இறை சிந்தனை

ஒரு நாட்டின் மன்னனைக் காண ஒரு சாது வந்தார். நாட்டின் மன்னனாக இருப்பவர்கள் சாதுக்களின் அறிவுரையின்படி வாழ வேண்டும் அதன்படி மன்னனுக்கு அறிவுறுத்துவதற்காக சாதுக்கள் அரசவைக்கு அடிக்கடி வருவது வழக்கம். சாதுவைக் கண்ட மன்னன் பாரம்பரிய பழக்கத்தின்படி எழுந்து நின்று மிக்க மரியாதையுடன் அவரை வரவேற்று உபசரித்தான். மன்னனால் முறையாக வரவேற்கப்பட்ட சாது மன்னனுக்குச் சில ஆன்மீக விஷயங்களை போதிக்க முயன்றார். ஆனால் மன்னனோ அதில் சற்றும் நாட்டம் காட்டவில்லை. சாதுவிற்குத் தங்கம் வெள்ளி மான் தோல் புலித்தோல் என்று ஏதேனும் ஒரு பரிசை வழங்கி அதன் மூலம் அவரிடமிருந்து ஆசி பெறுவதில் மட்டும் மன்னன் குறியாக இருந்தான். பொன்னும் பொருளும் தனது ராஜ்ஜியத்தில் பொங்கி வளர வேண்டும் மக்கள் யாவரும் மன்னனான தனக்கு தயங்காது வரி செலுத்த வேண்டும் என்று மன்னன் ஆசியை வேண்டினான். ஆன்மீக அறிவுரைகள் வேண்டாம் ஆசி மட்டும் கிடைத்தால் போதும் என்றே மன்னனின் மனப்பான்மை இருந்தது. மன்னனுக்கு ஆசி வழங்கிய சாது அவனிடம் ஒரு விருப்பத்தை முன்வைத்தார். இந்த ஊரிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்து அவனுக்கு வேலை கொடுப்பாயாக. அவனது கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம் வரச் சொல். அதுவே அவனது வேலையாக இருக்க வேண்டும் அதற்காக அவனுக்குத் தக்க ஊதியமும் வழங்க வேண்டும். இதுவே சாதுவின் விருப்பம். சாதுவின் வேண்டுகோளைக் கேட்டு திகைப்புற்ற போதிலும் அவரின் மேல் இருந்த மதிப்பின் காரணமாக ஏதும் கேட்காமல் மன்னன் ஒப்புக் கொண்டான். சாதுவும் அரசவையை விட்டு வருத்தத்துடன் வெளியேறினார்.

சாதுவின் விசித்திரமான கட்டளையை மன்னன் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்றினான். தனது அமைச்சர்களின் உதவியுடன் நாட்டிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்தான். அவன் முட்டாளா என்பதை நன்கு சோதித்த பின்னர் அவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். அவன் கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம் வரும்படி கட்டளையிட்டான். மன்னன் தொடர்ந்து தனது நாட்டை திறம்பட ஆட்சி செய்து வந்தான். செல்வங்களைச் சேகரித்தான். பல நாட்டு இளவரசிகளை தனது ராணிகளாக்கினான். பல்வேறு மாளிகைகளைக் கட்டினான். மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்வைக் கழித்தான். முட்டாளும் முட்டாள்தனமாக ஊரெங்கும் குச்சியுடன் வலம் வந்தான். காலங்கள் உருண்டோடின. மன்னனை வயோதிகம் வாட்டத் தொடங்கியது. படுத்த படுக்கையானான். விரைவில் மரணத்தைத் தழுவப் போவதை அறிந்து உற்றார் உறவினர் என அனைவரையும் சந்தித்தார்கள். அண்டை நாட்டு மன்னர்கள் நாட்டின் முக்கியஸ்தர்கள் என அனைவரும் மரணப் படுக்கையில் இருந்த மன்னனை தினமும் சந்தித்து வந்தனர். அச்சமயத்தில் மன்னனைக் காண முட்டாளும் தனது குச்சியுடன் வந்தான்.

நீண்ட நாட்கள் கழித்து மன்னனைக் கண்ட முட்டாள் நீடூழி வாழ்க மன்னா என்று வாழ்த்து கோஷம் எழுப்பினான். தனது நிலையை உணராமல் வாழ்த்து கோஷம் எழுப்பும் முட்டாளை எண்ணி வருந்திய மன்னர் நான் வாழ்ந்த காலம் முடிந்துவிட்டது செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது என்று பதிலளித்தார். எங்குச் செல்கிறீர்கள் மன்னா? எப்போது வருவீர்கள்? என்று கேட்டான். அதற்கு மன்னர் வெகு தூரம் செல்கிறேன். திரும்பி வருவதாக இல்லை என்றார். என்னையும் அழைத்துச் செல்லுங்கள் மன்னா என்றான். அங்கெல்லாம் உன்னைக் கூட்டிச் செல்ல இயலாது என்றார். அப்படியெனில் ராணியர்களோடு தனியாகச் செல்லப் போகிறீர்களா அதற்குத்தான் என்னை வேண்டாம் என்கிறீர்களோ? என்றான். முட்டாளின் முட்டாள்தனத்தை எண்ணி மன்னனுக்குச் சற்று கோபம் ஏற்பட்டது. இருப்பினும் சற்று பொறுமையுடன் தன்னுடைய ராணியர்களை எல்லாம் அங்கு கூட்டிச் செல்ல முடியாது முட்டாளுக்கு எடுத்துரைத்தான். இளைய ராணியரை மட்டுமாவது அழைத்துச் செல்லுங்களேன் என்றான். இல்லை நான் மட்டும் தனியாகத் தான் செல்ல வேண்டும் என்றார். அப்படியெனில் அமைச்சர் தங்களுக்காக அற்புதமான குதிரை வண்டியை ஏற்பாடு செய்திருப்பார் தங்களிடம்தான் எண்ணிலடங்காத குதிரைகள் உள்ளனவே அதில் செல்கிறீர்களா? என்றான். அதிகரித்த கோபத்துடன் மன்னர் முட்டாளே குதிரைகளையும் என்னுடன் கூட்டிச் செல்ல இயலாது. பாதயாத்திரையாகச் செல்ல விரும்புகிறீர்களா? வழிச் செலவிற்காகச் சற்று தங்க நாணயங்களையாவது எடுத்துச் செல்லுங்கள் என்றான். முட்டாளின் முட்டாள்தனமான கேள்விகளை இனிமேலும் பொறுத்துக் கொள்ள இயலாத மன்னன் அவனுடைய பேச்சுகளை உடனே நிறுத்தும்படி கட்டளையிட்டான். இருப்பினும் சாதுவின் பேச்சைக் கேட்டு இந்த முட்டாளை வேலைக்கு வைத்தோம் என்ற காரணத்தினால் இத்தனை காலம் நீ முட்டாளாக குச்சியுடன் நகரத்தைச் சுற்றி வந்ததால் உனக்கு இப்போது ஓய்வு தருகிறேன். இனிமேலும் நீ சுற்றி வரத் தேவையில்லை உனக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும். ஆனால் இந்த குச்சியை உன்னைவிடச் சிறந்த ஒரு முட்டாளைக் கண்டுபிடித்து அவனிடம் நீ கொடுக்க வேண்டும். அவனுக்கும் தக்க ஊதியம் வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்று உரைத்தார். பெரிய முட்டாளைக் கண்டுபிடித்து குச்சியைக் கொடுக்கும்படி மன்னன் கட்டளையிட அந்த முட்டாள் உடனடியாக தனது குச்சியினை மன்னரிடம் நீட்டினான். பிடித்துக் கொள்ளுங்கள் மன்னா என்றான். கோபத்தில் வெகுண்டெழுந்த மன்னன் என்ன தைரியம் உனக்கு என்னையே பெரிய முட்டாள் என்கிறாயா? என்று கோபத்தில் கத்தினான். முட்டாள் தனது பேச்சின் தொனியை மாற்றினான்.

