ஆமை அன்னங்கள்

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கித்ராபூரில் கோபேஷ்வர் கோயில் தூணில் ஒரு ஆமை மற்றும் இரண்டு அன்னங்கள் இந்த சிற்பத்தில் உள்ளது. எல்லா நேரத்திலும் பேசுவது ஆபத்தை தரும் என்ற கருத்தை இந்த சிற்பம் சுட்டிக் காட்டுகிறது.

ஒரு ஏரியில் கம்புக்ரீவா என்ற ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த ஆமைக்கு சகட மற்றும் விகட என்ற இரண்டு அன்னங்கள் நல்ல நண்பர்களாக இருந்தன. அவர்கள் மூவரும் ஒவ்வொரு நாளும் ஏரியின் கரையில் சந்தித்து சூரிய அஸ்தமனம் வரை தங்களது கருத்தைப் பரிமாறிக் கொண்டு ஒருவருக்கொருவர் நட்புடன் இருந்தார்கள். ஓராண்டு மழை பெய்யாமல் ஏரி வறண்டு போகத் தொடங்கியது. ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதைக் கண்டு மூவரும் கவலைப்பட்டார்கள். ஆமையும் அன்னங்களும் தங்களது கருத்தை ஒருவருக்கோருவர் பரிமாறிக் கொண்டார்கள். ஏரியில் உள்ள நீர் அனைத்தும் விரைவில் வற்றிவிடும். வற்றினால் ஆமை பெரிய மிருகங்களிடம் எளிதாக சிக்கிக் கொள்ளும். நீர் வற்றினால் இந்த ஏரியில் ஆமை தொடர்ந்து வாழ முடியாது. அன்னங்களுக்கும் உணவு கிடைக்காது. இனி இங்கு வாழ்வது மிகவும் கடினம். ஆகவே தண்ணீர் நிறைந்த மாற்று ஏரியைத் தேடி பிறகு அங்கு செல்லலாம் என திட்டமிட்டனர். பிரச்சனையை ஆமை அறிந்திருந்தது.

ஆமை தொடர்ந்தது. நீங்கள் முதலில் பறந்து சென்று வேறொரு ஏரியைக் கண்டு பிடியுங்கள். பின்பு நீங்கள் இருவரும் ஒரு குச்சியை பிடித்துக் கொள்ளுங்கள். நான் அந்த குச்சியை எனது வாயால் இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறேன். அன்னை அங்கே அழைத்துச் சென்று விடுங்கள். பின்பு மூவரும் எப்போதும் போல் அங்கு மகிழ்ச்சியுடன் வாழலாம் என்று சொன்னது. இரண்டு அன்னமும் சம்மதித்து அன்னங்கள் தொலைதூர இடங்களுக்கு பறந்து சென்று ஒரு ஏரியை கண்டு பிடித்தார்கள். பின் திட்டப்படி ஆமை இருக்கும் இடம் ஒரு குச்சியுடன் வந்தார்கள். அப்போது அன்னம் ஆமையிடம் எல்லாம் சரியாகத் தெரிகிறது. உங்கள் வாயை சென்று சேரும் வரை இறுக்கமாக மூடிக்கொள்ளுங்கள். நீங்கள் பேசக்கூடாது. இல்லையெனில் நீங்கள் விழுந்து விடுவீர்கள் என்றது. ஆமை குச்சியை வாயால் இறுக்கமாக பிடித்துக் கொண்டது. அவர்கள் பறக்க ஆரம்பித்தார்கள்.

