இறைவன் அருளால் யாங்கள் கூறவருவது யாதென்றால் சிவன் சொத்து குல நாசம் என்றால் விஷ்ணு சொத்தை எடுக்கலாமா? என்று ஒருவன் கேட்பான். உண்மையான விஷம் எது தெரியுமா? அவனுடைய நேர்மையான உழைப்பில் வராத அனைத்துமே விஷம்தான். இப்படி விஷமான பல விஷயங்களை மனிதன் தனக்குள்ளே சேர்த்து வைத்திருப்பதால்தான் இத்தனை பிரச்சினைகளும் துன்பங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. தான் சேர்த்தது மட்டுமல்லாமல் தன் வாரிசுகளுக்கும் அந்த விஷத்தை அவன் அனுப்பி வைக்கிறான். இந்த விஷம் நீங்க வேண்டுமென்றால் அந்த விஷத்தை கண்டத்தில் அடக்கியவனை சென்று பார். எப்பொழுது பார்க்க வேண்டும்? அந்த விஷம் எப்பொழுது அவன் கண்டத்தில் தங்கியதோ அந்த காலத்தில் பார் என்று பிரதோஷம் என்ற ஒரு காலத்தை குறிப்பிட்டு தினமும் அந்திப்பொழுதிலே சென்று (அதிகாலை பிரம்ம முகூர்த்தம்தான் பலருக்கு கயப்பாக இருக்கிறது) பார் என்றால் அதையும் பார்க்க மறுக்கிறான்.
இதுபோல் பிறரின் சொத்து எதுவாக இருந்தாலும் அதை எடுத்துக் கொள்வது என்பது தீங்கான விஷயம்தான் பாவமான விஷயம்தான். ஆனாலும் காலகாலம் மனிதன் அந்த தவறை செய்து கொண்டுதான் இருக்கிறான். இறைவனும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருப்பார். ஏன் இறைவன் இதை வேடிக்கை பார்க்கிறார்? இறைவன் ஏன் இதையெல்லாம் தடுக்கக்கூடாது? என்று கேட்டால் இறைவனை பொருத்தவரை மனித பாவங்கள் தன்னிடம் வராமல் இருந்தால் போதும் என்று எண்ணுகிறார். உதாரணமாக ஒருவனுக்கு கடுமையான பிணி வந்துவிட்டது. முடிந்தவரை போராடுகிறான். விதவிதமான மருந்துகளை ஏற்கிறான். மருத்துவனை பார்க்கிறான். நோய் நீங்கவில்லை. நோயால் அவஸ்தை வந்துகொண்டே இருக்கிறது. என்ன செய்வது? இறுதியாக இறைவனை நோக்கி வேண்டுகிறான். இறைவா இந்த நோயின் கடுமையை என்னால் தாங்கமுடியவில்லை. வலி உயிர் போகிறது இந்த நோயிலிருந்து என்னை காப்பாற்று. என் சொத்தில் பகுதியை உன் ஆலயத்திற்கு எழுதிவைக்கிறேன் என்று அவன் அறிந்த ஆன்மீகம் அவனுக்கு போதிக்கப்பட்ட வகையில் வேண்டுகிறான். ஏதோ அவன் வினைப்பயன் நோய் தீர்ந்து விடுகிறது. உடனடியாக அவன் சொத்தின் ஒரு பகுதியை ஆலயத்திற்கு எழுதி வைக்கிறான். அது சொத்து அல்ல அந்த நோய்தான் சொத்தாக உரு மாறி சென்றிருக்கிறது. இவையெல்லாம் யாருக்குத் தெரியும்? ஞானத்தன்மையுள்ள மனிதனுக்கு தெரியும். சராசரி மனிதனுக்கு இது புரியாது.
ஆலயத்தில் இறைவனிடம் பூஜை செய்தாலும் இறைவனைப் பற்றிய எந்தவிதமான ஞானமும் இல்லாமல் இருக்கக்கூடிய மனிதர்கள்தான் அதிகம். எனவே ஆலயத்தில் பூஜை செய்கின்ற மனிதனாகட்டும் ஊழியம் செய்கின்ற மனிதனாகட்டும் ஆலயத்தை நிர்வாகம் செய்கின்ற அதிகாரியாகட்டும் அனைவரும் சராசரி மனிதர்களே. என்ன எண்ணுகிறான்? இத்தனை சொத்தும் இந்த ஆலயத்திற்கு எதற்கு? என்று. ஏதாவது ஒரு குறுக்கு வழியை கையாண்டு அதனை எடுத்து அனைவரும் பங்குபோட்டுக் கொள்கிறார்கள். எதை பங்குபோட்டுக் கொள்கிறார்கள்? அந்த மனிதனுக்கு வந்த வியாதியை பங்குபோட்டுக் கொள்கிறார்கள். இப்பொழுது இந்த வியாதி எங்கு செல்லும்? இறைவன் தாங்கிக் கொள்வார் என்று எழுதி வைத்தால் இறைவனிடம் செல்லவே மனிதன் அனுமதிப்பதில்லை. அந்தப் பாவத்தை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று தானாக முன்வந்து வாங்கிக் கொள்கிறான். இறைவன் ஏனப்பா தடுக்கப்போகிறார்? தனக்கு வரவேண்டிய பாவத்தை தான் பெற்ற பிள்ளை வாங்கிக் கொள்கிறதே? அடடா இவன் அல்லவா என் பிள்ளை என்று மனம் மகிழ்ந்து அமைதியாக இருந்து விடுகிறார்.
ஆகையினால் இதுபோல் ஒவ்வொரு ஆலயம் மட்டுமல்ல பொதுவான விஷயங்களில் தவறு செய்கின்ற அனைவருமே பாவத்தை சேர்க்க வேண்டும் என பிறவி எடுத்தவர்கள். இவர்கள் உணர வேண்டும் என்றால் பல்வேறு மிருகங்களாக பிறந்து பல்வேறு இன்னல்களை அடைந்து பாவங்களை குறைத்துவிட்டு பிறகு மீண்டும் மனிதப் பிறவியாக பிறந்து முதலில் இருந்து வரவேண்டும். என்ன எடுத்து சொன்னாலும் கேட்கப் போவதில்லை. ஒரு சிலருக்கு இறைவன் அருள் இருந்தால் அந்திம காலத்தில் ஏதோ ஓரளவு திருந்துவார்கள். எனவே காலகாலம் இது நடந்தது நடந்து கொண்டிருக்கிறது இன்னமும் நடக்கும்.
