சிவ வடிவம் – 10. சந்திரசேகரமூர்த்தி

சிவபெருமான் சந்திரனை தனது தலையில் தரித்த கோலமே சந்திரசேகரமூர்த்தி வடிவமாகும். சேகரன் என்பதற்குக் காப்பவன் என்று பொருள். சந்திரன் முழுதுமாக தேய்ந்து விடாமல் காத்து அருளியதால் இறைவனுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.

பிறையோன்
பிறை சூடிய பெம்மான்
பிறைசூடன்
தூவெண்மதிசூடி
பிறையன்
மதிசெஞ்சடையோன்
இந்து சேகரன் – இந்து என்பது சந்திரனின் மற்றொருப் பெயர்
மதன சேகரன் – மதனன் என்றாலும் சந்திரனை குறிக்கும் மற்றொரு பெயர்.
பிறைசூடி
மாமதிசூடி

என வேறு பெயர்களும் உள்ளது. சந்திரசேகரர் வடிவம் மூன்று நிலைகளில் இருப்பதாக சுப்பிரபேத ஆகமம் கூறுகிறது.

  1. கேவல சந்திரசேகர் – கேவல என்றால் தனித்து நின்றலாகும். இந்த கேவல சந்திரசேகரர் நிலையில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி தனித்து நிற்கிறார்.
  2. உமா சந்திரசேகர் – இவ்வடிவில் உமையுடன் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி நிற்கிறார்.
  3. ஆலிங்கண சந்திரசேகர்- இவ்வடிவில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி உமையை தழுவிய நிலையில் இருக்கிறார்.

நான் முகனின் மகன் தட்சன். அவனுக்கு நட்சத்திரங்களே இருபத்தியேழுப் பெண்களாகப் பிறந்தது. அவர்கள் அனைவரையும் சந்திரனுக்கு திருமணம் செய்வித்தார். சந்திரன் திருமணம் நடைப்பெற்ற சிறிது காலம் வரை அனைத்து மனைவியரிடத்தும் அன்போடு இருந்தார். நாட்கள் செல்ல அவரது அன்பு கார்த்திகை ரோகிணி இடத்தில் மட்டும் மிகுந்தது. இதனால் மற்றப் பெண்கள் மனம் சகிக்காமல் தந்தையாகிய தட்சனிடத்தில் கூறினர். தட்சனும் மருமகனை அழைத்து தம் அனைத்து மகள்களையும் சமமாக நடத்தும் படி அவர்களுடன் அன்புடன் இருக்கும் படியும் புத்திமதிகள் கூறி அனுப்பி வைத்தார். சிறிது காலத்திற்குப் பின் சந்திரனின் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தது. எனவே மறுபடியும் பெண்கள் தன் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். பெண்களின் துன்பம் சகியாது தட்சன் நாளுக்கொரு கலையாக குறைந்து இறப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.

சாபத்தின் வீரியத்தால் நாளொரு கலையாக சந்திரன் தேய்ந்து கொண்டே வந்து இறுதியாக ஒரு கலை மட்டுமே இருக்கும் நிலையில் இந்திரனின் ஆலோசனைப்படி நான்முகனை சந்தித்து தன் குறைகளைச் சொன்னான். நான் முகனோ தன் வேலையில் மகனும் மகன் வேலையில் தானும் தலையிடுவதில்லை என்று உறுதி கொண்டுள்ளோம். எனவே இக் குறைகளை சிவபெருமானால் மட்டுமே தீர்க்க முடியும் எனவே அவரை சரணடையுமாறு சொன்னார். அதன்படி சந்திரன் சிவபெருமானிடம் சரணடைய சிவனும் சந்திரனின் ஒரு கலையை எடுத்து தன் சடையில் வைத்து இனி உன் ஒரு கலைக்கு அழிவில்லை ஆனாலும் தட்சனின் சாபத்தால் தினமொரு கலையாக அழிந்தும் என்னிடம் உள்ளதால் தினமொரு கலையாக வளர்ந்தும் காணப்படுவாய் என அருளாசி கூறினார். சந்திரனைத் தன் சடையில் தரித்ததால் சந்திரசேகரன் ஆனார்.

சந்திரசேகரமூர்த்தியின் திருவுருவம் திருவாரூர் (புகலூர்) நாகபட்டிணம் அருகே உள்ளது. இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம் கோணபிரான் மற்றும் அக்னிபுரீஸ்வரர். பிறை சூடிய சந்திரசேகர மூர்த்தியின் செப்புத் திருமேனிகள் பிள்ளையார் பட்டி திருநெல்வேலி பாபநாசம் தேவதானம் மதுரை வீரபாண்டி கோவிலூர் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. மேலும் பல புராண கோயில்களில் இவரது திருவுருவம் உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.