அவர்கள் மலைகள் பள்ளத்தாக்குகள் கிராமங்கள் காடுகள் ஆகியவற்றின் மீது பறந்து இறுதியாக ஒரு நகரத்தின் மீது வந்தனர். அவர்கள் நகரத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது இந்த விசித்திரமான காட்சியைப் பார்க்க ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். குழந்தைகள் கத்தவும் கைதட்டவும் தொடங்கினர். அதோ பார் இரண்டு பறவைகள் குச்சியின் உதவியால் ஆமையைச் சுமந்து செல்லும் அபூர்வக் காட்சி இது என்று வியந்து பாராட்டினர். ஆமை தான் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதை மறந்து இந்த கை தட்டல்களுக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிய மிகவும் ஆர்வமாக இருந்தது. ஆமை தனது நண்பர்களிடம் என்ன ஆச்சு? என்று வாயைத் திறந்தது. ஆமை வாயைத் திறந்த நொடியே கீழே விழுந்து இறந்தது. ஆமை பூமியில் விழுவதை அன்னங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தாங்கள் மட்டும் ஏரிக்கு சென்றது. கதையின் நீதி: எல்லா நேரத்திலும் பேசுவது ஆபத்தை தரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 676

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைஞான தெளிவு வராத வரையில் மனிதனுக்குள் எல்லா விதமான அனாச்சாரங்களும் இருக்கத்தான் செய்யும். அன்றாடம் அமைதியாக அமர்ந்து செய்கின்ற பிரார்த்தனையினாலும் செய்கின்ற முறையான சுவாசப் பயிற்சியினாலும் அகவைக்கு ஏற்றவாறு செய்கின்ற தேக நலத்திற்கு ஏற்றவாறு செய்கின்ற முறையான யோக பயிற்சியினாலும் அமைதியாக வாழ்கின்ற வாழ்க்கை முறையினாலும் கட்டாயம் பாவ வினைகள் குறைக்கின்ற வழி முறைகள் இறையருளால் ஒவ்வொரு மனிதனுக்கும் சுட்டிக் காட்டப்படலாம். அதனை உறுதியாகப் பிடித்துக் கொண்டு மேலேறுவது மாந்தர்களின் கடமையாகும்.

அனுமன் மேல் ஸ்ரீராமன்

அனுமனின் மேல் அமர்ந்திருக்கும் கம்பீர தோற்றத்தில் ராமர். ஸ்ரீராமரை சுமந்திருப்பதால் பணிவான பெருமிதத்துடன் அனுமன். இடம்: ஸ்ரீசௌந்திரராஜபெருமாள் கோவில் தாடிக்கொம்பு. திண்டுக்கல் மாவட்டம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 675

கேள்வி: குழந்தை வளர்ப்பு பற்றி:

ஒரு குழந்தை நன்றாக வளர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். குழந்தைக்கு முன்னால் சதா சர்வகாலமும் நல்ல அறச் சொற்களை பேசிக்கொண்டே இருந்தால் குழந்தையும் அதை இயல்பாக கற்றுக் கொள்ளும். குழந்தைக்கு முன்னாள் சதா சர்வ காலமும் இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தால் இறைவனின் நாமத்தை கூறிக் கொண்டிருந்தால் குழந்தையும் அதனை இயல்பாகக் கற்றுக் கொள்ளும். குழந்தையை வைத்துக் கொண்டு பொய் கூறுவது பெற்றோர்களே. எனவே பொய்யே கூறலாம் என்று அங்கீகாரம் கொடுப்பதே பெற்றோர்கள்தான். எத்தனைதான் இடர் வந்தாலும் உண்மையை கூறு என்பது போல பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு வேலை குடும்பத்தை விட்டு கல்வி கற்க வெளியே சென்றால் அங்கே சூழல் ஏற்புடையது இல்லை என்றால் என்ன செய்வது? என்று அப்படி செல்வதற்கு முன்னரே பலமான அடித்தளத்தை குழந்தை மனதிலே ஏற்படுத்தி விட வேண்டும். அந்த அளவிற்கு ஒரு குழந்தையின் தாயும் தந்தையும் ஒரு கடுமையான தவம் போல் குழந்தை வளர்ப்பை கவனிக்க வேண்டும். அதுபோல் குழந்தையை வைத்துக் கொண்டு நிறைய தர்ம காரியங்களை செய்யும் பொழுது அதனை இயல்பாக குழந்தை கற்றுக் கொள்ளும். இது ஒரு எளிமையான வழியாகும். இதோடு நல்விதமான இறை ஸ்லோகங்களை அன்றாடம் சொல்லி சொல்லி பழகுவதும் ஆலயம் செல்ல பழகுவதும் நல்ல நீதி நூல்களை வாசிக்க கற்றுக் கொடுப்பதுமாக இருந்தால் கட்டாயம் அந்த குழந்தை வழி தவறுவதற்கான விதி அதன் வாழ்க்கையில் குறுக்கிட்டாலும் இந்த அடிப்படை விஷயங்கள் அதன் வாழ்க்கையில் கவசம் போல் காத்து நிற்கும். ஆனால் இவைகள் மட்டும் போதாது. கடுமையான பித்ரு தோஷங்களும் கடுமையான முன் ஜென்ம பாவங்களும்தான் பருவ காலத்தில் ஒரு பருவ தடுமாற்றம் குழந்தைகள் வாழ்விலே ஏற்பட்டு அதனால் கல்வி தடைபடுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. இதற்கு வழக்கம் போல் திலயாகம் வழிபாடு போன்றவற்றை செய்வதோடு கூடுமானவரை குறைந்தபட்ச தேவைகளோடு ஒரு குடும்பம் வாழ்ந்து எஞ்சியவற்றையெல்லாம் தக்க ஏழைகளுக்கு தர்மமாக கொடுத்துவிட்டால் கூடுமானவரை குழந்தைகள் குறித்த கவலைகள் இல்லாமல் வாழலாம்.

