கட்டாயம் படிப்படியாக குறையத்தான் செய்யும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 302

கேள்வி: தென்மேற்கு பருவ மழை பரவலாக அதிகரிக்க வேண்டும். மேட்டூர் அணை விரைவில் நிரப்ப வேண்டும்:

பருவ நிலைகள் மாற்றங்கள் அடைந்து மனித சமுதாயத்திற்கு எதிராக இருக்கிறது என்றாலே அதாவது அதிக மழை அல்லது அறவே மழையற்றுப் போதல். அனல் அதிகமாக அடித்தல் அல்லது வெயிலோன் அடிக்காமல் போதல். காற்று இல்லாத நிலை அல்லது அதிக சூறை காற்று. இதனால் மனிதன் வாழ முடியாமல் போய் விடுகிறது. தர்மம் எங்கே குறைகிறதோ அங்கே இயற்கை தன் சீற்றத்தைக் காட்டும். எனவே மனிதர்கள் கூட்டாக சேர்ந்து நல்ல சத்சங்கமாக கூட்டுப் பிரார்த்தனை செய்வதும் தன்னிடம் இருக்கக் கூடிய மிகுதியான செல்வத்தை தக்க மனிதர்களுக்கு தாராளமாக பகிர்ந்து கொடுக்கக்கூடிய நிலை வரும் வரை இது போன்ற இயற்கை சீற்றங்கள் தொடரத்தான் செய்யும்.

கேள்வி: இறைவனை மோகினி அவதாரத்தில் எந்தெந்த கோவில்களில் தரிசனம் செய்யலாம்? மோகினி அவதாரத்திற்குண்டான ஸ்லோகம் கூறியருள வேண்டும்:

மகாவிஷ்ணுவை எந்த ஆலயத்திலேயே வணங்கினாலும் மோகினி ரூபமாகவும் பார்த்து வணங்கலாம். அதுபோல் நிலையிலே மகாவிஷ்ணுவிற்குரிய அனைத்து வழிபாடுகளும் அனைத்து மந்திரங்களும் இதுபோல் அவதாரத்திற்கும் பொருந்துமப்பா.

சுலோகம் -169

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-7

பரதகுலத் தென்றலே எப்போதெல்லாம் தர்மத்திற்கு குறைவும் அதர்மத்தின் ஓங்குதலும் ஏற்படுகின்றனவோ அப்போதெல்லாம் நான் என்னை தோற்றுவித்துக் கொள்கிறேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகத்தில் தர்மம் எப்போது குறைந்து அதர்மம் தலை தூக்கி நிற்கிறதோ அப்போது தர்மத்தை காப்பதற்காக நான் என்னை தோற்றுவித்துக் கொள்கிறேன்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 301

கேள்வி: கோதண்ட ராமரின் கோதண்டத்திற்கு மாலை போடுவதன் தாத்பர்யம் என்ன?

பொதுவாக இறை அல்லது நிலையோடு இருக்கின்ற ஏனைய உப பொருள்களுக்கும் இறைத்தன்மை வந்துவிடுகிறது என்பது மெய்தான். அதனால்தான் இறைவனின் வாகனங்கள் கூட பக்திக்குரிய வழிபாட்டுக்குரிய விஷயமாகப் போற்றப்படுகிறது. எனவேதான் விஷ்ணுவிடம் இருக்கக்கூடிய சங்கும் சக்கரமும் கூட அஃறிணைப் பொருள்களாக இல்லாமல் அதுவும் உயர் தெய்வ கடாக்ஷம் பெற்ற தெய்வீகமாகவே போற்றப்படுகிறது. அதேப் போலதான் இந்த கோதண்டமும். அது இறைவனின் கையிலே ஸ்ரீராமபிரானின் கரத்திலே இருப்பதால் அதுவும் தெய்வாம்சம் பெற்றதாகவே போற்றப்படுகிறது. எப்படி பகை குறைவதற்கு பகை கடிதலும் சத்ரு சம்ஹார யாகமும் எம்மால் உபதேசம் செய்யப்படுகின்றதோ அதைப் போல இங்கு ராமரையும் அந்த ராமரின் கரத்தில் இருக்கக் கூடிய வில்லையும் வழிபாடு செய்வதால் பகையைக் குறைத்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

