சுலோகம் -167

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-5

கிருஷ்ணர் பதில் சொல்கிறார். எதிரிகளை வாட்டும் அர்ஜூனா எனக்கும் உனக்கும் பல பிறவிகள் கழிந்து விட்டது. அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய். நான் அறிவேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா நீயும் நானும் இப்போது தான் பிறந்திருக்கிறோம் என்று எண்ணாதே. இதற்கு முன்பு பல முறை பிறந்திருக்கிறோம். அவை அனைத்தையும் நீ அறிந்து கொள்ளாமல் இருக்கிறாய். நான் அறிந்து வைத்திருக்கிறேன். நீ அறிந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் உனது அறிந்து கொள்ளும் தன்மையானது இந்த உலகத்தில் உள்ள பந்தங்களுடனும் பற்றுக்களுடனும் தர்மம் மற்றும் அதர்மங்களால் சூழப்பட்டு மாயையில் நீ சிக்கி இருப்பதினால் அறிந்து கொள்ளாமல் இருக்கிறாய். நான் எப்படி அறிந்து வைத்திருக்கிறேன் என்றால் எந்த விதமான பந்தங்கள் பற்றுக்கள் இல்லாமல் இந்த உலகத்தில் ஒட்டாமலும் மாயையில் சிக்காமலும் எனது ஞானம் தடைபடாமல் இருப்பதால் நான் அறிந்து வைத்திருக்கிறேன்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 299

கேள்வி: ஸ்ரீரங்கத்திலே சுக்ரவார கிருஷ்ணன் சன்னிதி இருக்கிறது. அதன் தாத்பர்யம் என்ன?

பொதுவாகவே அரங்க ஸ்தலம் (பெருமாள் ஆலயம்) என்பது சுக்ரனுக்கு உகந்த ஸ்தலம் என்று கூறலாம். ஜாதகத்தில் சுக்கிர பகவானின் அருள் குறைவாக இருக்கப் பெற்றவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் ஸ்ரீரங்கமும் ஒன்று. எனவே அந்த ஸ்ரீரங்கம் முழுவதுமே சுக்கிரனின் ஆட்சி இருக்கிறது. அதனால்தான் அது ஆதிகாலத்தில் இருந்த நிலை நாளுக்கு நாள் மாறி மாறி தற்காலத்திலே மிகப்பெரிய நகரமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அதுபோல் நிலையிலே அங்கு எந்த சன்னிதியிலே சென்று இறைவனின் எந்த வடிவத்தை வணங்கினாலும் கூட அது சுக்ர தோஷத்திற்கு பரிகாரமாக அமையும். எனவே மூலவரை வணங்கினாலும் வேறு உப சன்னதியில் சென்று வழிபாடு செய்தாலும் கூட அது சுக்ரன் தொடர்பான தோஷங்களை நீக்கும். எனவே அங்குள்ள எல்லா வகை சன்னதியிலும் ஒரு மனிதன் எந்த வகை பூஜை செய்தாலும் அதற்கு சுக்கிர பரிகார பூஜை என்று பொதுவாக கொள்ளலாம். எனவே அந்த அடிப்படையில் எழுந்ததுதான் இன்னவன் விடுத்த வினா.

கேள்வி: சக்கரத்தாழ்வாரின் பின் பக்கம் நரசிம்மரை பிரதிஷ்டை செய்வதன் தாத்பரியம் என்ன?

மகாவிஷ்ணுவும் மகாவிஷ்ணுவுடன் இருக்கக்கூடிய சங்கும் சக்ரமும் இணை பிரியாதவை என்பதை ஒரு குறிப்பாக உணர்த்துவதற்காகத்தான். இதுபோல் முற்காலத்திலே எங்கு சுதர்சனத்தை பிரதிஷ்டை செய்தாலும் அதன் பின்னால் மகாவிஷ்ணுவின் வடிவத்தை பிரதிஷ்டை செய்வதாக ஒரு ஐதீகம் இருந்தது. அது சுதர்சனம் என்பது தீமையை அழிக்கக் கூடிய பகையை வெல்லக் கூடிய ஒரு அம்சமாக இருப்பதால் மகாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரை பிரதிஷ்டை செய்யும் வழக்கமும் இருந்தது. எப்படியும் உப தெய்வங்களை வணங்குவதோடு பிரதான தெய்வத்தையும் வணங்குவதே சிறப்பு என்ற அடிப்படையிலேயே இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சுதர்சன பகவானை வணங்கினாலும் மகாவிஷ்ணுவை வணங்கினாலும் பலன் ஒன்றுதான்.

