கந்தசாமி கோயில்

மூலவர் கந்தசுவாமி. உற்சவர் முத்துக்குமார சுவாமி. தாயார் வள்ளி தெய்வானை. தல விருட்சம் மகிழ மரம். தீர்த்தம் சரவணப் பொய்கை. இங்குள்ள விநாயகர் குளக்கரை விநாயகர். சித்திபுத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் உள்ளார். சித்தியும் புத்தியும் ஒருகாலை மடக்கி மற்றொரு காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகின்றனர். சரவணப்பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் லட்சுமிதேவியும் இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். கந்தசுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவருக்கு நேரே வாயில் இல்லை. அவருக்கும் கொடிமரத்திற்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டும் உள்ளது. ராஜகோபுரமும் பிரதான வாயிலும் வடக்குப்பகுதியில் உள்ளது.

வேளூர் மாரிச்செட்டியார் பஞ்சாளம் கந்தப்ப ஆசாரி என்கிற இரு முருக பக்தர்கள் ஒவ்வொரு கிருத்திகை அன்றும் சென்னையில் இருந்து திருப்போரூர் வரை பாத யாத்திரை சென்று கந்தனைத் தரிசித்து வந்தார்கள். கிபி 1673ம் வருடம் மார்கழி மாதம் கிருத்திகை அன்று கந்தனை தரிசித்து விட்டுத் திரும்பியவர்கள் செங்கண்மால் ஈஸ்வரன் கோயில் (பழைய மாமல்லபுரம் சாலை) அருகேயிருக்கும் குளக்கரையில் ஓய்வு எடுக்க அமர்ந்தவர்கள் அசதியில் தூங்கிவிட்டார்கள். அப்போது கனவில் தோன்றிய முருகன் நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் உடலை வருத்திக் கொண்டு வருகிறீர்கள். இதோ இந்தப் புற்றிலிருக்கும் என்னை எடுத்துச் சென்று நீங்கள் வசிக்கும் சென்னப் பட்டணத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் என்றார். உடனே இருவரும் கண் விழித்து தனக்கு வந்த கனவைப்பற்றி பேசினார்கள். இருவருக்கும் ஓரு போலவே கனவு வந்தபடியால் வந்த சொன்னது முருகனே என்று மகிழ்ந்தவர்கள் சுற்றுலும் தேடிப்பார்த்தார்கள். அருகில் முருகனின் உருவம் தென்படவே அவரை எடுத்து வந்தார்கள். வரும் வழியில் பாரிமுனையில் முருகனின் பாரம் தாங்காமல் கீழே வைத்தார்கள். அதன் பின் முருகரை அங்கிருந்து அசைக்க முடியவில்லை. முருகர் இங்கேயே கோவில் கொள்ள அருளுகிறார் என்று எண்ணிய இருவரும் தற்போது கோவில் இருக்கும் இடத்தில் செங்கல்லினால் கோயில் அமைத்தார்கள். பின்னர் கருங்கல்லால் கோயில் அமைக்க பக்தர்களால் நிச்சயித்து உண்ணாழி அந்தராளம் மகாமண்டபம் ஆகியவை கட்டினார்கள்.

கந்தகோட்டம் கோவிலில் முருகனடியார்கள் எல்லாம் ஒன்று கூடி கந்தகோட்டத்து முருகன் கோயிலுக்கு உற்சவ விக்ரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். சிற்ப சாஸ்திர வல்லுணர்களில் மிக நுட்பறிவு கொண்ட ஒருவரை தேர்வு செய்தனர். சிற்ப சாஸ்திரரிடம் உற்சவ முருகனாக பஞ்சலோகத்தில் விக்ரகம் ஒன்றை வார்த்து தரும்படி ஒப்படைத்தனர். சாஸ்திரரும் புடம்போட்டு எடுத்தபின் வார்ப்படத்தை பிரித்த போது, விக்ரகம் மினு மினு வென மின்னியது, அதன் ஒளிச் சிதறல்கள் கண்களைக் கூசச் செய்தது. ஆனால் வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள்போல சிறு பிசிறுகளாய் இருந்தன. கோயில் பொறுப்பாளர்கள் சிற்பசாஸ்திர முதன்மையாளரிடம் சிற்பம் நல்லா வந்திருக்கிறது. ஆனால் வெளித்துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்களென்றால் சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர்.

தலமை சிற்பியும் துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி அதற்குண்டான கருவியுடன் விக்ரகத்தை தொட்டார். அவ்வளவுதான் சிற்பத்தை தொட்ட மாத்திரத்தில் மின்சாரம் தாக்கியவர்போல் தூரப் போய் விழுந்தார். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து சிற்பசாஸ்ததரரை தூக்கி வைத்து ஆசுவாசப் படுத்தி என்ன ஆச்சு ஐயா என்றனர். என் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது. ஒரே பதட்டமாக இருக்கிறது வாய் குழறி குழறிக் கூறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு தெளிந்து எழுந்த சிற்பி கண்களில் மிரட்சியோடு ஆலயப் பக்தர்களை நோக்கி கைகளைக் கூப்பி இந்த விக்ரகம் நீறு பூத்த அணலாக இருக்கிறது. இதைச் சுத்தத் தூய்மையாக்கும் சக்தி என்னிடம் இல்லை. என்னை விட்டு விடுங்கள் இது என்னால் இயலாது என்று கூறி போய்விட்டார். பிசிறுகளுடன் இருக்கும் உற்சவ விக்ரகத்தை தீண்டப் பயந்து வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளாமல் விக்ரகத்தை ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டி விட்டனர். இந்தச் செயலுக்குப் பின்பு இரண்டு ஆண்டுகளும் கடந்து போய்விட்டன.

ஒருநாள் காசியில் இருந்து சாம்பையர் எனும் துறவி கந்தகோட்டத்து முருகனைத் தரிசிக்க ஆலயத்திற்குள் புகுந்தார். அவர் மூலவரைத் தரிசித்த பின் ஆர்வத்தோடு உற்சவர் இல்லையா? எனக் கேட்டார். சிவாச்சாரியாரும் விக்ரகம் வார்ப்பெடுத்து உருவான விபரம் முதல் அனைத்தையும் சாம்பையரிடம் கூறிவிட்டு ஆலய முக்கியஸ்தரரிடம் அழைத்துப் போய் கொண்டு விட்டு விட்டார். இதன்பின் கோயில் நிர்வாகிகளைச் சந்தித்த சாம்பையர் அந்த உற்சவ விக்ரகத்தை நான் பார்க்கலாமா? என்றார். சாம்பையருடைய தோற்ற கோலத்தைக் கண்டு கட்டுப்பட்ட நிர்வாகிகள் உற்சவர் இருந்த அறையைத் திறந்து விட்டனர். அறைக்குள் நுழைந்த சாம்பையர் சில நிமிடத்தில் வெளியே வந்தார். சாம்பையர் கூடியிருந்த அனைவரையும் பார்த்து நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள் இக்கோயிலில் உள்ள மூலவருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அதே சக்தி இந்த உற்சவ மூர்த்தத்திலும் பொதிந்திருக்கிறது என்றார். விக்ரகம் இவ்வாறு அமைவது வெகு அபூர்வமானது. இங்கு இது அமையப் பெற்றதனால்தான் உங்களை நான் பாக்கியசாலி என்றேன் என்றார். தன்னை வழிபடும் அடியார்களுக்கு மூலவரைப்போல் இந்த உற்சவரும் அளவிலா அருட்செல்வத்தை வழங்குவார் இவர். இவரைப் பார்த்து வணக்கம் தியானம் ஆராதணை செய்யலாமே தவிர இவர் திருமேனியில் எந்த விதமான கருவிகளும் படக் கூடாது என்றார்.

