சிவ வடிவம் – 3.முகலிங்கமூர்த்தி

சிவலிங்கத்தில் முகம் இருந்தால் அந்த லிங்கம் முகலிங்கம் என்ற பெயரில் அழைக்கப்படும். இந்த முகலிங்கம் நான்கு வகைப்படும். அவை ஆட்யம் அநாட்யம் சுரேட்டியம் சர்வசமம்/சர்வசம் ஆகும்.

  1. ஆட்யம் – 1001 லிங்கங்களை கொண்டது
  2. அநாட்யம் – முகம் இல்லாதது
  3. சுரேட்டியம் – 108 லிங்கங்களை கொண்டது
  4. சர்வசமம்/சர்வசம் – 5 முகம் கொண்டது (ஈசானம் தத்புருடம் அகோரகம் சத்யோஜாதம் வாமம்) இவ்வடிவ வகையில் ஒரு முகம் கொண்ட ஏகமுக லிங்கம். இரு முகம் கொண்ட துவிமுக லிங்கம். மூன்று முகம் கொண்ட திரிமுக லிங்கம். நான்கு முகம் கொண்ட சதுர்முக லிங்கம். ஐந்து முகம் கொண்ட பஞ்சமுக லிங்கம் என்று ஐந்து உள் வகைகள் உள்ளன.

பிரம்மா படைக்கும் தொழிலையும் விஷ்ணு காக்கும் தொழிலையும் உருத்ரன் அழிக்கும் தொழிலையும் மகேஸ்வரன் மறைக்கும் தொழிலையும் சதாசிவன் அருளும் தொழிலையும் செய்கிறார்கள். இந்த ஐவருக்கும் ஆதார சக்தியாக உள்ளவர் பரசிவம் ஆகும். அவனையே நாம் முகலிங்கத்தில் மூலமாக தரிசிக்கலாம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் பெரிய நாயகர் சந்நிதிக்குத் தெற்கே நிருதி மூலையில் ஒரு ஏகமுக லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தில்லைச் சிற்றம்பலத்தில் ரகசியத்துக்கு அருகில் ஒரு முகலிங்கம் உள்ளது.

சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு மேற்காக முகங்கள் அமைவதே துவிமுக லிங்கம் அல்லது இரு முக லிங்கம் எனப்படும். கிழக்கு முகம் தத்புருஷம் என்றும் மேற்கு முகம் சத்யோஜாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

தென்னாற்காடு மாவட்டம் திருவக்கரை திருத்தலத்தில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தின் கருவறையில் மூலமூர்த்தியாக திரிமுக லிங்கம் உள்ளது. சதுரமான அடி பாகத்தின் மீது அமைந்துள்ள வட்ட வடிவமான ஆவுடையாரின் மேல் மும்முகத்துடன் மூலவர் காட்சி கொடுக்கிறார். ஈரோடு மகிமாலீஸ்வரர் ஆலயத்திலும் திரியம்பக லிங்கம் அமைந்துள்ளது. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான திரியம்பகேஸ்வரர் மூன்று முகத்துடன் உள்ளார். இவரின் மூன்று முகங்களைத் தங்கத்தால் செய்து அணிவித்துள்ளனர்.

சிவ லிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கில் தத்புருஷம் மேற்கில் சத்யோஜாதம் வடக்கில் வாம தேவம் தெற்கில் அகோரம் என நான்கு முகங்கள் இருக்கும். திருவானைக்காவல் திருவண்ணாமலை காஞ்சிபுரம் கச்சபேசுவரர் ஆகிய ஆலயங்களிலும் சதுர்முக லிங்க சந்நிதிகள் உள்ளன. நேபாளத்தில் உள்ள பசுபதி நாதர் ஆலயத்தில் உள்ளது சதுர்முக லிங்கம். இது மார்பு வரை இரு கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் ஜப மாலையும் மற்றொரு கையில் அமுதக் குடமும் உள்ளது. நான்கு முக லிங்கம் ஆகையால் இக்கோயிலில் நான்கு வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பில் உள்ள கோயிலுக்கு தமிழில் நான்முகக் கோயில் என்றும் வடமொழியில் சர்வதோ பத்ராலயம் என்று பெயர்.

நான்கு திசைகளில் நான்கு முகங்களுடன் கிழக்குத் திசையில் அதிகப்படியான ஒரு முகத்துடன் ஐந்து முகங்களுடன் விளங்குகிறது. வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் அமைந்துள்ள சந்நிதியில் பஞ்ச லிங்கம் உள்ளது. இவ்வகை லிங்கங்கள் வட இந்தியாவில் சில கோயில்களிலும் நேபாளத்திலும் உள்ளது. வட மாநிலங்களில் சமீப காலத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்களில் பஞ்சமுக லிங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ஆறுமுக லிங்கம் என்று சொல்லப்படும் லிங்கத்தில் நான்கு முகங்கள் நான்கு திசைகளை நோக்கியும் ஐந்தாவது முகம் உச்சியில் வானத்தை நோக்கி ஊர்த்துவ முகம் என்றும் ஆறாவது முகம் கீழ் நோக்கி அதோ முகம் என்றும் அழைக்கப்படும்.

One thought on “சிவ வடிவம் – 3.முகலிங்கமூர்த்தி

  1. Janamejayan Reply

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள (திருவதிகை) சிவன் கோயிலில் சதுர்முகலிங்கம் மிகவும் அழகாக உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.