ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 7

ராமர் சுக்ரீவனுடைய பயத்தையும் சந்தேகத்தையும் போக்க முடிவு செய்தார். துந்துபி அரக்கனின் உடலைப் போல் 10 மடங்கு பெரிய பொருள் ஒன்றை ராமர் தனது கால் கட்டை விரலால் நெம்பி தூக்கி எறிந்தார். இந்த மரம் பத்து யோசனை தூரம் சென்று விழுந்தது. பிறகு தன்னுடைய வில்லில் அம்பை தொடுத்தார். சுக்ரீவன் காட்டிய மிகப்பெரிய ஆச்சா மரத்தை நோக்கி அம்பு எய்தார். அம்பு அந்த மரத்தையும் அதன் பின்னால் இருந்து மேலும் ஆறு ஆச்சா மரங்களையும் சேர்த்து மொத்தம் ஏழு மரங்களையும் ஒன்றாக துளைத்து வெளியே வந்து மீண்டும் ராமரின் அம்பாரிக்குள் வந்து விட்டது. இதைக்கண்ட சுக்ரீவன் பரவசமடைந்தான். வாலியின் வஜ்ஜிரம் போன்ற உடலை ராமரின் அம்பு துளைக்கும் என்று நம்பினான். உங்கள் பராக்கிரமத்தை கண்ணார கண்டேன் என்று ராமரின் கால்களில் விழுந்து வணங்கினான். வாலியை அழித்து என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன் என்றான்.

ராமரிடம் சூக்ரீவன் வாலியை பற்றிய வேறொரு முக்கியமான செய்தியை தங்களிடம் சொல்ல வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான். வாலி மிகப்பெரிய சிவ பக்தன். சிவனை நோக்கி பெரும் தவங்கள் செய்திருக்கின்றான். கயிலையிலுள்ள சிவபெருமானின் அருளைப் பெற்றவன். முன்பொரு முறை அமிர்தம் பெறுவதற்க்கு பாற்கடலை கடையும் போது வாலி தேவர்களுக்கு உதவி செய்தான். அதனால் பஞ்ச பூதங்களின் வலிமையையும் பெற்றான். தனது தந்தையான இந்திரனிடம் இருந்து வாலி ஒரு வரத்தை பெற்றிருக்கின்றான். அந்த வரத்தின்படி வாலியுடன் யுத்தம் செய்பவர்களின் சக்தியில் பாதி சக்தி வாலிக்கு சென்றுவிடும். அதனால் மிகச்சிறந்த சிவபக்தனும் வலிமையும் அதிகாரமும் கொண்ட ராட்சசர்களின் தலைவனான ராவணன் கூட வாலி இருக்கும் பக்கம் வருவதில்லை. நீங்கள் வாலியின் மீது அம்பு எய்ய அவன் எதிரே நின்றால் வாலி பெற்ற வரத்தின்படி உங்களின் சக்தி பாதி வாலிக்கு சென்று விடும். ஏற்கனவே வாலி மிகவும் பராக்கிரமசாலி உங்களின் பாதி சக்தியும் வாலியுடன் சேர்ந்தால் அவன் இன்னும் பராக்கிரமசாலியாகி விடுவான். அதன் பிறகு அவனை யாராலும் அழிக்க முடியாது என்று சொல்லி முடித்தான். அதற்கு ராமர் வாலியின் உடலை எனது அம்பு துளைத்து அழிக்கும் சந்தேகமோ பயமோ வேண்டாம் என்றார். ராமரின் வார்த்தைகளை கேட்ட சுக்ரீவனுன் அப்போதே வெற்றி பெற்றுவிட்டதை போன்று பூரிப்படைந்தான்.

ராமரிடம் அனுமன் பேச ஆரம்பித்தார். முதலில் வாலியைக் கொன்று பின் சுக்கிரீவனுக்கு முடிசூட்ட வேண்டும். சுக்ரீவன் அரசனாவான். அவன் ஆணை பிறப்பித்ததும் எழுபது வெள்ளம் எண்ணிக்கை உள்ள வானரர் படைகள் ஒன்று சேர்வார்கள். (எண்ண முடியாத எண்ணிக்கையில் அடங்காத மிகப்பெரிய கூட்டம் ஒரு வெள்ளமாகும்) அவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் நாலா திக்குகளுக்கும் அனுப்பி வைத்தால் விரைவில் சீதையை கண்டு பிடித்து விடலாம் என்றார். ராமரும் அனுமன் சொல்வது சரி என்று ஏற்றுக் கொண்டார். அனுமன் தன் துணை அமைச்சர்களான தாரன் நீலன் நளன் ஆகியவர்களோடு ராமருக்கு வழிகாட்ட அனைவரும் வாலியின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றார்கள். கிஷ்கிந்தை காட்டுப் பகுதிக்கு வந்ததும் நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று சுக்கிரீவன் ராமனை நோக்கிக் கேட்டான். நீ வாலியை யுத்தத்திற்கு கூப்பிடு. நீங்கள் இருவரும் போர் செய்யும் போது மறைவிடத்தில் இருந்து அம்பு ஒன்றினால் வாலியைக் கொல்வேன் என்று ராமர் கூறினார். (ராமர் ஏன் இப்படி கூறினார் என்பதற்கான காரணம் பின் வரும் பகுதியில் வரும்) சுக்கிரீவன் தனது பயத்தை நீக்கி ஒர் உயரமான இடத்தில் இருந்து கொண்டு வாலியைப் போருக்கு வருமாறு கூவி அழைத்தான்.