தும்புரு

காசியபர் முனிவருக்கு மூத்த மகனாக மனித உடலும் குதிரை முகமுமாக அவதரித்தவர் தும்புரு. நாரதர் இவருடைய குரு. நாரதரைப் போலவே இசையில் வல்லவர். நாரதரின் இசைக்கு நாரதகானம் என்றும் தும்புருவின் இசைக்கு தேவகானம் என்றும் பெயர். இவர் கந்தர்வர்கள் கின்னரர்கள் கிம்புருடர்கள் ஆகியோரின் தலைவர். இவர்களில் சிலர் பறவை உடலும் மனித முகமும் கொண்டவர்கள்.

ஒரு முறை நாரதர் தும்புருவின் கையில் வைத்து இருந்த பொன்னும் மணியும் பதித்த வீணையைக் கண்டு விவரம் கேட்க பூலோகத்தில் ப்ராசீனபர்ஹி என்ற பேரரசனைப் புகழ்ந்து பாடியதால் கிடைத்தது என்கிறார். நாரதர் கோபத்துடன் இறைவனைத் தவிர நரஸ்துதி கூடாது எனத் தெரியாதா வென்று கேட்டார். தும்புரு பூலோகத்தில் போய் வீழவேண்டுமென்று சாபமும் இட்டார். திருப்பதி திருமலையில் உள்ள கோண தீர்த்தம் என்னும் பகுதியில் தும்புரு வீழ்ந்தார். இதுவும் இறைவனின் திருவுளமே என்று நாராயணனைத் துதித்து இறுதியில் பரமபதம் அடைந்தார். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் அனைவரும் பரமபதம் அடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்து வரமாகப் பெற்றார். அன்று முதல் கோண தீர்த்தம் தும்புருதீர்த்தம் ஆனது. தும்புருவின் கையில் உள்ள வீணையின் பெயர் களாவதி (மகதி). இடம்: சக்கரபாணி கோவில் கும்பகோணம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 674