கேள்வி: சிராத்தத்தில் 96 வகை இருப்பதாக சொல்லப்படுகிறது. மஹாவ்யதிபாதம் பற்றி சொல்லுங்கள்:

பின்னர் விளக்கமாகக் கூறுகிறோம். 96 அல்ல. 108 க்கும் மேலான வகைகள் உண்டப்பா. எல்லாவற்றையும் எல்லா மனிதர்களாலும் பின்பற்ற முடியாது. ஒரு எளிய பூஜை ஒரு எளிய தர்ப்பணத்தை செய்து ஒரு ஆவினத்திற்காவது (பசு) வயிறார உணவைத் தரலாம். ஏதும் இல்லாதவர்கள் சிறிய உயிரினங்களுக்கு உணவினைத் தரலாம்.

சுலோகம் -168

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-6

நான் பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும் இருந்தும் கூட எல்லா உயிரினங்களுக்கும் ஈஸ்வரனாக இருந்தும் கூட என்னுடைய பிரகிருதியை வசப்படுத்திக் கொண்டு என்னுடைய யோகமாயையினால் வெளிப்படுகிறேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எனக்கு ஆசைகளோ கர்மங்களோ எதுவும் இல்லை. ஆகையால் எனக்கு பிறப்பு என்பதும் அழிவு என்பதும் எப்போதும் இல்லை. ஆனாலும் மனிதர்களுடைய கண்ணுக்கு பிறப்பது போலவும் இறப்பது போலவும் தோன்றுகிறேன். இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனாக இருந்தும் கூட சாதாரண மனிதனைப் போலவே காட்சி அளிக்கிறேன். நான் இந்த உலகத்தில் பல வடிவங்களில் அவதாரம் செய்யும் போது மனிதர்கள் தான் பிறப்பதாகவும் அவதார நோக்கம் முடிவடைந்ததும் நான் இறப்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகின் அவதாரம் செய்து உலக நன்மைக்காக நான் செய்யும் லீலைகளை மனிதர்கள் பார்த்து அதிசயம் செய்கிறேன் என்று தான் எண்ணுகிறார்களே தவிர உலக நன்மைக்காக இதனை செய்கிறேன் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. ஏனெனில் நான் யோகமாயை என்னும் திரையில் ஒளிந்து கொண்டு வெளிப்படுகிறேன்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 300

கேள்வி: அற்புதம் நின்ற கற்பகக் களிறே என்ற பொருள்?

இதுபோல் நல்விதமாய் மூத்தோனின் லீலைகளும் மூத்தோனின் தோற்றமும் மூத்தோன் வழிபாட்டால் கிடைக்கக் கூடிய அனைத்து விளைவுகளும் அற்புதத்தில் அடங்கும் என்பதின் சுருக்கமே இதுபோல் வாக்கியமாகும்.

கேள்வி: கோட்சார பலன்களை அறிந்து கொள்ள லக்ன பாவத்திலிருந்து பார்க்க வேண்டுமா? அல்லது சந்திர பாவத்திலிருந்து பார்க்க வேண்டுமா?

இரண்டிலிருந்தும் பார்க்க வேண்டுமப்பா. இருந்தாலும் கூட அடிப்படை ஜாதகம் வலுவானது. அதை பிரதிபலிக்கக் கூடியது திசா புத்தி அந்தர சூட்சுமம். அதன் பிறகுதான் கோட்சார பலன்கள்.

கேள்வி: கோச்சாரத்தில் சனியும் செவ்வாயும் துலாத்தில் சேர்ந்திருக்கிறார்கள். தீய விஷயங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

முருகப்பெருமான் வழிபாட்டில் கவனம் செலுத்துவதும் நவகிரக அபிஷேகம் செய்வதும் ஏற்புடையதாகும்.