நிச்சயம் மன்னா. நீங்களே பெரிய முட்டாள். ஆசையுடன் அனுபவித்த அரசியரையும் கஷ்டப்பட்டு கட்டிக்காத்த கஜானாவையும் பாசத்துடன் பார்த்து வளர்த்த படைகளையும் குதிரைகளையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்ல இயலாது என்று சொல்கிறீர்கள். ஆனால் எங்குச் செல்கிறோம் என்பதை நீங்கள் உணரவில்லை. எங்கு செல்கிறோம் ஏன் செல்கிறோம் எப்படிச் செல்கிறோம் யாருடன் செல்கிறோம் எதற்குச் செல்கிறோம் என்று எதையும் அறியாமல் எங்கோ செல்லும் உம்மைவிட பெரிய முட்டாள் யார் இருக்க முடியும்? ராணியரைச் சேர்த்தீர்கள் குழந்தைகளைப் பெற்றீர்கள் சேனைகளை வளர்த்தீர்கள் பல ராஜ்ஜியங்களை வென்றீர்கள் சொத்துக்களைக் குவித்தீர்கள் கஜானாவையும் நிரப்பினீர்கள் ஆனால் என்ன பிரயோஜனம்? நான் யார்? ஏன் பிறந்தேன்? ஏன் துன்பப்படுகிறேன்? வாழ்வின் குறிக்கோள் என்ன? கடவுள் யார்? கடவுளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? மரணம் என்றால் என்ன? பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால் இருப்பது என்ன? என்று எதையும் தெரிந்து கொள்ளாமல் இந்த பூமியில் வாழ்ந்து என்ன பலன்? செல்லும் இடத்திற்கு தேவையான புண்ணியத்தை சேர்க்காமல் இருக்கும் இடத்தில் நிலை இல்லாத சுகத்தை சேர்த்து வைத்து என்ன பயன் என்றான். முட்டாளின் சொற்களில் பொதிந்திருந்த ஆழமான கருத்துகள் மன்னனின் நெஞ்சில் பசுமரத்தாணி போல நன்றாகப் பதிந்தன. குச்சியை வைத்துக் கொண்டு ஊரை வலம் வந்த முட்டாளிடம் இத்தனை ஞானமா மன்னருக்கு சந்தேகம் எழுந்தது. யார் நீங்கள் என்று கேட்டார். தான் உண்மையில் முட்டாள் அல்ல என்றும் பல வருடங்களுக்கு முன்பு தங்களைக் காண வந்த சாதுவின் சீடன் என்றும் தக்க தருணத்தில் ஆன்மீக உபதேசம் அளிப்பதற்காக முட்டாளாக நடித்தேன் என்றும் விளக்கினான்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல மரணம் தன்னை நெருங்கி வந்த பின்னர் வாழ்வின் உண்மையான பிரச்சனைகள் மன்னருக்குப் புரியத் தொடங்கின. வாழ்வை வீணடித்து விட்டதாகப் புலம்பத் தொடங்கினான். இருப்பினும் எஞ்சியுள்ள காலங்களாவது இறைவனை சிந்தித்து இறை நாமத்தில் மூழ்கி இருக்குமாறு மன்னனுக்கு அவன் அறிவுறுத்தினான். தன்னையே பெரிய முட்டாளாக ஏற்றுக் கொண்ட மன்னன் தன்னைப் போல முட்டாளாக இருந்து விடாதீர்கள் என்று தன்னை சந்திக்க வந்தவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் அறிவுறுத்தி இறுதி காலம் வரை இறை சிந்தனையில் மூழ்கினான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 195

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவன் அருளாலே நல்ல கருத்துக்களையும் நல்ல ஞானத்தையும் மனிதன் அன்றாடம் சிந்தித்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்க இருக்கத்தான் அதிலிருந்து அவன் விலகாமல் இருப்பதற்குண்டான மனோதிடம் உருவாகும். எனவே ஒரு மனிதன் மெளனமாக இருப்பதும் மெளனத்தைக் கலைத்துப் பேச முற்பட்டால் எப்பொழுதுமே நல்ல சாத்வீகமான நல்லதொரு சத் விஷயமாகப் பேசுவதும் இறை சார்ந்த விஷயமாகப் பேசுவதும் இருப்பதே ஏற்புடையதாக இருக்கும். முழுக்க முழுக்க ஆன்மீகத்தை வாழ்க்கையாகக் கொண்டு அதை நோக்கியே செல்வேன் என்று உறுதி எடுத்துக் கொண்ட மனிதர்களெல்லாம் மிக மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் எல்லா பணிகளையும் பார்த்துக் கொண்டு பகுதி பகுதியாக கால அவகாசம் ஒதுக்கி வித்தை (கல்வி) கற்கிறேன் என்கின்ற மாணவன் சற்றே குறைவாக மதிப்பெண் எடுத்தால் பாதகமில்லை. ஆனால் முழுநேரமும் வித்தை (கல்வி) கற்கத்தான் ஒதுக்கியிருக்கிறேன் என்று அப்படி ஒதுக்கி வித்தை கற்கின்ற மாணவர்கள் அதிக அளவு மதிப்பெண்ணை எடுக்கவேண்டும் அல்லவா?அதைதான் முழுநேர ஆன்மீகத்தை நோக்கி செல்கின்ற மனிதர்கள் கருத்தில் கொண்டிட வேண்டும். இல்லையென்றால் வெறும் உலகியல் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரு சாதனமாக்கத்தான் ஆன்மீகம் இருக்குமே தவிர உண்மையாகவே எந்த நோக்கத்திற்காக ஆன்மீகத்தை நோக்கி ஒரு மனிதன் செல்கிறானோ அந்த நோக்கம் கைவராமல் பல்வேறு பிறவிகளைத் தாண்டி செல்ல வேண்டியிருக்கும். அடுத்தடுத்த பிறவிகளில் இந்தப் பிறவியில் உழைத்த உழைப்பு கை கொடுக்கும் என்றாலும் மாயையில் சிக்கிவிட வாய்ப்பும் இருக்கிறது. இறைவனின் கருணையை சரியான பாத்திரமாக இருந்து மனிதன் பயன்படுத்திக் கொண்டிட வேண்டும்.

