ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 387

கேள்வி: நமது பிரார்த்தனையை இன்னும் நேர்மையாகவும் துல்லியமாகவும் செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?

இறைவன் கருணையைக் கொண்டு இதுபோல் செயலை விட செயலற்ற தன்மைதான் மனிதர்களுக்கு என்றுமே ஏற்றதாகும். மௌனமும் செயலற்ற தன்மையும் என்றுமே தன்னை உணர வைக்கும். தன்னை நன்றாக உணர்ந்த பிறகு தன்னை உயர்த்திக் கொள்ளவும் தன்னை இன்னும் மேம்பாடு செய்து கொள்ளவும் யாது செய்ய வேண்டும்? என்பதை அந்த மௌன நிலையிலேயே பரம்பொருள் உணர்த்தி உணர்த்தி மெல்ல மெல்ல ஆத்மாவை மேலே சேர்க்கும். எனவே அதனால்தான் யாம் அடிக்கடி கூறுவது மௌனம் பழகு மௌனம் பழகு, மௌனம் பழகு. அந்த மௌனத்திலிருந்து அனைத்துமே ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. வாய் பேசாதது மௌனமல்ல. மனம் பேசாமல் இருப்பதுதானப்பா மௌனம். அதையேதான் ஒட்டுமொத்த இவன் வினாவிற்கும் விடையாகக் கூறுகிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 386

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இறைவனின் அருளைக்கொண்டு இயம்புகிறோம் இத்தருணம் இறைவன் அருளாலே நல்லாசி எம்முன்னே அமர்ந்துள்ள சேய்களுக்கு.

இயம்புங்கால் இறைவனை வணங்கி இறைவனை வணங்கி இறையை வணங்கி என்று யாம் துவங்குவதன் பொருள் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளின் வடிவம் இப்படித்தான் என்று வைத்துக் கொள்ள இயலாது. இதுபோல் வடிவத்தில் மனதை லயிக்க விட்டு பிறகு வடிவமற்ற பூரணத்தை உணர்தலே மெய்ஞானமாகும். இதுபோல் இறையென்றால் அதற்குள் பூரணம் அனைத்தும் அடங்கியது என்பதாலும் ஓர் ரூபம் ஓர் வடிவம் ஓர் நாமம் இல்லாதானே பரம்பொருள் என்றும் அந்தக் கருத்தினைக் கொண்டே யாம் பொதுவில் இறை வணங்கி என்று இயம்புகின்றோம். இத்தகு இறைதன்னை மூத்தோனாக இளையோனாக முக்கண்ணனாக மகாவிஷ்ணுவாக நான்முகனாக அன்னையர்களாக இன்னும் இன்னும் பலப்பல ரூபங்களாக மாந்தர்கள் வழிபடுவதும் வணங்குவதும் அந்தந்த மனிதனின் மனப்பான்மைக்கு ஏற்ப அவனவன் வணங்கி வருவதும் நன்றுதான்.

பின்பு என்றுதான் அனைத்தும் பூரணம் ஒன்று என்று உணர்வது? அந்த ஒன்றினை உள்ளுக்குள் உணர்ந்து அந்த ஒன்றுக்குள் மனதை ஒன்ற வைத்து அந்த ஒன்றையே ஒன்றி ஒன்றி ஒன்றி ஒன்றே ஒன்று என்று உணரும் வண்ணம் ஒரு நிலை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வரும் வரை மனிதன் அவனவன் வழியில் செல்ல அதுபோல் பரம்பொருளே வழிவிடுகிறது. அத்தகு இறைக்கு பரம்பொருளுக்கு பரிபூரண சரணத்தை மனம் வாக்கு காயத்தால் எந்த மனிதன் வைத்து விட்டானோ அவனே சாயுச்சம் சாரூபம் சாலோகம் சாமீபம் என்கிற இதுபோல் நிலைகளை அடைவான். இதுபோல் நிலைதாண்டியும் இறை இருக்கிறது என்பதால் இந்த நிலை நோக்கி இந்த சேய்கள் தொடர்ந்து வர இறைவன் அருளால் யாம் மீண்டும் நல்லாசிகள் கூறுகிறோம்.

இதுபோல் பொதுவில் வாக்கு என்றால் தனித்து என்று? என்பது ஏக ஏக மாந்தனின் வினாவாகும்.