இந்தத் தன்மை கொண்ட உற்சவ விக்ரகங்களை ஆத்ம சக்தியால் மூலம் தூய்மைப் படுத்த முடியும். ஆயுதத்தால் தீண்டித் தொட முனைந்தால் அது நடவாது போய்விடும். இந்த உற்சவரை ஆத்ம சக்தியால் நானே தூய்மை செய்து தருகிறேன் என்றார். தூய்மை செய்யும் நேரத்தில் கூறிப்பட்ட ராகத்தில் நாதஸ்வரம் வாசிக்க சொன்னார். நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பண்டிதரான சாம்பையரின் வார்த்தைகளை அப்படியே ஏற்று மகிழ்ந்த ஆலய நிர்வாகிகளும் பக்தர்களும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். தனி அறையில் உற்சவ விக்ரகம் வைக்கப்பட்டு திரை போட்டு மறைக்கப்பட்டது. வெளியே நாதஸ்வரம் வாசிக்கப்பட்டது. வடிவேலனின் முன் அமர்ந்து வேத மந்திரங்களைச் சொல்லி ஆத்ம சக்தியால் உற்சவரின் திருமேனி மீது இருந்த பிசிறுகளை நீக்கினார் சாம்பையர். திரை விலக்கி வெளியே வந்தார் சாம்பையர். முருகனின் முகத்தை மட்டும் சரி செய்ய இயலாது என்று கூறி விட்டு சென்று விட்டார். இப்போதும் கந்தகோட்டத்தில் இருக்கும் உற்சவர் இந்த முருகர் தான். மிகவும் அழகாக இருக்கும் முருகனின் முகம் மட்டும் அந்த பிசிருகளோடு இன்றும் இருக்கிறார். ஆறுமுகனின் அருளாடலால் வெளிப்பட்ட அந்த உற்சவ வடிவத்தை இன்றும் கந்த கோட்டத்திற்குச் சென்றால் தரிசிக்கலாம்.

கந்தசாமி கோயில் எனப்படும் கந்தகோட்டத்தின் 1858ம் வருட கல்வெட்டின் படி கோயிலின் வரலாற்றைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பார்க் டவுனின் ராசப்ப செட்டித் தெருவில் எட்டு ஏக்கர் பரப்பில் இக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் கந்தசாமி என்றும் உற்சவர் முத்துக்குமாரசுவாமி என்றும் அழைக்கப்படுகின்றனர். இருவரும் வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கின்றனர். கோவிலின் உள்ளேயே ஒரு தெப்பக்குளமும் உள்ளது. 1869 ஆம் வருடம் வையாபுரி செட்டியார் என்பவர் இக்கோயிலுக்கு 66 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தார். இவர் கோயிலுக்காக ஒரு தேர் செய்வித்தார். 1880ம் ஆண்டில் அக்கம்மாபேட்டை கோவிந்த செட்டியார் நாராயணச் செட்டியார் என்பவருடன் சேர்ந்து கோயிலின் அருகே இருந்த நிலத்தைக் கோயிலுக்கு அளித்தனர். அங்கு தான் வசந்த மண்டபம் கட்டப்பட்டது. கோயிலின் ராஜகோபுரம் 1901ம் வருடம் காளிரத்தினச் செட்டியார் அளித்த 50 ஆயிரம் ரூபாய் நன்கொடையைக் கொண்டு எழுப்பப்பட்டது என மதராசபட்டினம் நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் நரசய்யா.

ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு நடந்த முகலாயர்கள் படையெடுப்பு ஒன்றில் கோயில்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டன. அப்போது பக்தர்கள் சிலர் திருப்போரூர் முருகன் சிலையைக் காக்கும் பொருட்டு புற்றுக்குள் மறைத்து வைத்தனர். சில காலத்திற்குப் பிறகு சிலை இருந்த இடம் தெரியாமல் புதிய சிலையை பிரதிஷ்டை செய்து விட்டார்கள். இதுவே அந்த இரு முருக பக்தர்களின் கனவிலும் முருகப்பெருமான் சொல்லி சென்னைப் பட்டணத்திற்கு வந்த கதை என்று கோவில் புராண வரலாறு சொல்கிறது. வள்ளலார் கந்தசாமி முருகனை தனது திருவருட்பாவில் உருகி உருகிப் பாடியிருக்கிறார். அவர் சென்னையில் வாழ்ந்த நாட்களில் கந்தகோட்ட முருகனை தினமும் தரிசனம் செய்துள்ளார். ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவுவேண்டும் என்ற பாடலில் தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்தலம் ஓங்கு கந்தவேளே என்று பாடியிருக்கிறார். திருப்போரூர் சிதம்பர சுவாமிகளும் பாம்பன் சுவாமிகளும் கந்தகோட்ட முருகனைப் பற்றி பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 265 மாகாளம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 265 வது தேவாரத்தலம் மாகாளம். புராணபெயர் இரும்பை மாகாளம். மூலவர் மாகாளேஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். அம்பாள் குயில்மொழிநாயகி, மதுரசுந்தரநாயகி. அம்பாள் தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல் தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். கடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்வாள். இதனால் அம்பாளுக்கு குயில்மொழி நாயகி என்று பெயர் ஏற்பட்டது. தீர்த்தம் மாகாள தீர்த்தம். தலமரம் புன்னை. இந்தியத் திருநாட்டில் மூன்று சிவஸ்தலங்கள் மாகாளம் என்ற பெயருடன் உள்ளது. அவை வடநாட்டிலுள்ள உஜ்ஜயனி மாகாளம் காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம் மற்றும் தொண்டை நாட்டு இத்தலமான இந்த இரும்பை மாகாளம். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து மூன்று முகங்களுடன் உள்ளது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிக்கின்றது.

கோவில் சுமார் 1 ஏக்கர் நிலப்பரளவில் ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. இங்குள்ள விமானம் ஏகதள விமானம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் வலது புறம் விநாயகர் சந்நிதி உள்ளது. முகப்பு வாயில் கடந்தவுடன் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. இங்குள்ள தல விநாயகர் சுந்தர கணபதி என்று அழைக்கப்படுகிறார். பிராகார மேற்குச் சுற்றில் கருவறைக்குப் பின்புறம் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து ஆறுமுகர் காட்சி அளிக்கிறார். இச்சந்நிதிக்கு அருகில் காலபைரவர் சந்நிதி இருக்கிறது. அம்பாள் சன்னதிக்கு முன் இடதுபுறத்தில் நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது கால் சற்று கீழே மடங்கியபடி இருக்கிறது. இக்கோலம் நடராஜரின் சந்தோஷ கோலம் ஆகும். இச்சந்நிதியில் நின்று கொண்டு இறைவன் அம்பாள் நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் இருக்கின்றனர். சூரியன் தாமரை மலர் மீது தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்யூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில் அமர்த்திய கோலத்தில் காட்சி அளிக்கிறார். கோவில் கிழக்குப் பிராகாரத்தில் மேற்கு நோக்கியபடி சூரியன், சந்திரன் தனிச் சந்நிதிகளில் இருக்கின்றனர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிராகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் ஆஞ்சனேயர் சந்நிதி உள்ளது. பிராகார சுற்றுச் சுவர் உட்புறம் முற்றிலும் விதவிதமான உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன். அங்கங்கே ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. கருவறை முன்புறச் சுவர் முழுவதும் செப்புத் தகட்டால் வேயப்பட்டு தங்கமுலாம் பூசியது போன்று பளபளப்புடன் திகழ்கிறது. துவாரகாலகர்கள், மாகாளர் உருவம், கடுவெளிச்சித்தர் உருவம் செப்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது.

