மூவுலகத்தையும் அளந்த வாமன அவதாரமெடுத்த பெருமான் மூன்றாவது அடியை எங்கு வைக்க எனக் கேட்க மகாபலிச்சர்க்கரவர்த்தி தனது தலையின் மேல் மூன்றாவது அடியை வைத்துக் கொள்ளச் சொன்ன காட்சி. இடம் திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில் மயிலாடுதுறை.

மூவுலகத்தையும் அளந்த வாமன அவதாரமெடுத்த பெருமான் மூன்றாவது அடியை எங்கு வைக்க எனக் கேட்க மகாபலிச்சர்க்கரவர்த்தி தனது தலையின் மேல் மூன்றாவது அடியை வைத்துக் கொள்ளச் சொன்ன காட்சி. இடம் திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில் மயிலாடுதுறை.

சிவபெருமானின் திருவடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவம் கல்லால மரம் என்று அழைக்கப்படும் ஆலமர நிழலில் தெற்கு நோக்கி அமர்ந்திருந்து சனகாதி முனிவர்களுக்கு கற்பிப்பதுடன் உலக மக்களுக்கும் கற்பிக்கிறார். மேலும் கின்னரர்களுக்கும் சிங்கம் புலி நச்சு பாம்புகள் முதலியவற்றிற்கும் கல்லால மர நிழலில் இருந்து கற்பிப்பதாக சுந்தரமூர்த்தி நாயனார் தனது தேவாரத்தில் பாடியிருக்கிறார். இவர் மௌனமாக வீற்றிருந்து பரமானந்தத்தை தனது உணர்வினால் தனது சீடர்களுக்கு அருளினார். தட்சணம் என்றால் தெற்கு திசை, ஞானம், சாமர்த்தியம் என பொருள் தருகிறது. த-அறிவு க்ஷ-தெளிவு ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரத்தின் பொருளாகும். தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். தெற்குத் திசை தீயவை அழிவதை குறிக்கிறது. மேலும் தட்சிணம் என்றால் பெறுதல் அல்லது பெற்று கொள்ளுதல் என்று பொருளாகும். அதாவது ஞானகடவுளாக அருளும் பரமகுரு தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை தட்சிணமாக வழங்குவதால் தட்சிணாமூர்த்தி என்று பெயர் ஏற்பட்டுள்ளது. வடக்கு திசை பெருவாழ்வை தருவதை குறிக்கிறது. இன்பமான வாழ்வை வேண்டி உயிர்கள் வடக்கு நோக்கி வழிபடுவதற்காகத்தான் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார் என்று ஞானிகள் அருளியிருக்கிறார்கள். தட்சிணாமூர்த்தி குருவுக்கும் மேலான குருவானவர்.
பிரம்மாவின் நான்கு புதல்வர்களான சனகன் சனந்தனன் சனாதனன் சனத்குமாரன் என்ற நான்கு முனிவர்களும் வேதாகமத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை படித்திருந்தனர். வேதங்களில் அவர்களுக்கு பல சந்தேகங்கள் வந்தது. இதனை சிவபெருமானிடம் கூறி தங்களுக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். இதற்கு சம்மதித்த சிவபெருமான் நந்திதேவரிடம் யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என்று கட்டளையிட்டார். சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் வேதத்தைப் பற்றி விளக்கி விரிவாகக் கூறினார். ஆனாலும் அவர்களுக்குள் மேலும் சந்தேகங்கள் வந்தது. கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இதனைக் கண்ட சிவபெருமான் தான் அமர்ந்த கோலத்தில் தன் கைகளை சின் முத்திரையை நால்வருக்கும் காட்டி அமர்ந்தார். இறைவனின் சின் முத்திரையை பார்த்ததும் நால்வருக்கும் இருந்த கேள்விகள் சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்தது. மனம் அமைதியடைந்து பேரின்பத்தில் ஆழ்ந்தார்கள். சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் சிவபெருமான் சின் முத்திரை காட்டி உபதேசித்து அவர்களுக்கு இருந்த சந்தேகங்கள் கேள்விகள் அனைத்தையும் தீர்த்த வடிவமே தட்சணாமூர்த்தி வடிவமாகும்.
