சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் ஐம்பத்தி ஐந்தாவது படலமாகும்.
அகத்தியரிடம் இலக்கணம் கற்ற நக்கீரரிடம் தமிழின் சந்தேகத்தை தீர்த்துக் கொண்ட சங்கப்புலவர்கள் பல்வேறு வகையான செந்தமிழ்ப் பாடல்களைப் பாடினர். நாளடைவில் புலவர்கள் ஒவ்வொருவரும் தாம் செய்த பாடல்களே சிறந்தவை என்று எண்ணி மனதில் பெருமிதம் கொண்டனர். இப்பெருமிதத்தால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. தங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை நீக்க வல்லவர் சொக்கநாதர் ஒருவரே என்பதை அவர்கள் தீர்மானித்து திருக்கோவிலை அடைந்தனர். சொக்கநாதரை வணங்கி எம்பெருமானே எங்கள் பாடல்களைச் சீர்தூக்கிப் பார்த்து அவற்றில் சிறந்தவற்றை அடையாளம் காட்டி எங்களின் ஐயத்தை தீர்க்க வேண்டும் என்று கூறி வழிபட்டனர்.
இறைவனார் சங்கப்புலவர்களின் கலகத்தைத் தீர்க்க அருளுள்ளம் கொண்டார். அதனால் புலவரின் வடிவில் அவர்கள் முன்னர் தோன்றிய இறைவனார் புலவர்களே இம்மதுரை மாநகரில் தனபதி என்னும் வணிகர் ஒருவர் உள்ளார். அவருடைய மனைவி பெயர் தரும சாலினி என்பதாகும். இத்தம்பதியினருக்கு முருகக் கடவுளை ஒத்த மகன் ஒருவன் உள்ளான். அவனுடைய பெயர் உருத்திர சருமன் என்பதாகும். உங்களின் பாடல்களை சரியானவை எவை என்பதை அவனே அறிவிக்க வல்லவன். ஆனால் அவன் ஊமை. அவனிடம் சென்று உங்களுடைய பாடல்களைச் சொல்லுங்கள். அவனுடைய புத்திக்கு இசைந்த பாடல் எதுவோ? அதுவே சிறந்த பாடல் என்று கூறினார். அதற்கு அவர்கள் புலவரே ஊமையன் எவ்வாறு எங்களின் பாடலின் தரத்தை அறிந்து அதனை சரியானது இது என்று எப்படி அறிவிப்பான்? என்று கேட்டனர். அதற்கு புலவரான இறைவனார் அவன் உங்கள் பாடலின் சொல்லாழத்தையம் பொருளாழத்தையும் உணர்ந்து அதற்கு ஏற்ப தலையசைப்பான். தோளினை உயர்த்தி மனம் மகிழ்வான். இதனைக் கொண்டு சிறந்தவற்றை அறிந்து உங்களுக்குள் உண்டான கலகத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். (முருகனே இறைவனின் திருவிளையாடலில் உருத்திர சருமனாக பிறந்திருக்கிறார். இதனை 57 வது திருவிளையாடல் புராணத்தில் காணலாம்.)
சங்கப்புலவர்கள் அனைவரும் வணிககுலத்தைச் சார்ந்த ஊமையான உருத்திர சருமனை அவனுடைய வீட்டில் கண்டனர். பின்னர் அவனை அழைத்து வந்து தம் சங்கத்தில் இருத்தினர். அவனின் திருமுன்னர் அமர்ந்து தங்களுடைய பாடல்களைப் பாடினர். அதனைக் கேட்ட உருத்திர சருமன் சிலவற்றிற்கு தலையசைத்தான். பலவற்றிற்கு தோள்களை உலுக்கினான். நக்கீரர் கபிலர் பரணர் ஆகியோரின் பாடல்களைக் கேட்டதும் உடல் பூரித்து மெய்சிலிர்த்து கண்ணீர் பொழிந்து தலையசைத்து பெரும் மகிழ்ச்சி கொண்டான். ஊமைச் சிறுவனின் உணர்வினையே தராசாகக் கொண்டு புலவர்கள் அனைவரும் தமக்குள் உண்டான கலகத்தைப் போக்கி நட்புக் கொண்டனர். பின்னர் நக்கீரர் கபிலர் பரணர் ஆகியோரின் பாடல்கள் உலகில் பரவி சிறந்தோங்கியது. புலவர்கள் குற்றமற்ற நூல்களை ஆராய்ச்சி செய்து சிறப்புடன் விளங்கினர்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
உடல் குறைபாடு இருந்தாலும் அவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
இறைவனின் கருணையாலே பல்வேறு விதமான துன்பங்களையும் சோதனைகளையும் தாங்க மனதிலே வலிமையை வளர்த்துக் கொண்டால் முக்கண்ணனின் திருவடியை தரிசிக்கலாம். முக்கண்ணனும் சிக்கலாம்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் ஐம்பத்தி நான்காவது படலமாகும்.
