33. அட்டமாசித்தி உபதேசித்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் அட்டமாசித்தி உபதேசித்த படலம் முப்பத்தி மூன்றாவது படலமாகும்.

இறைவனான சிவபெருமான் கயிலாயத்தில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது உமையம்மை அவர் பக்கத்திலேயே அமர்ந்து இறைவனாருக்கு வெற்றிலைச் சுருளை மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது இறைவனார் சிவகணங்களுக்கும் பெருந்தவ முனிவர்களுக்கும் போக மூர்த்தியாய் அமர்ந்து சிவ கதையினை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திகைப் பெண்கள் அறுவரும் கயிலாய மலைக்கு வந்தனர். இறைவனாரிடம் எம்பெருமானே தாங்கள் எங்களுக்கு அட்டமா சித்தியை உபதேசித்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். கார்த்திகைப் பெண்களின் வேண்டுதலைக் கேட்ட இறைவனார் உமையம்மைச் சுட்டிக் காட்டி உலகத்தின் அன்னையான இவ்வம்மை தன்னுடைய பூரணத் தன்மையால் உலகெங்கும் பராசக்தியாகவும் மகேஸ்வரியாகவும் எங்கும் நிறைந்திருக்கிறாள். அட்டாமா சித்திகள் இவளைப் பணிந்து வழிபட்டு பணிவிடைகள் செய்யுங்கள். நீங்கள் இவ்வம்மையை வழிபட வழிபட அட்டமா சித்திகளை இவள் உங்களுக்கு அருளுவாள் என்று சொல்லி அட்டமா சித்திகள் பெரும் வழியை சொல்லிக் கொண்டிருந்தார். இறைவன் சொல்வதை அவர்கள் கவனக் குறைவாக கேட்டுக் கொண்டிருப்பதை இருப்பதை இறைவன் கண்டு கொண்டார். இந்த கவனக் குறைவால் ஏற்பட்ட வினையால் கார்த்திகைப் பெண்கள் உமையம்மையை வழிபட மறந்தார்கள். இதனைக் கண்ட இறைவனார் நீங்கள் கவனக்குறைவாக இருந்ததாலும் உமையம்மையை அலட்சியப்படுத்தியதாலும் பட்டமங்கை என்னும் தலத்தில் கற்பாறைகளாகக் கிடக்கப் பெறுவீர்கள் என்று சாபம் அளித்தார். இதனைக் கேட்டதும் கார்த்திகைப் பெண்கள் தங்களின் சாபம் எவ்வாறு நீங்கும் என்று இறைவனாரை கேட்டுக் கொண்டார்கள். அதற்கு அவர் ஆயிரம் ஆண்டுகள் கழித்து யாம் மதுரையிலிருந்து வந்து உங்களுக்கு சாபம் நீக்கி அட்டமா சித்தியை உபதேசிக்கிறேன் என்று கூறினார்.

கார்த்திகைப் பெண்கள் பட்டமங்கலம் என்னும் தலத்தில் கற்பாறைகளாகக் கிடந்தார்கள். இந்த ஆயிரம் வருடத்தில் கற்பாறைகளாக கிடந்த கார்த்திகைப் பெண்கள் உமையம்மையை முறைப்படி தியானித்து வழிபட்டு அட்டமா சித்திகள் அடையும் தகுதி பெற்றார்கள். ஆயிரம் வருடங்கள் கழித்து சொக்கநாதர் ஞானாசிரியராக வடிவம் கொண்டு பட்டமங்கலத்திற்கு வந்தார். இறைவனாரின் கடைக்கண் பார்வை பட்டதும் கற்பாறைகள் கார்த்திகைப் பெண்களாக மாறினார்கள். இறைவனார் அப்பெண்களின் தலைமீது தன்னுடைய கையினை வைத்து அணிமா மகிமா இலகிமா கரிமா பிராப்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் ஆகியஅட்டாமா சித்தியை உபதேசித்தார். பின்னர் திருகையிலாய மலையை அடைந்து சிவப்பேறு பெற்றனர்.

  1. அணிமா என்பது மிகச்சிறிய உயிரினத்திலும் சிறுமையாகச் சென்று தங்குவது அணிமா ஆகும்.
  2. மண் முதல் சிவதத்துவம் வரையிலான முப்பத்தாறு தத்துவங்களிலும் உள்ளும் புறமும் நீங்காமல் நிறைந்திருப்பது மகிமா ஆகும்.
  3. மேருமலையைப் போல கனத்திருக்கும் யோகி இலேசான பரமாணுவைப் போல் கனமற்று இருப்பது இலகிமா ஆகும்.
  4. லேசான பரமாணுவைப் போல் மெலிந்திருக்கும் யோகி மேருமலையின் பாரம் போல் கனப்பது கரிமா ஆகும்.
  5. பாதாளத்தில் இருக்கும் ஒருவன் நினைத்த மாத்திரத்தில் பிரம்மலோகம் சென்று மீண்டும் பாதாளத்தை அடைவது பிராத்தி ஆகும்.
  6. வேறு உடலிற் புகுதலும் விண்ணில் சஞ்சரித்தலும் தான் விரும்பிய இன்பங்கள் அனைத்தையும் தான் இருக்கும் இடத்திற்கு வரவழைத்தல் பிராகமியம் ஆகும்.
  7. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் தம் இச்சைப்படி இயற்றி சூரியன் முதல் ஒன்பது கோள்களும் ஏவல் கேட்க வீற்றிருப்பது ஈசத்துவம் ஆகும்.
  8. எல்லாவகை உயிர்களையும் இந்திரன் உள்ளிட்ட திக்பாலர்களையும் தன் வசமாகக் கொள்வது வசித்துவம் ஆகும்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

