ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 602

தர்மத்தை பற்றி அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

கலி காலத்திலே பூசைகள் கடினம் என்றுதான் தர்மத்தை உபதேசம் செய்கிறோம். இயன்றவர்கள் இயலாதவர்களுக்கு தக்கதொரு தர்மத்தை இயன்ற அளவுக்கு செய்து கொண்டே வர வேண்டும். ஒரு நாள் போய் விட்டால் வாழ்க்கையில் அது நாள் அல்ல. வெட்டும் வாள். எனவே ஒவ்வொரு தினமும் கழியும் போதும் அன்றைய தினத்தில் நாம் எத்தனை பேருக்கு உதவி செய்தோம்? எத்தனை மனிதனுக்கு நம்மால் பயன் ஏற்பட்டது? எத்தனை மனிதனுக்கு நாம் ஆறுதலாயிருந்தோம்? எத்தனை மனிதனுக்கு நாம் உடலால் உபகாரம் செய்தோம்? எத்தனை பேருக்கு வார்த்தைகளால் எண்ணங்களால் பொருட்களால் மருத்துவ உதவி செய்தோம்? எத்தனை பேருக்கு பசி தீர்த்து உதவினோம்? கல்வி கற்க உதவினோம்? என்றெல்லாம் சிந்தித்து சிந்தித்து அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த அதிகப்படுத்த கூடவே இறையருளும் எமது ஆசியும் தொடரும்.

வினாயகரின் எலி வாகனம்

கந்தர்வர்களில் ஒருவனான கிரவுஞ்சன் விநாயகப் பெருமானின் தீவிர பக்தன். அவன் தினமும் விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தனது பணிகளைத் தொடங்குவான். ஒருநாள் அவன் இமயமலைப் பகுதியில் இயற்கை அழகை ரசித்தபடி வான் வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அழகிய பூந்தோட்டம் ஒன்றும் அதில் பூப்பறித்துக் கொண்டிருந்த அழகியப் பெண் ஒருத்தி அவன் கண்ணில் பட்டாள். அந்தப் பெண்ணின் அழகில் மயங்கய அவன் அவளை எப்படியாவது திருமணம் செய்து தன்னுடன் தேவலோகத்துக்கு அழைத்துச் சென்று விட வேண்டுமென்று எண்ணினான். வானிலிருந்து கீழிறங்கி வந்த அவன் பூப்பறித்துக் கொண்டிருந்த பெண்ணை நெருங்கி பெண்ணே தேவலோகத்தைச் சேர்ந்த கந்தர்வனான நான் வான் வழியாகச் சென்று கொண்டிருந்த போது உன் அழகைக் கண்டு மயங்கிக் கீழிறங்கி வந்தேன். நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றான். அந்தப் பெண் கந்தர்வனே நான் இங்குள்ள ஆசிரமத்தில் இருக்கும் சவுபரி முனிவரின் மனைவி மனோரமை. என் மேல் நீ கொண்ட தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டு இங்கிருந்து சென்றுவிடு என்றாள். ஆனால் அந்தப் பெண்ணின் அழகு கந்தர்வனை மதிமயங்கச் செய்தது. நீ ஒரு முனிவரைத் திருமணம் செய்து கொண்டு ஒரு பணிப் பெண்ணைப் போல் வாழ்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறாய். என்னைத் திருமணம் செய்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக வாழலாம் என்றான். அதைக் கேட்டுக் கோபமடைந்த அவள் நான் இன்னொருவரின் மனைவி என்று சொல்லியும் அதைக் கேட்காமல் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது உனக்குத் தவறாகத் தெரியவில்லையா? என்றாள். முனிவருடன் இருப்பதை விட என்னைப் போன்ற கந்தர்வனுடன் இருப்பதில் தான் இன்பம் அதிகம். இந்த முனிவரைக் கைவிட்டு என்னுடன் வந்தால் உன்னைத் தேவலோகம் அழைத்துச் செல்கிறேன். அங்கு நாம் இருவரும் மகிழ்ச்சியாக வாழலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறினான் கந்தர்வன்.

