இடகுஞ்சி வினாயகர்

உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஹொன்னாவாரா தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய இடம் இடகுஞ்சி ஆகும். இங்கு இடகுஞ்சி கணபதி ஆலயம் உள்ளது. இடகுஞ்சி இடத்தின் முக்கியத்துவம் கந்தபுராணத்தின் சஹ்யாத்ரி காண்டில் குறிப்பிடப் பட்டுள்ளது. இடா என்றால் இடதுபுறம் குஞ்ச் என்றால் தோட்டம். சராவதி ஆற்றின் இடது கரையில் அமைந்திருப்பதால் இந்த இடத்திற்கு இடகுஞ்சி என்ற பெயர் வந்தது. இடகுஞ்சி கணபதி கோயில் 1500 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பழமையான கோயிலாகும். கோவில் சற்றே பெரியது. வினாயகர் சிலை கருங்கல்லாலானது. விநாயகர் சிலை நின்ற கோலத்தில் இரண்டு கைகளுடன் மிகக் குட்டையான கால்களுடன் தரையில் தாழ்வுடன் ஒரு கல் பலகையில் நிற்கிறார். ஒரு கையில் மோதகத்தையும் மற்றோரு கையில் பத்மத்தையும் (தாமரை பிடித்துள்ளார். மார்பின் குறுக்கே ஒரு மாலையை அணிந்துள்ளார். சிறிய மணிகளால் ஆன மாலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

துவாபர யுகத்தின் முடிவில் கடவுள் கிருஷ்ணர் தனது தெய்வீக வசிப்பிடத்திற்கு செல்ல பூமியை விட்டு வெளியேற நேரம் வந்து விட்டதாக எண்ணினார். கிருஷ்ணரும் பூமியை விட்டு செல்வதால் கலியுகத்தின் வருகையை கண்டு அனைவரும் பயந்தனர். கர்நாடகாவின் சராவதி நதிக்கரையில் உள்ள குஞ்சவனம் என்ற வனப் பகுதியில் வாலகில்ய முனிவர் கலியுகத்தின் அனைத்து தடைகளையும் சமாளிக்க கிருஷ்ணரின் உதவியை நாடி யாகங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளை செய்யத் தொடங்கினார். இந்த நேரத்தில் அவர் யாகம் செய்வதில் பல இடையூறுகளைச் சந்தித்து மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். எனவே அவர் நாரத முனிவரின் ஆலோசனையை நாடினார். யாகத்தை மீண்டும் தொடங்கும் முன் தடைகளை நீக்கும் விநாயகரின் ஆசீர்வாதத்தைப் பெறுமாறு நாரதர் வாலகில்யருக்கு அறிவுறுத்தினார்.

வாலகில்ய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க நாரதரும் மற்ற முனிவர்களும் சேர்ந்து தேவதீர்த்தம் என்ற புதிய குளத்தை உருவாக்கினர்கள். நாரதர் விநாயகரின் அன்னை பார்வதியிடம் விநாயகரை அனுப்ப வேண்டும் என்று வேண்டினார். அர்ச்சனைகள் செய்யப்பட்டு விநாயகப் பெருமானைப் போற்றும் பாடல்கள் பாடப்பட்டன. அவர்களின் பக்தியால் மகிழ்ந்த விநாயகர் எந்த பிரச்சனையும் இல்லாமல் யாகங்களை நடத்த அவர்களுக்கு உதவ அந்த இடத்தில் இருக்க சம்மதித்தார். இந்த சந்தர்ப்பத்தில் மேலும் ஒரு ஏரி உருவாக்கப்பட்டு கோவிலுக்கு தண்ணீர் வர விநாயகர் தீர்த்தம் என்று பெயரிடப்பட்டது. அதே இடம் இப்போது இடகுஞ்சி என்று அறியப்படுகிறது அங்கு விநாயகர் கோயில் கிபி 4-5 ஆம் நூற்றாண்டுகளில் பக்தர்களால் கட்டப்பட்டது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 582

கேள்வி: துர்மரண வீடு பற்றி?

