ஒரு மண்டலம் 48 நாள்

சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவது போல் நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன. மற்ற கோள்கள் அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும் அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.

நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும் 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர். ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள் 12 ராசிக்கூட்டங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்கள் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும்.

கிரகங்கள் 9 ராசி கூட்டங்கள் 12 நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டினால் 9+12+27=48 இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை. இதன் காரணமாகவே தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன. இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிட்டால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும் என்பார்கள். மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாமல் தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வழிபாடுகளும் வேண்டுதல்களும் அவர்களின் சிரத்தைக்கு ஏற்ப நிச்சயம் கைகூடும்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -34

ராமரிடம் பரதன் பேச ஆரம்பித்தான். ராஜ தர்மத்தைப் பற்றி பேச நான் தகுதியற்றவனாய் நிற்கின்றேன். சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜ்யம் செய்ய நீங்கள் இருக்கும் போது நான் எப்படி அரசனாவேன். தர்மத்தை மீறி சிம்மாசனத்தில் நான் அமர்ந்தால் அரசனுக்கு உரிய தர்மத்தை என்னால் அனுஷ்டிக்க முடியாது. எனக்கு தெரிந்த தர்மம் தங்களுக்கு அடிமையாக இருந்து தங்களுக்கு சேவை செய்வது மட்டுமே. நீங்கள் காட்டிற்கு வந்து விட்டபடியால் இத்தனை நாட்கள் அதற்கும் பிராப்தம் இல்லாமல் போய் விட்டது. நமது ராஜ குல தருமப்படி மூத்தவரே அரசனாக வேண்டும். பல தலைமுறைகளாக இருக்கும் நமது குலத்தின் பொதுவான தருமம் இது. நாட்டின் நலன் கருதி நீங்கள் அயோத்திக்கு வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கேயே தங்களுக்கு பட்டாபிஷேகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளுடன் வந்திருக்கின்றோம். தயவு செய்து அரச பதவியை ஏற்றுக்கொண்டு நாட்டுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டிய நன்மைகளை செய்யுங்கள் என்றான் பரதன்.

ராமர் பேச ஆரம்பித்தார். கேகய நாட்டில் இருக்கும் நீ அயோத்திக்கு வந்து பின்னர் தந்தையை பிரிந்து வெகு தூரத்தில் இருக்கும் யாராலும் எளிதில் உள்ளே வரமுடியாத அடர்ந்த காட்டிற்குள் வந்திருக்கறாய் என்றால் என்னை பிரிந்த தந்தையார் மனோ தைரியத்துடன் இருக்கின்றார் என்று எண்ணுகின்றேன். தாயார் மூவரின் நலம் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றார்களா சொல் இதனை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன் என்றார் ராமர்.

நான் கேகய நாட்டில் இருந்த போது அரண்மனையில் நடந்த சூழ்ச்சியால் நீங்கள் அயோத்தியில் இருந்து கிளம்பி காட்டிற்கு வந்துவிட்டீர்கள். பற்பல வேள்விகளை செய்தவரும் மாவீரராய் திகழ்ந்தவரும் சான்றோர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட நமது தந்தை தசரதர் உங்களை பிரிந்த துக்கத்தை தாங்க முடியாமல் நோய் வாய்ப்பட்டு உங்கள் பெயரை மீண்டும் மீண்டும் சொல்லி அழைத்துக்கொண்டே இருந்தார். சுமந்திரன் வரும் போது நீங்களும் அவனுடனேயே திரும்பி வந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார். சுமந்திரன் மட்டும் தனியாக வந்ததை பார்த்ததும் தங்களின் பெயரை கூறிக்கொண்டே சொர்க்கலோகம் புகுந்து விட்டார் நமது தந்தையார் என்று தழுதழுத்த குரலில் கூறினான் பரதன். பரதன் கூறியதை கேட்டதும் கோடாலியால் வெட்டப்பட்ட மரம் போல ராமர் கீழே விழுந்தார்.