முனிவரின் மனைவி சற்றும் தடுமாற்றம் இல்லாமல் கந்தர்வனே முனிவரின் மனைவியாக நான் இன்பமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீ என்னிடம் தேவையில்லாமல் பேசி உன் நேரத்தை வீணடிக்காமல் இங்கிருந்து செல். இல்லையென்றால் பெருந்துன்பமடைய நேரிடும் என்றாள். இதனால் கோபமடைந்த கந்தர்வன் அவளைக் கவர்ந்து போய் விடுவது என்று முடிவு செய்து மனோரமையை நெருங்கினான். அவன் எண்ணத்தை அறிந்த அவள் அவனிடமிருந்து தப்பிக்க ஆசிரமம் நோக்கி ஓடினாள். பின் தொடர்ந்து வந்த கந்தர்வன் ஆசிரமத்துக்குள் நுழைந்த மனோரமையின் கையைப் பிடித்து நிறுத்தினான். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத அவள் சுவாமி என்னைக் காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டாள். மனைவியின் சத்தத்தைக் கேட்டு ஆசிரமத்திலிருந்து வெளியில் வந்தார் சவுபரி முனிவர். நிலைமயை உடனடியாக புரிந்து கொண்ட முனிவர் கந்தர்வனே என் மனைவியை விட்டு இங்கிருந்து போய்விடு. இல்லையெனில் என் கோபத்துக்கு ஆளாவாய் என்றார். மோக மயக்கத்தில் இருந்த கந்தர்வனுக்கு அவரது குரல் காதில் விழவில்லை. அவன் மனோரமையை கவர்ந்து செல்வதிலேயே குறியாக இருந்தான். இதனால் கோபமடைந்த முனிவர் கந்தர்வனே என் மனைவியை கவர்ந்து செல்ல நினைத்த நீ மண்ணைத் தோண்டி வளையில் ஒளிந்து வாழும் எலியாக மாறி துன்பப்படுவாய் என்று சாபமிட்டார்.

முனிவரின் சாபத்தைக் கேட்டு சுயநினைவுக்குத் திரும்பிய கந்தர்வன் தன்னுடைய செயலுக்காக வருந்தினான். முனிவரே அடுத்தவரின் மனைவியை அடைய நினைத்த எனக்கு தாங்கள் கொடுத்த சாபம் சரியானது தான். நான் நீங்கள் கொடுத்த சாபத்தை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் எனது தவறைத் தாங்கள் மன்னித்தருள வேண்டும் என்றான். இதனால் மனமிரங்கிய முனிவர் கந்தர்வனே தவறு செய்வது அனைவரின் இயல்பாக இருக்கலாம். ஆனால் தேவலோகத்தைச் சேர்ந்த உனக்கு இப்படியொரு எண்ணம் வந்திருக்கவே கூடாது. நீ தவறை உணர்ந்து நான் கொடுத்த சாபத்தையும் முழுமையாக ஏற்றுக் கொண்டிருப்பதால் நான் உன்னை மன்னிக்கிறேன். பிற்காலத்தில் உனக்கு இந்த எலி உருவத்திலேயே மிகப்பெரிய சிறப்பு கிடைக்கும் என்றார்.

கந்தர்வன் மிகப்பெரிய எலியாக மாறினான். அந்த எலி காட்டிற்குள் சென்று பல இடங்களையும் தோண்டி நாசப் படுத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு இடமாக மாறி மாறிச் சென்ற எலி காட்டிற்குள் இருந்த பராசர முனிவரின் ஆசிரமப் பகுதிக்குள் சென்றது. அந்த இடம் எலிக்கு பிடித்துப் போனதால் அங்கேயே ஒரு வளை தோண்டித் தங்கிக் கொண்டது. அந்த எலி ஆசிரமப் பகுதிக்குள் இருந்த மரங்களின் வேர்களைக் கடித்து மரங்களைக் கீழே விழச் செய்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. மேலும் ஆசிரமத்தின் பல பகுதிகளிலும் வளை தோண்டி சேதப்படுத்தியது.

