சிவபெருமான் கங்கையைச் சடைமுடியில் தாங்கிய வடிவமே கங்காதரர் என்று வழங்கப்படுகிறது
திருக்கைலையில் பார்வதி தேவி சிவபெருமானின் இரு கண்களையும் விளையாட்டாய் பற்றினார். உடன் உலக உயிர்கள் அனைத்திற்கும் அளவிலாத துன்பம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும் பேரிருள் சூழ்ந்தது. இதனையறிந்த சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அனைவரையும் காத்தார். ஒளி வந்ததால் அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்பமடைந்தனர். அனைவரும் சிவபெருமானைப் போற்றினர். இதனைக் கண்ட பார்வதி தேவி அவசரமாக தன் கைகளை நொடிப் பொழுதில் எடுத்தார். இதனால் இவரது பத்து கைவிரலில் இருந்த வியர்வைத் துளிகள் பத்தும் கங்கையாக மாறி மூவுலம் முழுவதும் பரவி பெருத்த சேதத்தையும் அழிவையும் உண்டாக்க முன்னேறியது. இதனைக் கண்ட மூன்று உலகத்தினரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமானும் அவ்வெள்ளத்தை அடக்கி அதனை தனது சிரசில் ஓர் திருமுடியில் தரித்தார். அனைவரும் சிவபெருமானைப் போற்றித் துதித்தனர். நான்முகன் இந்திரன் திருமால் ஆகிய மூவரும் சிவபெருமானிடம் சென்று இறைவா பார்வதி தேவியின் கைவிரல் வியர்வையால் உண்டான கங்கை பெரும் புனிதமானது. அதை உங்கள் திருமுடியில் தரித்ததால் அது மேலும் புனிதமடைகிறது. அத்தகைய புனிதப் பொருளை எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தருள வேண்டும் என்றனர். அதன்படியே இந்திரன் தனது அமராவதி நகருக்கும் நான்முகன் தனது மனோவதி நகருக்கும் திருமால் தனது வைகுண்டத்திற்கும் கங்கையைக் கொண்டு சேர்த்தனர். பிற்காலத்தில் பகிரதன் தன் தவத்தினால் இந்த கங்கையை பூலோகத்திற்கு கொண்டு வந்தான்.
கங்கை வெள்ளத்தின் வேகத்தை குறைத்து தனது சடைமுடியின் ஒர் திருமுடியில் தாங்கியிருப்பதால் சிவபெருமானுக்கு கங்காதர மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. கங்காதர மூர்த்தியை தரிசிக்க இமயத்திற்கு தான் செல்ல வேண்டும். இமயமலையே கங்காதர மூர்த்தியின் இருப்பிடமாகும். அங்கு செல்ல இயலாதவர்கள் இருந்த இடத்திலேயே கங்காதர மூர்த்தியை மானசீகமாய் வணங்கி வழிபடலாம்.
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/07/18.1-1.jpg?resize=531%2C850&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2023/07/18.%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.jpg?resize=650%2C796&ssl=1)