சோழ மற்றும் பாண்டிய மன்னர்களிடம் இறைவன் புரிந்த லீலை

பாண்டிய மாமன்னன் ராஜேந்திரன் சிவபெருமான் மீது மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தான். பட்டத்தரசி சுவர்ண மீனாட்சி எத்தனையோ முறை ஆலய தரிசனத்திற்கு அழைத்துப் பார்த்தாள். அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டான். தேவி நீ சென்று சொக்கநாதனை வணங்கி வா நான் தடுக்கவில்லை. ஆலயத்திற்கு அளிக்க வேண்டிய எந்த உதவிகளையும் நான் நிறுத்தவில்லை. ஆனால் சொக்கேசனை வணங்கும்படி மட்டும் என்னை வற்புறுத்தாதே என்று உறுதிபடக் கூறிவிட்டான். அப்படி என்னதான் சிவன் மீது உங்களுக்குக் கோபம்? என்று விடாப்பிடியாக வினவினாள் பாண்டிமாதேவி. ராஜேந்திர பாண்டியனின் தந்தை குலபூஷண பாண்டியன் காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

சோழர்கள் அப்போது காஞ்சியிலிருந்து ஆண்டு கொண்டிருந்தனர். சோழன் சிவநேசனுக்கு மதுரை சென்று ஆலவாய் அண்ணலைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல். ஆனால் பாண்டியனோடு பகை. எப்படி அங்கு செல்வது? சிவநேசச் சோழன் உறையூர் வந்திருந்தான். எப்படியும் ஒரு நடை மதுரை சென்று மகேசனைத் தரிசிப்பது என்று முடிவும் செய்து விட்டான். மாறுவேடம் பூண்டு ஒரு சாதாரண யாத்ரீகன் போன்று மதுரைக்குப் புறப்பட்டான். வைகைக் கரைக்கு வந்து சேர்ந்த போது இருள் பரவத் தொடங்கியிருந்தது. வைகையில் வெள்ளமும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க வழி புரியாமல் மனம் கலங்கி நின்றான் சோழன்.

பொற்றாமரை குளத்தில் நீராடி இறைவனை தரிசிக்க விருப்பம் கொண்டு வந்த எனக்கு இது என்ன சோதனை? பாண்டியன் கண்டால் துணையின்றி வந்த என்னை சிறைபிடிப்பானே. வெள்ளம் வடியும் வரை பொறுமையாக காத்திருந்து செல்லவும் வழியில்லையே எனப் பலவாறு எண்ணி வேதனையுற்றான். அப்போது சொக்கநாதர் சித்தர் வடிவில் வந்து மீனாட்சியைப் பார்க்கப் போகிறேன் வருகிறாயா அப்பா எனக் கேட்டார். சோழன் ஆச்சர்யம் அடைந்தான். சித்தர் வைகையை பார்க்க வைகையில் வெள்ளம் குறைந்தது. சோழன் பெருத்த ஆச்சர்யத்துடன் சித்தரைப் பின் தொடர்ந்து சென்றான். கோவில் அருகில் வரும்போது நடு இரவாகிவிட்டது ஆகையால் ஆலயம் அர்த்தஜாம பூஜை முடிந்து பூட்டப்பட்டு விட்டது. இதனால் மீண்டும் சோழன் வருத்தத்துடன் நின்றான். அப்போது சித்தர் வடிவில் இருந்த சொக்கநாதர் ஆலயத்தின் காவல்காரன் எனக்கு மிகவும் வேண்டியவன். நான் போய் அவனிடமிருந்து சாவி வாங்கி வருகிறேன். நீங்கள் சொக்கநாதரை தரிசிப்பீர்கள் கவலை வேண்டாம் என்று சொல்லி திறவுகோலை வாங்கி வந்து ஆலயக் கதவுகளைத் திறந்து விட்டான். பொற்றாமரையில் நீராடி அம்மனையும் சொக்கநாதரையும் கண்குளிர தரிசித்து வழிபட்டு போற்றிப் பாமாலை பாடினான்.  இருட்டிலும் அவன் தெளிவாகப் பார்க்கும் தன்மையை சிவபெருமான் அருளி இருந்தார். விடியும் நேரமாகியும் அவன் புறப்படவில்லை.

சித்தர் வடிவில் இருந்த சொக்கநாதர் சோழ மன்னா நீ இங்கிருப்பதை பாண்டியன் அறிந்தால் உனக்கு துன்பம் உண்டாகும். ஆதலால் நீ இப்போது காஞ்சியை நோக்கி உன்னுடைய பயணத்தை ஆரம்பிப்பது நல்லது என்று கூறினார். பின்னர் சோழனை அழைத்துக் கொண்டு வடக்கு வாசல் வழியாக வந்தார். கோவிலின் வெளியே வந்ததும் கோட்டைக் கதவை அடைத்துத் தாளிட்டு நந்தி முத்திரையை வைத்தார். பின் வைகையின் அக்கரைக்கு கொண்டு சோழனை விட்டுவிட்டு உனக்கு நல்ல துணை கிடைக்கப் பெற்று செல்வாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். ஆலயத்தை மறுநாள் திறக்க வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி. வழக்கமாக ஆலயக் கதவுகள் மூடப்பட்டதும் அவற்றில் பாண்டிய முத்திரையான மீன் முத்திரையைப் பதிப்பார்கள். ஆனால் அன்று அங்கே காணப்பட்டதோ நந்தி முத்திரை அது பல்லவ நாட்டிற்குரியது. பல்லவம் அப்போது சோழராட்சியில் இருந்ததால் அது சோழ முத்திரையாகவும் பயன்பட்டது. அதை மதுரை ஆலயக் கதவுகளில் பொறித்தது யார்? செய்தி தெரிந்ததும் பாண்டிய மன்னன் கொதித்தான். எனக்குத் தெரியாமல் எதிரி இங்கே வந்து போயிருக்கிறான். இது பாண்டிய நாட்டின் மானத்திற்கும் வீரத்திற்கும் மகா இழுக்கு. எப்படி நடந்தது இந்த அநியாயம் இப்பழியைத் துடைக்க நாம் உடனே சோழ நாட்டின் மீது போர் தொடுத்தேயாக வேண்டும் முழங்கி படை திரட்ட உத்தரவிட்டான். போர் ஆயத்தங்கள் மும்முரமாக நடந்தன. விடிந்தால் படைகளுடன் சோழநாட்டை நோக்கிப் புறப்பட தயாராக இருந்த்தார்கள்.

குலபூஷண பாண்டியன் இரவு தூங்க செல்லும் முன்பாக சொக்கநாதரிடம் முறையிட்டு வேண்டினான். இரவில் குலபூஷண பாண்டியனின் கனவில் தோன்றிய சொக்கநாதர் உன்னைப் போலவே காடுவெட்டிச் சோழனும் என்னுடைய பக்தன். அவன் எம்முடைய தரிசனம் வேண்டினான். அவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற மாறுவேடத்தில் அவனை வரச்செய்து திருக்கோவிலின் வடக்கு வாயிற்வழியின் மூலமாக உட்செல்லச் செய்து வழிபாடு மேற்கொள்ளச் செய்து காஞ்சிக்கு திருப்பி அனுப்பினோம். இறுதியில் வடக்கு வாயில் கதவிற்கு நந்தி முத்திரையை வைத்து மூடினோம். சோழனின் பக்தியை எடுத்துரைக்கவே இவ்வாறு செய்தோம்