சுலோகம் -166

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-4

அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான். உங்களுடைய பிறப்பு அண்மையில் நிகழ்ந்தது. சூரியனுடைய படைப்பு வெகுகாலத்திற்கு முன்பு கல்பத்தின் ஆதியிலேயே நிகழ்ந்தது. நீங்கள் கல்பத்தின் ஆதியில் சூரியனுக்கு இந்த யோகத்தை கூறினீர்கள் என்ற இந்த விஷயத்தை எவ்வாறு புரிந்து கொள்வது?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனனுக்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த யோகத்தை கிருஷ்ணர் சுலோகம் 163 இல் சூரியனுக்கு சொன்னேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட அர்ஜூனன் நீங்கள் பிறந்து சில காலம் தான் ஆகிறது. ஆனால் உலகம் படைக்கப்பட்ட போது தோன்றிய சூரியனுக்கு உபதேசித்துள்ளதாக சொல்கிறீர்கள். இக்காலத்தில் பிறந்த தாங்கள் உலகம் படைக்கப்பட்ட போது தோன்றிய சூரியனுக்கு சொன்னீர்கள் என்பதை நான் எப்படி புரிந்து கொள்வது என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 298

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு உரைப்பது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே விளையும் என்பது தான் மனிதன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய எளிய சூத்திரமாகும். வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் மனம் விரும்பாத சம்பவங்கள் நிகழ்வுகள் நிகழ்கிறதோ விரும்பாத உறவுகள் தொடர்கிறதோ விரும்பாத சூழலில் இருக்க நேரிடுகிறதோ அப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கோ எப்பொழுதோ எந்த ஊருக்கோ நகருக்கோ நாட்டிற்கோ ஒட்டுமொத்தமாக பிடிக்காத உயிர்கள் விரும்பாத பாதிப்பை தரக்கூடிய ஒன்றை அம்மனிதன் செய்திருக்கிறான் என்று. ஏற்படுத்திய விளைவு ஏற்படுத்திய மனிதனை மீண்டும் சென்று சேர்ந்த பிறகே அந்த விளைவு நேரமாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பழங்கால ஆயுதமான பூமராங்கு எப்படி எய்தவனிடமே திரும்ப வருமோ அது போல ஒவ்வொரு வினைக்கும் விளைவுகள் இருப்பதால் செய்கின்ற வினையை நல் வினையாய் செய்து விட்டு போனால் என்ன என்பதை தான் நாங்கள் காலம் காலமாக எம்மை நாடுகின்ற மனிதர்களுக்கு உணர்த்திக் கொண்டு இருக்கிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 297