அபினந்தன் எனும் அரசன் இந்த நேரத்தில் நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று உலக நன்மைக்காக மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்த முடிவு செய்து முனிவர்களிடம் இந்த பணியை ஒப்படைத்தான். வேள்விக்கான பணிகளையும் அவனே முன்னின்று செய்து வந்தான். காலநேமி என்ற அசுரன் அபினந்தன் செய்து வந்த வேள்விகளை எல்லாம் அழித்தான். அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத முனிவர்கள் அவனை அழித்து உதவும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அவர்களிடம் இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள். என் மகன் விநாயகன் அவனை அழிப்பதற்காகப் பூலோகத்தில் தோன்ற இருக்கிறான். அவன் அரக்கன் காலநேமியை அழித்து வேள்விப் பணிகள் தொடர உதவி செய்வான் என்று அருளினார். சில காலத்தில் யானை முகமும் மனித உருவமுமாக விநாயகப் பெருமான் அந்நாட்டில் தோன்றினார். அந்தக் குழந்தையைக் கண்டு அரசன் அச்சமடைந்தான். இருப்பினும் குழந்தையைக் கொல்ல மனமில்லாமல் காட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தன்னுடைய படை வீரர்களுக்கு கட்டளையிட்டான். அவர்களும் ஒரு குளக்கரையில் விட்டு வந்தனர். காட்டிற்குள் இருந்த அந்த குளத்தில் நீராட வந்த பராசர முனிவர் குழந்தையை கண்டெடுத்து தன் ஆசிர மத்தில் வைத்து வளர்க்கத் தொடங்கினார்.

விநாயகர் ஆசிரமத்தில் வளர்ந்து வந்த போது அங்கிருக்கும் மரங்களில் ஏறி விளையாடுவார். அதேபோல் ஒரு மரத்தில் ஏறி விநாயகர் விளையாடிய போது மரத்தின் அடியில் இருந்த எலியானது வேர்களைக் கடித்து மரத்தைச் சரித்தது. மரத்தின் அடியில் வளை தோண்டி வசித்த பெரிய எலிதான் மரம் கீழே விழுவதற்கு காரணம் என்று விநாயகருக்கு தெரிய வந்தது. அந்த எலியைக் கொல்வதற்காக, தன்னிடம் இருந்த பரசு ஆயுதத்தை எடுத்து எலியை நோக்கி வீசினார் விநாயகர். ஆயுதத்தைப் பார்த்ததும் எலி வளைக்குள் புகுந்து ஓடியது. பரசு ஆயுதம் எலியை விடாமல் துரத்தியது. வளை தோண்டியபடி பாதாளம் வரைச் சென்ற எலி சோர்வடைந்தது. அதற்குமேல் செல்ல முடியாமல் பூமியின் மேற்புறத்தை நோக்கி ஓடி வந்தது. பரசு ஆயுதம் எலியை விநாயகரின் முன்பாக கொண்டு போய் நிறுத்தியது. விநாயகப் பெருமான் உருவத்தை நேருக்கு நேராகப் பார்த்ததும் அந்த எலிக்கு தான் கந்தர்வனாக இருந்ததும் சவுபரி முனிவரிடம் சாபம் பெற்றதும் நினைவுக்கு வந்தது .தன் தவறை மன்னிக்கும்படி வினாயகரிடம் வேண்டியது. மனமிரங்கிய விநாயகர் கவலைப்படாதே உனக்குச் சாபம் கொடுத்த முனிவரிடம் நீ சாபத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதாக கூறிவிட்டபடியால் உனக்கு என்னால் சாப விமோசனம் வழங்க முடியாது. நீ கந்தர்வனாக இருந்த போது என் மேல் அதிக பக்தி கொண்டிருந்தாய். எனவே நான் உன்னை என் வாகனமாகக் கொள்கிறேன். இதன் மூலம் நான் இருக்கும் இடங்களிலெல்லாம் உனக்கும் மரியாதை கிடைக்கும் என்று அருளினார். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த எலி விநாயகரை வணங்கி நின்றது. விநாயகப் பெருமானும் மூசிகனை வாகனமாகக் கொண்டு ஆயுதங்களுடன் சென்று அசுரன் காலநேமியை அழித்தார்.