இமயத்தில் ஆலமரத்தின் அடியில் அமர்ந்த கோலத்தில் புலித்தொழில் அமர்ந்த நிலையில் இருக்கும் இத்திருவருவத்தின் வலது கால் கீழே தொங்கிய நிலையிலும் இடது கால் மடிந்த நிலையில் இருக்கும். நான்கு கைகளில் முன்னுள்ள ஒரு கையில் ருத்ராட்ச மாலையும் மற்றோரு கையில் தீ அல்லது பாம்பும் இருக்கும். சில வடிவங்களில் புத்தகம் அல்லது தீ அல்லது பாம்பு இருக்கும். சடாமுடியில் எருக்கம்பூ பாம்பு சிறுமணி கபாலம் பிறை சந்திரன் கங்கை ஆகியன இருக்கும். இட காதில் சங்கபத்திரமும் வலது காதில் குண்டலமும் இருக்கும். கழுத்தில் ருத்ராட்ச மாலை இருக்கும். மிகவும் பழங்காலத்தில் தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் கீழிருந்து தெற்கே பார்த்துக் கொண்டிருப்பதாக அகநானூறு கலித்தொகை சிலப்பதிகாரப் பாடல்கள் சொல்கிறது. திருமுறைகளில் பல இடங்களில் தட்சிணாமூர்த்தியின் பெருமையை கூறப்பட்டுள்ளது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் பற்றி பல பாடல்களில் சிறப்பாக கூறியுள்ளார். திருமழிசை ஆழ்வாரும் பொய்கை ஆழ்வாரும் 4000 திவ்ய பிரபந்தத்தில் தட்சிணாமூர்த்தியின் பெருமைகளை கூறியுள்ளனர்.
ஞான தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தி வீணா தட்சிணாமூர்த்தி வியாக்கியான தட்சிணாமூர்த்தி வீர தட்சிணாமூர்த்தி லட்சுமி தட்சிணாமூர்த்தி ராஜ தட்சிணாமூர்த்தி பிரம்ம தட்சிணாமூர்த்தி சக்தி தட்சிணாமூர்த்தி அத்த தட்சிணாமூர்த்தி என ஆகமங்களிலும் சிற்ப நூல்களிலும் பல பெயர்கள் உள்ளது. இவற்றில் வியாக்கண தட்சிணாமூர்த்தி ஞான தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தி வீணா தட்சிணாமூர்த்தி ஆகிய வடிவங்களே கோவில்களில் காணப்படுகின்றன. இத்திருவுருவங்கள் தமிழ்நாட்டில் அனைத்து சிவன் கோயில்களிலும் உள்ளது. கருவறையின் வெளிப்பக்கம் உள்ள தெற்கு பக்கத்தில் அமர்ந்திருந்து அடியவர்களை தனது அருட்பார்வையால் அழைத்து சிவஞானத்தை தனது மௌன மொழியால் அருளுகிறார். அமெரிக்காவில் தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோவில் உண்டு. பென்சில் வேனியாவில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி உருவச்சிலை 1500 கிலோ எடையுடையது. இத்திருவரும் தொடர்பான பல கல்வெட்டுகள் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியறை எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் பிரதான நுழைவாயிலில் தட்சிணாமூர்த்தியை சுற்றி வலம் வரும் வகையில் தனியாக சந்நிதி அமைத்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கலத்தில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் உள்ளது.

நமது சங்க இலக்கியம் சொல்லும் வடிவோடு பொருந்தக் கூடிய முருகனின் சிற்பம் ஒடிசாவில் உள்ளது. கொற்றவை சிறுவ பழையோள் குழவி என திருமுருகாற்றுப்படையில் சொல்லப்பட்ட கொற்றவையின் மகனாக குறிப்பிடப்படும் வடிவம் ஒடிசாவில் உள்ளது. துர்க்கை என ஆகிவிட்ட கொற்றவை ஆதி குடிகளின் தெய்வமாய் திகழ்ந்து தற்போது துர்க்கை வடிவமாகி விட்டாள். அவளின் மைந்தன் முருகனும் அவ்வாறே. இந்த தொன்ம தொடர்ச்சி பழங்குடிகளின் பண்பாட்டில் இருப்பது சான்றாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இடம் சித்தேஷவர் கோவில். புவனேஷ்வர். ஒடிசா மாநிலம்.

