ஸ்ரீ முத்து வடுகநாதர்

ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு மன்னராக இருந்தவர் முத்து விஜயரகுநாத சேதுபதி. இவரது மகளுக்குப் பிறந்த பூவலத் தேவன் குமாராயி தம்பதிக்கு மகனாக 1737-ம் ஆண்டு ஸ்ரீமுத்து வடுகநாதர் பிறந்தார். 22 ஊர்கள் கொண்ட செம்பிநாடு எனும் பகுதிக்கு பூவலத் தேவன் தலைவராக இருந்தார். 1742 ஆம் ஆண்டு பூவலத்தேவன் திடீரென மரணம் அடைய அவரது வாரிசான ஸ்ரீமுத்து வடுகநாதரை கொன்று விட்டால் ஆட்சி உரிமையை கைப்பற்றி விடலாம் என்று அவரது பங்காளிகள் திட்டமிட்டனர். இந்த சதி பற்றி தெரிய வந்ததும் குமாராயி தன் மகன் முத்து வடுகநாதருடன் அந்த ஊரில் இருந்து தப்பி வெளியேறினார்.

மதுரை மாவட்டம் அழகர்மலை அருகில் உள்ள பாலமேடு எனும் ஊருக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். அந்த ஊரைச் சேர்ந்த ஜெகநாத பிள்ளை இரக்கம் கொண்டு அவர்களை தம் பண்ணையில் வேலைக்கு சேர்த்துக் கொண்டார். சிறுவனாக இருந்த முத்து வடுகநாதருக்கு ஆடு மாடு மேய்க்கும் வேலை கொடுக்கப் பட்டது. துறுதுறுவென்றிருந்த அவரது சொல்லுக்கு வாயில்லா ஜீவன்களான ஆடு மாடுகள் கட்டுப்பட்டன. அவரால் பராமரிக்கப்பட்ட ஆடு மாடுகள் மற்றவர்களின் தோட்டம் வயல்களில் இறங்கி பயிர்களை மேய்வதில்லை. முத்துவடுகநாதர் எந்த இடத்தில் மேய வேண்டும் என்று உத்தரவிடுகிறாரோ அங்கு மட்டுமே மேய்ந்தன. இதற்கு காரணம் பிறக்கும் போதே முத்து வடுகநாதர் சித்த புருஷராக அவதாரம் எடுத்திருந்ததுதான். ஆனால் அது யாருக்கும் தெரியாது. அவரை ஈன்றெடுத்த தாய்க்கே தெரியாது. அத்தகைய அவர் உத்தரவுக்கு ஏற்ப மாடுகள் கட்டுக் கோப்புடன் இருந்ததைக் கண்டு ஊரே ஆச்சரியப்பட்டது. இதனால் முத்து வடுகநாதரை பணியாளர்களை மேற்பார்வை செய்யும் அந்தஸ்துக்கு ஜெகநாத பிள்ளை உயர்த்தினார். அவர் ஒரு சித்த புருஷர் என்பதை யாருமே உணராமல் இருந்தனர். ஒருநாள் முத்து வடுகநாதர் பணியாட்களுடன் வயலுக்கு சென்றார். அன்று உழவுப் பணி நடந்தது. உழவு நடக்கும் போது 2 எருமை மாடுகள் சகதியில் படுத்து விட்டன. என்னவெல்லாமோ செய்து பார்த்தும் அவற்றை எழுப்ப முடியவில்லை. தூரத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த முத்து வடுகநாதர் அங்கு வந்தார்.

மாடுகள் முன்பு நின்று கைக்கூப்பி வணங்கி ஒரு வெண்பா பாடினார்.

எருமை இரண்டு விழுந்ததே படுத்துராமல்
உரிமையனார் மேழி தொட்டு உழாமல்
அவிழ்க்கும்வரை வரச்செய் அம்மே இவ்வூர்
காத்து நிற்கும் காமாட்சி அம்மே