இறைவன் அருளாலே நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல நலம் எண்ணி நலம் உரைத்து நலம் செய்ய நலமே நடக்கும். இது உலகியலாக இருந்தாலும் ஆன்மீகமாக இருந்தாலும் பலிதமாகும். இறைவன் அருளாலே உள்ளத்தைப் பண்படுத்தி பண்படுத்தி உள்ளத்தை உறுதியாக்கி எண்ணத்திலே மேம்பாடு இன்னும் இன்னும் அதிகரித்து வாழுங்கால் எதுவும் நன்மையே நலம் தரும் செய்கையே. மன அழுத்தம் என்பது அதனைத் தாண்டி இந்த உலகில் பிற உயிர்களால் ஏற்படக்கூடிய அழுத்தம் தாக்கம் என்பது மிக இயல்பாக கடந்து போவதற்கு மனதை சரியான பக்குவநிலையில் வைத்திருந்தால் போதும். என்றுமே உலகையோ உலக இயல்பையோ மாற்றுவதும் திருத்துவதும் என்றும் கடினம். அங்கனம் இருக்கும் பட்சத்திலே ஒரு மனிதன் தன்னுடைய மனதைதான் பக்குவப்படுத்தி உறுதிபடுத்தி அனுசரித்து சாத்வீகமாக பார்க்க எதிர்கொள்ள பழக வேண்டும். நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல கருவை கருப்பை சுமக்கட்டும். கருவிலே சுமக்க வேண்டிய குழவியை (குழந்தையை) இடுப்பில் சுமக்க முடியாது. தோளிலே சுமக்க முடியாது. அது போலதான் எதிர்காலமும். கடந்த காலம் சவம் போன்றது. சவத்தை தோளிலே சுமந்து கொண்டு திரிவது மனிதனுக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம். மகான்கள் பார்வையில் அது தேவையற்றது. இக்கணம் இக்கணம் இக்கணம் நிகழ் நிகழ் நிகழ் அந்த நிகழ் நிகழ்காலம். அவற்றை சரியாகப் பயன்படுத்த வேண்டும். கடந்த கால கரையான்கள் செல்லட்டும். எதிர்கால நாகங்களும் வேண்டாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 194

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையாலே உலகியல் வாழ்வும் உலகியல் வாழ்வு சார்ந்த விஷயங்கள் மட்டுமே ஒரு மனிதனை மாயையில் ஆழ்த்துவதாக எண்ணி விடக்கூடாது. அது பொதுவான மாயை. ஆன்ம ஞானத்தில் வந்த பிறகும் கூட இது ஆன்மீகமோ? இது தான் மெய்யான இறை வழியோ? என்று எண்ண வைத்து மாயையில் ஆழ்த்துகின்ற விஷயங்களும் இருக்கின்றது. இன்னும் கூறப் போனால் கடுகளவு கூட ஆன்மீகம் பற்றி தெரியாத ஆன்மாக்கள் கூட தப்பித்து விடலாம். ஆனால் படிப்படியாக பிறவி கர்மா இறை நவக்கிரகம் ஞானம் அபர ஞானம் பர ஞானம் என்றெல்லாம் விவாதித்துக் கொண்டு சகல சாஸ்திரங்களையும் வேதங்களையும் எப்பொழுது ஒரு ஆத்மா கற்கத் துவங்குகிறதோ அப்பொழுதே குழப்பமும் தெளிவும் பிறகு மீ்ண்டும் குழப்பம் பிறகு புரிதலும் பிறகு புரியாத நிலையும் ஏற்பட்டு அதற்குள்ளே அந்த ஆன்மா மாயையில் சிக்குவதற்கு வாய்ப்புகள் ஏராளம். வேறு வகையில் கூறப் போனால் எல்லாவற்றையும் ஓதுதலும் ஓதியதை அசை போடுவதும் ஒருபுறமிருக்க பரிபூரண சரணாகதி அந்த பக்தி வழியில் செல்லும் பொழுதே சற்றே சுலபமாக மாயையை விடுவதற்கு இறைவன் அருளலாம் என்பதால்தான் பக்தி வழியையும் தர்ம வழியையும் நாங்கள் காட்டுகின்றோம்.

ஒரு மனிதன் யோகாசங்கள் செய்ய வேண்டாமா? வேண்டும். பிரணாயாமம் செய்ய வேண்டாமா? வேண்டும். உடல் பயிற்சி செய்ய வேண்டாமா? வேண்டும். ஒரு மனிதன் ஸ்தல யாத்திரை செய்ய வேண்டாமா? செய்ய வேண்டும். யாகம் செய்ய வேண்டாமா? செய்ய வேண்டும். தர்மங்கள் செய்ய வேண்டாமா? செய்ய வேண்டும். ஆனால் இவைகளை நிஷ்காம்யமாக (விருப்பு வெறுப்பின்றி) செய்ய ஒரு மனிதன் கற்றுக் கொள்வதே மாயையில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்வதற்குண்டான வழியாகும். எனவே ஒரு மனிதன் என்ன தான் ஆன்மீக வழியில் வருவதாக எண்ணினாலும் கூட தான் பிறரைப் போல் அல்ல. ஆன்மீகத்தில் இருக்கிறோம் என்று எண்ணும் பொழுதே ஒரு மாய சேற்றில் அவன் விழுந்து விடுகிறான். உண்மையான ஆன்மீகம் யாரையும் வெறுப்புடன் பார்க்காது. உண்மையான ஆன்மீகம் எல்லோரையும் அரவணைத்தே செல்லும். உண்மையான ஆன்மீகம் பிறரை தூஷகம் (நிந்தை) செய்தாலும் (பதிலுக்கு) பிறரை தூஷகம் செய்யத் தூண்டாது. எனவே கிட்டத்தட்ட பக்தர்கள் பார்வையில் இறை எப்படி இருந்தாலும் இறைவனின் பார்வையில் பக்தர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதே ஒரு உயர்ந்த சிந்தனையாகும். அந்த சிந்தனையை வளர்த்துக் கொண்டால் தான் மாயையில் சிக்கிடாமல் இருப்பதற்கு நல்லதொரு வழியை மனிதர்கள் உணரலாம்.

பெருமாள் கோவிலில் தாயாரை முதலில் ஏன் தரிசிக்க வேண்டும் என்று சொல்வது ஏன்?