சிவ வடிவம் – 38. பைரவமூர்த்தி

கருமையான மலை போன்ற உடலையும் விகாரமான முகத்தையும் கோரமான பற்களையும் யானையின் துதிக்கையை போன்ற கைகளையும் உடைய மிகவும் கொடிய அசுரன் அந்தகன். இவன் சிவபெருமானை நினைத்து பஞ்சாக்கினி வளர்த்து அதன் மத்தியில் தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பார்வதி தேவியுடன் இடப வாகனத்தில் வந்து என்ன வரம் வேண்டுமென்றுக் கேட்டார். பிரம்மா விஷ்ணு இவர்களை விட பலமும் யாவரும் அழிக்க முடியாத ஆற்றலும் வேண்டும் என்று கேட்டான். அவன் செய்த தவத்தின் பலனால் அவன் கேட்டதை கொடுத்தார் சிவபெருமான். தான் பெற்ற வரத்தினால் தானே வலிமையுள்ளவன் என்ற அகங்காரம் அதிகமானது. இதனால் இந்திரன் விஷ்ணு பிரம்மா என அனைவரிடமும் சண்டை போட்டான். அவனது சண்டைக்கு முன் அனைவரும் தோல்வியுற்று விஷ்ணு முன்செல்ல தேவகணங்ளும் பின்சென்று அனைவரும் அந்தகனிடம் சரணடைந்தனர். சரணடைந்த பின்பும் அவனது கொடுமை தொடர்ந்தது. அந்தகன் கொடுமைகள் அதிகமாக தேவகணத்தினர் கையிலை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமான் தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பைரவரிடம் அந்தகனை வெற்றி பெற உத்தரவிட்டார். பைரவர்க்கும் அந்தகனுக்கும் இடையே அதிபயங்கரப் போர் நிலவியது. பல அசுர சேனைகள் பைரவர் அழித்தார். அழிந்த அனைவரையும் அசுரனின் தலைவர் சுக்கிராச்சாரியார் உயிர்ப்பித்தார். உடனே சிவபெருமான் சுக்கிராச்சாரியாரை விழுங்கினார். அடுத்த நொடி அசுர சேனைகள் அனைத்தும் அழிந்தன. பைரவர் தனது சூலத்தால் அந்தகனை குத்திவிட்டு சிவபெருமானை சரணடைந்தார். பைரவரின் சூலத்தால் குத்தப்பட்டு அதன் அருளால் மனம் மாறிய அந்தகன் தனது அகங்காரமெல்லாம் அழிந்து போக வேண்டும் என்றும் சிவபெருமானிடம் தன்னை பூத கணங்களுக்கு தலைவனாக்கவும் வேண்டினான். சிவபெருமான் அவனது தவத்தின் பலனாலும் வேண்டுதலாலும் அவனது எண்ணத்தை நிறைவேற்றினார். சிவபெருமானின் வயிற்றிலிருந்த சுக்கிராச்சாரியாரை இறைவன் வெளியேற்றினார். பின்னர் தேவர்கள் தொல்லையின்றி நிம்மதியுடன் வாழ்ந்திருந்தனர். அந்தகனின் அகங்காரத்தை அழிக்க சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவ மூர்த்தியாகும்.

சிவபெருமானைப் போல் ஐந்து தலையுடன் இருந்த நான்முகனின் அகங்காரத்தை அடக்க சிவபெருமான் பைரவரை தோற்றுவித்து நான்முகனின் ஐந்தாவது தலையை கிள்ளியெடுத்தார் என்ற புராண வரலாறும் உள்ளது. நானே பெரியவன் என்ற அகங்காரம் தோன்றும் இடத்தில் எல்லாம் அகங்காரத்தை அழிக்க இறைவன் எடுக்கும் ரூபமே பைரவர் வடிவம் ஆகும்.

அனைத்து சிவ ஆலயங்களிலும் வடகிழக்கு மூலையில் பைரவரது சன்னதி இருக்கும். இவ்வடிவம் ஆடையின்றி நாயின் வாகனத்துடன் உக்கிரமான பார்வையுடனும் தோற்றமளிக்கும். நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன் ஒவ்வொரு கைகளிலும் டமருகம் பாசம் சூலம் கபாலம் இருக்கும். இவரே திருக்கோவிலின் பாதுகாப்பாளர் ஆவார். ஊர்களின் காவல் தெய்வமும் இவரே. பைரவர் 64 திருக்கோலங்களை உடையவர் என்று சிவாகமங்கள் கூறுகின்றன. சிவ பெருமானின் வீர செயல்கள் எட்டாகும். அவரது வீரச் செயல்களின் வெளிப்பாடாக பைரவரும் எட்டு திருவுருவங்களை எடுத்து அருள் பாலிக்கிறார். அவை 1.அசிதாங்க பைரவர் 2.ருரு பைரவர் 3.சண்ட பைரவர் 4.குரோத பைரவர் 5.உன்மத்த பைரவர் 6.கபால பைரவர் 7.பீஷண பைரவர் 8.சம்ஹார பைரவர் என்பதாகும். இவர்கள் எட்டு பேரும் எட்டு இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். அவை அட்ட பைரவேச்சரங்கள் என்று அழைக்கப்படுக்கிறது.