இறைவனார் என்று தெரிந்தும் பாடல் பொருள் குற்றம் உடையது எனக் கூறிய நக்கீரரை இறைவனார் தன்னுடைய நெற்றிக்கண்ணால் எரித்தார். பின்னர் எல்லோருடைய வேண்டுதலின்படி நக்கீரர் மீது அருளுள்ளம் கொண்டு பொற்றாமரைக் குளத்திலிருந்து எழுந்தருளச் செய்தார். நக்கீரர் இறைவனின் மீது பேரன்பு கொண்டு தினமும் உள்ளம் உருக வழிபட்டு வந்தார். இறைவனாரும் நக்கீரருக்கு இலக்கணம் இன்னும் சரியாக விளங்கவில்லை. ஆகையால்தான் அவன் இருமுறை தனது பாட்டில் குற்றம் கண்டு பிடித்தான். சொல்லழகு பொருளழகு மிக்க பாக்களைப் பிரிக்கும் இலக்கண அறிவுவை நக்கீரருக்கு கொடுக்க வேண்டும். ஆகையால் புலமைமிக்க ஒருவரைக் கொண்டு இலக்கணம் போதிக்க வேண்டும். யாரைக் கொண்டு இலக்கணம் போதிக்கலாம்? என்று சிந்திக்கலானார். இதனைக் கண்ட மீனாட்சி அம்மன் ஐயனே தங்களுடைய சிந்தனைக்கு விடைகூற எண்ணுகிறேன். முன்னொரு காலம் உலகில் உள்ள எல்லோரும் தேவர்களும் திருமால் பிரம்மா உள்ளிட்ட அனைவரும் தங்களை வழிபட கயிலாயத்திற்கு வருகை தந்தனர். இதனால் பூமியின் வடகிழக்குப் பகுதி தாழ்ந்தது. தென்மேற்குப் பகுதி உயர்ந்தது. அப்போது அகத்திய முனிவருக்கு தாங்கள் தமிழையும் இலக்கணத்தையும் முறையாக கற்றுத் தந்து தென்மேற்கு பகுதிக்குச் செல்லச் செய்து புவியை சமன் செய்தீர்கள். தற்போது அகத்திய முனிவர் தனது மனைவியான உலோபமுத்திரையுடன் பொதிகை மலையில் உள்ளார். அகத்தியரைக் கொண்டு நக்கீரருக்கு தமிழ் இலக்கணத்தை கற்பிக்கச் செய்யலாம் என்று கூறினார்.
இறைவனாரும் உள்ளம் மகிழ்ந்து தம் உள்ளத்தில் அகத்தியரை நினைத்தருளினார். இறைவனின் உள்ளக் குறிப்பை அறிந்ததும் அகத்தியர் தன் மனைவியுடன் மதுரைக்கு விரைந்து இறைவனாரை வழிபாடு செய்தார். அகத்தியரைக் கண்ட இறைவனார் அருந்தவச் செல்வனே நக்கீரனுக்கு தமிழ் இலக்கணம் கற்பிப்பாய் என்று பணிந்தருளினார். அகத்தியர் இறைவனை வணங்கினார். அங்கு வந்து தம்மை வணங்கிய நக்கீரனுக்குத் தமிழ் இலக்கணம் முழுவதையும் பிழையின்றிக் கற்பித்தார். நக்கீரனும் ஐயம் இன்றிக் கற்றார். அகத்தியரின் திறமை கண்டு மகிழ்ந்த இறைவர் அவருக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தார். தமிழ் இலக்கணத்தைக் குற்றமற்றுக் கற்ற நக்கீரர் இப்போது தன் குற்றங்களை உணர்ந்து மனம் நொந்தார். தன் பாடல் எவ்வளவு இலக்கண பிழை இருந்திருக்கிறது. இறைவனது பாக்கள் எவ்வளவு உயர்ந்தது என்று இலக்கணம் கற்ற பிறகே நக்கீரருக்குப் புரிந்தது. முன்னர் தம்மால் பாடப்பட்ட நூல்களில் உள்ள குறைகளை எல்லாம் நீக்கிக் கொண்டார். இறைவனின் பெருங்கருணையை எண்ணிப் பெரிதும் மகிழ்ந்து நான் அறியாமையால் தங்கள் பாடலுக்குச் சொல்லிய குற்றத்தை மன்னிக்க வேண்டுகிறேன் என்று வேண்டினார். பின்னர் நக்கீரர் அகத்தியரிடம் கற்ற இலக்கணத்தை மற்றைய புலவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து சொக்கநாதரின் திருவடிகளில் முதிர்ந்த பக்தியோடு இருந்தார். இப்படி வழிவழியாக வந்ததே தமிழ் இலக்கணம். மீனாட்சி அம்மன் சொக்கநாதரிடம் அகத்தியருக்கு இலக்கணம் போதித்த தாங்கள் ஏன் நக்கீரருக்குப் போதிக்கவில்லை? அகத்தியரை ஆசிரியராக்கிய காரணம் என்ன? எனக்கேட்டாள். சொக்கநாதர் புன்சிரிப்புடன் அகத்தியன் நிறை குடம். தமிழை கற்றுக் கொள்ள தகுதி உள்ள பொறாமையற்ற கீழ்படிதலுள்ள சொல்வதை அப்படியே கேட்கும் மாணவர்களுக்கே என் நேரடிப் பாடங்கள் கிடைக்கும் என்றார்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
எந்த அறிவாக இருந்தாலும் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் ஆசிரியரிடம் எதிர்த்து பேசாமல் அவர் சொல் கேட்க வேண்டும் என்பதையும் நமக்குத் தெரிந்த கல்வியை அறிவை தெரியாதவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: எத்தனை முறை இராம நாமம் கூறினால் அனுமனின் தரிசனம் கிடைக்கும்?
