தற்போது இருக்கும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பகுதிகள் அக்காலத்தில் காந்தாரா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட போர்க் கோலத்தில் உள்ள முருகனின் சிலை. காலம் 2 ஆம் நூற்றாண்டு. தற்போது கவுண்டி மியூசியம் ஆஃப் ஆர்ட் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் உள்ளது.
அர்ஜூனன் இறைவனுக்கு பூஜைகளை தவறாமல் செய்பவன். தினமும் பூஜை செய்து முடியும் வரையில் சிறிது உணவையும் உண்ண மாட்டான். இதனால் உலகத்தில் தன்னை விடச் சிறந்த பக்தர் யாரும் இல்லை என்று அகந்தை கொண்டிருந்தான். பீமனைப் பார்க்கும் போதேல்லாம் இவன் பூஜைகள் எதுவும் செய்வதில்லை. எந்நேரமும் தூங்குவதிலும் உணவு உண்பதிலும் ஆர்வம் காட்டுகிறான் என்று எண்ணி நகைப்பான் அர்ஜூனன். இதனை அறிந்த கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இந்த அகந்தை போக்க எண்ணி சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். பாரதப் போரில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என நினைத்த அர்ஜுனன் அதற்கு வழி காட்டுமாறு கிருஷ்ணனை கேட்டுக் கொண்டான். சிவபெருமானை சந்தித்து அவரின் ஆசி பெற்று வரலாம் வா என்று அர்ஜூனனை கயிலை மலைக்கு அழைத்துச் சென்றார் கிருஷ்ணர். பனியால் மூடப்பட்டிருந்த கயிலை மலைப் பகுதியில் புல் பூண்டு கூட முளைப்பது இல்லை. ஆனால் அந்த வழியெங்கும் மலர்கள் குவிந்த வண்ணமே இருந்தன.
சிவ கணங்கள் குவியும் மலர்களை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஒருமுறை அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் மறுகணமே மலர்கள் குவிந்து கொண்டிருந்தது. மலர்களை அள்ளி அள்ளி அப்புறப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் சிவகணங்கள். இக்காட்சியைக் கண்ட அர்ஜுனன் கிருஷ்ணரிடம் பனி மூடிய பகுதியில் மலர்கள் மலர இயலாது. ஆனால் மலர்கள் மலை போல் இங்கு குவிந்து கொண்டே இருக்கின்றன. மலர்கள் தானாக எப்படி இங்கு வர இயலும்?இக்காட்சி வியப்பாக உள்ளது. இது எப்படி என்று கேள்வி கேட்டான். அதற்கு கிருஷ்ணர் இம்மலர்கள் இங்கு பூப்பவை அல்ல. பக்தன் ஒருவன் பூக்களை வைத்து இறைவனுக்கு பூஜிக்கிறான். அங்கு சமர்ப்பிக்கும் பூக்கள் அனைத்தும் இங்கு மலை போல் குவிக்கின்றன என்றார். அதற்கு அர்ஜூனன் ஒரு மனிதன் சில நிமிடங்களில் மலை போல் குவியும் இவ்வளவு பூக்களை எப்படி இறைவனுக்கு சமர்ப்பித்து வழிபட இயலும். நானும் தினமும் பூஜை செய்கிறேன். யாராலும் இவ்வளவு பூக்களை வைத்து பூஜை செய்வது என்பது இயலாத காரியம் எப்படி இது சாத்தியம். யார் அந்த பக்தன் என்று மீண்டும் கேள்வி கேட்டான்.
பீமன் இறைவனுக்கு அர்ச்சனை செய்த மலர்கள் தான் இவை அனைத்தும். பீமன் இறைவனுக்கு அர்ச்சனை செய்ய செய்ய இங்கு மலர்கள் குவிக்கின்றன என்றார் கிருஷ்ணர். பீமன் இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறானா? அவனுக்கு அர்ச்சனை செய்ய நேரம் ஏது? உணவு உண்ணவே நேரம் போதவில்லை. அப்படியிருக்கும் போது அவன் எப்போது அர்ச்சனை செய்தான்? அப்படியே அர்ச்சனை செய்தாலும் அதை ஒரு நாளும் நான் பார்த்ததில்லை. நான் மட்டும் இல்லை யாருமே பார்த்தது இல்லை. இப்படியிருக்க நீ கூறுவதை எப்படி நம்புவது? என்றான் அர்ஜூனன்.
