சிவ வடிவம் – 24 ஜ்வாரபக்ன மூர்த்தி

மாகபலி மன்னனுக்கு வாணாசுரன் எனும் மகன் இருந்தான். இவன் ஆயிரம் கைகளைக் கொண்டவன். இவனது மனைவி சுப்ரதீகை. இவன் நர்மதை நதியோரத்தில் ஒரு சிவலிங்கத்தை அமைத்து அதற்கு தினமும் ஆயிரம் முறை அர்ச்சனை செய்து வந்தான். சிவபெருமான் இவனுக்குக் காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு இவன் உலகம் முழுவதையும் நானே அரசாட்சி செய்ய வேண்டும். நான் இருக்கும் சோணிதபுரத்தை சுற்றி என் அனுமதி இல்லாமல் யாரும் நுழைய முடியாதபடி நெருப்பினால் ஆன மதில் சுவர் அமைய வேண்டும். அழிவே இல்லாத நிலை வேண்டும் என்று கேட்டான். அதன்படியே ஆகட்டும் என்று சிவபெருமான் வரத்தை அருளிக் கொடுத்தார். இதனால் உலகம் முழுவதையும் வெற்றி பெற்று ஆட்சி செய்தான். மீண்டும் சிவபெருமானை தரிசித்து வரத்தைப் பெற விரும்பி வெள்ளி மலையை அடைந்தான். அங்கு தனது ஆயிரம் கைகளிலும் குடமுழா வாத்தியக் கருவியை வாசித்து தவம் செய்தான். அவனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவன் இறைவா தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் எனது சோணிதபுரத்திற்கு வந்து வசிக்க வேண்டும் என்றுக் கேட்டான். அவனின் தவப்பலனால் சிவபெருமான் குடும்ப சமேதராய் அவனது மாளிகையிலேயே வசித்தார். இந்நிலையில் வாணாசுரன் தேவர் உலகத்தினர் அனைவரையும் போருக்கு இழுத்து தோற்கடித்ததால் அனைவரும் ஓடி மறைந்து வாழ்ந்தார்கள். போர் செய்ய ஆட்களை தேடினான். யாரும் இல்லாமல் இறுதியில் தன்னுடன் போர் புரியும் படி சிவபெருமானை அழைத்தான்.

சிவபெருமானோ தனக்கு பதிலாக கண்ணன் வருவான் என்றார். கண்ணன் எப்பொழுது வருவான்? என்று கேட்டான். சிவனும் உன் மகள் கண்ணன் மகனை விரும்புவாள். அந்த செய்தி உனக்குக் கிடைக்கும் போது வருவான் என்றார். வாணாசுரனின் மகள் உஷைக்கும் கண்ணன் மகன் அநிருத்தக்கும் காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த கண்ணன் வாணாசுரனுடன் போர் புரிய வந்தான். முதலில் உள்ள வாசலில் விநாயகனை வணங்கினான். இரண்டாம் வாசலில் முருகனை வணங்கினான். மூன்றாம் வாசலில் உமாதேவியரிடம் ஆசி வாங்கி உள் சென்றான். அங்கே நான்காவது வாசலில் சிவபெருமானை கண்டான். சிவபெருமான் கண்ணனை சண்டைக்கு அழைத்தார். கண்ணன் பின் வாங்கினான். இருப்பினும் சிவபெருமான் கண்ணனைத் தேற்றி வாணாசுரனிடம் நடைபெறும் சண்டையில் நீயே வெல்வாய். அதற்கு முன் எண்ணிடம் போர் புரிந்து பயிற்சி செய்வாயாக என்றார். இருவருக்கும் பல காலங்கள் போர் நடைபெற்றுக் கொண்டேயிருந்தது. முடிவில் சிவபெருமான் ஒதுங்க போர் நின்றது. பின் கண்ணனுக்கும் வாணாசுரனுடன் பயங்கரப் போர் நடைபெற்றது. அவனது கரங்கள் ஒவ்வொன்றாக கண்ணன் துண்டித்தான். சிவபெருமானை தொழுத கைகளை மட்டும் வெட்டாமல் கண்ணன் விட்டார். மனம் மாறிய வாணாசுரன் இறைவனிடம் மன்னிப்பு வேண்ட மன்னிக்கப்பட்டு மறுபடியும் அவனது கரங்கள் இணைந்தன. சிவபெருமான் இருப்பிடத்தில் குடமுழா வாத்தியக் கருவியை வாசிக்க பணி அமர்த்தப்பட்டான். அவனது மகள் உஷைக்கும் கண்ணன் மகன் அநிருத்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. கண்ணனுடன் போர் புரிய சிவபெருமான் எடுத்த உருவமே ஜ்வாரபக்ன மூர்த்தியாகும்.

ஜ்வராபக்ன மூர்த்தியை நாகபட்டிணம் அருகேயுள்ள சாட்டிய குடியில் உள்ள கோயிலில் காணலாம். இறைவியின் பெயர் வேதநாயகி ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.