சிவ வடிவம் – 20. திரிபுராந்தகமூர்த்தி

பறக்கும் கோட்டைகளுடன் கூடிய மூன்று நகரங்கள் கொண்ட தாரகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலி என்னும் மூன்று அசுர சகோதரர்களை (திரி புரர்) அழிப்பதற்காக எடுத்த கோலம் திரிபுராந்தகமூர்த்தி (திரிபுர அந்தக மூர்த்தி) ஆகும்.

தாரகாசுரனின் மூன்று மகன்களும் பிரம்மாவை நோக்கி நெடுங்காலம் தவமியற்றி வந்தனர். அவர்களின் தவத்தின் பயனாக பிரம்மா அவர்களுக்கு காட்சிக் கொடுத்தார். பிரம்மாவிடம் அவர்கள் என்றும் அழியாத வரம் வேண்டும் என்று கேட்டார்கள். பிரம்மா அது முடியாத காரியம். இவ்வுலகில் என்றும் அழியாமல் இருப்பவர் சிவபெருமான் மட்டுமே. மற்ற அனைவரும் ஒரு நாள் அழிந்தே தீருவோம். எனவே மோட்சமாவது கேளுங்கள் கிடைக்கும் என்றார். உடனே அம்மூவரும் அப்படியானால் பொன் வெள்ளி இரும்பினால் ஆன சுவருடைய முப்புரம் வேண்டும். அவை நாங்கள் நினைத்த இடத்திற்கு செல்ல வேண்டும். அந்த முப்புரம் எங்களையும் சிவபெருமான் தவிர வேறு யாராலும் அழிக்க முடியாதபடி வரத்தை கேட்டனர். பிரம்மாவும் அவர்கள் கேட்டமடி கொடுத்து விட்டு மறைந்தார். அம்மூவரும் தங்கள் அசுரத் தன்மையை சிவனிடம் காட்டாமல் மற்ற அனைவரிடத்திலும் காட்டினார்கள். அவர்களது தொல்லை தாளாத தேவர்கள் சிவனை நோக்கி கடுமையான தவத்தை செய்தார்கள். அவர்களின் தவத்தின் பயனால் சிவபெருமான் போர் செய்வதற்கு தேர் முதலான போர் கருவிகளைத் தயார் செய்யும் படி தேவர்களிடம் கூறினார்.

தேவர்களும் அவ்வாறே போர் கருவிகள் தயார் செய்தனர். தேரில் மந்திர மலையை அச்சாகவும் சந்திர சூரியர் சக்கரமாகவும் நதிகள் தேர்க் கொடியாகவும் அஷ்ட பர்வதங்கள் தேரின் தூண்களாகவும் புண்ணிய நதிகள் சாமரம் வீசவும் தேவ கணத்தினர் வாத்தியங்கள் இசைத்தப்படி உடன் வர தேர் தயாரானது. சிவபெருமான் பார்வதியுடன் இடப வாகனத்தில் இருந்து தேரில் கால் எடுத்து வைத்தவுடன் தேரின் அச்சு முறிந்தது. உடன் இடபமாக மாறி திருமால் தேரைத் தாங்கினார். ஆனாலும் தேர் மேலும் சாய அனைவரும் முதற்கடவுளான வினாயகரை வேண்ட தேர் பழைய படி சரியானது. பின் தேவ கணங்கள் படை சூழ முப்புரம் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். அப்போது தேவர்கள் தாங்கள் செய்த தேரினால் தான் சிவபெருமான் இந்த யுத்தத்தில் வெற்றி பெருவார். நாம் இல்லாமல் இவரால் வெற்றி பெற முடியாது என்ற கர்வம் கொண்டார்கள். இதனை அறிந்த சிவபெருமான் யுத்த கருவிகளை கீழே வைத்துவிட்டு முப்புரங்களைபயும் பார்த்து சிரித்தார். உடனே முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. உடனே தாரகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலி ஆகிய அசுரர்கள் மூவரும் சிவபெருமானிடம் மன்னிப்புப் கேட்டு சரணடைந்தார்கள். அவரும் அவர்களை மன்னித்து துவார பாலகராக வைத்துக் கொண்டார். தேவர்களின் துயர் துடைத்து முப்புரங்களையும் எரித்ததால் சிவபெருமானுக்கு திரிபுராந்தக மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது.

கடலூரில் உள்ள திருஅதிகையில் திரிபுராந்தக மூர்த்தி உள்ளார். இவருக்கு அதிகைநாதர் என்ற பெயரும் உள்ளது. இறைவியின் பெயர் திரிபுரசுந்தரியாகும். கூவம் திரிபுராந்தகர் கோயிலில் மூலவர் திரிபுராந்தகர். தாயார் திரிபுராந்தக நாயகி. மாமல்லபுர சிற்பத்தில் வடக்குச் சுவர் மற்றும் கொடித் தூணிலும் காஞ்சி கைலாசநாத கோயில் சிற்பத்திலும் சோழர் கால கோயில்களின் தேவகோட்டங்களிலும் நாயக்கர் கால தூண்களிலும் தஞ்சைக் கோயில் கருவறையின் மேல் நிலையில் திரிபுராந்தகர் புராண வரலாற்றுத் தொடர் சிற்பமாகவும் சிதம்பரம் கோயில் கலைக் கோபுரங்களில் திரிபுராந்தகர் தேவியுடன் வில்லேந்தி நிற்கும் கோலத்திலும் கொடும்பாளூர் விமானத்தில் திரிபுர தகனக் காட்சியையும் திரிபுராந்தக மூர்த்தியைக் காணலாம். திருநல்லம் கோணேரிராஜபுரம் கோயிலுக்கு செம்பியன் மாதேவி திரிபுராந்தகரையும் தேவியையும் செப்புத் திருமேனியாக வழிபாட்டிற்காகத் தானமளித்திருக்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.