எதிலும் கவனக்குறைவாக இருப்பதும் அலட்சியமாக இருப்பதும் கேட்டை விளைவிக்கும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 454

கேள்வி: செய்வினை பில்லி சூனியம் சாத்தியமானதா?

இறைவன் அருளால் எப்படி மனிதர்கள் விஞ்ஞானத்தை வைத்து தவறான செயல்களை செய்ய கற்றுக் கொள்கிறார்களோ அதைப்போல மந்திரங்களை வைத்துக் கொண்டு கெடுதி செய்யவும் மனிதன் கற்றுக் கொண்டிருக்கிறான். இவையனைத்தும் சாத்தியமே. ஆனால் இவைகளில் உள்ள நுட்பத்தை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் செய்வினைதான் என்று அச்சப்பட தேவையில்லை. இன்னொன்று செய்வினையால் ஒரு மனிதன் பாதிக்கப்பட வேண்டுமென்றால் அதுவும் ஜாதகப்படிதான் நடக்கும். அடுத்ததாக இதைப்பற்றி அறிந்த மனிதர்கள் இந்த ஆற்றல் பெற்ற மனிதர்கள் மிகக் குறைவு. மற்றபடி தெரிந்ததாகக் கூறி தனம் பறிக்கும் மனிதர்களே அதிகம். எனவே இது குறித்து மனிதன் குழப்பம் அடைய வேண்டாம். ஆலயம் சென்று வழிபாடு செய்வதும் தர்மங்களை செய்வதும் சித்தர்களிடம் வந்தால் மீண்டும் மீண்டும் தர்மத்தைதானே கூறுகிறார்கள் என்று மனிதன் சலிப்படையலாம். மனிதர்கள் எத்தனைதான் சலிப்படைந்தாலும் விரக்தியடைந்தாலும் யாங்கள் மீண்டும் மீண்டும் எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும் எல்லா உயிர்களுக்கும் நல்லதும் வேண்டிய உதவிகளும் செய்ய வேண்டும் தர்மத்தை செய்ய வேண்டும் புண்ணியத்தை சேர்க்க வேண்டும் என்றுதான் கூறுவோம். இப்படி செய்து கொண்டே இருந்தால் எந்த செய்வினையும் யாரையும் பாதிக்காது.

32. வளையல் விற்ற படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வளையல் விற்ற படலம் முப்பத்தியிரண்டாவது படலமாகும்.

முன்னொரு காலத்தில் தாருகாவனத்தில் இருந்த முனிவர்களின் மனைவியர்கள் தங்களைப் போன்று அழகிலும் கற்பிலும் சிறந்த பெண்கள் வேறு எங்கும் இல்லை என்று கர்வம் கொண்டிருந்திருந்தார்கள். இறைவனான சிவபெருமான் அவர்களின் கர்வத்தை அடக்க எண்ணினார். எனவே அவர் பிட்சாடனார் வடிவம் கொண்டு அழகில் மன்மதனைப் போல கையில் பிட்சைப் பாத்திரம் ஏந்தி தாருகாவனத்திற்குச் சென்றார். தாருகாவனத்து முனிவர்களின் மனைவியர்கள் பிட்சாடனாரின் அழகில் மயங்கி செய்வதறியாது மயக்கத்தில் அவரைத் தொட வேண்டுமென்று அவரின் அருகில் சென்றார்கள். ஆனால் சிவபெருமான் அவர்களின் கைக்கு எட்டாமல் எட்டி எட்டிப் போனார்.  தவசியே நில்லுங்கள் நில்லுங்கள் எனக் கூவியபடி சிலர் பின் தொடர்ந்தார்கள்.  சிலர் பிட்சையாக பால் நெய் தயிர் தேன் சர்க்கரை என்று கொடுக்க சென்றார்கள். பிட்சாடனார் தாருகாவனத்தை விட்டுச் சென்ற பின்னும் பெண்கள் மதி மயக்கத்திலிருந்தனர். தாருகாவனத்து முனிவர்கள் தங்கள் மனைவியர்களின் செயல்களைக் கண்டு ஆச்சரியமடைந்து மயக்கத்திற்கான காரணத்தை தங்களின் தவ வலிமையால் கண்டறிந்தார்கள். பெண்களின் இந்நிலைக்கு காரணம் மதுரை சொக்கநாதர் என்பதை அறிந்த அவர்கள் அப்பெண்களை மதுரையில் அழகு வாய்ந்த வணிக மகளிர்களாய் பிறக்குமாறு சாபம் அளித்தனர். அப்பெண்கள் தங்களின் சாபம் எவ்வாறு விலகும் என்று முனிவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள் யாருடைய ஸ்பரிசத்துக்காக அலைந்தீர்களோ அந்த சொக்கநாதர் வளையல் வியாபாரியாக வந்து உங்களுக்கு வளையல்கள் அணிவித்ததும் நீங்கும் என்று கூறினர். தாருகாவனத்து முனிவர்களின் சாபத்தினால் அவர்களுடைய மனைவியர்கள் மதுரையில் வணிகப் பெண்களாக அவதரித்தனர். அவர்கள் வளர்ந்து பேரழகுடன் மணப் பருவம் எய்தினர்.

