ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 401

கேள்வி: இலையை கிள்ளுவதே பாவம் என்றால் சில சுப நிகழ்வுகளுக்காக வாழை மரத்தை வெட்ட வேண்டியுள்ளது இது பற்றி:

இதனை யாங்கள் ஏற்பதில்லை. அக்காலத்தில் என்ன வழக்கம் இருந்தது? என்றால் குறிப்பாக திருமணத்தின் பொழுது ஆணும் பெண்ணும் நிறைய செடிகளை நடும் பழக்கம் குறிப்பாக வாழைக் கன்றுகளை நடும் பழக்கம் இருந்தது. அந்த வாழை வாழையடி வாழையாக தழைப்பதுபோல இவர்களின் குலம் தழைக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருளாகும். ஆனால் கால ஓட்டத்தில் எல்லாமே மாறிவிடுவதுபோல இந்த வாழை மர பழக்கமும் மாறிவிட்டது. வாழை மரத்தை வெட்டி முன்னால் கட்டுவது சுபம் அல்ல. ஒரு பச்சிளம் குழந்தையை கொன்று முன்னால் தொங்கவிட்டு உள்ளே சுப காரியம் நடத்துவதுபோல. இதுமட்டுமா மனிதன் செய்கிறான்? இன்னும் எத்தனையோ அனாச்சாரங்களை செய்கிறான். சொன்னால் விதண்டாவாதம் செய்வான். யாங்கள் ஒன்று கூறினால் வேறு ஒன்று கூறுவான். இதையெல்லாம் கொல்லாதே என்றால் பாம்பைக் கொன்று சாப்பிடும் பழக்கம் உள்ள தேசத்திலே நாகதோஷமே இல்லையே குருதேவா என்று கேட்பான்.

ஒன்றை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். பாவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டிய ஆத்மாக்கள் பிறவிகள் என்று பலர் இருக்கிறார்கள். அவர்கள் எத்தனையோ பாவங்களை சேர்க்கவேண்டும் என்பது விதியாகும். அப்படி பாவங்களை சேர்க்க வேண்டும் என்றால் அவர்கள் பாவங்கள் செய்யும் பொழுது இறைவனோ நவகிரகங்களோ தலையிடாமல் ஒதுங்கி பாவங்களை இவன் சேர்க்கிறான். பலரின் கர்ம வினையை இவன் வாங்கிக் கொள்கிறான் என்று அமைதியாக இருப்பார்கள். அதனால் பாவங்கள் செய்பவர்கள் நன்றாக இருக்கிறார்களே? என்று நல்லவர்கள் மனக்குழப்பம் அடையக் கூடாது. பாவங்களை குறைத்துக் கொள்ளக் கூடிய எண்ணம் உள்ளவர்கள் பாவங்களை குறைத்துக் கொள்ள பிறவியெடுத்தவர்கள் சில துன்பங்களையும் சில வேதனைகளையும் பட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் பாவங்களை சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கக் கூடிய ஆத்மாக்கள் எல்லாவகையான பாவங்களையும் செய்து ஒட்டுமொத்தமாக நரகில் விழுந்து பிறகு படிப்படியாக மேலேறி வரவேண்டும். எனவே அவர்களை பார்த்து நல்ல வழியில் செல்கின்ற மனிதர்கள் மனம் குழப்பம் அடைதல் ஆகாது.

லட்சுமணன்

லட்சுமணன் தனது வலது கரத்திதை சுக்ரீவனின் தோள்களில் வைத்திருக்கிறார். மற்றோரு கையில் கோதண்டத்துடன் இருக்கிறார். பாதங்களில் காலணி அணிந்திருக்கிறார். இடம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில் தூத்துக்குடி.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 400

கேள்வி: இராமர் இராமேஸ்வரத்தில் வழிபட்டதினால் அங்கு திலயாகம் போன்றவற்றை செய்ய சொல்கிறீர்கள். இராமர் வேறு புண்ணிய நதிக்கரைகளிலும் வழிபாடு செய்திருக்கிறார். அப்படிப்பட்ட இடங்களிலும் நாங்கள் திலயாகம் போன்றவற்றை செய்யலாமா?