அமிர்த கலசத்திற்காக கருடபகவான் நாகர்களுடன் சண்டையிடும் காட்சி கருட விஷ்ணு கெஞ்சனா பண்பாட்டு பூங்காவில் சிற்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவில் உள்ளது.
கேள்வி: ஒரு குடும்பத்தில் தலைப் பிள்ளைக்கு பாவங்களும் மற்ற பிள்ளைகளுக்கு சொத்தும் சேரும் என்று கூறப்படுவது பற்றி:
இதுபோல் கருத்தை யாங்கள் ஏற்கவில்லையப்பா. எல்லா குழந்தைகளுக்கும் அவர்கள் அவர்கள் செய்த பாவங்களும் அவர்கள் பிறந்த குடும்பத்தின் வம்சாவழி பாவங்களும் கட்டாயம் போய் சேரத்தான் செய்யும். ஒரு குடும்பத்திலே பிறக்கும் குழந்தையின் ஆத்மா பல பிறவிகளில் சேர்த்த பாவங்கள் அதிகமாகவும் புண்ணியம் குறைவாக இருப்பதாகக் கொள்வோம். அந்தக் குடும்பத்தின் பாவங்களும் அந்தக் குழந்தைக்கு சேரும் பொழுது அது அதிகமாக துன்பமடைகிறது. அதே குடும்பத்தில் வேறு சில காரணங்களுக்காக இன்னொரு குழந்தை பிறக்கிறது. அது பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம் அதிகமாகவும் பாவங்கள் குறைவாகவும் இருக்கின்ற தருணத்திலே அந்த பூர்வ ஜென்ம புண்ணியங்களின் விளைவாக அந்தக் குடும்பத்தின் சாபங்களும் தோஷங்களும் அந்தக் குழந்தையை குறைவாகவே தாக்குகிறது அவ்வளவே.
இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் கூறுவது யாதென்றால் நல்விதமாய் எல்லா ஆலயங்களுக்கும் எம் சேய்கள் சென்று இயன்ற வழிபாடுகள் செய்க. இல்லத்திலும் வழிபாடு செய்க. இதுபோல் குறிப்பிட்ட ஆலயத்தில் குறிப்பிட்ட பெருமை இருக்கிறது என்று மனிதன் எழுதி விட்டாலே அங்கு கூட்டம் அதிகமாகி விடுகிறது. யாங்கள் கூறிவிட்டால் இன்னும் அதிகமாக செல்வார்கள். எனவே எம்மைப் பொருத்தவரை எம் வழியில் வருகின்ற சேய்களுக்கு எல்லா ஆலயங்களும் ஒன்றுதான். அதுபோல் இன்னவன் குறிப்பிட்ட ஆலயமும் சிறப்புதான். குறிப்பாக கடுமையான மன உளைச்சலில் இருக்கின்ற பெண்கள் சென்று வழிபட்டு அவர்கள் கர்ம வினையை தணித்துக் கொள்ளலாம். அதற்காக ஆண்கள் செல்லக் கூடாது என்று பொருளல்ல. ஆண்களின் பாவகர்மாவும் குறைகின்ற இடம். குறிப்பாக இன்னவன் கேட்டதால் யாங்கள் கூறினோம். இதோடு மட்டுமல்லாமல் பாழ்பட்ட ஆலயங்களிலே இறைவன் அருள் இல்லையென்று தவறான கருத்து இருக்கிறது. ஆத்மார்த்தமான பூஜைகள் செய்து எந்த இடத்தில் அழைத்தாலும் இறைவன் அருள் உண்டு. எம் வழியில் வருகின்ற சேய்கள் பலரும் சென்று வணங்கக் கூடிய ஆலயத்தை நோக்கி செல்வதைவிட (அங்கும் செல்லட்டும்) பலரும் செல்லாத ஆலயமாக தேர்ந்து எடுத்து சென்று அந்த ஆலயத்தை நன்றாக பராமரிக்க உதவுவது ஏற்புடையது ஆகும்.
இதுபோல் வழிமுறையை தொடர்ந்து பின்பற்றி இறையருளை பெறுவதோடு தொடர்ந்து இறையருளை பெறுவதற்குண்டான சத்தியத்தை கடைபிடிப்பதும் தர்மத்தை கடைபிடிப்பதும் எத்தனை இன்னல்கள் துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் மன உறுதியோடு அதனை எதிர்கொண்டு தொடர்ந்து எம் வழியில் எம் பார்வையில் நல்ல சேய்களாக வாழ முயற்சி செய்ய இறைவன் அருளால் நல்லாசிகள் கூறுகிறோம். மீண்டும் இறைவன் அருளால் இதுபோல் பொது வாக்கினை கூறும் வரை அனைவரும் இறைவன் வழியிலே மனம் தடுமாறாது வர மீண்டும் மீண்டும் நல்லாசிகளைக் கூறுகிறோம். ஆசிகள் ஆசிகள் பூரண ஆசிகள்.
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நல்விதமாய் போகனை பணித்தால் அவன் ஒதுங்கி விடுகிறான் இவையெல்லாம் தன்னால் ஆகாது என்பதுபோல. இருப்பினும் சுவாசம் குறித்து கூறி சென்றிருக்கிறான். அதனை மீண்டும் மீண்டும் கேட்க பல்வேறு புதிய பொருள் சேய்களுக்கு புரியும். அது ஒருபுறமிருக்க சித்தன் வாக்கு என்றால் ஏதோ வாழ்வியல் குறித்து அறிந்து கொள்ளலாம். எங்கள் குடும்பத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வை தேடி வரலாம். எங்கள் பிள்ளைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை தேடலாம் என்று வந்தால் ஒன்றும் புரியவில்லை. ஏதோ கூறுகிறார்கள். வெறும் தத்துவார்த்த விளக்கமாக இருக்கிறது. எமக்கு இவையெல்லாம் தேவையில்லை. என்று எங்கள் வாழ்வியல் பிரச்சினைகள் தீரும்? என்று எங்கள் பொருளாதார நெருக்கடி தீரும்? என்று எங்களுக்கு ஏற்பட்டுள்ள வழக்கு தீரும்? என்று எங்கள் சேய்கள் எங்கள் பேச்சைக் கேட்பார்கள்? என்று எங்கள் வாழ்க்கையிலே மகிழ்ச்சி மலரும்? என்று எண்ணுகின்ற எண்ணங்கள் இங்குள்ள சேய்களுக்கு அதிகம் அதிகம். எனவேதான் இதுபோல் தத்துவம் தாண்டி பக்திமார்க்க வழியை கூறுகிறோம்.