ராமாயணத்தில் 14 வருடங்கள் தண்டக வனத்தில் வாழ வேண்டும் என்று கைகேயி வரமாக தசரதரிடம் கேட்டு கொண்டதால் ராமர் சீதை மற்றும் லட்சுமணன் தண்டக வனத்திற்கு வந்து அங்கிருந்த சரபங்க முனிவரை தரிசித்தார்கள். ராமரை தரிசித்த பிறகு சரபங்க ரிஷி சுதீக்ஷன ரிஷியை சென்று பாருங்கள் என்று கேட்டுக் கொண்டு தன் உடலை அக்னியில் விட்டு விட்டு பிரம்ம லோகம் சென்று விட்டார். சரபங்கர் சொன்னபடி சுதீக்ஷன ரிஷியை பார்க்க பல வனங்கள் மலைகள் கடந்து வந்து கொண்டிருந்தார் ராமர் சீதையுடன் லட்சுமணனும் வந்து கொண்டிருந்தான். வரும் வழிகளில் பல ரிஷிகள் தவத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அப்போது சிலர் ராமரை பார்த்து இந்த வானத்தில் வசித்து கொண்டிருக்கும் முனிவர்கள் நாங்கள் ராட்சர்களால் அனாதைகள் போல குவியல் குவியலாக கொல்லப்படுகிறோம். இதோ பாருங்கள் குவியலாக கிடக்கும் எலும்பு குவியலை. நர மாமிசம் உண்ணும் ராட்சர்கள் தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்கள் விழுங்கி துப்பிய எலும்புகள் இவை. பம்பா நதிக்கரையில் மந்தாகினி ஓடும் நதிக்கரையில் சித்ரகூடத்தின் அருகில் வசிக்கும் அனைவரையும் கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறார்கள் ராட்சர்கள். ராமா ராட்சர்கள் செய்யும் இந்த பெரும் நாசத்தை எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. நீங்கள் அடைக்கலம் கொடுப்பதற்கு தகுதியானவர். எனவே உங்கள் பாதுகாப்பை நாடி நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இரவில் சஞ்சரிக்கும் ராட்சர்களால் நாங்கள் கொல்லப்படுகிறோம் எங்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

ராமர் முனிவர்களிடம் பேச ஆரம்பித்தார். முனிவர்களான தாங்கள் இவ்வாறு என்னிடம் கேட்பது கூடாது. எனக்கு நீங்கள் ஆணை இட வேண்டும். நீங்கள் இட்ட ஆணையை செயல்படுத்தும் சேவகன் நான். நான் என்னுடைய கடமையை செய்யவே இந்த வனத்திற்கு வந்துள்ளேன். என் தந்தையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து இந்த காட்டிற்கு வந்த நான் உங்களுக்கு தொந்தரவு செய்யும் இந்த ராட்சர்களை தடுப்பேன். அதிர்ஷ்டத்தால் உங்களுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுக்கு சேவை செய்வதால் என் வனவாசம் பலன் பெற்றது. உங்களுக்கு எதிரியாக இருக்கும் அந்த ராட்சர்களை நான் ஒழிப்பேன். என் சகோதரனோடு நான் வெளிப்படுத்தும் வீரத்தை நீங்கள் காணப்போகிறீர்கள் என்று உறுதியளித்து அவர்களிடமிருந்து விடைபெற்றார்.

ராமரிடம் சீதை பேச ஆரம்பித்தாள். ஓருவனுக்கு திருப்தியே இல்லாத போது மூன்று வகையான தீமைகள் பிறக்கின்றன. திருப்தியே இல்லாதவன் பொய் பேச துணிவான். திருப்தியே இல்லாதவன் அடுத்தவர்களின் தாரத்தை கூட அபகரிக்க நினைப்பான். திருப்தியே இல்லாதவன் தன்னிடம் பகை காட்டாதவனிடம் கூட வலிய சென்று பகையை காட்டுவான். பொய் சொல்வதை காட்டிலும் மற்ற இரண்டும் மிகவும் கொடியது. நீங்கள் அன்றும் இன்றும் என்றுமே சத்தியத்தை மீறுபவர் இல்லை. உங்களிடம் அசத்தியம் கிடையவே கிடையாது. அதே போல பிற தாரத்தின் மேல் ஆசை கொள்வதில்லை. பிறர் தாரத்தை அடையும் ஆசை உங்களுக்கு முன்பும் இருந்தது இல்லை இப்பொழுதும் இல்லை. உங்கள் மனதில் இந்த எண்ணமே இல்லை. நீங்கள் எப்பொழுதுமே உங்கள் பத்தினிக்கு துரோகம் செய்யாதவராக இருக்கிறீர்கள். நீங்கள் தர்மத்தை அறிந்தவர் சத்தியத்தை மீறாதவர் தகப்பனார் ஆணையை மீறாதவர். உங்களிடம் எப்பொழுதும் தர்மமும் சத்தியமும் குடி கொண்டு இருக்கிறது. புலனடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது போன்ற நற்குணங்கள் காணப்படும். நீங்கள் புலனடக்கம் உள்ளவர் என்பதை நான் அறிவேன். உங்களிடம் பொய்யும் இல்லை பெண்ணாசையும் இல்லை. ஆனால் இப்போது உங்களிடம் நேரிடையாக பகை இல்லாதவர்களை தாக்கும் மூன்றாவது குறை தெரிகிறதே. இந்த வனத்தில் வசிக்கும் முனிவர்களைப் பாதுகாப்பதற்காக ராட்சசர்களைக் கொல்வேன் என்று முனிவர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டீர்களே. நீங்கள் இந்த வனத்தில் ராட்சசர்களைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்த காரணத்தால் உங்கள் புகழுக்கு எந்த குறையும் ஏற்படக் கூடாதே என்று கவலை கொள்கிறேன் என்றாள் சீதை.

திருமால் ராமராக அவதரித்தது போல் மகாலட்சுமியே சீதையாக அவதரித்து இருப்பதால் இறைவியின் இந்த குணம் வெளிப்பட்டது. எலும்பு குவியலாக முனிவர்களை கொன்று குவித்த ராட்சசர்களை கொல்ல கூடாது என்பதற்காக தன்னிடமே ஒரு குற்றம் இருப்பதாக சொல்லும் சீதையையை கண்டு சிரித்தார் ராமர். சீதையின் குணம் இது என்று அறிந்த ராமர் தர்மத்தை காப்பது என் கடமை. நானாகவே ராட்சசர்களை கொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. முனிவர்கள் என்னிடம் வந்து காப்பாற்றுமாறு கேட்டார்கள். தர்மத்தின்படி அவர்களை காக்கும் பொறுப்பு சத்ரியனான எனக்கு இருப்பதால் அவ்வாறு வாக்கு கொடுத்தேன் வாக்கு கொடுத்து விட்டால் என்னால் மீறவே முடியாது என்று நடக்க ஆரம்பித்தார்.

ராமர் முனிவர்களை அநியாயமாக கொன்று குவித்ததை பார்த்ததும் சத்ரியர்களுக்கு உண்டான தர்மத்தின் படி ராட்சசர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்று வாக்கு கொடுத்தார். சீதை தாயுள்ளத்துடன் ராட்சசர்களை ஏன் தண்டிக்க வேண்டும்? அவர்களை திருத்தலாமே என்று நினைத்தாள். இந்த குணம் இந்த இடத்தில் மட்டுமல்ல அசோகவனத்திலும் காணலாம். சீதையை பார்த்து உன் கண்ணை பிடுங்கட்டுமா? நர மாமிசமாக உன்னை வெட்டி சாப்பிட போகிறேன் என்று 10 மாதங்கள் ராட்சசிகள் சூழ்ந்து கொண்டு அவளை சித்ரவதை செய்தனர். போரில் ராவணன் கொல்லப்பட்ட பின் அனுமான் சீதையை அழைக்க வந்த போது உங்களை கொடுமையான சொற்களால் இத்தனை மாதங்கள் மிரட்டிய இந்த ராட்சசிகளை துண்டு துண்டாக வெட்டட்டுமா? இவர்கள் கண்களை பிடுங்கி ஏறியட்டுமா? என்று கேட்க அப்போது சீதை தன்னை சித்ரவதை செய்த ராட்சசிகளுக்கு பரிந்து பேசி அனுமானை சமாதானம் செய்து ராட்சசிகளுக்கு தீங்கு ஏதும் வராமல் பார்த்துக் கொண்டார்.