இவ்வாறு பாடி முடித்ததும் மாடுகள் புத்துணர்ச்சியுடன் எழுந்தன. தானாக உழத் தொடங்கின. ஏர்க்கலப்பையை யாரும் பிடிக்காமலே அவை வயலை உழுது முடித்தன. இந்த அதிசயத்தைக் கண்டு விவசாயிகள் மிரண்டு போனார்கள். இதுபற்றி அறிந்த ஜெகநாதபிள்ளை அடுத்த நாள் திடீரென வயலுக்கு வந்தார். விவசாய வேலைகள் மிகக் கச்சிதமாக நடந்து கொண்டிருந்தன. ஒரு மரத்தடியில் முத்து வடுகநாதர் தியானத்தில் ஆழ்ந்திருக்க அவர் தலைக்கு மேல் ஒரு பெரிய நாகம் ஒன்று படம் எடுத்து குடை பிடிப்பதுப் போன்று நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சிறுவன் சாதாரண மனிதப் பிறவி அல்ல. நிச்சயம் இவர் ஒரு மகானாகத்தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். அன்று முதல் அவர் முத்து வடுகநாதரை ஆடு மாடு மேய்க்கவோ அல்லது வயல் வேலைகளை செய்யச் சொல்லவோ இல்லை. தம் சொந்த மகனைப் போல நடத்தத் தொடங்கினார்.

முத்து வடுகநாதர் சிறந்த கல்வி பெற வேண்டும் என்ற ஆசையில் அவரை அங்குள்ள பள்ளியில் ஜெகநாத பிள்ளை சேர்த்து விட்டார். அந்த பள்ளியில் சாமிநாத செட்டியார் என்பவர் ஆசிரியராக இருந்தார். அவர் என்ன பாடம் நடத்தினாலும் முத்து வடுகநாதர் அது பற்றி அறிந்திருந்தார். ஆசிரியருக்கு தெரியாத தகவல்களை எல்லாம் கூறினார். சாமிநாத செட்டியாருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாள் அவர் உன்னால் இந்த ஊர் விநாயகர் பற்றி ஒரு வெண்பா பாட முடியுமா என்றார். அடுத்த வினாடி முத்து வடுகநாதர் பாடினார்.

பள்ளிக்குள்ளே யான் பயில்வதேன்னே
நீயடியேன் உள்ளத்துள்ளே வாழ்ந்துரும்போது
பிள்ளையாரே சாமிநாத செட்டி என்பாநுண்
முன்னிலேனக் காசா லெனல் பழிப்பேயாம்.

இவ்வாறு அவர் பாடி முடித்ததும் ஆசிரியர் சாமிநாத செட்டியாருக்கு பயம் வந்து விட்டது. இந்த சிறுவனுக்கு எல்லாம் தெரிகிறது. இவனுக்கு என்னால் பாடம் நடத்த இயலாது என்று கூறி ஜெகநாத பிள்ளையிடம் ஒப்படைத்து விட்டுச் சென்று விட்டார். பள்ளிக்கும் செல்லாமல் வயல் வேலைகளுக்கும் செல்லாமல் முத்து வடுகநாதர் வளர்ந்து வந்தார். அச்சமயத்தில் சொக்கநாத பிள்ளைக்கு முதுகில் ராஜபிளவை எனும் நோய் ஏற்பட்டது. வைத்தியர் கொடுத்த மருந்து பலன் அளிக்கவில்லை. அதைக் கண்ட முத்து வடுகநாதர் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கூறி வைத்தியரை விமர்சித்தார். இதனால் கோபம் அடைந்த வைத்தியர் உன்னால் இந்த நோயை குணப்படுத்த முடியுமா என்று சவால் விட்டார். உடனே முத்து வடுகநாதர் உடைக்கவா துடைக்கவா என்று கேட்டபடி ஜெகநாத பிள்ளையின் முதுகைத் தொட்டார். ராஜபிளவை நோய் எப்படி மறைந்தது என்பது தெரியாமல் மாயமானது. வைத்தியர் உள்பட அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். இந்த தகவல் பாலமேடு சுற்று வட்டார பகுதிகளில் பரவியது. இளம் வயதில் சித்தர் ஒருவர் இருப்பதாக கூறி தினமும் நிறைய பேர் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். அந்த கூட்டத்தில் இருந்து முத்து வடுகநாதரை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் ஜெகநாத பிள்ளை திணறினார். இனியும் அவருக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்த சித்தர் பாலமேடு ஊரில் இருந்து வெளியேறினார்.