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒருவன் உலகியல் ரீதியாக தேடக்கூடிய செல்வங்கள் பொருள் ஆஸ்தி இவை அனைத்தும் உடலை விட்டு அவன் சென்ற பிறகு வருமா? உதாரணமாக நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல ஒரு விலை உயர்ந்த வாகனத்தை வாங்கி அதை இயக்கிப் பார்த்து சந்தோஷப்படுகிறான். நாங்கள் குறை கூறவில்லை. ஆனால் அந்த வாகனம் அவன் அந்த உடலை இங்கேயே விட்டு விட்டு அதாவது இழப்பு கண்ட பிறகு அந்த ஆன்மா அந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தால் அந்த ஆன்மாவிற்கு அந்த வாகனம் பயன்படுமா? சுகம் தருமா உயர்ந்த வைர கனக அணிமணிகளை வாங்கிக் குவிக்கிறான். அவை எல்லாம் விலை உயர்ந்தது என்று. அவற்றை வாங்கி அவன் உடலோடு இருக்கும் போது கழுத்திலே அணிந்து சந்தோஷப்படுகிறான். இதை மற்ற மனிதன் பார்த்தால் தன்னை மதிக்க வேண்டும் என்கிறான். ஆனால் அதே சமயம் அந்த உடலை விட்ட பிறகு அந்த ஆன்மா அந்த அணிகலன்களை எல்லாம் அணிய இயலுமா? எனவே சுருக்கமாகக் கூறுவது சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆதியில் இருந்து தொகுத்து சுருக்கமாக மீண்டும் மீண்டும் கூறுவது என்ன என்றால் ஆன்மா எனப்படும் உயிர் அல்லது ஆத்மா எப்படி அழைத்தாலும் ஒரு மனித உடலில் அது இருந்தாலும் அல்லது விலங்கு உடலில் அது இருந்தாலும் அல்லது வேறு எந்த உடலில் இருந்தாலும் அந்த ஆத்மா சந்தோஷமாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் பாவங்களற்ற தன்மையை மனிதன் மேற்கொள்ள வேண்டும். புண்ணியத்தை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு ஆத்மா உடலோடு இருந்தாலும் உடலற்று இருந்தாலும் அதனுடன் இருப்பது பாவங்களும் புண்ணியங்களும். எனவே ஆத்மா நித்ய சந்தோஷமாக நித்ய நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் சதாசர்வ காலம் மனிதன் புண்ணியத்தை தேடித்தான் ஆக வேண்டும். ஒரு விலங்கு புண்ணியத்தை சேர்க்க இயலாது. பாவத்தையும் செய்ய இயலாது. அது செய்த பாவத்தை அந்த விலங்கு உடலுக்குள் அந்த ஆத்மா புகுந்து செயல்பட்டு அந்த விலங்காகவே வாழ்ந்து அந்த பிறவியை முடிக்க வேண்டும் என்பது விதியின் கட்டளை. ஆனால் மனிதன் நினைத்தால் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள முடியும். பாவத்தை குறைத்துக் கொள்ள முடியும். இந்த சுதந்திரம் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்படுகிறது. கொடுத்த சுதந்திரத்தை மனிதன் என்றுமே சரியாக பயன்படுத்தியதாக சரித்திரமில்லை. சரியாக பயன்படுத்தினால் இறைவனருள் அதிக தொலைவில் இல்லை ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 296

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

பாவம் என்றால் என்ன? எண்ணத்தால் வாக்கால் செயலால் பிறருக்கு அணுவளவும் துன்பத்தைத் தராமல் வாழ எண்ணுவது. அப்படி இல்லாமல் செய்கின்ற அனைத்தும் பாவங்களே. எனவே பாவங்களே இல்லாத ஒரு நிலையை நோக்கி ஒரு மனிதன் சென்றால்தான் துன்பங்களே இல்லாத வாழ்க்கை கிட்டும். ஆனால் இருக்கிறது அதற்காக இந்த தவறை செய்ய வேண்டி இருக்கிறது என்னை விட பல மடங்கு தவறுகளை செய்யக் கூடிய மனிதன் நன்றாகத்தானே வாழ்கிறான். நான் சிறிய தவறைதானே செய்கிறேன் என்று எதையாவது தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டு தவறு மேல் தவறு செய்யும் செய்து கொண்டே போகிறான். இறைவனும் கருணையோடு எப்படியாவது இந்த மனிதன் திருந்துவான் என்று பல்வேறு வாய்ப்புகளை தருகிறார். ஆனால் அப்படி எல்லாம் திருந்தாமல் அதிக துன்பம் வரும் பொழுது ஏதாவது ஒரு நிலையிலே மெல்ல உணரத் தொடங்குகிறான். அப்படி உணரும் பொழுது அவன் சேர்த்த பாவங்கள் அவனைப் பாடாய் படுத்தத் துவங்குகிறது. எனவே தொடர்ந்து புண்ணிய செயலை செய்வதும் (புண்ணியம் என்றால் நிறைய செல்வம் இருந்தால் தான் செய்ய முடியும். தனத்தை வாரி வாரி வழங்கினால்தான் புண்ணியம் என்று எண்ண வேண்டாம்) தனம் உள்ளவர்கள் தனத்தை வைத்து புண்ணியம் செய்யட்டும். தனம் இல்லாதவர்கள் உடல் உழைப்பால் பிறருக்கு நன்மையை செய்து அதன் மூலம் புண்ணியம் சேர்க்கட்டும்.