நமச்சிவாயக் கவிராயர்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் வைத்த பக்தியினாலும் பேரன்பினாலும் நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து வருவது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல பாபநாசம் சென்று உலகம்மையை தொழுது பாடினார். இரவு வரை தொடர்ந்து பாடியவர் கோவில் மூடியதும் அங்கிருந்து கிளம்பினார். இல்லத்திற்குத் திரும்பும் போதும் உலகம்மையைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே வந்தார். பக்தன் பாடும் கவிதையை கேட்க ஆவல் கொண்ட உலகம்மை கவிராயரை பின் தொடர்ந்து வந்தாள். அம்பிகை வருவதை அறியாத கவிராயர் வெற்றிலை தரித்து போட்டுக் கொண்டு வாய்விட்டுப் பாடிக்கொண்டே வந்தார். மெய் மறந்து பாடியபோது அவரையும் அறியாமல் அவர் வாயிலிருந்து தெறித்த எச்சில் துளிகள் உலகம்மையின் மேல் பட்டது. அத்திருக்கோலத்தோடு உலகம்மை கோயிலில் மீண்டும் எழுந்தருளினாள். மறுநாள் காலையில் கோயிலைத் திறந்து பார்த்த அர்ச்சகர் உலகம்மையின் சேலையில் தெரிந்த எச்சில் துளிகளைக் கண்டு திடுக்கிட்டார்.

இறைவழிபாட்டுக்கு அச்சமயம் வந்திருந்த அரசனிடம் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. மன்னன் வேதனையுற்றான். இப்பாதகத்தை செய்தவன் யார் உடனே கண்டு பிடியுங்கள் என்று உத்தரவிட்ட அரசன் அரணைமனைக்கு திரும்பி இந்த வேதனையிலேயே இருந்தான். இரவு அரசன் இந்த யோசனையிலேயே தூங்கிய அரசனின் கனவில் வந்த உலகம்மை வருந்தாதே அரசனை என் மீது கொண்ட பக்தியினால் நமச்சிவயாத்தின் பாடலுக்கு வசப்பட்டு அவன் பின்னே நான் தான் சென்றன். பாடுவதில் தன்னை மறந்த நிலையில் இருந்த நமச்சிவாயக் கவிராயர் வாயிலிருந்த வந்த எச்சில் என் மீது பட்டது. அவனை விட சிறந்த பக்தன் கிடையாது. அவனுக்கு சகல மரியாதைகளையும் செய்து கௌரவிப்பாய் என்று கூறி மறைந்தாள். அம்பிகையின் உத்தரவு கேட்டு அகமகிழ்ந்த அரசன் அம்பிகையின் உத்தரவின் படி நமச்சிவாயக் கவிராயரை கௌரவிக்க எண்ணி அவரை கோவிலுக்கு வரவழைந்தான். நமச்சிவாயக் கவிராயர் உலகம்மையின் மீது வைத்திருக்கும் அன்பை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிய அரசன் அவரிடம் சென்று தாங்கள் உலகம்மை மீது வைத்த அன்பு சத்தியமானால் இதோ உலகம்மை கையிலிருக்கும் தங்கப் பூச்செண்டு தாங்கள் பாடப் பாட அப்பூச்செண்டை சுற்றியிருக்கும் தங்க கயிறுகள் அறுந்து இப்பூச்செண்டு தானாய் உங்கள் கையில் வந்து விழ வேண்டும் என்றான் அரசன். உலகம்மை அந்தாதி எனும் அற்புதமான நூலை இயற்றினார். நமச்சிவாயக் கவிராயர் அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன.

விண்டல நின்ற சரற்கால சந்திர சுவேதமுக
மண்டலமும் கையில் மலரொடும் தோளில் வழிந்த ரத்ன
குண்டலமும் பொலி வாலப் பிராய குமாரத்தியாய்
செண்டலர் செங்கை உலகாள் என் நாவில் சிறந்தவளே

எனும் பாடலை பாடி முடித்த சமயம் அனைத்து தங்க நாரும் அறுந்து தங்கச் செண்டு உலகம்மையின் கையிலிருந்து நமச்சிவாயக் கவிராயர் கரத்திற்கு தாவி வந்தது. அரசர் முதல் அனைவரும் நமச்சிவாயக் கவிராயர் பாதத்தில் விழுந்தனர். இப்பாடல் கொண்ட தொகுப்பு உலகம்மை கலித்துறை அந்தாதி என்று அழைக்கப்படுகிறது. இவர் சிங்கை உலகம்மை பிள்ளைத் தமிழ், சிங்கை உலகம்மை கலித்துறை அந்தாதி, சிங்கை உலகம்மை கொச்சகக் கலிப்பா, சிங்கை உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, சிங்கை உலகம்மை சந்த விருத்தம், சிங்கை சிலேடை வெண்பா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

அவர் இயற்றிய கலித்துறை அந்தாதி கீழ் PDF நூல் வடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 6

ஹிமவான் சொன்ன வார்த்தைகளை கேட்ட துந்துபி வாலியுடன் சண்டையிட கிஷ்கிந்தைக்கு வந்தான். மரங்களை தள்ளியும் அரண்மனை கோட்டையை இடித்தும் வானரத்தின் அரசனே வாலியே வெளியே வா என்னுடன் யுத்தம் செய் என்று வாலியை சண்டைக்கு அழைத்து கர்ஜனை செய்தான். அந்தப்புரத்தில் உற்சாக பானம் அருந்திக் கொண்டிருந்த வாலி வெளியே வந்து துந்துபியிடன் உயிரோடு இருக்க உனக்கு ஆசையிருந்தால் ஓடிப்போய் விடு என்று எச்சரித்தான். வாலி அலட்சியமாக பேசியதை கேட்ட துந்துபி கோபமாக உனக்கு வீரியமிருந்தால் என்னுடன் யுத்தம் செய். வீண் விவாதம் வேண்டாம் நீ இப்போது அந்தப்புரத்தில் இருந்து வந்திருக்கிறாய். உற்சாக பானம் அருந்தி களைப்பாக இருக்கிறாய். களைப்பாக இருப்பவனுடன் சண்டையிடுவது பாவமாகும். காலை வரை உனக்காக காத்திருக்கிறேன். உன்னுடைய களைப்பை விட்டு புத்துணர்ச்சி அடைந்ததும் வா சண்டையிடுவோம் என்றான் துந்துபி.

