அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது கந்தசஷ்டி திருவிழாவாகும். இங்கு வழங்கப்படும் பிரசாதங்களில் முக்கியமானது பன்னீர் இலை விபூதியாகும். ஒரு முறை ஆதிசங்கரர் காசநோயால் பாதிக்கப்பட்டு திருச்செந்தூர் முருகனிடம் வந்துள்ளார். அப்போது முருகப் பெருமான் ஆதிசங்கரரிடம் இனிய தமிழில் பாடல் பாடுமாறு கேட்டார். அதற்கு அவர் நான் எம்பெருமானை மட்டுமே பாடுவேன் என்று கூறினார். இதனால் வருத்தமடைந்த முருகப் பெருமானை அப்போது அங்கு வந்த எம்பெருமான் கண்டார். முருகன் வருத்தத்துடன் இருப்பதற்கு காரணத்தை அறிந்த எம்பெருமான் ஆதிசங்கரரிடம் சென்று முருகப் பெருமான் முன் சென்று கண்ணை மூடிக் கொண்டு என்னை நினைத்து பாடு என்று கூறினார். அதுபோலவே முருகப் பெருமான் முன் நின்று கண்ணை மூடிக்கொண்டு பாடினார் ஆதிசங்கரர். கண்ணை திறந்து பார்க்கும் போது முருகப் பெருமான் இருக்கும் இடத்தில் எம்பெருமான் இருந்தார். எம்பெருமான் தான் முருகன் முருகன் தான் எம்பெருமான் என்பதை உணர்ந்த ஆதிசங்கரர் முருகப் பெருமானிடம் மன்னிப்பு கேட்டு முருகனை பாடி காசநோயை குணப்படுத்த வேண்டும் என்று வேண்டினார். உடனே முருகப்பெருமான் இலையில் விபூதியை அவரிடம் கொடுத்தார். திருநீற்றுப் பச்சிலையில் (பன்னீர்இலை) வைத்து கொடுக்கப்பட்ட இலை விபூதியை சாப்பிட்டதும் காசநோய் குணமாகியது.
தேவர்களை சிறை பிடித்து கொடுமைப்படுத்திய சூரபத்மனிடம் தேவர்களை விடுவித்து முருகப் பெருமானிடம் சரணடையுமாறு வீரபாகு தேவன் கேட்டபோது சூரன் மறுத்தான். முருகப் பெருமானிடம போர் புரிய தயாரானான். போர் தொடங்கியது போரில் முருகப் பெருமான் படை சார்பில் இருந்த வீரர்கள் சிலர் காயமடைந்தனர். அந்த காயத்திற்கு மருந்தாக இலை விபூதி கொடுத்து குணமாக்கியுள்ளனர். பின்னாளில் அதன் மகத்துவத்தை அறிந்து கோவிலை கட்டிய சாதுக்கள் பணியாற்றிய ஊழியருக்கு ஊதியமாக இலை விபூதியை கொடுத்துள்ளனர். பெற்றுக் கொண்ட ஊழியர்கள் விடலை கோவில் பிள்ளையார் அருகே வந்து அதைத் திறந்து பார்த்த போது ஊதியத்திற்கு ஏற்ப பொற்காசுகள் ஆக மாறியிருந்ததாம். வேலை செய்யாதவர்களுக்கு வெறும் விபூதி மட்டுமே இருக்குமாம். அதனுடைய தத்துவத்தை உணர்த்தும் வகையில் இன்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
சக்தி பீடம் கோயில்களைப் பற்றி பல நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. எத்தனை சக்தி பீடங்கள் உள்ளன என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளது. எது சக்தி பீடம் என்பதிலும் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் சந்தேகங்களும் உள்ளன. 51 சக்தி பீடங்கள் என்று வேறு நூல்களில் சொல்லப்பட்ட கோயில்களைப்பற்றி இந்த பக்கத்தில் படிக்கலாம்.