குலபூஷணா சோழன் மீதுள்ள சினத்தை விடு பகையை மற. அவனும் உன் போல் ஒரு சிவ பக்தன். அவன் பக்தியை மெச்சி நான்தான் சென்று அவனை இங்கு அழைத்து வந்தேன். மூடி முத்திரையிட்ட ஆலயக் கதவுகளைத் திறந்து சோழன் சிவதரிசனம் செய்யவும் நானே உதவினேன். திரும்ப மூடி முத்திரையிட்ட போது நந்தி முத்திரையை இட்டுவிட்டேன். பாண்டிய மன்னா நீ நினைப்பதுபோல் நந்தி முத்திரை பல்லவ நாடாளும் உரிமையால் சோழனுக்கு வந்ததல்ல. அது சிவராஜனின் சிறப்பு அடையாளம். இதை ஒரு காரணமாக்கி நீ சோழன் மீது போர் தொடுக்க வேண்டாம். குற்றம் சோழனுடையதல்ல என்னுடையது. ராஜ தண்டனை அளிப்பது என்றாலும் நீ எனக்கே அளிக்க வேண்டும் கனவில் வந்து சிவன் பேசப் பேச மெய் சிலிர்த்து போனார் பாண்டிய வேந்தர். பிறகு சிவநேசச் சோழனுக்குத் தூதனுப்பி நட்பு பேசினார். அதன் அடையாளமாக சோழன் மகளை பாண்டிய குமாரன் மணந்தான். பகை இப்போது உறவாக மலர்ந்து விட்டது. குலபூஷண பாண்டியர் சிவபதம் அடைந்தார். ராஜசேகரன் பாண்டிய மன்னன் ஆனான். ஆனால் ஈசன் சோழனுக்கு ஆதரவாகவே இருந்து விட்டார் என்பது அவன் மனக்குறை. இந்த வஞ்சகமே தன் தந்தையின் உயிரைக் குடித்துவிட்டதாக எண்ணினான். அதனாலேயே ஈசனை வணங்கவும் மறுத்தான்.

சோழன் மகளை மணந்தது பாண்டியனின் இளைய குமாரன் ராஜசிம்மன். மூத்தவன் ராஜசேகரன் மணந்திருப்பதோ சேரன் செல்வியை. இளையவன் சோழ சைன்யத்தோடு சேர்ந்து ஒருமுறை அண்ணனை எதிர்க்க எண்ணிச் சதி வேலைகள் செய்தான். அவை பாண்டிய ராஜதந்திரிகளால் முறியடிக்கப்பட்டன. பாண்டிய ராணி பிரபு பழசையெல்லாம் மறந்து விடுங்கள். உங்கள் தம்பி தன் குட்டு வெளிப்பட்டு விட்டதால் உங்கள் முகத்தில் விழிக்கவே அஞ்சி உறையூரே கதியென்று சோழநாட்டில் போய்க் கிடக்கிறாரே பிறகு ஏன் கவலை? சிவன் மீதான ஊடலையும் விட்டு விடுங்கள் என்றாள். இல்லை தேவி தம்பியை வேண்டுமானால் மன்னிக்கலாம். சிவபெருமான் செய்தது பெரிய அநீதி. எங்களுக்குள் ஒரு வழக்கு நடப்பதாக வேண்டுமானாலும் வைத்துக் கொள். குலதெய்வமாக எண்ணிய எங்களுக்கு அவர் ஓரவஞ்சனை செய்து விட்டார். சோழனுக்கு ஓடக்காரனாக நேரிலேயே சென்று உதவினார். சோழனுக்காக வாதிட என் தந்தையின் கனவில் மட்டுமே தோன்றினார். எங்கள் சிவபக்தி எதில் குறைந்தது? இதுவே என் தந்தையை மனம் நலியச் செய்து மரணத்தில் தள்ளியது. இவ்வளவு வருந்துகிறேனே என் கனவில் ஏன் வரவில்லை சிவன்? அவர் சோழன் ஆதரவாளர். அதனால்தான் நான் வெறுக்கிறேன் என்றான்.

சோழன் மகளை மணந்து உறையூர் ராஜமாளிகையில் தங்கியிருந்த பாண்டிய இளவல் ராஜசிம்மன் மீண்டும் ஒருமுறை மதுரை மீது படையெடுக்கத் திட்டமிட்டான். மதுரை நோக்கிப் புறப்பட்டு விட்டன சோழ சைன்யம். பொழுது புலர்ந்தால் மதுரைக் கோட்டையை முற்றுகையிடுவது அவர்கள் திட்டம். முன்னிரவில் மனைவியிடம் சிவபிரான் மீது ஏகப்பட்ட வசை மொழிகளை அர்ச்சித்து விட்டு கண்ணயரத் துவங்கியிருந்தான் ராஜசேகரப் பாண்டியன். நள்ளிரவில் அவன் கனவில் சிவன் தோன்றினார். குலபூஷண பாண்டியனின் புதல்வனே என் மீது சினம் கொண்ட பிள்ளையே எழுந்திரு. இது நீ உறங்க வேண்டிய தருணமல்ல. அங்கே சிவநேசச் சோழனின் மனத்தைக் கெடுத்து அவனையும் சோழப் படைகளையும் அழைத்துக் கொண்டு உன் தம்பி ராஜசிம்மன் உன்மீது போர் தொடுக்க வருகிறான். விடிந்தால் உன் கோட்டை முற்றுகை இடப்படும் நிலை. நீ என்னை வசை பாடினாலும் நான் உன்னைக் கோபித்ததில்லை. உன் வேண்டுகோள்படி இதோ உன் கனவில் தோன்றி உனக்கு நல்லதைச் செய்துள்ளேன். எழு விழி போராடு எதிரியை வெற்றிக் கொள் என்றார். சிவபிரான் பேசக்கேட்டு சிலிர்த்து எழுந்தான் பாண்டியன். விடியும் வரை காத்திருக்க அவன் விரும்பவில்லை. நிலைப் படையாக இருக்கும் சில நூறு வீரர்களை அழைத்துக் கொண்டு அப்பொழுதே புறப்பட்டான்.

சோழர் படையுடன் வரும் தம்பியை மதுரையின் எல்லைக்குள் நுழையவே விடக்கூடாது என்பது அவன் எண்ணம். வழியெங்கும் அவனுக்கு வியப்பூட்டும் விந்தை காத்திருந்தது. ஆங்காங்கே ஊருக்கு நூறுபேர் ஆயுதங்களும் தீப்பந்தங்களும் ஏந்தி நின்று காத்திருந்து மதுரைப் படையோடு தங்களை இணைத்துக் கொண்டனர். எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம் மதுரைக்கு எதிரிகள் புறப்பட்டு வருவதை இவர்கள் எப்படி அறிவார்கள்? விசாரித்தான் பாண்டியன் எல்லோரும் கூறியது ஒரே தகவல் ஆஜானுபாகுவான ஒரு மனிதர் குதிரை மீது வந்தார். ஒவ்வொரு சிற்றூரிலும் மக்களை எழுப்பி சோழ சைன்யம் மதுரையைத் தாக்க வருகிறது. அவர்களை வழிமடக்கிப் போரிட இதோ பாண்டியன் சிறிய படையுடன் வருகிறான். இளம் சிங்கங்கள் எழுந்து ஆயுதம் ஏந்தி வந்து மதுரைப் படையுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என அறிவித்தார். அவர் பாண்டிய ராஜமுத்திரையான மீன் பொறித்த மோதிரத்தைக் காட்டினார். கையில் மீன் கொடியும் ஏந்தியிருந்தார். அவர் பேச்சை ராஜ கட்டளையாக எண்ணியே நாங்கள் திரண்டோம் என்றனர். யார் அந்த மாய மனிதன்? ராஜசேகரப் பாண்டியனால் ஊகிக்க முடியவில்லை. அந்தப் புதிர் அவிழ அவன் மறுநாள் இரவு வரை காத்திருக்க நேர்ந்தது. சோழர் படை முறியடிக்கப்பட்டது. தம்பியும் தம்பிக்கு உதவிய சோழ வேந்தனும் சிறைப்பட்டனர். இரவில் நிம்மதியாகக் கண்ணுறங்கப் போனான் ராஜசேகரன். யார் அந்த மாய மனிதன்? என்கிற வினா மட்டும் இன்னமும் அவன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது.