அர்ஜுனா பீமன் அர்ச்சனை செய்வதை யாரும் பார்க்கவில்லை. பார்க்கவும் முடியாது. ஏனெனில் அவன் உன்னைப் போல் மற்றவர்களைப் போல இறைவனின் உருவத்தை வைத்துக் கொண்டு மந்திரங்கள் ஓதி மலர்கள் தூவி அர்ச்சனை செய்வதில்லை. அவன் செய்யும் பூஜைகள் அர்ச்சனைகள் அனைத்தும் மானசீகமானது. அவன் மனதிற்குள்ளேயே செய்கிறான். அவன் எங்காவது சென்று கொண்டு இருக்கும் போது கண்ணில் பட்ட மலர்களைப் பார்த்து இவை தெய்வ அருச்சனைக்கு உரியவை ஆகட்டும் என்று மனத்தால் நினைப்பான். உடனே அந்த மலர்கள் அனைத்தும் இங்கே வந்து மலை மலையாகக் குவிந்து விடும். மற்றவர்கள் நினைப்பது போல் பீமன் சாப்பிட்டுக் கொண்டிருப்பவன் அல்ல. சிறந்த தெய்வ பக்தன். ஆஞ்சனேயர் அம்சம். ஆஞ்சனேயரின் ராம பக்தி உலகறிந்தது. பக்தியில் பீமனோடு உன்னை ஒப்பிடும் போது நீ பக்தனே அல்ல. சிறந்த பக்தனான பீமனை நீ அடிக்கடி ஏளனம் செய்வதை நான் அறிவேன். இனியாவது ஏளனம் செய்வதை விட்டு விடு. நீ தான் சிறந்த பக்தன் என்ற அகந்தை உன்னிடம் உள்ளது. இறை பக்திக்குப் பெரும் தடையாக இருப்பது உன்னுடைய அகந்தை. உன்னுடைய அகந்தையை விட்டுவிடு என்றார். கிருஷ்ணரின் உபதேசத்தால் அர்ஜுனனிடம் இருந்த அகந்தை என்ற அரக்கன் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. அர்ஜூனன் அன்று முதல் பீமனிடம் மிக்க பணிவுடன் நடந்து கொண்டான்.
இந்த உலகத்தில் எந்த ஓர் உயிர் என்றாலும் தனக்கு ஆபத்து வந்தால் தமக்கு ஏற்பட்ட துன்பங்களை கூறி சிவபெருமானை சரணடைந்து வணங்கினால் அவர்கள் விரும்பும் வண்ணம் அவர்களின் துன்பங்களை நீக்கி இன்பம் அளிப்பதற்காக இவ்வாறு என்று வார்த்தகளால் சொல்ல முடியாதபடி அந்தந்த சமயத்திற்குத் தகுந்தபடி மானுடர்கள் போல உருமாறி சட்டை அணிந்து இரண்டு திருக்கைகளோடும் வந்து அவர்களது துன்பங்களை போக்கி அருள் அளிக்கும் திருத்தோற்றமே ஆபத்தோத்தாரணமூர்த்தி ஆகும். ஆபத்திலிருந்து காக்கும் மூர்த்தி என்று பொருளாகும்.
கர்ம வினைகளினால் ஆட்பட்டவர்கள் கர்ம வினைகளில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் போது அடியவர்களுக்கு ஏற்றவாறு பல்வேறுபட்ட திருவுருவங்களை எடுத்து வந்து துன்பங்களை களைவார். அவரையின்றி வேறொருவர் நமக்குத் துணை கிடையாது. அத்தகைய ஈடில்லா சிறப்பினைப் பெற்ற சிவபெருமானைச் சுற்றிலும் சப்தரிஷிகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் தேவகணங்கள் பூதகணங்கள் முனிவர்கள் ரிஷிகள் சித்தர்கள் அசுரர் கிம்புருடர் கின்னரர் நாகர் என இறைவனை உணர்ந்த பலரும் அவரைச் சுற்றிலும் நின்றபடி இருப்பார்கள்.