வாலி துந்துபியின் வார்த்தைகளை கேட்டு சிரிந்தான். நான் உற்சாக பானம் அருந்திருக்கிறேன் அது உண்மை தான். சண்டையிட நீ விரும்பினால் இப்போதே சண்டையிடலாம் வா என்று அசுரனை பிடித்து தூக்கி தரையில் எறிந்தான். ரத்தம் கக்கி விழுந்த அசுரன் மீண்டும் எழுந்து சண்டைக்கு வர சில கனத்தில் அடித்தே கொன்றான் வாலி. ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அசுரனை சில கனங்களில் கொன்று விட்டான் வாலி. அவ்வளவு பெரிய பராக்கிரமசாலி. செத்து விழுந்த துந்துபி அசுரனை தூக்கி வீசினான் வாலி. அசுரன் ஒரு யோசனை தூரம் போய் விழுந்தான். அசுரன் விழுந்த இடத்திலிருந்து தெறித்த ரத்த துளிகள் காற்றில் பரவி அருகில் இருந்த மதங்க முனிவரின் ஆசிரமத்தில் விழுந்தது. இதனை கண்ட முனிவர் இதனை செய்தது யார் என்று அறிந்து கோபம் கொண்டார். இந்த ஆசிரமம் இருக்கும் காட்டிற்குள் வாலி வந்தால் இறந்து விடுவான் என்று வாலியை சபித்து விட்டார் மதங்க முனிவர். அருகில் தான் மதங்க முனிவரின் ஆசிரமம் இருக்கிறது. முனிவர் சாபமிட்ட இடமே இது. முனிவரின் சாபத்தினால் வாலி பயந்து இங்கு வரமாட்டான் என்று இந்த இடத்தில் நாங்கள் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வாலி அதிகாலையில் எழுந்து ஒரே முகூர்த்தத்தில் நான்கு பக்கங்களிலும் இருக்கும் கடல்களுக்கு தாவி சென்று சந்தியா வந்தனம் செய்து முடிப்பான். ஒரு திசை கடலில் இருந்து அடுத்த திசை கடலுக்கு ஒரே தாவலில் சென்று விடுவான். தன்னுடைய உடல் பலத்தை காட்டும் வகையில் மலைப் பாறைகளை பந்து போல் மேலே எறிந்து விளையாடுவான். பெரிய மரங்களை புல்லை பிடுங்குவது போல் பிடுங்கி விளையாடுவான். இங்கிருக்கும் ஆச்சா மரங்களை பாருங்கள் எவ்வளவு பெரிதாக இருக்கின்றது. வாலி இந்த மரத்தினை ஒரே கையில் பிய்த்து விடுவான். மரத்தை லேசாக அசைத்தால் மரத்திலுல்ல இலைகள் எல்லாம் அதிர்ந்து விழுந்து விடும் என்று வாலியின் பராக்கிரமத்தை சொல்லி முடித்தான் சுக்ரீவன்.

லட்சுமணனுக்கு சுக்ரீவன் பேசிய பேச்சிலிருந்து வாலியை நினைத்து மிகவும் பயப்படுகின்றான். ராமரின் வீரத்தின் மீது சுக்ரீவனுக்கு சந்தேகம் இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டான். சுக்ரீவனிடம் உங்கள் சந்தேகம் தீர ராமரின் பலத்தை நீங்கள் சோதித்து பார்க்கலாம் என்றான். இதற்கு சுக்ரீவன் நான் ராமரிடம் சரண்டைந்து விட்டேன். ராமரின் வீரத்தின் மீது எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் வாலியின் வீரத்தையும் பராக்கிரமத்தையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவனை நினைக்கும் போதேல்லாம் நான் பயப்படுகின்றேன் என்றான்.

திருமயம் குடைவரைக்கோவில்

திருமயம் என்ற சொல் திருமெய்யம் என்ற பெயரில் இருந்து வந்தது. சத்ய சேத்திரம் என்ற வடமொழிச் சொல்லில் இருந்து திருமெய்யம் என்ற பெயர் உருவானது. செங்குத்தான தெற்கு நோக்கிய மலைச் சரிவில் ஒரே கல்லினால் அமைந்த பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் அறுபதடி தூரத்தில் அடுத்தடுத்து இரு குடைவரைக் கோவில்களாக சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி உள்ளார்கள். இக்கோவிலுக்கு ஒரே ஒரு சுற்றுச்சுவர் மட்டும் உள்ளது. சிவன் மற்றும் பெருமாள் இணைந்த இக்கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது. சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் நூற்றியெட்டுத் திருப்பதிகளில் ஒன்று. பெருமாள் கோவிலிலுக்குள் இரண்டு பெருமாள் சன்னதிகள் உள்ளன. சிவன் கோவிலையோ பெருமாள் கோவிலை தனியே திருச்சுற்று சுற்றி வரமுடியாது. காரணம் இரண்டு மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளதேயாகும்.