ஒரு நாள் சொக்கநாதர் வளையல் வியாபாரியாக பட்டு நூலில் வளையல்களைக் கோர்த்துக் கொண்டு வணிக வீதிக்கு எழுந்தருளினார். வளையல் வாங்குங்கள் வளையல் வாங்குங்கள் என்று வளையல் வியாபாரி கூறினார். வளையல் வியாபாரின் குரலால் ஈர்க்கப்பட்ட வணிகப் பெண்கள் வீதிக்கு வந்தனர். வளையல் வியாபாரியின் மேல் ஈர்ப்பு கொண்டு அவரிடம் தங்களுக்கு வளையல்கள் அணிவிக்கும்படி கூறினார்கள். வளையல் வியாபாரியாக வந்த சொக்கநாதர் அவர்களுக்கு வளையல்களை அணிவித்தார். வணிகப் பெண்கள் வளையல்களை உடைத்துவிட்டு மீண்டும் வளையல்களை அணிவிக்க வியாபாரியைக் கேட்டுக் கொண்டார்கள். சொக்கநாதரும் அவர்களுக்கு வளையல்களை அணிவித்தார். வணிகப் பெண்கள் தாங்கள் அணிந்து கொண்ட வளையல்களுக்கு உரிய விலையைப் பெற்றுச் செல்லுமாறு கூறினர். அதற்கு இறைவனார் நாளைப் பெற்றுக் கொள்வதாகக் கூறி திருக்கோவிலுக்குள் சென்று சிவலிங்கத்துள் மறைந்தருளினார். வளையல் வியாபாரியின் பின் சென்ற பெண்கள் நடந்தவற்றைக் கண்டு அதிசயித்தனர். தங்களின் சாபம் நீங்கப் பெற்று மதுரையில் நீண்ட நாட்கள் வசித்து பேறு பெற்றார்கள். இன்றைக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வளையல் விற்கும் திருவிழா மிகவும் பிரசித்தமானது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

கர்வம் தண்டனையைப் பெற்றுத் தரும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 453

கேள்வி: எலுமிச்சையை வேலின் மீது குத்துவது நல்லதா?

வேலை எடுத்து மனிதன் மீது குத்தலாம் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது. இறைவனின் அருளாலே கூறவருவது என்னவென்றால் அரசக்கனி எனப்படும் எலுமிச்சம் பழத்தின் ஆற்றல் எத்தனையோ இருக்கிறது. இறைவனை பூஜை செய்யும் பொழுது கனி வகைகளில் புஷ்பங்களில் பதார்த்தங்களில் அரசக்கனி அவசியம் வைக்கப்பட வேண்டும். இறைவனுக்கு பரிபூரண பூஜையை செய்யும் பொழுது ஏராளமான அரசக்கனியை இறைவன் திருவடிகளில் வைத்து ஆரமாக கோர்த்து இறைவனுக்கு அணிவிப்பதும் நல்லதொரு பலனைத் தரும். அதோடு மட்டுமல்லாமல் இல்லத்தில் தோஷம் வாஸ்து குறைபாடு அதர்வண குற்றம் செய்வினை தோஷம் பிரச்சினை சண்டை மனஸ்தாபம் உடல் பிணி என்றெல்லாம் மனிதன் வருந்துகிறானே? இவர்கள் அதிக அளவு அரசக்கனியால் இறைவனை ஆராதனை செய்து எத்தனை கனிகள் கொண்டு இறைவனை வணங்குகிறானோ அதில் பாதி கனிகளை இறைவனின் திருவடியில் வைத்துவிட்டு மீதி கனிகளை இல்லத்தில் வைத்து தூப தீபங்கள் காட்டி வழிபாடு செய்தால் மேற்கூறிய தோஷங்கள் குறையும். அந்தளவில் அரசக்கனியை ஏற்றுக்கொள்ளலாம். எங்கு சென்றாலும் பூஜை செய்து அருகம்புல் எடுத்து செல்வது போல அரசக்கனியையும் உடன் எடுத்து செல்வது ஆக்கபூர்வமான ஒரு பாதுகாப்பு வளையத்தை தரும். எனவே அதிக இறையாற்றலை பெற்றுத் தரக்கூடிய கனிகளில் அரசக்கனியும் ஒன்று.