ஆகுமப்பா பொதுவில் கூறுவதையும் அதுபோல் தனிமையில் கூறுவதையும் யாம் ஒரு பொழுதும் இறைவனருளால் பூர்த்தி என்று சொல்லவில்லை. என்றாலும் தக்க ஆத்மாக்களுக்கு புரிதலுள்ள ஆத்மாக்களுக்கு கடுகளவேனும் இந்த ஜீவ அருள் ஓலைதன்னை புரிந்து கொண்டு இதன் வழியில் நடக்க சித்தமாய் உள்ள ஆத்மாக்களுக்கு இதுபோல் ஓலை வாசிக்கப்பட்டாலும் வாசிக்கப் படாவிட்டாலும் யாம் இறைவன் அருளால் தோன்றாத் துணையாக இருந்து கொண்டே இருக்கிறோம் அப்பா. அப்பனே இதுபோல் இப்பிறவிக்கு தாய் தந்தை தெரிகிறது மாந்தனுக்கு. எப்பிறவிக்கும் தாய் தந்தை யார்? என்றால் அது இறைதான். அந்த இறையை உணர்வதற்கு அல்லது அந்த இறை உணர்த்துவதை உணர்வதற்கு வேண்டியது முழுக்க முழுக்க சத்தியமும் தர்மமும் மட்டுமே. இந்த சத்தியத்தையும் தர்மத்தையும் வைத்துக் கொண்டு அதன் பின்பு கடுகளவு பக்தி இருந்தால் அதுவே போதும் இறையை உணர்ந்து கொள்ள. எனவே இதுபோல் இறையை தரிசிப்பதும் இறையை தரிசித்து அதன் அருளை உணர்வதும் மிக எளிது.

இயம்பிடுவோம் மேலும். எளிது என்றால் ஏன் அது அனைவருக்கும் சாத்தியப்படவில்லை? என்று ஆய்ந்து பார்க்குங்கால் யாங்கள் அடிக்கடி கூறுவது போல மாந்தனுக்கு தான் உணர்ந்ததை தான் பார்த்ததை பிறர் நம்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால் கட்டாயம் இறை சார்ந்த பலன் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இல்லை என் அறிவு என் வித்தை என் உழைப்பு நான் முன்னேறுகிறேன். இறை எங்கே வந்தது? பிறவி எங்கே வந்தது? நவக்கிரகம் எங்கே வந்தது? இதையெல்லாம் நம்பாத மாந்தர்களும் நன்றாக வாழ்கிறார்களே? என்றால் இதுபோல் யாம் கூறியதைக் கூறுகிறோம். ஒவ்வொரு பிணி நீக்கும் மருந்து தொடர்பான அந்த விகிதத்திலே இன்ன இன்ன உட்பொருள்கள் கலக்கப்பட்டு இருக்கின்றன என்கிற குறிப்பு இருக்கும். ஆயினும் அதுபோல் வித்தை கல்லாத மனிதனுக்கு அந்த குறிப்பை வாசித்தாலும் புரியாது. பெரும்பாலும் யாரும் வாசிப்பதும் இல்லை. அதற்காக அந்த மருந்து உள்ளே சென்றால் இவனுக்கு என்னைப் பற்றித் தெரியாது. எனவே ஏன் என் கடமையை செய்ய வேண்டும்? என்று வாளாய் இருக்கிறதா? இல்லையே. மருந்தின் நுட்பம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் மருந்து எப்படி வேலை செய்கிறதோ அதுபோல் பிறவி இருக்கிறது என்று நம்பினாலும் நம்பாவிட்டாலும் நவக்கிரகங்கள் வாயிலாக இறைவன் பரிபாலனம் செய்கிறார் என்பதை ஒரு மனிதன் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுபோல் நடந்து கொண்டேதான் இருக்கும் இறைவனின் விளையாடல். இதுபோல் நிலையிலே ஒன்றை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் கூட அவனவன் கர்ம பாவத்தைப் பொருத்தது.

இதுபோல் எம் சேய்களுக்கு நம்பும் சேய்களுக்கும் நம்பா சேய்களுக்கும் இனிவரும் சேய்களுக்கும், இனி எதிர்காலத்தில் இந்த ஜீவ அருள் ஓலைதன்னை நாடி வருகின்ற சேய்களுக்கும் இறைவனருளால் யாம் தற்சமயம் கயிலையில் இருந்தே நல்லாசிகளைக் கூறுகிறோம். ஆசிகள் ஆசிகள் ஆசிகள்.

அர்ஜூனனின் ஆர்வம்

அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரர் துரோணாச்சாரியரை அழைத்தார். அவர் வந்ததும் எனக்கு ஒரு சந்தேகம் என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன். சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல் வித்தைக்களை கற்பிப்பது தானே நல்ல ஆசானின் இலக்கணம்? என்று திருதராஷ்டிரன் கேட்டார். ஆம் மன்னா பதிலளித்தார் துரோணர். தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழ வேண்டும் என்பதே எனது விருப்பம். மன்னா என்ன கூறுகிறீர்கள்? திடுக்கிட்டார் துரோணர். துரோணரே பாண்டவர்களையும் கௌரவர்களையும் தாங்கள் சரிசமமாக பாவித்து வித்தைகளைக் கற்பிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் திருதராஷ்டிரர்.