சக்தி பீடம் கோயில்களைப் பற்றி பல நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. எத்தனை சக்தி பீடங்கள் உள்ளன என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளது போலவே எது சக்தி பீடம் என்பதிலும் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் சந்தேகங்களும் உள்ளன. அவற்றில் ஒரு கோயில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காங்க்ரா பள்ளத்தாக்கில் இருந்து தெற்கே 35 கிமீ தொலைவில் தௌலாதர் மலைத்தொடரில் உள்ள மலைகளுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் தேவியின் நாக்குப் பகுதி விழுந்த சக்தி பீடமாகும். இக்கோயில் ஜ்வாலாமுகி சக்தி பீடமாகும். கோவிலில் உள்ள பாறை இடுக்குகளின் இடையில் இயற்கையாக நீல நிறத்தில் ஒரு ஜோதியானது பல நூற்றாண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது. எண்ணெய் திரி எதுவும் இல்லாமல் பழமையான பாறை இடுக்குகளில் இருந்து வெளிப்படும் நீலநிற ஜ்வாலை இங்கு அன்னையின் வடிவமாக வழிபடப்படுகிறது. இக்கோயிலில் மூல தெய்வமாக ஜ்வாலாமுகி தேவி ஜோதி வடிவமாக இருக்கிறாள். ஜ்வாலாமுகி தேவியின் அம்சமாக இந்த நீல நிற ஜோதி வழிபடப்படுகிறது. இவள் மகாகாளி, அன்னபூர்ணா, சண்டி, ஹிங்லாஜ், வித்யா, பஸ்னி, மஹா லக்ஷ்மி, சரஸ்வதி, அம்பிகா மற்றும் அஞ்சி தேவி என்ற வேறு பெயரிலும் அழைக்கப் படுகிறாள். ஒளியின் தெய்வம் என்றும் இவள் அழைக்கப்படுகிறாள். சதாசர்வகாலமும் எரியும் பிரதான நீல நிற ஜோதியானது ஒரு சதுர மைய குழியில் வைக்கப்பட்டுள்ளது. இக்குழி தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜோதிக்கு முன் ஒரு ஸ்ரீயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அது சால்வைகள் மற்றும் ஆபரணங்களால் மூடப்பட்டிருக்கும். இங்கு ஜ்வாலாமுகி சக்தியாகவும் உன்மத்த பைரவர் சிவனாகவும் உள்ளார்கள்.
காங்க்ரா என்ற இந்த பகுதியை ஆண்ட ராஜா பூமிசந்த்கடோச் என்பவரின் கனவில் தோன்றிய தேவி இந்த இடத்தைப் பற்றியும் அதன் புனிதத்தைப் பற்றியும் அருளி இங்கு கோயில் எழுப்புமாறு கூறினாள். தேவியின் சொல்படி அந்த இடத்தைக் கண்டுபிடித்த ராஜா அந்த இடத்தில் கோயிலை எழுப்பினார். கோவில் நவீன வடிவமைப்பில் கட்டப்பட்டது. மகாராஜா ரஞ்சித் சிங் 1815 இல் கோயிலுக்கு விஜயம் செய்தார். கோயிலின் குவிமாடம் அவரால் தங்க முலாம் பூசப்பட்டது. கோயிலில் கதவுகள் வெள்ளித் தகடுகளால் செய்யப்பட்டுள்ளது. ஜ்வாலாமுகி கோவிலுக்கு சில அடிகள் மேலே சுமார் மூன்றடி சுற்றளவுடன் ஆறடி ஆழமான குழி உள்ளது. இந்தக் குழியின் அடியில் ஒன்றரை அடி ஆழமுள்ள மற்றொரு சிறிய குழியில் எப்போதும் வெந்நீர் கொப்பளித்துக்கொண்டே இருக்கும்.
சிவபெருமானால் நசுக்கப்பட்ட அரக்கன் ஜலந்தராவின் வாயிலிருந்து இந்த நெருப்பானது வருகிறது என்று புராண கதைகள் மூலம் சொல்லப்படுகிறது. கோயிலின் பெரிய மண்டபத்திற்கு முன் ஒரு சிறிய தளம் உள்ளது. அங்கு ஒரு பெரிய பித்தளை மணி உள்ளது. இந்த மணி நேபாள மன்னரால் கொடுக்கப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தின் ஜ்வாலாமுகி கோயிலில் பல புராண பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளன. பாண்டவர்கள் இந்த புனித தலத்திற்கு வந்து வழிபட்டிருக்கிறார்கள் என்பதை இந்த பதிவுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். இங்கு பிரசாதமாக ரப்ரி அல்லது கெட்டியான பாலால் செய்யப்பட்ட இனிப்பு அல்லது பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு வகையான இனிப்புகள் கொடுக்கப்படுகிறது.