ராமரை தாங்கிபிடித்த பரதன் நம்முடைய தந்தையாருக்கு செய்ய வேண்டிய கிரியை கடமைகளை நானும் சத்ருக்கனனும் செய்து விட்டோம். தந்தைக்கு மிக பிரியமானவராக தாங்கள் இருந்தீர்கள். உங்கள் ஞாபகமாகவே தந்தை உடலை விட்டார். நீங்கள் கொடுக்கும் பிதுர்கடனே அவருக்கு சாந்தி தரும். அவருக்கு செய்ய வேண்டி கடமைகளை நீங்களும் லட்சுமணனும் செய்து முடிக்கவேண்டும். தாங்கள் வருந்தவேண்டாம். நீங்களே எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டியவர் என்று ஆறுதலாக சொல்லி முடித்தான் பரதன்.

உணவில் உள்ள 5 வகை தோஷங்கள்

வாழ்க்கை முறையில் உணவை எப்படி எங்கே யாரல் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது பிராணனைத் தாங்குவது. அதை யார் சமைக்கிறார்கள் எப்படி சமைக்கிறார்கள் என்பது முக்கியம். உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.

  1. அர்த்த தோஷம்
  2. நிமித்த தோஷம்
  3. ஸ்தான தோஷம்
  4. ஜாதி தோஷம் (இது மனித ஜாதியை குறிப்பது அல்ல. சாத்வீக உணவை குறிக்கும்)
  5. சம்ஸ்கார தோஷம்
  6. அர்த்த தோஷம்

அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம். நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.
பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார். உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். தவறு செய்து விட்டோமே இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார். பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார். தன் சீடனிடம் நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது என்று கேட்டார். வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான். பணத்தாசை பிடித்து தவறு செய்யும் ஒருவரிடம் உணவு அருந்தினால் வருவது அர்த்த தோஷம் ஆகும்.

  1. நிமித்த தோஷம்

உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதோடு நேர்மையானவராகவும் அன்பானவராகவும் நல்ல சுபாவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர் திரௌபதி நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் அம்பின் வழியாக வெளியேறும் போது நான் பரிசுத்தவனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது என்று கூறினார். தீய எண்ணத்தோடு இருப்பவன் அளிக்கும் உணவு சாப்பிட்டால் தீமையான எண்ணங்களையே உருவாக்கும் இது நிமித்த தோஷம் ஆகும்.

  1. ஸ்தான தோஷம்

உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். உணவு சமைக்கும் இடத்தில் கிருஷ்ணரை எப்படி கைது செய்வது என்று கெட்ட விவாதத்துடன் உணவு சமைக்கப்பட்டது. கிருஷ்ணர் உணவு சாப்பிட மறுத்து நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். கிருஷ்ணர் வந்த மகிழ்ச்சியில் எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கி சாப்பிட்ட கிருஷ்ணர் மகிழ்ந்தார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா நான் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி நீர் ஒரு இலை ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார். உள்ளன்புடன் அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் இல்லாத இடத்தில் உணவு சமைக்கப்படவேண்டும் இது ஸ்தான தோஷம் ஆகும்.

  1. ஜாதி தோஷம்

மனிதனுக்கு சாத்வீக குணம் ரஜோ குணம் தாமச குணம் என்று மூன்று குணங்கள் உள்ளது. சாத்வீக உணவாக உட்கொள்ள வேண்டும். சாத்வீக உணவு இல்லை என்றால் அது ஜாதி தோஷம் ஆகும்.

சாத்வீக குணம் – உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால் நெய் அரிசி மாவு பருப்பு போன்றவை சாத்வீகமானவை. இதனை சாப்பிட்டால் இறைஉணர்வு. மனஅடக்கம், புலனடக்கம், சகிப்புத் தன்மை, விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதற்கு அச்சப்படுதல், தானம், பணிவு, எளிமை ஆகியவை கிடைக்கும். சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.

