ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 193

கேள்வி: தாங்கள் வகுத்துக் கொடுத்துள்ள சாஸ்திரங்களிலும் பூஜா முறைகளிலும் யாகங்களிலும் உள்ள இடைசெருகல்களை நீக்கி மூலத்தை தந்து அருள வேண்டும்:

இடையிலே ஏற்பட்டுள்ள கருத்துப் பிழைகளையெல்லாம் நீக்க வேண்டுமென்றால் அப்படி நீக்கினாலும் அவற்றை ஏற்கும் மனம் ஒரு மனிதனுக்கு வர வேண்டும் என்றால் அதற்கு பரிபூரண இறையருள் வேண்டுமப்பா. அத்தனை எளிதாக மனித மனம் ஏற்றுக் கொள்ளாது. உலகியல் சார்ந்த முன்னேற்றத்தைத் தராத சுகத்தைத் தராத நலத்தைத் தராத எந்த சாஸ்திரமும் எந்த மரபும் மனிதனால் அத்தனை எளிதாக பின்பற்றக்கூடிய நிலைக்கு வந்து விடவில்லை. அதனால்தான் இத்தனை இடைசெருகல்கள் காலகாலம் வந்திருக்கின்றது. உதாரணமாகக் கூறுவோம். சிலவற்றை மனிதன் அறிவு கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். முற்காலத்திலே நாணயங்கள் புழக்கத்தில் இல்லை. ஆனால் தற்போது மனிதர்களிடையே நாணயம் புழக்கத்தில் இருந்தது. அது போன்ற தருணங்களிலே ஒரு சிரார்த்தம் என்றால் திதி என்றால் அதை செய்கின்ற ஊழியனுக்கு தானியங்களையும் காய்கறிகளையும் தருவது மரபாக இருந்தது. காரணம் என்ன? அதைக் கொண்டு அவன் குடும்பம் பிழைக்க வேண்டும் என்று. ஆனால் இன்றும் அதைத் தான் தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேவையான தனத்தைத் தந்தால் அவனுக்கு என்ன வேண்டுமோ அவன் அதை வாங்கிக் கொள்வான். ஆனால் இன்னமும் அதை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு நான் காய்கறிதான் வாங்கித் தருவேன் என்று இவன் கூற அவன் என்ன செய்கிறான்? காலையில் முதலில் ஒருவனுக்கு வாங்கிய அதே காய்கறியை வைத்துக் கொண்டே அனைவருக்கும் செய்து கொண்டிருக்கிறான். இந்தத் தவறுக்கு யார் காரணம்? யாருடைய மனநிலை காரணம்? எனவே சாஸ்திரங்களும் மரபுகளும் எதற்காக ஏற்படுத்தப்பட்டன? என்பதை புரிந்து கொண்டு கால சூழலுக்கு ஏற்ப சிலவற்றை தன்னுடைய சுயநலம் அல்லாமல் பொது நலம் கருதி மாற்றிக் கொள்வது தவறல்ல. ஆனால் சாஸ்த்திரங்களை மனிதன் சுயநலத்திற்காக மட்டுமே எப்பொழுதும் மாற்றுகிறான். பொது நலத்திற்காக மாற்றுவதில்லை.

தர்மம் செய் என்றால் மட்டும் இன்று வெள்ளிக்கிழமை. இப்பொழுதுதான் தனத்தை வாங்கி வந்திருக்கிறேன். நீ இரண்டு தினம் கழித்து வா. இப்பொழுதுதான் அந்தி சாய்ந்து இருக்கிறது. இப்பொழுதுதான் அந்தியிலே விளக்கேற்றி இருக்கிறேன். இப்பொழுது எதுவும் தரக்கூடாது. இன்று செவ்வாய் கிழமை. எதுவும் தரமாட்டேன். இன்று புதன்கிழமை. அதைத் தரமாட்டேன் என்று தருவதற்கு ஆயிரம் சட்ட திட்டங்களைக் கூறுகின்ற மனிதன் பெறுவதற்கு எந்த சட்ட திட்டமாவது போடுகிறானா?. வெள்ளிக்கிழமை எனக்கு தனம் வேண்டாம் என்று யாராவது கூறுகிறார்களா? வெள்ளிக்கிழமை தானே மகாலட்சுமிக்கு உகந்த தினம் என்று வழிபாடு செய்கிறான். எனவே தனக்கென்றால் ஒரு நியாயம். பிறருக்கென்றால் ஒரு நியாயம் என்பது மனிதனின் சுபாவமாகப் போய் விட்டது. இது போன்ற நிலையிலே ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லும் ஒருவனிடம் மனிதன் எப்படி கேட்கிறான்? என் ஜாதகம் நன்றாக இருக்கிறதா? நிறைய செல்வம் சேருமா? என்று தான் கேட்கிறான். நிறைய புண்ணியம் செய்தேனா? நிறைய தர்ம காரியங்களில் எனக்கு நாட்டம் வருமா? என்று யாரும் கேட்பதில்லை. அதுமட்டுமல்லாமல் ஜாதகம் சொல்கின்ற மனிதன் எப்படி சொல்கிறான்? நீ பிறருக்கு எந்த உதவியும் செய்து விடாதே. யாருக்காவது உதவி செய்தால் தேவையற்ற அபவாதம் தான் வரும். எனவே ஒதுங்கி இரு. அதுதான் உனக்கு நன்மையைத் தரும் என்றெல்லாம் போதிக்கின்ற நிலைமைக்கு இன்றைய தினம் அனைவருமே ஆளாகி விட்டார்கள். எனவே நல்லதை தர்மத்தை சத்தியத்தை விட்டுக் கொடுக்காமல் பொது நலத்தை பொது சேவையை விட்டுக் கொடுக்காமல் ஒருவன் சாஸ்திரத்தை அனுசரித்தும் சாதகமோ அல்லது பாதகமோ இல்லாமல் பொது நலம் கருதி அதில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