முன்பே அன்றொரு உபதேச பணி புரிகின்ற அன்னவன் இல்லத்தில் கூறினோம். அதுபோல் பரிகாரத்தை தொடர்ந்தே இதுபோல் மீண்டும் கூறுகிறோம். பல்வேறு தடம் சென்று வழிபட முடியாத அரங்கத்தில் அனைத்தையும் தீர்த்துக் கொள்ளலாம். இருந்தாலும்கூட தூர தூர தேசம் சென்று தூர தூர ஸ்தலங்கள் செல்வதால் சில சூட்சும கர்மவினைகள் அலைச்சலாலும் மன உளைச்சலாலும் தன வியத்தாலும் தீரும் என்பதால்தான் சில ஸ்தலங்களை ஸ்தல பயணங்களை யாங்கள் அடிக்கடி சேய்களுக்கு அறிவுறுத்துகிறோம். இதனை நன்றாக புரிந்து கொள்ள நன்றாம். இதுபோல் ஆதிரை மீன் என்றாலும் அவன் அரவுக்கு சொந்தம் என்பதால் நன்றாக அரவின் (ராகு) பிடியில்தான் அனைவரும் இருக்கின்ற நேரமிது காலமிது. நன்றாய் சேய்கள் கடும் மன உளைச்சல் நீண்டகால துன்பம் தொடர்ந்து எத்தனை போராடினாலும் அறிவை பயன்படுத்தினாலும் துன்பத்திலிருந்து வர முடியவில்லை என எண்ணுகின்ற அனைத்து சேய்களுமே அரவு (நாக) தோஷ நிவர்த்தி ஆலயம் சென்று மனமார பிரார்த்தனை செய்ய நன்று. நன்றாய் அதனையும் தாண்டி கடும் பொருளாதார நெருக்கடி இருக்கிறது. எங்களின் நியாயமான தேவைகள்கூட நிறைவேறவில்லை என எண்ணக் கூடியவர்கள் தம் மனசாட்சியின்படி தனக்கு வந்துள்ள ருணம் (கடன்) நியாயம் என எண்ணக் கூடியவர்கள் தன்னுடைய அறிவைக் கொண்டு நியாயமாக அந்த ருணத்தை தீர்க்கலாம் என்ற வழிமுறையை பின்பற்றியும் தீர்க்க முடியாதவர்கள் நன்றாய் ஒவ்வொரு அரவு வேளையிலும் (ராகு காலத்திலும்) நன்றாக அன்னை துர்க்கையை மனமார பிரார்த்தனை செய்ய தொடர்ந்து நல்லதொரு மாற்றத்தை மெல்ல அறியலாம்.
கடும் தோஷம் உள்ளதால் குடும்பத்தில் ஒன்று மாற்றி ஒன்று பிரச்சினை வந்துகொண்டே இருக்கிறது அல்லது திடீர் திடீரென கடுமையான விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. வெறும் மருத்துவ வியமாகவே இருக்கிறது. எத்தனைதான் மாற்றி மாற்றி கவனமாக வாழ்ந்தாலும்கூட குடும்ப உறுப்பினர் யாராவது மருத்துவ செலவுக்கு ஆட்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கடும் பிணி அல்லது இன்ன பிணி என்று கண்டுபிடிக்க முடியாமல் போராட வேண்டி இருக்கிறது என வருந்துகின்ற சேய்கள் அதே அரவு காலத்திலே பைரவரை நோக்கி சென்று நல்விதமாய் பரிபூரணமாய் பிரார்த்தனை செய்ய நன்றுதான். இதுபோல் நன்றாய் முன்பே கூறியபடி சேய்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பிராயச்சித்தங்களையும் செய்து விட்டோம். முடிந்தவரை அனைத்து ஸ்தலங்களும் சென்றுவிட்டோம். ஆத்மார்த்தமான தர்மங்களையும் செய்துவிட்டோம். இன்னும் திருப்திகரமாய் மணம் கூடவில்லை என வேதனையோடு இருக்கக் கூடிய ஈன்றோர்கள் அதே அரவு காலத்திலே நல்விதமாய் அன்னையின் ஸ்தலம் நோக்கி சென்று அதிலும் தெற்கு நோக்கி பிரதான வாயில் இருக்கக் கூடிய ஆலயமாக தேர்ந்தெடுத்து கீழ்திசை வாசல் இருந்தாலும் தெற்கு வாயிலை மாந்தர்கள் பிரதானமாக பயன்படுத்தும் ஆலயமாக தேர்ந்தெடுத்து அரவு காலத்திலே அன்னையை பரிபூரணமாக தொடர்ந்து வணங்கிவர நன்றுதான். தடைபட்ட மணமும் இதுபோல் பரிகாரத்தால் தீருமப்பா.