அரசக்கனி வைத்திருந்தால் நல்ல பலன்கள் உடன் நடக்க வாய்ப்பிருக்கிறது. அரசக்கனியை வலது உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டு அதிக அளவு மந்திர ஜபத்தை உருவேற்றினால் அந்த அரசக்கனியினால் மனிதனுக்கு நற்பலன்கள் ஏற்படும். அதைப்போல இறைவனின் பிரசாதமான அரசக்கனியை காய்ந்த பிறகு தூக்கி எறிவதா? அல்லது அதனை உட்கொள்ளலாமா? என்றால் கனிச்சாறாக தாராளமாக உட்கொள்ளலாம். தவறொன்றுமில்லை. சில அரசக்கனிகளை மட்டும் பூஜைக்கு வைத்துக் கொள்ளலாம். எனவே இந்த அடிப்படையில் அரசக்கனியை ஆதரிக்கிறோம் வேறு அடிப்படையில் அல்ல.

31. உலவாக்கிழி அருளிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உலவாக்கிழி அருளிய படலம் முப்பத்தி ஒன்றாவது படலமாகும்.

குலபூஷண பாண்டியன் சிவபக்தியில் சிறந்தவனாக இருந்தான். தன்நாட்டு மக்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தான். இதனால் அவனுக்கு தன்னை விடச் சிறந்தவன் யாரும் இல்லை என்ற அகந்தை உருவானது. இதனால் இறைவனார் குலபூஷண பாண்டியனின் அகந்தை அளித்து அவனுக்கு நற்கதி அளிக்க எண்ணினார். குலபூஷண பாண்டியனின் அகந்தை காரணமாக மதுரையில் மழை பொய்த்தது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் சரிவர விளைச்சலைத் தரவில்லை. இதனால் மதுரை மக்களுக்கு உணவு தட்டுப்பாடு வந்தது. மக்களை பசித்துயர் வாட்டியது. இதனைக் கண்ட குலபூஷண பாண்டியன் திருக்கோவிலை அடைந்து இறைவனிடம் நான் தவறாது சிவவழிபாட்டினை மேற்கொண்டு வருகிறேன். மக்களையும் நல்ல முறையில் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறேன். ஆனால் மதுரையில் மழை பொழிவு குறைந்ததால் பயிர்கள் சரிவர விளையவில்லை. மக்கள் பசியால் வருந்துகின்றனர். படைகளை அழைத்து வருகிறேன் என்று சுந்தர சாமந்தன் கஜானாவில் இருந்த பொன்னையும் கோவிலை புதுப்பிக்கவும் மக்களுக்கு சேவை செய்யவும் பயன் படுத்தி விட்டான். அரசின் பணம் அனைத்தும் உனக்காகவும் உன் அடியார்க்காகவும் தானே செலவழிந்திருக்கிறது. ஆகையால் தாங்கள் எங்களுக்கு நல்வழி காட்டுங்கள் என்று மனமுருக வேண்டினான். பின் அரண்மனையை அடைந்து பணிகளைக் கவனித்து இரவில் தூங்கச் சென்றான்.  தூக்கத்திலும் குலபூஷண பாண்டியன் இறைவனை வேண்டினான். அவனது கனவில் தோன்றிய இறைவனார் குலபூஷண பாண்டியா இதோ இந்த உலவாக்கிழியைப் (பொற்கிழி) பெற்றுக் கொள். இதிலிருந்து அள்ள அள்ளக் குறையாத பொற்காசுகளை எடுத்து மதுரை மக்களின் துயரினைப் போக்கு என்று அருளினார்.

குலபூஷண பாண்டியன் கண் விழித்துப் பார்த்தான். தன் கையில் உலவாக்கிழி (பொற்கிழி) இருப்பதைக் கண்டான். உலவாக்கிழியை பார்த்ததும் குலபூஷண பாண்டியனின் மனதில் சொக்கநாதர் நம்மீது இத்தனை கருனையுடன் இருக்கிறார். ஆனாலும் மிகவும் மழை இல்லாமல் போனதற்கான காரணம் மற்றும் மக்களுக்கு துயர் ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி ஏற்பட்டது. பின்னர் களைப்பில் மீண்டும் தூங்கினான். அப்போது அவன் கனவில் தோன்றி சொக்கநாதர் குலபூஷண பாண்டியா நீ என்னை காலம் தவறாமல் வழிபடுகிறாய். உன் மக்களை நன்கு பாதுகாக்கிறாய். ஆனால் உனக்கு உன்னைவிட சிறந்த பக்தன் உலகில் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அந்த அகந்தையே மதுரையில் மழை இல்லாமல் போனதற்கும் மக்களின் துயருக்கும் காரணம் ஆகும். உன்னுடைய அகந்தையால் உன்னுடைய மக்களும் துன்பமடைந்தனர் என்று கூறினார். குலபூஷண பாண்டியன் கண்விழித்து தன்னுடைய தவறிற்கான காரணத்தை அறிந்ததும் அவனுடைய அகந்தை அழிந்தது. உலவாக்கிழியில் இருந்த பொற்காசுகளை எல்லோருக்கும் வழங்கினான். பின்னர் மதுரையில் மழை பொழிந்து மக்களின் துயர் நீங்கியது. இறுதியில் குலபூஷண பாண்டியன் இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

