சிவ வடிவம் – 21. கல்யாணசுந்தரமூர்த்தி

பார்வதி தேவியை திருமணம் செய்ய சிவபெருமான் எடுத்த கோலமே கல்யாண சுந்தர மூர்த்தியாகும்.

திருக்கைலையில் அனைத்து தேவர்களுடன் சிவபெருமான் வீற்றிருக்கையில் பார்வதி தேவியார் எழுந்து இறைவன் முன் சென்றார். தட்சன் மகளால் தாட்சாயிணி என்ற பெயர் பெற்றேன். அந்த பெயரை மாற்ற தங்கள் தயவு வேண்டும் என்றார். உடன் சிவபெருமானும் பார்வதி பர்வத மன்னன் உன்னை மகளாக அடைய தவம் இயற்றுகிறான். நீ அவரிடம் குழந்தையாக பிறப்பாயாக உனது பெயர் மாறும். நீ பெரியவளானதும் நான் வந்து உன்னை மணமுடிப்பேன் என்றார். அதன்படி பர்வத மன்னரிடம் மூன்று வயதுள்ள குழந்தையாக வந்து சேர்ந்தார் பார்வதிதேவி. அக்குழந்தையை அவர்கள் சீராட்டி வளர்த்தனர்.

பர்வத ராஜனிடம் வளரும் பார்வதிதேவி மணப்பருவம் வந்ததும் சிவனை மணாளனாக அடைய வேண்டித் தவமிருந்தார். சிவபெருமான் பார்வதி முன் அந்தணராகத் தோன்றி தன்னை திருமணம் புரியும் படி வேண்டினார். பார்வதி அதை மறுத்து சிவபெருமானை மணம் செய்யவே தான் தவமிருப்பதாகக் கூறினார். உடன் அந்தண வேடம் கலைந்து இடபத்துடன் சிவபெருமான் காட்சிக்கொடுத்தார். விரைவில் வந்து திருமணம் புரிவேன் என்று கூறி மறைந்தார். பார்வதி தேவி தன் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார். அங்கே சிவபெருமான் சப்த ரிஷிகளிடம் தனக்கு மலையரசன் மகளை மணம் பேசச் சொன்னார். இரு வீட்டாரும் பேசி திருமணத்திற்கு நாள் குறித்தனர். பங்குனி உத்திர தினம் திருமண நாளாக குறிக்கப்பட்டது. தேவர் உலகத்தினர் படைசூழ சிவபெருமான் பர்வதம் விரைந்தார். அனைவரும் அங்கே குவிந்ததால் வட திசை தாழ்ந்தது. உடன் சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை சென்று நிற்கும் படி வேண்டினார். அகத்தியர் திருமண கோலத்தை காண முடியாதே என்று எண்ணி தயங்கினார். இதனை அறிந்த சிவபெருமான் நீ விரும்பும் போதேல்லாம் உமக்கு எம் திருமணக் கோலத்தை காட்டுவோம். எனவே தென்திசை செல்க என்று பணிந்தார். அகத்தியரும் அவ்வாறே சென்றார். உடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் செய்ய எடுத்த கோலமே கல்யாண சுந்தர மூர்த்தியாகும்.

திருவாரூர் அருகேயுள்ள திருவீழிமலையில் கல்யாணசுந்தரமூர்த்தி உள்ளார். இங்கு மூலவர் பெயர் விழியழகர் இறைவி பெயர் சுந்தர குஜாம்பிகை ஆகும். இங்கு உற்சவ மூர்த்தியாக கல்யாண சுந்தரர் காட்சியளிக்கிறார். இங்குள்ள மூலவரின் பின் புறம் சிவபெருமான் பார்வதியின் திருமணக்கோலம் உள்ளது. மதுரை அவனியாபுரத்தில் உள்ள கோயிலிலும் கல்யாணசுந்தரர் அருள்பாலிக்கிறார். மேலும் பல புராண கோயில்களில் மூலவருக்கு பின்புறம் சுதை சிற்பமாக கல்யாண சுந்தரமூர்த்தி திருமணக்கோலத்தில் உள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.