இறைவனின் கருணையாலே இதுபோல் எத்தனை முறை கூறுகிறோம்? என்பதை விட முன்பே கூறியது போல எப்படிப்பட்ட மனோநிலையில் கூறுகிறோம்? என்பதே உண்மையாகும். எனவே எண்ணிக்கை பாராமல் நாள் பாராமல் எதனையும் சிந்திக்காமல் ஒருவன் தன் கடமைகளை தவறாமல் உள்ளார்ந்த அன்போடு செய்து கொண்டே உள்ளன்போடு ஸ்ரீ ராம நாமத்தை உதட்டில் மட்டுமல்லாது உள்ளத்தில் கூறிக்கொண்டே இருந்தால் கட்டாயம் ஆஞ்சனேய பகவானின் கருணை கிட்டும். மனிதர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இறைவனை மகானை தரிசிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இறைவனை தரிசிப்பது மட்டுமே மிகப்பெரிய ஆன்மீக நிலை என்று எண்ணி விடக்கூடாது. இறைவனை தரிசித்த அசுரர்களின் கதி என்னவாயிற்று? என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இறைவனை தரிசிப்பது என்பது வேறு இறைவனிடம் அருளை பெறுவது என்பது வேறு இறைவனிடம் வரம் பெறுவது என்பது வேறு இறைவனாகவே மாற வேண்டும் என்று எண்ணி தவம் செய்வது என்பது வேறு. சாயுச்சம் சாரூபம் சாமீபம் சாலோகம் என்ற நிலைகளையெல்லாம் தாண்டிய நிலையும் இருக்கிறது என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோல் நிலையிலே நல்விதமாய் இதுபோல் ஆஞ்சனேயரின் கருணையை பெறுவதற்கு இந்த வழிபாடுகள் உதவும்.
கேள்வி: பல்வேறு பழமையான கோவில்களில் உள்ள தூண்களில் இருக்கும் ஜடாமுடி சித்தர் பற்றி:
இறைவனின் கருணையாலே ஒரு ஆலயம் கட்டப்படும் பொழுது பல நிகழ்ச்சிகள் அந்த காலகட்டத்தில் நடக்கும்பொழுது அதன் எதிரொலியாக அருள்வாக்கு சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. அந்த நாட்டை ஆளுகின்ற அரசனின் மனோநிலையை எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வண்ணமும் சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் விட அந்த ஆலயம் கட்டப்படுவதற்கு காரணமாக இருக்கின்ற இருந்த சில மனிதர்களின் மனோபாவத்திற்கு ஏற்பவும் ஆலயத்திலே சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. அந்தவகையில்தான் அவ்வப்பொழுது அந்த ஆலயத்திற்கு வந்து ஆலோசனை சொன்ன சொல்லுகின்ற மனிதர்கள் அவர்கள் மனிதர்களில் உயர்ந்தவர்களாக இருக்கலாம். மகானாகவும் இருக்கலாம். சித்தர்களாகவும் இருக்கலாம். அவர்களையெல்லாம் கூட நினைவு வைத்திருந்து ஆலயத்திலே சிற்பமாக மாற்றுவது அக்காலத்தில் மரபாக இருந்திருக்கிறது. மகான்களும் மகா மனிதர்களும் அந்த சிற்பத்தில் அடங்குவார்கள்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கீரனைக் கரையேற்றிய படலம் ஐம்பத்தி மூன்றாவது படலமாகும்.
இறைவனான புலவனார் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டியபோதும் இறைவனே ஆயினும் உமது பாடல் குற்றமுடையதே என்று வாதிட்ட நக்கீரனை சொக்கநாதர் தன்னுடைய நெற்றிக்கண்ணால் எரித்தார். வெப்பம் தாளாமல் நக்கீரன் பொற்றாமரைக் குளத்தில் சென்று அழுந்தினான். நக்கீரர் வெம்மை பொறுக்காமல் நீரில் மூழ்குவார். வெளியே வந்ததும் மீண்டும் எரிச்சல் தாளாமல் மறுபடி குளத்தில் மூழ்குவார். இப்படி இருந்தபடியால் தமிழ் சங்கத்துக்கு நக்கிரரால் வர இயலவில்லை. தமிழ் சங்கத்தில் நக்கீரர் இல்லாமல் ஏனைய சங்கப் புலவர்களும் செண்பகப் பாண்டியனும் துயரத்தில் ஆழ்ந்தனர். நக்கீரன் இல்லாத தமிழ் சபை அரசன் இல்லாத நாடு போன்றும் நடுநாயக மணி இல்லாத கண்டிகை போன்றும் ஞானம் இல்லாத கல்வி போன்றும் இருப்பதாக சங்கப் புலவர்கள் கருதினர். இறைவன் என்று தெரிந்தும் அவருடன் வாதிட்டதால் இந்நிகழ்வு நேர்ந்தோ? இதனை தீர்ப்பது எப்படி? என்று அவையோர் மனம் கலங்கினர். சொக்கநாதரைச் சரணடைந்தால் நக்கீரரை திரும்பப் பெறலாம் என்று எண்ணி அனைவரும் சொக்கநாதரை வழிபாடு செய்ய கோவிலுக்குச் சென்றனர்.