சீர்காழியில் உள்ள பிரம்மேஸ்வரர் சன்னதியில் அட்ட பைரவா சன்னதிகள் உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் முக மண்டலத்தில் எட்டு பைரவர்களின் சுதைச் சிற்பங்கள் உள்ளது. காசியிலும் எட்டு பைரவர்களின் சன்னதி உள்ளது. குற்றாலத்தில் உள்ள சித்திர சபையில் அட்ட பைரவர்களின் ஓவியங்கள் உள்ளது. சூரியனது கோயிலில் உள்ள பைரவர் மார்த்தாண்ட பைரவர் என்றும் முருகர் ஆலயத்தில் உள்ள பைரவர் குமார பைரவர் என்றும் விநாயகர் ஆலயத்தில் உள்ள பைரவர் பிரமோத பைரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சில திருமாலின் திருக்கோயிலிலும் பைரவர் திருவுருவங்கள் உண்டு. அந்த உருவத்திற்கு முகுந்த பைரவர் என்று பெயர். திருவண்ணாலையில் மூலவர் சன்னதி அருகே சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி உண்டு. இவர் அடியவர்களுக்கு அள்ளிக் கொடுப்பவர். பண்டைய கால அரசர்கள் இந்த பைரவரை உபாசித்து வேண்டியளவு பொருளை பெற்றிருக்கிறார்கள் என்று வரலாறு உள்ளது. திபேத்தில் உள்ள பௌத்த நூல்களில் 84 வகையான பைரவ திருவுருவங்களும் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுள்ளன. சமண சமய நூல்களில் 96 வகையான பைரவர்களின் திருவுருவங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. காசியில் ஆதிசங்கரருக்கு பிரம்மஞானம் அருளிய கோலம் பைரவத் திருக்கோலமாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 601

ஓதிமலை பற்றி அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு :

ஓதிமலையில் நாள் கோள் வேலை செய்யாது. ஏன் என்றால் முருகன் கோள்களுக்கு அப்பாற்பட்டவன். இதை உணர அங்கு (மலைமேல்) ஓர் இரவு படுத்து இருந்து பார். ஆனாலும் தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு. ஓதியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது? (சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து பிரணவத்தின் பொருளை உரைத்ததால்). அப்படி இருக்க அங்கே கிரகங்கள் செயல்படுமா?

ஓதிமலை முருகனைப் பற்றி தெரிந்து கொள்ளவும் கோவில் மற்றும் மலை புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

பீமனின் பக்தி

பாண்டவர்கள் வனவாசத்தில் காட்டில் வாழ்ந்து வந்தார்கள். இக்காலத்தில் தியானம் ஜெபம் பூஜைகள் என்று பயனுள்ளதாக கழித்தார்கள். குந்திதேவி பாஞ்சாலி பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். அதில் பீமன் மட்டும் எப்போதும் தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுவான். இதனால் அவன் பிரார்த்தனையில் இறுதியாகவே வந்து கலந்து கொள்வான். ஒரு நாள் நீ யானை போல் பலசாலிதான் ஆனாலும் பிரார்த்தனையில் ஈடுபடும் எண்ணமே இல்லாமல் இருக்கிறாயே. உனக்கு ஏன் பக்தி இல்லாமல் போயிற்று என்று கடிந்தார் தருமர். இதன் பிறகாவது நேரத்திற்கு எழுந்து பிரார்தனையில் கலந்து கொள்வான் என்று எண்ணினார் தருமர். ஆனாலும் வழக்கம் போல தாமதமாகவே பீமன் படுக்கையிலிருந்து எழுந்தான்.