அவரது அற்புதங்களும் அவதாரங்களும் மூர்த்தங்களும் இன்னக் இன்னக் காரணங்களுக்கென மனித அறிவினால் கூற இயலாது. துன்பம் அடைந்தோரையும் ஆபத்திலிருப்போரையும் காத்து ரட்சிக்கும் திருக்கோலமே ஆபத்தோத்தாரண மூர்த்தியாகும்.
கலி காலத்திலே பூசைகள் கடினம் என்றுதான் தர்மத்தை உபதேசம் செய்கிறோம். இயன்றவர்கள் இயலாதவர்களுக்கு தக்கதொரு தர்மத்தை இயன்ற அளவுக்கு செய்து கொண்டே வர வேண்டும். ஒரு நாள் போய் விட்டால் வாழ்க்கையில் அது நாள் அல்ல. வெட்டும் வாள். எனவே ஒவ்வொரு தினமும் கழியும் போதும் அன்றைய தினத்தில் நாம் எத்தனை பேருக்கு உதவி செய்தோம்? எத்தனை மனிதனுக்கு நம்மால் பயன் ஏற்பட்டது? எத்தனை மனிதனுக்கு நாம் ஆறுதலாயிருந்தோம்? எத்தனை மனிதனுக்கு நாம் உடலால் உபகாரம் செய்தோம்? எத்தனை பேருக்கு வார்த்தைகளால் எண்ணங்களால் பொருட்களால் மருத்துவ உதவி செய்தோம்? எத்தனை பேருக்கு பசி தீர்த்து உதவினோம்? கல்வி கற்க உதவினோம்? என்றெல்லாம் சிந்தித்து சிந்தித்து அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த அதிகப்படுத்த கூடவே இறையருளும் எமது ஆசியும் தொடரும்.
கந்தர்வர்களில் ஒருவனான கிரவுஞ்சன் விநாயகப் பெருமானின் தீவிர பக்தன். அவன் தினமும் விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தனது பணிகளைத் தொடங்குவான். ஒருநாள் அவன் இமயமலைப் பகுதியில் இயற்கை அழகை ரசித்தபடி வான் வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அழகிய பூந்தோட்டம் ஒன்றும் அதில் பூப்பறித்துக் கொண்டிருந்த அழகியப் பெண் ஒருத்தி அவன் கண்ணில் பட்டாள். அந்தப் பெண்ணின் அழகில் மயங்கய அவன் அவளை எப்படியாவது திருமணம் செய்து தன்னுடன் தேவலோகத்துக்கு அழைத்துச் சென்று விட வேண்டுமென்று எண்ணினான். வானிலிருந்து கீழிறங்கி வந்த அவன் பூப்பறித்துக் கொண்டிருந்த பெண்ணை நெருங்கி பெண்ணே தேவலோகத்தைச் சேர்ந்த கந்தர்வனான நான் வான் வழியாகச் சென்று கொண்டிருந்த போது உன் அழகைக் கண்டு மயங்கிக் கீழிறங்கி வந்தேன். நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றான். அந்தப் பெண் கந்தர்வனே நான் இங்குள்ள ஆசிரமத்தில் இருக்கும் சவுபரி முனிவரின் மனைவி மனோரமை. என் மேல் நீ கொண்ட தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டு இங்கிருந்து சென்றுவிடு என்றாள். ஆனால் அந்தப் பெண்ணின் அழகு கந்தர்வனை மதிமயங்கச் செய்தது. நீ ஒரு முனிவரைத் திருமணம் செய்து கொண்டு ஒரு பணிப் பெண்ணைப் போல் வாழ்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறாய். என்னைத் திருமணம் செய்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக வாழலாம் என்றான். அதைக் கேட்டுக் கோபமடைந்த அவள் நான் இன்னொருவரின் மனைவி என்று சொல்லியும் அதைக் கேட்காமல் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது உனக்குத் தவறாகத் தெரியவில்லையா? என்றாள். முனிவருடன் இருப்பதை விட என்னைப் போன்ற கந்தர்வனுடன் இருப்பதில் தான் இன்பம் அதிகம். இந்த முனிவரைக் கைவிட்டு என்னுடன் வந்தால் உன்னைத் தேவலோகம் அழைத்துச் செல்கிறேன். அங்கு நாம் இருவரும் மகிழ்ச்சியாக வாழலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறினான் கந்தர்வன்.