முகலாயப் பேரரசரான அக்பர் இக்கோயிலின் புராணக் கதையைப் பற்றி அறிந்து கொண்டு அதன் உண்மை தன்மையை சோதிப்பதற்காக கோயிலுக்குச் சென்றார். நீரினால் ஜோதியை அணைக்க முயன்றார். எவ்வளவு நீர் ஊற்றினாலும் அணைக்க முடியாத ஜோதியானது நீர் ஊற்ற ஊற்ற மேலும் பெரும் சக்தியுடன் எரிய ஆரம்பித்தது. ஜ்வாலா தேவியின் சக்தியை அறிந்த அக்பர் தனது ஜ்வாலாமுகி தேவிக்கு ஒரு தங்கக் குடையை வழங்கினார். ஆனால் ஜோதி எரியும் குவி மாடத்தில் தங்க குடையை வைத்ததும் அந்த தங்கமானது தாமிர உலோகமாக மாறியது. இதனால் ஜ்வாலாமுகி தேவி தனது காணிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று உணர்ந்த அக்பர் மிகுந்த பணிவுடன் தேவியின் தீவிர பக்தரானார். பிரூஸ் ஷா துக்ளக் என்ற சுல்தான் இந்த கோவிலின் நூலகத்திலிருந்து 1300 சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து அவற்றை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார் இத்தகைய மொழி பெயர்ப்பைச் செய்த முதல் சுல்தான் இவராவார்.
துர்காதேவி சிங்க வாகனத்தின் மீது அமர்ந்தபடி சிம்மவாகினியாக காட்சி அளிக்கிறாள். தற்போது இச்சிலை நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.
ஒரு ஊருக்கு ஒரு சாமியார் சென்றார். அவர் பொய் பேசாதவர்கள் வீட்டில் கொடுக்கப்படும் உணவை மட்டுமே உட்கொள்வார். காரணம் பொய் பேசுபவர்களின் உணவை உட்கொண்டால் அவர்களுடைய பொய் சொல்லும் குணம் வந்து தன்னுடைய தவபலன் போய் விடும் என்று கருதி அவ்வாறு இருந்தார். இந்த ஊரில் பொய் பேசாதவர் யாராவது இருக்கிறார்களா என்று அந்த ஊரில் உள்ளவர்களிடம் கேட்டார். அவர்கள் அந்த ஊரின் செல்வந்தரான ஒருவரை சுட்டிக் காட்டினார்கள். அவர் மிகவும் நல்லவர் சாது சிவபக்தர் லட்சாதிபதி அவருக்கு நான்கு பிள்ளைகள் என்று அவரது வீட்டை காட்டினார்கள். செல்வந்தரைப் பற்றி ஊரில் சாமியார் விசாரித்தார். அவருக்கு எத்தனை குழந்தைகள் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார் என்று விசாரித்து விட்டு அதன் பின் அவரது வீட்டிற்கு சென்றார். அவரது இல்லத்திற்கு சாமியார் சென்றார். அவர் வீட்டுக்கு யோகி சென்றதும் உட்கார்ந்திருந்த செல்வந்தர் உடனே எழுந்து ஓடி வந்து ஞானி முன் விழுந்து வணங்கினார். அவரை ஆசனத்தில் அமர வைத்தார். இங்கு நீங்கள் உணவு அருந்தவேண்டும் என வேண்டினார். அவருடைய அன்பு பணிவு அடக்கம் முதலிய நற்குணங்களைக் கண்டதும் சாமியாருக்கு பிடித்துவிட்டது. ஆனால் அவர் உண்மையாளரா என்று சோதித்து விட்டு அப்புறம் உணவு அருந்தலாம் என்று எண்ணி அவரை சோதனை செய்ய ஆரம்பித்தார்.
உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார்? அதற்கு செல்வந்தர் ரூபாய் 22,000 இருக்கிறது என்றார். குழந்தைகள் எத்தனை பேர்? என்று கேட்டார். ஒரே மகன்தான் இருக்கிறான் என்றார். உனது வயது என்ன? என்று கேட்டார். எனக்கு வயது 4 என்றார். சாமியாருக்கு கோபம் வந்தது. உன்னைப் போய் பொய் பேசாதவர் என்கிறார்களே? நீ பேசுவதெல்லாம் நம்பும்படியாக இல்லையே. இங்கு நான் உணவு சாப்பிட்டால் அது என் தவத்தை அழித்து என் குணத்தை மாற்றிவிடும். நான் பொய் சொல்கிறவர்கள் வீட்டில் சாப்பிடுவதில்லை என்று சாமியார் எழுந்தார்.
சாமியார் காலில் விழுந்த செல்வந்தர் சாமி நான் பொய் பேசவில்லை. சத்தியம் சொல்கின்றேன். சற்று நிதானமாக ஆராய்ந்து பார்த்து விட்டு பின்பு முடிவு செய்யுங்கள் என்று சொல்லி தனது வரவு செலவு கணக்கு புத்தகத்தை எடுத்துக் காட்டினார். அதில் இருப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்தது. உங்கள் கணக்குப் புத்தகத்தில் உமது சொத்து ஒரு லட்சம் ரூபாய் என்று காட்டுகிறது. நீங்கள் எப்படி 22,000 ரூபாய் என்று சொன்னீர்கள்? என்று கேட்டார். அதற்கு செல்வந்தர் சுவாமி ஒரு லட்ச ரூபாய் பெட்டியில் உள்ளது என்றாலும் பெட்டியில் உள்ள பணம் என்னுடையது ஆகுமா? இதோ பாருங்கள் நான் செய்த தருமக் கணக்கில் இதுவரை 22,000 ரூபாய் தான் செலவழிந்துள்ளது. தருமம் புரிந்த பணம்தானே என்னுடையது? இப்போதே நான் இறந்தால் பெட்டியில் உள்ள இந்த லட்ச ரூபாய் என்னுடன் வராதே. என்னோடு வருவது நான் செய்த தருமம் ஒன்று தானே அது 22000 ரூபாய் தானே. அது தான் என் சொத்து என்று சொன்னேன் என்றார்.
ஊரில் உங்களைப் பற்றி விசாரித்தேன் அவர்கள் உங்களுக்கு நாலு பிள்ளைகள் என்று சொன்னார்கள். நீங்கள் ஏன் ஒரு பிள்ளை மகன் என்று சொன்னீர்கள் என்று கேட்டார். சுவாமி எனக்குப் பிறந்தது 4 பிள்ளைகள். ஆனால் என்று சொல்லி மகனே நடேசா என கூப்பிட்டார். அப்பா நான் விளையாடுகிறேன். சிறிது நேரம் கழித்து வருகிறேன் என்றான். மகனே வடிவேலா என கூப்பிட்டார். நண்பர்களுடன் வெளியே செல்கிறேன். பிறகு வந்து நீங்கள் சொல்வதை கேட்கிறேன் என்றான். மகனே சிவராஜா என கூப்பிட்டார். இருக்கின்ற பணத்தை எல்லாம் தானம் கொடுங்கள் இதற்கு உதவி செய்ய என்னை வேறு கூப்பிடுகிறீர்களா என்று பதில் மட்டும் வந்தது. மகனே குமரேசா என கூப்பிட்டார். மகன் ஓடி வந்தான். அப்பாவையும் எதிரே இருந்த சாமியாரையும் தொழுது வணங்கினான். என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் தந்தையே செய்து முடிக்கிறேன் என்று நின்றான். சுவாமி அந்த மூவரும் என் புதல்வர்களா? நான் செய்யும் தர்மத்திற்கு முரணாக இருக்கிறார்கள். இவன் ஒருவன் மட்டுமே என்னுடைய தர்மத்திற்கு துணையாக இருக்கிறான். இவனை என் பிள்ளை என்று கருதுவதால் எனக்கு ஒரு பிள்ளை என்றேன் என்றார்.