உரைத்தால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களப்பா. ஏனென்றால் இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு குடும்பத்தில் நடக்கிறது என்றால் கடுமையான பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறது என்று பொருள். முதலிலே அவர்கள் செலவை நோக்கம் பார்க்காது பல்வேறு மந்திரங்களை கற்ற நல்ல மனிதர்களை ஒன்று திரட்டி பிழை இல்லாமல் பரிபூரணமாக ராமேஸ்வரம் எனப்படும் தெய்வ சமுத்திரக் கோட்டத்திலே பூரணமாய் தில யாகம் செய்ய வேண்டும். கடுமையான பிரம்மஹத்தி தோஷத்திற்கு திருவிடைமருதூரில் முடிந்தால் ஒரு மண்டலம் தங்கி இறை தொண்டு செய்வதும் தீபங்கள் ஏற்றுவதும் அபிஷேகம் செய்வதும் சிறப்பு.

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் ஆனால் தர்ம வழி நடப்பவர்கள் என்ன செய்யலாம் என்றால் தக்க ஏழைகளுக்கு பசு மாடுகளை தானம் செய்வதும் பசு காப்பகங்களுக்கு அதிகம் அதிகம் உதவி செய்வதும் தினசரி ஒரு முறையாவது பசு மாட்டை தரிசனம் செய்வதும் முடிந்தால் தொண்டு செய்வதும் பசுவை நல்ல முறையிலே குளிப்பாட்டி மஞ்சள் மங்கல பொடிகளை தேய்த்து தூய தூப தீபங்களை காட்டி நிறைய உணவுகளை தருவதும். ஆலயக் குளத்திலோ அல்லது ஏனைய மற்ற குளங்களிலே உள்ள மீன்களுக்கு உணவு தருவதும் கூடுமானவரை ஏழை எளியவர்களுக்கு அன்னம் மட்டுமல்லாது தேவைப்படும் மற்ற உதவிகளை செய்வதும்தான் இது போன்ற தோஷங்களை எல்லாம் குறைப்பதற்கு ஒரே வழியாகும். கூறப்போனால் இது போன்ற குடும்பத்தார்கள் வாழ்க்கையில் பரிகாரம் செய்வது என்பதை விட பரிகாரம் செய்வதையே வாழ்க்கையாக மாற்றிக் கொண்டால்தான் தொடர்ந்து இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் இருக்கும்.

சிவ வடிவம் – 19. கங்கா விசர்ஜன மூர்த்தி

ஆதி காலத்தில் அயோத்தியை இசுவாகு குலத்தில் சகரர் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனது முதல் மனைவி சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும் 2 வது மனைவி கேசினி என்பவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தனர். சில காலம் கழித்து சகரர் அசுவமேத யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தார். அஸ்வமேத யாகம் செய்ய ஒரு குதிரையைக் கொண்டு வந்தான். இந்த யாகத்தை மன்னன் செய்து முடித்தால் அவன் இந்திர பதவிக்கு தகுதி பெற்று விடுவான். இதனால் தற்போது இந்திரன் பதவியில் இருக்கும் இந்திரன் இந்த யாகத்தை தடுத்து நிறுத்த எண்ணினான். குதிரை இருந்தால் தானே யாகம் நடைபெறும் என்று யாகத்தைத் தடுக்க குதிரையை பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷியின் ஆசிரமத்தில் கட்டி வைத்து விட்டான்.

அயோத்தி அரசன் சகரர் குதிரையைத் தேடி கொண்டுவரும் படி தமது அறுபதினாயிரம் மகன்களுக்கு கட்டளையிட்டார். பாதாளத்தில் கபில முனிவர் அருகே குதிரைக் கண்ட அவர்கள் முனிவர் தான் குதிரையை திருடியவர் என எண்ணி அவரை திட்ட துவங்கினார்கள். தியானத்தில் இருந்து கண் விழித்த கபில முனிவர் அறுபதினாயிரம் பேரை பார்த்ததும் அவரது தவ சக்தியால் அவர்கள் அனைவரும் எரிந்து சாம்பலானார்கள். அனைத்தையும் அறிந்த சகரர் அரசன் கபில முனிவரை வணங்கி தான் செய்யும் அஸ்வமேத யாககுதிரை தங்கள் ஆசிரமத்தில் இருந்ததினால் இந்த குழப்பங்கள் வந்தது. தன் புதல்வர்களை மன்னிக்குமாறும் சாம்பலான பிள்ளைகளுக்கு விமோசனம் தந்து நற்கதி அடைவதற்கு வழி சொல்லுமாறும் தன் குதிரையை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டார். சகரரின் வேண்டுகோளை ஏற்ற கபில முனிவர் குதிரையை எடுத்துச் செல்ல அனுமதி கொடுத்தார். மேலும் மேலுலகத்தில் சிவனின் ஒற்றை திருமுடியில் இருக்கும் கங்கையை பூலோகம் வரவழைத்து இந்த சாம்பலை புனிதப்படுத்தினால் இவர்கள் நற்கதி அடைவார்கள் என்று விமோசம் கூறினார். இதனை கேட்டு மகிழ்ந்த சகரர் குதிரையை எடுத்துச் சென்று அசுவமேத யாகத்தை முடித்தார். முதல் மனைவியின் வாரிசுகள் அறுபதாயிரம் பேரும் சாம்பலானதால் இரண்டாவது மனைவியின் புதல்வன் அஞ்சமான் நாட்டின் அரச பதவியை ஏற்றுக் கொண்டார்.