சிவன் கோவிலில் மூலவர் சத்தியகிரீஸ்வரர். கிழக்கு நோக்கிய கருவறையில் சத்தியகிரீஸ்வரரின் லிங்கத் திருமேனி தாய்ப்பாறையில் உள்ளார். லிங்கத்தின் சிறிய கோமுகத்தை சீறும் சிங்கம் தாங்குகிறது. அம்பாள் வேணுவனேஸ்வரி கிழக்குப் பார்த்த தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் கருவறையை ஒட்டி அமைந்துள்ள அர்த்தமண்டபத்தை இரண்டு துவாரபாலகர்கள் காவல்புரிகிறார்கள். தர்மம் தாழ்ந்து அதர்மம் ஓங்கிய காலத்தில் சத்திய தேவதை மான் உருவம் எடுத்து இங்கு ஒளிந்து கொண்டு இறைவனை வணங்கி வந்தாள். அப்பொழுது இந்த இடம் வேணு வனமாக (மூங்கில் காடாக) இருந்தது. அதனால் இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் வேணுவனேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள் பாலிக்கிறாள். தீர்த்தம் சத்யபுஷ்கரணி. தலமரம் மூங்கில். சத்தியகிரீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் 13ஆம் நூற்றாண்டில் பிற்காலத்து பாண்டியர்களால் கட்டப்பட்டது. கோபுரத்தையொட்டி இடதுபுறம் விநாயகர் சன்னதியைக் காணலாம். முன்மண்டபத்தின் கிழக்கு நோக்கிய சன்னதியில் பானு உமாபதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். விநாயகர் துர்க்கை கஜலக்ஷ்மி முருகன் ராஜராஜேஸ்வரி அம்மன் பைரவர் நவக்கிரகங்கள் சூரியன் சந்திரன் ஆகிய தெய்வங்களுக்கு சன்னதிகள் உள்ளன. மூலவருக்கு முன்பாக கொடிமரம் மற்றும் நந்தி திருமேனி உள்ளது. சிவபெருமான் நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியிள்ளார். மண்டபத்தின் சுவர்களிலும் மேல் விதானத்திலும் பழங்கால மூலிகை ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் தெரிகின்றன. கிழக்குச் சுவரில் புதுமையான ஆளுயர லிங்கோத்பவர் புடைப்புச் சிற்பமாக உள்ளார். சத்ய மகரிஷி இறைவனுக்கு பூஜை செய்துள்ளார். சிவன் கோவிலுக்குக் கிழக்குப் பக்கம் சத்தியமூர்த்தி வைணவக் கோவில் அமைந்துள்ளது.

திருமெய்யத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை ஒரு வழியாகவே சத்தியகிரீஸ்வரரையும் திருமெய்யரையும் தரிசிக்கும் படியாகத்தான் சன்னதிகள் அமைந்திருந்தன. சத்தியகிரீஸ்வரர் சிவன் கோவிலுக்கும் திருமெய்யர் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலுக்கும் இடையே பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட சைவ வைணவப் பூசல் இரு கோவில் வளாகங்களுக்கு இடையில் ஒரு மதிற்சுவர் கட்டிப் பிரிக்கும் அளவிற்கு நீண்டது.

திருமயம் என்ற திருமெய்யம் பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். இத்திருக்கோயில் முத்தரையர்களால் கட்டபட்ட குடைவரைக்கோவில் ஆகும். இத்தலத்தில் சத்திய மூர்த்தி திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். தாயார் உஜ்ஜிவனதாயார் (உய்ய வந்த நாச்சியார்). தாயார் வீதி உலா வருவது இல்லை. தரிசிக்க திருக்கோயிலுக்குச் சென்றால் மட்டுமே முடியும். தலமரம் ஆலமரம். தீர்த்தம் சத்திய புஷ்கரணி குளம் எண்கோணமாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ் நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும் மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்தியமாகத் துணை நிற்பேன் என்று இத்தல இறைவன் வாக்குறுதி தந்ததால் இவருக்கு சத்தியமூர்த்தி என்ற திருப்பெயர் வந்தது. இக்குடைவரைக் கோவிலின் இன்னொரு மூலவர் யோக சயன மூர்த்தியான திருமெய்யர் உருவம் ஸ்ரீரங்கத்தை விட மிகப்பெரிய உருவம் தாங்கியவர். யோக சயன மூர்த்தி மலையோடு சேர்த்து பாறையிலேயே வடிக்கப்பட்டிருக்கிறார். யோக சயன மூர்த்திக்குப் பின்னால் உள்ள சுவரில் மேடையில் நடத்தப்படும் ஒரு நாடகக் காட்சியினை உயிரோட்டமாய் கல்லிலே வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது. சுற்றிலும் தேவர்கள் ரிஷிகள் பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் எழுந்தருளியுள்ளார்கள். மூலவரான பெருமாளுக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தைல காப்பு இடப்படுகிறது. கோவிலை அடுத்து சத்தியமூர்த்தி விஸ்வக்சேனர் இராமர் ஆகியோரின் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.

பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த நேரத்தில் மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர். இதற்கு அஞ்சிய தேவியர்கள் இருவரும் பெருமாளின் திருவடிக்கருகில் பூதேவியும் மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்தனர். பெருமாளின் நித்திரை கலைந்து விடுமே என்ற கவலையில் அவரை எழுப்பாமல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயை கக்கினார். பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஒடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை பெருமாள் மெச்சிப் புகழ்ந்தார்.