திருசேய்ஞலூரில் வாழ்ந்து வந்த அந்தணன் யஜ்ஞதத்தன். அவன் மனைவி பத்திரை. இவர்களது மகன் விசாரசருமர். இவர் பிறக்கும் போதே முன் ஜென்ம புண்ய பலனாக நல்லறிவுடன் பிறந்தான். யாரிடமும் வேதம் பயிலாமல் தானே உணரும் அறிவைப் பெற்றிருந்தான். ஏழு வயதில் அவருக்கு உபநயனம் செய்தனர். எந்த ஆசிரியரிடமும் கற்காமல் தானே அனைத்தையும் உணர்ந்து வேதாகம சொற்படி வாழ்ந்து வந்தான். தம்மை வழி நடத்த உரியவர் சிவபெருமான் ஒருவரே என தீர்மானமாக நம்பியிருந்தான். ஊரில் உள்ளவர்களின் பசுவே மேய்க்கும் தொழிலை செய்து வந்த ஒரு அந்தண சிறுவன் பசுவை அடிப்பதைக் கண்டான் விசாரசருமர். உடனே பசு மேய்க்கும் வேலையை தானே செய்ய ஆரம்பித்தான். கோமாதாவின் அருமை பெருமைகளை உணர்ந்ததால் அத்தொழிலைச் சிறப்பாகச் செய்தான். சரியான முறையில் அவற்றை அன்புடன் பராமரித்தான். அதனால் அவை முன்பை விட அதிகளவில் பால் கொடுத்தது. மாடு மேய்க்கும் இடத்தில் உள்ள ஆற்றங்கரையின் அருகில் மணல் மேட்டில் உள்ள அத்தி மரத்தின் கீழே மணலால் ஒரு சிவலிங்கம் செய்து கோயில் கோபுரம் மதில் போன்றவற்றை மணலாலே அமைத்து சிவபெருமானுக்கு பூஜை செய்து பாலபிசேகம் செய்து வழிபட்டு வந்தார்.
விசாரசருமரின் தினசரி இது போல் பூஜைகள் செய்துவர இதனைக் பார்த்தவர்கள் பசுவின் பாலை வீணாக்குவதாக ஊர் பெரியவர்களிடம் முறையிட்டார்கள். ஊர் பெரியோர் விசாரசருமனின் தந்தையிடம் முறையிட்டனர். விசாரசருமரின் தந்தை இனி மேல் இது போல் நடைபெறாதவாறு தான் பார்த்துக் கொள்வதாக உறுதி கூறினார். மறுநாள் அதிகாலை விசாரசருமர் ஆற்றங்கரைக்கு சென்று வழக்கம் போல் சிவலிங்கத்திறகு பூஜித்து பாலபிஷேகம் செய்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட அவரது தந்தை விசாரசருமரை திட்டிக் கொண்டே அவரது முதுகில் ஓங்கி அடி வைத்தார். தந்தை வந்ததையோ தன்னை திட்டியதையோ அடியின் வலியையோ உணராமல் சிவ பூஜையிலேயே விசாரசருமர் ஈடுபட்டிருந்தார் இதனால் மேலும் அதிக கோபமுற்ற அவரது தந்தை பால் குடங்களை காலால் உதைத்துத் தள்ளினார். சிவ பூஜை தடைபடுவதைக் கண்டு சுயநினைவு வந்த விசாரசருமர் சிவபூஜையை தடுத்தது தன்னுடைய தந்தை என்பதையும் பார்க்காமல் அருகில் இருந்த ஒரு கொம்பை எடுத்தார். அது மழுவாக மாறியது. உடன் தந்தையாரின் காலை வெட்டினார். உடனே தம்பதி சமேதராய் சிவபெருமான் அங்கு காட்சிக் கொடுத்தார். என்னுடைய தொண்டர்கள் அனைவருக்கும் இன்று முதல் நீ தலைவன் ஆவாய் என்று எனக்கு செய்யப்படும் நிவேதனம் அனைத்தும் உனக்கே உரியதாகும் என்று சொல்லி தனது ஜடாமுடியில் இருந்த கொன்றை மலர் மாலையை விசாரசருமருக்கு சூட்டி அவருக்கு சண்டேச பதவியை அளித்தார். விசாரசருமருக்கு சண்டேச பதவியை அனுகிரகித்து வழங்கியதால் சிவபெருமானுக்கு சண்டேச அனுக்கிரக மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது. கும்பகோணம் சேய்ஞலூர் அருகிலுள்ள ஊர் திருவாய்ப்பாடியில் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