பரமாத்மா தர்மத்தை காப்பவர். தர்மம் செய்பவர்களை காப்பதற்காகவும் அதர்மம் செய்பவர்களையும் தர்மத்திற்கு எதிரானவர்களையும் தண்டித்து விடுவார். தாயாருக்கு தாய் பாசமே மேலோங்கி இருக்கும். தன் பிள்ளைகளில் ஒரு பிள்ளை அதர்மமே செய்தாலும் அவனை திருத்துவதற்காக பரிந்து பேசும் குணம் உடையவள். பெருமாள் கோவிலில் நேரிடையாக பெருமாள் சந்நிதிக்குள் நாம் சென்றால் தகப்பனார் போல இருக்கும் பெருமாள் இந்த பிள்ளையின் நல்ல குணங்கள் என்ன? கெட்ட குணங்கள் என்ன? நல்ல செயல்கள் என்ன? கெட்ட செயல்கள் என்ன? என்று கவனித்து விடுவார். நம்மை பார்த்தவுடனேயே இப்படி அதர்மம் செய்கிறானே இவனை திருத்த தண்டனை கொடுத்தால் என்ன? என்று நினைப்பார். நாம் முதலில் தாயாரை பார்த்து விட்டு பிறகு பெருமாளை பார்க்க சென்றால் நாம் செல்வதற்கு முன்பே நம் குழந்தை வந்து இருக்கிறான். அவனுக்கு அணுக்ரஹம் மட்டுமே செய்யுங்கள் என்று நமக்காக சிபாரிசு செய்து விடுவாள் தாயார். தாயாரை பார்த்து விட்டு வருபவர்கள் தவறு தெரிந்தாலும் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து அணுகிரகம் செய்து விடுவார் பெருமாள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 193

கேள்வி: தாங்கள் வகுத்துக் கொடுத்துள்ள சாஸ்திரங்களிலும் பூஜா முறைகளிலும் யாகங்களிலும் உள்ள இடைசெருகல்களை நீக்கி மூலத்தை தந்து அருள வேண்டும்:

இடையிலே ஏற்பட்டுள்ள கருத்துப் பிழைகளையெல்லாம் நீக்க வேண்டுமென்றால் அப்படி நீக்கினாலும் அவற்றை ஏற்கும் மனம் ஒரு மனிதனுக்கு வர வேண்டும் என்றால் அதற்கு பரிபூரண இறையருள் வேண்டுமப்பா. அத்தனை எளிதாக மனித மனம் ஏற்றுக் கொள்ளாது. உலகியல் சார்ந்த முன்னேற்றத்தைத் தராத சுகத்தைத் தராத நலத்தைத் தராத எந்த சாஸ்திரமும் எந்த மரபும் மனிதனால் அத்தனை எளிதாக பின்பற்றக்கூடிய நிலைக்கு வந்து விடவில்லை. அதனால்தான் இத்தனை இடைசெருகல்கள் காலகாலம் வந்திருக்கின்றது. உதாரணமாகக் கூறுவோம். சிலவற்றை மனிதன் அறிவு கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். முற்காலத்திலே நாணயங்கள் புழக்கத்தில் இல்லை. ஆனால் தற்போது மனிதர்களிடையே நாணயம் புழக்கத்தில் இருந்தது. அது போன்ற தருணங்களிலே ஒரு சிரார்த்தம் என்றால் திதி என்றால் அதை செய்கின்ற ஊழியனுக்கு தானியங்களையும் காய்கறிகளையும் தருவது மரபாக இருந்தது. காரணம் என்ன? அதைக் கொண்டு அவன் குடும்பம் பிழைக்க வேண்டும் என்று. ஆனால் இன்றும் அதைத் தான் தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேவையான தனத்தைத் தந்தால் அவனுக்கு என்ன வேண்டுமோ அவன் அதை வாங்கிக் கொள்வான். ஆனால் இன்னமும் அதை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு நான் காய்கறிதான் வாங்கித் தருவேன் என்று இவன் கூற அவன் என்ன செய்கிறான்? காலையில் முதலில் ஒருவனுக்கு வாங்கிய அதே காய்கறியை வைத்துக் கொண்டே அனைவருக்கும் செய்து கொண்டிருக்கிறான். இந்தத் தவறுக்கு யார் காரணம்? யாருடைய மனநிலை காரணம்? எனவே சாஸ்திரங்களும் மரபுகளும் எதற்காக ஏற்படுத்தப்பட்டன? என்பதை புரிந்து கொண்டு கால சூழலுக்கு ஏற்ப சிலவற்றை தன்னுடைய சுயநலம் அல்லாமல் பொது நலம் கருதி மாற்றிக் கொள்வது தவறல்ல. ஆனால் சாஸ்த்திரங்களை மனிதன் சுயநலத்திற்காக மட்டுமே எப்பொழுதும் மாற்றுகிறான். பொது நலத்திற்காக மாற்றுவதில்லை.

தர்மம் செய் என்றால் மட்டும் இன்று வெள்ளிக்கிழமை. இப்பொழுதுதான் தனத்தை வாங்கி வந்திருக்கிறேன். நீ இரண்டு தினம் கழித்து வா. இப்பொழுதுதான் அந்தி சாய்ந்து இருக்கிறது. இப்பொழுதுதான் அந்தியிலே விளக்கேற்றி இருக்கிறேன். இப்பொழுது எதுவும் தரக்கூடாது. இன்று செவ்வாய் கிழமை. எதுவும் தரமாட்டேன். இன்று புதன்கிழமை. அதைத் தரமாட்டேன் என்று தருவதற்கு ஆயிரம் சட்ட திட்டங்களைக் கூறுகின்ற மனிதன் பெறுவதற்கு எந்த சட்ட திட்டமாவது போடுகிறானா?. வெள்ளிக்கிழமை எனக்கு தனம் வேண்டாம் என்று யாராவது கூறுகிறார்களா? வெள்ளிக்கிழமை தானே மகாலட்சுமிக்கு உகந்த தினம் என்று வழிபாடு செய்கிறான். எனவே தனக்கென்றால் ஒரு நியாயம். பிறருக்கென்றால் ஒரு நியாயம் என்பது மனிதனின் சுபாவமாகப் போய் விட்டது. இது போன்ற நிலையிலே ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லும் ஒருவனிடம் மனிதன் எப்படி கேட்கிறான்? என் ஜாதகம் நன்றாக இருக்கிறதா? நிறைய செல்வம் சேருமா? என்று தான் கேட்கிறான். நிறைய புண்ணியம் செய்தேனா? நிறைய தர்ம காரியங்களில் எனக்கு நாட்டம் வருமா? என்று யாரும் கேட்பதில்லை. அதுமட்டுமல்லாமல் ஜாதகம் சொல்கின்ற மனிதன் எப்படி சொல்கிறான்? நீ பிறருக்கு எந்த உதவியும் செய்து விடாதே. யாருக்காவது உதவி செய்தால் தேவையற்ற அபவாதம் தான் வரும். எனவே ஒதுங்கி இரு. அதுதான் உனக்கு நன்மையைத் தரும் என்றெல்லாம் போதிக்கின்ற நிலைமைக்கு இன்றைய தினம் அனைவருமே ஆளாகி விட்டார்கள். எனவே நல்லதை தர்மத்தை சத்தியத்தை விட்டுக் கொடுக்காமல் பொது நலத்தை பொது சேவையை விட்டுக் கொடுக்காமல் ஒருவன் சாஸ்திரத்தை அனுசரித்தும் சாதகமோ அல்லது பாதகமோ இல்லாமல் பொது நலம் கருதி அதில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