அந்த மாய மனிதன் அதே உருவில் அவன் கனவில் தோன்றினான். என்னவொரு கம்பீரம் பிரபோ தங்கள் கட்டளையை மக்களிடம் அறிவித்த ஊழியன் அடியேன்தான் என்றான். யார் நீ? என் ஊழியரில் எவரும் உன் போல் இல்லையே? நான் எப்போது உன்னிடம் கட்டளையிட்டேன்? இதோ இப்போது பார் என்னை. உன் ஐயம் அனைத்தும் விலகும் பாண்டிய வீரன் சிவனாகிறார். இறைவா தாங்களா எனக்கு ஊழியம் பார்த்தீர்கள்? என்றான். அதற்கு இறைவன் பதற்றம் வேண்டாம் பாண்டிய மன்னா பரிகாரம் என்பது மனிதர்கள் செய்ய வேண்டியது மட்டுமன்று பக்தனுக்காக இறைவனும் செய்யலாம். நான் சோழனுக்கு ஓடக்காரனாக வந்து ஊழியம் புரிந்தேன். உனக்கு உன் சேவகனாக இதோ வந்தேன் உன் ராஜ முத்திரையை ஏந்தி ஊழியம் புரிந்தேன். போதுமா இல்லை இன்னும் என்மீது உனக்குச் சினம்தானா? நான் எதும் ராஜ தண்டனை ஏற்க வேண்டுமா? என்று கேட்டார். சிவ சிவா என்ன பேச்சு சுவாமி இது தாங்கள் எனக்கு ஊழியம் பார்த்தீர்களா? எவ்வளவு பெரிய அபசாரத்துக்கு என்னை ஆளாக்கிவிட்டீர்கள். இதற்கு நான் ஏதேனும் பரிகாரம் செய்ய விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்? ஆணையிடுங்கள் நீ சினம் தணிந்தால் போதும். போய் சிவநேசச் சோழனை விடுதலை செய். உன் தம்பியையும் விடுவித்து மன்னித்து ஏற்றுக்கொள். அப்படியே ஆகட்டும் ஐயனே இப்போதும் தங்கள் கருணை அவர்கள் பக்கம்தான் இருக்கிறது. ஓடக்காரனாக வந்தீர்கள். மக்கள் முன் பாண்டிய வீரனாக வந்தீர்கள். எனக்கு மட்டும் கனவுக் காட்சிதானா? விண்ணும் மண்ணும் அதிர வாய் விட்டு சிரித்தார் இறைவன். பிறகு ராஜசேகரா என்னிடம் வாதிப்பதிலேயே இன்பம் காணும் முரட்டு பக்தன் நீ. உன் மனைவியிடம் என்ன சொன்னாய்? சிவன் என் கனவில் வரவேண்டும் என்றுதானே? வந்து விட்டேன் சரிதானே? வாழ்வே ஒரு கனவுதான் கனவு ஒரு வாழ்வுதான். கவலையை விடு கடமையைச் செய் சிவன் ஜோதிமயமானார். பாண்டியன் கனவிலிருந்து சந்தோஷமாக விடுபட்டான். கிழக்கு வெளுத்தது. சிவன் கட்டளைப்படி சிறைக் கதவுகள் திறக்கப்பட்டன. பண்பு சிறந்து பகை மறைந்தது. உறவின் உன்னதம் மலர்ந்தது. சோழ மன்னனை அழைத்துச் சென்று சொக்கேசப் பெருமானைத் தரிசிக்க வைத்தான் ராஜசேகரப் பாண்டியன். அவன் கண்ட கனவுகள் வரலாற்றுப் பக்கங்களில் பதிவாயின.

பாம்பு கோவில்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே அமைந்துள்ளது நாம்பள்ளி குட்டா என்ற ஊர். இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வெமுலவாடாவில் இருந்து கரீம்நகர் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் ஒரு சிறிய குன்றின் மீது இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் வழியில் நாகதேவதைக்கு ஒரு கோவில் இருக்கிறது. பாம்பு வடிவத்தில் அமைந்த ஆலயம் இது. நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் நுழைவு வாசல் போன்று இந்த நாகர் வடிவ கோவில் உள்ளது. பிரமாண்ட வடிவம் கொண்ட பாம்பின் வால் பகுதியில் இருந்து கோவில் பிரவேசம் தொடங்குகிறது. அந்த இடத்தின் வெளிப்பகுதியில் தூணை பிளந்து கொண்டு நரசிம்மர் வெளிவருவது போன்ற சிற்பம் வடித்து வைக்கப்பட்டுள்ளது. வளைந்து நெளிந்து கிடக்கும் பாம்பு உருவம் சிமெண்டால் செய்யப்பட்டிருக்கிறது. இதன் அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாம்பு வயிற்றுப் பகுதியில் இருந்து உள்ளே செல்ல சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பாம்பின் வடித்திற்குள் நுழைந்ததும் பக்த பிரகலாதனின் வாழ்க்கை வரலாறு அனைத்தும் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கிறது. பக்தபிரகலாதன் பிறந்தது முதல் விஷ்ணு பக்தன் என்பதால் இரண்யகசிபு அவனை கொல்வதற்கு எடுக்கும் முயற்சிகள் மற்றும் இறுதியில் தூணில் இருந்து வெளிப்படும் நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்வது வரை சிற்பமாக வடித்து வைக்கப்பட்டுள்ளது. நாகர் வடிவ சிலையில் சுரங்கப்பாதை முடிவுறும் இடத்தில் நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்யும் சிலை அமைந்துள்ளது. இங்கே நாகதேவதைகளின் பழமையான சிலைகளும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. பாம்பின் உடலுக்குள் செல்வது போல் அமைந்த சுரங்கத்தில் சூரிய வெளிச்சமும் காற்றும் வரும் வகையில் ஆங்காங்கே வட்ட வடிவ ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 391

கேள்வி: 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களுக்கு இணையான ஆலயங்கள் தமிழகத்தில் உள்ளதா?

எல்லா ஸ்தலங்களும் சிறப்புதானப்பா உயர்வுதானப்பா. மனித மனம்தான் அங்கு சென்றால் நன்மை இங்கு சென்றால் நன்மை என்று இயம்புகிறது. ஆனாலும் கூட தூர தூர இடங்களுக்குச் செல்லும் பொழுது மனிதனுக்குப் பல்வேறு விதமான உணர்வுகள் ஏற்படுகிறது. பல்வேறு அனுபவங்கள் ஏற்படுவதால் அதை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம் காசி என்ற சொல்லுக்கு புருவ மத்தி என்ற ஒரு பொருள் இருக்கிறது. காசியில் இறந்தால் முக்தி என்பது தவறான வாதம். காசி எனும் புருவ மத்தியில் மனதை நிலை நிறுத்தி இருந்தால் முக்தி என்று கொள்ள வேண்டும். காசியில் இருந்தால் முக்தி.