சிவனிடம் வரம் பெற்ற அம்பன் அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களை பார்வதிதேவி மகாகாளி அவதாரம் எடுத்து தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் என்னுமிடத்தில் வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள் இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து தோஷம் நீங்கப்பெற்றாள். பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும் தெற்கே மயிலாடுதுறை பூந்தோட்டத்திற்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் மேலும் இத்தலம் வந்தபோது இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். மாகாளரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவனும் மகாகாளநாதர் என்ற பெயர் பெற்றார்.

மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலம். அவனது ஆளுகைக்கு உட்பட்ட கோட்டக்கரை பகுதியை குணசீலன் என்னும் குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவனது எல்லையில்தான் இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் இருந்தது. அதை சிறந்த முறையில்பராமரித்து வழிபட்டு வந்தான். இந்நிலையில் குணசீலனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டது. மழையின்றி பயிர்களெல்லாம் கருகின. குடிமக்கள் தவித்தனர். இதைக் கண்டு கவலையுற்ற குணசீலன் மாகாளேஸ்வரர் ஆலயத்திற்குச்சென்று இவ்வளவு கொடிய பஞ்சத்திற்குக் காரணம் என்ன என்று மனமுருகிவேண்டி நின்றான். ஒரு நாள் அவன் கனவில் தோன்றிய மாகாளேஸ்வரர் மன்னா நம் ஆலயத்தின் எதிரே குளக்கரையிலுள்ள அரச மரத்தின் கீழ் கடுவெளிச்சித்தர் எனது பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்த வண்ணம் தவம் செய்துகொண்டிருக்கிறார். அவரைச்சுற்றி புற்று வளர்ந்து அவர் உடலின் பெரும்பகுதியை மூடிவிட்டது. அந்தநிலையிலும் உக்கிரமான தவத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். அந்த தவாக்னியின் வெப்பத்தால்தான் இத்தகைய வறட்சி ஏற்பட்டுள்ளது. அவரது தவம் கலைந்தால் தான் மழை பொழியும். அதே சமயம் அவரது தவத்தை பலவந்தமாகக் கலைத்தால் சித்தரின் கோபத்துக்காளாகி அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும். எனவே ஏதேனும் உபாயத்தைக் கையாண்டே தவத்தைக் கலைக்க வேண்டும் என்று கூறி மறைந்துவிட்டார்.

தூக்கம் கலைந்து எழுந்த மன்னன் நீண்ட நேரம் யோசித்து சித்தரின் தவத்தை பலவந்தமாக இல்லாமல் கலைக்க பெண்களால் தான் முடியும் என்று முடிவு செய்தான். பொழுது புலர்ந்ததும் கோவிலில் நடனமாடும் சுந்தரவல்லியை அழைத்து மன்னன் தன் எண்ணத்தைக் கூறினான். அதைக் கேட்டு சுந்தரவல்லி மிரண்டு போனாள். எனினும் மன்னன் கட்டளையை மீற முடியாதென்பதால் கடுவெளிச் சித்தர் தவம் செய்யும் இடத்திற்குச் சென்று வணங்கி நின்றாள். சித்தர் கண் விழிப்பதற்கான சாத்தியக்கூறு ஏதும் இல்லாதிருப்பதை உணர்ந்த சுந்தரவல்லி அவரைத் தொட்டு தவத்தைக் கலைக்கலாமா என்று யோசித்தாள். அவ்வாறு செய்தால் சித்தரின் கோபம் தன்னை எரித்து விடும். செய்யாமல் போனாலும் மன்னரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். என்ன செய்யலாம் என்று புரியாமல் தவித்த சுந்தரவல்லி மன்னரின் கோபத்துக்கு ஆளாவதை விட சித்தரால் எரிக்கப்பட்டால் மோட்சமே கிட்டும் என்றெண்ணி அவரது தவத்தைக் கலைக்க முடிவு செய்தாள். அவரையே நெடுநேரம் கவனித்தபடி அவள் நின்றிருந்தபோது அரச மரத்திலிருந்து ஒரு இலை சித்தரின் கையில் விழ அவர் அதைத் தன் வாயிலிட்டு மென்று தின்றார். இதைப் பார்த்த சுந்தரவல்லி சித்தர் அரச இலையையும் காற்றையும் உட்கொண்டே தவத்தைத் தொடர்ந்து வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டாள். வீட்டுக்குத் திரும்பிச் சென்ற அவள் மறுநாள் உப்பும் காரமும் சேர்த்த அப்பளத்தை அரச இலை அளவுக்குச் செய்து எடுத்து வந்து சித்தரின் கையில் வைத்தாள். அதை அவர் வாயிலிட வழக்கத்திற்கு மாறான சுவையிருப்பதை உணர்ந்து மெல்ல கண் திறந்தார். அப்போது அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கிய சுந்தரவல்லி சுவாமி அரசர் உத்தரவுப்படி நான் இவ்வாறு நடந்து கொண்டேன். என்னை மன்னித்தருளி என் பாத பூஜையை ஏற்க என் இல்லத்திற்கு எழுந்தருள வேண்டும் என்று வேண்டினாள். அவ்வாறே அவளை மன்னித்த கடுவெளிச் சித்தர் அவள் இல்லத்திற்குச் சென்று சுந்தர வல்லியின் பாத பூஜையை ஏற்றார். பின்னர் சித்தரிடம் மன்னன் நடந்த உண்மைகளைக் கூறினான். அரசனின் பேச்சைக்கேட்ட சித்தர் அவனுக்காகவும் மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவப் பணி செய்து வந்தார்.

சித்தரின் தவம் பலவந்தமின்றி கலைந்ததால் வானம் இருண்டது. தொடர்ந்து ஒரு வாரம் அடைமழைபெய்தது. ஏரி குளங்கள் நிரம்பின. ஆறுகள் பெருக்கெடுத்தன. மக்கள் மகிழ்ச்சியோடு விவசாயப் பணிகளைத் துவக்கினர். பஞ்சமும் நீங்கியது. சில மாதங்களுக்குப்பின் மாகாளேஸ்வரருக்கு மிகச் சிறப்பாக உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் ஐந்தாம் நாள் உற்சவத்தில் மன்னன் குணசீலன் கலந்து கொண்டு சிறப்பித்தான். அன்று நடன அரங்கில் சுந்தரவல்லியின் நடனம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மன்னனுடன் திரளான மக்களும் கண்டு களித்துக் கொண்டிருந்த அந்த நடனத்தைக் காண கடுவெளிச்சித்தரும் வந்திருந்தார். ஒரு கட்டத்தில் நடனமாடிக் கொண்டிருந்த சுந்தரவல்லியின் காற்சலங்கை கழன்று விழுந்தது. அதைக் கண்ட கடுவெளிச்சித்தர் கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி தடைபடக் கூடாதென்றெண்ணி நொடிப்பொழுதில் அங்கு சென்று கழன்று விழுந்த சலங்கையை எடுத்து சுந்தரவல்லியின் காலில்கட்டினார். இதைக் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு நடன மங்கையின் காலை சித்தர் தொடலாமா என்று கடுவெளிச் சித்தரைப் பழித்தனர். அதைக் கண்டு கோபமுற்ற சித்தர் மனித வாழ்க்கை நிலையற்றது என்ற கருத்தில் ஒரு பாடலைப் பாடி மாகாளேஸ்வரர் சந்நிதி முன் சென்று இதற்கெல்லாம் காரணம் இவர் தான் என்று மாகாளேஸ்வரரை கோபத்துடன் நோக்கினார். சித்தரின் கடும் கோபத்தினால் சிவலிங்கம் மூன்றாகப் பிளந்தது. அதிலிருந்து பார்வதி தேவியுடன் தோன்றிய சிவபெருமான் அனைவருக்கும் காட்சி தந்து மறைந்தார்.