உன் வயது 4 என்றாயே அதற்கான விளக்கத்தையும் நீயே சொல் என்றார் சாமியார். சுவாமி ஒவ்வொரு நாளும் நான் ஒன்றரை மணி நேரம் தான் வழிபாடு செய்கின்றேன். இறைவனைப் பற்றி நினைக்காத பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் தானே? இறைவனைப் பூசிக்கும் நேரம்தான் எனக்குச் சொந்தம். அடியேனுக்கு இந்த உடம்பு பிறந்து அறுபது ஆண்டுகள் ஆயின. ஐந்து வயதிலிருந்து பூசிக்கின்றேன். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம் பூசை செய்கின்றேன். அந்த வகையாகப் பார்த்தால் அடியேன் பிறந்து அறுபது ஆண்டுகள் ஆனாலும் எனக்குச் சொந்தமான வயது 4 வருடம் தான் என்று நான் கருதுகிறேன் சரியா சுவாமி என்று வணங்கி நின்றார்.
நீங்கள் சொன்னது உண்மையிலும் உண்மை
தருமம் செய்த பணம் தான் ஒருவனுக்கு சொந்தம்.
தாய் தந்தை செய்யும் தர்மத்திற்கு உதவி செய்பவர்களும் அவர்களின் தர்மக் கருத்தை கேட்கின்றவர்களும் உண்மையில் மகன் மகள் ஆவார்கள்.
இறைவனுக்கு பூசை செய்த நேரமே ஒருவனின் நேரம்.
ஆகவே உங்கள் வீட்டில் உணவு உண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று வாழ்த்தினார் சாமியார். இந்த கதையை ஒரு நிகழ்ச்சியில் சொன்னவர் திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.
ஸ்ரீசைலத்திலிருந்து 21 கிமீ தொலைவில் உள்ள சைலகே்ஷத்ர வனத்தின் நடுவே பூமிக்கு அடியில் இக்கோயில் உள்ளது. இங்கு தரை மட்டத்தில் கோயில் விமானம் உள்ளது. இந்த விமானத்தின் கீழே பூமிக்கு அடியில் வீற்றிருக்கிறாள் இஷ்ட காமேஸ்வரி தேவி. ஒரு புறம் பழைமையான சிலைகள் இன்ன தெய்வங்கள் என்று கண்டு பிடிக்க இயலாதவாறு நிற்கின்றார்கள். மற்றொரு புறம் கோயிலுக்குள் இறங்கும் துவாரம். ஒரு நேரத்தில் நான்கு பேர் மட்டுமே செல்ல முடியும். கோயிலின் துவாரம் வழியாக தவழ்ந்து உள்ளே செல்ல வேண்டும். சன்னிதியின் உள்ளே ஒருவர் சம்மணமிட்டு அமரக் கூடிய அளவுக்கு இடவசதி இருக்கும். 8 முதல் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கோயில் காட்டுப் பகுதியில் புலிகள் சரணாலயத்தின் நடுவே இருப்பதனால் இங்கு செல்ல வனத்துறையின் அனுமதி தேவை. ஒரு நாளைக்கு பத்து ஜீப்களில் தலா ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஜீப்களில் செல்வதற்கு முந்தைய நாளே பதிவு செய்து கொள்வது அவசியம். அடர்ந்த காட்டுப் பகுதி ஆகையால் முறையான சாலைகளோ உணவுப் பொருட்களோ கிடையாது. காட்டுக்கு நடுவே இயல்பாக ஏற்பட்டுள்ள பாதைகள் வழியே 11 கிமீ பயணம் செய்ய வேண்டும். பயணம் செய்ய ஒன்றரை மணி நேரம் ஆகும். தண்ணீர் உணவுப் பொருட்கள் பூஜை சாமான்கள் அனைத்தும் வாங்கி செய்ய வேண்டும். காலைய 9.30 க்கு ஜீப்கள் காட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் ஜீப்கள் செல்ல பாதையில்லை. நடந்து செல்ல வேண்டும். காட்டில் செஞ்சுக்கள் என்ற வேடர்கள் வசிக்கிறார்கள்.