திரௌபதியின் கர்வம்

பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரௌபதிக்கு கிருஷ்ணரின் மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்ச உலகில் வேறு ஆளில்லை என்று கர்வம் இருந்தது. இதை கவனித்த கிருஷ்ணர் திரௌபதியின் இந்த கர்வத்தை அகற்ற எண்ணம் கொண்டார். ஒரு நாள் காட்டில் இருந்த திரௌபதியை பார்க்க வந்தார். கிருஷ்ணரை கண்ட திரௌபதைக்கு மிக்க மகிழ்ச்சி. அவள் கிருஷ்ணரிடம் அண்ணா நீங்கள் துவாரகையில் இருந்து எப்படி வந்தீர்கள்? தேர் குதிரை பல்லக்கு என எதையும் இக்காட்டில் காணவில்லையே? என்றாள். அதற்கு கிருஷ்ணர் தங்கையே மனம் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால் உந்தித் தள்ளியது. அதனால் நடந்தே உன்னை காண இங்கே வந்து விட்டேன் என்றார். அதைக்கேட்டு திரௌபதையின் கண்களில் கண்ணீர் அரும்பியது. அண்ணா என்னை காண உங்கள் பொற்பாதம் வலிக்க நடந்தே வந்தீர்களா? அவை எந்தளவுக்கு வலிக்கும். நான் வெந்நீர் போட்டுத் தருகிறேன். நீராடுங்கள் தங்களின் உடல் களைப்பு நீங்கும் நடந்த கால்களுக்கும் இதமாக இருக்கும் என்றாள். கிருஷ்ணரும் சிரித்து கொண்டே தலையாட்டினார்.

திரௌபதியின் வேண்டுதலை ஏற்று பீமன் ஒரு பெரிய கொப்பறையை வெந்நீர் போட தூக்கி வந்தான். அருகே ஓடிய ஆற்றில் கொப்பறையில் தண்ணீர் எடுத்தான். மூன்று பெரிய பாறைகளை உருட்டி வந்தான அதையே அடுப்பாக்கி கொப்பறையைத் தூக்கி வைத்தான். ஒரு காய்ந்து போன மரத்தையே ஒடித்து வந்து தீப்பற்ற வைத்தான். தீ ஜூவாலை விட்டு எரிந்தது. நீண்ட நேரம் ஆகியும் கொப்பறை தண்ணீர் துளிகூட சுடவில்லை. கிருஷ்ணர் திரௌபதியிடம் மதியம் ஆகிறது வயிறும் ஆகாரம் கேட்கிறது. தீர்த்தமாட வெந்நீர் கொடுக்கிறேன் என்றாய் என்னாச்சு? என்று கேட்டார். அதற்கு திரௌபதி கண்கலங்கியவாறே அண்ணா என்ன சோதனையோ தெரியவில்லை. கொப்பறையின் நீர் துளிக்கூட கொதிக்கவில்லை. மாறாக ரொம்பவும் குளிர்ந்திருக்கிறது என்றாள். கிருஷ்ணர் பீமனிடம் பீமா அந்த கொப்பரை தண்ணீரை கீழே கொட்டு என்றார் பீமனும் கிருஷ்ணரின் ஆணைக்கிணங்கி நீர் நிறைந்த கொப்பறையை கீழே கவிழ்த்தார். கொப்பறையின் உள்ளிருந்து ஒரு குட்டி தவளை தாவி ஓடியது. கிருஷ்ணர் திரௌபதியிடம் தீ ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்தும் அந்த நீர் குளிர்ச்சியாக இருக்க காரணம் இதுதான். அந்த தவளை சுடுநீரில் சிக்கி மாண்டு விடாமல் இருக்க என்னை பிரார்த்தித்து கொண்டே இருந்தது. பிரார்த்தனையை ஏற்று அதைக் காப்பாற்றவே கொப்பறை நீரை குளிர்ச்சியாக இருக்க செய்தேன். கொப்பறை நீர் கொதிக்கவில்லை என்று இப்போது புரிகிறதா? ஒரு குட்டி தவளையின் சரணாகதி பிரார்த்தனை கூட எனக்கு எவ்வளவு பெரியதென்று பார்த்தாயா? என்றார்.