ஆத்ம ஞானத்தை முழுமையாகப் பெற அழகர் மலைக்கு சென்றார். அங்கு பாலைய சுவாமிகளை சந்தித்து அவரை தனது குருவாக ஏற்று உபதேசம் பெற்றார். பிறகு மதுரை மேலூர் சாலையில் உள்ள பட்டூர் எனும் ஆலம்பட்டிக்கு சென்றார். அங்குள்ள ஒரு ஆல மரத்தடியில் தவம் இருந்தார். அந்த ஊர் மக்கள் கல்வி அறிவு பெறாமல் மிகவும் பின் தங்கி இருப்பதைப் பார்த்த அவர் ஒரு பள்ளியைத் தொடங்கினார். அதன் மூலம் நிறைய பேர் படிப்பாளிகளாக மாறினார்கள். இதனால் சித்தரை பலரும் பட்டூர் வாத்தியார் என்று அழைத்தனர். அந்தக் கால கட்டத்தில் பட்டூர் அருகில் உள்ள சிங்கம் புணரியில் பீதாம்பரர்கள் என்ற கொள்ளையர்கள் அடிக்கடி வந்து ஊரையே கொள்ளையடித்து வீட்டுச் செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தனர். எதிர்ப்பவர்களை அந்த கொள்ளையர்கள் தங்களது மந்திர சக்தியால் முடக்கிப் போட்டு விடும் சக்தியைப் பெற்றிருந்தனர். பீதாம்பர கொள்ளையர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றுமாறு சிங்கம்புணரி மக்கள் சென்று சித்தரை அழைத்தனர். அதை ஏற்று பட்டூரில் இருந்து சிங்கம்புணரிக்கு சித்தர் இடம் பெயர்ந்தார்.

ஊர் மக்கள் சொன்னது போலவே ஒருநாள் சிங்கம்புணரிக்குள் பீதாம்பர கொள்ளையர்கள் நுழைந்தனர். சித்தர் அவர்களை எதிர்கொண்டார். பீதாம்பரர்கள் மிக ஏளனமாக என்னென்ன வித்தைகள் உண்டோ அத்தனையையும் பயன்படுத்தினார்கள். ஆனால் சித்தர் முன்பு எந்த வித்தையும் பலிக்கவில்லை. பதிலுக்கு முத்து வடுகநாதர் தான் உடுத்தி இருந்த வேட்டியின் ஒரு ஓரத்தில் கிழித்து வீசினார். அது மிகப்பெரிய நல்ல பாம்பாக மாறி படம் எடுத்தபடி பீதாம்பர கொள்ளையர்களை விரட்டியது. அதன் பிறகு கொள்ளையர்கள் அந்த ஊர் பக்கமே வரவில்லை. இதனால் மகிழ்ச்சி அடைந்த சிங்கம்புணரி மக்கள் சித்தரை தங்கள் ஊரிலேயே தங்கும்படி கூறி இடம் வசதி செய்து கொடுத்தனர். சித்தரும் அதை ஏற்றுக் கொண்டார்.

முத்து வடுகநாதர் மிகச் சிறந்த வராகி பக்தர். தனது வீட்டில் அவர் வராகி அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உணவு படைத்து ஆடையின்றி அமர்ந்து வராகியை வழிபட்டார். கூப்பிட்ட குரலுக்கு வராகி அம்மனும் ஓடோடி வந்து உதவி செய்யும் அளவுக்கு சித்தர் ஆற்றல் பெற்றிருந்தார். இது சிங்கம்புணரியில் உள்ள சிலருக்கு பிடிக்கவில்லை. சித்தரை கொல்ல முடிவு செய்தனர். ஒருநாள் குடிசை வீட்டில் இருந்து வெளியில் வந்த சித்தரை பிடித்து கை கால்களை கயிற்றால் கட்டி தூக்கிச் சென்றனர். ஒரு குழிக்குள் போட்டு மிளகாய் தூளை கொட்டினார்கள். முள் செடிகளை வெட்டி போட்டனர். பிறகு குழி நிறைய மண் போட்டு மூடி விட்டு சென்று விட்டனர். சித்தர் கதை இன்றோடு முடிந்தது என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டனர். அன்றிரவு ஊர் பெரியவர்கள் சிலர் கனவில் அந்த ஊர் காவல் தெய்வமான சேவுக அய்யனார் வெள்ளைக் குதிரையில் வந்து தோன்றினார். தப்பு செய்து விட்டீர்கள். இந்த ஊரையும் மக்களையும் காப்பாற்றத்தானே முத்து வடுகநாதர் பாடுபட்டு வருகிறார் அவரை குழியில் தள்ளிப் புதைத்து விட்டீர்களே வராகி தாய் அவரைக் காப்பாற்றி விட்டாள். நீங்கள் எல்லோரும் விடிந்ததும் சித்தரிடம் சென்று அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேளுங்கள். அவர்தான் இந்த ஊரின் காவல் தெய்வம் என்று அய்யனார் கூறி விட்டு மறைந்து விட்டார். மறுநாள் காலை விடிந்ததும் பெரியவர்கள் அனைவரும் தங்கள் கனவில் அய்யனார் வந்து உத்தரவிட்டதை பரபரப்பாக பேசினார்கள். சித்தர் வசித்த குடிசைக்கு திரண்டு சென்றனர்.