சதுர் யுகம் என்பது ஒரு யுகம் முடிந்து மறு யுகம் பிறக்கும் காலச் சக்கரத்தைக் குறிக்கும் அளவு. இந்த அளவின் படி திருவரங்கத்து பெருமாள் 64 சதுர் யுகங்களுக்கு முன்னால் தோன்றினார். ஆனால் திருமெய்யம் சத்யகிரிநாதன், அழகிய மெய்யன் 96 சதுர் யுகங்களுக்கு முன்னரே தோன்றியவர் ஆகையால் திருமெய்யம் திருத்தலம் ஆதிரங்கம் என வழிபடப்படுகிறது. திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. சத்திய தேவதையும் தர்மதேவதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது. இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்டப் புராணத்தில் கூறப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துள்ளார். சத்ய மகரிஷிக்கு பெருமாள் காட்சி அளித்துள்ளார்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 5

ராமரிடம் சுக்ரீவன் தொடர்ந்து பேசினான். நான் நடந்தவைகள் அனைத்தும் அப்படியே வாலியிடம் சொன்னேன். இந்த ராஜ்யம் உங்களுடையது அதனை பெற்றுக்கொண்டு அரசனாக முடிசூடிக் கொள்ளுங்கள் என்று கூறி உங்களிடம் எப்பொழுதும் போலவே உங்களுக்கு அடிபணிந்து நடந்து கொள்வேன் என்று அவரது காலில் விழுந்தேன். வாலி நான் சொல்வதை நம்பாமல் ராஜ்யத்திற்காக கொல்ல முயற்சிச்தேன் என்று என் மீது பழியை சுமத்தினான். அடுத்த முறை எங்காவது பார்த்தால் கொன்று விடுவேன் என்று சொல்லி நாட்டை விட்டை துரத்தி விட்டான். அணிந்திருந்த உடைகளுடன் அவமானப்பட்டு மனைவியை இழந்து அங்கிருந்து வெளியேறி இங்கு ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என் மீது நம்பிக்கை உள்ள சில வானரங்கள் மட்டும் என்னுடன் வந்து விட்டார்கள். உண்மையை அறியாமல் எனக்கு அக்ரமங்களை செய்த வாலியை வதம் செய்து என்னை காப்பாற்றுங்கள் என்று பேசி முடித்தான் சுக்ரீவன். அனைத்தையும் கேட்ட ராமர் என் அம்பு வாலியின் உடலை துளைக்கும். உனக்கு நான் தந்த உறுதி மொழியை நிறைவேற்றுவேன் கவலைப்படாதே. விரைவில் ராஜ்யத்தையும் உனது மனைவியையும் அடைவாய் என்றார்.

ராமரின் வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்த சுக்ரீவனுக்கு ராமரின் வீரத்தின் மீது சந்தேகம் வந்தது. ராமரின் பராக்ரமத்தை கொண்டு வாலியை வெல்ல முடியுமா? ஆகாத காரியமாக தோன்றுகிறதே வாலியின் தேகமோ இரும்பை போன்றது. அவனை எப்படி ராமர் அழிப்பார் இவரை விட்டாலும் இப்போது வேறு வழி இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவன் ராமரை பரிட்சித்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

ராமரிடம் எப்படி இதனை கேட்பது என்று யோசித்தவாறு சமயோசனையுடன் ராமரிடம் மெதுவாக பேச ஆரம்பித்தான். தாங்கள் சொன்ன வார்த்தைகள் என் துக்கத்தை போக்கி மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களுடைய பராக்ரமத்தை நான் அறிவேன். உங்களால் விடப்படும் அம்பு மூன்று லோகங்களையும் அழிக்கும். வாலியின் பராக்ரமத்தை பற்றி உங்களிடம் சொல்ல வேண்டியது எனது கடமை. ஒரு காலத்தில் எருமை வடிவம் பெற்ற துந்துபி என்ற அசுரன் தவம் செய்து தான் பெற்ற வரத்தினால் ஆயிரம் யானைகளின் பலத்தை அடைந்தான். பெற்ற வரத்தை எப்படி பயன் படுத்துவது என்று தெரியாமல் கடல் ராஜனிடம் சென்று சண்டைக்கு அழைத்தான். கடல் ராஜனோ உனக்கு சமமான எதிரியுடன் சண்டை போட வேண்டும் என்னிடம் அல்ல. உனக்கு சமமான எதிரி வடக்கே ஹிமவான் என்ற இமயமலை இருக்கிறது. அதனுடன் சண்டையிட்டு உனது வீரத்தை காட்டு என்று அனுப்பி வைத்தார். இமயமலை வந்த துந்துபி அங்கிருந்த மலைகளை உடைத்து பாறைகளை கொம்பால் தள்ளி அட்டகாசம் செய்தான். அதனை பார்த்த ஹிமவான் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு நீ ஏன் என்னுடன் சண்டைக்கு நிற்கிறாய். யுத்தத்தில் எனக்கு பயிற்சி கிடையாது. முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் சாதுக்களுக்கும் இடம் கொடுத்து அவர்களுடன் காலம் கழித்து வருகிறேன். உனக்கு சமமான எதிரியுடன் சண்டையிடு என்றார். அப்படியானால் எனக்கு சம்மான எதிரி யார் என்று கூறு இப்போதே சண்டையிட்டு அவனை வெற்றி கொள்ள வேண்டும் என்று மூர்க்கமாக கத்தினான் அசுரன். இதனை கேட்ட ஹிமவான் தெற்கே வாலி என்ற வானரராஜன் இருக்கிறான். அவன் தான் உனது பலத்துக்கு சமமான வீரன் அவனை யுத்தத்திற்கு அழைத்து சண்டையிட்டு வெற்றி பெற்று உனது பராக்கிரமத்தை காட்டு என்றான்.