திரௌபதிக்கு நெஞ்சில் சுரீரென உரைத்தது. கிருஷ்ணரிடம் நான் கொண்ட என் பக்தியே உயர்ந்ததென நினைத்தேனே இப்போது இந்த தவளையின் பக்தி அல்லவா உயர்ந்ததாக காண்பித்து விட்டான். ஒரு தவளை கிருஷ்ணர் மீது கொண்ட பக்தியின் காரணமாக கொழுந்து விட்டு எரிந்த தீயிலிருந்து உயிர் பிழைத்து ஓடுகிறது. அதன் பக்தியை மிஞ்சி என் பக்தி எப்படி உயர்ந்ததாக முடியும் என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 192

கேள்வி: பழனியில் சாலையோரத்தில் ஒரு உயர்ந்த ஆன்மாவை தரிசித்தோம். அவரைப் பற்றி கூறுங்கள் ஐயனே?

இறைவன் அருளால் பிற்காலத்தில் இதுபோன்ற ஆத்மாக்களைப் பற்றி நாங்கள் விளக்கம் கூறுவோம். பொதுவாகவே வாழும் மகான்கள் என்று பலரை மனிதர்கள் நாடுகிறார்கள். அதை நாங்கள் குறையோ குற்றமோ கூறவில்லை. ஆனாலும் கூட நாங்கள் ஏற்கனவே உன்னொத்து ஒருவன் வினவிய வினாவிற்கு கூறியதையே இப்பொழுதும் கூறுகிறாம். அதாவது ஒருவன் இந்த ஜீவ அருள் ஓலையை(ஜீவநாடி) நம்பி நாடி இதன் கருத்துக்களை ஏற்கத் துவங்கும் பொழுது நாங்கள் இறைவனருளால் கூறுகின்ற கருத்தையெல்லாம் 100 க்கு 100 பின்பற்றி அதன் வழியாக நடக்க நடக்க மெய்யான ஞானிகளை இவன் தேட வேண்டாம். மெய்யான ஞானிகள் இவனைத் தேடி வருவார்கள். அதுதான் ஏற்புடையது. அங்கு ஞானி இருக்கிறார் இங்கு ஞானி இருக்கிறார் என்று தேடி சென்றால் அதனால் தேவையில்லாத குழப்பங்கள்தான் ஏற்படும். எத்தனைதான் மிகப்பெரிய ஞானியாக இருந்தாலும் கூட இந்த பூமியிலே பிறவி எடுத்துவிட்டால் சில விரும்பத்தகாத குணங்களும் அவரிடம் இருக்கலாம். அப்பொழுது என்னவாகும்? அந்த ஒரு பகுதியைப் பார்க்கின்ற மனிதன் தவறாகப் பார்ப்பான். நாங்கள் நல்லவற்றை எடுத்துக் கூறினால் சித்தர்களே இப்படியெல்லாம் உயர்வாகக் கூறுகிறார்களே? எங்கள் பார்வைக்கு அப்படி தௌன்றவில்லையே? என்று ஒருவன் கூறுவான். எனவேதான் சமகாலத்தில் வாழ்கின்ற ஞானிகள் குறித்து நாங்கள் எந்த விளக்கமும் தர விரும்புவதில்லை.

கேள்வி: திருப்பதியில் பெருமாள் ஓரிடத்திலும் அலர்மேல்மங்கை தாயார் வேறொரு இடத்திலும் இருப்பதன் காரணம் என்ன?

அப்படி புறத் தோற்றத்தில் தானப்பா இருக்கிறது. வேங்கடவனின் திருமார்பிலே அன்னை திரு (மகாலட்சுமி) எப்பொழுதுமே அருள்புரிந்து கொண்டு இருப்பதால் தான் அந்த ஸ்தலம் அமோகமாக இருக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 191

கேள்வி: விருக்ஷங்களிலும் (மரங்களிலும்) ஆன்மா இருக்கிறது. புட்களிலும் ஆன்மா இருக்கிறது. நுண்ணிய கிருமிகளிலும் ஆன்மா இருக்கிறது. அனைத்து ஆன்மாக்களுமே மேன்மையடைந்து முக்தியடைய வேண்டும் என்று முன்னர் கூறியிருந்தீர்கள். இந்த அறையிலேயே கோடானு கோடி கிருமிகள் இருக்கக்கூடும். இந்த நுண்ணிய கிருமிகளாய் பிறப்பெடுக்க வேண்டுமென்றால் அது என்ன கர்ம வினை?

ஒரு சில பாவங்கள் என்பதல்ல. எத்தனையோ வகையான பாவங்களின் தொகுப்பு தான் நாங்கள் முன்னரே கூறியது போல் ஆன்மாவின் சட்டையாக (உடலாக) மாறுகிறது. ஒரு ஆன்மாவின் சட்டையைப் (உடலைப்) பொறுத்து அதன் பாவத்தைப் புரிந்து கொள்ளலாம். அதாவது ஒரு ஆன்மாவிற்கு பெரும்பாலும் மனித சட்டை (உடல்) கொடுக்கப்படுகிறதென்றால் பெரும்பாலும் புண்ணிய பலன் இருக்கிறது என்று பொருள். அதற்காக விலங்குகளாகப் பிறந்த அனைத்து ஆத்மாக்களும் முழுக்க முழுக்க பாவிகள் என்று நாங்கள்(சித்தர்கள்) கூறவில்லை.