அஞ்சுமானின் வம்சாவளியிலே வந்தவன் பகீரதன் ஆவான். பகீரதன் ஆட்சி பொறுப்பை ஏற்றக் கொண்டதும் தமது முன்னோர்கள் ஆறுபதாயிரம் பேருக்கு நடந்ததை தெரிந்து கொண்டார். பின்பு நாட்டை துறந்து கங்கையை பூலோகம் கொண்டு வர பிரம்ம தேவரை நினைத்து காட்டில் கடும் தவம் இயற்றினான். இவரின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைந்தார். பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடைய வேண்டி கங்கை பூமிக்கு வந்து பின் பாதளத்துக்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக் கொண்டான். அதற்கு கங்கை பகீரதா நான் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்க மாட்டாள். நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்று கூறினாள். பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும் பராக்கிரம சாலிகளிடமும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்து விட்டனர். பகீரதன் மகாவிஷ்ணுவை வேண்ட அவர் இச்செயல் சிவன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெறு என்று கூறினார்.

சிவனை நோக்கி தவமிருந்தான் பகிரதன். மனம் மகிழ்ந்த சிவனும் அவனுக்குக் காட்சி அளித்து பகீரதா உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும் உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கை பூமிக்கு வரும் போது நான் பூமியில் நின்று எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன் என்றார். பகீரதனும் கங்கையிடம் சிவனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க அவளும் மகிழ்வோடு சப்தமிட்டபடி பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்தாள். சிவன் தன் சடையை விரித்துப் பிடித்தார். அப்போது கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. நான் மிகவும் வேகமாக வருகின்றேன். என் ஆற்றலையும் வேகத்தையும் இந்த சிவனால் தாங்க இயலுமா என யோசித்தாள். எல்லாம் வல்ல சிவன் கங்கையின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டார். நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார். திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவித்து தன் அகங்காரத்தை போக்கிக் கொண்டாள். பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைந்தான் சிவனை நோக்கி மீண்டும் ஒற்றைக் காலில் தவமிருந்தான்.

பகீரதன் முன் தோன்றிய சிவன் கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான். வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் அந்த ஆசிரமத்தை முற்றிலும் நீரால் அழித்து முனிவரையும் உருட்டித் தள்ள ஆயத்தமானாள். கோபம் கொண்ட முனிவர் கங்கையை அப்படியே தன் கைகளால் கங்கையை எடுத்து அள்ளிக் குடித்து விட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும் கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு மனமிரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். அதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் ஏற்பட்டது. இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக் கொண்டு தம் மூதாதையரின் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான். சகரர் புத்திரர்கள் அறுபதாயிரம் பேருக்கும் நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்தது.

பகீரதன் கொண்டு வந்ததால் கங்கைக்கு பகீரதி என்ற பெயர் ஏற்பட்டது. தனது ஒற்றை திருமுடியில் இருந்த கங்கையை தனது சடையில் ஏற்று உலகத்திற்கு கொடுத்து வழி காட்டியதால் சிவபெருமானுக்கு கங்கா விசர்ஜன மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. அவரை தரிசிக்க கேதார் நாத் செல்ல வேண்டும். ஆறு மாத காலம் கோயிலில் வழிபாடுகள் நடைபெறும். பனி மழையால் ஆறுமாதம் மூடப்பட்டிருக்கும். உமை சிவனிடம் இடபாகம் பெற்ற தலம் கோதார்நாத் ஆகும்.