அடுத்ததாக ஜோதிர் லிங்கங்கள் என்பது அந்தந்த ஸ்தலங்களுக்கு உண்டான பெருமையைக் கூறினாலும் அதே பெருமை ஒவ்வொரு சிவ ஆலயத்திற்கும் உண்டு. அந்த எண்ணத்தோடு அந்த சிவ ஆலயத்தை அணுகினால் ஜோதிர் லிங்கங்களை கண்டு தரிசித்த பலன் கட்டாயம் உண்டப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 390

கேள்வி: குமரகுருபரரை பற்றி

இறைவனின் அருளைக் கொண்டு இதுபோல் மழலை பேசும் என்று மழலையைப் பெற்ற பெற்றோருக்கு மழலை பேசுமா? என்கிற ஐயம் வந்த பொழுது மழலை பேசும் என்று சீரலைவாய் (திருச்செந்தூர்) முருகன் காட்டிய காட்சிதான் அந்த குமரகுருபரரின் காதையாகும். முருகப்பெருமானின் பரிபூரண கருணையை பெற்று அதுபோல் பேசும் ஆற்றல் மட்டுமல்லாமல் பாடும் ஆற்றலையும் பெற்று நல்ல முறையிலே தமிழையெல்லாம் கற்று அன்னை கலைவாணி மீது சகலகலாவல்லி மாலையை இயற்றி அதன் மூலம் பல மன்னர்களையெல்லாம் வென்று அங்குள்ள வடபுல (வடநாட்டு) புலவர்களையெல்லாம் அந்த வடமொழியிலேயே வாதிட்டு வென்றவன்தான் இந்த குமரகுருபரன்.

இது அண்மையில் நடந்த நிகழ்வுதான். இதுபோன்ற பல நிகழ்வுகள் இன்றும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. பிரச்சினை என்னவென்றால் இறைவன் எனக்கு அருள்கிறார். அல்லது இறைவன் தரிசனம் எனக்கு கிடைத்திருக்கிறது அல்லது இறைவனின் கருணை எனக்கு கிடைத்திருக்கிறது என்பதை மனிதன் மற்ற மனிதரிடம் அதை பகிர்ந்து கொண்டு அவர்கள் அதை ஒத்துக் கொண்டால்தான் இந்த மனிதனுக்கு ஆறுதல் கிட்டுகிறது. அப்படியில்லாத வரையில் இவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே நல்ல சாத்வீக எண்ணத்தோடு இதுபோல் இறை வழியில் சென்றால் ஒவ்வொரு குழந்தையும் குமரகுருபரர் ஆகலாம்.

குமரகுருபரரின் வரலாற்றை மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

குமர குருபரர்

தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் என்னும் ஊரில் 17 ஆம் நூற்றாண்டில் சைவ வெள்ளாளர் குலத்தில் சண்முக சிகாமணி கவிராயர் சிவகாமி சுந்தரி என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாக குழந்தையில்லாத இத்தம்பதியர் கந்தசஷ்டி விரதமிருந்து ஒரு ஆண் குழந்தையைப் பெற்றனர். குழந்தைக்கு குமரகுருபரன் என்று வைத்தனர். பிறந்ததில் இருந்து குழந்தைக்கு பேச்சு வரவில்லை. கவலையடைந்த பெற்றோர் குழந்தை முருகன் கொடுத்த வரம். அவனால் குழந்தைக்கு பேசும் ஆற்றலை அந்த முருகன்தான் தர முடியும் என்று முடிவு செய்து திருச்செந்தூர் சென்று விரதம் இருந்தார்கள். முருகனை வழிபட்டு ஒருவேளை உப்பில்லாத உணவு சாப்பிட்டு 40 நாள் விரதமிருந்தனர். குருபரனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வேதனை மிகுந்த பெற்றோர் குழந்தை பேசும் வரை கோயிலை விட்டு செல்லக் கூடாது என்று முடிவோடு இருந்தார்கள். 45 வது நாள் மாலையில் கோவிலுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது குமரகுருபரன் வாய் திறந்து ஏதோ பேச முற்பட்டான். பெற்றோர்கள் கூர்ந்து கேட்க தெளிவில்லாமல் ஏதோ சில சொற்களை சொன்னான். அடுத்த சில நொடிகளில் குமரகுருபரன் கடும் மழை பொழிவது போல முருகனைப் பற்றி கவிதை மழை பொழிந்தான். குழந்தை பேசமாட்டானா என ஏங்கியிருந்த பெற்றோர் வாயடைத்து நிற்க கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களும் இந்த அதிசயம் கண்டு திகைத்து நின்றனர். குமரகுருபரன் பாடிய பாடல் தொகுப்பே கந்தர் கலிவெண்பா ஆகும். இதுவே குமரகுருபரரின் முதல் நூல் ஆகும். சரவணபவ என்ற மந்திரத்தின் மகிமையை வெண்பாக்களாக பாடியிருந்தார் குருபரர். திருச்செந்தூரில் அவர் இருந்த போது தன் குருவைக் கண்டவுடன் தன்னால் சரியாகப் பேச இயலாத நிலை ஏற்படும் என்கிற அசரீரி ஒலியினைக் கேட்டார். சில வருடங்களுக்குப் பிறகு தருமபுரம் ஆதீனத்தில் உள்ள மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அங்குச் சைவ சித்தாந்தம் பயின்றார்.

குமரகுருபரர் தனது இளம் வயதிலேயே தன் குருவைக் காணும் நோக்கத்தில் கடவுளை அறியும் பொருட்டு தன் குருவைத் தேடி பெற்றோர் ஆசியுடன் தல யாத்திரை புறப்பட்டார். ஒருமுறை குமரகுருபரர் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தார். மீனாட்சி சன்னதியின் முன் நின்று மீனாட்சி அன்னையை சிறு குழந்தையாக பாவித்து அவளது அழகு அருள் ஆற்றல் திருவிளையாடல்கள் அனைத்தையும் மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடலாக பாடினார். அந்நாளில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் கனவில் மீனாட்சி தோன்றி மன்னா என் செல்லக் குழந்தை குமரகுருபரன் மதுரை வந்துள்ளான். அவன் என்மீது பாடிய நூலை யாம் கேட்டு ஆனந்தமடைய ஏற்பாடு செய்க என்று பணித்தாள். உடனே மன்னர் குமரகுருபரர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர் பாதம் பணிந்து அம்மனின் விருப்பத்தை கூறினார். கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தார். புலவர்கள் எல்லாம் கூடியிருக்க மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறி கொண்டிருந்தது. அப்போது கோயில் தலைமை அர்ச்சகரின் மகள் அங்கு வந்து மன்னரின் மடியில் உரிமையுடன் அமர்ந்து குருபரர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும் சிறுமி உரிமையுடன் மன்னரின் கழுத்திலிருந்த மணிமாலையை கழற்றி குருபரரின் கழுத்தில் அணிவித்தாள். பின் மூலஸ்தானத்தை நோக்கி நடந்து மறைந்தாள். அதன் பின்தான் வந்தது மீனாட்சி என அனைவருக்கும் தெரிந்தது. மீனாட்சி அம்மனைப் போற்றி மதுரைக் கலம்பகம் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் நீதி நெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். பின்னர் திருவாரூர் சென்று அங்குள்ள தியாகராச பெருமானைப் போற்றித் திருவாரூர் நான்மணி மாலை என்னும் நூலை இயற்றினார்.

