சிவ வடிவம் – 19. கங்கா விசர்ஜன மூர்த்தி

ஆதி காலத்தில் அயோத்தியை இசுவாகு குலத்தில் சகரர் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனது முதல் மனைவி சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும் 2 வது மனைவி கேசினி என்பவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தனர். சில காலம் கழித்து சகரர் அசுவமேத யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தார். அஸ்வமேத யாகம் செய்ய ஒரு குதிரையைக் கொண்டு வந்தான். இந்த யாகத்தை மன்னன் செய்து முடித்தால் அவன் இந்திர பதவிக்கு தகுதி பெற்று விடுவான். இதனால் தற்போது இந்திரன் பதவியில் இருக்கும் இந்திரன் இந்த யாகத்தை தடுத்து நிறுத்த எண்ணினான். குதிரை இருந்தால் தானே யாகம் நடைபெறும் என்று யாகத்தைத் தடுக்க குதிரையை பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷியின் ஆசிரமத்தில் கட்டி வைத்து விட்டான்.

அயோத்தி அரசன் சகரர் குதிரையைத் தேடி கொண்டுவரும் படி தமது அறுபதினாயிரம் மகன்களுக்கு கட்டளையிட்டார். பாதாளத்தில் கபில முனிவர் அருகே குதிரைக் கண்ட அவர்கள் முனிவர் தான் குதிரையை திருடியவர் என எண்ணி அவரை திட்ட துவங்கினார்கள். தியானத்தில் இருந்து கண் விழித்த கபில முனிவர் அறுபதினாயிரம் பேரை பார்த்ததும் அவரது தவ சக்தியால் அவர்கள் அனைவரும் எரிந்து சாம்பலானார்கள். அனைத்தையும் அறிந்த சகரர் அரசன் கபில முனிவரை வணங்கி தான் செய்யும் அஸ்வமேத யாககுதிரை தங்கள் ஆசிரமத்தில் இருந்ததினால் இந்த குழப்பங்கள் வந்தது. தன் புதல்வர்களை மன்னிக்குமாறும் சாம்பலான பிள்ளைகளுக்கு விமோசனம் தந்து நற்கதி அடைவதற்கு வழி சொல்லுமாறும் தன் குதிரையை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டார். சகரரின் வேண்டுகோளை ஏற்ற கபில முனிவர் குதிரையை எடுத்துச் செல்ல அனுமதி கொடுத்தார். மேலும் மேலுலகத்தில் சிவனின் ஒற்றை திருமுடியில் இருக்கும் கங்கையை பூலோகம் வரவழைத்து இந்த சாம்பலை புனிதப்படுத்தினால் இவர்கள் நற்கதி அடைவார்கள் என்று விமோசம் கூறினார். இதனை கேட்டு மகிழ்ந்த சகரர் குதிரையை எடுத்துச் சென்று அசுவமேத யாகத்தை முடித்தார். முதல் மனைவியின் வாரிசுகள் அறுபதாயிரம் பேரும் சாம்பலானதால் இரண்டாவது மனைவியின் புதல்வன் அஞ்சமான் நாட்டின் அரச பதவியை ஏற்றுக் கொண்டார்.

அஞ்சுமானின் வம்சாவளியிலே வந்தவன் பகீரதன் ஆவான். பகீரதன் ஆட்சி பொறுப்பை ஏற்றக் கொண்டதும் தமது முன்னோர்கள் ஆறுபதாயிரம் பேருக்கு நடந்ததை தெரிந்து கொண்டார். பின்பு நாட்டை துறந்து கங்கையை பூலோகம் கொண்டு வர பிரம்ம தேவரை நினைத்து காட்டில் கடும் தவம் இயற்றினான். இவரின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைந்தார். பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடைய வேண்டி கங்கை பூமிக்கு வந்து பின் பாதளத்துக்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக் கொண்டான். அதற்கு கங்கை பகீரதா நான் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்க மாட்டாள். நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்று கூறினாள். பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும் பராக்கிரம சாலிகளிடமும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்து விட்டனர். பகீரதன் மகாவிஷ்ணுவை வேண்ட அவர் இச்செயல் சிவன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெறு என்று கூறினார்.

சிவனை நோக்கி தவமிருந்தான் பகிரதன். மனம் மகிழ்ந்த சிவனும் அவனுக்குக் காட்சி அளித்து பகீரதா உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும் உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கை பூமிக்கு வரும் போது நான் பூமியில் நின்று எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன் என்றார். பகீரதனும் கங்கையிடம் சிவனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க அவளும் மகிழ்வோடு சப்தமிட்டபடி பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்தாள். சிவன் தன் சடையை விரித்துப் பிடித்தார். அப்போது கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. நான் மிகவும் வேகமாக வருகின்றேன். என் ஆற்றலையும் வேகத்தையும் இந்த சிவனால் தாங்க இயலுமா என யோசித்தாள். எல்லாம் வல்ல சிவன் கங்கையின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டார். நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார். திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவித்து தன் அகங்காரத்தை போக்கிக் கொண்டாள். பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைந்தான் சிவனை நோக்கி மீண்டும் ஒற்றைக் காலில் தவமிருந்தான்.

பகீரதன் முன் தோன்றிய சிவன் கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான். வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் அந்த ஆசிரமத்தை முற்றிலும் நீரால் அழித்து முனிவரையும் உருட்டித் தள்ள ஆயத்தமானாள். கோபம் கொண்ட முனிவர் கங்கையை அப்படியே தன் கைகளால் கங்கையை எடுத்து அள்ளிக் குடித்து விட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும் கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு மனமிரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். அதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் ஏற்பட்டது. இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக் கொண்டு தம் மூதாதையரின் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான். சகரர் புத்திரர்கள் அறுபதாயிரம் பேருக்கும் நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்தது.

பகீரதன் கொண்டு வந்ததால் கங்கைக்கு பகீரதி என்ற பெயர் ஏற்பட்டது. தனது ஒற்றை திருமுடியில் இருந்த கங்கையை தனது சடையில் ஏற்று உலகத்திற்கு கொடுத்து வழி காட்டியதால் சிவபெருமானுக்கு கங்கா விசர்ஜன மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. அவரை தரிசிக்க கேதார் நாத் செல்ல வேண்டும். ஆறு மாத காலம் கோயிலில் வழிபாடுகள் நடைபெறும். பனி மழையால் ஆறுமாதம் மூடப்பட்டிருக்கும். உமை சிவனிடம் இடபாகம் பெற்ற தலம் கோதார்நாத் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.