ரஜோ குணம் – புளிப்பு உரைப்பு உப்பு உள்ளவை ராஜோ குணங்கள் கொண்ட உணவாகும். இந்த உணவை சாப்பிட்டால் ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ஆகிய ரஜோ குணங்கள் வரும். ராஜோ உணவு உலகப்பற்று உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.

தாமச குணம் – பூண்டு வெங்காயம் மாமிசம் முட்டை போன்றவை தாமச உணவாகும். இதனை சாப்பிட்டால் சோம்பலும் ராட்சசத் தன்மையும் மோகமும் அதிகரிகின்றது. தாமச உணவு தீய குணத்தை வளர்க்கிறது.

  1. சம்ஸ்கார தோஷம்

தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.

இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். அப்போது தான் மனம் அன்புடனும் தெளிந்த நல்அறிவுடனும் சலனமில்லாமலும் இறை சிந்தனையுடனும் இருக்கும். தானே சமைத்த உணவு தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -33

ராமர் லட்சுமணனிடம் தொடர்ந்து பேசினார். பரதன் இப்போது இங்கே ஏன் வருகின்றான் என்பதை நான் அறிவேன். பரதன் எள் அளவும் தருமம் தவறாதவன். நம்மில் யாருக்கும் தீமை செய்யும் எண்ணம் கூட இது வரை பரதனுக்கு வந்தது இல்லை. ராஜ்யத்தை எனக்கு கொடுத்து விடுவதற்காகவே வந்து கொண்டிருக்கின்றான். கைகேயின் மேல் கோபம் கொண்டும் தந்தையை சமாதானம் செய்தும் என்னை அழைத்துப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்து கொண்டிருக்கின்றான் பரதன் என்றார் ராமர். பரதனைப்பற்றி நீ கோபமாக பேசியதெல்லாம் அதர்மம் அப்படி பேசக்கூடாது. ராஜ்யத்தை அடைய வேண்டும் என்று ஆசை உன்னிடம் இருக்கின்றதா நீ சொல். பரதன் வந்ததும் அவனிடம் சொல்கிறேன். லட்சுமணனுக்கு ராஜ்யத்தின் மீது ஆசை இருக்கின்றது. அவனுக்கு ராஜ்யத்தை கொடுத்துவிடு என்று சொல்கிறேன். இந்த வார்த்தையை கேட்டவுடன் பரதன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி ராஜ்யத்தில் உன்னை அமர வைத்துவிடுவான் என்று ராமர் லட்சுமணனிடம் கூறினார்.

லட்சுமணன் வெட்கத்தில் தலை குனிந்து ராமரின் அருகில் சென்று கைகூப்பிய வண்ணம் அமர்ந்தான். நமது தந்தையார் வந்து கொண்டு இருக்கலாம் என்று எண்ணுகிறேன் என்றான் லட்சுமணன். ராமர் கூட்டத்தை பார்த்தார். நாம் இந்த காட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம் என்று எண்ணி நம்மை அழைத்துப்போக தந்தையாரும் இந்த கூட்டத்தில் வந்திருக்கலாம். ஆனால் சக்கரவர்த்திக்கு உண்டான வெண்கொற்றக் குடையை காணவில்லை. ஆகவே தந்தை வந்திருப்பது சந்தேகமே என்றார் ராமர்.