இரண்ய கசிபு என்னும் அசுரன் சிவபெருமானிடம் அளவில்லா பக்தி கொண்டவன். அவன் ஒரு முறை அசுர குருவான சுக்ராச்சாரியாரின் யோசனைப்படி சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான். தவத்தில் மெச்சிய சிவபெருமான் அவனுக்கு காட்சிக் கொடுத்து என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு அவன் ஐம்பூதங்களாலும் எந்த விதமான கருவிகளாலும் வானவர்கள் மனிதர்கள் பறவைகள் விலங்குகளாலும் இரவிலும் பகலிலும் வானத்திலும் நிலத்திலும் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் என மேற்சொன்ன எவற்றினாலும் நான் இறவாதிருக்க வேண்டும் என்று வரம் கேட்டான். அவனின் தவத்தின் பலனாக சிவனும் அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்து அருளினார். இரண்ய கசிபு தான் பெற்ற வரத்தினால் மூவுலகினரையும் அச்சுறுத்தினான். தேவகன்னிகளை விசிறி வீசவும் இந்திரன் நான்முகன் போன்றோர் தினசரி வந்து தன்னை வணங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றும் தன்னைத் தவிர மற்றவர்களை வணங்கக் கூடாது என்றும் ஆணையிட்டான். திருமாலை வெற்றி கொள்ள அவரை மூன்று லோகத்திலும் தேடிக் கொண்டிருந்தான். திருமாலோ அவனை அழிக்கும் காலம் வரும்வரையில் தனது மாயையினால் தன்னை மறைந்து நின்றார். அவனுக்கு பயந்து அனைவரும் இரண்யாய நமஹ என்று கூறினர்கள்.
இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதன் மட்டும் ஸ்ரீ நாராயணாய நமஹ என்றான். இதனால் ஆத்திரமடைந்த இரண்யன் பிரகலாதனுக்கு பலவித தொல்லைகளையும் கொலை முயற்சியும் செய்தான். அனைத்திலுமே நாராயணன் பிரகலாதனை காத்தருளினார். பிரகலாதன் சதாசர்வ காலமும் நாராயணனை பூஜிப்பதால் ஆத்திரம் அடைந்த இரண்யன் ஒருநாள் எங்கே இருக்கிறான் உன் நாராயணன்? என்றுக் கேட்டார். இதோ தூணில் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார் என்றான். இதோ இந்தத் தூணில் இருக்கிறாரா உன் நாராயணன் என்றபடியே தூணைப் பிளந்தான். பிளந்த தூணின் உள்ளிருந்து திருமால் நரசிம்ம அவதாரமெடுத்து தோன்றினார். பகலும் இல்லாமல் இரவும் இல்லாமல் சூரியன் மறையும் அந்தி நேரத்தில் மனிதனும் இல்லாமல் மிருகமும் அல்ல நரசிம்மமாகத் தோன்றி இரண்யனைக் கொன்றார். மேலும் நாராயண அவதாரமெடுத்த திருமால் அந்த நரசிம்ம ஆக்ரோசத்திலேயே இருந்தபடியால் இதனைக் கண்ட அனைவரும் பயந்தனர். அனைவரும் சிவனை பிரார்த்தனை செய்ய சிவபெருமான் இரு தலை இரு சிறகுகள் கூர்மையான நகம் எட்டுக் கால்கள் நீண்டவாலுடன் பேரிரைச்சலை உண்டு பண்ணியபடி சரப அவதாரம் எடுத்து நரசிம்மரை அணுகினார். இடிமுழக்கம் போல் கத்தியபடி நரசிம்மரின் மார்பின் மீது அமர்ந்தார். சிவனின் அருள் பட்டதும் நரசிம்மரிடம் இருந்த ஆக்ரோசம் தணிந்து சாந்தமடைந்தார். சிவபெருமானை வணங்கிய திருமால் வைகுண்டம் அடைந்தார். இரண்யகசிபுவைக் கொன்ற நரசிம்மரின் ஆக்ரோசத்தை அழிக்க சிவபெருமான் கொண்ட காலமே சிம்ஹக்ன மூர்த்தியாகும். இவருக்கு நடுக்கந்தீர்த்த பெருமான் சிம்மக்ன மூர்த்தி சிம்ஹாரி நரசிம்ம சம்ஹாரர் சரபேஸ்வரர் சரபர் என பல பெயர்கள் உள்ளது.