இதைக் கண்ட மன்னனும் மக்களும் கடுவெளிச் சித்தரின் மகிமையை உணர்ந்து தங்கள் பிழையைப் பொறுத்தருளுமாறு அவரிடம் மன்னிப்பு வேண்டினர். மேலும் பிளந்த லிங்கத்தை ஒன்றாகச் சேர்க்கும்படியும் கேட்டுக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சித்தர் ஒரு பாடலைப் பாட, பிளவுபட்ட மூன்று பகுதிகளும் ஒன்றிணைந்தன. பின்னர் செப்புத் தகடால் அந்த லிங்கத்தை பந்தனம் செய்தார் சித்தர். இந்த லிங்கம் தான் இன்றளவும் இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் மூலவராக உள்ளார். அன்று முதல் இந்நாள் வரை சிவலிங்கம் செப்புத் தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சி நடந்த சில காலத்திற்குப் பின் அப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன் பிளவுபட்ட லிங்கத்திற்கு மாற்றாக வேறொரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய எண்ணி காசியிலிருந்து ஒரு லிங்கத்தைக் கொண்டு வந்தான். அதைப் பிரதிஷ்டை செய்ய முயன்றபோது என்னை அப்புறப்படுத்த வேண்டாம் என்று இறைவன் அசரீரி மூலம் ஆணையிட மன்னன் தன் முயற்சியைக் கைவிட்டு காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை வேறொரு பகுதியில் பிரதிஷ்டை செய்தான். இந்த லிங்கத்தை தற்போது அம்பாள் சந்நிதியின் கிழக்குப் பகுதியில் காணலாம். பொதுவாக உடைந்த லிங்கத்திற்கு பூஜை செய்யக்கூடாது என்பது ஆகம விதியாகும். ஆனால் அதற்கு விலக்காக இரும்பை மாகாளேஸ்வரருக்கு மட்டும் இன்றளவும் பூஜை செய்யப்பட்டு வருகிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இரும்பை மகாகாளேஸ்வரரர் திருக்கோயில் சோழ மன்னர்கள் காலத்தில் நன்கு சீரமைத்து கட்டப்பட்டது. சோழர் மற்றும் பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன. சுந்தரர் ஊர்த்தொகை நூலில் சுவாமியை பற்றி பாடியிருக்கிறார். சுந்தரர், திருஞானசம்பந்தர், பட்டினத்தார் பாடல்கள் பாடியுள்ளனர்.

கிருஷ்ணார்ப்பணம்

ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில் அர்ச்சகரும் அவரிடம் வேலை பார்த்து வரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள். துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி. கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசி ராமனுக்கு அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான். கிருஷ்ணார்ப்பணம் என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் பறித்து தொடுப்பான். பத்து பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன் ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான். கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்டப் போனால் ஏற்கனவே ஒரு புது மாலையுடன் கிருஷ்ணர் சிலை பொலிவு பெற்று இருக்கும். அதைப் பார்த்த அர்ச்சகருக்கு இது துளசிராமனின் குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம். அவனைக் கூப்பிட்டு துளசிராமா இதெல்லாம் அதிகப் பிரசங்கித்தனம். நீ மாலை கட்டவேண்டுமே தவிர சூட்டக் கூடாது என்று கண்டித்தார். சுவாமி நான் சூட்டவில்லை கட்டிய மாலைகள் மொத்தம் 15. அத்தனையும் உங்களிடம் கொடுத்து விட்டேன் என்ற அவன் சொற்கள் அவர் காதில் விழவேயில்லை. நாளையிலிருந்து அண்டாக்களில் தண்ணீர் நிரப்பும் பணியைச் செய் பூ கட்டவேண்டாம் கட்டளையிட்டார்.

இறைவன் செயல் என்று துளசிராமன் நீரிறைக்கும் போதும் தொட்டிகளில் ஊற்றும் போதும் கிருஷ்ணார்ப்பணம் என்று மனம் நிறைய சொல்லிக் கொள்வான். மனமும் நிறைந்தது. இப்போதெல்லாம் சிலைக்கு அபிஷேகம் செய்ய அர்ச்சகர் வரும்முன்பே அபிஷேகம் நடந்து முடிந்து கருவறை ஈரமாகி இருக்கும். நனைந்து நீர் சொட்டச் சொட்ட கிருஷ்ணர் சிலை சிரிக்கும். அர்ச்சகருக்கு கடும் கோபம் துளசிராமா நீ அபிஷேகம் செய்யுமளவுக்கு துணிந்து விட்டாயா உன்னோடு பெரிய தொல்லையாகிவிட்டதே திட்ட ஆரம்பித்தார். துளசிராமன் கண்களில் கண்ணீர். சுவாமி நான் அண்டாக்களை மட்டும்தான் நிரப்பினேன் உண்மையிலேயே கிருஷ்ணனுக்கு எப்படி அபிஷேகம் ஆனது என்று எனக்கு தெரியாது என்றான். அர்ச்சகர் மறுநாளே மடப்பள்ளிக்கு மாற்றிவிட்டார். பிரசாதம் தயாரிப்பு பணிகளில் காய் நறுக்கும் போதும் அவன் கிருஷ்ணார்ப்பணம் என்றே தன்னுடைய செய்கைகளை கடவுளுக்கே காணிக்கையாக்கினான். அன்று அர்ச்சகர் முன்னெச்சரிக் கையாக சன்னிதானத்தை பூட்டிச் சாவியை எடுத்துச் சென்று விட்டார். மறுநாள் அதிகாலையில் சந்நிதிக் கதவைத் திறக்கும் போதே கண்ணன் வாயில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் மடப்பள்ளியில் அப்போதுதான் தயாராகி நெய்விட்டு இறக்கி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் எப்படி இங்கு வந்தது? நானும் கதவைப் பூட்டித் தானே சென்றேன் பூனை எலி கொண்டு வந்திருக்குமோ? துளசிராமனுக்கு எந்த வேலை தந்தாலும் அந்தப் பொருள் எப்படியோ எனக்கு முன்பே இங்கு வந்துவிடுகிறதே அவன் என்ன மந்திரவாதியா? என்று குழம்பினார் அர்ச்சகர். இன்று அர்ச்சகர் துளசிராமனை எதுவும் கண்ணடிக்காமல் துளசிராமா நாளை முதல் நீ வாசலில் பக்தர்களின் செருப்பை பாதுக்காக்கும் வேலையைச் செய் நீ என்று கூறினார்.