முனிவரின் மனைவி சற்றும் தடுமாற்றம் இல்லாமல் கந்தர்வனே முனிவரின் மனைவியாக நான் இன்பமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீ என்னிடம் தேவையில்லாமல் பேசி உன் நேரத்தை வீணடிக்காமல் இங்கிருந்து செல். இல்லையென்றால் பெருந்துன்பமடைய நேரிடும் என்றாள். இதனால் கோபமடைந்த கந்தர்வன் அவளைக் கவர்ந்து போய் விடுவது என்று முடிவு செய்து மனோரமையை நெருங்கினான். அவன் எண்ணத்தை அறிந்த அவள் அவனிடமிருந்து தப்பிக்க ஆசிரமம் நோக்கி ஓடினாள். பின் தொடர்ந்து வந்த கந்தர்வன் ஆசிரமத்துக்குள் நுழைந்த மனோரமையின் கையைப் பிடித்து நிறுத்தினான். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத அவள் சுவாமி என்னைக் காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டாள். மனைவியின் சத்தத்தைக் கேட்டு ஆசிரமத்திலிருந்து வெளியில் வந்தார் சவுபரி முனிவர். நிலைமயை உடனடியாக புரிந்து கொண்ட முனிவர் கந்தர்வனே என் மனைவியை விட்டு இங்கிருந்து போய்விடு. இல்லையெனில் என் கோபத்துக்கு ஆளாவாய் என்றார். மோக மயக்கத்தில் இருந்த கந்தர்வனுக்கு அவரது குரல் காதில் விழவில்லை. அவன் மனோரமையை கவர்ந்து செல்வதிலேயே குறியாக இருந்தான். இதனால் கோபமடைந்த முனிவர் கந்தர்வனே என் மனைவியை கவர்ந்து செல்ல நினைத்த நீ மண்ணைத் தோண்டி வளையில் ஒளிந்து வாழும் எலியாக மாறி துன்பப்படுவாய் என்று சாபமிட்டார்.
முனிவரின் சாபத்தைக் கேட்டு சுயநினைவுக்குத் திரும்பிய கந்தர்வன் தன்னுடைய செயலுக்காக வருந்தினான். முனிவரே அடுத்தவரின் மனைவியை அடைய நினைத்த எனக்கு தாங்கள் கொடுத்த சாபம் சரியானது தான். நான் நீங்கள் கொடுத்த சாபத்தை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் எனது தவறைத் தாங்கள் மன்னித்தருள வேண்டும் என்றான். இதனால் மனமிரங்கிய முனிவர் கந்தர்வனே தவறு செய்வது அனைவரின் இயல்பாக இருக்கலாம். ஆனால் தேவலோகத்தைச் சேர்ந்த உனக்கு இப்படியொரு எண்ணம் வந்திருக்கவே கூடாது. நீ தவறை உணர்ந்து நான் கொடுத்த சாபத்தையும் முழுமையாக ஏற்றுக் கொண்டிருப்பதால் நான் உன்னை மன்னிக்கிறேன். பிற்காலத்தில் உனக்கு இந்த எலி உருவத்திலேயே மிகப்பெரிய சிறப்பு கிடைக்கும் என்றார்.