பாண்டவர்கள் மீது பொறாமை கொண்ட கௌரவர்கள் தன்னைப் பற்றி தவறாக ஏதோ சொல்லி இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டார் துரோணர். பிறகு அவர் மன்னிக்க வேண்டும் மன்னா நான் எந்த விதப் பாகுபாடும் காட்டுவதில்லை. ஆர்வம் முயற்சி உத்வேகம் தனித்தன்மை போன்ற இயல்புகள் எல்லோரிடமும் ஒரே மாதிரி அமையவில்லை என்பதைத் தாங்கள் உணர வேண்டும் என்று திருதராஷ்டிரனிடம் எடுத்துக் கூறினார். அதோடு கௌரவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று துரோணர் எண்ணினார். மறு நாள் காலை நேரத்தில் பாண்டவர்களும் கௌரவர்களும் வித்தைகள் பயில்வதற்காக வந்து துரோணரை வணங்கி நின்றனர். அவர்களிடம் துரோணர் சீடர்களே இன்று நான் ஓர் அரிய வித்தையை உங்களுக்குக் கற்பிக்கப் போகிறேன். அதற்காக நாம் காட்டுக்குச் செல்லலாம் என்றார். உடனே அனைவரும் துரோணருடன் புறப்பட்டனர்.

ஓர் ஆற்றங்கரையை அடைந்தனர். சீடர்களை அங்கு அமருமாறு கூறிய துரோணர் ஆற்று மணலில் தன் விரலால் ஒரு ஸ்லோகத்தை எழுதினார். சீடர்களே இன்று உங்களுக்குக் கற்பிக்கப் போகும் வித்தை மூலம் ஒரு காட்டையே எரித்து பஸ்பமாக்கி விடலாம். நான் எவ்வாறு இந்த ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப் பிரயோகிக்கிறேன் என்று கூர்ந்து கவனியுங்கள் என்றவர் அர்ஜுனனிடம் அர்ஜுனா கமண்டலத்தை எடுத்து வர மறந்து விட்டேன். நீ விரைவாகச் சென்று ஆசிரமத்தில் இருந்து அதை எடுத்து வா என்றார். குருநாதர் கற்பிக்கும் இந்த அரிய வித்தையைக் கற்கும் வாய்ப்பு நழுவி விடுமோ? என்ற கவலையுடன் குருநாதரின் குடிலை நோக்கி விரைந்தான் அர்ஜுனன். கமண்டலத்துடன் திரும்பியவன் அவர்கள் ஆற்றங்கரையைத் தாண்டிச் செல்வதைப் பார்த்தான். உடனே ஆற்றைக் கடந்து அவர்களிடம் சென்றான். கமண்டலத்தை குருநாதரிடம் தந்தான். குருவே என்னை மன்னியுங்கள் சற்றுத் தாமதமாகி விட்டது என்றான் அர்ஜுனன். அவனிடமிருந்து கமண்டலத்தைப் பெற்றுக் கொண்ட துரோணர் மற்றவர்களிடம் தனது உரையைத் தொடர்ந்தார் நல்லது சீடர்களே இன்று கற்பித்த வித்தையில் எவருக்காவது சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள் என்றார். குருவே நான் வருவதற்குள் பாடம் முடிந்து விட்டதா? என்று ஏமாற்றமாகக் கேட்டான் அர்ஜுனன். ஆம் என்று அவனுக்கு பதிலளித்த துரோணர் மற்றவர்களை நோக்கி சரி ஒவ்வொருவராக வந்து ஸ்லோகம் சொல்லி அம்பைப் பிரயோகித்து அந்தக் காட்டுப் பகுதியை எரியுங்கள் பார்க்கலாம் என்றார்.

கௌரவர்கள் நூறு பேர் பாண்டவர்கள் நால்வர் (அர்ஜுனனைத் தவிர) என ஒவ்வொருவராக வந்து ஸ்லோகத்தை உச்சரித்து அஸ்திரம் பிரயோகித்தனர். ஆனால் பலன் இல்லை. என் உழைப்பு மொத்தமும் வீண் என்று கோபத்தில் கத்தினார் துரோணர். குருவே தாங்கள் ஆணையிட்டால் அந்தக் காட்டை நான் எரித்துக் காட்டுகிறேன் என்று அர்ஜுனன் முன்வந்தான். உடனே கௌரவர்களிடையே பெரும் சலசலப்பும் கேலிக் கூக்குரல்களும் எழுந்தன. பாடம் நடத்தும் போது இவன் ஆளே இல்லை. பாடத்தைக் கவனித்த நம்மாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. இவன் எரித்துக் காட்டப் போகிறானாம். நல்ல வேடிக்கை என்று இகழ்ந்தனர். வீணாக குருவின் கோபத்துக்கு ஆளாகப் போகிறான் என்றான் கௌரவர்களில் ஒருவன். துரோணர் அர்ஜுனனிடம் எங்கே எரித்துக் காட்டு. பார்க்கலாம் என்றார். வில்லையும் அம்பையும் எடுத்த அர்ஜுனன் கண்களை மூடி ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப் பிரயோகித்தான். உடனே காடு திகுதிகுவென தீப்பிடித்து எரிந்தது கௌரவர்கள் உட்பட அனைவருக்கும் பிரமிப்பு. அர்ஜுனா மந்திர உபதேசம் செய்யும் போது நீ இங்கு இல்லை. பிறகு எப்படி உன்னால் இதைச் சாதிக்க முடிந்தது? என்று துரோணர் கேட்டார். குருவே கமண்டலத்துடன் ஆற்றங்கரைக்கு வந்த போது அங்கு நீங்கள் மணலில் எழுதிய மந்திர ஸ்லோகம் பார்த்தேன் படித்தேன். அதை மனதில் பதிய வைத்தேன் அவ்வளவுதான் என்றான். துரோணரின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. ஒரு சீடனிடம் ஆர்வம் இருந்தால் குருவின் போதனையை எப்படியும் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு அர்ஜுனனே சாட்சி என்ற துரோணர் கௌரவர்களைப் பார்த்தார். வெட்கித் தலை குனிந்தனர் கௌரவர்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 385