உறவினர்களையும் படைகளை தூரத்தில் நிறுத்திவிட்டு புகை கிளம்பும் இடத்தில் குடில் ஏதும் இருக்கின்றாதா என்று பார்த்து வருமாறு சில வீரர்களை அனுப்பினான் பரதன். புகை வரும் இடத்தில் குடில் இருப்பதை பரதனிடம் உறுதி செய்தார்கள் வீரர்கள். பரதன் படைகளை அங்கேயே இருக்குமாறு உத்தரவிட்டு சிலருடன் மட்டும் ராமர் இருக்குமிடம் சென்றான். புல் தரையில் அமர்ந்திருந்த ராமரை கண்டதும் பரதன் அண்ணா என்று கதறியபடியே ஓடி வந்து ராமரின் காலடியில் வீழ்ந்தான். அண்ணா என்ற வார்த்தைக்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்க விம்மி அழுதான். பரதனின் பின்னே சுமந்திரனும் குகனும் வந்து சேர்ந்தார்கள். தபஸ்விகளுக்கன உடை அணிந்தும் உடல் மெலிந்தும் இருந்த பரதனை தூக்கிய ராமர் பரதனை அணைத்துக் கொண்டார். தம்பி அயோத்தியில் தந்தையை தனியாக விட்டுவிட்டு நீ இப்படி வெகுதூரத்தில் இருக்கும் வனத்திற்கு வரலாமா? ஏன் இது போல் உடல் இளைத்து இருக்கிறாய் என்று கேட்டார். பரதன் பேச்சு வராமல் அழுதபடியே இருந்தான். பரதனை மனநிலையை சராசரி நிலைக்கு கொண்டு வருவதற்கு மேலும் ராமர் பரதனிடம் பேசினார். நமது ராஜ்யம் எப்படி இருக்கின்றது. தந்தை தசரதர் தாய் மூவர் மற்றும் நமது உறவினர்கள் அனைவரும் எப்படி இருக்கின்றார்கள் என்று கேட்டார் ராமர்

தண்டம்

முனிவர்களும் சித்தர்களும் எப்போதும் தங்கள் கையில் ஒரு தண்டம் வைத்திருப்பார்கள். தண்டம் என்பது மரத்தால் ஆன ஒரு ஊன்றுகோல். ஆங்கில எழுத்து T அல்லது Y வடிவத்தில் இருக்கும். அந்தத் தண்டத்தின் மீது வலது கை அல்லது இடது கையை வைத்தால் சுவாசம் திசை மாறும். வலது நாசி சுவாசத்தை நிறுத்த வலது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். உடனே இடது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இடது நாசி சுவாசத்தை நிறுத்த இடது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். அப்போது வலது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இது தான் தண்டத்தின் பயன். நம் முனிவர்கள் இதற்காக தான் தண்டத்தை சுமந்து கொண்டே திரிந்தார்கள். சுவாசத்தை எதற்காக தடம் மாற்ற வேண்டும்? எப்போது தடம் மாற்ற வேண்டும்?

மூச்சுக்காற்று நாசியின் வலது புறம் ஓடுவது சூரிய கலை என்றும் இடது புறம் ஓடுவது சந்திரகலை என்றும் பெயர். சூரியகலையில் மூச்சுக்காற்று ஓடும் போது என்னென்ன சாதகங்கள் பலன்கள் கிடைக்கும் என்றும் சந்திரகலையில் ஓடும் போது என்னென்ன சாதகங்கள் பலன்கள் கிடைக்கும் என்பதையும் அறிந்த யோகியர்கள் முனிவர்கள் தங்களது சாதகங்கள் அல்லது யோக முறைகளை செய்யும் போது சாதகம் சரியாக கைவரவில்லை என்றால் தண்டத்தை உபயோகித்து மூச்சுக்காற்றை மாற்றுக்கொண்டு தங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்வார்கள்.

சாதகங்கள் அல்லது யோக காரியங்களை செய்யும் போது சாதகம் சரியாக கைவரவில்லை என்றால் அப்போது எந்த நாசியில் சுவாசம் ஓடுகிறது என்பதை கவனிக்க வேண்டும். உடனே தண்டத்தை எடுத்து சுவாசம் ஓடும் அந்த நாசிப் பகுதியின் அடியில் வைக்க வேண்டும். உடனே சுவாசத்தின் தடம் மாறிவிடும். இந்த நிலையில் மீண்டும் அந்த காரியத்தை முயற்சிக்கும் பொது அதுவரை நடக்காமல் இருந்த காரியம் நடந்துவிடும். நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும். துன்பத்தை இன்பமாக மாற்ற இந்த தண்டம் ஒரு அழகான ஆன்மீகக் கருவி. இதனை செய்ய சூரியகலை சந்திரகலைகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -32