திரௌபதியின் கர்வம்

பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரௌபதிக்கு கிருஷ்ணரின் மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்ச உலகில் வேறு ஆளில்லை என்று கர்வம் இருந்தது. இதை கவனித்த கிருஷ்ணர் திரௌபதியின் இந்த கர்வத்தை அகற்ற எண்ணம் கொண்டார். ஒரு நாள் காட்டில் இருந்த திரௌபதியை பார்க்க வந்தார். கிருஷ்ணரை கண்ட திரௌபதைக்கு மிக்க மகிழ்ச்சி. அவள் கிருஷ்ணரிடம் அண்ணா நீங்கள் துவாரகையில் இருந்து எப்படி வந்தீர்கள்? தேர் குதிரை பல்லக்கு என எதையும் இக்காட்டில் காணவில்லையே? என்றாள். அதற்கு கிருஷ்ணர் தங்கையே மனம் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால் உந்தித் தள்ளியது. அதனால் நடந்தே உன்னை காண இங்கே வந்து விட்டேன் என்றார். அதைக்கேட்டு திரௌபதையின் கண்களில் கண்ணீர் அரும்பியது. அண்ணா என்னை காண உங்கள் பொற்பாதம் வலிக்க நடந்தே வந்தீர்களா? அவை எந்தளவுக்கு வலிக்கும். நான் வெந்நீர் போட்டுத் தருகிறேன். நீராடுங்கள் தங்களின் உடல் களைப்பு நீங்கும் நடந்த கால்களுக்கும் இதமாக இருக்கும் என்றாள். கிருஷ்ணரும் சிரித்து கொண்டே தலையாட்டினார்.

திரௌபதியின் வேண்டுதலை ஏற்று பீமன் ஒரு பெரிய கொப்பறையை வெந்நீர் போட தூக்கி வந்தான். அருகே ஓடிய ஆற்றில் கொப்பறையில் தண்ணீர் எடுத்தான். மூன்று பெரிய பாறைகளை உருட்டி வந்தான அதையே அடுப்பாக்கி கொப்பறையைத் தூக்கி வைத்தான். ஒரு காய்ந்து போன மரத்தையே ஒடித்து வந்து தீப்பற்ற வைத்தான். தீ ஜூவாலை விட்டு எரிந்தது. நீண்ட நேரம் ஆகியும் கொப்பறை தண்ணீர் துளிகூட சுடவில்லை. கிருஷ்ணர் திரௌபதியிடம் மதியம் ஆகிறது வயிறும் ஆகாரம் கேட்கிறது. தீர்த்தமாட வெந்நீர் கொடுக்கிறேன் என்றாய் என்னாச்சு? என்று கேட்டார். அதற்கு திரௌபதி கண்கலங்கியவாறே அண்ணா என்ன சோதனையோ தெரியவில்லை. கொப்பறையின் நீர் துளிக்கூட கொதிக்கவில்லை. மாறாக ரொம்பவும் குளிர்ந்திருக்கிறது என்றாள். கிருஷ்ணர் பீமனிடம் பீமா அந்த கொப்பரை தண்ணீரை கீழே கொட்டு என்றார் பீமனும் கிருஷ்ணரின் ஆணைக்கிணங்கி நீர் நிறைந்த கொப்பறையை கீழே கவிழ்த்தார். கொப்பறையின் உள்ளிருந்து ஒரு குட்டி தவளை தாவி ஓடியது. கிருஷ்ணர் திரௌபதியிடம் தீ ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்தும் அந்த நீர் குளிர்ச்சியாக இருக்க காரணம் இதுதான். அந்த தவளை சுடுநீரில் சிக்கி மாண்டு விடாமல் இருக்க என்னை பிரார்த்தித்து கொண்டே இருந்தது. பிரார்த்தனையை ஏற்று அதைக் காப்பாற்றவே கொப்பறை நீரை குளிர்ச்சியாக இருக்க செய்தேன். கொப்பறை நீர் கொதிக்கவில்லை என்று இப்போது புரிகிறதா? ஒரு குட்டி தவளையின் சரணாகதி பிரார்த்தனை கூட எனக்கு எவ்வளவு பெரியதென்று பார்த்தாயா? என்றார்.

திரௌபதிக்கு நெஞ்சில் சுரீரென உரைத்தது. கிருஷ்ணரிடம் நான் கொண்ட என் பக்தியே உயர்ந்ததென நினைத்தேனே இப்போது இந்த தவளையின் பக்தி அல்லவா உயர்ந்ததாக காண்பித்து விட்டான். ஒரு தவளை கிருஷ்ணர் மீது கொண்ட பக்தியின் காரணமாக கொழுந்து விட்டு எரிந்த தீயிலிருந்து உயிர் பிழைத்து ஓடுகிறது. அதன் பக்தியை மிஞ்சி என் பக்தி எப்படி உயர்ந்ததாக முடியும் என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 192

கேள்வி: பழனியில் சாலையோரத்தில் ஒரு உயர்ந்த ஆன்மாவை தரிசித்தோம். அவரைப் பற்றி கூறுங்கள் ஐயனே?