கந்தர்வன் மிகப்பெரிய எலியாக மாறினான். அந்த எலி காட்டிற்குள் சென்று பல இடங்களையும் தோண்டி நாசப் படுத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு இடமாக மாறி மாறிச் சென்ற எலி காட்டிற்குள் இருந்த பராசர முனிவரின் ஆசிரமப் பகுதிக்குள் சென்றது. அந்த இடம் எலிக்கு பிடித்துப் போனதால் அங்கேயே ஒரு வளை தோண்டித் தங்கிக் கொண்டது. அந்த எலி ஆசிரமப் பகுதிக்குள் இருந்த மரங்களின் வேர்களைக் கடித்து மரங்களைக் கீழே விழச் செய்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. மேலும் ஆசிரமத்தின் பல பகுதிகளிலும் வளை தோண்டி சேதப்படுத்தியது.
அபினந்தன் எனும் அரசன் இந்த நேரத்தில் நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று உலக நன்மைக்காக மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்த முடிவு செய்து முனிவர்களிடம் இந்த பணியை ஒப்படைத்தான். வேள்விக்கான பணிகளையும் அவனே முன்னின்று செய்து வந்தான். காலநேமி என்ற அசுரன் அபினந்தன் செய்து வந்த வேள்விகளை எல்லாம் அழித்தான். அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத முனிவர்கள் அவனை அழித்து உதவும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அவர்களிடம் இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள். என் மகன் விநாயகன் அவனை அழிப்பதற்காகப் பூலோகத்தில் தோன்ற இருக்கிறான். அவன் அரக்கன் காலநேமியை அழித்து வேள்விப் பணிகள் தொடர உதவி செய்வான் என்று அருளினார். சில காலத்தில் யானை முகமும் மனித உருவமுமாக விநாயகப் பெருமான் அந்நாட்டில் தோன்றினார். அந்தக் குழந்தையைக் கண்டு அரசன் அச்சமடைந்தான். இருப்பினும் குழந்தையைக் கொல்ல மனமில்லாமல் காட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தன்னுடைய படை வீரர்களுக்கு கட்டளையிட்டான். அவர்களும் ஒரு குளக்கரையில் விட்டு வந்தனர். காட்டிற்குள் இருந்த அந்த குளத்தில் நீராட வந்த பராசர முனிவர் குழந்தையை கண்டெடுத்து தன் ஆசிர மத்தில் வைத்து வளர்க்கத் தொடங்கினார்.
விநாயகர் ஆசிரமத்தில் வளர்ந்து வந்த போது அங்கிருக்கும் மரங்களில் ஏறி விளையாடுவார். அதேபோல் ஒரு மரத்தில் ஏறி விநாயகர் விளையாடிய போது மரத்தின் அடியில் இருந்த எலியானது வேர்களைக் கடித்து மரத்தைச் சரித்தது. மரத்தின் அடியில் வளை தோண்டி வசித்த பெரிய எலிதான் மரம் கீழே விழுவதற்கு காரணம் என்று விநாயகருக்கு தெரிய வந்தது. அந்த எலியைக் கொல்வதற்காக, தன்னிடம் இருந்த பரசு ஆயுதத்தை எடுத்து எலியை நோக்கி வீசினார் விநாயகர். ஆயுதத்தைப் பார்த்ததும் எலி வளைக்குள் புகுந்து ஓடியது. பரசு ஆயுதம் எலியை விடாமல் துரத்தியது. வளை தோண்டியபடி பாதாளம் வரைச் சென்ற எலி சோர்வடைந்தது. அதற்குமேல் செல்ல முடியாமல் பூமியின் மேற்புறத்தை நோக்கி ஓடி வந்தது. பரசு ஆயுதம் எலியை விநாயகரின் முன்பாக கொண்டு போய் நிறுத்தியது. விநாயகப் பெருமான் உருவத்தை நேருக்கு நேராகப் பார்த்ததும் அந்த எலிக்கு தான் கந்தர்வனாக இருந்ததும் சவுபரி முனிவரிடம் சாபம் பெற்றதும் நினைவுக்கு வந்தது .தன் தவறை மன்னிக்கும்படி வினாயகரிடம் வேண்டியது. மனமிரங்கிய விநாயகர் கவலைப்படாதே உனக்குச் சாபம் கொடுத்த முனிவரிடம் நீ சாபத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதாக கூறிவிட்டபடியால் உனக்கு என்னால் சாப விமோசனம் வழங்க முடியாது. நீ கந்தர்வனாக இருந்த போது என் மேல் அதிக பக்தி கொண்டிருந்தாய். எனவே நான் உன்னை என் வாகனமாகக் கொள்கிறேன். இதன் மூலம் நான் இருக்கும் இடங்களிலெல்லாம் உனக்கும் மரியாதை கிடைக்கும் என்று அருளினார். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த எலி விநாயகரை வணங்கி நின்றது. விநாயகப் பெருமானும் மூசிகனை வாகனமாகக் கொண்டு ஆயுதங்களுடன் சென்று அசுரன் காலநேமியை அழித்தார்.