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணுகின்ற நன்மைகளை எண்ணுகின்ற நல்ல ஆத்மாக்களுக்கு இறைவன் அருள் என்றும் தொடரும். இறைவனின் கருணையைக்கொண்டு நாங்கள் சில ஆத்மாக்களை கடைத்தேற்ற என்றென்றும் ஒரு முயற்சியில் இறங்கிக் கொண்டே இதுபோல் இறைவன் இறைவன் என்று கூறிக்கொண்டே அந்த இறைவனின் கருணையை அந்த ஆத்மாக்கள் உணரும் பொருட்டு உய்யும் பொருட்டு ஒரு கருவியாக இருந்து செயல் பட்டுக் கொண்டே இருக்க அதே இறைவன் எம்மை படைத்த காரணம் என்று எண்ணி யாம் என்றென்றும் எம்வழி சென்று கொண்டிருக்கிறோம். இதுபோல் பலவிதமான ஆர்வம் எம்மீது கொண்ட பல்வேறு மனிதர்களை யாங்கள் அறிவோம். அதுபோல் மெய்யாக மெய்யாக மெய்யாக எம் மீதும் எம் வழிமுறை மீதும் ஆர்வம் கொண்ட அனைத்து ஆத்மாக்களுக்கும் நாங்கள் நல்லாசிகளை என்றுமே வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.

ஆனாலும் மனிதர்கள் தாம் தாம் அறிந்த வகையிலே சிந்திப்பது யாதென்றால் தன்னை விட உயர் சக்தியின் துணை கிடைத்து விட்டால் தன்னை விட மேம்பட்ட சக்தியின் உதவி கிடைத்து விட்டால் குறிப்பாக இது போன்ற சித்தர்களின் அருளாசி கிடைத்து விட்டால் அல்லது சித்தர்களின் தொடர்பு இருந்து விட்டாலே எவ்வித துன்பங்களும் இல்லாமல் வாழ்க்கை சுகபோகமாக செல்ல வேண்டுமே ஆனால் அவ்வாறு செல்வதில்லையே? பிறகு எப்படி இது போன்ற விஷயங்களை நம்புவது? சித்தர்களை நம்பி ஓரளவு சித்தர்கள் வழியில் வருகின்ற மனிதர்களுக்கும் துன்பம் இருக்கிறது. இதனை நம்பாத மனிதர்களுக்கும் துன்பம் இருக்கிறது. என்ன பெரிய வேறுபாடு? என்றெல்லாம் மனிதர்கள் எண்ணுகின்ற எண்ண ஓட்டங்கள் அனைத்தையும் யாம் அறிவோம்.

பலமுறை யாங்கள் ஞானமார்க்கம் குறித்து விதவிதமான வார்த்தைகளை பயன்படுத்தி கூறினாலும் கூட அறியாமையும் மாயையும் பற்றும் பாசமும் மனிதனை ஒரு நிலைக்குமேல் சிந்திக்க விடுவதில்லை. இறைவனின் கருணையால் மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டியது யாதென்றால் இதுபோல் ஆசையும் தீவிர ஆசையும் நிலையற்ற தன்மை மேல் வைக்கின்ற பற்றும் என்றுமே துன்பத்தை தந்து கொண்டுதான் இருக்கும். விழிப்புணர்வற்ற ஞானமற்ற ஒன்றின் மீது மனிதன் வைக்கின்ற விருப்பமோ ஆசையோ பற்றோ கட்டாயம் ஒரு நிலையில் அவனுக்கு இன்பத்தை தருவதுபோல் இருந்தாலும் மறுநிலையில் துன்பத்தைத் தரும். அதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு வனாந்தரம் செல்ல வேண்டுமா? குகையிலே அமர்ந்து சதா சர்வகாலம் தவம் செய்ய வேண்டுமா? என்றெல்லாம் மனிதர்கள் வினவலாம். அது ஒரு நிலை.