அகந்தை எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும். அதனால் தானே சிறந்தவன் என்ற அகந்தை யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 452

கேள்வி: வீட்டில் குழலூதும் கிருஷ்ணன் ராதை பழனியாண்டி படங்களை வைத்து வணங்கலாமா?

யார் யாரோ படங்களை வைத்து வணங்குகிறார்களே அப்பனே அவற்றையெல்லாம் வணங்கும்போது வராத ஐயம் இவர்களை வைத்து வணங்கினால் ஏதோ அனாச்சாரம் வந்துவிடுமோ? என்று எண்ணுகிறார்களே? முதலில் இந்த பழக்கம் எதனால் ஏற்பட்டது தெரியுமா? மனிதர்களின் அச்சம் காரணமாக. ஆஞ்சனேயரை ஐயப்பனை வீட்டில் வைத்து வணங்காதே என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் இதில் வேறு உண்மை ஒன்று இருக்கிறது. கர்ப்பமான பெண்களின் மனோநிலை பதட்டமாகவும் மென்மையாகவும் இருக்கும். யாங்கள் கூறுவது உண்மையான பெண்களுக்கு. அந்த கர்ப்பமான பெண்களின் குழந்தையின் ஆரோக்யம் முக்கியம். வீட்டை சுற்றி சுகமான நறுமண சூழலும் சாத்வீக வாசகங்களும் சாத்வீக தெய்வ காட்சிகளும் இருந்தால் அந்தப் பெண்ணின் மனதில் பதிந்து குழந்தைக்கு ஆக்கபூர்வமான சிந்தனையைத் தரும். அதிபயங்கரமான காளி போன்ற ரூபங்களை வைத்தால் தேவையற்ற பயமும் அந்த பயத்தினால் சொப்பனமும் ஏற்படும். அது அந்தக் குழந்தையை பாதிக்கும். அந்த அடிப்படையில் பயங்கரமான தெய்வ ரூபங்களை வைக்காமல் இருந்தால் நல்லதே தவிர மற்றபடி இறைவனை எந்த வடிவத்தில் வணங்க எந்த மனிதனுக்கு பிடித்திருக்கிறதோ அந்த வடிவத்தை வீட்டில் வைத்து ஆத்மார்த்தமாக வணங்கலாம் தவறேதுமில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 451

கேள்வி: விநாயகருக்கு ஜாதிபத்திரி வைத்து வழிபட்டால் என்ன பலன்?

விநாயகருக்கும் ஜாதியா? இறைவனுக்கு உள்ளன்போடு எதை வைத்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வார் என்பதே உண்மை. இதைதான் அதைதான் வைக்கவேண்டும் என்றெல்லாம் இறைவன் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்வதில்லை. மனிதர்கள் எதை வைக்கிறார்கள்? என்பதைவிட எப்படி வைக்கிறார்கள்? என்பதைதான் இறைவன் பார்க்கிறார். எனவே எதை வைத்தாலும் உள்ளன்போடு வைப்பதே சிறப்பு. அருகம்புல் மருத்துவ குணம் கொண்டது. அருகம்புல்லை அருந்து உடலுக்கு நல்லது என்றால் கேட்கக் கூடிய மனோபாவம் இன்று ஓரளவு இருந்தாலும் எக்காலத்திலும் அப்படி எதுவும் இல்லை. அருகம்புல்லை உண்டால் நல்லது என்று கூறுவதைவிட அதை இறைவனின் பிரசாதமாக கொடுப்பது அக்காலத்தில் சிறப்பான முறையாக கையாளப்பட்டு வந்தது. நன்றாக கவனிக்க வேண்டும். இப்பொழுது அருகம்புல்லை மாலையாக இறைவனுக்கு சாற்றி கையில் தந்துவிடுகிறார்கள். அதுவும் பிரசாதம்தான். ஆனால் ஒரு காலத்திலே அருகம்புல்லை மாலையாக சாற்றுவதோடு தூய்மையான அருகம்புல்லை பணிவன்போடு மிகவும் பணிந்து போற்றி இறைவனின் பூஜைக்காகவும் எங்களின் நலத்திற்காகவும் உன்னை பறிக்கிறேன். மன்னித்துக்கொள் என்றெல்லாம் வேண்டி மூலிகை சாபத்தை நீக்கி அந்த மூலிகையை பறித்து வந்து அருகம்புல்லை கஷாயமாக்கி அதையும் விநாயகர் முன் வைத்து படைத்து அதை பிரசாதமாக தரும் வழக்கம் இருந்தது. இப்பொழுது அது இல்லை என்பதுதான் உண்மை.