பூ நீர் பிரசாதம் என எல்லா பொருட்களும் இறைவன் சந்நிதிக்கு வந்துவிட்டன. இனி என்ன ஆகிறதென்று பார்ப்போம் என்று எண்ணியபடி இருந்தார் அர்ச்சகர். இதையும் கடவுள் விருப்பம் என்று ஏற்றுக் கொண்ட துளசிராமன். அன்று முதல் வாசலில் நின்றிருந்தான். அதே கிருஷ்ணார்ப்பணம் என்றே அந்த வேலையையும் செய்து கொண்டு இருந்தான். இன்றும் அர்ச்சகர் பூட்டி சாவி கொண்டு சென்றார். மறுநாள் காலை சந்நிதிக் கதவு திறந்ததும் அர்ச்சகர் கண்ட காட்சி உடலெல்லாம் அவருக்கு நடுங்கத் தொடங்கியது.
இதென்ன கிருஷ்ணா உன் பாதங்களில் ஒரு ஜோடி செருப்பு பாத கமலங்களின் பாதுகையின் பீடத்தில் சாதாரண தோல் செருப்பு எப்படி வந்தது? துளசிராமன் எப்படிப் பட்டவனானாலும் சந்நிதிப் பூட்டைத் திறந்து இப்படி செருப்பை வைக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆச்சரியம் அச்சம் அர்ச்சகருக்கு வேர்த்துக் கொட்டியது. அப்போது எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அர்ச்சகரே பயப்பட வேண்டாம் அந்த துளசிராமனுக்கு நீ எந்த வேலை தந்தாலும் அவன் கிருஷ்ணார்ப்பணம் என்று எனக்குக் காணிக்கையாக்கி விடுகிறான். அப்படி அன்போடு அவன் தரும் காணிக்கையை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன். நினைவெல்லாம் எங்கோ இருக்க செய்யும் பூஜையை விட எதை செய்தாலும் எனக்குக் காணிக்கையாக்குபவனின் அன்பை நான் ஏற்றுக்கொண்டேன். துளசிராமன் ஒரு யோகி அவன் அன்பு எனக்குப் பிரியமானது என்றார் பகவான். கிருஷ்ண பகவானின் இந்தக் குரல் கேட்டு வாசல் பக்கம் ஓடிவந்து அந்த யோகி துளசிராமனின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் அர்ச்சகர்

இந்தக் கதை கேரளா குருவாயூரப்பன் கோவிலில் நடந்த உண்மை சம்பவம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 141

கேள்வி: சப்தமாதர்களைப் பற்றி கூறுங்கள்

இறைவன் அருளால் சப்தமாதர்கள் குறித்து சப்தமாகக் கூறுங்கள் என்று மற்றவர்கள் கூறுகிறார்கள். சப்தமாதர்கள் யார்? சக்தியின் அம்சங்கள்தான். இப்படியே பிரிந்து பிரிந்து பார்த்துக் கொண்டே வந்தால்’எனக்கு அம்பாளை பிடிக்கிறது எனக்கு முருகனைப் பிடிக்கிறது எனக்கு விநாயகரைப் பிடிக்கிறது என்று மீண்டும் மீண்டும் வடிவங்களில் மனிதன் சிக்கிவிடுகிறான். தவறொன்றுமில்லை. ஏதாவது ஒரு வடிவத்திற்குள் தன் மனதை ஒடுக்கப் பழகிக் கொண்டால்கூட போதும். இந்த சப்தமாதர்கள் என்பது சித்தர்கள் முனிவர்கள் இவர்களுக்கே சக்தியை அருளக்கூடிய நிலையில் உள்ள அம்பாளின் உபசக்திகள்தான் (துணைசக்திகள்). எனவே சப்தமாதர்களை வணங்கினாலும் சாட்சாத் அன்னை பராசக்தியை வணங்கினாலும் எல்லாம் ஒன்றுதான். அதற்காக விநாயகப்பெருமானை வணங்கினால் அல்லது முக்கண்ணனாகிய சிவபெருமானை வணங்கினால் அவையேதும் பலனைத் தராதா? என்று கேட்க வேண்டாம். இவள் கேட்ட (சத்சங்கத்தில்) கேள்வியின் அடிப்படையில் எமது பதில் அமைவதால் அந்தக் கேள்வி அதற்குரிய அளவில் இந்த பதிலை எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் அடிக்கடி எமை நாடுகின்ற சேய்களுக்கு (குழந்தைகளுக்கு) கூறுவது சப்தகன்னியர்கள் அல்லது சப்தமாதர்கள் இரண்டும் ஒன்றுதான்.

சப்தம் என்ற சொல்லின் பொருளைப் பார்த்தால் ஏழு என்ற எண்ணைக் குறிக்கும். சப்தம் என்ற சொல்லுக்கு ஏழு என்ற பொருள் எப்படி வந்தது தெரியுமா? ஏழு வகையான விலங்குகள் ஒரே சமயத்தில் ஒரேவிதமான ஒலியளவை (சப்த அலை) எழுப்பினால் அப்பொழுது ஒருவிதமான இனிமையான இசை வடிவம் பிறக்கும். அந்த இசை வடிவத்தை வரிவடிவமாக மாற்றினால் என்ன கிடைக்கும் தெரியுமா? ச ரி க ம ப த நி ச என்ற ஒலி வரிவடிவமாக அப்பொழுது கிடைக்கும். இந்த சப்தம் என்ற சொல்லுக்குப் பின்னால் எத்தனையோ பொருள் இருக்கிறது. இருட்டிலே வழிகாட்டியாக இந்த சப்தமாகிய ஒலி இருக்கிறது. எந்தவிதமான ஔி அதாவது வெளிச்சம் இல்லாத நிலையிலே ஒலிதான் மனிதனுக்கு கண்ணாக இருக்கிறது. எனவே ஏழு வகையான சக்திகள் என்பதை குறிக்கத்தான் சப்தம் சப்தமாதர்கள் சப்தரிஷிகள் என்றெல்லாம் ஒருவகையான பொருளில் கூறப்படுகிறது. இன்னும் பல்வேறுவிதமான பொருள் இருக்கிறது. அது குறித்தெல்லாம் தக்க காலத்தில் விளக்கம் தருவோம்.

சப்தமாதர்களை வணங்கினால் என்ன பலன்? என்று பார்த்தால் பொதுவாக எல்லாவகையான தோஷத்திற்கும் எத்தனையோ வகையான பரிகாரங்கள் இருக்கின்றன. அத்தனை பரிகாரங்களையும் ஒரு மனிதனால் செய்ய இயலாது எமக்கும் தெரியும் இறைவனுக்கும் தெரியும். அப்படியிருக்கும் பட்சத்தில் மிக எளிமையாக சப்தமாதர்களை அவனவன் அறிந்த மொழியில் வணங்கி வந்தால் அது நல்ல தோஷ பரிகாரமாக இருக்கும். அடுத்ததாக குறிப்பாக பெண்களுக்கு நாங்கள் கூறவருவது இக்காலத்திலே வெளியில் செல்லவேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்படுகிறது. வெளியில் செல்லும் பொழுதே புரிந்து கொள்ள வேண்டும் ஆபத்தும் உடன் வருகிறது என்று.

அப்படி வரக்கூடிய ஆபத்துகளிலிருந்து பெண்கள் தங்களைக் காத்துக்கொள்ள இந்த சப்தமாதர்கள் வழிபாட்டை அனுதினமும் இல்லத்தில் அமர்ந்து அமைதியாக செய்து வந்தால் நல்ல பலன் உண்டு. இன்னும் கூறப்போனால் மனமொன்றி சப்தமாதர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டே வந்தால் எல்லோரும் கேட்கிறார்களே குண்டலினி என்றால் என்ன? அந்த குண்டலினி சக்தியை எழுப்பினால் என்ன நடக்கும்? என்று. இந்த அன்னையர்களின் கருணையாலே எந்தவிதமான தியான மார்க்கமில்லாமல் சப்தமாதர்களை பிராத்தனை செய்வதன் மூலமே ஒரு மனிதன் அடையலாம். ஆனால் இது அத்தனை எளிதான காரியமல்ல. பல்வேறு சோதனைகள் வரும். அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு ஒருமைப்பட்ட மனதோடு சப்தமாதர்களை வணங்கி வந்தால் ஒரு மனிதனுக்கு வேண்டிய எல்லா நலன்களும் அகத்திலும் பரத்திலும் கிட்டும். இன்னும் பல்வேறு விளக்கங்களை பிற்காலத்தில் உரைப்போம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 140