சிவம்

மனிதனின் நாசி துவாரம் வழியாக பிராயாணாணம் பயிற்சி செய்து மேல் நோக்கி உச்சம் சென்று பின் மண்டையை சுற்றி வந்தால் அதன் வடிவமே சிவலிங்கம். சுற்றும் போது நடு மண்டைக்குச் செல்கையில் அருவமாக ஒரு ஒளி தெரியும் அது தான் சிவம். குண்டலினி சக்தி என்றும் சொல்லலாம்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 4

ராமருக்கு சுக்ரீவன் சொன்ன வார்த்தைகள் வேர் போல உள்ளத்தில் பதிந்தது. சீதையின் ஆபரணங்களை கண்ட கலக்கத்தில் இருந்து மீண்டு புத்துணர்ச்சி பெற்றார். தன் கண்களில் இருந்த நீரை துடைத்துக்கொண்டு சுக்ரீவனை அனைத்துக் கொண்டார். உன்னுடைய சிறந்த நட்பை அடைந்தேன் சுக்ரீவா. சீதை இருக்கும் இடம் அறிந்து கொள்ளும் வழியை நீ யோசித்துச் சொல் உன் யோசனைப்படியே நடக்கின்றேன். அது போல் உன் காரியத்தை என் காரியமாகவே நான் செய்வேன் என்று சத்தியம் செய்கின்றேன். உன் கஷ்டத்தை தீர்க்கும் வழியை சொல் உடனடியாக செய்து முடிக்கின்றேன். நம்முடைய நட்பு என்றைக்கும் பொய்க்காது என்று ராமர் சுக்ரீவனிடம் பேசி முடித்தார். ராமரின் பேச்சைக் கேட்ட சுக்ரீவன் மகிழ்ச்சி அடைந்தான். அவனுடன் இருந்த மந்திரிகளும் படைகளும் தங்களுடைய துயரங்கள் நீங்கியது. சுக்ரீவன் மீண்டும் வானர ராஜ்யத்தை அடைவார் என்று எண்ணி மகிழ்ந்தார்கள்.

ராமரிடம் சுக்ரீவன் தனது அண்ணன் வாலிக்கும் தனக்கும் உண்டான விரோதத்தை விவரமாக சொல்ல ஆரம்பித்தான். வாலி வானர அரசனாக கிஷ்கிந்தை நாட்டை அரசாண்டு வந்தான். மிகவும் வலிமையானவன் பராக்கிரமசாலி. அவரிடம் குறைவில்லாத அன்புடனும் பக்தியுடனும் யுவராஜாவாக இருந்து வந்தேன். வாலிக்கும் மாயாவி என்ற அசுரனுக்கும் முன் விரோதம் நீண்ட நாட்களாக இருந்தது. ஒரு நாள் இரவில் மாயாவி கிஷ்கிந்தைக்கு வந்து வாலியை யுத்தத்துக்கு அழைத்தான். மாயாவியின் கர்ஜனையில் கோபம் கொண்ட வாலி மாயாவியை எதிர்க்க அரண்மனையிலிருந்து சென்றார். நானும் அவருக்கு உதவியாக சென்றேன். நாங்கள் இருவரும் வருவதை பார்த்த மாயாவி ஓட ஆரம்பித்தான். நாங்கள் அவனை பின் தொடர்ந்து சென்றோம். காட்டில் இருந்த குகையில் மாயாவி ஒளிந்து கொண்டான். நான் உள்ளே செல்ல முயற்சித்தேன். வாலி என்னை தடுத்து நிறுத்தி நான் ஒருவனே அவனை கொல்ல வேண்டும் நீ இங்கேயே இரு என்று எனக்கு உத்தரவிட்டு என்னை குகைக்கு வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.

குகைக்கு உள்ளே சென்றவன் பல நாட்களாகியும் வெளியே வரவில்லை. அண்ணனுக்கு என்ன நேர்ந்ததோ என்று வெளியே கவலையுடன் காத்திருந்தேன். ஒரு நாள் உள்ளே இருந்து பல அசுரர்களின் கத்தும் பெருங்கூக்குரல் கேட்டது. வாலியின் கதறல் சத்தமும் கேட்டது. அதன் கூடவே குகைக்குள் இருந்து ரத்தமாக வெளியே வந்தது. அதனைக் கண்டதும் அசுரர்கள் பலர் சேர்ந்து வாலியை கொன்று விட்டார்கள் என்று எனக்குள் தீர்மானித்துக் கொண்டேன். அண்ணனை கொன்ற அசுரர்களை பழி தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி அசுரர்கள் குகைக்குள்ளேயே கிடந்து தவிக்கட்டும் என்று ஒரு பெரிய பாறையை வைத்து குகையை மூடிவிட்டு அரண்மனைக்கு கவலையோடு திரும்பினேன். வாலி இறந்து விட்டான் என்ற செய்தியை யாரிடமும் சொல்லாமல் ராஜ காரியங்களை பார்த்து வந்தேன். வாலி எங்கே என்று மந்திரிகள் முதல் அவரது மனைவி வரை அனைவரும் என்னை தொந்தரவு செய்து வாலி இறந்த செய்தியை கேட்டு தெரிந்து கொண்டார்கள். கிஷ்கிந்தை நாட்டில் அரசனில்லாமல் இருக்க கூடாது என்று அனைவரும் என்னை வற்புறுத்தி அரசனாக எனக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள்.