நல்விதமாய் நன்றாய் மணம் கூடினாலும் கூடியவர் கூடி வாழவில்லையே? என்ற ஏக்கம் இருக்கின்ற அனைவருமே அரவு காலத்திலே நன்றாய் ஜென்ம மீன் (ஜென்ம நட்சத்திரம்) ஓடும் காலத்திலோ அல்லது சுக்கிர வாரத்திலோ சேர்ந்து வாழ்கின்ற தன்மை பெறத்தானே இளையோன் முருகப்பெருமானின் திருவடியை நோக்கி சென்று நன்றாக பரிபூரண வழிபாட்டை செய்ய நன்மை உண்டாம். நன்றாய் தேகம் மிகவும் பிணியால் வாடிக்கொண்டே இருக்கிறது. தேகத்திலே ஒன்றுபோனால் ஒன்று குறை வந்து கொண்டே இருக்கிறது என எண்ணக் கூடிய சேய்களும் முடவன் வாரம் அதே அரவு காலத்திலே நன்றாய் முக்கண்ணனாகிய சிவனை நோக்கி சென்று பரிபூரண வழிபாட்டை செய்யவும் நன்றாம். எதையும் எங்களால் செய்ய இயலவில்லையே? இருந்தாலும் அனைத்து பிரச்சினைகளும் தீரவேண்டும் என எண்ணக் கூடியவர்கள் நன்றாய் மூத்தோனை வணங்கி ஒவ்வொரு தினமும் அரவு காலத்திலே வாய்ப்புள்ள ஆலயம் சென்று அந்தந்த மனிதனின் அகவை எனப்படும் வயதிற்கு ஏற்ப நவகிரகங்களை வலம் வந்து வலம் வந்து கொடிமரத்தின் கீழே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து நன்றாய் பிரார்த்தனை செய்து விட்டு வர படிப்படியாய் கர்மவினைகள் குறையும்.
நாங்கள் தனித்தனி சேய்களுக்கு தனித்தனி பரிகாரங்களை எத்தனையோ முறை கூறியிருக்கிறோம். எதையும் செய்ய முடியவில்லை அல்லது முயற்சி செய்தாலும் தடை வருகிறது என எண்ணக்கூடிய அனைவருமே இதுபோல் கூறிய இந்த ஆகமத்தையோ அல்லது அனைத்தையும் செய்ய முடியாதவர்கள் நவகிரக வழிபாட்டையோ தொடர்ந்து செய்ய நன்மை உண்டு. இதுபோல் எத்தனையோ வழிபாடுகளை செய்து விட்டோம். பெரிய பெரிய பூஜைகளை செய்துவிட்டோம் என்றெல்லாம் மனம் வெதும்பி இருக்கக்கூடிய சேய்கள் கட்டாயம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பாவ வினைகளின் அளவு மலைபோல் இருக்க செய்கின்ற பூஜையோ தர்மமோ கடுகுபோல் இருந்தால் பலன் கிட்டாது. எனவே தொடர்ந்து மனம் தளரா பிரார்த்தனையையும் புண்ணியத்தையும் சேர்த்துக் கொண்டே இருத்தல் அவசியமாகும். இதுபோல் வாய்ப்பு உள்ளவர்கள் கட்டாயம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இல்லத்திலோ அல்லது வாய்ப்புள்ள ஆலயத்திலோ அனைத்து யாகங்களையும் செய்ய மேலும் தேக நலத்தோடு பாவ வினைகள் குறைந்து முன்னேற்றம் பெற வாய்ப்புண்டு.
இதோ இங்கு கூடியுள்ள சேய்களிலே மனக்குறை தீராத குறை அச்சம் எதை எண்ணியாவது குழப்பம் வேதனை இருக்கக் கூடிய அனைவருமே இதுபோல் அரவு காலத்திலே நன்றாய் சிகி எனப்படும் கேது பகவானுக்கு பரிபூரண பிரார்த்தனையும் வழிபாடும் செய்து கேதுவின் திருவடியை வணங்குவதோடு விநாயகப் பெருமானின் திருவடியையும் வணங்கி நன்றாக பிரார்த்தனை செய்ய கடும் மன உளைச்சலும் மன வேதனையும் இனம் தெரியாத அச்சமும் விலகும் என்று இத்தருணம் கூறுகிறோம். இதுபோல் கூறிய தத்துவார்த்த விளக்கத்தை நன்றாக புரிந்து கொள்ளவும். அது புரியாத சேய்கள் கூறிய வழிபாடுகளை நன்றாக ஆத்மார்த்தமாக பரிகாரங்களை செய்வதோடு முன்னரே கூறியபடி நவகிரக தோஷம் விலக செய்யக் கூடிய தர்ம காரியங்களையும் கேட்டறிந்து செய்ய நன்றான சூழல் வாழ்க்கையில் ஏற்படுவதோடு பாவ வினைகள் படிப்படியாய் குறையும் என்று கூறி சேய்கள் அனைவருக்கும் இறைவன் அருளால் பரிபூரண நல்லாசிகளை கூறுகிறோம். ஆசிகள் ஆசிகள் ஆசிகள்.
இயம்புகிறோம் பொதுவாய் இதுபோல் சுவடி பூஜை பின் வாக்கை ஓதுகின்ற எண்ணம் எமக்கில்லை என்றாலும் சேய்களின் ஆர்வத்திற்காக இதுபோல் இறைவனின் கட்டளைக்காக யாங்கள் சில வாக்குகளை சில துளிகள் மட்டும் ஓத இருக்கிறோம். இருந்தாலும் கூட எம்மை குறித்து ஏதும் கூறவில்லையே? எமது நாமத்தை அழைத்து ஏதும் கூறவில்லையே? எனது மனக்குறையை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அதனை குறிப்பிட்டு எதனையும் கூறவில்லையே? என்றெல்லாம் எமது சேய்கள் சிந்தனையில் வாட்டத்தை வழியவிடாமல் இதுபோல் யாங்கள் கூறுவதை சரியாக புரிந்து கொண்டால் அது இங்குள்ள அனைவருக்குமே பொருந்தும் என்பதை இத்தருணம் இறைவனருளால் யாங்கள் கூறுகிறோம்.
நல்விதமாய் இதுபோல் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு கணமும் இறைவன் அருளால் நலமாய் இருக்க வேண்டும் என எண்ணும் சேய்கள் மனதிலே கள்ளமோ கபடமோ சூதோ சூழ்ச்சியோ இல்லாமல் வாழ முயற்சி எடுத்தல் அவசியமாகும். சூதும் வாதும் வஞ்சனை செய்யும் என்பது போல இதுபோல் எதிர்மறை எண்ணங்களும் தீய எண்ணங்களும் உள்ளத்தில் வைத்துக்கொண்டு எத்தனைதான் இறைவழியிலே வந்தாலும் எத்தனைதான் இறைவனின் திருநாமத்தை ஸ்லோகங்களை கூறினாலும் கட்டாயம் இறைவன் அருள் பரிபூரணமாக கிட்டுவது கடினம் கடினம் கடினம். எனவே இறைவன் அருளை பெற வேண்டும் இறைவனருளால் கூடுமானவரை துன்பமில்லாமல் வாழ வேண்டும் அல்லது துன்பம் வந்தாலும் அதனை தாங்குகின்ற திறன் வேண்டும் என எண்ணுகின்ற சேய்கள் இக்கணம் முதல் நல்விதமாய் சூதையும் சூழ்ச்சியையும் விட்டுவிட நன்மையாம்.