சிவ வடிவம் – 18. கங்காதரமூர்த்தி

சிவபெருமான் கங்கையைச் சடைமுடியில் தாங்கிய வடிவமே கங்காதரர் என்று வழங்கப்படுகிறது

திருக்கைலையில் பார்வதி தேவி சிவபெருமானின் இரு கண்களையும் விளையாட்டாய் பற்றினார். உடன் உலக உயிர்கள் அனைத்திற்கும் அளவிலாத துன்பம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும் பேரிருள் சூழ்ந்தது. இதனையறிந்த சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அனைவரையும் காத்தார். ஒளி வந்ததால் அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்பமடைந்தனர். அனைவரும் சிவபெருமானைப் போற்றினர். இதனைக் கண்ட பார்வதி தேவி அவசரமாக தன் கைகளை நொடிப் பொழுதில் எடுத்தார். இதனால் இவரது பத்து கைவிரலில் இருந்த வியர்வைத் துளிகள் பத்தும் கங்கையாக மாறி மூவுலம் முழுவதும் பரவி பெருத்த சேதத்தையும் அழிவையும் உண்டாக்க முன்னேறியது. இதனைக் கண்ட மூன்று உலகத்தினரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமானும் அவ்வெள்ளத்தை அடக்கி அதனை தனது சிரசில் ஓர் திருமுடியில் தரித்தார். அனைவரும் சிவபெருமானைப் போற்றித் துதித்தனர். நான்முகன் இந்திரன் திருமால் ஆகிய மூவரும் சிவபெருமானிடம் சென்று இறைவா பார்வதி தேவியின் கைவிரல் வியர்வையால் உண்டான கங்கை பெரும் புனிதமானது. அதை உங்கள் திருமுடியில் தரித்ததால் அது மேலும் புனிதமடைகிறது. அத்தகைய புனிதப் பொருளை எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தருள வேண்டும் என்றனர். அதன்படியே இந்திரன் தனது அமராவதி நகருக்கும் நான்முகன் தனது மனோவதி நகருக்கும் திருமால் தனது வைகுண்டத்திற்கும் கங்கையைக் கொண்டு சேர்த்தனர். பிற்காலத்தில் பகிரதன் தன் தவத்தினால் இந்த கங்கையை பூலோகத்திற்கு கொண்டு வந்தான்.

கங்கை வெள்ளத்தின் வேகத்தை குறைத்து தனது சடைமுடியின் ஒர் திருமுடியில் தாங்கியிருப்பதால் சிவபெருமானுக்கு கங்காதர மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. கங்காதர மூர்த்தியை தரிசிக்க இமயத்திற்கு தான் செல்ல வேண்டும். இமயமலையே கங்காதர மூர்த்தியின் இருப்பிடமாகும். அங்கு செல்ல இயலாதவர்கள் இருந்த இடத்திலேயே கங்காதர மூர்த்தியை மானசீகமாய் வணங்கி வழிபடலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 581

கேள்வி: கோவிலில் உழவாரப் பணி செய்யும் போது செடி கொடிகளை அகற்றினால் தோஷமா?

இதை கூறும் போதே இது பாவம் தான் என்றாலும் இறை இதை மன்னிக்கிறது. அகற்றப்பட்ட செடிகள் மீண்டும் துளிர்க்கின்ற தன்மையை பெறுவதால். அந்த செயல் அந்த செடி கொடிகளுக்கு பூரணமான அழிவை ஏற்படுத்துவதில்லை. ஒரு ஆட்டையோ மாட்டையோ ஒரு மனிதன் கொலை செய்யும்போது அது பரிபூரணமாக மரித்து விடுகிறது. ஆனால் செடி கொடிகளை அகற்றும் போது அதன் அடிவேரோ மாற்று விதைகளோ சற்று உயிர் பெறுவதால் அந்த ஜீவன் அதற்கு இடம் பெயர்ந்து விடுவதால் இதனால் வரக்கூடிய தோஷம் மன்னிக்கப் படக்கூடிய தோஷமாகி விடுகிறது. என்றாலும் கூட இதிலும் பாவம் சேர்வதால் தான் பிறவியற்ற தன்மை வேண்டும் என்று கூறுகிறோம். ஏனென்றால் ஒரு மனிதனால் இந்த பூமியிலே சிறிய பாவம் கூட செய்யாமல் வாழ முடியாது. வீடுகளைப் பொருத்தவரை வீட்டைச் சுற்றிலும் சிறியா நங்கை போன்ற மூலிகைகளை வளர்த்தால் பூச்சிகள் வராது. வேறு வழியின்றி வீட்டினுள் இருக்கும் பூச்சிகளை கொல்ல நேர்ந்தால் ஒருவன் செய்கின்ற தர்மங்கள் காரணமாக அந்த தோஷமானது மன்னிக்கப்படும்.