குகைக்குள் பல நாட்களாக நடந்த சண்டையில் மாயாவியையும் அவனது அசுர கூட்டத்தையும் அழித்து விட்டு குகை வாயிலுக்கு வாலி திரும்பி வந்தான். சுக்ரீவா சுக்ரீவா என்று கூப்பிட்டான் நான் அங்கில்லாத படியால் அவரது குரல் எனக்கு கேட்கவில்லை. தனது வலிமையினால் குகை பாறையை உடைத்து விட்டு அரண்மனைக்கு திரும்பி வந்தான். நான் அரசனாக இருப்பதை பார்த்து கோபமடைந்த வாலி என்னை திட்ட ஆரம்பித்தான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 3

ராமரிடம் சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். பெண் ஒருத்தியை ராட்சசன் ஆகாய மார்க்கமாக தூக்கி செல்வதை பார்த்தோம். அவள் தன்னுடைய ஆபரணங்களை நாங்கள் இருக்கும் இடம் நோக்கி கீழே எறிந்தாள். அவள் ராமா லட்சுமணா என்று கதறிக்கொண்டே செல்வதை பார்த்தோம். அந்த ஆபரணங்கள் எங்களிடம் இருக்கின்றது. தங்களின் மனைவியுடையதா என்று பார்த்து சொல்லுங்கள் என்றான். அதனைக் கேட்டதும் பரபரப்படைந்தார் ராமர் சீக்கிரம் கொண்டு வாருங்கள் அந்த நகைகளை என்றார். துணியில் சுற்றி வைத்திருந்த நகைகளை சுக்ரீவன் கொடுத்தார். லட்சுமணனிடம் ராமர் இப்போது இந்த நகைகளை பார்க்கும் மனநிலையில் நான் இல்லை. நீ இந்த துணியை பிரித்து நகைகளை பார் லட்சுமணா என்றார். துணையை பிரித்து அதில் இருந்து சீதையின் கால் சிலம்பை எடுத்து ராமரிடம் காண்பித்த லட்சுமணன் இது சீதையினுடையது தான் என்று கூறினான். நகைகளை பார்த்த ராமருக்கு அடங்க முடியாத கோபமும் துக்கமும் உண்டானது. சீதையை தூக்கிப் போன அந்த ராட்சசனுக்கு யமன் வீட்டு வாசல் காத்திருக்கிறது. அவனை அழிப்பேன். அவனுக்கு ஆதரவாக வந்தால் அவன் குலம் முழுவதும் அழிப்பேன் என்று கர்ஜனை செய்தார்.

ராமர் தனக்கு முதலில் உதவி செய்து ராஜ்யத்தை அடையச் செய்வார் பிறகு நாம் அவருக்கு உதவி செய்யலாம் என்று எண்ணியிருந்த சுக்ரீவன் ராமரின் கோபத்தை பார்த்து மிகவும் கவலைப்பட்டான். ராமர் முதலில் நமக்கு உதவி செய்து நம்முடைய ராஜ்யத்தை மீட்டுக்கொடுப்பாரா இல்லை சீதையை மீட்க அவருக்கு நாம் முதலில் உதவி செய்வதா? யார் யாருக்கு முதலில் உதவுவது என்று குழப்பமடைந்தான். ராமருக்கு முதலில் உதவி செய்து சீதை இருக்குமிடம் தேடிப்போக வேண்டுமானால் நாம் முதலில் மறைந்திருக்கும் இடத்தை விட்டு வெளியே வரவேண்டும். நாம் வெளியே வந்தது தெரிந்தால் வாலி நம்மை தாக்குவான். வாலியை எதிர்த்து போராட முடியாது. எனவே ராமரை நமக்கு முதலில் உதவி செய்ய சொல்லி ராஜ்யத்தை அடைந்து விடுவோம் பிறகு நாம் அவருக்கு உதவி செய்து சீதையை தேடிக்கண்டு பிடிக்க உதவி செய்யலாம் என்று முடிவெடுத்தான் சுக்ரீவன். ஆனால் இதனை எப்படி ராமரிடம் சொல்வது அவர் இருக்கும் துக்கத்திலும் கோபத்திலும் நமக்கு முதலில் உதவி செய்ய சொல்லி சொன்னால் நம்மை தவறாக நினைத்தால் என்ன செய்வது? இப்போது ஆரம்பித்த நட்பு உடனடியாக முடிவுக்கு வந்து விடுமோ என்று பயந்தான். ராமருடைய மன நிலைக்கு ஏற்றார் போல் சமயோசிதத்துடன் பேச ஆரம்பித்தான்.

ராமரிடம் சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். சீதையை தூக்கிச் சென்ற ராட்சசனின் பராக்கிரமம் என்ன? அவன் எங்கிருக்கின்றான்? அவன் சீதையை எங்கு வைத்திருக்கிறான் என்று எதுவும் எனக்கு தெரியாது. உங்களுக்கு நான் ஒரு சத்தியம் செய்து கொடுக்கிறேன். சீதை எங்கிருந்தாலும் அவர்களை தேடிக்கண்டு பிடித்து எதிர்த்து வரும் அந்த ராட்சசர்களை கொல்லும் வழியை தேடி அவர்களை மீட்க உங்களுக்கு நான் உதவுவேன். உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். அந்த ராட்சசனை கண்டு பிடித்து அவனது குலத்தையே அழிப்போம். உங்களது வீரமும் எனது படை பலமும் வீண்போகாது. தைரியமாக இருங்கள் துக்கமான நேரத்தில் தைரியமுடன் இருக்க வேண்டும். துக்கத்திற்கு நாம் இரையானால் அது நம்மை இழுத்து கொண்டு போய் தோல்வியின் பள்ளத்தில் விட்டு விடும். உங்களைப் போல் மனைவியை இழந்து ராஜ்யத்திலிருந்து அவமானப் படுத்தப்பட்டு துரத்தப்பட்டவன் நான். என்னுடைய துக்கத்தை அடக்கிக் கொண்டு தைரியத்தை காத்து வருகிறேன். வானரமான என்னால் முடியும் போது ராஜாகுமாரரான உங்களாலும் உங்கள் மனதின் துக்கத்தை அடக்கிக்கொள்ள முடியும். உங்களுக்கு உபதேசம் செய்யும் தகுதி எனக்கில்லை. நண்பன் என்ற முறையில் எனக்குள் தோன்றுவதை உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன் என்று சொல்லி முடித்தான் சுக்ரீவன்.