ஒரு நாள் கிருஷ்ணரை விருந்துக்கு அழைக்க எண்ணி நகுலனை கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தார் தர்மர். நகுலன் திரும்பி வந்து நாளை கிருஷ்ணருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வேறு நாள் வருவதாக சொல்லிவிட்டார் என்று கூறினான். நீங்களெல்லாம் கூப்பிட்டால் கிருஷ்ணன் வரமாட்டார். நான் போய் அழைத்து வருகிறேன் பாருங்கள் என்று கூறியவாறு அர்ஜூனன் நம்பிக்கையுடன் சென்றான். கிருஷ்ணரிடம் நாளை விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தான். நாளை எனக்கு வேறு வேலை இருக்கிறதே என்றார் கிருஷ்ணர். மனம் சோர்ந்தவனாக அர்ஜூனன் திரும்பினான். அர்ஜூனன் அழைத்தும் கிருஷ்ணர் வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்து விட்டாரே என்று அனைவரும் அடுத்த நாள் காலையில் பூஜையில் முக வாட்டத்துடன் இருந்தனர். வழக்கம் போல தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்த வந்த பீமன் அனைவரின் முகமும் வாட்டமாக இருப்பதைக் கண்டு ஏன் கவலையுடன் இருக்கிறீர்கள்? என்று கேட்டான். அப்பொழுது தருமர் கிருஷ்ணரை இன்று விருந்துக்கு அழைத்திருந்தோம். அவருக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்து விட்டார் என்றார். நான் போய் கிருஷ்ணரை அழைத்து வருகிறேன் என்றான் பீமன்.

அப்போது அர்ஜூனன் நான் போய் அழைத்து வர முடியாத கிருஷ்ணர் நீ கூப்பிட்டதும் வந்து விடுவாரா? என்று கிண்டல் செய்தான். பீமன் தனது கதையை (தண்டாயுதம்) தூக்கிக் கொண்டு புறப்பட்டான். போகும் போது பாஞ்சாலி நீ விருந்து தயார் செய். கிருஷ்ணனுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை என்று கூறிவிட்டுச் சென்றான். சிறிது தூரம் போனபின் தன் கதையை வானத்தை நோக்கி வீசி எறிந்தான். கிருஷ்ணா என்னுடைய பக்தி உண்மையாக இருந்தால் நீ விருந்துக்கு வர வரவேண்டும். வராவிட்டால் நான் வீசிய கதை என் தலைமேல் விழுந்து நான் என் உயிரை விடுவேன் என்று உரக்கக் கத்தினான். உடனடியாக கிருஷ்ணர் தோன்றி பீமனின் தலைக்கு மேலாக வந்து கொண்டிருந்த கதையை சட்டென்று பிடித்துக் கொண்டார். பீமனின் பக்தி அழைப்பினை ஏற்று அவனோடு விருந்திற்கு வர சம்மதித்தார். பீமனோடு கிருஷ்ணர் வருவதைக் கண்டதும் கேலி செய்தவர்கள் தலை குனிந்தனர்.

பீமனின் பக்திதான் சிறந்தது என்று நிரூபணம் ஆனது. பீமன் தனது பக்தியை தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை என்பதை உணர்ந்தான் அர்ஜூனன். தினமும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாத போதிலும் பீமனின் மனம் தூய்மையாகவும் தன்னலம் அற்றதாகவும் பக்தியுடனும் இருந்தது.

சிவ வடிவம் – 37. இலகுளேஸ்வரமூர்த்தி

நம்முடைய உலகம் இருக்கும் அண்டத்தைப் போலவே கோடிக்கணக்கான அண்டங்கள் அளவிட முடியாதபடி பரந்து விரிந்துள்ள ஆகாயத்தில் உள்ளன. அதில் நடுநாயகமான சிவபெருமான் வீற்றிருக்கிறார். அவரது திருமேனியைக் காண கண்கள் ஒளியிழக்கின்றன. அவ்வாறான ஒளிவெள்ளத்தின் நடுவே அவர் வீற்றிருக்கும் இடத்தின் விரிவு அநேக கோடி யோசனை தூரமாகும். சிவபெருமானின் வலப்புறம் மழுவும் சூலமும் இடப்புறமாக கலசமும் கொண்டு இவ்வுலகிலுள்ள உயிரினங்களின் மும்மலங்களைப் போக்கி நல்கதியை அருளும் நல் ஞானாசிரியனாக அவர் வீற்றிருக்கிறார். இத்தகைய பெருமையுடன் ஒவ்வொரு அண்டத்திலும் ஒருவராக எழுந்தருளி அங்குள்ள உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கொடுத்து அருளாட்சி செய்யக் கூடிய மூர்த்தியே இலகுளேஸ்வர மூர்த்தியாகும்.