லட்சுமணன் பெரிய மரத்தில் ஏறிப்பார்த்தான். பெரிய படை ஒன்று சித்ரகூட மலையை நோக்கி வந்துகொண்டிருப்பதை பார்த்தான். மரத்தில் இருந்து ராமருக்கு எச்சரிக்கை செய்தான். அண்ணா தேர்ப்படை யானைப்படை குதிரைப்படை காலாட்படை என்று ஒரு பெரிய படை பட்டாளம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. நாம் மூட்டிய நெருப்பு புகையை வைத்துக்கொண்டு நம்மை நோக்கி வந்து கொண்டிருகின்றார்கள். உடனே நெருப்பை அணைத்து விட்டு சீதையை மலைக்குகையில் பத்திரமாக வைத்துவிட்டு கவசம் உடுத்திக்கொண்டு வில்லும் அம்பு கத்தி எடுத்துக்கொண்டு யுத்தத்திற்கு தயாராவோம் என்றான்.

ராமர் லட்சுமணனிடம் வந்து கொண்டிருக்கும் படையில் முதலாவதாக வரும் தேரில் எந்த நாட்டுக்கொடி இருக்கின்றது கவனித்துப் பார் என்றார். கொடியை பார்த்த லட்சுமணன் கோபமடைந்தான். அண்ணா தேரில் இருப்பது திருவாத்திக்கொடி நம்முடைய அயோத்தி நாட்டுக்கொடி. சூழ்ச்சியால் ராஜ்யத்தை பெற்றதோடு மட்டும் இல்லமால் எதிர்காலத்தில் நம்முடைய தொந்தரவு ஏதும் இருக்கக்கூடாது என்று நம்மை எதிர்த்து கொல்லவும் வருகின்றான் பரதன். இன்று கைகேயியின் மகன் பரதன் என் கையில் அகப்படுவான். அவனை நான் விடப்போவது இல்லை. அறநெறியில் இருந்து விலகிய அவனை கொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. நம்மை கொல்ல வரும் பகைவனை நாம் கொல்வது பாவமாகாது. இங்கிருந்தே பரதனை எதிர்ப்போமா இல்லை மலை மீது நின்று கொண்டு எதிர்ப்போமா நீங்கள் சொல்லுங்கள். இவன் நமக்கு செய்த கொடுமைக்கு இன்று பழி வாங்கி விடலாம். பரதனை வென்று கைகேயியின் எண்ணத்தை முற்றிலும் அழித்துவிடலாம். இந்த வனத்தில் ரத்த வெள்ளத்தை ஓடச் செய்யப் போகின்றேன். வரும் படைகளை நீர்மூலமாக்குவேன். இந்த காட்டில் உள்ள மிருகங்களுக்கு இன்று நிறைய உணவு கிடைக்கப் போகின்றது எனக்கு உத்தரவு தாருங்கள் அனைத்து படைகளையும் அழித்து விடுகின்றேன் என்று தன்னையும் மறந்து கோபத்தில் பேசிக்கொண்டே இருந்தான் லட்சுமணன்.

லட்சுமணன் சொன்ன அனைத்தையும் கேட்ட ராமர் புன்சிரிப்புடன் அமைதியாக பேச ஆரம்பித்தார். லட்சுமணா நீ ஒரு வெற்றி வீரனாவாய். பரதனுடைய பெரும் படைகளையும் நிர்மூலமாக்குவாய் இதில் எந்த சந்தேகமும் இல்லை. முதலில் கோபத்தை விட்டு அமைதியாக சிறிது யோசனை செய்து பார். பரதனே நேரில் வருகின்றான் என்கிறாய். பரதனை எதிர்த்து வில்லுக்கும் அம்புக்கும் கத்திக்கும் வேலை ஒன்றும் இல்லை. தந்தையின் ஆணையை அழித்தும் பரதனை கொன்றும் ராஜ்யம் சம்பாதித்து நமக்கு என்ன பலன் கிடைக்கப் போகின்றது. உடன் பிறந்தவர்களை அழித்துவிட்டு கிடைக்கும் சொத்தானது விஷம் கலந்த உணவைப் போன்றது யாருக்கும் உபயோகப்படாது. யாரை சந்தோசப் படுத்துவதற்காக ராஜ்யத்தை சம்பாதித்து நாமும் சந்தோசமாக இருக்கின்றோமோ அவர்களையே அழித்துவிட்டு அந்த ராஜ்யத்தை அடைவதில் பயன் ஒன்றும் இல்லை. அதர்ம வழியில் கிடைக்கும் ராஜ்யம் நமக்கு வேண்டாம். நீயும் பரதனும் சத்ருக்கணனும் என்னுடன் சேர்ந்து அனுபவிக்க முடியாத சுகம் எனக்கு வேண்டாம் என்றார்.