உடலாலும் பிறருக்கு உழைத்து நன்மையை செய்ய முடியாதவர்கள் வார்த்தைகளில் இதம் இதமாக நல்ல சுகமாக ஆறுதலாக பிறரிடம் பேசிப் பேசி அனைவரையும் மனமார குளிர வைத்து அதன் மூலம் புண்ணியம் சேர்த்து கொள்ளட்டும். எனவே மனிதனாக பிறவி எடுத்தவன் இந்த உலக வாழ்விற்காக ஏதாவது ஒரு பணியை செய்தாக வேண்டும். அந்தப் பணியில் கூடுமானவரை நேர்மையை கடைபிடிக்க வேண்டும். தன் கடமையை தவறாது செய்ய வேண்டும். தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் காப்பாற்ற வேண்டும். அதன் பிறகுதான் அவன் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். எனவே இவற்றை எல்லாம் செய்து கொண்டே ஒருவன் நேர்மையாக வாழ்ந்து கொண்டே நீதியை தவறாமல் பின்பற்றி கொண்டே இறைவனை 100/100 அவன் அறிந்த வடிவத்தில் அவனுக்கு எப்படி இறைவன் இப்படிப்பட்டவர் இந்த வடிவில் இருக்கிறார் என்று போதிக்கப்பட்டு இருக்கிறதோ அந்த வடிவிலேயே இறைவனை நம்பி நல்லவனாக வாழ்ந்தால் வாழ்க்கை என்பது தொடர்ந்து அவனுக்கு அதிக சிக்கல் இல்லாமல் இருக்கும். ஆனால் வெறும் புறத்தே உள்ள மாயையிலே சிக்கி காண்பதெல்லாம் காட்சி காண்பதெல்லாம் வேண்டும் என்ற நோக்கில் அவன் பயணப்பட்டால் மிகவும் கடினம்தான் அவனுக்குத் தொடர்ந்து வரும்.

சுலோகம் -165

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-3

நீ என்னுடைய பக்தனும் உற்ற நண்பனும் ஆவாய். ஆகவே அதே பழமையான இந்த யோகம் இன்று என்னால் உனக்கு சொல்லப்பட்டது. ஏனெனில் இந்த யோகம் மிகச் சிறந்தது ரகசியமானது. அதாவது மறைத்துக் காப்பற்றப் பட வேண்டியது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நீ என்னை சரணடைந்து எப்போதும் மறக்காமல் நினைத்துக் கொண்டே இருக்கின்ற பக்தனாகவும் சிறந்த நண்பனாகவும் இருக்கின்றாய். உலகம் படைக்கப்பட்ட போது என்னால் சொல்லப்பட்டதும் மிகவும் ரகசியமாக மறைத்து காப்பாற்றப் பட்டதுமாகிய இந்த யோகத்தை நீ பெறத் தகுதி பெற்றவனாகி விட்ட படியால் இன்று நான் உனக்கு சொல்கிறேன். இந்த யோகத்தை இறைவனை சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கும் இந்த யோகத்தை கடைபிடிக்க முற்படும் தகுதியானவர்களுக்கு மட்டுமே சொல்லப்பட வேண்டும். தகுதியில்லாதவர்களுக்கோ அல்லது இந்த யோகத்தை ஏளனமோ அவமரியாதையோ செய்பவர்களுக்கு சொல்லக் கூடாது. ஆகவே இதனை மறைத்து ரகசியமாக காப்பாற்ற வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 295

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒன்றுமில்லாத நிலைத்து இல்லாத சில காலம் இருந்து அழிந்து போகக் கூடிய உலகியல் வாழ்க்கைக்காகவே தன் முயற்சியையும் உழைப்பையும் செலவு செய்ய துணியும் மனிதன் இப்படி எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் ஒன்று இருக்கிறது என்று வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலே அந்த நம்பிக்கையோடு மட்டும் அதை நோக்கி என்றால் அவனால் செல்ல முடியாது என்பது எமக்குத் (அகத்திய மாமுனிவர்) தெரியும். ஆனால் இதை எப்படி புரிந்து கொள்வது என்றால் வெறும் உலகியல் வாழ்க்கையோடு அல்லாமல் அதனைத் தாண்டி இறை தேடல் என்கிற உணர்வும் ஒரு மனிதனுக்கு இருந்தால் அடிப்படையிலே சிறு பொறி போல் இருந்தால் அதனை எம்போன்ற (அகத்திய மாமுனிவர்) ஞானிகளும் மகான்களும் ஊதி ஊதி மிகப்பெரிய அக்னிப்பிழம்பாக மாற்றி விடலாம். ஆனால் அடிப்படையிலேயே அந்த பொறி இல்லையென்றால் பொறி என்றால் அந்த ஆன்மிகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற உணர்வை தரக்கூடிய புண்ணியம் இல்லையென்றால் இறைவனே நேரில் வந்தாலும் அந்த மனிதனை புரிந்து கொள்ள வைப்பது கடினம்.