குமரகுருபரர் திருவாரூரிலிருந்து தருமபுரத்திற்குப் பயணப்பட்டார். தருமபுரத்தில் பாரம்பரிய திருக்கயிலாய பரம்பரையான தருமபுர ஆதீன சைவ மடம் இருந்தது. அம்மடத்தை துறவி மாசிலாமணி தேசிகர் நிர்வகித்து வந்தார். குமரகுருபரர் அங்குச் சென்று அவரை வணங்கினார். அப்போது மாசிலாமணி தேசிகர் குமரகுருபரரிடம் பெரிய புராணத்தில் வரும் ஐந்து பேரறிவும் கண்களே கொல்லா எனத் தொடங்கும் பாடலின் சிறப்பம்சத்தை விளக்குமாறு கூறினார். அப் பாடலானது தில்லையில் உறையும் கடவுள் சிவபெருமானின் நாட்டியத்தைக் கண்டு மெய்யுருகி நின்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் நிலையைச் சொல்வதாகும். சேக்கிழார் அந்த நிகழ்ச்சியை அழகாகப் பெரிய புராணத்தில் விவரித்திருப்பார். யாராலும் விளக்க முடியாத இந்த பாடலுக்கு விளக்கம் சொல்லுமாறு கேட்டதும் வாயடைத்து நின்றார் குமரகுருபரர். தான் தேடி வந்த குரு மாசிலாமணி தேசிகர்தான் எனப் புரிந்து கொண்டு அவரைச் சரணடைந்தார். அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் இந்து மதம் நசுக்கப்படுவதை மாசிலாமணிதேசிகர் உணர்ந்திருந்தார். குமாரகுருபாரரின் எதிர் காலத்தை உணர்ந்த அவர் காசி (வாரணாசி) யாத்திரை சென்று திரும்பி வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் குமரகுருபரரை சீடராக இருக்க ஒப்புக் கொண்டு குமரகுருபரரைத் துறவறம் மேற்கொள்ளச் செய்தார்.

குமரகுருபரர் தனது குருவின் ஆணைப்படி காசிக்குச் சென்று சைவ சமயத்தைப் பரப்பினார். அங்குள்ள கேதாரேஸ்வர் கோவிலைைப் புதுப்பித்தார். காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாமல் பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தர வேண்டுமென்று குமரகுருபரர் வேண்டுகோள் விடுத்தார். சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார். முதியவரே நீர் என்ன சொல்கின்றீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கின்றீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் என்ன தானம் என்பது தெரியவில்லை. எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள் தருகிறேன் சொல்லிவிட்டு எழுந்து போனார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.

மறுநாள் விடிந்தது. எங்கே அந்த மதுரை கிழவர் என்று நவாப் விசாரித்தார். அவர் அரபி படிக்க போயிருக்கிறார் என்று ஒருவர் சொல்ல சபை சிரித்தது. வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும் கோரைப் பற்களும் சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண் சிங்கம் சபைக்குள் நுழைந்தது. குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண் சிங்கம் போல் காட்சியளித்தார். அவர் நரைத்த தலைமுடியும் தலைப்பாகையும் வெள்ளை வெளேர் என்று வயிறு வரை நீண்ட தாடியும் இறையை உணர்ந்த உறுதியான முகமும் போகமே அறியாது கடுமையான பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும் அவரை சிங்கம்போல் காட்டின. அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன. நவாபின் சபையில் இருந்தவர்கள் பலர் கலைந்து ஓடினார்கள். பலர் தனது ஆசனத்தில் இருந்து காலைத் தூக்கிக் கொண்டார்கள். நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான். என்ன இது என்று கத்தினான். நேற்று நீர் எமக்கு அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம் என்றார். இதுவா ஆசனம் இது சிங்கமல்லவா இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாசனம். உனது ஆசனத்திலும் சிங்கம் இருக்கிறது. ஆனால் பொம்மைச் சிங்கம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா என்றார்.

சிங்கம் ஒன்று பாய்ந்து நவாபுக்கு அருகே சென்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான். ஒரு பெண் சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. மற்ற சிங்கங்கள் சபையை சுற்றி வந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. குமரகுருபரர் இங்கே வா என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் உட்கார்ந்தான். குமரகுருபரர் நவாபை பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறுமையும் என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்து விட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன் மீண்டும் சலாம் செய்தான். தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.

காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும். நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னயே நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி புரிந்து கொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே என்றார். ஆமாம் பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி எப்படி இது சாத்தியமாயிற்று என்று கேட்டான். உன்னுடையது என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறைவன் எல்லோருக்கும் பொது என்றார். உடனே நவாப் காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம் நவாப் பணிவாகப் பேசினான். மேலும் காசியில் மடத்தை நிறுவினார். இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார். குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடம் அமைத்துத் தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் வைகாசி தேய்பிறை திரிதியைத் திதியில் விளம்பி வருடம் வைகாசி 18 ஆம் நாள்இறைவனடி சேர்ந்தார்.

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி ஒரு நினைவு தபால்தலை இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்டது. கயிலாசபுரத்தில் இவர் பிறந்த வீட்டுப் பகுதி மடமாக 31-8-1952 இல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குமரகுருபரர் இயற்றிய நூல்கள்

கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
கயிலைக் கலம்பகம்
காசித் துண்டி விநாயகர் பதிகம்

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 338 பாடல்களில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் சரித்திரம் என்ற நூலை எழுதியுள்ளார். சேற்றூர் இரா. சுப்பிரமணியக் கவிராயர் 1001 பாடல்கள் கொண்ட ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் புராணம் என்ற நூல் எழுதியுள்ளார். பாரதிதாசன் தமது எதிர்பாராத முத்தம் என்ற நூலில் குமரகுருபரரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தேனூர் வே. செ. சொக்கலிங்கனார் குமரகுருபரரைப் பற்றி செய்த தொண்டர் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரது நூல்கள் நூல்கள் தோன்றியது பற்றிய கதைகளை மு. அருணாசலம் கையெழுத்து நிலையில் குறிப்புகளாக வைத்திருந்தார். இவரது நூல்கள் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள் என்னும் பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 389

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கு ஆசிகள் சிறப்பாய் கல்வி கற்க உன் சேயவளுக்கு வித்தை ஓங்க அன்னை கலைவாணியின் அருள் கிடைக்க நல்லாசி கூறுகிறோம். அங்கு செல்வதற்கு முன்னால் மறைவனம் (வேதாரண்யம்) என்ற ஸ்தலம் ஏகி அங்குள்ள ஐயனை வணங்குவதோடு இயன்றால் இயன்றால் என்ற வார்த்தையை நாங்கள் கூறுவதற்கு காரணம் ஜீவ அருள் ஓலை என்பது எம் எதிரே அமருகின்ற மனிதனின் விதியை பொருத்தே நாங்கள் கூறுகின்றது. எமது கருத்து என்பது வேறு. இறையின் அருளாசி என்பது வேறு. எம்முன் அமருகின்ற மனிதனின் விதி என்பது வேறு. அங்கே தீபம் ஏற்றுவது என்பது சிறப்பு. நீயாக ஏற்றுவது என்பது ஒன்று. ஆலய நிர்வாகத்தின் மூலம் அதிக தீபங்களை ஏற்றுவது மிக சிறப்பு. அதோடு அங்குள்ள அன்னை கலைவாணிக்கு மிக மிக உயர்வான முறையிலே ஒரு அபிஷேகம். இல்லையென்றால் எளிய முறையில் உன்னால் என்ன வழிபாடு செய்ய முடியுமோ அதை செய்துவிட்டு பிறகு கல்விக் கூடத்திற்கு உண்டான முயற்சியை எடுக்க நல்லாசிகள் தொடரும். அதபுோல் குழந்தைக்கு ஹயக்ரீவர் மந்திரத்தையும் அன்னை கலைவாணி மந்திரத்தையும் கற்றுக் கொடுத்து அன்றாடம் உருவேற்ற வைப்பதும் அறிவிலே குழப்பமில்லாமல் தெளிவு ஏற்படுவதற்கு இறை ஆசி கிடைப்பதற்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