ஒரு பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. பூணூல் தயாரிப்பை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான். சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான். அரசன் ஊர் மக்களும் பிராமணர்களுக்கு ஓரளவு உதவி வந்தார். பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்தது. காயத்ரியை ஒருமனதாக எண்ணி ஜபிக்க பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தார். அவரது மனைவி பெண்ணின் திருமணத்திற்கான பொருளை அரசனிடம் பெற்று வரும்படி பிராமணரைத் தூண்டி விட்டார். அவரும் மன்னனிடம் சென்றார். மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான். அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது. இது எதனால் என யோசித்துக் கொண்டே அவர் வந்த காரியம் பற்றி கேட்டார். பிராமணரும் தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும் அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார். நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்டார். கூசிக் குறுகிய பிராமணரோ தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும் சமாளித்துக் கொள்கிறேன் என்று கூறினார். மன்னன் நகைத்தான். ஒரு தராசை எடுத்து வரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான். பூணூல் இருக்கும் பக்கம் தராசுத் தட்டு தாழ்ந்தே இருந்தது. மேலும் பொற்காசுகளை வைக்க வைக்க பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது. தராசு போதவில்லை. பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன். மேலும் பொற்கட்டிகள் வெள்ளிக் கட்டிகள் நகைகள் ரத்தினங்கள் என இட இட தராசுத் தட்டு தாழ்ந்தே இருந்தது. தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான். சமயோசிதமான மந்திரியோ பிராமணரே இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளைப் பெற்றுக் கொள்ளும் என்றார். அதே போல் நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்து வருங்கள் என்றார்.
பிரமணருக்கோ அரசரிடமே பொன் போதவில்லை. நாளை வரச் சொல்கிறார். நாளை மேலும் நிறைய கிடைக்கும் அதனை எப்படி கொண்டு செல்வது என்று அடுத்த நாள் கிடைக்கும் பொன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தார். இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும் அவருக்கு தொலைந்தே போனது. மன்னன் எவ்வளவு பொருள் தருவான். பெண்ணின் திருமண செலவு போக நமக்கும் நிறைய இருக்குமே. அதை வைத்து என்ன என்ன செய்யலாம்? என்று பிராமணரின் மனம் அலை பாய்ந்தது. அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை. காலை எழுந்ததும் அவசரம் அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார். பூணூலைச் செய்ய ஆரம்பித்தார். வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை. தடுமாறினார். ஒரு வழியாகப் பூணூலைச் செய்து முடித்தவர் அதை எடுத்துக் கொண்டு மன்னனைக் காண விரைந்தார். அரசவையில் மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது. அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத் தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன். சில பொற்காசுகளை வைத்ததும் பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்து விட்டது. அவற்றிலிருந்து சில பொற்காசுகளை எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று. அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர். ஒரு பொற்காசு திருமணத்திற்கு போதாது என்று திருமணத்திற்கு தேவையான பொற்காசுகளை கொடுத்தனுப்பினான் மன்னன்.
பிராமணர் அங்கிருந்து சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம். மந்திரியிடம் முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்? என்று கேட்க மந்திரியோ மன்னா இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவர் சாது. இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் காயத்ரீ தேவையை மட்டுமே சிந்தித்துக் கொண்டு காயத்ரீ மந்திரத்தை மட்டுமே சொல்லிக் கொண்டு இருந்தார். தன்னுடைய பெண்ணின் திருமண தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார். வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜெபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது. அந்தப் பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கொடுத்தாலும் அதற்கு நிகராக தராசு தட்டு சரிசமமாகாது. அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம். ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது அவர் நவரத்னம் எவ்வளவு கிடைக்கும் பொன் எவ்வளவு கிடைக்கும் பொருள் எவ்வளவு கிடைக்கும் என்ற சிந்தனையில் காயத்ரி தேவியை சிந்திக்காமல் வாயால் மட்டுமே மந்திரத்தை சொல்லிக் கொண்டு பூணூலை செய்தார். மனம் ஒருமித்துச் சொல்லவில்லை. எனவே இன்று அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை. அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்து விட்டது என்றார் மந்திரி.
காளையுடன் இருக்கும் சிவனின் உருவத் திருமேனி ரிஷபாரூடர் என்று அழைக்கப்படுகிறது. காளையின் மீது நான்கு கரங்களுடன் சிவபெருமான் உமையம்மையுடன் காட்சி தருகின்றார். இடம் அருள்மிகு கோகர்ணேஸ்வரர் (பிரகதாம்பாள்) திருக்கோயில் திருக்கோகர்ணம் புதுக்கோட்டை மாவட்டம்.