இந்த சமூக வாழ்க்கையை நன்றாக நேர்மையாக மேற்கொள்வதோடு எந்த பந்தபாசத்திலும் பற்றிலும் ஆழ்ந்து விடாமல் வாழப்பழகுவதே மெய் ஞானத்தை நோக்கி நன்றாக வலுவாக செல்வதற்குண்டான வழிமுறையாகும். ஒன்று தீவிரமான நேர்மையான சிந்தனையை வளர்த்துக் கொண்டு அந்த நேர்மையான சிந்தனைக்கு பங்கம் வராமல் வாழக் கற்றுக் கொண்டிட வேண்டும். இல்லையென்றால் பரிபூரண சரணாகதி பக்தியிலே தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அனைத்தும் இறைவனுக்குத் தெரியும். இறைவன் பார்த்துக்கொள்வார் என்று வாழ்ந்து விட வேண்டும். ஆனால் மனிதர்கள் சில சமயம் அப்படியும் சில சமயம் இப்படியும் வாழ்வதே பல்வேறு விதமான குழப்பங்களுக்கு வழி வகுக்கிறது. இப்படி வழி வகுத்திடாமல் மனிதன் தன்னையும் நிம்மதியாக வைத்துக் கொண்டு தன்னை சுற்றி உள்ளவர்களையும் நிம்மதியாக வாழும்படி செய்வதற்குண்டான செயலை செய்வதே வாழ்க்கையை எமது வழியில் வாழ்வதற்கு ஒப்பாகும். தன்னை சுற்றியுள்ள எல்லா வகை உயிர்களுக்கும் எந்த வகையிலும் தீங்கை செய்யாமல் எண்ணுகின்ற எண்ணத்தில் கூட பிறரை இழிவாக தரக் குறைவாக எண்ணாமல் பிறரை பற்றி ஒரு தவறான விமர்சனத்தை உருவாக்கி விடாமல் வாழக் கற்றுக்கொள்ள அதே இறைவழியில் செல்வதற்குண்டான சரியான வழியாகும்.

சதுரகிரி

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலை சதுரகிரியாகும். சதுர் என்றால் நான்கு. கிரி என்றால் மலை நான்கு திசைகளிலும் திசைக்கு நான்கு மலைகள் வீதம் மொத்தம் பதினாறு மலைகள் இருக்கின்றன. சதுரகிரி தன்னுள் கிழக்கே சூரிய கிரி குபேர கிரி சிவகிரி சக்தி கிரி மேற்கே விஷ்ணுகிரி சந்திர கிரி வடக்கே கும்ப கிரி மகேந்திர கிரி இந்திர கிரி சஞ்சீவி கிரி தெற்கே பிரம்ம கிரி சித்தி கிரி இராம கிரி உதய கிரி இருக்கிறது.

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன் திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் தன் மாமனார் வீட்டிற்கு தினமும் அவர்களுக்குத் தேவையான பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள். வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார் இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான்.

தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட துறவி அவளுக்கு சடதாரி என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால் மனம் திருந்தி சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் தரிசனம் கொடுக்க நினைத்த இறைவன் ஒருநாள் சிவன் ஒரு துறவியின் வேடத்தில் சிவ பூஜைக்கு பால் கொடுக்கும் காராம் பசுவின் மடுவில் வாய் வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்து விட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன் என்று தெரிவித்து மறைந்தார்.

சதுரகிரி மலையில் ஐந்து கோவில்கள் உள்ளன. 1. மகாலிங்கம் 2. சுந்தரமூர்த்தி லிங்கம் 3. சந்தன மகாலிங்கம் 4. இரட்டை லிங்கம் 5. காட்டு லிங்கம். சதுரகிரி மலையில் கிடைக்கும் பல அற்புத மூலிகைகள் உள்ளது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும். பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சம் சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள் மூலிகைகள் இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

சதுரகிரி மலையில் வாழும் மலைவாழ் மக்கள் பளியர்கள் வழிபட்டு வந்து பின்னர் மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் இராமகாடையா நாயக்கர் என்பவரால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் கோவில்கள் கட்டப்பட்டது. சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருக்கிறார். 1950 ஆம் ஆண்டு வரை இக்கோவில் பாளையக்காரர் பராமரிப்பில் இருந்து வந்தது. இம்மலை பகுதி 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப் பாட்டில் இருந்து வருகிறது.

கோரக்க முனிவரால் உதகம் என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குணம் கொண்ட மரம் செடி கொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கிய சுனைகளாக இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் உதகம் என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர் போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்தவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்களின் மூலமும் துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 384