வினாயகரின் சித்தி புத்தி தத்துவம்

சித்தியோடும் புத்தியோடும் சேர்ந்து காட்சி தரும் விநாயகப் பெருமானே சித்தி புத்தி விநாயகர் ஆவார். உயிர்களின் பிரார்த்தனைகளை சித்திக்க அதாவது வெற்றிகரமாக நிறைவேற வைப்பவரும் நல்ல புத்தியைக் கொடுப்பவரும் சித்தி புத்தி வினாயகர் ஆவார்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 2

ராமரைப் பற்றியும் தம்மைப் பற்றியும் அனுமனிடம் சொல்ல ஆரம்பித்தான் லட்சுமணன். ராமர் எனது அண்ணன் அயோத்தியை ஆண்ட தசரதரின் மூத்த ராஜகுமாரன். தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற தற்போது வனவாசத்தில் இருக்கிறார். இந்நேரத்தில் அவரது மனைவி சீதையை ராட்சசன் ஒருவன் ஏமாற்றி தூக்கிச் சென்று விட்டான். அவளை தேடிச் செல்லும் போது கபந்தன் என்ற ஒரு ராட்சசன் சாப விமோசனம் பெற்றான். சீதை இருக்கும் இடம் தெரியாமல் தேடிக்கொண்டிருக்கும் எங்களிடம் சுக்ரீவனின் நட்பை பெற்றுக்கொள்ளுங்கள். அவருக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். உங்களுக்கு அவர் உதவியும் செய்வார். சீதையை நீங்கள் மீட்டெடுக்கலாம் என்று சொல்லினார். அதன்படி சுக்ரீவனின் நட்பை பெற்றுக் கொள்வதற்கான சுக்ரீவனை தேடி இங்கை வந்திருக்கின்றோம் என்று சொல்லி முடித்தான் லட்சுமணன்.

அனுமன் சூக்ரீவனை பற்றி சொல்ல ஆரம்பித்தார். சுக்ரீவன் தனது அண்ணன் வாலியினால் ராஜ்யத்தையும் மனைவியையும் இழந்து தற்போது காட்டில் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். உங்கள் உதவியால் அவர் தனது ராஜ்யத்தையும் மனைவியையும் அடைவார். அவரது உதவியால் நீங்கள் உங்களது மனைவியை அடைவீர்கள். வாருங்கள் உங்களை சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி தனது உடலை பெரிய உருவமாக மாற்றிக்கொண்டார் அனுமன். ராமர் லட்சுமணர் இருவரையும் தனது தோள்களில் அமர வைத்து ரிச்ய மலையிலிருந்து சுக்ரீவன் இருக்கும் மலய மலைக்கு பறந்து சென்றார் அனுமன். சுக்ரீவனிடம் ராமரை பற்றிய அனைத்து விவரங்களையும் சொல்லி இவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டால் நீங்கள் இழந்த ராஜ்யத்தை அடையலாம் என்று விரிவாக எடுத்துச் சொன்னார் அனுமன்.

ராமரைப் பார்த்ததும் சுக்ரீவன் பேச ஆரம்பித்தார். ராஜகுமாரனே வானரமான என்னுடைய நட்பை நீங்கள் தேடி வந்ததினால் இப்போதே உங்களை நட்பை ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய நட்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தனது கையை நீட்டினார். இருவரும் கைகளை பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள். சுக்ரீவன் தன்னுடைய அண்ணன் வாலியால் தனக்கு ஏற்பட்ட தூக்கத்தை பகிர்ந்து கொண்டான். எனது அண்ணன் வாலியால் ராஜ்யத்தையும் இழந்து மனைவியையும் இழந்தேன். என்னை தாக்க வருவானே என்று அவனுக்கு பயந்து இக்காட்டில் அங்கும் இங்கும் திரிந்து ஒளிந்து கொண்டு காலத்தை கழித்து வருகிறேன். நீங்கள் வாலியை கொன்று என் துக்கத்தை தீர்த்து எனக்கு ராஜ்யத்தையும் மனைவியையும் திரும்ப பெறும்படி செய்யுங்கள் என்றான் சுக்ரீவன். அதற்கு ராமர் அறம் தவறி உன்னுடைய மனைவியை தூக்கிச் சென்ற வாலியை கொல்வேன் இது நிச்சயம். என்னுடைய அம்புகள் வீண்போகதவை. என் அம்புக்கு வாலி நிச்சயம் இரையாவான் இதில் சந்தேகம் இல்லை என்று உறுதி கூறினார். ராமர் கூறிய வார்த்தையை கேட்ட சுக்ரீவன் உங்களால் நான் இழந்தவைகள் அனைத்தையும் பெறுவேன் என்று மகிழ்ச்சி அடைந்தான்.

ராமர் சுக்ரீவனிடத்தில் உறுதி கூறிய அதே நேரத்தில் வாலிக்கும் லங்கையில் இருக்கும் சீதைக்கும் ராவணனுக்கும் இடது கண் துடித்தது. சீதைக்கு மங்கள கரமாக துடித்தது. இதனை அறிந்த சீதை ராமர் தம்மை தேட ஆரம்பித்து விட்டார். நம்மை ராட்சசன் தூக்கி வந்ததை அறிந்திருப்பார். நாம் இங்கிருப்பது அவருக்கு தெரிந்து விட்டது. விரைவில் நம்மை காப்பாற்ற வந்துவிடுவார் என்று ஆறுதலடைந்தாள். ராவணனுக்கும் வாலிக்கும் இடது கண் அபசகுனமாக துடித்தது.