கேள்வி: பேரளம் (திருவாரூர் மாவட்டம்) அருகே உள்ள பவானி அம்மன் கோவிலின் ஆற்றல் குறித்து:

நீ செல்லும் பொழுது மணி ஒலித்தது இறையின் அருளாசியைக் காட்டுகிறது. ஒரு மனிதனின் பூர்வீக பிரம்மஹத்தி கர்மாக்கள் போகக்கூடிய உன்னதமான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. அது மட்டுமல்லாது பார்வதி சுயவர யாகம் நடத்த ஏற்புடைய ஸ்தலம். பெண்களின் மாங்கல்ய தோஷம் நீங்குகின்ற ஸ்தலம். புத்திரப் பேறை அருளுகின்ற ஸ்தலம். உலகியல் ரீதியான பதிலப்பா இது. தத்துவார்த்தமான பதில் என்பது வேறு. ஏனென்றால் இங்கு சென்றால்தான் அதெல்லாம் கிட்டுமா? வேறு ஸ்தலங்களுக்கு சென்றால் கிட்டாதா? என்ற வேறோரு வினா எழும். இருந்தாலும் நீ கேட்டதால் இப்படி கூறினோம்.

இந்த நிலையிலே உலகியல் ரீதியான பிரச்சனைகள் குறித்து முன்னர் கூறினோம். அது போக இங்கு (பேரளம் பவானி அம்மன் ஆலயம்) ஸ்ரீ சக்ரம் வைத்து பூஜை செய்வதாலும் ஸ்ரீ சக்ர உபாசனையை இங்கு வைத்து கற்றுக்கொண்டு முறையாக துவங்கினாலும் அந்த அன்னையின் அருளால் மூலாதாரத்திலிருந்து முளைத்தெழுகின்ற ஜோதியை உணர்ந்து மேலேறி மேலேறி செல்லலாம். மெய்ஞான வாழ்விற்கு யோக மார்க்கத்திற்கு ஏற்படைய ஸ்தலம் இது.

கேள்வி: காட்டில் தனியாக செல்லும் பொழுது கொடிய மிருகங்களை வசியப்படுத்தும் மந்திரங்களை தங்களை போன்ற சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த மந்திரங்களை உபயோகப்படுத்தலாமா?

இறைவனின் கருணையால் இயம்புகிறோம் மிருகங்களை ஏனப்பா நீ வசியம் செய்யப்போகிறாய்? முற்காலத்தில் வேறு சூழல் இல்லை என்பதால் வனத்திற்கு (காட்டிற்கு) சென்று பல்வேறு மனிதர்கள் தவம் செய்ய நேரிட்டது. இப்பொழுதுதான் நல்ல வசதியான இல்லங்களை கட்டிக் கொள்ளக்கூடிய நிலை வந்துவிட்டதே? எனவே தாராளமாக இல்லத்தில் அமைதியாக நல்ல நிலையில் இருந்தே தவம் செய்யலாம்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 264 ஒழுந்தியாப்பட்டு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 264 வது தேவாரத்தலம் ஒழுந்தியாப்பட்டு. புராணபெயர் திருஅரசிலி. மூலவர் அரசலீஸ்வரர், அரசிலிநாதர், ஆலாலசுந்தரர், அஸ்வத்தேஸ்வரர். இங்கு சுவாமி 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும் சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர். அம்பாள் பெரியநாயகி, அழகியநாயகி. அம்பாள் பெரியநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்த கோலத்தில் இருக்கிறாள். தீர்த்தம் வாமன தீர்த்தம், அரசத் தீர்த்தம். தலமரம் அரசமரம். கோவில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் ஒரு 3 நிலை இராஜகோபுரமும் ஒரு பிராகாரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகர், நவக்கிரகம், சண்டேசுவரர் நால்வர் ஆகியேரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. மூலவரை நோக்கியவாறு பைரவர், சூரியன், உருவங்கள் உள்ளன. கோஷ்டமூர்த்தி தட்சிணாமூர்த்தி தனி விமானத்துடன் உள்ளார். பொதுவாக வலது பக்கம் திரும்பியிருக்கும் முயலகன் இங்கு இடது பக்கம் திரும்பி கையில் நாகத்தை பிடித்தபடி இருக்கிறான். இவருக்கு மேலே நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் சிறிய மூர்த்தியாக இருக்கிறார். பிரம்மா, துர்க்கை, வைஷ்ணவி ஆகிய பிற கோஷ்ட மூர்த்திகளின் சந்நிதிகளும் உள்ளன. கருவறைக்கு பின்புறத்தில் கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக அவ்விடத்தில் மகாவிஷ்ணு மேற்கு பார்த்தபடி இருக்கிறார்.

மரங்களில் சிறந்த அரசமரத்தடியில் இறைவன் எழுந்தருளியதால் இத்தலம் அரசிலி என்று பெயர் பெற்றது. வாமதேவர் எனும் முனிவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெறுவதற்காக பல தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது ஒரு அரசமரத்திற்கு அருகில் சற்று நேரம் அமர்ந்து ஒய்வெடுத்தார். உடலுக்கு குளிர்ச்சி தரும் அரசமரத்தின் அடியில் சற்று நேரம் இருக்கும் நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறதே என்று நினைத்த முனிவர் இங்கு சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பினால் எப்படி இருக்கும் என மனதில் நினைத்து கொண்டார். அவரது எண்ணத்தை அறிந்த சிவன் அரசமரத்திற்கு அடியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். மகிழ்ந்த வாமதேவ முனிவர் அருகில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினார். சிவன் அவர் முன் காட்சி தந்து சாபத்திற்கு விமோசனம் தந்தார். அரசமரத்தின் கீழ் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியதால் தலத்திற்கு அரசிலி என்றும் இறைவனுக்கு அரசலீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது. வாமதேவ முனிவருக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து இந்த லிங்கம் பூமியில் புதையுண்டு போயிற்று.

சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். சிவன் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. ஒரு நந்தவனம் அமைத்து அருகிலுள்ள மற்றொரு சிவலிங்கத்திற்கு வழிபாடுகள் செய்து வந்தான். பணியாள் ஒருவன் தினமும் நந்தவனத்தில் இருந்து மலர்களை எடுத்து வரும் பணியை செய்து வந்தான். ஒரு சமயம் பணியாள் நந்தவனத்திற்கு சென்றபோது அங்கு மலர்கள் இல்லை. அரண்மனைக்கு திரும்பிய பணியாளன் மன்னனிடம் செடியில் மலர்கள் இல்லாத விபரத்தை கூறினான். மன்னரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மன்னனும் அன்று வேறு மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்தான். மறுநாளும் பணியாள் நந்தவனம் சென்ற போது அங்கு செடியில் மலர்கள் இல்லை. அவன் மீண்டும் மன்னரிடம் சென்று தகவலை கூறினான். மலர்களை அதிகாலையில் யாரோ பறித்து சென்று விடுவதாக சந்தேகம் கொண்ட மன்னன் அடுத்தநாள் காலையில் தன் படையினருடன் நந்தவனத்திற்கு சென்று கண்காணித்தான். அப்போது நந்தவனத்திற்குள் புகுந்த மான் ஒன்று மலர்களை உண்டதைக் கண்டான். சிவபூஜைக்கு என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான் சாப்பிட்டதைக் கண்ட மன்னன் கோபத்துடன் மான் மீது அம்பு எய்தான். மான் தப்பிவிட காவலர்கள் விரட்டிச் சென்றனர். அந்த மான் ஒரு அரசமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்து கொண்டது. மன்னன் மரத்திற்குள் அம்பு எய்தான். அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. மான் அம்பால் தைக்கப்பட்டிருக்கும் என நினைத்த மன்னன் உள்ளே பார்த்தபோது அங்கு மான் இல்லை. அதற்கு பதில் பல்லாண்டுகளுக்கு முன் மறைந்த வாமதேவர் வழிபட்ட லிங்கம் இருந்தது. லிங்கம் பாணத்தில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. அதிர்ந்த மன்னன் சிவனை வேண்டினான். சிவன் மன்னனுக்கு காட்சி தந்து மான் வடிவில் அருள்புரிந்தது தான் என்று உணர்த்தியதோடு மன்னனுக்கு புத்திர பாக்கியமும் கொடுத்து அருளினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான். சத்தியவிரதனின் மகன் இந்திரசேனன் என்பவனும் இத்தல இறைவனிடம் அளவில்லாத பக்தியுடன் வழிபட்ட தலம். இந்த இந்திரசேனன் மகள் அரசிலிநாதரை வழிபட்டு இத்தலத்திலேயே வாழ்ந்து இறையடி சேர்ந்த தலம்.