விநாயகர்

நமது மூளை வலப்பகுதி இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது. மூளையின் இடது வலது பாகங்கள் தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடப்பக்க மூளை உடலின் வலது பாகத்தையும் வலப்பக்க மூளை உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதனை இன்றைய விஞ்ஞானம் ஆமோதிக்கின்றது. இதையே நம் சாஸ்திரம் பிங்கலை இடங்கலை நாடிகள் என வரையறுக்கிறது. உடலின் செயல் வலது இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. வலது பக்க மூளை இயங்கும் பொழுது இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள்.

வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும் இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் பெயர். இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன. வலது நாசிக் காற்று (சூரிய கலை) உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்றது. வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும். உடல் சுறுசுறுப்படையும் சோர்வு அகலும். உடலின் வலிமை அதிகரிக்கும். மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும். இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும் வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை) உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது. சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும். இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து உடல் குளிர்ச்சியடையும். பரபரப்புத் தன்மை குறைந்து மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும். மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும். அவசரத் தன்மை மறைந்து நிதானமான மனநிலை நிலவும். விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் இத்தகைய ஆற்றல் இருப்பதால் அவரை முதலில் வணங்க வேண்டும்.

கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனித்து விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் வலது நாசியிலும் இடம்புரி விநாயகராக இருந்தால் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் அளிக்கும் செய்தி இது. விநாயகர் விக்ரஹத்தின் இந்த அரிய ரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளலாம். விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றல் இருப்பதால் அவரை வணங்கி ஞானத்தின் வழியில் சென்று அவர் கையில் இருக்கும் மோதகமாவோம்.

ஞானப்பழம்

இறைத்தேடலில் ஞானத்தை தேடி இருந்த இடத்திலேயே பிரம்மச்சரியம் கடைபிடித்து யோக வழியில் இறைவன் என்கின்ற ஞானப்பழத்தை அடைவது பிள்ளையார் வழி.

இறைத்தேடலில் ஞானத்தை தேடி உலகத்தை சுற்றி பலரிடம் கிடைக்கும் என்று அலைந்து அலைந்து யாரிடமும் கிடைக்காமல் கோபத்தில் நானே தேடிக்கொள்கிறேன் என்று இறுதியில் தனக்குள்ளேயே இறைவன் இருக்கின்றான் என்பதை உணர்ந்து தனியாக அமர்ந்து இறுதியில் இறைவன் என்கின்ற ஞானப்பழத்தை அடைவது முருகர் வழி.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -31

அதிகாலை விடிந்ததும் பரத்வாஜ முனிவரின் குடிலை நோக்கி சென்றான் பரதன். தனது நித்திய பூஜைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த பரத்வாஜ முனிவரை பார்த்து வணங்கினான் பரதன். இரவு அளித்த விருந்து உபசாரங்கள் திருப்தியாக இருந்தனவா என்று கேட்டார் பரத்வாஜ முனிவர். படை பரிவாரங்கள முதல் மந்திரிகள் வரை அனைவரும் தாங்கள் அளித்த விருந்தை சாப்பிட்டு சுகமாக தங்கினோம். அனைவரது விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டன. தேவலோக நந்தவனத்தில் தங்கியது போன்று உணர்ந்தோம். ராமரின் இருப்பிடம் செல்ல வழியும் நாங்கள் இங்கிருந்து செல்ல அனுமதியும் கேட்டு வந்திருக்கின்றேன் என்று வணங்கினான் பரதன்.