அதிலும் விதி விலக்குகள் உண்டு. சில புண்ணிய ஆத்மாக்கள் கூட சில காரணங்களுக்காக விலங்குகளாக பிறவியெடுப்பதும் உண்டு. மிகப்பெரிய மகான்கள் கூட பசுக்களாக தாங்கள் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டு தம் பால் முழுவதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்று வரம் கேட்டு வாங்கி வருவதும் உண்டு. அவற்றையெல்லாம் விலங்குகள் என்ற வரிசையில் சேர்க்கக்கூடாது. ஆனால் பொதுவாக விலங்குகள் என்று பார்க்கும் பொழுது அறியாமையிலே பிறவிகள் எடுக்கக்கூடிய உயிர்கள் அனைத்துமே கோடானு கோடி பாவங்களை நுகர்ந்து தீர்ப்பதற்காக இது போன்ற விலங்குகள் பிறவியைப் பெறுகின்றன. விலங்குகளுக்கு அதன் செயல்களுக்கு முழுக்க முழுக்க அதன் பாவங்களைக் கழிப்பதற்குண்டான நிலைதான் இருக்கிறது. புதிதாக புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள இயலாது. புதிதாக பாவத்தையும் சேர்த்துக் கொள்ள இயலாது. உதாரணமாக ஒரு நூறு பிறவி ஆடாகப் (ஆடு) பிறந்து அது தன் உயிரை மனிதனின் அசுரத்தனத்தால் தன்னைக் கொன்று உண்ணக்கூடிய மனிதனுக்கு தன் உடல் பயன்படவேண்டும் என்ற விதி பெற்று அந்த ஆடு பிறக்கும் பொழுது அதனுடைய கர்மாவானது அதன் கழுத்தில் இருக்கிறது. நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல அதனை வெட்டுகின்ற கத்தியானது அதன் கர்மாவைக் குறைக்கிறது. ஆடு கத்திக் குறைக்கிறது.

எனவே இப்படி பிறவியெடுத்து பிறவியெடுத்து அதன் பாவங்கள் தீர்ந்த பிறகு அடுத்த தேகத்தை (உடலை) நோக்கி செல்கிறது. இப்படி மேலேறி மேலேறி ஒரு தினம் அல்லது ஏதாவது ஒரு பிறவியிலே அது மனிதனாக அல்லது மனித சட்டை (மனித உடல்) கொடுக்கப்பட்டு சற்றே சிந்தனையாற்றலும் கொடுக்கப்படுகிறது. ஆனால் எதற்காக கொடுக்கப்படுகிறது? இன்னும் மேலேறி செல்ல வேண்டும். மனிதனாக புனிதனாக மாமனிதனாக மகானாக ஞானியாக முனிவனாக சித்தனாக அல்லது தேவனாக கந்தர்வனாக. ஆனால் இந்த இடத்திற்கு வந்த பிறகு மனிதன் தன் செயலால் மீண்டும் கீழ் நோக்கியும் செல்கிறான் அல்லது மேல் நோக்கியும் செல்கிறான். கீழ் நோக்கி செல்லாதே என்று வழிகாட்டத்தான் எம் (அகத்திய மாமுனிவர்) போன்ற மகான்களை இறைவன் படைத்து அருளாணை இட்டிருக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 190

கேள்வி: மனதிற்கும் ஆன்மாவிற்கும் உள்ள வேறுபாடு என்ன? மனம்தான் ஆத்ம ஸ்வரூபமா? இதில் புத்தி என்பது எங்கே வருகிறது?

இதை வேறு விதமாகக் கூறலாம். ஒரு மின் சக்தியை எடுத்துக் கொண்டால் மின் சக்தி என்பது இதுதான் இங்குதான் இருக்கிறது என்று கூற இயலுமா? காற்றின் ஆற்றல் இங்குதான் இருக்கிறது என்று கூற இயலுமா? இயலாது. ஆத்மா என்பது நீக்கமற நிறைந்துள்ள ஒரு சக்தி என்று வைத்துக் கொள். அது அறியாமையிலே பாவ மாயையிலே சிக்கி இந்த உடலுக்குள் சிறைபட்டிருக்கிறது என்றால் கண்ணிலே மட்டும் இருக்கிறதா? கையிலே மட்டும் இருக்கிறதா? அல்லது வயிற்றிலே மட்டும் இருக்கிறதா? என்றால் இல்லை. அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது. உடல் எனப்படும் ஒரு கூடு. அந்த கூடு இயங்குவதற்கு வேண்டிய ஆற்றலை ஆத்மாவிடமிருந்துதான் இந்தக் கூடு பெறுகிறது. இந்த ஆத்மாவானது தன்னை உணராமல் தன் உடலை தான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு மனிதன் தன் உடலின் மானத்தை மறைக்க ஆடை அணிகிறான். அந்த ஆடை கிழிந்து விட்டால் நான் கிழிந்து விட்டேன் என்று அந்த மனிதன் கூறமாட்டான். என் ஆடை கிழிந்து விட்டது என் ஆடை அழுக்காகி விட்டது. என் ஆடை பழுதடைந்து விட்டது என்று வேறு ஆடை மாற்றிக் கொள்வான். மனிதன் தன் உடலுக்கு ஆடை போடுகிறான். ஆன்மாவிற்கு போடப்பட்ட ஆடைதான் இந்த உடல்.