சித்தர் சிரித்தபடி உட்கார்ந்திருந்தார். அவர் உடம்பில் சிறு காயம் கூட இல்லை. எதிரிகள் விக்கித்து விறைத்துப் போனார்கள். அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு சிங்கம்புணரி ஊரே சித்தரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. சித்தரும் அந்த ஊர் மக்களின் அனைத்துக் குறைகளையும் தீர்த்தார். அவர் கைப்பட திருநீறு பூசினால் நோய்கள் பஞ்சாய் பறந்தன. தம்மைக் காப்பாற்றும் சித்தர் பெருமானுக்கு திருமணம் செய்து வைக்க சிங்கம்புணரி மக்கள் ஆசைப்பட்டனர். சித்தரும் அதை ஏற்றுக் கொண்டார். தூரத்து உறவுப் பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பழனியாண்டி விஜயன் சேவுகபெருமாள் எனும் 3 மகன்களும் குமாராயி எனும் மகளும் பிறந்தனர். திருமணத்துக்குப் பிறகும் அவரது சித்தாடல்கள் குறையவில்லை. அவரைத் தரிசிக்க வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. தன்னை நம்பி வந்தவர்களின் துன்பங்களை அவர் தீர்த்தார். ஒருநாள் அவர் தான் 1833 ஆம் ஆண்டு சமாதியாகப் போகும் நாளை பக்தர்களிடம் அறிவித்தார். சிங்கம்புணரியில் இருந்து பிரான்மலை செல்லும் சாலையில் சிறிது தூரத்தில் பாலாற்றின் தென்கரையில் ஒரு இடத்தில் சமாதியும் தோண்டச் செய்தார்.

சிங்கம்புணரி ஊருக்கு வடக்கே அந்த காலத்தில் கற்றாழை செடிகள் நிறைந்திருந்தது. ஒருநாள் அதற்குள் அமர்ந்து சித்தர் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு சிற்பி அவரை தரிசிக்க வந்திருந்தார். அவரிடம் தாம் யோக நிலையில் இருப்பது போன்று கற்சிலை ஒன்றை வடிக்க உத்தரவிட்டார். அந்த சிற்பியும் சித்தர் யோகத்தில் இருப்பது போல தத்ரூபமாக சிலை செய்து எடுத்து வந்தார். அந்த கற்சிலைக்கு ஸ்ரீமுத்து வடுகநாத சித்தரே பூஜைகள் செய்தார். தனது உடலை அச்சிலை மீது பட செய்து தியானத்தில் ஆழ்ந்தார். இதன் காரணமாக தனது அருள் சக்திகள் அனைத்தையும் முத்து வடுகநாதர் அந்த சிலைக்கு மாற்றினார். இதுபற்றி பக்தர்கள் கேட்டபோது தான் ஜீவசமாதி ஆன பிறகு தமது சிலையால் மக்கள் பலன் அடைய வேண்டும் என்றார். அவர் கூறியபடி 1883 ஆம் ஆண்டு ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஜீவசமாதியனார். அவர் ஒடுக்கம் பெற்ற இடத்தின் மீது அவரது சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவர் ஜீவ சமாதி ஆகி 185 ஆண்டுகள் ஆகி விட்டது. நான் இங்குதான் இருக்கிறேன் என்று சொல்லாமல் அவர் தன் சிலையில் இருந்து வியர்வை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.