இதுபோல் மறந்தும் பிறரின் மனதை புண்படுத்துகின்ற செயலை விட்டுவிடுதல் மேலும் நலமாம். இதுபோல் யாங்கள் ஏன் இவ்வாறு கூறுகிறோம்? என்றால் இறைவன் வழியில் வந்துகொண்டுதான் இருக்கிறோம். சித்தர்களின் வாக்குகளை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இருந்தும் பெரிதாக வாழ்விலே முன்னேற்றம் இல்லை ஏற்றமில்லை துன்பங்கள் குறையவில்லை என எண்ணியெண்ணி வருந்துகின்ற சேய்களுக்கு தங்கள் குறைகள் பெரிதும் தெரிவதில்லை. நான் சரியாகத்தான் இருக்கிறேன், சிந்திக்கிறேன் பேசுகிறேன். என்னிடம் குறையில்லை என்று ஒவ்வொரு மனிதனும் எண்ணுகிறான். ஆனால் அப்படியல்ல. தனக்குள்ளே தானே தீவிரமாய் சிந்தித்துப் பார்த்து தன் குறையை தானாக முன்வந்து பிறர் முன் ஒப்புவித்து அதனை நீக்கிக் கொள்ளுதலே இறையருளை பெறுவதற்கு உண்டான அடிப்படை குணமாகும்.
இவற்றை எமது சேய்கள் தொடர்ந்து கடைபிடித்தால் எமது வாக்கின் தன்மையும் வாக்கின் கூர்மையும் மெல்ல மெல்ல புரியும். இல்லையென்றால் வெறும் போலித்தனமான ஆன்மீக பயணமாகத்தான் வாழ்வு அமையுமே தவிர மெய்யான மெய்யான மெய்யிலும் மெய்யான ஆன்மீகம் புரிபடாமல் சென்றுவிடும். எனவே தெள்ளத் தெளிவான திடமான உறுதியான சிந்தனை உள்ளார்ந்த நேர்மையான சிந்தனை சத்திய நெறி தொண்டு பரிபூரண சரணாகதி பக்தி எத்தனைமுறை எம்முன் அமர்ந்தாலும் அமர்கின்ற சேய்களுக்கு இவையெல்லாம் வரும் வரையில் பரிபூரண இறைவனருள் கிட்டுவது கடினம் என்பதை மீண்டும் யாங்கள் இறைவன் அருளைக் கொண்டு இயம்பிக்கொண்டே இருக்கிறோம். இதுபோல் நல்விதமாய் மனக்கலக்கம் தேகநலம் சார்ந்து தேக நலத்திலே மிகவும் வேதனையோடு இருக்கின்ற சேய்களுக்கு கூறுவது அருகே உள்ள அரங்கத் தடத்திலே தன்வந்திரியின் அருளை பெற தன்வந்திரியின் பரிபூரண ஆசியை பெற அதோடு சிகிச்சையும் சேர இதுபோல் மனதை வாட்டும் நோயும் இங்குள்ள சேய்களுக்கு மெல்ல மெல்ல மாறும். எனவே அச்சமின்றி நல்விதமாய் எக்காலமும் சென்று தன்வந்திரியை வணங்க நன்று. அதிலும் அந்தந்த சேய்களின் ஜென்ம நட்சத்திரம் அறிந்து அன்று சென்று வணங்க பரிபூரணம் பரிபூரணம் தேக நலம் ஆகுமப்பா.
இதோடு யாங்கள் கூறவருவது பொதுவாய் தேக நலம் நன்றாய் இருக்க செய்கின்ற முயற்சிகள் ஏற்கின்ற உணவுகள் செய்கின்ற உடற்பயிற்சிகளோடு நல்விதமாய் மஹா மிருத்யுஞ்சய மந்திரத்தை அன்றாடம் உருவேற்றுதலும் இதுபோல் திருநீற்றுப் பதிகத்தை உருவேற்றுதலும் திருநீலகண்ட பதிகத்தை உருவேற்றுதலும் நல்விதமாய் பழனியெம்பெருமான் திருவடியை வணங்கி போகனையும் வணங்கி திருநீற்று பிரசாதத்தை ஏற்றுக்கொள்வதும் நன்றாம். இதுபோல் தேக நலம் தாண்டி அடுத்ததாக உள்ள பிரச்சினை எதுவாக இருப்பினும் பொருளாதாரம் சார்ந்தோ சேய்களின் வாழ்வு நிலை குறித்தோ மண வாழ்க்கை குறித்தோ ஏதாக இருந்தாலும் நல்விதமாய் அரங்கனையே கூறுகிறோம். நல்விதமாய் சுக்கிர வாரம் சென்று அரங்கனை சேவிக்க நல்விதமாய் இதுபோல் கூறிய உபய பிரச்சினையும் நல்விதமாய் நல்விதமாய் இதுபோல் தருணத்திலே வாக்கினை கேட்கின்ற சேய்களுக்கு பலிதமாகும் என்பதனால் எதிர்வரும் சுக்கிரவாரம் தொட்டு தொடர்ந்து சென்று நல்விதமாய் அரங்கனை சேவிக்க தடைபட்ட திருமண முயற்சி நல்விதமாய் ஆவதோடு நல்விதமாய் அரங்கனை சுக்கிர வாரம் சென்று வணங்க இயலவில்லையே? என்று அன்றுதான் செல்லவேண்டும்ஙஎன்று வைராக்யம் கொண்டு செல்வது நன்றுதான் என்றாலும் அன்று செல்லவில்லை என்றால் வேறொரு தினத்தில் தாராளமாய் சென்று சேவிக்கலாம். குற்றமேதுமில்லை என்று சேய்கள் உணர நன்றாகும்.