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் கால காலம் வாழ்வியல் துன்பங்களுக்கு தீர்வு தேடி மாந்தர்களில் சிலர் எம்மை நாடுவது உண்டு . துன்பங்கள் எல்லாம் ஒரு கணப்பொழுதில் அல்லது விழி மூடி விழி திறப்பதற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே மனிதனின் நோக்கமாக இருக்கிறது. அணுவளவும் துன்பமே இல்லாமல் வாழ வேண்டும் சதா சர்வகாலமும் இன்பமும் சாந்தியும் வாழ்வில் நிலவ வேண்டும் என்பதே மனிதர்களின் எண்ணமாக இருக்கிறது. இதை தவறு என்று நாங்கள் கூறமாட்டோம். ஆனால் இந்த இன்பமும் நிம்மதியும் இந்தந்த விதத்தில்தான் இருக்க வேண்டும் என்று மனிதன் எதிர்பார்க்கிறானே அந்த எதிர்பார்ப்புதான் குறையாக மாறி விடுகிறது. எனவே மனிதர்கள் எதிர்பார்க்கக் கூடிய நீடித்த இன்பமும் நிலைத்த சாந்தியும் இறைவனின் பாதாவிந்தங்களை சரண் அடைந்து இறையோடு சாயுச்சமோ சாரூபமோ சாலோகமோ சாமீபமோ ஏதாவது ஒரு ஆன்ம பரிணாம வளர்ச்சி நிலை அடைந்தால் ஒழிய மனிதனுக்கு கிட்டாது.

இந்த உலக வாழ்விலே உன்னதங்களை அடைந்தால் நிம்மதி சந்தோஷம் என்று அதை அடைவதற்கு முன்னால் ஒரு மனிதன் எண்ணுவான். அடைந்த பிறகு அப்படி அவனால் நிம்மதியாக சந்தோஷமாக வாழ இயலாது. மனித மனம் பக்குவம் பக்குவம் பக்குவம் என்று பக்குவத்தின் உச்ச நிலையிலே நின்று பார்க்கும் பொழுது அவன் எதிர் பார்க்கின்ற அனைத்தும் அபத்தமாகத் தெரியும். யாங்கள் மிகத் தெளிவாகக் கூறுகிறோம் என்றாலும் மனிதனால் புரிந்து கொள்ள முடியாத நிலை அவன் கர்மாவில் அடங்கி இருக்கிறது. பெற்று வந்த கர்ம பாவத்தை நுகர்வதற்காக வந்த உடல் சார்ந்த விஷயங்களுக்கு மட்டும் வாழ்வது என்பது மனிதனின் இயல்பான விஷயம். அதை எதிர்த்து இறை நோக்கி செல்வதுதான் மகான்களின் ஆன்ம போதனையாகும். எனவே இயல்பான விஷயங்களுக்காக ஒரு மகானையோ ஞானியையோ மனிதன் நாட வேண்டியதில்லை. அதற்காக இயல்பான விஷயங்களே வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை.

விதி போக்கில் எப்படியெல்லாம் அவை கிட்டுகிறதோ அப்படியே மனிதன் அதை ஏற்றுக் கொள்ளட்டும். ஒரு வேளை அவன் விரும்புவது போல் அது கிட்டாமல் போனாலும் மிகப் பெரிய இழப்பு ஏதும் இல்லை. ஆனால் ஆன்மீக வழியில் வராமல் வரும் சிந்தனை கூட இல்லாமல் பாவம் புண்ணியம் என்கிற பேதம் தெரியாமல் வெறும் விலங்குகளைப் போல் உண்டு உறங்கி சந்ததிகளை உற்பத்தி செய்து வாழும் மனிதர்கள் அனைவரும் எம் பார்வையில் பரிதாபத்திற்கு உரியவர்கள் அவர்கள் இன்னும் எத்தனையோ பிறவிகள் எடுத்துதான் ஆன்ம ஞான வழியை நோக்கி செல்ல இயலும். அது போன்ற மனிதர்களை கூட சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பல்வேறு பிறவிகளில் சேர்த்த ஓரளவு புண்ணியத்தின் காரணமாக ஏதாவது ஒரு பிறவியிலே நல்ல வழியை இறைவன் காட்டிக் கொடுத்தாலும் கூட தடுமாற்றத்தாலும் குழப்பத்தாலும் வேறு வேறு வாழ்வியல் சிக்கலை முன்னிறுத்தி அந்த ஆன்மீக வழியை புரிந்து கொள்ள மாட்டேன் என்றோ அல்லது புரிந்தாலும் அதன் வழியாக வரமாட்டேன் என்று சில மனிதர்கள் வாழ்கிறார்களே அதுதான் விதியின் கொடுமையிலும் கொடுமை ஆகும். எனவே உலகியல் வாழ்விற்காக கடுமையாக ஒருவன் போராடக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. கடுமையாக ஒருவன் உழைக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அந்த செயலின் காரணமாக மறந்தும் பாவத்தை சேர்க்கக் கூடாது என்பதுதான் எமது கோட்பாடாகும்.