பரத்வாஜ முனிவர் பரதனுடன் வந்திருந்த மூன்று பெண்களை தனக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார். சுமத்திரை கைகேயி என மூவரையும் ஒருவர் பின் ஒருவராக அறிமுகம் செய்து வைத்து ஆசிபெறச்செய்தான். முதலில் கௌசலையை வரச்செய்து துக்கப்பட்டு பட்டினியால் வாடிய முகத்துடன் நிற்பவர் பட்டத்து ராணி பெயர் கௌசலை இவரே ராமரை பெற்றெடுத்த புண்யவதி என்று அறிமுகம் செய்தான். கௌசலையின் வலது புறத்தில் இருப்பவர் சுமத்திரை இரண்டாவது பட்டத்து ராணி லட்சுமணன் சத்ருக்கணனை பெற்றடுத்த பாக்கியவதி. இடது புறத்தில் நிற்பவர் அரசி வடிவத்தில் இருக்கும் அரக்கி. எங்களுடைய துக்கங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பவள் என்று கைகேயியை அறிமுகம் செய்தான். மூவரும் பரத்வாஜ முனிவரை சுற்றி வந்து வணங்கி நின்றனர். கைகேயி கவலையுடன் முகத்தை மறைத்துக்கொண்டு வணங்கி நின்றாள். பரத்வாஜ முனிவர் பரதனிடம் உலகத்தின் நன்மைக்காகவே அனைத்தும் நடந்தது உனது தாயை அப்படி சொல்லாதே என்று கேட்டுக் கொண்டு ராமர் இருக்கும் இடத்திற்கு செல்ல வழியை கூற தொடங்கினார். இங்கிருந்து இரண்டரை யோசனை தூரத்தில் மந்தாகினி நதி ஓடுகின்றது. நதியை தாண்டினால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத காடு இருக்கின்றது. அதன் தெற்கு பகுதியில் சித்ரகூட மலை இருக்கின்றது. மலை அடிவாரத்தில் ஒரு குடில் அமைத்து மூவரும் வசித்து வருகின்றார்கள் என்று செல்வதற்கான வழிமுறைகளை பரதனிடம் சொல்லி வாழ்த்துக்களை கூறி விடை கொடுத்தார்.

பரதன் தன் படை பரிவாரங்களுடன் பரத்வாஜ முனிவர் காட்டிய பாதையில் சென்றான். தூரத்தில் சித்ரகூட மலையும் மலை அடிவாரத்தில் லேசான புகையும் தெரிந்தது. ராமர் இருக்கும் இடம் அது தான் என்று அனைவரும் உற்சாகமடைந்து விரைவாக செல்ல ஆரம்பித்தனர்.

சித்ரகூட மலையின் கம்பீரமும் வனத்தின் அழகும் பறவைகளின் சத்தமும் விலங்குகளின் விளையாட்டும் அவர்களின் உள்ளத்தை கவர்ந்தது. ஊரையும் உறவினர்களையும் பிரிந்த துக்கம் ஏதும் இல்லாமல் ராமர் சீதை லட்சுமணன் மூவரும் மிகவும் மகிழ்ச்சியாக காலம் கழித்துவந்தார்கள். பெரும் தூசி புகை கிளம்பியதையும் கண்டார் ராமர். லட்சுமணனிடம் தம்பி ஏதோ தூரத்தில் ஏதோ பெரும் சத்தம் தூசி படலத்துடன் கிளம்புகின்றது. விலங்குகள் அனைத்தும் நாலாபக்கமும் ஒடுகின்றது. அரச குலத்தவர்கள் யாரேனும் வேட்டையாட வந்திர்க்கின்றார்களா பார் என்றார்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -30