துளசியை இறைவனுக்கு நிவேதனம் செய்வதும் மருத்துவ குணத்தின் காரணமாகத்தான். எனவே எப்படியாவது மனிதன் நலம் பெறவேண்டும். அவன் உடலும் உள்ளமும் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விதவிதமான வழிபாடுகளும் பிரசாதம் என்ற பெயரில் விதவிதமான பொருள்களும் வைக்கப்பட்டன. அதை அன்போடு வைத்தால் கட்டாயம் இறைவன் ஏற்றுக்கொண்டு சாதம் பிரசாதமாக மாறும்.

30. மெய் காட்டிட்ட படலம்

திருவிளையாடல் புராணம் 30. மெய் காட்டிட்ட படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மெய் காட்டிட்ட படலம் முப்பாதாவது படலமாகும்.

அனந்தகுண பாண்டியனின் மகனான குலபூஷண பாண்டியனின் ஆட்சியில் சுந்தர சாமந்தன் என்றொரு சேனாதிபதி இருந்தான். அவன் சொக்கநாதரிடமும் அவருடைய தொண்டர்களிடமும் நீங்காத பக்தி கொண்டு இருந்தான். அப்போது சேதிராயன் என்பவன் வேடுவர்களின் தலைவனாக இருந்தான். அவன் பல வெற்றிகளைக் கொண்ட செருக்கால் குலபூஷண பாண்டியனிடம் பகைமை கொண்டு பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க எண்ணினான். இந்த செய்தியை ஒற்றர்கள் மூலம் குலபூஷண பாண்டியன் அறிந்தான். தனது சேனாதிபதியான சுந்தர சாமந்தனிடம் நீ நமது நிதி அறையினைத் திறந்து வேண்டுமளவு பொருள்களை எடுத்துக் கொண்டு புதிதாக சேனைப் படைகளை திரண்ட வேண்டும் என்று கட்டளையிட்டான். சுந்தர சாமந்தனும் நிதி அறையினைத் திறந்து தனக்கு வேண்டுமளவு பொருட்களை எடுத்துக் கொண்டான். அப்பொருட்களைக் கொண்டு சிவபெருமானுக்கு திருக்கோவிலும் ஆயிரங்கால் மண்டபமும் கட்டினான். சிவனடியார்களுக்கு திருஅமுது செய்வித்து எஞ்சியவற்றை உண்டு ஆறு மாத காலம் வரை வாழ்ந்து வந்தான். இச்சேதியை ஒற்றர் மூலம் குலபூடண பாண்டியன் அறிந்தான். குலபூஷண பாண்டியன் சுந்தர சாமந்தனை உடனடியாக அரண்மனைக்கு வர உத்தரவிட்டான். சுந்தர சாமந்தன் வந்ததும் எவ்வளவு படை திரட்டி  இருக்கிறாய்? எனக் கேட்டான். அதற்கு சுந்தர சாமந்தன் மனதில் சொக்கநாதரைத் தியானித்தபடி போதுமான படை திரட்டி விட்டேன் என்று கூறினான். உடனே குலபூஷண பாண்டியன் நாளை சூரியன் மறையும் முன்பு சேனைப்படை வீரர்கள் அனைவரையும் மதுரைக்கு அழைத்து வரவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான்.

குலபூஷண பாண்டியனின் கட்டளையை கேட்ட சுந்தர சாமந்தன் அதற்கு சம்மதம் தெரிவித்தான். பின்னர் திருக்கோவிலை அடைந்து எம்பெருமானே அரசன் அளித்த நிதியினைக் கொண்டு சிவதொண்டு செய்துவிட்டேன். இனி எப்படி பெரும் சேனைகளை நாளை திரட்டிக் காண்பிப்பது? என்று பிரார்த்தனை செய்தான். அதற்கு இறைவனார் நாளைக்குச் சேனை வீரர்களோடு நாமும் வருவோம். நீ பாண்டியனின் அவைக்குச் சென்று என் வரவை எதிர்பார்ப்பாயாக என்று அசிரீரீயாக திருவாக்கு அருளினார். மறுநாள் சொக்கநாதர் தமது சிவகணங்களை வேல் ஏந்திய படை வீரர்களாகவும் தாமும் ஒருகுதிரை வீரனாகவும் உருவம் எடுத்துக் கொண்டார். தன்னுடைய இடப வாகனத்தை குதிரையாக்கி அதன்மேல் ஏறி தன் பரிவாரம் சூழ ஒற்றைச் சேவகராய் மதுரையை நோக்கி எழுந்தருளினார். சேனையின் வரவினைக் கண்ட சுந்தர சாமந்தன் குலபூஷண பாண்டியனின் முன்சென்று வணங்கி சேனைகளின் வரவு பற்றி தெரிவித்தான். குலபூஷண பாண்டியனும் மனம் மகிழ்ந்து அரண்மனை மேலிருந்து சேனைப் படைகளை பார்வையிட்டான். சுந்தர சாமந்தன் அணிவகுத்து நின்ற ஒவ்வொரு பகுதியினரையும் இறைவனாரின் அருளால் சுட்டிக் காட்டி அவர்கள் எந்த நாட்டினைச் சார்ந்தவர்கள் என்று வரிசையாக காட்டினான்.