சீதளாதேவி அம்பாள்

தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள் தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன் தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால் தேவர்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் உடலில் அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன. தேவலோக வைத்தியர்களான அஸ்வினி தேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை. எனவே சிவபெருமானை சரணடைந்து தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துன்பத்தைப் போக்க சிவன் தனது ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும் கங்கையிடமிருந்தும் பேரொளியை தோற்றுவித்தார்.

பார்வதியின் அம்சமாக தோன்றிய அந்த ஒளி சீதளாம்பிகை என்று பெயர் பெற்று அம்பாளாக வடிவெடுத்தது. அந்த அம்பாளின் சிரசு முறத்தினாலும் கையில் குடம் மற்றும் துடைப்பத்துடன் கழுதை வாகனத்தில் காட்சி கொடுத்தாள். இந்த தேவியை வழிபடுவதற்காக சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக் கொடுத்தார் சிவன். சீதளாஷ்டகம் எனப்படும் இந்த மந்திரத்தைக் கூறி அம்பாளை வழிபட்டால் வெப்ப நோய் தீரும் என அருள்பாலித்தார். சீதளா என்றால் சமஸ்கிருதத்தில் குளிர்விப்பவர் என்று பொருள். தேவர்களும் அதுபோல் மந்திரத்தை சொல்லி சீதளாதேவியை வழிபட்டு தங்களின் துன்பத்தை போக்கிக் கொண்டார்கள். லலிதா சகஸ்ர நாமத்தில் அம்பாளின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி வணங்கும் போது சீதளாயை நமஹ என்ற பெயரும் வருகிறது. கழுதை என்பது அனாயசமாக பெரும் பொதியை சுமக்க வல்லது. அதுபோல் தன்னிடம் சரணடைபவர்களின் சுமையை தனதாகக் கருதி விரும்பி ஏற்கிறாள் அன்னை என்பதை அந்த வாகனம் உணர்த்துகிறது.

ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சக்ஷூ (CHAKSHU) என்ற கிராமம் மற்றும் ராஜஸ்தான் குஜராத் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பாலைவனப் பகுதியிலும் வெப்பம் அதிகமாக தாக்கும் பகுதியிலும் கோடை துவங்கும் காலத்தில் சீதளாதேவிக்கு மிகவும் விமரிசையாகக் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. கோடை காலத்தில் வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும். அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவார்கள். தமிழகத்தில் ரூபங்களில் சில வேற்றுமைகளுடன் சீதளாதேவிக்கு மாரியம்மன் என்ற பெயரில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. இங்கும் கோடை காலங்களில் வெப்பத்தினால் வரும் நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அதிகமாக திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.

பிருங்கி முனிவர்

உலகிலேயே மூன்று கால்களை உடைய பிருங்கி முனிவர் சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபட மாட்டேன் என்கிற கொள்கை கொண்டவர். இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள். நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அம்மையப்பனாய் நின்றனர். அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார். இதை கண்ட சக்தி பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். சிவபெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்றார். அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்று சக்தியிடம் பிருங்கி முனிவர் மன்னிப்பு கோரினார். அறியாமல் செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் வழங்கினார். பிருங்கி முனிவரின் சிற்பம் இருக்கும் இடம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் காஞ்சிபுரம்.