சாளுவ மன்னனும் இத்தலத்தில் பிரதோஷ விரதமிருந்து பேறு பெற்றுள்ளான். கருவறை வெளிச்சுவரில் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து கோப்பரகேசரி வர்மன் காலத்தியதாகச் சொல்லப்படும் கல்வெட்டுக்கள் உள்ளன. இத்திருக் கோயிலில் உள்ள ஐந்து கல்வெட்டுக்கள் அரசியலாரால் படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் விக்ரம சோழதேவர், குலோத்துங்க சோழ தேவர் ஆகிய இருவரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் இங்கு சிலகாலம் தங்கியிருந்து சுவாமியை வழிபட்டு பாடல்கள் பாடியிருக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 139

கேள்வி: மெய் தீர்த்தம் பற்றிய விளக்கம்

இடைவிடாத பிராத்தனைகள் சாத்வீக எண்ணங்கள் சதாசர்வ காலம் தர்ம சிந்தனை இந்த வாழ்வை நடத்த கர்மாக்கள் குறையுமப்பா. இந்த சினம் விரக்தி தளர்வு பிறரை பிறரோடு ஒப்பிட்டுக் கூறுதல் ஒரு மனிதன் இல்லாத போது அவரைப் பற்றி விமர்சனம் செய்தல் காழ்ப்பு உணர்ச்சி இன்னும் இத்யாதி இத்யாதிகளை எல்லாம் தள்ளத்தான் மனிதன் மா மனிதன் ஆகிறான். இந்த ஒரு பயணம் செய்யும் பொழுது இறை நாமமும் பிராத்தனையும் செய்து கொண்டு செல்வது நலம். வீண் விவாதங்களும் பிரச்சனைக்குரிய செயல்களும் வாக்குகளும் வேண்டாம். இந்த ஒவ்வொரு துளியும் புவி சுழுன்று சுழன்று காலத்தை மனிதனுக்கு அறிவுறுத்துவது இறை நோக்கி செல் இறை நோக்கி செல் இறை நோக்கி செல் என்பதுதான். ஒரு பிறவியில் விட்டுவிட்டால் எப்பிறவியில்? என்பதை மனிதனால் நிர்ணயிக்க முடியாது. விலங்குகளுக்கு கிடைக்காத பாக்கியம் மனிதனுக்கு இறை தந்திருப்பது இறையின் கருணை. விங்குகளும் உண்ணுகின்றன. மனிதனும் உண்ணுகிறான். விலங்குகளும் தன் இனத்தை விருத்தி செய்கின்றன. மனிதனும் செய்கிறான். பின் எதில்தான் வேறுபாட்டைக் காட்டுவது? என்றால் விலங்குகள் குகைக்குள் வாழ்கின்றன. மனிதன் தனக்குக் கொடுத்த அறிவைக் கொண்டு குகையை வடிவமைக்கக் கற்றுக் கொண்டு விட்டான். எனவே மனதை தூய கருவறையாக்கி உடலை ஆலயமாக்கி மனதுக்குள் சதா இறைவனை அமர்த்த போட்டியிட வேண்டும். எங்கு சென்று அமர்வது? என்று தெரியாமல் இறை திணற வேண்டும். அந்த அளவுக்கு மனம் புத்தி செயல் எண்ணம் வாக்கு புனிதமாக இருக்க வேண்டும். எனவே சண்டையில் சச்சரவில் மனதை செல்ல விடாமல் அவரவர் தொண்டையில் சுரக்கும் தீர்த்தத்தை உணர்ந்தால் அதுவே சுய தீர்த்தம் மெய் தீர்த்தம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 138

கேள்வி: நல்லதையே செய்ய வேண்டும் வழிகாட்டுங்கள்:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே நடக்குமப்பா. இப்படி கால காலம் மாந்தர்கள் வாழ்கின்ற வாழ்வு நிலை என்பது பிற மனிதர்கள் தன்னை மதிக்கும் வேண்டும் தன்னை துதிக்க வேண்டும் தன் செயலை பாராட்ட வேண்டும் தன்னுடைய மனநிலையை அறிந்து அதற்கு ஏற்றாற் போல் பிறர் நடக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது பொதுவாக மனித இயல்பு. ஆனால் இவையெல்லாம் யாருக்கும் எந்த காலத்திலும் நூற்றுக்கு நூறு விழுக்காடு நடப்பதில்லை. ஒன்று ஒரு மனிதனின் பதவி செல்வம் செல்வாக்கு இதற்காகவோ அல்லது ஒரு மனிதனை அண்டிப் பிழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிலை இருக்கும் நிலையிலும் ஒரு வேளை ஒரு மனிதனை எதிர்த்துக் கொண்டால் அந்த மனிதனால் உயிருக்கோ உடைமைக்கோ ஆபத்து நேரும் என்பது போன்ற வெளிப்படையான துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்ற நிர்பந்தம் இல்லாத நிலையில் எந்த மனிதனும் யாரையும் மதிக்கப் போவதில்லை. இதுதான் மனித இயல்பு. ஆனால் பரிபூரண அன்பு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு தூய அன்பு இந்த அன்பு மட்டும் மனிதனிடம் மலர்ந்து விட்டால் அதன் பிறகு இவன் வேண்டியவன் இவன் உறவுக்காரன் இவன் நண்பன் இவன் எதிரி இவன் ஆண் இவள் பெண் என்கிற பேதங்கள் எல்லாம் அடிப்பட்டு போகும். அங்கே வெறும் ஆத்ம தரிசனம் மட்டுமே தெரியும். இறைவன் படைப்பில் நாம் எப்படி வந்திருக்கிறோமோ அதைப் போல அந்த ஆத்மாவும் வந்திருக்கிறது.