இதுபோல் நல்விதமாய் இறை வழியிலே வருகின்றேன் இறை தொண்டினை செய்கின்றேன் இறைவனை தேடித்தேடி அலைகின்றேன் அப்படியிருந்தும் மண வாழ்க்கை திருப்தியில்லை. மண வாழ்விலே பல்வேறு பிரச்சினைகள் குழப்பங்கள் வழக்கு மன்றம் செல்ல வேண்டியிருக்கிறதே? என்று வருந்தும் எம் வழி வருகின்ற சேய்கள் நல்விதமாய் கூறுகிறோம். இதுபோல் இத்தருணத்தில் குருவின் ஹோரையிலே கேட்கின்ற வாக்கு தன்னிலே பிரச்சினைக்கும் அரங்கனை நாடி சென்று வணங்கத்தான் நன்று. இதுபோல் ரோகிணி மீனிலே அரங்கனும் வாக்கை கேட்டு அருள் புரிகிறேன் என்று புன்னகை பூத்துக்கொண்டு இருக்கிறார் என்பதனால் அரங்கனை மீண்டும் மீண்டும் இழுக்கின்றேன் இத்தருணம் இதுபோல் சேய்களின் பிரச்சினைக்கு. நல்விதமாய் சேய்களின் எதிர்கால திட்டத்திற்கு வித்தைக்கு எதிர்காலம் என்னவாக இருக்கும்? என்று அஞ்சுகின்ற நல்விதமான ஈன்றோருக்கும் சேய்களுக்கும் கூட கூறுகிறோம் நல்விதமாய் புந்தி வாரம் சென்று அரங்கனை சேவிக்க நன்றுதான்.
இன்று பிரச்சினைகள் பல பலவிதமான சேய்களின் மனக்குறைகள் பல தீர்வு ஒன்று என்று கூறியிருக்கிறோம். ஆகையால் ஏனைய ஆலயங்கள் செல்ல வேண்டாம் ஆனைக்கா தடம் இங்கிருக்க அரங்கனை கூறுகிறாரே சித்தர்? என்று எண்ணிடவும் வேண்டாம். இதுபோல் ஒரு குறிப்புக்காக கூறுகிறோம். சேய்களின் கல்வியும் வெற்றி முயற்சிக்கும் கூட நல்விதமாய் அரங்கனின் திருவடியை சென்று சேவிக்க நன்றாம். இதுபோல் நல்விதமாய் இருக்கின்ற இல்லம் திருப்தியில்லை இல்லம் தாண்டி செல்ல வேண்டும் அதற்கு யாது செய்வது? என்றால் அதற்கும் அரங்கன் திருவடியை சேவிக்க நன்றுதான். நல்விதமாய் இறைவன் அருளால் திருமணம் நெருங்கி வருகிறது. நல்விதமாய் முடிய வேண்டும் என்று எண்ணுகின்ற சேய்களுக்கும் கூறுகிறோம். நல்விதமாய் அரங்கனின் திருவடியை சேவிக்க நன்றுதானே. இதுபோல் நல்விதமாய் திருமணம் ஆகிவிட்டது. பந்தமும் நன்றாக தொடர்கிறது. வாரிசுதான் வரவில்லை? என்று ஏங்குகின்ற தம்பதியருக்கும் கூறுகிறோம். நல்விதமாய் அனலோன் வாரம் சென்று நல்விதமாய் அரங்கனை சேவிக்க நன்றுதானே.
இதுபோல் நல்விதமாய் விதவிதமான பிரச்சினைகள் நெருக்கடியை தந்துகொண்டே இருக்கிறது. ஒரே குடும்பத்தில் விதவிதமான மனிதர்கள். யாரோடும் யாரும் ஒத்துப்போவதில்லை. மனக்குழப்பம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. யாது செய்வது? என்று தெரியவில்லை. ஒத்தும் போக முடியவில்லை விலகியும் செல்ல முடியவில்லை என்று ஏங்குகின்ற சேய்களுக்கும் கூறுகிறோம். நன்றாக முடவன் வாரம் அதுபோல் அரங்கனை சென்று சேவிக்க நன்றுதானே. எனவே தான் படைத்து காக்கின்ற உயிர்களுக்கு கர்மவினையால் பிரச்சினைகள் வந்தாலும் தானே அதற்கு தீர்வாக நின்று அரங்கன் நல்லாசி தர காத்திருக்க ஆனைக்கா அன்னையையும் ஐயனையும் வணங்கி இதுபோல் கர்மமும் பாவமும் அதிகமாக இதுபோல் சமுதாயத்தில் சேர்ந்ததின் எதிரொலிதான் அதுபோல் ஜம்புகேசுவரரின் அருகே நீரின்றி போனதப்பா. எனவேதான் புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள யாம் அடிக்கடி இயம்பிக் கொண்டே இருக்கிறோம். எனவே குறைந்தபட்சம் நல்விதமாய் பலரும் இந்த உலகிலே வாழ பலர் வாழ்வதற்காவது சிலராவது தொண்டு செய்வது அவசியம். எனவேதான் யாரெல்லாம் எம்மை நம்புகிறார்களோ யாரெல்லாம் இவ்வோலையில் பேசுவது சித்தர்தான் என்று மனதார எண்ணி இதுபோல் இவ்வோலையை பின்பற்றி வருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் மீண்டும் மீண்டும் கூறுவது சராசரி உலக வாழ்வை பார்த்து மயங்க வேண்டாம். ஏமாற வேண்டாம். மாயை பற்றிக்கொண்டுதான் இருக்கும். அதனை விட்டுவிட்டு யாங்கள் என்ன கூறுகிறோமோ அதனை தொடர்ந்து மனதில் பிடித்துக்கொண்டு அதை எதிர்த்து எந்த மூடன் விமர்சனம் செய்தாலும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு அந்த மூடன் மீதும் சினம் கொண்டிடாமல் அமைதியாக எமது வழியை பின்பற்ற நன்றாம்.