இறைவன் அருளால் பிற்காலத்தில் இதுபோன்ற ஆத்மாக்களைப் பற்றி நாங்கள் விளக்கம் கூறுவோம். பொதுவாகவே வாழும் மகான்கள் என்று பலரை மனிதர்கள் நாடுகிறார்கள். அதை நாங்கள் குறையோ குற்றமோ கூறவில்லை. ஆனாலும் கூட நாங்கள் ஏற்கனவே உன்னொத்து ஒருவன் வினவிய வினாவிற்கு கூறியதையே இப்பொழுதும் கூறுகிறாம். அதாவது ஒருவன் இந்த ஜீவ அருள் ஓலையை(ஜீவநாடி) நம்பி நாடி இதன் கருத்துக்களை ஏற்கத் துவங்கும் பொழுது நாங்கள் இறைவனருளால் கூறுகின்ற கருத்தையெல்லாம் 100 க்கு 100 பின்பற்றி அதன் வழியாக நடக்க நடக்க மெய்யான ஞானிகளை இவன் தேட வேண்டாம். மெய்யான ஞானிகள் இவனைத் தேடி வருவார்கள். அதுதான் ஏற்புடையது. அங்கு ஞானி இருக்கிறார் இங்கு ஞானி இருக்கிறார் என்று தேடி சென்றால் அதனால் தேவையில்லாத குழப்பங்கள்தான் ஏற்படும். எத்தனைதான் மிகப்பெரிய ஞானியாக இருந்தாலும் கூட இந்த பூமியிலே பிறவி எடுத்துவிட்டால் சில விரும்பத்தகாத குணங்களும் அவரிடம் இருக்கலாம். அப்பொழுது என்னவாகும்? அந்த ஒரு பகுதியைப் பார்க்கின்ற மனிதன் தவறாகப் பார்ப்பான். நாங்கள் நல்லவற்றை எடுத்துக் கூறினால் சித்தர்களே இப்படியெல்லாம் உயர்வாகக் கூறுகிறார்களே? எங்கள் பார்வைக்கு அப்படி தௌன்றவில்லையே? என்று ஒருவன் கூறுவான். எனவேதான் சமகாலத்தில் வாழ்கின்ற ஞானிகள் குறித்து நாங்கள் எந்த விளக்கமும் தர விரும்புவதில்லை.

கேள்வி: திருப்பதியில் பெருமாள் ஓரிடத்திலும் அலர்மேல்மங்கை தாயார் வேறொரு இடத்திலும் இருப்பதன் காரணம் என்ன?

அப்படி புறத் தோற்றத்தில் தானப்பா இருக்கிறது. வேங்கடவனின் திருமார்பிலே அன்னை திரு (மகாலட்சுமி) எப்பொழுதுமே அருள்புரிந்து கொண்டு இருப்பதால் தான் அந்த ஸ்தலம் அமோகமாக இருக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 191

கேள்வி: விருக்ஷங்களிலும் (மரங்களிலும்) ஆன்மா இருக்கிறது. புட்களிலும் ஆன்மா இருக்கிறது. நுண்ணிய கிருமிகளிலும் ஆன்மா இருக்கிறது. அனைத்து ஆன்மாக்களுமே மேன்மையடைந்து முக்தியடைய வேண்டும் என்று முன்னர் கூறியிருந்தீர்கள். இந்த அறையிலேயே கோடானு கோடி கிருமிகள் இருக்கக்கூடும். இந்த நுண்ணிய கிருமிகளாய் பிறப்பெடுக்க வேண்டுமென்றால் அது என்ன கர்ம வினை?

ஒரு சில பாவங்கள் என்பதல்ல. எத்தனையோ வகையான பாவங்களின் தொகுப்பு தான் நாங்கள் முன்னரே கூறியது போல் ஆன்மாவின் சட்டையாக (உடலாக) மாறுகிறது. ஒரு ஆன்மாவின் சட்டையைப் (உடலைப்) பொறுத்து அதன் பாவத்தைப் புரிந்து கொள்ளலாம். அதாவது ஒரு ஆன்மாவிற்கு பெரும்பாலும் மனித சட்டை (உடல்) கொடுக்கப்படுகிறதென்றால் பெரும்பாலும் புண்ணிய பலன் இருக்கிறது என்று பொருள். அதற்காக விலங்குகளாகப் பிறந்த அனைத்து ஆத்மாக்களும் முழுக்க முழுக்க பாவிகள் என்று நாங்கள்(சித்தர்கள்) கூறவில்லை.

அதிலும் விதி விலக்குகள் உண்டு. சில புண்ணிய ஆத்மாக்கள் கூட சில காரணங்களுக்காக விலங்குகளாக பிறவியெடுப்பதும் உண்டு. மிகப்பெரிய மகான்கள் கூட பசுக்களாக தாங்கள் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டு தம் பால் முழுவதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்று வரம் கேட்டு வாங்கி வருவதும் உண்டு. அவற்றையெல்லாம் விலங்குகள் என்ற வரிசையில் சேர்க்கக்கூடாது. ஆனால் பொதுவாக விலங்குகள் என்று பார்க்கும் பொழுது அறியாமையிலே பிறவிகள் எடுக்கக்கூடிய உயிர்கள் அனைத்துமே கோடானு கோடி பாவங்களை நுகர்ந்து தீர்ப்பதற்காக இது போன்ற விலங்குகள் பிறவியைப் பெறுகின்றன. விலங்குகளுக்கு அதன் செயல்களுக்கு முழுக்க முழுக்க அதன் பாவங்களைக் கழிப்பதற்குண்டான நிலைதான் இருக்கிறது. புதிதாக புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள இயலாது. புதிதாக பாவத்தையும் சேர்த்துக் கொள்ள இயலாது. உதாரணமாக ஒரு நூறு பிறவி ஆடாகப் (ஆடு) பிறந்து அது தன் உயிரை மனிதனின் அசுரத்தனத்தால் தன்னைக் கொன்று உண்ணக்கூடிய மனிதனுக்கு தன் உடல் பயன்படவேண்டும் என்ற விதி பெற்று அந்த ஆடு பிறக்கும் பொழுது அதனுடைய கர்மாவானது அதன் கழுத்தில் இருக்கிறது. நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல அதனை வெட்டுகின்ற கத்தியானது அதன் கர்மாவைக் குறைக்கிறது. ஆடு கத்திக் குறைக்கிறது.

எனவே இப்படி பிறவியெடுத்து பிறவியெடுத்து அதன் பாவங்கள் தீர்ந்த பிறகு அடுத்த தேகத்தை (உடலை) நோக்கி செல்கிறது. இப்படி மேலேறி மேலேறி ஒரு தினம் அல்லது ஏதாவது ஒரு பிறவியிலே அது மனிதனாக அல்லது மனித சட்டை (மனித உடல்) கொடுக்கப்பட்டு சற்றே சிந்தனையாற்றலும் கொடுக்கப்படுகிறது. ஆனால் எதற்காக கொடுக்கப்படுகிறது? இன்னும் மேலேறி செல்ல வேண்டும். மனிதனாக புனிதனாக மாமனிதனாக மகானாக ஞானியாக முனிவனாக சித்தனாக அல்லது தேவனாக கந்தர்வனாக. ஆனால் இந்த இடத்திற்கு வந்த பிறகு மனிதன் தன் செயலால் மீண்டும் கீழ் நோக்கியும் செல்கிறான் அல்லது மேல் நோக்கியும் செல்கிறான். கீழ் நோக்கி செல்லாதே என்று வழிகாட்டத்தான் எம் (அகத்திய மாமுனிவர்) போன்ற மகான்களை இறைவன் படைத்து அருளாணை இட்டிருக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 190

கேள்வி: மனதிற்கும் ஆன்மாவிற்கும் உள்ள வேறுபாடு என்ன? மனம்தான் ஆத்ம ஸ்வரூபமா? இதில் புத்தி என்பது எங்கே வருகிறது?