குலபூஷண பாண்டியன் ஒற்றைச் சேவகராய் நின்ற சொக்கநாதாரைக் காட்டி அவர் யார்? என்று கேட்டான். அதற்கு சுந்தர சாமந்தன் வந்திருப்பது இறையனார் என்பதை அறிந்து அவரையே பார்த்துபடி அசையாமல் நின்றார். அப்போது அரசன் முன் ஒற்றன் ஒருவன் வந்து அரசே சேதிராயன் வேட்டைக்குச் சென்றபோது புலியால் அடித்து கொல்லப்பட்டு இறந்தான் என்று கூறினான். அதனைக் கேட்ட பாண்டியன் சுந்தர சாமந்தனுக்கு நிறைய பரிசுகளை வழங்கினான். நீ படைக்கு ஆள் சேர்த்த நேரம் போருக்கு அவசியமே இல்லாமல் ஆகி விட்டது. அதனால் படை வீரர்களுக்கு வேண்டியவற்றை கொடுத்து திருப்பி அனுப்பி விடு என்றார். சுந்தர சாமந்தன் படைவீரர்களைப் பார்த்து நீங்கள் செல்லுங்கள் என்று சொன்ன அடுத்த வினாடி படைகள் அனைத்தும் மறைந்தன. குலபூஷண பாண்டியன் திகைத்தான். சுந்தர சாமந்தனனை அழைத்துக் காரணம் கேட்க நடந்ததை ஒளிக்காமல் கூறினான் சுந்தர சாமந்தன். அதற்கு குலபூஷண பாண்டியன் உனக்கு மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதரே வந்து அருளினார் என்றால் எனக்கு அக்கடவுள் நீயே என்று கூறி அவனுக்கு பல சிறப்புகளைச் செய்தான். பின்னர் சிறிதும் மனக்கவலை ஏதும்மின்றி மதுரையை ஆண்டு வந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனார் தம்மை நம்பும் அடியவர்களுக்காகவும் சிவத்தொண்டு புரியும் அடியவர்களுக்காகவும் எந்த வேடத்திலும் வந்து எதனையும் செய்து அருள் புரிவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 450

கேள்வி: கந்தர் அனுபூதி வேல் மாறலின் சிறப்பு மற்றும் அதை பாராயணம் செய்யும் முறை:

இறைவனின் கருணையாலே நல்விதமாய் இன்னவன் கேட்ட இறை தொடர்பான ஸ்லோகங்கள் பதிகங்கள் மட்டுமல்லாமல் எந்த பதிகமாகவோ தேவாரமோ திருவாசகமோ ஆழ்வார்களின் பாடல்களோ மனம் ஒன்றி கண்ணில் நீர் மல்க நல்விதமாய் உள்ளம் உருகி வேறு சிந்தனைகள் இல்லாமல் ஓதினால் நற்பலன் உண்டு. இவற்றை ஓத ஓத கட்டாயம் முன்னர் கூறியதுபோல உலகியல் வாழ்வில் உள்ள எதிர்ப்புகளும் சிறிதளவுகூட பண்பாடு இல்லாத மனிதர்களின் தொடர்பால் மன உளைச்சல் ஏற்படுகிறதே? அதிலிருந்து மனிதன் வெளியே வரவேண்டுமென்றால் இன்னவன் கூறிய பதிகங்களை ஓதினால் நன்மை உண்டு.

29. மாயப் பசுவை வைத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மாயப் பசுவை வைத்த படலம் இருபத்தி ஒன்பதாவது படலமாகும்.