துர்காதேவி மகிஷாசுரமர்த்தினி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் வாஸ்து சங்க்ரஹாலயா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள துர்காதேவி மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 388

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

ஆதியோடு அந்தமாய் அந்தமோடு சொந்தமாய் சொந்தமற்ற தன்மையாய் தன்மை கொண்ட தன்மையாய் தன்மையது தரும் நன்மையாய் நன்மை நல்கும் செழுமையாய் செழுமையோடு உயர் பண்பதாய் பண்பதோடு உயர் நலமதாய் நலமோடு உயிருக்கு உயிரான பலமனதாய் பலமோடு என்றென்றும் பரம்பொருளாய் எங்கும் நிறைந்ததாய் நிறைந்ததாய் அதே நிறைந்த தாய் நிறைந்ததாய் இருக்கின்ற அது உயர்ந்த தாய் அது உயர்ந்த தாய் என்றும் உள்ள தாய் உள்ளதாய் பெற்றதாய் யாரும் பெறாத தாய் இதுபோல் வந்ததாய் போனதாய் இருக்கின்ற உயிர்க் கூட்டம் அங்கு சென்று இருப்பதாய் இருப்பதை உணர்ந்ததாய் இருக்குங்கால் அத்தருணமே அத்தாய் எத்தாய் ? என நிறைவதாய் புரிந்துகொள்ளும் தன்மையதாய் இருக்குந்தாய் . எனவே கண்டதாய் காணாததாய் இருக்கின்ற அத்தாய் அதுவே என்றும் பெற்றாய் என்று உணரக்கூடிய ஒரு தாய் . இதுபோல் உளதாய் இலதாய் என்று அருணகிரி பாடினாலும் அது உள்ளதாய் அது நல்லதாய் அத்தாய் பரம்பொருள் தன்னை வணங்கி போற்றி இயம்புகிறோம் சில வாக்கு இத்தருணம்.

தருணமதில் நவமாய் அமர்ந்து நலமாய் வாக்கறிய வந்திருக்கும் அனைவருக்கும் நலமாய் வாழ்வு உயர யாம் இத்தருணம் இறையருள் கொண்டு நல்லாசி வழங்குகிறோம். இதுபோல் பல்வேறு தருணங்களில் மாந்தர்களுக்கு பல்வேறு ஐயங்கள் எது குறித்தும் எழுந்துகொண்டே இருக்கும்.இயம்பிடுவோம் ஒருவன் நல்லவனோ நல்லவன் அல்லாதவனோ அவன் மனதிலே ஒரு வினா இருந்துகொண்டே இருக்கும். நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள் எங்கும் வியாபித்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி ஆண்டு கொண்டிருப்பது உண்மையென்றால் அதன் தன்மை பராக்கிரமம் கட்டாயம் உயர்ந்ததாக இருக்கும். அப்படி உயர்ந்ததாக இருக்கக்கூடிய அந்த பரம்பொருள் உண்மையில் உயர்ந்ததாகவும் இருக்கும்.

அப்படி உயர் உயர் உயர் பெருமைகளை உயர் உயர் உயர் பண்புகளையெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ள அந்த பரம்பொருள் அதன் அளக்கவொட்டா பெரும் சக்தியைக் கொண்டு படைத்திட்ட உயிர்களில் மட்டும் ஏன் இத்தனை பேதங்கள்? இதோடு மட்டுமல்லாமல் இதுபோல் ஜீவ அருள் ஓலை மூலம் மகான்கள் வாக்கினை கூறுகின்ற தருணம் ஜீவ அருள் ஓலை மூலம் வாக்குகளை அறிந்து கொண்டே வருகின்ற மனிதர்கள் ஜீவ அருள் நாடியிலே சித்தர்களின் அருளாசியைப் பெற்றதாலோ அல்லது பூர்வ புண்ணியத்தாலோ மகான்களின் கருணை மிகுந்த வாக்குகளை பெற்றுக் கொண்டே வருகிறார்கள். மகான்களும் அதுபோல் மனிதன் வந்தால் வாக்குகளை கூறிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் மனிதனின் அந்தரங்கம் என்பது பல்வேறு தருணங்களில் சராசரி மனிதராலோ ஏன்? நல்ல ஒழுக்கம் மிகுந்த மனிதராலோ ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. அதாவது எம்முன்னே அமர்ந்து ஒருவன் வாக்கினை கேட்கிறான். கேட்கிறானோ நம்புகிறானோ ஆனால் தொடர்ந்து இங்கு வந்து கேட்கிறான். யாமும் கூறுகிறோம். ஆனால் இன்னொருவன் அதைப் பார்த்து இங்கு இருப்பது சித்தர்கள்தானா? வந்து அமர்ந்த மனிதன் என்னென்ன செய்கிறான்?ஏதேதோ செய்கிறான் ? இவையெல்லாம் மனிதனாகிய நமக்கே தெரிகிறதே? உண்மையில் மகான்கள் என்றால் அது தெரியாமல் இருக்குமா? இத்தனை தவறுகளை இத்தனை பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் மகான்களின் முன்னால் வந்து அமரும் பொழுது அந்த பாவங்களையும் தவறுகளையும் சுட்டிக் காட்டி அப்பனே நீ இன்னின்ன தவறுகளை செய்கிறாய். இன்னின்ன விதமான பாவங்களை தொடர்ந்து செய்கிறாய். இதையெல்லாம் விட்டுவிட்டு வா பிறகு வாக்கு உரைக்கிறோம் என்று மகான்கள் ஏன் கூறுவதில்லை? அப்படி அவர்கள் கூறும் பொழுது தான் பிறர் அறியாமல் செய்கின்ற தவறுகளையெல்லாம் சித்தர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அப்படியானால் இங்கு இருப்பது சித்தர்கள்தான்.

நாம் செய்யும் தவறுகளையெல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேட்கின்ற மனிதனுக்கு புரிய வரும். ஒருவேளை அவன் திருந்துவதற்குண்டான வாய்ப்புகள் ஏற்படலாம். ஆனால் அப்படியெல்லாம் சித்தர்கள் சுட்டிக் காட்டாமல் தொடர்ந்து யார் வந்தாலும் வாக்குகளை கூறுகிறார்கள். இது என்ன லீலை? என்பது புரியவில்லை என்று எண்ணுகின்ற மனித கூட்டம் ஒருபுறம்.இன்னொரு புறமோ நாங்கள் நூற்றுக்கு நூறு சித்தர்களை நம்புகிறோம் இறைவனை நம்புகிறோம். எங்களால் முடிந்த தர்மங்களை செய்கிறோம். பூஜைகளை செய்கிறோம். ஆனாலும் கூட வாழ்க்கையில் பெரிதாக மாற்றமில்லை முன்னேற்றமில்லை கஷ்டங்கள் தீரவில்லை. எல்லாம் போகட்டும். ஆறுதலாக சில வார்த்தைகளைக் கேட்கலாம் என்று இங்கு வந்தால் வாக்கில்லை என்ற பதில்தான் வருகிறது. இது என்ன நிலை? என்பது புரியவில்லை என்று எண்ணுகின்ற கூட்டம் ஒருபுறம். இன்னொரு புறமோ இந்த வாக்குகளில் எல்லாம் எமக்கு நம்பிக்கை இருந்தாலும் இதனையெல்லாம் நடைமுறைப் படுத்துவதற்கு உண்டான பொருளாதார சூழல் இல்லை. உடல் ஒத்துழைப்பதில்லை. நான் விரும்பினாலும் என் மனைவி விரும்பவில்லை. என் மனைவி விரும்பினாலும் என் பெற்றோர்கள் விரும்புவதில்லை. எல்லோரும் விரும்பினாலும் பொருளாதாரம் இடம் தருவதில்லை.