கருமையான மலை போன்ற உடலையும் விகாரமான முகத்தையும் கோரமான பற்களையும் யானையின் துதிக்கையை போன்ற கைகளையும் உடைய மிகவும் கொடிய அசுரன் அந்தகன். இவன் சிவபெருமானை நினைத்து பஞ்சாக்கினி வளர்த்து அதன் மத்தியில் தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பார்வதி தேவியுடன் இடப வாகனத்தில் வந்து என்ன வரம் வேண்டுமென்றுக் கேட்டார். பிரம்மா விஷ்ணு இவர்களை விட பலமும் யாவரும் அழிக்க முடியாத ஆற்றலும் வேண்டும் என்று கேட்டான். அவன் செய்த தவத்தின் பலனால் அவன் கேட்டதை கொடுத்தார் சிவபெருமான். தான் பெற்ற வரத்தினால் தானே வலிமையுள்ளவன் என்ற அகங்காரம் அதிகமானது. இதனால் இந்திரன் விஷ்ணு பிரம்மா என அனைவரிடமும் சண்டை போட்டான். அவனது சண்டைக்கு முன் அனைவரும் தோல்வியுற்று விஷ்ணு முன்செல்ல தேவகணங்ளும் பின்சென்று அனைவரும் அந்தகனிடம் சரணடைந்தனர். சரணடைந்த பின்பும் அவனது கொடுமை தொடர்ந்தது. அந்தகன் கொடுமைகள் அதிகமாக தேவகணத்தினர் கையிலை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமான் தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பைரவரிடம் அந்தகனை வெற்றி பெற உத்தரவிட்டார். பைரவர்க்கும் அந்தகனுக்கும் இடையே அதிபயங்கரப் போர் நிலவியது. பல அசுர சேனைகள் பைரவர் அழித்தார். அழிந்த அனைவரையும் அசுரனின் தலைவர் சுக்கிராச்சாரியார் உயிர்ப்பித்தார். உடனே சிவபெருமான் சுக்கிராச்சாரியாரை விழுங்கினார். அடுத்த நொடி அசுர சேனைகள் அனைத்தும் அழிந்தன. பைரவர் தனது சூலத்தால் அந்தகனை குத்திவிட்டு சிவபெருமானை சரணடைந்தார். பைரவரின் சூலத்தால் குத்தப்பட்டு அதன் அருளால் மனம் மாறிய அந்தகன் தனது அகங்காரமெல்லாம் அழிந்து போக வேண்டும் என்றும் சிவபெருமானிடம் தன்னை பூத கணங்களுக்கு தலைவனாக்கவும் வேண்டினான். சிவபெருமான் அவனது தவத்தின் பலனாலும் வேண்டுதலாலும் அவனது எண்ணத்தை நிறைவேற்றினார். சிவபெருமானின் வயிற்றிலிருந்த சுக்கிராச்சாரியாரை இறைவன் வெளியேற்றினார். பின்னர் தேவர்கள் தொல்லையின்றி நிம்மதியுடன் வாழ்ந்திருந்தனர். அந்தகனின் அகங்காரத்தை அழிக்க சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவ மூர்த்தியாகும்.
சிவபெருமானைப் போல் ஐந்து தலையுடன் இருந்த நான்முகனின் அகங்காரத்தை அடக்க சிவபெருமான் பைரவரை தோற்றுவித்து நான்முகனின் ஐந்தாவது தலையை கிள்ளியெடுத்தார் என்ற புராண வரலாறும் உள்ளது. நானே பெரியவன் என்ற அகங்காரம் தோன்றும் இடத்தில் எல்லாம் அகங்காரத்தை அழிக்க இறைவன் எடுக்கும் ரூபமே பைரவர் வடிவம் ஆகும்.