சரபேஸ்வர வடிவத்தின் திருமேனி பொன்னிறமுடைய பறவையை போன்றது. இதன் கைகள் இரண்டும் மேல் நோக்கி இருக்கின்றன. சிவந்த இரு கண்கள் உண்டு. எட்டு கால்கள் உண்டு. விலங்கின் வாலைப் போன்ற வாலுடன் மனிதரைப் போன்ற உடலையும் சிம்மத்தின் தலையையும் மகுடத்தையும் பக்கத் தந்தங்களையும் உடையதாகவும் தன் இரு கால்களால் நரசிம்மரை தூக்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் திரு உருவம் உள்ளது. இந்த வடிவத்தை ஆகாச பைரவர் என்று உத்தர காமியாகமம் கூறுகிறது. சரபேஸ்வரருக்கு சூரியன் சந்திரன் ஆகிய மூன்றும் முக்கண்களாய் உள்ளன. காளியும் துர்க்கையும் சரபேஸ்வரரின் இறக்கைகள் ஆகும். இவரின் இதயத்தில் பைரவரும் வயிற்றில் வடவாக்னியும் தலையில் கங்கையும் வீற்றிருக்க தொண்டையில் நரசிம்மர் இருப்பார் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. இவர் பெருமைகளை விளக்கும் நூல்கள் பலவும் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளன.
முதலாம் குலோத்துங்களின் மகன் விக்ரமசோழனின் காலத்தில்தான் (கிபி 1118 – 1135) முதன்முதலாக இவ்வடிவம் சிற்பமாக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இரண்டாம் இராஜராஜன் கட்டிய ஸ்ரீ ஐராவதேஸ்வரர் கோவிலில் ராஜகம்பீர மண்டபத்தில் உள்ள சரபேஸ்வரரின் திருவடியில் கூப்பிய கரங்களுடன் நரசிம்மர் காட்சி தருகிறார். 3 ஆம் குலோத்தங்களின் காலத்தில் கட்டப்பட்ட திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோவில் சரபேஸ்வருக்கு என தனியாக சன்னதி உண்டு. சென்னையில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலிலும் சென்னை வைத்தியநாதர் கோவிலிலும் சரபேஸ்வரின் திருவுருவங்கள் உண்டு. பெரியபாளையத்தில் உள்ள சிவாலயத்திலும் கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் ஆலயம் முன் மண்டபத் தூண்களிலும் சரபேஸ்வரரின் திரு உருவங்கள் அழகுடன் காணப்படுகின்றன. காரைக்குடி சிவன் கோவிலில் திருவாசியுடன் கூடிய சரபேஸ்வரமூர்த்தியின் செப்புத் திருவுருவம் உள்ளது. சோழிங்கநல்லூர் பிரத்யங்கிராதேவி ஆலயத்தில் சரபேஸ்வரரின் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சிதம்பரத்தில் இறைவன் எதிரேயும் வெள்ளீஸ்வரர் திருக்கோவிலிலும் சரபேஸ்வரரின் திருவுருவம் உள்ளது. இது தவிர பல சிவாலயங்களில் சரபேஸ்வரருக்கு தனி சிவாலய சந்ந்திகள் உள்ளது. காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் நகரில் லிங்க உருவத்தில் சரபேஸ்வரர் உள்ளார். வேறு எங்கும் இவ்வாறு லிங்க சரபேஸ்வர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரணம் இத்திருவும் பற்றி சிறப்பாக கூறுகிறது. திருமாளிகைத்தேவர் நம்பியாண்டார் நம்பி சிவப்பிரகாசர் ஆகியோர் இவரைப் பற்றி பாடல்கள் பாடியிருக்கிறார்கள். வியாசர் இந்த மூர்த்தியை பரிகாரம் இல்லாத துன்பத்திற்கும் பரிகாரம் இல்லாத நோய்களுக்கும் விஷ பயம் மற்றும் பூத பிரேத உபாதைகள் ஆகியவை நீங்க இவரை வணங்கலாம் என்று கூறுகிறார்.