கூடுமானவரை யாரையும் பாதிக்காமல் யார் மனதையும் புண்படுத்தாமல் தத்தம் கடமைகளை நேர்மையாக ஆற்றி தன்னால் முடிந்த தர்ம காரியங்களை ஆற்றி அன்றாடம் இறை நாமாவளியை ஆழ் மனநிலையில் நிறுத்தி சிந்தித்து ஒரு மனிதன் வாழ்ந்தாலே தேடுகின்ற நிம்மதியும் சந்தோஷமும் அவனைப் பின்தொடரும். இறைவனின் அருளாசியும் வந்து சேருமப்பா. இதை சரியான விகிதாசாரத்திலே புரிந்து கொண்டு எந்த விதமான காழ்ப்புணர்ச்சிக்கும் இடம் தராமல் எம் வழியில் வர முயற்சி செய்தால் இறைவன் அருளைக் கொண்டு யாமே அதுபோல் மனிதனை கரை சேர்ப்போம் அப்பா.

பன்னிரு திருமுறைகளின் வரலாறு

ராஜ ராஜ சோழன் என்னும் சோழப் பேரரசன் கோவில்களில் வாய் மொழியாகப் பாடப் பெற்ற தேவாரப் பாடல்களைக் கேட்டு இப்பாடல்களைத் தொகுக்க எண்ணினார். தேவாரப் பாடல்கள் இருக்கும் இடத்தை விநாயகரின் அருளுக்குப் பாத்திரமான நம்பியாண்டார் நம்பி என்பவர் மூலம் சிதம்பரம் கோவிலின் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்தார். தேவாரம் பாடிய மூவர் வந்தால் மட்டுமே அறையின் கதவினைத் திறக்க முடியும் என சிதம்பரம் கோவிலில் கூறினார்கள். காலம் சென்ற அம்மூவரையும் எவ்வாறு கொண்டு வருவது? என மன்னன் சிந்தித்தார். உடனே தேவார மூவரையும் சிலை வடிவில் அங்கு கொண்டு வந்து அறையினை திறக்கச் செய்தார். அங்கு ஓலை சுவடிகள் பல செல்லரித்து இருந்தன. மீதம் உள்ளவற்றை நம்பியாண்டார் நம்பி கிபி பதினோராம் நூற்றாண்டில் பதினோரு திருமுறைகளாகத் தொகுத்தார். பின் அநாபாயச் சோழ மன்னனின் வேண்டுகோளின்படி சேக்கிழார் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் பாடல்களைப் பாடினார். திருதொண்டர் புராணம் நூலானது 12 வது திருமுறையாக பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டது.

பன்னிரு திருமுறைகள்

1 2 3 – ஆம் திருமுறைகள்

திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் 1 2 3 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப்படுகிறது. சம்பந்தரின் பாடல்கள் தமிழ் இலக்கியத்தையும் இசையும் மிளரச் செய்கின்றன.

4 5 6 ஆம் திருமுறைகள்

திருநாவுக்கரசரால் பாடப்பட்ட பாடல்கள் 4 5 6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. அப்பரின் பாடல்கள் தொண்டின் மூலம் இறைவனை அடையலாம் என்பதை விளக்குகின்றன.

7 ஆம் திருமுறை

சுந்தரர் பாடிய பாடல்கள் 7 ஆம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சுந்தரரால் பாடப்பட்ட பாடல்கள் திருப்பாட்டு என்று அழைக்கப்படுகிறது. சுந்தரர் பாடிய பாடல்கள் சுந்தரர் தேவாரம் என்றும் அழைக்கப்படுகிறது.

8 ஆம் திருமுறை

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. தேன் ரசம் கொட்டும் இவரின் பாடல்கள் இறைவனைச் சரணடைதல் மற்றும் பக்தி பற்றி விவரிக்கிறது.

9 ஆம் திருமுறை

  1. திருமாளிகைத்தேவர் 2. கருவூர்த்தேவர் 3. பூந்துருத்தி நம்பிகாட்ட நம்பி 4. கண்டராதித்தர் 5. வேணாட்டடிகள் 6. திருவாலியமுதனார் 7. புருசோத்தம நம்பி 8. சேதிராயர் 9. சேந்தனார் ஆகிய ஒன்பது நபர்களால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டது. இத்திருமுறையில் உள்ள நூல்கள் திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகியவை ஆகும். சேந்தனார் மட்டும் திருப்பல்லாண்டு திருவிசைப்பா இரண்டையும் பாடியுள்ளார். ஏனையோர் திருவிசைபாவினை மட்டும் பாடியுள்ளனர்.

10 ம் திருமுறை

திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் இறைவனைப் பற்றியும் பக்தியோகம் அட்டாங்கயோகம் கர்ம யோகம் ஞானம் ஆகியவற்றை எடுத்துக் கூறுகிறது.

11 ஆம் திருமுறை

  1. திருஆலவாயுடையார் 2. காரைக்கால் அம்மையார் 3. ஐயடிகள் காடவர்கோன் 4. சேரமான் பெருமான் 5. நக்கீரர் 6. கல்லாடர் 7. கபிலர் 8. பரணர் 9. இளம்பெருமாள் அடிகள் 10. அதிராவடிகள் 11. பட்டினத்தடிகள் 12. நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரண்டு நபர்களால் பாடிய பாடல்கள் 11 ஆம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. 11 ஆம் திருமுறையில் உள்ள நூல்கள் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

12 ஆம் திருமுறை

63 நாயன்மார்களின் வரலாற்றைப் பற்றிய சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் 12 ஆம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது.