அனைத்து சிவ ஆலயங்களிலும் வடகிழக்கு மூலையில் பைரவரது சன்னதி இருக்கும். இவ்வடிவம் ஆடையின்றி நாயின் வாகனத்துடன் உக்கிரமான பார்வையுடனும் தோற்றமளிக்கும். நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன் ஒவ்வொரு கைகளிலும் டமருகம் பாசம் சூலம் கபாலம் இருக்கும். இவரே திருக்கோவிலின் பாதுகாப்பாளர் ஆவார். ஊர்களின் காவல் தெய்வமும் இவரே. பைரவர் 64 திருக்கோலங்களை உடையவர் என்று சிவாகமங்கள் கூறுகின்றன. சிவ பெருமானின் வீர செயல்கள் எட்டாகும். அவரது வீரச் செயல்களின் வெளிப்பாடாக பைரவரும் எட்டு திருவுருவங்களை எடுத்து அருள் பாலிக்கிறார். அவை 1.அசிதாங்க பைரவர் 2.ருரு பைரவர் 3.சண்ட பைரவர் 4.குரோத பைரவர் 5.உன்மத்த பைரவர் 6.கபால பைரவர் 7.பீஷண பைரவர் 8.சம்ஹார பைரவர் என்பதாகும். இவர்கள் எட்டு பேரும் எட்டு இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். அவை அட்ட பைரவேச்சரங்கள் என்று அழைக்கப்படுக்கிறது.
சீர்காழியில் உள்ள பிரம்மேஸ்வரர் சன்னதியில் அட்ட பைரவா சன்னதிகள் உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் முக மண்டலத்தில் எட்டு பைரவர்களின் சுதைச் சிற்பங்கள் உள்ளது. காசியிலும் எட்டு பைரவர்களின் சன்னதி உள்ளது. குற்றாலத்தில் உள்ள சித்திர சபையில் அட்ட பைரவர்களின் ஓவியங்கள் உள்ளது. சூரியனது கோயிலில் உள்ள பைரவர் மார்த்தாண்ட பைரவர் என்றும் முருகர் ஆலயத்தில் உள்ள பைரவர் குமார பைரவர் என்றும் விநாயகர் ஆலயத்தில் உள்ள பைரவர் பிரமோத பைரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சில திருமாலின் திருக்கோயிலிலும் பைரவர் திருவுருவங்கள் உண்டு. அந்த உருவத்திற்கு முகுந்த பைரவர் என்று பெயர். திருவண்ணாலையில் மூலவர் சன்னதி அருகே சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி உண்டு. இவர் அடியவர்களுக்கு அள்ளிக் கொடுப்பவர். பண்டைய கால அரசர்கள் இந்த பைரவரை உபாசித்து வேண்டியளவு பொருளை பெற்றிருக்கிறார்கள் என்று வரலாறு உள்ளது. திபேத்தில் உள்ள பௌத்த நூல்களில் 84 வகையான பைரவ திருவுருவங்களும் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுள்ளன. சமண சமய நூல்களில் 96 வகையான பைரவர்களின் திருவுருவங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. காசியில் ஆதிசங்கரருக்கு பிரம்மஞானம் அருளிய கோலம் பைரவத் திருக்கோலமாகும்.
ஓதிமலையில் நாள் கோள் வேலை செய்யாது. ஏன் என்றால் முருகன் கோள்களுக்கு அப்பாற்பட்டவன். இதை உணர அங்கு (மலைமேல்) ஓர் இரவு படுத்து இருந்து பார். ஆனாலும் தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு. ஓதியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது? (சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து பிரணவத்தின் பொருளை உரைத்ததால்). அப்படி இருக்க அங்கே கிரகங்கள் செயல்படுமா?
ஓதிமலை முருகனைப் பற்றி தெரிந்து கொள்ளவும் கோவில் மற்றும் மலை புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்