ஆதியில் குறிப்பிட்டதைப் போல இரண்டு வகையாக இதனை நோக்க வேண்டும். ஒன்று உலகில் சார்ந்த வெற்றிகள் இரண்டாவது உலகியல் சார்ந்த இன்பங்கள். இவை அனைத்தும் மனிதனால் விரும்பப்படுபவை. எந்த மனிதனும் உலகில் துன்பமாக வாழ விரும்புவதில்லை. சதாசர்வ காலம் இன்பமாக வாழவேண்டும் சாந்தியோடு இருக்க வேண்டும் என்றே மனிதன் விரும்புகிறான். ஆனால் அப்படி எல்லாம் எல்லோருக்கும் வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. பெரும்பாலான மனிதர்கள் பொருளாதார சிக்கலில் நெருக்கடியில் இருக்கிறார்கள். இன்னும் சிலர் தேக நலம் குன்றி அதனால் துயரமடைகிறார்கள். இன்னும் சிலர் உறவு சிக்கலால் வேதனைப் படுகிறார்கள். இப்படி பலவிதமான பிரச்சனைகளால் மனிதன் சூழப்பட்டு காலகாலம் பெரும்பாலும் ஒன்று போனால் ஒன்று என்று துன்பத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இரண்டு மனிதர்கள் வேண்டுமானால் துன்பம் இல்லாமல் வாழலாம். ஒன்று சித்தம் தெளிந்தவன். இன்னொன்று சித்தம் கலைந்தவன். அதாவது பைத்தியக்காரனுக்கு எந்த விதமான துன்பமும் தெரியாது அல்லது ஞானத்தில் உச்ச நிலையடைந்த தோற்றத்தில் பைத்தியக்காரன் போல் இருக்கின்ற அவனுக்கும் துன்பம் தெரியாது. எனவே இரண்டிற்கும் இடையில் இருந்து வாழுகின்ற மனிதனுக்கு ஏதாவது ஒரு துன்பமென்பது இருந்து கொண்டேதான் இருக்கும். எனவே யாங்கள் (சித்தர்கள்) கூற வருவது யாதென்றால் ஒரு மனிதன் அல்லது உயிர் எதுவாக இருந்தாலும் துன்பமில்லாமல் வாழ வேண்டும் என்று எண்ணுகிறது. நிம்மதியாக வாழ வேண்டும் என்று எண்ணுகிறது. நீடித்த இன்பம் வேண்டும். நிலைத்த நிம்மதி வேண்டும் என்று விரும்பாத மனிதர்களே இல்லை. அதற்கு ஒரே வழி மறந்தும் கனவிலும் பாவத்தை செய்யாமல் இருப்பது.

சுலோகம் -164

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-2

பார்த்தா இவ்விதம் வழிவழியாக வந்த இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தார்கள். அந்த யோகம் வெகு காலமாக மறைந்தாற் போல் ஆகிவிட்டது.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி?

ராஜ ரிஷிகள் என்று சொல்லப்படுபவர்கள் யார்?

கர்ம யோகத்தின் படி பற்றில்லாமல் அரசர்களாக வாழ்ந்திருந்து பின்பு அனைத்தையும் துறந்து சாதகங்கள் செய்து வேதங்களின் உட்பொருளை அறிந்தவர்கள் ராஜ ரிஷிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இஷ்வாகு மன்னனைத் தொடர்ந்து அவரது வாரிசுகளும் இந்த யோகத்தை ஒருவர் பின் ஒருவராக தங்களது வாரிசுகளுக்கு சொல்லிக் கொடுத்திருந்தார்கள். மன்னனைத் தொடர்ந்து மக்களும் அவ்வாறே வாழ்ந்து வந்தார்கள். இப்படி வழிவழியாக பல தலைமுறைகள் இந்த யோகத்தை கடைபிடித்து பற்றில்லாமல் வாழ்ந்து வந்தார்கள். காலம் செல்லச் செல்ல உலகத்தினருக்கு போகமும் பற்றும் வளர வளர கர்ம யோகத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து இறுதியில் இந்த யோகத்தை சொல்லிக் கொடுக்க யாரும் இல்லாமல் அழிந்தே விட்டது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 294