சொக்கநாதரை பலவாறு போற்றி வழிபாடு நடத்தினர். ஐயனே செருக்கினால் அறிவிழந்த நக்கீரனின் பிழையைப் பொறுத்தருளுக என்று வேண்டினர். சொக்கநாதர் மீனாட்சி அம்மனுடன் பொற்றாமரைக் குளத்தில் எழுந்தருளினார். முன்னர் நெருப்பு கண்ணால் பார்த்த இறைவனார் தற்போது அருட்கண்ணால் பார்க்க நீரில் அழுந்திக் கிடந்த நக்கீரன் மீண்டு எழுந்தான். பின்னர் நக்கீரர் இறைவனார் மீது கைலை பாதி காளத்தி பாதி என்ற அந்தாதி பாடலைப் பாடினார். கோபப்பிரசாதம் மற்றும் திருவெழு கூற்றிருக்கை ஆகிய பாமாலைகளை இறைவனார் மீது பாடினார். ஏனைய புலவர்களும் இறைவனார் மீது கவிதாஞ்சலி பாடினர். இவற்றை எல்லாம் செவிமடுத்த இறைவனார் நக்கீரனை கைபிடித்து பொற்றாமரைக் குளத்தில் இருந்து கரையேற்றினார். நீ முன் போலவே புலவர் கூட்டத்திற்கு நடுவிலே தங்குவாயாக என்று கூறி மறைந்தருளினார். இறைவனின் அருள் பெற்ற தருமிக்கு மேலும் பல பரிசுகளை பாண்டியனைக் கொண்டு கொடுக்கச் செய்தனர். செண்பகப் பாண்டியன் நாள்தோறும் சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் வழிபட்டுப் பல திருப்பணிகள் செய்து சிவமே பொருள் எனத் துணிந்த உள்ளன்பினோடு இனிது வாழ்ந்து நல்லாட்சி செய்து வந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
இறைவன் சோதனை செய்து இருக்கும் குறைகளைப் போக்கி தகுதியை கொடுத்து இறுதியில் சாதனையாளனாக மிளிரச் செய்வார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் ஐம்பத்தி இரண்டாவது படலமாகும்.
வங்கிசூடாமணிப் பாண்டியன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த போது நந்தவனம் அமைத்து இறை வழிபாட்டிற்காக அதில் மலரும் பூக்களைப் பயன்படுத்தினான். அந்த நந்தவனத்தில் வண்டுகள் மொய்க்காத செண்பக மலர்களும் இருந்தன. வங்கிசூடாமணிப் பாண்டியன் செண்பக மலர்களை சொக்கநாருக்கு அணிவித்து வழிபாடு நடந்தினான். ஆதலால் சொக்கநாதர் செண்பக சுந்தரேசர் என்ற பெயரினையும் பெற்றார். வங்கிசேகர பாண்டியனும் செண்பகப் பாண்டியன் என்று சிறப்பாக அழைக்கப்பட்டான். வசந்த காலத்தில் ஒருநாள் செண்பகப் பாண்டியன் தன்னுடைய மனைவியுடன் நந்தவனத்தில் அமர்ந்திருந்தான். அப்போது ஒரு நறுமணம் வருதை உணர்ந்தான். காற்றிற்கு இயற்கையில் மணம் இல்லை. ஒருவேளை அரசியின் கூந்தலிருந்து இம்மணம் வருகிறதா? என்று எண்ணினான். பின்னர் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டா? அல்லது பூக்கள் மற்றும் நறுமணப் பொருட்களை பூசிக்கொள்வதால் மணம் உண்டாகிறதா? என்ற சந்தேகம் வந்தது. தன்னுடைய சந்தேகத்தை அரசியிடம் கேட்டான். அதற்கு அரசி தங்களின் சந்தேகத்தை சங்கப் புலவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்று கூறினாள். பாண்டியனும் ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிழியை சங்கமண்டபத்தின் முன்னர் கட்டித் தொங்க விட்டான். என்னுடைய சந்தேகத்தை பாடல்கள் மூலம் தீர்ப்பவருக்கு இப்பொற்கிழி பரிசளிக்கப்படும் என்ற அறிவிப்பினைச் செய்தான்.
பாண்டியனின் அவையில் இருந்த புலவர்கள் பலரும் பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்க்க முடியாமல் திணறினர். அப்போது மதுரையில் ஆதி சைவர் மரபில் தோன்றி தருமி என்பவன் அரசனின் அறிவிப்பினை அறிந்தான். சொக்கநாதரிடம் பேரன்பு கொண்ட அவனுக்கு தாய் தந்தை மனைவி என நெருங்கிய உறவினர் எவரும் இல்லை. ஆனால் திருமணம் செய்து கொள்ள ஆசை கொண்ட தருமி ஒருவேளை உணவிற்கு மிகவும் திண்டாடினான். ஆகையால் அவனுக்கு பெண் தர யாரும் முன்வரவில்லை. சொக்கநாதர் முன்னர் சென்று அப்பனே பாண்டியன் தன்னுடைய சந்தேகத்தைப் போக்கும் பாடலை அளிப்போருக்கு ஆயிரம் பொற்காசுகளை பரிசாக அறிவித்து உள்ளான். எனக்கோ பாடல் ஏதும் எழுதத் தெரியாது. ஆனால் ஆயிரம் பொன் கிடைத்தால் நான் திருமணம் செய்து கொண்டு சுற்றத்தாரோடு இனிது வாழ்வேன். ஆகையால் எனக்கு ஆயிரம் பொற்காசுகளை கிடைக்க அருள வேண்டும் என்று மனமுருகி வேண்டினான். அப்போது இறைவனார் புலவரின் வடிவத்தில் வந்து பாண்டியனின் சந்தேகத்தைப் போக்கும் பாடலை தருமிக்கு அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட தருமி நேராக செண்பகப் பாண்டியனைச் சந்தித்து அரசனின் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடலைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினான். பாண்டியனும் அப்பாடலை வாசிக்கச் சொன்னான்.