சிவ வடிவம் – 17. சண்ட தாண்டவ மூர்த்தி

திருவாலங்காட்டில் மகிமையை உணர்ந்த சுனந்த முனிவர் அங்கு தனக்கு தாண்டவ நடத்தை இறைவன் காட்ட வேண்டிய தவமியற்றினார். அப்போது சிவபெருமானின் கைவிரலில் உள்ள கார்கோடகன் பாம்பு அவரது திருவிரலில் விஷம் கக்கியது. இதனைக் கண்ட இடபம் நீ செய்த தீமைக்காக திருக்கைலையை விட்டு நீங்குமாறு கார்கோடகனிடம் கூறியது. கார்கோடகனும் பயந்து சிவனிடம் முறையிட்டது. உடன் சிவபெருமான் திருவாலங்காட்டில் தவமியற்றும் சுனந்தருடன் சேர்ந்து சண்ட தாண்டவத்தை தரிசித்த உடன் கைலை வருவாயாக என்றார். திருவாலங்காடு சென்ற கார்கோடகன் சுனந்தருடன் சேர்ந்து தவமியற்றியது. அப்போது சும்பன் நிசும்பன் எனும் இரு அசுரர்கள் அனைவரையும் கொடுமைபடுத்தி வந்தார்கள். இதனைக் கண்ட தேவர்கள் பார்வதி தேவியிடம் முறையிட்டனர்.

பார்வதியும் சப்தமாதர்கள் சிவகணங்களுடன் சாமுண்டி என்ற சக்தியாக மாறி அவர்கள் இருவரையும் கொன்றனர். அவர்களிருவரின் சகோதரியான குரோதி என்பவளின் மகன் இரத்த பீசன். அவனது ஒவ்வொரு சொட்டு இரத்தமும் நிலத்தில் விழுந்தால் அதுவொரு இரத்தபீசனாக மாறிவிடும். இத்தகைய வரம் பெற்ற அவனை அழிக்க வேண்டி பார்வதி காளி தேவியை தோற்றுவித்தாள். காளி அவனது ஒரு சொட்டு இரத்தம் கூட நிலத்தில் சிந்த விடாமல் பருகி அவனை அழித்தாள். போர் நல்லபடியாக முடிந்தது. அசுரனின் மாமிசத்தையும் இரத்தத்தையும் குடித்ததால் காளிதேவி யாருக்கும் அடங்காமல் வனங்களில் அரசாட்சி புரிந்து வந்தார். அவ்வாறே திருவாலங்காடு வந்து சேர்ந்தார். அங்கு வந்த காளி அட்டகாசத்தை ஆரம்பித்தார். இதனை அறிந்த சிவபெருமான் பைரவராக மாறி காளிதேவியிடம் போர் புரிந்தார். காளி தேவி தோற்று விட்டார். காளி தேவி தோற்றதும் நடனப் போர் புரிய பைரவரை அழைத்தார். பைரவரும் சம்மதித்து தேவர்களின் வாத்திய இசைக்கு ஏற்ப நடனம் ஆடினார். நவரசங்கள் ததும்ப இருவரும் சலைக்காமல் ஆடினர். இந்த சண்ட தாண்டவம் நடை பெறும் போது சிவனின் குண்டலம் கீழே விழ அதைத்தன் காலால் எடுத்துக் காதில் பொருத்தினார். போட்டி நடனம் ஆடிய காளி வெட்கத்துடன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டாள். சுனந்தர் கார்கோடகன் உட்பட அனைத்து தேவர் முனிவர்களுக்கும் எல்லாக் காலமும் காணும்படி தாண்டவக் கோலத்தை அருளினார்.

கும்பகோணம் பேருந்து நிலையம் அருகேயுள்ளது கீழ்க் கோட்டம். இறைவன் பெயர் நாகநாதர் இறைவி பெயர் பெரியநாயகி ஆவார். இங்குள்ள நடராஜ மண்டபத்திற்கு பேரம்பலம் என்று பெயர். இங்கு உள்ள மூர்த்தியை வணங்கி சிவ தியானம் செய்தால் தாண்டவ ஒலி கேட்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 580

கேள்வி: அபிராமி பட்டர் அம்மையை நோக்கி கேள்வி கேட்கிறாரே?

பாவமே செய்யாமல் வாழக் கற்றுக் கொண்டு விட்ட பிறகு இறைவனிடம் வினா தொடுக்கலாம். அவரை வம்புக்கு இழ்ழுக்கலாம். நம்மிடமே பல குறைகள் இருக்கும் பொழுது எந்த நம்பிக்கையில் இறைவனிடம் விவாதம் செய்ய இயலும்?

வினாயகர்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள துலிஸ்கையோ கிராமத்தில் அமைந்துள்ளது இந்த விநாயகர். இந்த 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை மூன்று மீட்டர் உயரமுடைய ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டது.