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

தீபம் ஏற்றுவதும் தூப தீபங்கள் காட்டுவதும் மலர் ஆரங்கள் சாற்றுவது மட்டும் பூசை என்று எண்ணிவிடாதே. புற சுத்தியும் இது போன்ற தூப தீபங்களும் முக்கியம் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. இந்த சூழல் மனித மனதிற்கு அமைதியையும் நெகிழ்ச்சியையும் தரலாம். ஆனால் இவைகள் மட்டுமே பூஜைக்குரிய விஷயம் அல்ல. மனம் பக்குவப்பட்டு (ஒரு கலையை ரசிக்கும் போது எப்படி அங்கே ஐம்புலன்களும் ஒடுங்குகிறதோ) இறைவன் மீது ஒடுங்க மனதிற்கு பயிற்சி தந்து கொண்டே இருக்க வேண்டும். மனம் வாக்கு காயம் சிந்தனை புலன்கள் எல்லாம் வேறு எதனையும் நோக்கியும் சென்றிடாமல் இறை நாமத்தில் இறைவனின் திருவடியில் தனக்கு தெரிந்த இறை உருவத்தை எண்ணி பிறகு அந்த உருவமும் மறைந்து போய் நீக்கமற நிறைந்துள்ள அந்த பரம்பொருளின் திவ்ய தரிசனத்தை ஒளியாக ஒலியாக பின்பு அதுவும் அற்ற நிலையாக அது வேறு தான் வேறு இல்லாத நிலைக்கு ஒன்றி விட வேண்டும். செய்கின்ற வேலையிலே தன்னை மறந்து ஒரு மனிதன் எப்படி விருப்பமுடன் ஈடுபடுகிறானோ அதைப்போன்று செய்கின்ற வழிபாடும் பூசையும்தான் உயர்ந்தது. எடுத்த எடுப்பிலேயே இது வராது என்றாலும் மெல்ல மெல்ல முயற்சி செய்து மேலேற வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 673

கேள்வி: பாவங்கள் குறைந்து விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

பாவங்கள் குறைந்தாலும் அல்லது முற்றிலுமாக தீர்ந்தாலும் கூட பெருங்காயப் பேழை போல் அதன் நறுமணம் தாக்கிக் கொண்டே தான் இருக்கும். இருந்தாலும் பாவம் கூடுமானவரை குறைந்திருக்கின்றது மிக மிக சிறிய அளவு தான் இருக்கிறது என்றால் தன்முனைப்பும் அகங்காரமும் இல்லாமல் போய்விடும். நான் யார்? நான் எத்தன்மை வாய்ந்தவன்? எந்த அளவு கல்வி கற்றவன்? என் வலிமை என்ன? என்னுடைய செல்வம் என்ன? என் பதவி என்ன? என் செல்வாக்கு என்ன? என்னை ஏன் இவன் எதிர்க்கிறான்? என்பது போன்ற எண்ணங்கள் எல்லாம் மெல்ல மெல்ல விலகி விடும். மனம் அமைதியை விரும்பும். கூடுமானவரை தனிமை விரும்பும். புரிதல் இல்லாத மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிவிட்டுப் போகட்டும். அவன் விதி அவன் அவ்வாறு நடந்து கொள்கிறான். அவனுக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம் என்ற ரீதியில் தான் மனித இனம் இருக்கும். இவன் எதிரி. இவன் நண்பன் என்கிற நிலை எல்லாம் கடந்து போகுமப்பா. எனவே பாவங்கள் குறைய அதை அனுபவத்திலே மனம் உணரும்.

யோக சிவன்

யோக நிலையில் அமர்ந்துள்ள சிவன். இடம் கடம்பவனேஸ்வரர் கோவில். எறும்பூர். விருத்தாச்சலம். முதலாம் பராந்தகசோழன் காலம் (கி.பி 907-953)

அடிமுடி காணா அண்ணல்

அடிமுடி காணா அண்ணாமலையாக இறைவன் நிற்க திருமால் வராக அவதாரம் எடுத்து அவரது பாதத்தை தேட பிரம்மா முடியை காண மேலே சென்ற காட்சி. முற்சோழர் கால கலைப் படைப்பு. இடம்: நற்றுணையப்பர் திருக்கோயில். திருநனிப்பள்ளி நாகை மாவட்டம்.