என்று தருமி இறைவன் அளித்த பாடலை வாசித்தான். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்பதாக அமைந்த பாடலின் உட்கருத்தை அறிந்த செண்பகப் பாண்டியன் மகிழ்ச்சி அடைந்து தருமிக்கு பரிசளிக்க உத்தரவிட்டான். இதனைக் கேட்டதும் தருமி கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சங்கமண்டத்திற்கு முன்னே கட்டியிருந்த பொற்கிழியை தருமி எடுக்கச் செல்கையில் நக்கீரர் பொற்கிழியை எடுக்க விடாமல் தடுத்தார். அங்கே வந்த செண்பகப் பாண்டியனிடம் இப்பாடலில் சொல் குற்றம் ஒன்றும் இல்லை. ஆனால் பொருள் குற்றம் உள்ளது. இதற்கு தாங்கள் பரிசளிப்பது ஆச்சரியமாக உள்ளது என்று கூறி தருமியிடம் பாடலைத் திருப்பிக் கொடுத்தார். தருமி நேரே சொக்கநாதரின் சந்ததிக்குச் சென்றார். பொருள் வேண்டும் என்ற ஆசையில் உன்னைக் கூட மறந்து பாடலை அரசரிடம் எடுத்துச் சென்றேன். அப்பாடலில் பிழை இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்பி விட்டனர். குறையுள்ள பாடலை என்னிடம் கிடைக்கச் செய்ததேன்? என்று புலம்பினான். அப்போது மீண்டும் புலவர் வடிவில் தோன்றிய சொக்கநாதர் தருமியிடம் நடந்தவற்றைக் கேட்டறிந்து நேரே சங்கமண்டபத்துக்குச் சென்றார்.
சொக்கநாதர் வடிவில் இருந்த புலவர் அங்கிருந்தோரிடம் யார் என்னுடைய பாட்டில் குற்றம் இருப்பதாகச் சொன்னது என்று சிங்கம் போல் கர்ஜித்தார். அப்போது நக்கீரர் உங்களுடைய பாட்டில் சொல் குற்றம் இல்லை. பொருளில்தான் குற்றம் உள்ளது என்றார். அதாவது பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்பதானே உங்கள் பாடலின் கருத்து அதுதான் குற்றம். பெண்கள் நறுமலர்கள் மற்றும் திரவியங்களைப் பூசிக் கொள்ளுதல் போன்ற செயல்களால்தான் அவர்களின் கூந்தலுக்கு மணம் உணடாகிறது. இயற்கையில் அவர்களின் கூந்தலுக்கு மணம் இல்லை என்று கூறினார் நக்கீரர். அதனைக் கேட்டதும் இறைவனார் கற்புக்கரசிகள் தேவலோகத்துப் பெண்கள் ஆகியோரின் கூந்தலுக்குக் கூட இயற்கையில் மணம் இல்லையா? என்று வெகுசினத்துடன் கேட்டார். அதற்கு நக்கீரர் நான் தினந்தோறும் வணங்கும் திருகாளத்தியப்பரின் இடப்பாகத்தில் இடம்பெற்ற ஞானப் பூங்கோதையாகிய உமையம்மையின் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் கிடையாது என்று வாதிட்டார். இறுதியில் இறைவனார் தன்னுடைய நெற்றிக்கண்ணினை திறந்து காட்டினார். வந்திருப்பது இறைவனார் என்று தெரிந்தும் நக்கீரர் நீர் இந்திரன் போல் உடல் முழுவதும் கண்களாக்கிச் சுட்டாலும் உம்பாடல் குற்றமுடையதே என்று கூறினார்.