பரத்வாஜ முனிவர் சிரித்தார். பரதா உன் உள்ளம் எனக்கு தெரியும். ரகு வம்சத்தில் பிறந்த உன்னை நான் அறிவேன். ராமரிடத்தில் நீ வைத்துள்ள பக்தி அன்பு இன்று போல் என்றும் உறுதியாக உன் உள்ளத்தில் இருந்து உன் புகழ் வளர்ந்து ஓங்குவதற்காகவும் உன்னுடைய குணத்தை உலகிற்கு காட்டி உன் பெருமையை உலகம் அறிந்து கொள்வதற்காகவே அவ்வாறு கேட்டேன் வருத்தப்பட வேண்டாம். ராமர் சித்திரக்கூட மலையில் இருக்கிறார். அவர் இருக்குமிடம் செல்வதற்கான வழியை சொல்கின்றேன். இன்று இரவு இங்கு தங்கியிருந்து உன் களைப்பை தீர்த்துக்கொள். நாளை காலை இங்கிருந்து கிளம்பி ராமரை சந்திக்க செல் என்றார். அதற்கு பரதன் முனிவரே தாங்கள் எனக்கு இப்போது அளித்த வரவேற்பு விருந்தில் நான் மிகவும் திருப்தி அடைந்துவிட்டேன். மேலும் தங்களுக்கு தொந்தரவு தர விரும்பவில்லை ஆகவே கிளம்புகின்றேன் என்றார்.

பரதா உன் பக்திக்கும் பதவிக்கும் தக்க உபசாரம் செய்ய கடமைபட்டிருக்கின்றேன். நீ இன்று இரவு இங்கேயே தங்க வேண்டும். நீ இன்று தங்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன். உன்னுடைய படை பரிவாரங்கள் ஏன் தூரத்திலேயே இருக்கின்றது. அவர்களை ஏன் உள்ளே அழைத்துவரவில்லை என்று கேட்டார். படைபரிவாரங்கள் ரிஷிகளின் ஆசிரமத்திற்கு அருகில் செல்லக்கூடாது என்ற நியமப்படி இங்கே அழைத்து வரவில்லை. மேலும் என்னுடன் வந்திருக்கும் கூட்டம் மிகப்பெரியது. இங்கு அழைத்து வந்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும். எனவே தூரத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டேன் என்றான். அதற்கு பரத்வாஜ முனிவர் அனைவரையும் இங்கே அழைத்துவா என்று கேட்டுக்கொண்டார். பரதனும் அவ்வாறே உத்தரவிட்டான். அனைத்து படைகளும் ஆசிரமத்திற்குள் நுழைந்தது. பரத்வாஜ முனிவர் மந்திரங்களை சொல்லி மயன் வருணன் குபேரன் அக்னி முதலிய தேவர்களை வரவழைத்து பரதனின் படைகளுக்கு விருந்தளிக்க விரும்புகின்றேன். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வீர்களாக என்று கேட்டுக்கொண்டார்.

காட்டிற்குள் உடனடியாக அற்புதங்கள் நிகழ்ந்தது. எண்ணிலடங்காத செல்வத்தை வைத்திருக்கும் ஒரு மன்னன் மற்றோரு மன்னருக்கு விருந்தளிப்பது போல் காட்டிற்குள் ஒரு கணத்தில் பெரிய மாற்றங்கள் உண்டாகின. சந்தனம் புஷ்பம் வாசனை திரவியங்களுடன் அவரவர்களுக்கு தகுந்தார் போல் வீடுகள் அமைந்தது. அவரவர்களுக்கு பிடித்த உணவு வகைகள் வந்தது. தெய்விக ரீதியில் சங்கீதம் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. படை பரிவாரங்கள் தங்களை மறந்து அனைத்தையும் அனுபவித்தார்கள். இதற்கு மேல் நாம் காட்டிற்குள் செல்ல வேண்டாம். அயோத்திக்கும் செல்ல வேண்டாம். இங்கேயே தங்கிவிடலாம் என்ற எண்ணினார்கள். தேவலோக நந்தவனத்தில் இருப்பதைப்பொன்று உணர்ந்தார்கள். எல்லைமீறி அனுபவித்தும் மெய்மறந்தும் தூங்கிவிட்டார்கள். காலை விடிந்ததும் இரவில் நடந்தது கனவு போல் அங்கிருந்த அனைத்தும் மறைந்து விட்டது.