விதவிதமான ஆடைகள் சிங்கம் புலி ஆடு மாடு என்று விதவிதமான ஆடைகளை ஆத்மாவிற்கு போட்டு இறைவன் அனுப்புகிறான். இந்த உடல் வேறு. இ்ந்த உடலுக்குள் இருக்கின்ற ஆத்மா வேறு என்பதை புரிந்து கொள்வதற்கு ஒரு மனிதன் பல நூறு பல கோடி பிறவிகளை எடுக்க வேண்டும். நிறைய புண்ணியங்களை பிராத்தனைகளை செய்ய வேண்டும். அப்படி செய்யும் பொழுதுதான் நீ கூறிய ஆத்மா என்பது என்ன? என்பது உன் உள்ளத்திற்கு தெரிய வரும். மனம் என்றால் என்ன? மனம் என்பது தனியான ஒரு பொருள் அல்ல. இருதயம் என்பது இயங்குகின்ற ஒரு தன்மை. அதை குறிப்பாக இருதயம் (இதயம்) இருக்கிறதா? என்று மனிதர்கள் கேட்கிறார்கள். ஆனால் இங்கே உள்ளே இயங்குகின்ற இருதயத்திற்கும் இதயம் இருக்கிறதா? என்று மனிதன் கேட்பதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டும் ஒரு பொருள் அல்ல. உனக்கு நல்ல மனம் இருக்கிறதா? என்பதைத்தான் மனிதன் இதயம் இருக்கிறதா? என்று கேட்கிறான். தொடர்ந்த எண்ண ஓட்டங்களின் தொகுப்புதான் மனம். அந்த மனம் எங்கே விழிப்புநிலை பெறுகிறதொ அப்பொழுது நீ ஆத்மாவை உணரலாம்.

சரணாகதி

பராசர பட்டர் ஸ்ரீராமானுஜரின் முதன்மைச் சீடரான கூரத்தாழ்வானின் மகன் ஆவார். ரங்கநாயகித் தாயாரும் திருவரங்கநாதனும் அவரைத் தங்கள் மகனாகவே பாவித்து வளர்த்தார்கள். அவர் ஒருமுறை காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று அங்கே ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்து விட்டார். நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாமையால் அவரைத் தேடிச் சென்ற சீடர்கள் காட்டில் அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள். அவரைத் தேற்றி மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். மயக்கம் தெளிந்து பட்டர் எழுந்தவுடன் காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? காட்டுவாசிகளால் உங்களுக்கு ஏதேனும் ஆபத்து உண்டானதா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா? என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள் அவர்களது சீடர்கள்.

நான் ஒரு காட்சியைக் கண்டேன் அதனால் மயங்கி விழுந்துவிட்டேன் என்றார் பட்டர். என்ன காட்சி? என்று பதற்றத்துடன் சீடர்கள் கேட்டார்கள். ஒரு வேடன் ஒரு முயல் குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப் பையில் மூட்டை கட்டி எடுத்துச் சென்றான். இதைக் கண்ட அந்த முயல் குட்டியின் தாய் முயல் அந்த வேடனைத் துரத்திச் சென்று அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு மன்றாடியது. தனது குட்டியை விட்டுவிடும் படிக் கெஞ்சியது. அதைக் கண்டு மனம் இரங்கிய அந்த வேடன் முயல் குட்டியைச் சாக்கு மூட்டையிலிருந்து விடுவித்தான். இக்காட்சியைக் கண்டதும் நான் மயங்கி விழுந்துவிட்டேன் என்றார் பட்டர்.

இந்தக் காட்சியில் மயங்கி விழும் அளவுக்கு என்ன இருக்கிறது? என்று கேட்டார்கள் சீடர்கள். என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்? சரணாகதியை எப்படிச் செய்ய வேண்டும் என்று அந்த முயலுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? இல்லை. ஒருவர் சரணாகதி அடைந்தால் அவர்கள் கேட்பதை கொடுக்க வேண்டும் என்ற நீதியை அந்த வேடனுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? இல்லை. ஆனாலும் அந்த முயல் சரணாகதி அடைந்ததும் அந்த வேடன் முயலின் சரணாகதியை அங்கீகரித்து அது கேட்டதை உடனே தந்து விட்டான். சரணாகதி என்றால் என்னவென்றே அறியாத ஒரு முயலுக்கு ஒரு சாமானிய வேடன் இப்படிக் கருணை காட்டுகிறான் என்றால் இறைவனே கதி என்ற உறுதியுடன் அவன் திருவடிகளைச் சரணடைந்த நமக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்வான்? அவனே கதி என்று அவனைப்பற்றிய நம்மைக் கைவிடுவானா? எம்பெருமானின் அத்தகைய ஒப்பற்ற கருணையை உணராமல் இத்தனை காலம் வீணாகக் கழித்து விட்டேனே என்று வருந்தினேன். இறைவன் நம்மைக் கைவிடவே மாட்டான் காப்பாற்றியே தீருவான் என்ற உறுதி இன்னும் என் மனதில் உதிக்கவில்லையே என ஏங்கினேன். அதனால்தான் மயங்கி விழுந்து விட்டேன் என்று விடையளித்தார் பட்டர். பட்டரின் விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் வியந்து போனார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 189

கேள்வி: பைரவர் (பைரவரின் வாகனம்) ஊளையிடுவதன் காரணம் என்ன?