இதை வேறு விதமாகக் கூறலாம். ஒரு மின் சக்தியை எடுத்துக் கொண்டால் மின் சக்தி என்பது இதுதான் இங்குதான் இருக்கிறது என்று கூற இயலுமா? காற்றின் ஆற்றல் இங்குதான் இருக்கிறது என்று கூற இயலுமா? இயலாது. ஆத்மா என்பது நீக்கமற நிறைந்துள்ள ஒரு சக்தி என்று வைத்துக் கொள். அது அறியாமையிலே பாவ மாயையிலே சிக்கி இந்த உடலுக்குள் சிறைபட்டிருக்கிறது என்றால் கண்ணிலே மட்டும் இருக்கிறதா? கையிலே மட்டும் இருக்கிறதா? அல்லது வயிற்றிலே மட்டும் இருக்கிறதா? என்றால் இல்லை. அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது. உடல் எனப்படும் ஒரு கூடு. அந்த கூடு இயங்குவதற்கு வேண்டிய ஆற்றலை ஆத்மாவிடமிருந்துதான் இந்தக் கூடு பெறுகிறது. இந்த ஆத்மாவானது தன்னை உணராமல் தன் உடலை தான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு மனிதன் தன் உடலின் மானத்தை மறைக்க ஆடை அணிகிறான். அந்த ஆடை கிழிந்து விட்டால் நான் கிழிந்து விட்டேன் என்று அந்த மனிதன் கூறமாட்டான். என் ஆடை கிழிந்து விட்டது என் ஆடை அழுக்காகி விட்டது. என் ஆடை பழுதடைந்து விட்டது என்று வேறு ஆடை மாற்றிக் கொள்வான். மனிதன் தன் உடலுக்கு ஆடை போடுகிறான். ஆன்மாவிற்கு போடப்பட்ட ஆடைதான் இந்த உடல்.

விதவிதமான ஆடைகள் சிங்கம் புலி ஆடு மாடு என்று விதவிதமான ஆடைகளை ஆத்மாவிற்கு போட்டு இறைவன் அனுப்புகிறான். இந்த உடல் வேறு. இ்ந்த உடலுக்குள் இருக்கின்ற ஆத்மா வேறு என்பதை புரிந்து கொள்வதற்கு ஒரு மனிதன் பல நூறு பல கோடி பிறவிகளை எடுக்க வேண்டும். நிறைய புண்ணியங்களை பிராத்தனைகளை செய்ய வேண்டும். அப்படி செய்யும் பொழுதுதான் நீ கூறிய ஆத்மா என்பது என்ன? என்பது உன் உள்ளத்திற்கு தெரிய வரும். மனம் என்றால் என்ன? மனம் என்பது தனியான ஒரு பொருள் அல்ல. இருதயம் என்பது இயங்குகின்ற ஒரு தன்மை. அதை குறிப்பாக இருதயம் (இதயம்) இருக்கிறதா? என்று மனிதர்கள் கேட்கிறார்கள். ஆனால் இங்கே உள்ளே இயங்குகின்ற இருதயத்திற்கும் இதயம் இருக்கிறதா? என்று மனிதன் கேட்பதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டும் ஒரு பொருள் அல்ல. உனக்கு நல்ல மனம் இருக்கிறதா? என்பதைத்தான் மனிதன் இதயம் இருக்கிறதா? என்று கேட்கிறான். தொடர்ந்த எண்ண ஓட்டங்களின் தொகுப்புதான் மனம். அந்த மனம் எங்கே விழிப்புநிலை பெறுகிறதொ அப்பொழுது நீ ஆத்மாவை உணரலாம்.

சரணாகதி

பராசர பட்டர் ஸ்ரீராமானுஜரின் முதன்மைச் சீடரான கூரத்தாழ்வானின் மகன் ஆவார். ரங்கநாயகித் தாயாரும் திருவரங்கநாதனும் அவரைத் தங்கள் மகனாகவே பாவித்து வளர்த்தார்கள். அவர் ஒருமுறை காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று அங்கே ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்து விட்டார். நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாமையால் அவரைத் தேடிச் சென்ற சீடர்கள் காட்டில் அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள். அவரைத் தேற்றி மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். மயக்கம் தெளிந்து பட்டர் எழுந்தவுடன் காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? காட்டுவாசிகளால் உங்களுக்கு ஏதேனும் ஆபத்து உண்டானதா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா? என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள் அவர்களது சீடர்கள்.

நான் ஒரு காட்சியைக் கண்டேன் அதனால் மயங்கி விழுந்துவிட்டேன் என்றார் பட்டர். என்ன காட்சி? என்று பதற்றத்துடன் சீடர்கள் கேட்டார்கள். ஒரு வேடன் ஒரு முயல் குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப் பையில் மூட்டை கட்டி எடுத்துச் சென்றான். இதைக் கண்ட அந்த முயல் குட்டியின் தாய் முயல் அந்த வேடனைத் துரத்திச் சென்று அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு மன்றாடியது. தனது குட்டியை விட்டுவிடும் படிக் கெஞ்சியது. அதைக் கண்டு மனம் இரங்கிய அந்த வேடன் முயல் குட்டியைச் சாக்கு மூட்டையிலிருந்து விடுவித்தான். இக்காட்சியைக் கண்டதும் நான் மயங்கி விழுந்துவிட்டேன் என்றார் பட்டர்.

இந்தக் காட்சியில் மயங்கி விழும் அளவுக்கு என்ன இருக்கிறது? என்று கேட்டார்கள் சீடர்கள். என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்? சரணாகதியை எப்படிச் செய்ய வேண்டும் என்று அந்த முயலுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? இல்லை. ஒருவர் சரணாகதி அடைந்தால் அவர்கள் கேட்பதை கொடுக்க வேண்டும் என்ற நீதியை அந்த வேடனுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? இல்லை. ஆனாலும் அந்த முயல் சரணாகதி அடைந்ததும் அந்த வேடன் முயலின் சரணாகதியை அங்கீகரித்து அது கேட்டதை உடனே தந்து விட்டான். சரணாகதி என்றால் என்னவென்றே அறியாத ஒரு முயலுக்கு ஒரு சாமானிய வேடன் இப்படிக் கருணை காட்டுகிறான் என்றால் இறைவனே கதி என்ற உறுதியுடன் அவன் திருவடிகளைச் சரணடைந்த நமக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்வான்? அவனே கதி என்று அவனைப்பற்றிய நம்மைக் கைவிடுவானா? எம்பெருமானின் அத்தகைய ஒப்பற்ற கருணையை உணராமல் இத்தனை காலம் வீணாகக் கழித்து விட்டேனே என்று வருந்தினேன். இறைவன் நம்மைக் கைவிடவே மாட்டான் காப்பாற்றியே தீருவான் என்ற உறுதி இன்னும் என் மனதில் உதிக்கவில்லையே என ஏங்கினேன். அதனால்தான் மயங்கி விழுந்து விட்டேன் என்று விடையளித்தார் பட்டர். பட்டரின் விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் வியந்து போனார்கள்.