இந்த உலகம் நமக்கு மட்டுமல்ல இது இறைவன் படைத்தது. இங்குள்ள நீர் காற்று ஆகாயம் பூமி விருட்சங்கள் (மரங்கள்) பொதுவானது. நாம் எப்படி இந்த உலகிலே வாழ்வதற்கு வந்திருக்கிறோமோ அதைப் போலத்தான் பிற உயிர்களும் வந்திருக்கிறது என்ற எண்ணம் வந்துவிட்டாலே யார் மீதும் சினம் ஆத்திரம் பொறாமை எழாது. அனைவரும் நம்மைப் போன்ற உணர்வுள்ள மனிதர்கள் என்று எண்ணிவிட்டாலே அங்கே நன்மைகள் நடந்து கொண்டே இருக்கும். எனவே இந்த உண்மையை புரிந்து கொண்டால் மனித நேயம் வளரும் பலப்படும். அங்கே நற்செயல்கள் அதிகமாகும். நற்செயல்கள் அதிகமாக அதிகமாக அங்கே நல்லதொரு சமூக மனித இணைப்பும் பிணைப்பும் உருவாகும். அப்படிபட்ட ஒரு உயர்ந்த உச்சகட்ட சமூக நலத்திலே பிறக்கின்ற குழந்தைகளும் உயர்வாகவே இருக்கும். ஆனால் சதா சர்வகாலமும் கோபமும் எரிச்சலும் மன உலைச்சலும் பிறர் மீது பொறாமையும் குற்றச் சாட்டுகளும் கொண்டு யார் வாழ்ந்தாலும் இந்த எண்ணப்பதிவு வாரிசுக்காக வாரிசு தோறும் வாரிசின் வழியாக வம்சாவழியாக கடத்தப்பட்டு தீய பதிவுகள் எங்கெங்கும் ஆட்கொண்டு அந்த தீய பதிவுகள் எல்லா மனத்திலும் நுழைந்து தவறான செய்கைகளை ஊக்குவித்துக் கொண்டே இருக்கும். எனவேதான் நல்லதை எண்ணி நல்லதை உரைத்து நல்லதையே செய்ய வேண்டும் என்று யாம் எம்மை நாடுகின்ற மாந்தர்களுக்கு என்றென்றும் கூறிக்கொண்டே இருக்கிறோமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 137

கேள்வி: மாயூரநாதர் (மயிலாடுதுறை) ஆலயத்தில் உள்ள குதம்பை சித்தரைப் பற்றி:

நங்கையர்கள் (பெண்கள்) செவியில் அணியக்கூடிய ஒருவகையான ஆபரணம்தான் குதம்பை என்பது. இந்தக் குதம்பையை முன்னிறுத்தி பெண்களுக்குக் கூறுவது போல் ஏதுமறியாத மாயையில் சிக்கியிருக்கின்ற ஆன்மாக்களுக்கு தான் உணர்ந்ததைப் பாடல்களாகப் பாடி இறை ஞானத்தை மனிதன் மனிதப் பிறவி இருக்கும் பொழுதே உணர்ந்து கொள்ள வேண்டும். இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ என்பது போல மனிதன் மனிதனாக பிறந்த உடனேயே கூடுமானவரை பக்தி மார்க்கத்தில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு கிட்டிய உடனேயே உடனடியாக ஞான மார்க்கத்திற்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக தான் கற்றதை பெற்றதை உணர்ந்தை உள்ளொளியாக புரிந்து கொண்டதை பிற மனிதர்களுக்கும் கூறிவைத்தார்.

கேள்வி: சிற்றம்பலநாடி சுவாமிகளைப் பற்றி:

60 க்கும் மேற்பட்ட சித்தர்களுடன் ஒரே கணத்தில் இறையுடன் இரண்டறக் கலந்த ஒரு புனிதன் ஒரு முனிவன் ஒரு சித்தன். ஏறக்குறைய 600 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வைபவம் நிகழ்ந்தது. பற்றற்ற ஒரு ஞானியாகி பவித்ரமாகி முக்கண்ணனாகிய இறைவனை ஸ்தூல உடலிலே தரிசித்து ஔி ரூபமாக அனைவருக்கும் அதனைக் காட்டி பேரின்பப் பேற்றை எப்படி அடைவது? என்பதற்காக வழிகாட்டி தன்னுடன் பலரையும் அழைத்துக் கொண்டு சென்றவர்.

குதம்பை சித்தரின் வரலாற்றை மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

சிற்றம்பலநாடி சுவாமிகளின் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

குதம்பை சித்தர்

குதம்பை என்ற ஆபரணத்தை காதில் அணிந்திருந்ததால் குதம்பை சித்தர் என்று பெயர் பெற்றார். பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர். குதம்பை சித்தர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் ஆண்குழந்தையாக இருந்தாலும் இவரது அன்னை இவருக்கு பெண் குழந்தைகளுக்கு காதில் அணிவிப்பது போல் குதம்பை என்று சொல்லக்கூடிய ஒரு தொங்கட்டான் அணிவித்தாள். அந்த அணிகலனின் அழகால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்து விட்டாள். அந்த பெயரே அவருக்கு நிரந்தரமாகியது. குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். அவரை வணங்கி நின்ற குதம்பையரிடம் நீ சென்ற பிறவியில் உய்வடையும் பொருட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்த தவத்தை தொடர்ந்து செய்து இறைவனை அடைவதற்காகவே இப்பிறவியில் வந்திருக்கிறாய் என்றார். குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றையெல்லாம் கேட்டு தன்னை ஆசிர்வதித்து இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார். யாருக்கு மாதவர் குரு அருளுபதேசம் செய்த பின் சென்ற பிறவியின் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய் என்றார்.

குதம்பை வீட்டிற்கு வந்தார். அவருக்கு திருமணம் செய்வதற்காக அவரது தாய் பெண் பார்த்து வைத்திருந்தார். தனது தாயிடம் உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெண்காயம் (பால் காயம்) இருக்கிறது. மிளகு இருக்கிறது சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால் ஒரு பெண்ணின் காயம் (உடல்) நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது? பெண் இன்பத்தால் சித்திக்காத மன இன்பம் இந்த மருந்தால் சித்திக்காதோ என்றார் குதம்பை. தாய்க்கு அதிர்ச்சி என்னடா சித்தன் போல் பேசுகிறாயே இல்லறமே துறவறத்தை விட மேலானது. உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன். நீ பெறும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும். ஒரு தாயின் நியாயமான ஆசை இது. அதை நிறைவேற்றி வை அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை. அவரது எண்ணமெல்லாம் முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது. அன்றிரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். பல வருட தவத்திற்கு பிறகு ஒரு நாள் இறைவனின் அசீரீரீ அவருக்கு கேட்டது.

குதம்பை உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது. நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில். இங்கே பல யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தியுண்டு. உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கிறேன். இந்த மந்திரத்தை இங்குள்ள யானைகளின் காதில் விழும்படியாக நீ உச்சாடனம் செய். அவை பிளிறும்போது அந்த ஓசை மந்திரமாக வெளிப்படும். அப்போது பூமியில் அமுதம் போல் மழை கொட்டும். அந்த மழையால் உலகம் செழிப்படையும் என்று குதம்பையாருக்கு வருணமந்திரத்தை உபதேசித்தார். குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார். மழை பொழிந்து காடு செழித்தது. தம் அனுபவங்களை 32 பாடல்களாக பாடியுள்ளார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன.

குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தியடைந்தார். மயிலாடுதுறை மாயூரநாதர்கோயிலில் சிவன் சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அருகில் குதம்பை சித்தர் ஜீவ சமாதி உள்ளது. ஜீவ சமாதியின் மேல் விநாயகாரின் திருவுருவம் உள்ளது மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால் மழை பொழியும். ஆரம்ப காலத்தில் இங்கிருந்த சந்தன மரத்தில் உருவான விநாயகர் இவர். அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் இவரை அகத்திய சந்தன விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும் காயகற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும். நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம் உடலை வலுப்படுத்தும் காயகற்பம் தேவையா என்ற வினாவை எழுப்பிய அவர் வாசியோகமான பிரணாயமத்தை பின்பற்றும் ஒருவருக்கு யோகம் தேவையில்லை என்று தனது கருத்தை சொல்கிறார்.