தெய்வ சமுத்திர கோட்டம் எனப்படும் இராமேஸ்வரத்தில் மட்டும்தான் இதுபோல் திலயாகமோ தர்ப்பணமோ முன்னோர்களுக்கு உண்டான சாந்தி பூஜையோ செய்ய வேண்டும் என்பதல்ல. ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும். மனிதர்கள் அறிந்ததுதான். மனித நாகரீகம் வளர்ந்ததே நதிக்கரையோரங்கள் கடலோரங்களில்தான். மனிதனுக்கு நீர் அவசியம். அந்த நீரை எங்கிருந்தாலும் கொண்டு வந்து சேர்க்கின்ற ஒரு சூழல் இன்று இருக்கிறது. ஆனால் அன்று இல்லை. நீரை ஒட்டிதான் நகரங்களும் நாடுகளும் வளர்ந்து வந்தன. இதுபோல் நிலையிலே மெல்ல மெல்ல பரிணாம மாற்றம் அடைந்த மனிதன் வேறுவிதமான வசதிகளையெல்லாம் பெற்ற பிறகு வேறுவிதமான வாழ்க்கை முறைக்கு சென்று விட்டான். எனவே எம்மைப் பொருத்தவரை ஆத்மார்த்தமாக மலைகளில் அமர்ந்து தில தர்ப்பணம் செய்தாலும் இறைவன் ஏற்றுக் கொள்வார். இல்லத்தில் அமர்ந்து செய்தாலும் ஏற்றுக் கொள்வார் அதல்ல பிரச்சினை. அடுத்ததாக இராமபிரான் வந்து அமர்ந்து பூஜை செய்ததால் சிறப்புதான் என்றாலும் அதற்காக மட்டும் யாங்கள் கூறவில்லை.

இதைத் தாண்டி ஒரு மனிதன் இல்லத்தில் அமர்ந்து பூஜை செய்து முன்வினை பாவங்களை போக்கிக் கொள்ளக் கூடிய அளவிற்கு மனோதிடமோ புண்ணிய பலமோ இல்லாத நிலையிலே தூர தூர இடங்களுக்கு தன் தனத்தை செலவழித்து சென்று அங்குள்ள மனிதர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து இதுபோல் ஒரு பொருளாதார சுழற்சியை ஏற்படுத்தும் பொழுது அதனால் அவனுடைய பாவங்கள் குறையட்டும் என்றுதான் யாங்கள் கூறுகிறோம். ஒன்று தீர்த்தம் புனிதமானது. அடுத்து ஆழி புனிதமானது. அதுபோல் அங்குள்ள இராமேஸ்வர தெய்வம் புனிதமானது தெய்வ சாந்நித்யமானது. அங்கு இருக்கின்ற மனிதர்கள் பல தவறுகள் செய்யலாம். ஆனால் தெய்வ சாந்நித்யம் என்பது உயர்ந்தது. அதனாலும் அங்கு செய்ய அருளாணை இடுகிறோம். திருவெண்காட்டிலும் செய்யலாம். கோடியக்கரையிலும் செய்யலாம். பூம்புகாரிலும் செய்யலாம் தவறொன்றுமில்லை. காசிதான் உயர்ந்தது இராமேஸ்வரம்தான் உயர்ந்தது என்று நாங்கள் கூற வரவில்லை. வாய்ப்பும் வசதியும் இருப்பவர்கள் அங்கு செய்யலாம். மற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் புனித நதியை புனித நதியாக மதிக்கின்ற மனிதர்கள் அந்த புனித நதியை நன்றாக பராமரித்து அந்த நதிக்கரையிலேயே நல்லவிதமாக பூஜைகளை செய்தால் கட்டாயம் நற்பலன் ஏற்படும்.

திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை – பகுதி 2

“திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை – பகுதி 2” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 19-11-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 399

கேள்வி: சமீபகாலமாக ஆலயங்களில் தீப்பற்றி விடுகிறது. மேலும் சிலைகள் திருடப்படுகின்றன. இதற்கு தீர்வு காண எந்த ஆலயம் சென்று வழிபடுவது ?

ஆலயம் தீப்பற்றி எரிவது மட்டும்தான் மனிதர்களுக்கு தெரிகிறது. பல ஆலயங்களில் இறைவனே பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறார். மனிதர்களின் செயலைப் பார்த்து அவர் உள்ளுக்குள் எரிந்து கொண்டுதான் இருக்கிறார். இவையெல்லாம் ஏதோ இறைவனின் சீற்றமோ கோபமோ என்பது அல்ல. இதைவிட மோசமாக மனித சமுதாயம் நடந்து கொள்ளும் பொழுதெல்லாம் அமைதியாகத்தானே இறைவன் இருக்கிறார்? எனவே இதை இயல்பான விஷயமாக எடுத்துக் கொண்டால் போதும். எதையும் கவனமாக கையாள மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 398

கேள்வி: ஞானசம்பந்தர் திருவெண்காட்டில் உள்ள மூன்று தீர்த்தங்களும் இறைவனின் மூன்று கண்கள் என்று சொல்லியிருக்கிறார் அது பற்றி:

இதுபோல் நல்விதமாய் அந்த தீர்த்தங்கள் உண்மையில் இறைவன் அருளுக்கு பாத்திரமான தீர்த்தங்கள்தான். ஆனால் தீர்த்தங்களை பரிசுத்தமாக நல்விதமாக பக்தியோடு பராமரித்தால் அவைகள் இறைவன் அருளைத் தரும். இல்லையென்றால் தோஷத்தைதான் தரும். இறைவனை வணங்க முடியாதவர்கள் நன்றாக கவனிக்க வேண்டும் ஆலயம் சென்று இறைவனை வணங்க வாய்ப்பில்லாதவர்கள் அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடினாலே இறைவன் அருள் கிட்டும். இப்படியெல்லாம் மனிதர்கள் சூழ்ச்சி செய்வார்கள் என்றுதான் மகான்கள் தீர்த்தம் என்ற ஒன்றை கண்டுபிடித்து வைத்தார்கள். அந்த தீர்த்தத்திலும் இன்னவன் இறங்கக்கூடாது இன்ன ஜாதியில் பிறந்தவன் இறங்கக் கூடாது என்று மனிதன் கண்டுபிடித்தான். எத்தனையோ போராடியும் அவன் திருந்தவில்லை என்றுதான் த்வஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தை வைத்தார்கள். கொடிமரத்தை தொட்டு வணங்கினால் போதுமென்று. அதிலும் பல கொடிமரங்கள் அங்கே பழுதுபட்டுவிட்டன. எனவே வெறும் இராஜ கோபுரத்தை பார்த்து பரிபூரண பக்தியோடு வணங்கினால்கூட பலன் உண்டு. ஆனால் அனாச்சாரம் இல்லாத ஆலயமும் நிர்வாகமும் அங்கு செல்லக்கூடிய மனிதர்களின் தூய பக்தியும்தான் இறைவன் அருளை பெற்றுத்தரும்.

இறைவனின் கருணையைக் கொண்டு விதவிதமான பிரார்த்தனைகளை செய்து கர்மவினைகளை நீக்கிக் கொள்கின்ற ஸ்தலத்திலே இதுபோல் இந்த இடத்திலே சந்திரனின் பரிபூரண பலன் கிட்டாதவர்கள் சென்று வணங்க வேண்டிய ஸ்தலம். குழந்தை பாக்கியம் வேண்டும் என விரும்பக் கூடியவர்கள் சென்று வணங்கக்கூடிய ஸ்தலங்களில் ஒன்று.

திருவெண்காடு தலத்தைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

இறைவனை எளிமையாக சென்று அடையும் வழி

தன்னிடம் சீடனாக புதிதாக வந்து சேர்ந்தவரிடம் குரு கேட்டார் ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?

புதிய சீடன் – இறைவனை அறிவதும் அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம் என்றான்.

குரு – சரி இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ? இல்லை ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன். என்றான் நல்லது உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?

சீடன் – நம்புகிறேன் இருப்பினும் கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.

குரு – எதனால் இந்த சந்தேகம் வருகிறது?

சீடன் – பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.

குரு – நல்லது எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே.

குரு – இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன் நீ ஆண்டவனைத் தெரிந்து கொள்ளவும் அடையவும் உண்மையிலேயே விரும்புகிறாயா?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய் அப்படித்தானே?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – அன்புள்ள சீடனே நீ இறைவனை அடைய ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்.

சீடன் – மிகவும் சந்தோஷம் குருவே இந்த வழிக்காகத்தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

குரு – ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது ஆனால் இறைவன் தான் உன்னை வந்து அடைவான்.

சீடன் – இது குழப்பமாக இருக்கிறதே.

குரு – ஒரு குழப்பமும் இல்லை ஒர் கதை சொல்கிறேன் கேள் ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல முடியவும் முடியாது. ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான் அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். நாட்டுக்கு நன்மை பயக்கும் பல நற்காரியங்களை செய்கின்றான் இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது. ராஜாவே அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார் பாராட்டுகிறார் பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?

சீடன் – நிச்சயமாக நடக்கும் குருவே.

குரு – இப்போது ராஜாதான் இறைவன். நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது சிறிது கடினம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார். எனவே இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான தானம் தர்மம் ஆகிய செயல்களில் ஈடுபடு இறைவனே உன்னை வந்து அடைவான் சரிதானே?

சீடன் – மிகவும் சரிதான் குருவே.

குரு – நல்லது சீடனே இனி ஆன்மிகம் உனக்கு கை கூடும் போய் வா என்றார்.

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்.

நம் எண்ணங்களும் உணர்வுகளும் சிந்தனைகளும் சொல்களும் செயல்களும் நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு நல்லது செய்யுமெனில் இறைவனை நாம் தேட வேண்டியதில்லை இறைவனே நம்மை தேடி வருவார்.