அகத்திய மாமுனிவர் வாக்க :

பல்வேறு காரணங்கள் இருக்கிறதப்பா. இது போன்ற நிலையிலே மனித கண்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையை மட்டும் பார்க்கக்கூடிய வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வண்ணத்தின் மேலான அதிர்வெண்களும் கீழான அதிர்வெண்களும் மனிதக் கண்களுக்குத் தோன்றுவதில்லை. ஆனால் அந்த தோன்றாத அலை வரிசையிலே பல்வேறு ஆத்மாக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கும். அது போன்ற ஆத்மாக்கள் அந்த ஆத்மாக்களின் தன்மை இவற்றைப் பொருத்தே நீ கூறிய அந்த பைரவரின் வாகைக் குரல் ஒலிக்கிறது.

கேள்வி: ஆத்திசூடியில் வரும் அரவம் ஆடேல் அனந்தல் ஆடேல் என்பதன் பொருள் என்ன?

பாம்போடு பழக வேண்டாம் என்பது தான் நேரிடையான பொருள் என்றாலும் கூட இது போன்ற இந்த பாம்பானது சுருண்டு கிடக்கும் பட்சத்திலே அந்த குண்டலினி ஆற்றல் எனப்படும் அந்த சக்தி மனிதனுக்கு தெரியாமல் போய் விடுகிறது. இந்த ஆற்றலை பாம்பாக உருவகப்படுத்துவது மகான்களின் ஒரு நிலையாகும். இது போன்ற நிலையிலே அப்படி சுருண்டு கிடக்கும் அந்த பாம்பை ஆடாமல் அசையாமல் நேராக நிமிர்த்தி மேலே ஏற்ற வேண்டும் என்பதே இதன் உட்பொருளாகும்.

கேள்வி: அதே ஆத்திசூடியில் வரும் புகழ்ந்தாரைப் போற்றி வாழ் என்பதன் பொருள் என்ன?

இதுபோன்ற நிலையிலே ஒருவனை மதித்து இன்னொருவன் வாழும் பட்சத்திலே தன்னை மதிக்கின்ற நியாயமாக தனக்கு உதவிகளை செய்கின்ற தன் உணர்வை மிதிக்காமல் மதிக்கின்ற மற்றவர்களை இவனும் மதித்து வாழ வேண்டும் என்பதே இதன் உட்பொருளாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 188

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 188

கேள்வி: கணினியில் ஜாதகம் கணிக்கும் பொழுது ஸ்ரீ சூரிய சித்தாந்த அயனாம்ச முறையையும் எடுத்துக் கொள்ளலாமா?

இப்பொழுது உள்ள அனைத்து முறையிலும் ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் பாவ வினைகளால் இடை செருகல்களும் தவறுகளும் ஏற்பட்டுதான் இருக்கிறது. ஆயினும் பாதகமில்லை. வாக்கிய முறையை பின்பற்றுவது பொதுவாக நன்மையைத் தரும். அதற்கு மாறான முறையை பின்பற்றக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. எப்படிப் பார்த்தாலும் அடிப்படை விதியை மனிதனால் கணிப்பது என்பது கடினம். ஏனென்றால் ஒரு மனிதனுக்கு கிரகங்கள் வக்ரமாவது தெரிகிறது. ஆனால் லக்னமே வக்ரமாவது என்பதெல்லாம் இறை சூட்சுமம் அறிந்த மகான்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இருந்தாலும் நீ கூறிய முறையைக் கூட தாராளமாக பின்பற்றலாம். ஆனாலும் கூட எம்மைக் கேட்டால் இங்கே தமிழ் மண்ணிலே புழங்குகின்ற வாக்ய முறைகளை தொடர்ந்து பின்பற்றுவது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

கேள்வி: ஆஞ்சிநேயர் தன் இதயத்தைப் பிளந்து காட்டிய பொழுது அதில் ராமரும் சீதையும் காட்சியளித்ததாக இதிகாசம் கூறுகிறது. இது எந்த நோக்கில் கூறப்பட்து? அனுமன் போல் அனைவரும் சிறந்த பக்தர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூறப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் தத்துவார்த்த விளக்கங்கள் உண்டா?