இப்படியெல்லாம் செய்தால்தான் பாவங்கள் போகுமா? அது ஏன் சித்தர்கள் தனத்தையே குறிவைக்கிறார்கள்? மானசீகமாக ஒருவன் வழிபாடு செய்துவிட்டு இறைவா என்னை காப்பாற்று என்று ஒற்றை வரியில் கூறினால் போதாதா? இருக்கும் இடத்திலேயே இறைவனை வணங்கினால் போதாதா? எங்கும் சிவன் ஆலயம் இருக்கிறது பெருமாள் ஆலயம் இருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு திருப்பதி போ திருவண்ணாமலை போ சிதம்பரம் போ என்று கூறுவதும் பாழ்பட்ட ஆலயங்களுக்கு சென்று வணங்க சொல்வதும் ஏன்? இல்லத்திலேயே அமைதியாக அமர்ந்து பூஜை செய்தால் போதாதா? பிரார்த்தனை செய்தால் போதாதா? மனம் செம்மையாக வேண்டும் உயர்வடைய வேண்டும். அதுதானே உண்மை. அதற்கு ஏன் இதுபோன்ற புற செயல்களை எல்லாம் செய்யவேண்டும்? எதற்காக இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும்? என்று எண்ணுகின்ற கூட்டம் ஒருபுறம். இன்னொருபுறம் நானே கடினப்பட்டு உழைக்கிறேன். நான் நேர்மையாகத்தான் ஊதியம் பெறுகிறேன். அதையெல்லாம் என் தேவைக்கும் என் குடும்ப தேவைக்கும் வைத்துக் கொண்டிட வேண்டும். எதிர்காலத்திலே உழைக்க முடியாத நிலை வரும்பொழுது நான் யாரிடம் கையேந்த முடியும்? அப்போதைக்கு இப்போதே வங்கியிலே சேமித்து வைத்துக் கொண்டால்தான் ஒருவேளை ஏதாவது ஏற்பட்டால் கூட அந்த சேமிப்பினால் குடும்பம் நன்றாக இருக்கும் அல்லவா? அப்படியிருக்க இதுபோன்ற சேமிப்புகளையெல்லாம் ஒத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் தர்மம் செய் என்று கூறினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இது என்ன நிலை என்றே புரியவில்லையே? என்று எண்ணுகின்ற கூட்டம் ஒருபுறம்.

இன்னொருபுறம் சித்தர்களும் ஞானிகளும் எதற்கு வழிகாட்டுகிறார்கள்? இல்லறத்திலே இருந்து கொண்டு இல்லறத்தை நல்லறமாக நடத்த வழிகாட்டக் கூறினால் இல்லறத்தை விட்டு ஒதுங்கத்தானே கூறுகிறார்கள்? பற்றற்று இரு பாசமற்று இரு என்று கூறுகிறார்களே? இது எவ்வாறு சாத்தியம்? பெற்று வளர்த்த தந்தைக்கும் தாய்க்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டாமா? மனைவிக்கும் குழந்தைகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டாமா? பற்றையெல்லாம் அறுத்துவிட்டு எங்காவது வனாந்திரத்தில் போய் அமர்ந்துவிட வேண்டுமா? செய்ய வேண்டியதை எல்லாம் செய்ய வேண்டாமா? அப்படி செய்தால் அவர்களையெல்லாம் நட்டாற்றிலே விட்ட பாவம் தொடராதா? ஏன் இப்படிக் கூறுகிறார்கள்? என்று எண்ணுகின்ற கூட்டம் ஒருபுறம். எல்லாவற்றையும் விட அறம் செய் என்று வரிக்கு வரி அரசனின் வரிபோல் கூறுகிறார்களே அதை செய்வதற்கு உண்டான தனத்தை தர வேண்டாமா? நிறைய தனமிருந்தால்தானே தர்மகாரியங்களை செய்யலாம். வருகின்ற தனம் வரவிற்கும் செலவிற்கும் கூட போதவில்லை. இல்லறம் நடத்தவே பற்றாக் குறையாக இருக்கின்ற நிலையிலே எவ்வாறு அறம் செய்வது? என்று எண்ணுகின்ற ஒரு கூட்டம் ஒருபுறம். இப்படி நாங்கள் கூறுகின்ற வாக்கையெல்லாம் கூறு கூறாகப் பிரித்து அவனவன் மனம் போகின்ற போக்கிலே பொருள் கொள்வது எப்படி? என்றால் நான்கு குருடர்கள் சேர்ந்து ஒரு யானையைப் பார்த்து யானை இவ்வாறுதான் இருக்கும் என்று ஒரு யூகமாகக் கூறுவது போல ஒட்டு மொத்தமாக இழையோடுகின்ற வாக்கின் பின்னணியில் என்ன இருக்கின்றது? என்பதை உள்ளுணர்ந்து பார்க்கின்ற ஒரு திறன் இல்லாததால்தான் எமது வாக்கைக் கேட்பவர்களுக்கு பல்வேறு தருணங்களில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே மனதை திடமாக உறுதியாக நம்பிக்கையாக இறை பக்தியாக வைத்துக் கொண்டிட வேண்டும். அவனவன் சக்திக்குட்பட்டு தர்மகாரியங்களை செய்யலாம்.

அடுத்ததாக இறை வழிபாடு அதிலும் அதிகாலை எழுந்து செய்ய வேண்டிய வழிபாடு என்ற ஒன்று இருக்கிறது. கால தே, வர்த்தமான சூழலால் மனிதனின் வாழ்க்கைமுறை மாறி அதிகாலை துயில் எழுதல் என்பதே மனிதனுக்கு மிகப் பெரிய பாரமாகி விட்டது. முதலிலே ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். காலம், நாழிகை, பருவம் எல்லாம் எதற்கு பொருந்தும் ? மனிதனுக்குப் பொருந்தும், மனிதன் வசிக்கின்ற இந்த பூமிக்குப் பொருந்தும். இந்தப் புவி மண்டலத்தைத் தாண்டிவிட்டால் அப்பொழுது ஏது இரவு? ஏது பகல்? அண்ட சராசரங்களையும் தாண்டி செல்லும் பொழுது அங்கே எல்லாம் ஒன்றுதான். இந்தப் புவியிலே இந்த வளிமண்டல அழுத்தத்திலே கீழே பார்க்கின்ற மனிதன் எவ்வாறு நீரின் அழுத்தத்திலே மீன் வாழ்கிறதோ மற்ற நீர்வாழ் உயிர்கள் வாழ்கிறதோ அதைப்போல் காற்று மண்டலத்தின் அழுத்தத்திலே மனிதனும் மற்ற உயிர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அழுத்தம் மனித உடல் மீது எப்பொழுதும் ஒரே கதியில் இருப்பதில்லை. அந்த அழுத்தத்தின் ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் மனித உடலை வினைக்கேற்ப பாதிக்கும். உயர்வைத் தரும். எனவே முதலில் பக்தியை விட்டுத் தள்ளினாலும் கூட ஒரு மனிதன் வாழும்வரை தேக நலத்துடன் வாழ வேண்டும். அதற்கு இந்தப் பகுதியிலே இந்த வளிமண்டலத்திற்குள் வாழ்கின்ற உயிர்கள் அனைத்தும் சூரியன் உதிக்கும் முன்னால் துயில் களைந்தால்தான் நல்ல பலன் கிட்டும். குறிப்பாக கடைவரையில் விழி கூர்மையாக இருக்க வேண்டும். சுலோச்சனம் போடக்கூடாது என்று எண்ணக் கூடியவர்கள் யாரும் சூரியன் விழித்த பிறகு விழிக்கக்கூடாது. ஒரு பிணி வந்துவிட்டால் போதும் உடலின் முக்கியத்துவம் மனிதனுக்குப் புரிந்து விடுகிறது. ஆரோக்யத்தின் அவசியம் புரிந்துவிடுகிறது.