மிருகண்டு ரிஷியும் அவரது மனைவி மருத்மதியும் சிறந்த சிவபக்தர்கள். சிவபெருமானிடம் ஆண் குழந்தை வேண்டும் என வேண்டி பிரார்த்தித்தார்கள். இறைவன் அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்து அவர்களுக்கு இரண்டு விருப்பங்களைக் கொடுத்தார். ஒன்று குறுகிய ஆயுளுடன் ஒரு புத்திசாலி மகனைப் பெறலாம் அல்லது குறைந்த புத்திசாலித்தனம் கொண்ட நீண்ட ஆயுளுடன் ஒரு மகனைப் பெறலாம். குறுகிய ஆயுளாக இருந்தாலும் புத்திசாலி மகன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளின்படி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டார்கள். அவனுக்கு 12 வயது வரை ஆயுள் இருந்தது. மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடன் இருந்தான். அவன் 12 வயதை எட்டியபோது யம தூதர்கள் மார்க்கண்டேயனை அழைத்துச் செல்ல வந்தார்கள். அவன் மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை தீவிர பக்தியுடன் உச்சரித்துக் கொண்டிருந்தான். இதனால் அவனது உயிரை தூதர்களால் எடுக்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த யமன் நேரில் வந்து மார்க்கண்டேயனைச் சுற்றி தனது கயிற்றை வீசினார். அந்த கயிறு சிவலிங்கத்தைச் சுற்றி விழுந்து மார்க்கண்டேயனோடு சிவலிங்கமும் வந்தது. யமனின் இந்தச் செயல் சிவபெருமான் பக்தனைக் காக்க யமனை காலால் உதைத்தார். மஹாமிருதுஞ்சய மந்திரத்தின் சக்தியால் மார்க்கண்டேயனை சிவபெருமான் கால சம்ஹாரமூர்த்தியாக வந்து மரணத்திலிருந்து பாதுகாத்தார்.
மஹாமிருத்யுஞ்சய மந்திரம் என்பது மூன்று வார்த்தைகளின் கலவையாகும். மஹா என்றால் பெரியது. மிருத்யுன் என்றால் மரணம். ஜெயா என்றால் வெற்றி. மரணத்திலிருந்து பெரிய வெற்றி என்று பொருள். காலனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்த காலசம்ஹாரமூர்த்தியின் இந்த சிற்பம் கருப்பு சலவைக்கல்லால் ஆனது. இடம் பீகார்.

தன்னை சரணடைந்தவர்களின் குறைகளை அவர்கள் மனதில் நினைத்த மாத்திரத்தில் வந்து அருளும் கருணை உள்ளம் கொண்ட நரசிம்மர் இரணியனை வதம் செய்யும் காட்சி. தன்னை அழிக்க முடியாத வரம் பெற்ற இரண்யகசிபு ஆணவம் தலைக்கேறி ஹரி என்ற கடவுள் எங்கே? என்று பிரகலாதனை துன்புறுத்த நாராயணன் தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என பிரகலாதன் கூறினான். அருகிலிருந்த தூணை இரண்யகசிபு எட்டி உதைக்க தூணில் நரசிம்மரின் பயங்கர உருவம் தோன்றியது. இரண்யனைப் பற்றிப் பிடித்து தனது கால்களுக்குக் குறுக்கே கிடத்தி ஆவனது உடலை இரு கூறாக பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொண்டது. இக்கதையைச் சித்தரிக்கும் உயிரோட்டமுள்ள நரசிம்மரின் சிற்பம். இடம் சிகாகிரீசுவரர் கோவில் குடுமியான்மலை புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
