சிவ வடிவம் 22. அர்த்தநாரீஸ்வரமூர்த்தி

அர்த்தம் என்பது பாதி நாரி என்பது பெண். சிவன் ஆண் உருவம் பாதி வலப்பக்கமும் சக்தி பெண்ணுருவம் பாதி இடப்பக்கமும் உள்ள உருவமே அர்த்த நாரீஸ்வரர் ஆகும். இது சிவனின்றி சக்தி இல்லை சக்தியின்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவாகும்.

திருக்கைலையில் சிவபெருமானை தரிசிக்க திருமால் நான்முகன் இந்திரன் என அனைத்தும் தேவர் உலகத்தினரும் திரண்டிருந்தனர். அவர்களை வரிசைப்படி நந்தி தேவர் அனுப்பிக் கொண்டிருந்தார். அனைவரும் பார்வதி தேவியையும் சிவபெருமானையும் வணங்கி வேண்டும் வரங்களைப் பெற்றுச் சென்றனர். அப்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் பார்வதி தேவியை வணங்காமல் சிவபெருமானை மட்டுமே வணங்கியபடி சென்றார். பிருங்கிரிஷி சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபடக்கூடாது என்கிற கொள்கை கொண்டவர். இதனை கவனித்த பார்வதிதேவி அவரது உடலிலுள்ள சதையை தனது மூச்சுக் காற்றால் இழுத்துக் கொண்டார். ஆனாலும் பிருங்கி முனிவர் பார்வதி தேவியை வணங்காமல் எழும்பும் தோலுமாகவே சிவபெருமானை துதித்தார். இதைக் கண்ட சக்தி சிவனிடம் நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று முறையிட்டாள். சிவபெருமானும் தனது சரிபாதி இடப்பாகத்தில் தேவியை ஏந்தினார். இருவரும் அம்மையப்பனாய் நின்றார்கள்.

பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து அம்மையப்பரின் தொப்புள் வழியே துளையிட்டு சிவனை மட்டும் வலம் வந்தார். இதைகண்ட சினம் உற்ற அம்மை பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். உடனே சிவ பெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளி முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திருப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்பதை புரிந்து கொள் என்றார். முனிவரும் அப்பனே என்னை அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்றும் பராசக்தியிடம் மன்னிப்பும் கோரினார். அறியாமற் செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் கூறினார். சிவசக்தி இருவரும் சரிபாதியாக அர்த்தநாரீஸ்வரராக நின்று பிருங்கி முனிவருக்கு அருள் புரிந்தார்கள்.

ஈரோடு அருகேயுள்ள திருச்செங்கோடு சிவன் கோயிலில் மூலவர் அர்த்தநாரீசுவரராக அமர்ந்துள்ளார். இறைவி பெயர் பாகம்பிரியாள். காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ள அர்த்தநாரீசுவரர் வடிவம் தென்னிந்தியாவில் காணப்படும் பழைய வடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு உமாதேவி வீணையுடனும் சிவன் காளையில் ஏறிய கோலத்திலும் காணப்படுகிறார். இங்கு உமாதேவியாருக்கு அர்த்தநாரீசுவரி பாகம்பிரியாள் என்று பெயர். இங்கு அர்த்தநாரீசுவரர் மாதொருபாகன் என்றும் அழைக்கப்படுகிறார். அர்த்தநாரீசுவரர் வடிவத்தைப் பற்றி தேவார பாடல்களில் புராண நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.