எனவே ஒரு மனிதனுக்கு பக்தி இறை நம்பிக்கை ஒருபுறமிருந்தாலும் தன்னுடைய பொன்னான உடலை பாதுகாக்கும் வண்ணம் இருக்கும் வரை உடல் தொல்லை தராமல் இருக்க வேண்டும் என்றால் மிக மிக அதிகாலையிலே எழுந்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரவேண்டும். வழிபாடு செய்யா விட்டாலும் உடலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்திலாவது அதிகாலை துயில் எழ பழக வேண்டும். இதற்காக ஒரு மனிதனானவன் முன் இரவிலே விரைந்து துயில் கொள்ளப் பழக வேண்டும். ஏனென்றால் ஒரு மனிதனின் ஆரோக்யத்தில் குறுக்கிட இன்னொரு மனிதனுக்கு அதிகாரமில்லை. இந்த ஆரோக்யத்தின் அடிப்படையில்தான் யாம் ஒத்த முனிவர்கள் எல்லோரும் அதிகாலை துயில் களைதல் முக்கியம் என்று வலியுறுத்துகிறோம். அதன் பிறகு பக்தி வழிபாடு தியானம் யோகாசனம் எல்லாம். முதலில் எழுதல் என்பதே முக்கியம். இதுபோல் நிலையிலே ஒரு மனிதனானவன் எழுந்து எழுந்து பழகிவிட்டால் அதிகாலை துயில் களைதல் என்பது எளிமையான விஷயம் ஆகிவிடும். அடுத்ததாக மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்கின்ற மனிதன் அதனால் சரியான துயில் இல்லாமல் உறக்கம் வராமல் இருக்கிறான். இந்த மன அழுத்தத்தை ஒரு மனிதன் எப்படி பார்க்கவேண்டும்? என்றால் ஆனது ஆகிவிட்டது.

இப்பொழுது சயனத்திலே படுத்துக் கொண்டு காலையில் என்ன நடக்குமோ? என்று கவலைப் படுவதாலோ அல்லது இன்று அதிகாலையில் இப்படி நடந்துவிட்டதே? என்று வருத்தப்படுவதாலோ இரண்டையும் அவனால் மாற்றி விடப் போவதில்லை. இப்பொழுது என்ன வேலை? சயனம் கொள்ள வேண்டிய வேலை. விழிகளை மூடி இறைவா உன் அருளால் இன்றைய தினம் ஓரளவு நன்றாக சென்று விட்டது. நாளைய தினம் நன்றாக இருக்க வேண்டும். நான் தரை மார்க்கத்தில் வெற்றி பெறுவதற்காக உழைக்கிறேனோ இல்லையோ இறை மார்க்கத்தில் வெற்றி பெற அன்றாடம் உழைக்க வேண்டும். அதற்கு வேண்டிய உந்து சக்தியை உத்வேகத்தை கொடு என்று எண்ணி இறை நாமாவளியை மனதிற்குள் மெல்ல மெல்ல சொன்னால் அந்த மன அழுத்தம் மன பாரம் குறைந்து உறக்கம் என்பது மெல்ல வரும். எனவே இதுபோல் நிலையிலே ஒரு மனிதன் மன அழுத்தமில்லாமல் வாழ அவன்தான் பயிற்சி எடுக்க வேண்டும்.

ஒரு மனிதனின் இருதயமானது நான் இந்த கூட்டுக்குள் இருக்கிறேன். எனக்கு சத்துள்ள உணவை இந்த மனிதன் இன்று கொடுக்கவில்லை. எனவே நான் இயங்க மாட்டேன் என்று கூறினால் என்னவாகும்? ஒரு மனிதனின் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் போராடி போராடி ஜீவித்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறதா? சரியான உணவை இந்த மனிதன் தந்தாலும் தராவிட்டாலும் போராட வேண்டும் என்ற எண்ணம் உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கு இருக்கிறது. சிந்தனா சக்தியில்லாமல் வெறும் இயந்திரகதியில் இயங்குகின்ற உறுப்புகளே அவ்வாறு இயங்கும் போது சிந்தனையாற்றல் கொண்ட மனிதனானவன் இதனால் நான் இதனை செய்யவில்லை. இந்த பிரச்சினை இருப்பதால் நான் இன்று பூஜை செய்யவில்லை. இந்த கஷ்டம் வந்துவிட்டதால் நான் இன்று அதிகாலை எழவில்லை. இப்படியொரு சிக்கலான சூழல் இருப்பதால் நான் இன்று ஆலயம் செல்லவில்லை. இப்படியொரு கடுமையான பொருளாதார நெருக்கடி இருப்பதால் நான் தர்மம் செய்யவில்லை என்று காரண காரியங்களை அடுக்கிக் கொண்டே செல்லாமல் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மிகவும் அதி விரைவாக அவன் கடமைகளை செய்வதோடு யாங்கள் காட்டுகின்ற பாதையில் செல்லவேண்டும். எனவே ஒரு மனிதன் எந்தவொரு நிலையிலும் தன்னுடைய குடும்பக் கடமைகளை தவறவிடக்கூடாது. ஆனால் பற்றும் பாசமும் அற்ற நிலையில் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு நாங்கள் அடிக்கடி கூறுவதுபோல மிக விலை உயர்ந்த வாகனத்தை ஒரு தனவான் வாங்கி அதை அவன் இயக்கத் தெரியாமல் இன்னொரு மனிதனை ஊதியத்திற்கு அமர்த்தி இயக்கும் பொழுது விலையுயர்ந்த வாகனத்தை இயக்கும் பொறுப்பு மட்டும்தான் நமது. ஆனால் நம்முடைய கடமை அதோடு முடிந்து விட்டது. இந்த வாகனத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது என்ற நிலை தெரிந்தே அந்த வாகனத்தை அவன் இயக்குகிறானோ அதைப்போல் குடும்ப பொறுப்புகளையும் மற்ற பொறுப்புகளையும் ஒரு மனிதன் ஏற்றுக் கொண்டு கடமையை ஆற்றுவது என்பது வேறு கடமையிலேயே ஆழ்ந்து கிடப்பது என்பது வேறு.எதிர்காலம் குறித்து திட்டமிடுதல் என்பது வேறு எதிர்காலம் குறித்து கவலைப்படுவது என்பது வேறு. கடந்த காலத்தை எண்ணி இனி சற்று விழிப்போடு இருக்க வேண்டும் என்று உணர்ந்து கொள்வது என்பது வேறு அதிலேயே உழன்று கிடப்பது என்பது வேறு. எனவே இந்தக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் அசைபோடு நன்மை உண்டு. நாழிகை பின்பு மீண்டும் வாக்கு உரைப்போம் ஆசிகள்.

குடந்தை இராமசாமி கோவில்

கண்ணனை ஒரு புறமிருந்து பார்த்தால் ருக்மிணியை மட்டும் அணைத்திருப்பதாய் தோன்றும். மறுபுறம் பார்த்தால் சத்யபாமாவை மட்டும் கைபிடித்திருப்பதாய் தோன்றும். தூணின் கோண பகுதியில் நின்று கண்டால் கண்ணன் இருவரையும் கைபிடித்திருப்பதை காணலாம்.