அனந்தகுணப் பாண்டியன் இறைவனான சொக்கநாதரின் அருளினால் சமணர்கள் உண்டாக்கிய நாகத்தினை அழித்து மதுரையைக் காத்தார். இதனை கண்ட சமணர்கள் எப்படியாவது சூழ்ச்சி செய்து மதுரையையும் சிவனடியாராகத் திகழ்ந்த அனந்தகுண பாண்டியனையும் அழிக்க எண்ணினர். பசுவானது சைவர்களுக்கு புனிதமானது. எனவே மாயப்பசுவை உருவாக்கி மதுரையை அழிக்க ஆணையிட்டால் அனந்தகுண பாண்டியன் புனிதத்தன்மையான பசுவினை எதிர்த்து போரிட மாட்டான். ஆகையால் அவனை எளிதில் வெற்றி கொள்ளலாம் என்று எண்ணினார்கள். எனவே அவர்கள் ஒன்றுகூடி மீண்டும் வேள்வி செய்யத் தொடங்கினர். வேள்வியின் இறுதியில் மாயப்பசு ஒன்று உருவானது. அவர்கள் மதுரையையும் அனந்தகுண பாண்டியனையும் அழிக்க மாயப் பசுவிற்கு ஆணையிட்டனர். மாயப்பசுவும் அவர்களின் ஆணையை ஏற்று மதுரையை நோக்கி விரைந்தது. வானளவிற்கு வளர்ந்திருந்த அப்பசு கண்ணில் பட்டவற்றை எல்லாம் அழிக்கத் தொடங்கியது. மாயப் பசுவின் செயல்களை மக்கள் அனந்தகுண பாண்டியனுக்குத் தெரிவித்தனர். இதனைக் கேட்டதும் அனந்தகுண பாண்டியன் திருகோவிலுக்குச் சென்று இறைவனான சொக்கநாதரிடம் முறையிட்டான். தன்னையும் தம்மக்களையும் காத்தருளும்படி வேண்டினான்.

சொக்கநாதர் அனந்தகுண பாண்டியனையும் மதுரை மக்களையும் காப்பாற்ற திருவுள்ளம் கொண்டார். அவர் நந்தியெம் பெருமானை அழைத்து நீ சென்று சமணர்கள் ஏவிய மாயப் பசுவினை வென்று வருவாயாக என்று கட்டளையிட்டார். நந்தியெம் பெருமானும் இறைவனின் ஆணைக் கேட்டதும் கண்களில் அனல் தெறிக்க மிகப்பெரிய காளை வடிவாகி மாயப் பசு இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தார். காளை வடிவில் இருந்த நந்தியெம் பெருமானுக்கும் மாயப் பசுவிற்கும் நெடுநேரம் சண்டை நடந்தது. இறுதியில் நந்தியெம் பெருமான் அழகிய காளையாக வடிவெடுத்தார். அழகிய காளையைக் கண்ட மாயப் பசு அதனுடைய அழகில் மயங்கியது. மாயப் பசு மோகத்தினால் சண்டையை மறந்தது. சண்டையில் களைப் படைந்திருந்த மாயப் பசு மோகம் அதிகரித்தால் தன்னிலை மறந்து மயங்கி விழுந்து மடிந்தது. மாயப்பசு வீழ்ந்த இடம் மலையாக மாறியது. அம்மலையானது இன்றும் மதுரையில் பசு மலை என்று அழைக்கப்படுகிறது. மாயப் பசு மடிந்ததைக் கண்ட அனந்தகுண பாண்டியனும் மதுரை மக்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். மாயப் பசுவினை வென்றதும் நந்தியெம் பெருமான் தன்னுடைய பூத உடலினை இடப மலையாக நிறுத்திவிட்டு சூட்சும உடலோடு திருக்கயிலாயத்தை அடைந்தார். இடப மலை என்பது இன்றைக்கு மதுரையில் அழகர்கோவில் மற்றும் பழமுதிர்ச்சோலை அமைந்திருக்கும் இடம் ஆகும்.

இராமர் சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லும் போது இடப மலையில் தங்கியிருந்தார். இதனை அறிந்த அகத்தியர் இராமரிடம் சென்று சொக்கநாதரின் பெருமைகளையும் இந்திரன் சாபத்தை அவர் போக்கி அருளியதையும் எடுத்துக் கூறினார். இராமர் சொக்கநாதரை வழிபட மதுரைக்கு வந்து பொற்றாமரைத் தீர்த்தத்தில் நீராடி சொக்கநாதரை பலவாறு துதித்து வழிபட்டார். சொக்கநாதர் இராமா நீ இலங்கை சென்று வைதேகியை மீட்டு வெற்றியுடன் திரும்பி வந்து உன் நாட்டிற்குச் சென்று சிறப்புடன் ஆட்சி செய்வாயாக. அச்சம் கொள்ள வேண்டாம் என்று திருவாய் மலர்ந்தருளினார். இராமர் இலங்கை சென்று இராவணனை வென்று மைதிலியுடன் வெற்றியுடன் இராமேஸ்வரத்தை அடைந்து சிவலிங்க வழிபாடு மேற்கொண்டு தன்னுடைய நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லும் போது மதுரை வந்து சீதையுடன் சொக்கநாதரை வழிபட்டு தன்நாட்டிற்குச் சென்றார். அனந்தகுண பாண்டியன் தன்மகனான குலபூடணிடம் தன்னுடைய ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து இறுதியில் சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தீவினைகள் எப்படி வந்தாலும் இறைவனை சரணடைந்தால் இறைவன் அதனை அழிப்பார் என்பதையும் மோகத்தில் (மோகம் என்றால் மாயையினால் நிகழும் மயக்க உணர்ச்சியில் மயங்கி தன்னிலை இழத்தல் ஆகும்) மயங்கினால் அழிவு நிச்சயம் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.