ஏனென்றால் ஒருசிலராவது புண்ணியத்தை சேர்த்தால்தான் இந்த பரந்த உலகம் மகான்களின் பிரார்த்தனையால் மட்டுமல்ல மகான்கள் வழியில் வருகின்ற சேய்களின் புண்ணியத்தாலும் நன்றாக இருக்கும். இல்லையென்றால் தொடர்ந்து பரந்துபட்ட பாரத மண்ணிலே அடுத்தடுத்து நவகிரகங்களின் இயக்கத்தினால் தொடர்ந்து மனதிற்கு விரும்பத்தகாத சம்பவங்கள்தான் நடக்க இருக்கின்றன என்பதால் தொடர்ந்து கூட்டு பிரார்த்தனை தொடர்ந்து சுயநலமற்ற தொண்டு சரணாகதி பக்தியையும் தர்மத்தையும் சத்தியத்தையும் அதிகரித்து அதிகரித்து எமது சேய்கள் பரந்த இந்த உலகம் இந்த பிரபஞ்சம் நன்றாய் வாழவேண்டும் என பிரார்த்தனை செய்ய தொண்டு செய்ய தர்மம் செய்ய சத்திய வழியில் நிற்க இறைவன் அருளால் நல்லாசிகளை கூறுகிறோம். இதுபோல் நல்விதமாய் தொடர்ந்து மனக்கவலை இருந்தாலும் மன சோர்வு இருந்தாலும் எத்தனைதான் துன்பங்கள் வந்தாலும் யாங்கள் கூறுகின்ற நல்வழிமுறையை விட்டுவிடாது வருகின்ற சேய்களுக்குதான் இறைவன் அருள் தொடரும் என்பதை கூறுகிறோம். நல்விதமாய் இதுபோல் ஓலை இருக்கின்ற இல்லத்தின் தலைவனுக்கும் அதுபோல் தாரத்திற்கும் சேயவளுக்கும் சேயவனுக்கும் நல்விதமான நல்லாசியை கூறி தொடர்ந்து இறைவன் அருளை பெறுகின்ற அவர்களது முயற்சி வெற்றி பெற அத்தனை சேய்களின் வாழ்வும் நன்றாக முன்னேற இறைவன் அருளாலே நல்விதமாய் மீண்டும் நல்லாசிகளை கூறுகிறோம் ஆசிகள் ஆசிகள் ஆசிகள்.
தீர்க சுமங்கலி பவா என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
ஒன்று திருமணத்தில் 2 வது 60 வயது சஷ்டியப்த பூர்த்தியில் 3 வது 70 வயது பீமரத சாந்தியில் 4 வது 80 வயது சதாபிஷேகத்தில் 5 வது 96 வயது கனகாபிஷேகத்தில்
60 வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் தனது என்ற பற்றை துறக்கும் போது செய்வது சஷ்டியப்த பூர்த்தி திருமணம் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.
70 வது வயதில் தன்னுடைய மகன் மகள் சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும். காமத்தை (ஆசைகள்) முற்றிலும் துறந்த நிலையே பீம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.
80 வது வயதில் ஒவ்வொரு உயிரிலும் இருக்கும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். மனிதனுக்கு ஜாதி மதம் இன பேதம் எதுவும் இல்லை. அனைத்திலும் அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார்.
96 வது வயதில் இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி ஆசி பெறுகிறார்கள்.
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் நல்விதமாய் இதுபோல் சேய்கள் அனைவரும் அனைத்து உயிர்களும் நலமாய் வாழ இறைவனருளைக் கொண்டு நாங்கள் பிரார்த்தனையை செய்கின்றோம் நாள்நாளும். இதுபோல் எல்லா உயிரும் சிறப்பாய் வாழ இதுபோல் காலகாலம் மகான்கள் செய்கின்ற பிரார்த்தனைகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் எல்லா உயிர்களும் சிறப்பாய் வாழ வேண்டுமே? ஆனால் நடைமுறையில் அப்படியில்லையே? என்ற ஐயம் எழும். அது ஒருபுறமிருக்க இக்கணம் இத்தருணம் ரோகிணி மீன் ஓடும் காலம் நல்விதமாய் அன்னையின் அருள் தடத்திலே கூடி இருக்கின்ற சேய்கள் அனைவருக்கும் இறைவனின் அருளைக்கொண்டு யாம் நல்லாசிகளை கூறுகிறோம்.
ஊருக்கா பேருக்கா பூஜை? இல்லை. உயிருக்கா உயிரில் உள்ள இறைக்கா பூஜை? இல்லை. உள்ளத்திற்கா உள்ளத்தில் உள்ள தொடரும் எண்ணத்திற்கா பூஜை? இதுபோல் எண்ணும் பொழுது நல்விதமாய் தாய்க்கா தந்தைக்கா? வாய்க்கா வாய்ப்புகளெல்லாம் மகனுக்கா வாய்க்கும்? வாய்த்தாலும் நல்விதமாய் மகளுக்கா வாய்க்கும்? அல்லது மகனுக்கா வாய்க்கும்? மகனுக்கோ மகளுக்கோ வாய்த்தாலும் அதுபோல் மகனுக்கும் மகளுக்கும் பிறக்கும் சேய்க்கா வாய்க்கும்? நல்விதமான வாய்ப்பை நல்விதமாய் தொடர்ந்து தாய்க்கா தந்தைக்கா என்றில்லாமல் இங்குள்ள அனைத்து சேய்க்கும் நல்வாய்ப்பு வாய்க்க நல்விதமாய் ஆனைக்கா அன்னை அருள் புரியட்டும் என்று அன்று பூனைக்கும் அருள் புரிந்து பின்னர் சிற்றுயிருக்கும் அருள் புரிந்த ஈசன் இந்த சிறு கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் இந்த ஆத்மாவிற்கும் அருள் புரிய நல்விதமாய் பரம்பொருள் அருளட்டும் அருளட்டும் என்று இந்த ஆனைக்கா தடத்திலே நல்விதமாய் ஆனைக்கா அன்னையின் திருவடி தொட்டு ஆனைக்கா அன்னையின் அன்பினை பெற சேய்கள் தொடரும் தொடரும். எதை தொடரும் தொடரும்? பிறவி தொடரும் என்றாலும் பிறவி தொடரா தொடர தொண்டினை தொடர உயிருக்கு அருளை தேடும் வழிமுறையை யாங்கள் கூறுகின்ற வழிமுறையை தொடர்ந்து பின்பற்ற நல்விதமாய் உயிருக்கா உதவும் இந்த அன்னைக்கா நிழலில் என்றென்றும் இச்சேய்கள் இளைப்பாற நல்விதமாய் நல்லாசியினை மீண்டும் அன்னையின் அடிதொட்டு கூறுகிறோம்.