இவரை தாராசுரம் அருகேயுள்ள சத்திமுற்றம் என்ற ஊரில் சிவக்கொழுந்தீசர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இறைவி பெயர் பெரிய நாயகி ஆவார். இவ்வடிவைப் பற்றி காஞ்சி புராணம் விரிவாக கூறுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 600

கேள்வி: அய்யனே திருவண்ணாமலை திருத்தலத்தில் நடக்கும் மகேஷ்வர பூஜையின் ரகசியத்தையும் அதன் மேனலான பலன்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்க வேண்டுகின்றோம்?

எதை என்று அறிய அறிய நிச்சயம் அண்ணாமலையில் (திருவண்ணாமலையில்) செய்யும் உதவிகள் நிச்சயம் பல ரிஷிகளும் சித்தர்களும் தேவர்களும் வந்து உட்கொள்வார்கள். அண்ணாமலையில் (திருவண்ணாமலையில்) செய்த புண்ணியம் பின் இமயமலையில் எதிரொலிக்குமாம். இதனை பற்றி தீவிரமாக நிச்சயம் எடுத்துரைப்பேன் பொறுத்திருந்தால்.

சிவபெருமான்

சிவபெருமான் தனது இடது காலை தூக்கி நடனமாடியபடி கைகளில் உள்ள சங்கை ஒரு கிண்ணம் போல் பிடித்து அதிலிருக்கும் ஆலகால விஷத்தை குடிப்பது போல் உள்ளது. பிறை நிலவு மற்றும் சிவனின் தலைமுடியில் இருந்து கங்கை நீரை வெளியேற்றுவது மற்றும் சிவனின் தலையை சுற்றி மஹாகாளத்துடன் கூடிய அழகான சிரச்சக்கரம் இந்த சிற்பத்தில் உள்ளது. இச்சிற்பம் கறுப்பு சலவைக் கல்லால் செய்யப்பட்டுள்ளது. இடம் பீகார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 599

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இந்த உலகில் உள்ள அனைவருமே இறைவனின் பிள்ளைகள். அதில் ஒரு பிள்ளைக்கு அதிக செல்வத்தை கொடுத்ததன் காரணம் வாடுபவனுக்கு கொடுத்து உதவுகிறானா? என்று சோதிக்கத்தான். தர்மத்தை செய்து கொண்டே இருங்கள். அது புண்ணியவழி என்ற எண்ணம் இல்லாமல் செய்ய வேண்டும். யாருக்கெல்லாம் தேவையோ அவர்களுக்கு எல்லாம் நேரிய வழியில் பொருள் ஈட்டி தந்து கொண்டே செல்லுங்கள். செல்வம் உங்கள் பின்னால் வரும். இதனை சோதனை மார்க்கமாக கூட செய்யலாம். ஏனென்றால் ஒவ்வொரு யுகத்திலும் செல்வந்தர்கள் குறைவு. வறுமையாளர்கள் அதிகம். கொடுத்து கொடுத்து வறுமை அடையும் விதி இருந்தாலும் பாதகம் இல்லை. கொடுத்ததினால் ஒரு வறுமை நிலை வந்தால் அதுதான் அந்த உலகத்திலேயே உச்சகட்ட வளமை. அவன்தான் இறைவனுக்கு பக்கத்தில் இருக்கிறான் என்பது பொருளாகும். எனவே இந்த கருத்தை மனதில் வைத்து இனி வருகின்ற ஒவ்வொரு கணத்திலும் தேடித்தேடி தர்மம் செய்வதை ஒரு லட்சியமாக கொண்டு விட்டால் அவர்களுக்கு எம்ஆசி என்றும் தொடரும். ஆசிகள் சுபம்.