சொக்கநாதர் நக்கீரா எமது தேவியின் கூந்தலின் வாசத்தை நானே அறிவேன். நீ எல்லாமறிந்தவன் போல எதிலும் குற்றம் காண்பது உன் செருக்கையே குறிக்கின்றது. பூங்குழலி எனப் பெயர்பெற்ற சக்தியின் கூந்தல் வாசனையை அடைய விரும்பி அமராவதியிலுள்ள நந்தவனத்தில் உள்ள செடிகளின் புஷ்பங்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு உமையின் கேசத்தில் குடி இருக்கின்றன. தேவி சூடிக் கொள்வதால் புஷ்பங்களுக்குத் தான் பெருமை கூடுகிறது. துவாதச ஆதித்தர்களும் அம்பிகையின் கூந்தலின் வாசனைக்காக கூந்தலுக்கருகில் இருந்து சேவிக்க ஆசை கொண்டு அம்பிகையின் கிரீடத்தில் உள்ள ரத்தினங்களாக இருக்கிறார்கள். ஈஸ்வரியின் கரிய கேசம் அதை தியானிக்கும் அடியார்களின் மன இருளைப் போக்குகின்றது. மலிவான வாசனைகளை நீக்கி சத் வாசனை அளிக்கிறது. அப்பேற்பட்ட தேவியின் கூந்தலின் மணத்தை வீம்புக்காக புறக்கணித்து வாதம் செய்கின்றாய். அதனால் சக்தி உன்னை விட்டு விலகுகின்றாள் எனக் கூறினார். உடனே இறைவனாரின் நெற்றிக்கண்ணிலிருந்து வந்த தீப்பொறியானது நக்கீரரைச் சுட்டது. பொறாமையுற்ற நக்கீரர் ஈசனின் நெற்றிக்கண் வெப்பம் தாங்காமல் தண்ணீருக்கு அழுந்தி பொற்றாமரைக் குளத்தில் அழுந்தினார். சொக்கநாதர் அவ்விடத்தைவிட்டு மறைந்து அருளினார். சொக்கநாதரின் கூற்றை மற்றையப் புலவர்களும் பாண்டியனும் ஆமோதித்துப் பொற்கிழியை இறைவன் அருள் பெற்ற சுந்தரநாதனுக்குக் கொடுத்தனர். சுந்தரநாதன் நல்ல குலத்தில் பிறந்த மங்கையை மணமுடித்து நற்புதல்வனை அடைந்து தெய்வத் தொண்டு புரிந்து வாழ்ந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
நடுநிலை வகிப்பவர்கள் யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் நடுநிலை மாறக் கூடாது என்பதையும் தனக்கே அனைத்தும் தெரியும் என்ற செருக்கு இருக்க கூடாது என்பதையும் தகுதியுடையவர்களுக்கு செல்வத்தை கொடுத்து இறைவன் அருள்வார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: பிளாஸ்டிக் பொருள் இயற்கையாக மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும் வகையில் ஒரு வேதிப்பொருளை இவ்வுலகுக்கு அருள் செய்ய வேண்டும்:
நல்ல பாம்பு இருக்கிறது. அதை எடுத்து மேலே விட்டுக் கொள்வேன். அது என்னைத் தீண்டும். விஷம் உள்ளே இறங்கும். அந்த விஷம் பாதிக்காமல் இருக்க ஒரு மருந்தைக் கொடுங்கள் என்று கேட்கிறான். எதற்கு பாம்பை எடுப்பானேன்? மேலே விடுவானேன்? எதற்கு அந்த விஷத்தை உள்ளே வாங்குவானேன்? இதுதான் எமது வினா. எது தவறு தீங்கு என்று தெரிந்து விட்டதோ அதை விட்டு விடுவதுதான் சிறப்பு. இருந்தாலும் இப்பொழுது இதே உலகத்திலே இது போன்ற சுயநலமும் பேராசையும் உள்ள தேசத்தில்தான் ஒரு பொருள் தவறு என்று தெரிந்தாலும் தொடர்ந்து பயன் படுத்தப்படுகிறது லாப நோக்கத்திற்காக. மற்ற தேசங்களிலே இவைகள் எல்லாம் குறைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னவன் கூறியது போல இதுபோல் இலகு உருகியான இதனை மிகவும் உயர்தரமாக தயாரித்தால் அதனால் எந்தவிதமான தீங்கும் மண்ணிற்கு இல்லை. அதனை மறு சுழற்சிக்கு உட்படுத்தலாம். மலிவாக தரம் குறைந்ததாக தயாரிப்பதால்தான் அதன் தன்மை நச்சுப்பொருளாக மாறுகிறது. இதனையெல்லாம் மனிதனுக்கு கற்றுக் கொடுத்தது இறைவன்தான். இறைவன் ஏன் இதனையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும்? இறைவனை நோக்கிதான் இந்தக் கேள்வியை கேட்க வேண்டும். இதனை கற்றுக் கொடுத்த இறைவனே இதனை நீக்குவதற்கும் உண்டான இன்னவன் கூறியது போன்ற ஒரு பொருளை கற்றுக் கொடுப்பதற்கும் ஒரு வழிகாட்டுவார். விரைவில் அதற்கான சூழல் ஏற்படும். ஆனால் அப்படியொரு சூழல் வந்தாலும் கூட இங்கு உடனடியாக அது வரப்போவதில்லை என்பதே உண்மை.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சங்கப்பலகை கொடுத்த படலம் ஐம்பத்தி ஒன்றாவது படலமாகும்.