நல்விதமாய் இவ்வாறு கூறினால் எவ்வாறு புரிவது தொண்டினை? இவ்வாறு கூறினால் எவ்வாறு புரிந்து கொள்வது வாழ்வினை? என்றெல்லாம் சிந்தையின் ஓடலாம் சேய்களுக்கு. யாங்கள் நாள்நாளும் சந்திக்கின்ற பிரச்சினையை சித்தர்கள் தொடர்பால் தீர்த்துக் கொள்ளலாம் என்று வந்தால் பிரச்சினையே எங்களை கொல்லலாம் என்றுதானே துரத்துகிறது. தீர்த்துக் கொள்ளலாமா? அல்லது பிரச்சினை எங்களைக் கொல்லலாமா? என்றெல்லாம் சிந்தனை சேய்களுக்கு ஓடுகின்ற இத்தருணத்திலே எப்பிரச்சினையும் தொடராது இருக்க எம்மை நம்புகின்ற சேய்கள் ஓலையிலே யாங்கள் ஓதுகின்ற வாக்கினை சரியாக புரிந்து கொள்கின்ற சேய்கள் நன்றாய் மனதை திடமாக்கி நுட்பமாக்கி உயர்வாக்கி சிந்தனையை கூர்மையாக்கி என்றென்றும் சராசரி மனிதர்களின் செயலைப் பார்த்து சங்கடம் கொள்ளாது என்றென்றும் எங்களது வாக்கினை சற்றே கூர்ந்து கவனித்து சிந்தித்து சிந்தித்து யாங்கள் என்ன கூற வருகிறோம்? எப்படி கூறுகிறோம்? எந்த நிலையில் கூறுகிறோம்? எதற்காக கூறுகிறோம்? எந்த வழிமுறையை கூறுகிறோம்? யாருக்கு கூறுகிறோம்? எந்தெந்த சூழலில் எவ்வாறெல்லாம் கூறுகிறோம்? என்று எண்ணி சரியாக புரிந்துகொள்ள எமது வாக்கின் தன்மையை மனதில் சரியாக பதிய வைக்க வாழ்வில் சங்கடங்கள் இல்லாமல் இறைநோக்கி செல்லலாம். ஆனால் அதுபோல் செல்வதற்கு மனம் வலிமை பெறவேண்டும்.
இதுபோல் பல்வேறு பிறவிகளில் சேர்த்த பாவ சுமைகள் கட்டாயம் வாட்டும். எம் தொடர்பு கிடைத்து விட்டாலேயே எல்லா துன்பங்களும் விலகிவிட வேண்டும் என்று சேய்கள் எண்ணுவது ஒருவகையில் சரி என்றாலும் அதுபோல் நேர்மையான பாதைக்கு அது சரியல்ல என்பதை புரிந்து கொண்டு துன்பங்கள் தொடர்ந்தாலும் இறைவனின் அருளால் அந்த துன்பத்தை தாங்குகின்ற வல்லமையை எமது சேய்கள் பெற வேண்டும் என்று கூறி இதோப்ல நல்லாசியை எம்முன் அமர்ந்த சேய்களுக்கும் அமர முயற்சி செய்து வர முடியாமல் சென்ற சேய்களுக்கும் இறைவன் அருளாலே நல்லாசிகளை இயம்புகிறோம்.
கண் விழித்தல் என்றால் உறங்காமல் இருத்தல் என்று மட்டும் பொருளல்ல. உறங்காமல் இருத்தல் என்றால் என்ன பொருள் தெரியுமா? அகக்கண் விழித்தல். உள்ளே அகம் விழித்திருக்க வேண்டும். தனித்திரு விழித்திரு பசித்திரு பசித்திரு என்றால் உணவு உண்ணாமல் இருப்பது மட்டுமல்ல. ஆன்மீகத்தில் சென்று ஞான நிலையை அந்த உச்சாணி நிலையை அடைய வேண்டும் என்ற பசியைதான் குறிக்கிறது. எனவே விழித்திருத்தல் என்றால் விழிப்புணர்வோடு இருத்தல். மாயையில் சிக்காமல் இருத்தல். பாசங்களில் பற்றுகளில் மாட்டிக் கொள்ளாமல் இருத்தல். ஆசாபாசங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருத்தல். இதை தவிர வெறும் கண்ணை மூடி சயனத்திலே படுத்து உறங்காமல் இருந்தால் மட்டும் இறையருள் கிட்டிவிடாது. எனவே விழித்தல் என்றால் அனைத்திலும் எச்சரிக்கையாக எந்த மாயையிலும் சிக்கிவிடாமல் இருப்பதற்குண்டான ஒரு பயிற்சி ஒரு முயற்சிதான் இதுபோன்ற பூஜைகள். எனவே அந்த அளவில் இதனை தத்துவார்த்த விளக்கமாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆலயங்கள் சென்றும் வணங்கலாம் இல்லத்தில் இருந்தும் வணங்கலாம். பரிபூரணமாக விரதமிருந்து சிவ நாமத்தை ஜபிக்கலாம். அது சாத்தியமில்லாதவர்கள் குறைந்த அளவு அன்னத்தை சாரமில்லாமல் சுவையில்லாமல் ஏற்பது சிறப்பு. திரவ வடிவ அன்னத்தை ஏற்பது சிறப்பு. அவ்வாறு இல்லத்தில் இருந்து சிவ நாமத்தையும் தேவார திருவாசகத்தையும் அமைதியாக கூறலாம். ஏதாவது ஒரு ஆலயம் சென்று அனைத்து பூஜைகளிலும் கலந்து கொள்ளலாம் அல்லது ஒரு கால பூஜையில் கலந்து கொள்ளலாம். பொருள் வசதி படைத்தவர்கள் ஆலயம் சென்று பூஜைகளுக்கு உண்டான உதவியை செய்யலாம். அனைத்தையும் விட எதுவுமே செய்ய முடியாதவர்கள் அமைதியாக பஞ்சாக்ஷரத்தை மானசீகமாக ஜபித்துக் கொண்டே இருக்கலாம்.