சிவ வடிவம் – 36. காமதகனமூர்த்தி

பார்வதி தேவியார் பர்வத மன்னனின் மகளாகி இமயமலையில் சிவபெருமானையே கணவனாக எண்ணி தவத்தில் இருந்தார். இங்கு சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு யோக முறையை விளக்கி தட்சணாமூர்த்தி நிலையிலேயே இருந்தார். அவரால் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுமே யோக நிலையில் இருந்தன. இதனால் உலக இயக்கம் நின்றது. நான்முகனின் படைப்புத் தொழிலும் நின்றது. தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் துயரப்பட்டனர். இதனால் கலக்கமுற்ற தேவர்கள் சிவபெருமானை பார்க்க அனுமதிக்குமாறு நந்திதேவனை வேண்டினர். நந்திதேவன் மறுத்திடவே அனைவரும் சிவ தியானத்தில் ஈடுபட்டனர். உடன் இந்திரன் கனவில் சிவபெருமான் தோன்றி பார்வதியை திருமணம் செய்வோம். எங்கள் மகனால் தேவர்களின் துயரம் தீரும் என்றுரைத்தார். பின்னர் இந்திரன் அனைத்து தேவர்களுடன் சென்று பிரம்மாவிடம் ஆலோசனை கேட்டார்கள். அதற்கு பிரம்மா மன்மதன் சிவபெருமான் மீது பாணம் விட்டால் அவரது யோகம் கலையும். உலகம் முன்போலவே இயங்கும் என்று ஆலோசனைக் கூறினார். அனைவரும் மன்மதனிடம் சிவபெருமானின் மீது பாணம் விடுமாறு கோரிக்கை வைத்தாரகள். அதற்கு மன்மதன் பாணம் விட மறுத்தார். இறுதியில் உலக நன்மைக்காக பாணம் விட சம்மதித்தார். யோக நிலையிலுள்ள சிவபெருமானிடம் மன்மதன் சென்றார்.

சிவபெருமானின் மீது மன்மதன் பாணம் விட சிவபெருமானின் யோகம் கலைந்தது. அதனால் கோபப்பட்ட அவர் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தார். பின்னர் பர்வத மலைக்கு சென்று பார்வதிதேவியை மணம் புரிந்தார். இந்த நிலையில் மன்மதனின் மனைவி ரதி தன் கணவனைத் திரும்ப தரும்படி சிவபெருமானிடம் வேண்டினார். ரதியின் கண்களுக்கு உருவமாகவும் மற்றோர்க்கு அரூபமாகவும் இருக்கும்படி ஒரு நிபந்தனையுடன் மன்மதனை சிவபெருமான் உயிர்பித்தார். மன்மதனை எரித்ததால் சிவபெருமானுக்கு காம தகன மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.

உத்திர காமிகாமம் சுப்பிரபோத ஆகமம் பூர்வ காரணாகமம் ஆகிய ஆகமங்கள் இவ்வுருவத்தை விளக்கியுள்ளன. சிவனுக்கு மூன்று கண்களும் நான்கு கைகளும் கையில் நாகம் அகமாலை கடகக் குறிப்பு சூசிக் குறிப்பு ஆகியவை உள்ளது. சிவபெருமான் யோக மூர்த்தியாக இடக் காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். பின்னால் உள்ள இரு கைகளிலும் மானும் மழுவும் ஏந்தி முன் வலது கையில் காக்கும் குறிப்புடனும் முன் இடக்கையை முழங்கால் வரை நீட்டி வைத்தவாறு அமர்ந்திருக்கிறார். அவரை சுற்றி சனகாதி முனிவர்கள் வணங்கிக் கொண்டு நிற்கின்றனர். அம்பிகை அருகில் இருக்கிறாள். காமனின் உயரம் சிவபெருமானின் உருவத்தில் பத்தில் எழு பங்காக இருக்கிறது. அழகிய அணிகலன்களை அழிந்த காமன் பொன்னிறமாக இருக்கிறான். அவனது கையில் கரும்பு வில்லும் ஐந்து வகை பூக்களால் ஆன மலர் அம்புகளும் இருக்கும். மன்மதனின் அருகில் ரதி தேவபாகா வசந்தா ஆகிய மூவரும் இருப்பார்கள்.

திருமுறைகளில் காமதகனமூர்த்தி பற்றி பாடப்பட்டுள்ளன. காஞ்சியில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் காம தகன மூர்த்தியின் சிற்பம் உள்ளது. பல சிவாலயங்களில் சுதை சிற்பமாகவும் ஓவியங்களாகவும் உள்ளன. மாயமவரம் அருகே உள்ள குறுக்கையில் காமதகனமூர்த்தி உள்ளார்.