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய என்றும் யாவர் வாழ்விலும் நலமே நடக்கும் என்பதை காலகாலம் எமை நாடும் மாந்தர்களுக்கு (மனிதர்களுக்கு) யாம் இயங்கிக் கொண்டே இருக்கிறோம். ஆயினும் கூட நல்லதை எடுத்து கூறினாலும் எத்தனைதான் கூறினாலும் இதுபோல நலமான எண்ணங்கள் நலமான வாக்குகள் நலமான செயல்பாடுகள் என்பது மனிதரிடம் குறைந்து கொண்டுதான் வருகிறது. இதுபோல் நிலையிலே இரண்டு வகையான கண்ணோட்டங்களை இறைவன் அருளை கொண்டு யாம் இத்தருணம் ஆழி தாண்டி (கடல் தாண்டி) வந்திருக்கும் இந்த சேய்களுக்கு கூறுகிறோம். ஒன்று தேகத்தை பெற்ற மனிதன் அந்த தேகத்திற்குள் இருக்கின்ற ஆன்மாவை புரிந்து கொள்வது என்பது கடினம். கடினம் என்பதற்காகவே புரிந்து கொள்ளவே முயற்சி செய்யாமலிருப்பதும் மடமை. இதுபோல் புரிந்து கொள்ளவும் ஒரு வினைப் பயன் வேண்டும் என்பது உண்மை. வினைப்பயன் ஒத்துழைப்பு தராவிட்டாலும் போராடி இறையை வணங்கி வணங்கி புரிந்து கொள்ள வேண்டும். ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? எதற்காக புரிந்து கொள்ள வேண்டும்? என்ன அவசியம்? என்று மனித மனம் அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பும். இறைவன் அருளால் யாங்கள் (சித்தர்கள்) கூற வருவது என்னவென்றால் மனிதனின் மனமும் எண்ணங்களும் பெரும்பாலும் உடலெடுத்து அந்த உடலுக்குள்ளே நீக்கமற ஆன்மா நிரப்பப்பட்டு இறைவனால் படைக்கப்பட்டிருப்பதால் மனிதனால் தான் வேறு தன் உடல் வேறு என்று அத்தனை எளிதாக பிரித்துப் பார்க்க இயலவில்லை.

எதற்காக அப்படி பார்க்க வேண்டும்? என்பது அடுத்ததொரு வினா (எழும்). இருதயம் இயங்குகிறது. எனவே குருதி எல்லா நாளங்களிலும் பாய்கிறது. குருதிதான் மனிதன் இயங்க வேண்டிய சக்தியை தருகிறது. எலும்பு இருக்கிறது. எனவே மனிதனுக்கு ஒரு உறுதியான கட்டமைப்பை அது தருகிறது. நரம்புகள் எல்லா பக்கங்களிலும் செல்கிறது. அது உணர்வுகளை எடுத்து செல்கிறது. சுரப்பிகள் சுரந்து அதற்கு ஏற்றார் போல் மற்ற விஷயங்களைத் தூண்டி விடுகிறது. சிந்தனையை மூளை செயல்படுத்துகிறது. உடலில் இப்படி ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பணியை செய்ய இவைகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து மனிதனாகிறான். இவைகளெல்லாம் பழுதடைந்து விட்டால் இவைகளில் மிகப்பெரிய பிணி பீடித்து விட்டால் மனிதனால் முழுமையாக இயங்க முடியவில்லை. சோற்வுற்று படுத்து விடுகிறான் அல்லது முற்றிலும் இறந்து விடுகிறான். இதில் எங்கே இருக்கிறது ஆன்மா? அல்லது உயிர் என்று ஒன்று இருக்கிறதா? இந்த தேகமெங்கும் அப்படி ஏதாவது பரவியிருந்தால் அதை புறக்கண்ணால் பார்க்க முடியாதா? புறக்கண்ணால் பார்க்க முடியாத புற செவியால் உணர முடியாத நாசியால் நுகர முடியாத நாவால் சுவைக்க முடியாத ஒன்றை இருக்கிறது என்று நம்பு என்றால் நான் எப்படி நம்புவேன்? என்பது மனிதனின் வாதம். ஆனால் எல்லாம் வெளிப்படையாக பிற அங்கங்களால் புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இருந்தால் விலங்குகளும் ஆன்ம முன்னேற்றம் பெற்று விடலாமே. சில விலங்குகள் பெற்று இருக்கின்றன என்பது விதிவிலக்கு. எனவே அப்படி புரிந்து கொள்வதற்கு மனிதன் ஏராளமான முயற்சிகளையும் உழைப்பையும் மெய்யான மெய்ஞானம் நோக்கி திசை திருப்ப வேண்டும்.