வங்கிசேகர பாண்டியன் மதுரையை நல்லாட்சி செய்த போது பிரும்மதேவன் தன் மனைவியரான காயத்ரி சாவித்திரி சரஸ்வதியுடன் காசிக்கு யாகம் செய்ய வந்தார். லிங்கப் பிரதிஷ்டை செய்தார். அந்த லிங்கம் பிதாமகேஸ்வர லிங்கம் என பெயர் பெற்றது. குளமொன்றை அங்கு வெட்டினார். அக்குளத்திற்கு தசாச்வமேத தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. அங்கு ஒன்பது அசுவமேத யாகம் செய்து முடித்தார். ஒவ்வொரு யாக முடிவிலும் மூன்று தேவியருடன் நீராடினார். பத்தாவது யாக முடிவில் நீராட செல்லும் போது விஞ்ஞை மாது என்ற கந்தர்வ கன்னி ஒருத்தி யாழினை மீட்டி பாடிக் கொண்டிருந்தாள். அப்பாடலால் ஈர்க்கப்பட்ட சரஸ்வதி அங்கே நின்று விட்டாள். இதனால் பிரம்ம தேவர் மற்ற இருவருடன் கங்கையில் நீராடி வெளியேறினார். அங்கே வந்த சரஸ்வதி பிரம்ம தேவரிடம் என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் நீராட வந்தது ஏன்? என்று கேட்டாள். அதனைக் கேட்ட பிரம்ம தேவர் நீ உன்னிலை மறந்து இசையில் மூழ்கிவிட்டாய். தவறு உன் மீது இருக்க நீ எங்களைக் கோபிப்பது முறையல்ல. குற்றம் புரிந்த நீ மானிடப் பிறவி எடுத்து அக்குற்றத்தைப் போக்கிக் கொள் என்று கூறினார். இதனைக் கேட்டதும் அதிர்ந்த சரஸ்வதி உங்களின் உயிரான நான் அழியும் மானிடப் பிறவி எடுக்க வேண்டுமா? என்று கேட்டாள். அப்போது பிரம்மதேவர் உனது வடிவமாகிய நாற்பத்து எட்டு எழுத்துக்களும் நாற்பத்து எட்டு புலவர்களாக அவதரிப்பார்கள். அவர்களுக்கு தலைமைப் புலவராய் சொக்கநாதர் தோன்றி அவர்களுக்கு அறிவைத் தோற்றுவித்து அவர்களின் புலமையைக் காப்பார். அவர்கள் ஏட்டுச் சுவடிகளாக பாடல்கள் எழுதிக் குவிக்கையில் உன் சாபம் நீங்கி என் நாவில் உறைவாய் என சாப விமோசனமளித்தார்.
பிரம்மதேவரின் கூற்றுப்படி நாற்பத்து எட்டு எழுத்துக்களும் நாற்பத்து எட்டு புலவர்களாக அவதாரம் செய்தனர். சிவத்தொண்டில் சிறந்து விளங்கிய அவர்கள் பல நாடுகளுக்கும் சென்று புலமையில் வென்று மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது சொக்கநாதர் தானும் புலவர் வடிவில் அவர்களின் எதிரே வந்து அவர்களை மதுரைக்கு அழைத்து வந்து திருக்கோயிலை அடைந்து மறைந்தருளினார். அப்புலவர்கள் புலவராக வந்தது சொக்கநாதரே என்பதை உணர்ந்து பல பாடல்களைப் பாடி அவரை வழிபட்டனர். பின்னர் வங்கிசேகர பாண்டியனைக் கண்டு வாழ்த்துக் கூறினர். பாண்டியனும் அவர்களுக்கு பல பரிசுகள் கொடுத்து திருக்கோயிலுக்கு வடமேற்கு திசையில் சங்க மண்டபம் அமைத்து அதில் அவர்களை இருத்தி வைத்தான். ஆதலால் அவர்கள் சங்கப் புலவர்கள் என்று அழைக்கப்பட்டனர். சங்க மண்டபத்தில் வீற்றிருந்த சங்கப் புலவர்கள் வடநாட்டுப் புலவர்களையும் பாண்டிய நாட்டின் முதன்மைப் புலவர்களையும் வாதாடி வென்றனர். இதைக் கண்டு பல திறமையற்ற புலவர்கள் பொறாமை கொண்டவர். இதனை அறிந்த புலவர்கள் ஆலயம் சென்று இறைவனிடம் உண்மைப் புலவர்களை கண்டு பிடிக்கவும் அவர்களின் சிறப்பை வெளிப்படுத்தவும் புலவர்களின் புலமையை உள்ளபடி சீர்தூக்கி அறிய அளக்கும் கருவியாக ஒரு சங்கப் பலகையைத் தந்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தனர்.
சொக்கநாதர் புலவர் வடிவம் தாங்கி ஒரு பலகையுடன் வந்தார் வந்தார். புலவர்களைப் பார்த்து புலவர்களே இப்பலகை பார்ப்பதற்கு குறுகியது ஆனால் மந்திரத் தன்மை உடையது. ஒரு புலவர் தனது பாடலுடன் இந்தப் பலகையில் அமரலாம். பாடல் சரியாக இருந்தால் மட்டும் இது அவர்களுக்கு இடம் கொடுக்கும். அடுத்த புலவர் சரியான பாடலுடன் வந்தால் இப்பலகை சிறிது நீண்டு அவருக்கு இடம் கொடுக்கும். நீங்கள் அனைவரும் சரியான பாடலுடன் வந்தால் நாற்பத்து எட்டு பேருக்கும் வளர்ந்து இடம் கொடுக்கும். நீங்கள் மற்றவருடன் வாதத்தில் ஈடுபடும் போது உங்கள் பாடல் சரியானது தானா என்பதை அறிந்து கொள்ள இது ஒரு தராசு போல் உதவும் என்று கூறி மறைந்தருளினார். அப்பலகையை வித்யாபீடம் சரஸ்வதிபீடம் ஞானபீடம் மாத்ருகாபீடம் வியாக்யான பீடம் எனப் பலபெயர்கள் சூட்டி மகிழ்ந்தனர். சங்கப்பலகை என அதற்குப் பெயர் ஏற்பட்டது. சங்கப் புலவர்கள் அப்பலகையை