முதல் திருமுறையின் முதல் பாடல் தோடுடைய செவியன் எனத் தொடங்குகிறது. இப்பாடலின் முதல் எழுத்தான தோ என்பது த் + ஓ எனப் பிரிக்கப்படுகிறது. இதில் ஓ என்பது பிரவண மந்திரமான முதல் எழுத்தைக் குறிக்கிறது.

பன்னிரெண்டாவது திருமுறையான திருத்தொண்டர் புராணத்தின் முதல் பாடல் உலகெல்லாம் என்று தொடங்குகிறது. இதில் கடைசி எழுத்து ம் என்பது பிரவண மந்திரமான கடைசி எழுத்தைக் குறிக்கிறது. எனவே இப்பாடல்கள் வேதங்களின் விளக்கங்கள் எனப் போற்றப்படுகின்றன.

பன்னிரு திருமுறைகள் முதல் ஒன்பது திருமுறைகள் இறைவனை வாழ்த்திக் கூறுவதால் இவை தோத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

10 ஆம் திருமுறை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக உள்ளதால் சாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

11 ஆம் திருமுறை பாடல்கள் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

12 ஆம் திருமுறை பாடல்கள் 63 ஆம் நாயன்மார்களின் வாழ்க்கையை விளக்குவதால் இது வரலாறு என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆவணி முதல் ஞாயிறுக்கு முன் 12 நாட்கள் பன்னிரு திருமுறைகள் பற்றிய உரையானது நிகழ்த்தப்படுகிறது. ஆவணி மாதம் முதல் ஞாயிறு அன்று திருமறை காண்டல் என்ற விழா சிவாலயங்களில் நடத்தப்படுகின்றது. நாமும் வாழ்விற்குத் தேவையான வளங்களை அள்ளித்தரும் பன்னிரு திருமுறைகளால் எல்லாம் வல்ல இறைவனை ஆராதித்து வாழ்வின் நன்னிலை அடைவோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 383

கேள்வி: திருவைகாவூர் ஸ்தலத்தை பற்றி

சிவராத்திரியின் புண்ணிய காலத்தை பறை சாற்றுகின்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. பொதுவாக இதுபோன்ற ஸ்தலங்களில் எல்லாம் ஆதிரை நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்பவர்களுக்கு பித்ரு தோஷங்கள் மட்டுமல்லாமல் நாகதோஷம் குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுபோல் ஸ்தலங்களிலே ஆதிரை மீனில் பிறந்தவர்கள் அல்லது ஆதிரை மீன் நடக்கின்ற காலத்திலே முழுமையான விரதத்தோடு வழிபட்டு வந்தால் இவன் கேட்ட காலசர்ப்ப தோஷமோ அல்லது வேறுவகையான நாகதோஷமோ கூடுமானவரை பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும்.

மேலும் இக்கோவிலைப் பற்றி அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 271 திருஇந்திரநீலப்பருப்பதம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 271 வது தேவாரத்தலம் திருஇந்திரநீலப்பருப்பதம். மூலவர் நீலாசலநாதர். இங்கு இறைவன் சுயம்பு மலையாக அருளுகிறார். அம்பாள் நீலாம்பிகை. இறைவன் சன்னதிக்குச் சிறிது வடகிழக்கில் பச்சை நிறமுள்ள கற்பாறையே சுயம்பு அம்பிகை. தீர்த்தம் இந்திரதீர்த்தம். இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 18000 அடி உயரமுள்ளது. பத்ரிநாத் அடிவாரத்தில் இரவு தங்கி விடியற்காலை 4 மணி அளவில் எழுந்து பார்த்தால் இந்திரநீல பருப்பதத்தை தரிசிக்கலாம். அந்நேரத்தில் இம்மலை இந்திரநீல நிறத்தில் தரிசனம் தருகிறது. இந்திரன் வழிபட்டுள்ளார். அர்ஜூனன் தவம் புரிந்த இடம். பனி பிரதேசமாகையால் பத்ரிநாத் ஆலயம் 6 மாத காலம் மூடியிருக்கும். மேலும் மழை இல்லாத காலமாகிய மே முதல் செப்டம்பர் வரை தரிசனம் செய்யலாம். இந்திரன் பூசித்த காரணத்தால் இந்திரநீலப்பருப்பதம் என பெயர் பெற்றது. இந்திரன் வழிபட்டுள்ளான் என்ற செய்தி திருஞானசம்பந்தர் தேவாரத்தின் திருக்கடைக்காப்பிலுள்ள இந்திரன் தொழு நீல பர்ப்பதம் என்னும் பகுதியால் அறியலாம். நீலகண்ட சிகரம் எனவும் அழைக்கப்படுகிறது. காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே திருஞானசம்பந்தர் இத்தலம் மீது பதிகம் பாடியுள்ளார்.