இறைவன் அருளாலே ஒரு காதலன் தன் காதலியைப் பார்த்து என்ன கூறுவான்? என் இதயத்தில் நீ இருக்கிறாய் என்று கூறுவான். அப்படிதான் காதலியும் கூறுவாள். எனவே என் சிந்தனை என்னுடைய எண்ணங்கள் என்னுடைய நோக்கம் நான் செய்கின்ற செயல்கள் அனைத்தும் நீயாக இருக்கிறாய் யாதுமாகி நிற்கிறாய் என்பது போல உண்ணும் உணவு பருகும் நீர் சுவாசிக்கும் காற்று இன்னும் நான் செய்கின்ற அனைத்து செயல்ளும் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் என்பதை உணர்த்தும் வண்ணம் அந்த ராமபிரான் மீது மால் தூதனாகிய ஆஞ்சிநேயர் கொண்ட பக்தியை விளக்குவதற்காக இப்படி பரிபூரண சரணாகதியிலே ஒவ்வொரு மனிதனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சித்திரம் போடப்பட்டது.

துரோணர் செய்த தவறு

குருஷேத்திரம் யுத்தம் முடிந்துவிட்டது. அஸ்தினாபுரத்து அரசனாக தருமன் முடிசூட்டிக் கொண்டு விட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால் பெற்ற சாபத்தினால் மன நிம்மதியின்றி துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அலைந்து கொண்டிருந்தான். அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது. என் தந்தை சத்தியவான் செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே துரியோதனனுக்கு ஆதரவாக போர் புரிந்தார். ஆனால் அவரை பாண்டவர்கள் நான் இறந்ததாக பொய் சொல்லி அநியாயமாக கொன்று விட்டனர். என் தந்தை செய்த தவறு என்ன என மனதுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான். ஒரு நாள் கிருஷ்ணரை சந்தித்தான். கிருஷ்ணன் மீது அவனுக்கு கோபம் இருந்தாலும் தன் கேள்விக்கு கிருஷ்ணரை தவிர வேறு யாராலும் பதில் சொல்ல முடியாது என்ற காரணத்தால் அவரிடமே தன் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டான். என் தந்தையை பாண்டவர்கள் அநியாயமாக கொன்றதற்கு நீயும் காரணமாக இருந்தாய் அவர் செய்த தவறு என்ன? என கேட்டான்.

கிருஷ்ணன் சிரித்தபடியே செய்த பாவத்துக்கு யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்றார். என் தந்தை என்ன பாவம் செய்தார் கேட்டான் அஸ்வத்தாமன். அதற்கு கிருஷ்ணன் உன் தந்தை அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவர். ஆனால் ஏழையாக இருந்தார். அவரை கௌவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் குருவாக பீஷ்மர் நியமித்தார். அதன் பின் தான் அவரது வாழ்க்கையில் வளம் ஏற்பட்டது. கௌவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சகல வில்வித்தை உட்பட அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் உன் தந்தை. ஒருநாள் அவரை ஏகலைவன் என்ற வேடுவர் இனத்தை சேர்ந்த சிறுவன் சந்தித்தான். தனக்கும் வில்வித்தை கற்றுக் கொடுங்கள் என உன் தந்தையிடம் கேட்டான். அரச குமாரர்களுக்கு சொல்லி தருவதால் ஏகலைவனுக்கு கற்று தர துரோணர் மறுத்து விட்டார். ஆனால் ஏகலைவன் உன் தந்தையை போல் மண்ணில் சிலை செய்து குருவாக வழிபட்டு வில்வித்தையை தானாக கற்றுக் கொண்டான். சில ஆண்டுகளுக்கு பின் ஒரு சந்தர்ப்பத்தில் ஏகலைவனின் வில் வித்தை திறமை அர்ஜூனனுக்கு தெரிந்தது. அர்ஜூணன் துரோணரிடம் இதனை தெரிவித்தான்.

அரண்மனை பணி போய்விடும் என்ற சுயநலத்தின் காரணமாக உன் தந்தை சுயநலமாக நடந்து கொண்டார். ஏகலைவனை வரவலைத்த உனது தந்தை வில்வித்தைக்கு மிகவும் தேவையான கட்டை விரலை குரு காணிக்கையாக ஏகலைவனிடம் உன் தந்தை கேட்டு பெற்றுக் கொண்டார். அவனும் மகிழ்ச்சியாக கொடுத்து குரு பக்திக்கு நீங்காத புகழை பெற்றார். ஒரு வேடனின் திறமையை பாழடித்தார். ஏகலைவனுக்கு பெருமை கிடைத்தாலும் அவனது எதிர்காலம் வீணானதுக்கு உன் தந்தை தான் காரணம். மேலும் போர் களத்தில் யுத்த தர்மத்திற்கு எதிராக அபிமன்யுவை அநியாயமாக கொலை செய்தார்கள். அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் உனது தத்தை. இந்த பாவம் தான் உன் தந்தையை போர்களத்தில் மகன் இறந்ததாக எண்ணி ஏற்பட்ட சோகத்தில் மரணமடைய வைத்தது என்று கூறி நிறுத்தினான் கிருஷ்ணன்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 187

இறை உண்டு பற்றிய அகத்திய மாமுனிவர் வாக்கு:

ஆகுமப்பா. இறை உண்டு. யாங்கள் (சித்தர்கள்) உண்டு. தெய்வ சக்தி உயர் சக்தி உண்டு. மாந்தனுண்டு. சித்தனுண்டு. எல்லா உயிர்களும் உண்டு. ஆயினும் கூட அவரவர் பக்குவம் மனநிலை அறிவுநிலை புண்ணியம் எண்ணங்கள் நடைமுறை வாழ்வு இவைகளைப் பொறுத்துத்தான் இந்த இதழில் (ஜீவநாடி) பலசமயம் யாங்கள் வாக்குகள் பகிர்வதும் மெளனம் காப்பதும். சித்தர்கள் பேதங்கள் பார்க்கலாமா? எல்லா உயிர்களும் ஒன்றுதானே என்ற எண்ணங்கள் மனிதனுக்குத் தோன்றும். எமக்கு எவர்மீதும் உயர்வு தாழ்வு பேதமில்லை. ஆயினும் கூட மனதிலே சில திட்டங்களை வகுத்துக் கொண்டு சில காட்சிகளை கற்பனை செய்து கொண்டு அது தொடர்பாகவும் அதுபோலத்தான் வாழ்வு என்றும் வாழ்வின் நோக்கம் என்றும் எம்முன்னே வந்து அமர்ந்தால் எமக்கு அவனவன் கர்மாதான் கண்ணுக்குத் தெரியும். சேர்த்த பாவத்தைக் குறைப்பதற்கும் இனி பாவம் செய்யாமல் வாழ்வதற்கும் மட்டும்தான் மனித தேகம் மனித பிறவி. அந்த ஆற்றலை இறை மனிதனுக்குத் தந்ததின் காரணம் பிறர் துன்பங்களைக் கண்டு வருந்த இரங்க வேண்டும் என்பதற்காகத்தான். அதுபோல இந்த எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்கள் உயர்ந்த ஆன்மாக்களே.

இதில் விலங்கு விருக்ஷம் (மரம்) மனிதன் என்ற பேதமில்லை. பல்வேறு காரணங்களுக்காக நாங்கள் (சித்தர்கள்) வாக்குகளை மறுப்பதும் நிறுத்துவதும் கூறாமல் இருப்பதும் உண்டு. முதல் காரணமாக இந்த இதழை (ஓலைச்சுவடி) வாசிக்கின்ற இவன் அனுதினமும் அதிகாலையிலும் ஏனைய அயர்வு பொழுதிலும் மனம் ஒன்றி அதிகமதிகம் பிராத்தனை செய்ய வேண்டும். அடுத்து எமை (அகத்திய மாமுனிவர்) நாடி வருபவர்கள் ஏதோ கோள் ஆய்வு செய்வதும் ஜோதிட நிமித்தம் கேட்பதும் அருள் வாக்கு கேட்பதுமாக இல்லாமல் மெய்யாகவே தர்மவானாக எல்லா நிலையிலும் நல்லவனாக இருக்க வேண்டும். வேறு வகையில் கூறப்போனால் எம்மை நாடாவிட்டாலும் பாதகமில்லை மனசாட்சிப்படி வாழ்ந்து வந்தால் அவன் எம்மைத் தேட வேண்டாம் யாமே அதுபோல் இருக்கும் மனிதனைத் தேடிச் செல்வோம்.

கோடி கோடியாக அள்ளிக் கொடுத்த தர்மனை விட பலநாள் பட்டினியாகக் கிடந்த அந்த அந்தணன் தன் பசி தன் குடும்பப் பசி அனைத்தையும் மறந்து வந்திருந்த முனிவருக்குத் தந்த அன்னமே உயர் அன்னமாகி அதுவே உயர் தர்மமாகிவிட்டது. தர்மம் என்பது அளவைப் பொறுத்ததல்ல. சத்யம் என்பது சூழ்நிலையைப் பொறுத்ததல்ல. விளைவு இருக்கும் சூழல் இவற்றைப் பொறுத்ததே. இருப்பதில் கொடுப்பது சிறப்பு என்றால் இருப்பதையே கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு.

உயர்ந்த கருத்துக்களை கேட்பதும் மனதில் பதிய வைப்பதும் சத்சங்கம் நடத்துவதும் மட்டுமல்லாமல் அதை பின்பற்றவும் முயல வேண்டும். இதெல்லாம் யாரால் இயலும்? கலிகாலத்தில் இதெல்லாம் சாத்தியமா? உயர்ந்த பழக்க வழக்கங்கள் கேட்பதற்கும் ஓதுவதற்கும் விவாதம் செய்வதற்கும் நன்றாக இருக்கிறது. ஆனால் பின்பற்றக் கடினமாக உள்ளது என்று ஒருவன் கூறினால் நல்லவனாக உயர்வானவனாக வாழ்வது எளிது என்றால் அனைவரும் அவ்வாறு வாழ்ந்துவிட்டு போவார்களே? அது கடினம் என்பதால்தான் அதற்குரிய மரியாதையும் இருக்கிறது. ஏன்? செல்வம் திரட்டுவதைவிட கடினம் இந்தக் காலத்தில் ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வது. ஆக இதனால் நான் இந்த தவறை செய்தேன். இந்த சூழ்நிலையால் நான் அடிபணிந்து போக வேண்டியிருந்தது என்று எந்தக் காரணமும் கூறாமல் ஒரு மனிதன் சத்தியவானாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒருவன் செல்லத் துவங்கிவிட்டால் இறை அவனை நோக்கி வரும் என்பது உறுதி.