திருக்கோயிலில் வைத்து வழிபட்டனர். ஒரு முழத்திற்கும் குறைவான அப்பலகையில் முதலில் நக்கீரர் சரியான பாடலுடன் அமர்ந்தார். உடனே இன்னொருவர் அமரும் அளவு பலகை நீண்டது. பின்பு கபிலர் அமர மறுபடியும் நீண்டது. இவ்வாறு புலவர்கள் அமர அமர பலகை விரிவடைந்தது. போலிப் புலவர் அமர்ந்தால் பலகை நீளாமல் அப்படியே இருந்தது. அவர் எழுந்தால் மட்டுமே நீண்டது. நாற்பத்து எட்டு புலவர்களும் சரியான பாடலைக் கொண்டு சங்கப் பலகையில் ஏறி வீற்றிருந்தனர். அதன்மேல் அமர்ந்த புலவர்கள் எழுதிப் போட்ட ஏடுகளால் சங்கமண்டபம் நிரம்பி வழிந்தது. யாருடையது எங்கே இருக்கிறது என்று பகுத்து எடுக்க முடியாத அளவு கலந்து கிடந்தது. தங்களுடையது எது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
சொக்கநாதர் அவர்களின் முன்னால் புலவர் வடிவத்தில் தோன்றி அவர்களின் பாடல்களை ஆராய்ந்து பொருளினை கூறி அவரவர் பாடல்களை அவரவர்களுக்கு பிரித்துக் கொடுத்தார். புலவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புலவர்களின் நடுவில் நடுநாயகமாக அமர்ந்து பாடல் ஒன்றை இயற்றினார் இறைவன். புலவர்களில் நக்கீரர் மட்டும் அதில் குற்றம் சொன்னார். சொல்லழகும் பொருளழகும் பண்ணழகும் மிக்கப் பாக்களை இயற்றினார் இறைவன். அதற்கும் குற்றம் சொன்னார் நக்கீரன். அப்போது ஆகாயத்தில் அசீரீரியாக புலவர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை தீர்க்கப் புலவர் வடிவில் வந்திருப்பது சொக்கநாதர். தானே பெரியவன் என்னும் அகந்தையில் வாது செய்யாதே நக்கீரா எனக் குரல் கேட்டது. நக்கீரர் தனது அகந்தையை நீக்கி வணங்கினார். மற்ற புலவர்களும் எம்பெருமானை வணங்க அனைவருக்கும் ஆசிகூறி மறைந்தார் சொக்கநாதர்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
சங்கப் புலவர்களுக்கு தமிழ் பாடல்களின் தரத்தினை அளவீடு செய்வதற்காக சங்கப் பலகை ஒன்றைத் தந்து அருளியதையும் இறைவனார் எங்கும் நடுநிலைமை வகிப்பார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: குறிப்பாக ஆராய்ச்சிக் கல்வியில் வெற்றி பெற என்ன செய்யவேண்டும்?
இறைவனின் கருணையாலே எப்படி இயல்பாக சிலருக்கு செல்வம் சேருகிறதோ இந்த உலகியல் கல்வியும் சிலருக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. சிலர் எத்தனை முயற்சி செய்தாலும் அந்த அறிவு ஆற்றல் வராமல் போய்விடுகிறது. இதுவும் கர்மவினையின் காரணம்தான். எனவே பாவங்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் பொழுது கல்வியில் உள்ள தடையும் நீங்கி விடும். இருந்தாலும்கூட வழிபாடு எனும்பொழுது ஒருவன் விரும்புகின்ற அந்தக் கல்வியிலே தீவிர கவனமும் விரக்தியடையாமல் தொடர்ந்து முயற்சி எடுத்து அதனை புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நிலைக்கு தன்னை வைத்துக் கொள்ள வேண்டும். மனம் சோர்ந்து விடுகிறது படித்தாலும் மனதில் நிற்பதில்லை மறந்து விடுகிறது என்றெல்லாம் மனிதன் அயர்ந்து விடுகிறான். அவனுக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுகிறான்.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்து ஒன்றைக் கற்கும் ஆற்றலை ஆர்வத்தை மனிதன் வளர்த்துக் கொள்வதோடு லட்சுமி ஹயக்ரீவரையும் அன்னை கலைவாணியையும் தொடர்ந்து மானசீகமாக ஆத்மார்த்தமாக வணங்கிவந்தால் விரும்புகின்ற ஆராய்ச்சி கல்வி எதுவாக இருந்தாலும் கட்டாயம் அது வெற்றிபெறும். ஆனால் ஒன்று தன்னிடம் உள்ள கல்வியை வித்தை ஆற்றலை பிறருக்கு கற்றுக் கொடுக்க மாட்டேன் என்றால் அதுவும் பாவம் சேர்க்கக்கூடிய ஒரு நிலைதான். எனவே நன்றாக கல்வி கற்பதும் ஆராய்ச்சி பண்ணுவதும் அல்ல அதனால் சமுதாயத்திற்கு நல்ல பலனையும் தரவேண்டும். அதுதான் கல்வி கற்ற மனிதனின் கடமை. எல்லாவற்றையும் விட உண்மையை பேச தர்மத்தை செய்ய சாத்வீகத்தை கடைபிடிக்க பிறரை அனுசரித்து வாழ நன்மையை செய்ய சுயநலத்தை விட்டுவிட கற்றுக் கொடுக்காத கல்வி கல்வியே அல்ல. ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு மனதளவில் ஆக்காத கல்வி கல்வியே அல்ல என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.