சேனைகளின் தலைவன் முருகன்

தற்போது இருக்கும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பகுதிகள் அக்காலத்தில் காந்தாரா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட போர்க் கோலத்தில் உள்ள முருகனின் சிலை. காலம் 2 ஆம் நூற்றாண்டு. தற்போது கவுண்டி மியூசியம் ஆஃப் ஆர்ட் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் உள்ளது.

சிவபெருமான்

சிவபெருமான் தனது இடது காலை தூக்கி நடனமாடியபடி கைகளில் உள்ள சங்கை ஒரு கிண்ணம் போல் பிடித்து அதிலிருக்கும் ஆலகால விஷத்தை குடிப்பது போல் உள்ளது. பிறை நிலவு மற்றும் சிவனின் தலைமுடியில் இருந்து கங்கை நீரை வெளியேற்றுவது மற்றும் சிவனின் தலையை சுற்றி மஹாகாளத்துடன் கூடிய அழகான சிரச்சக்கரம் இந்த சிற்பத்தில் உள்ளது. இச்சிற்பம் கறுப்பு சலவைக் கல்லால் செய்யப்பட்டுள்ளது. இடம் பீகார்.

வாமனன்

சங்ககால ஏடுகளில் விஷ்ணு பகவானின் பிறந்த நாளும் வாமணன் அவதரித்த நாளும் ஒன்றுதான் என குறிப்புகள் கூறுகின்றன. மகாபலி என்ற அசுர குலத்தில் தோன்றிய மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும் போது திருமால் வாமனனாக (குள்ளமான உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் மகாபலி. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.

தன் நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி. அதன்படி ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். இதனை நினைவு கூர்ந்து மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த சிற்பம் அமைந்துள்ள இடம் பாதாமி குடைவரை கோவில் கர்நாடக மாநிலம்.

கேசி வதம்

கேசி என்பவர் ஒரு அரக்கனாவார். பல்வேறு வடிவங்கள் எடுக்கும் திறன் பெற்ற கேசி கம்சனின் தூண்டுதலின் பேரில் கண்ணனைக் கொல்வதற்கு கோகுலத்திற்கு குதிரை வடிவத்தில் சென்றார். இவர் அரக்கன் என்பதை அறிந்த கண்ணன் குதிரையில் வடிவத்தில் இருந்த கேசியிடம் சண்டையிட்டு குதிரையின் வாயைப் பிளந்து கேசியைக் கொன்றான். இது கேசிவதம் ஆகும். கேசியை வதம் செய்த இடம் தற்போது கேசிகாட் என்று அழைக்கப்படுகிறது. கேசியை வென்றதினால் கண்ணன் கேசவன் என்று பெயர் பெற்றார். இந்த சிதிலமடைந்த சிற்பம் தற்போது இருக்கும் இடம்: மெட்ரோபாலிட்டன் அருங்காட்சியகம் நியூயார்க் நகரம்.

துர்கை

நடனத் தோரணையில் ஒய்யாரமாக நிற்கின்ற துர்கை என்று அழைக்கப்படும் கொற்றவை. இடம் சோமேஸ்வரர் கோவில் தும்கூர் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

வாமன அவதாரம்

மூவுலகத்தையும் அளந்த வாமன அவதாரமெடுத்த பெருமான் மூன்றாவது அடியை எங்கு வைக்க எனக் கேட்க மகாபலிச்சர்க்கரவர்த்தி தனது தலையின் மேல் மூன்றாவது அடியை வைத்துக் கொள்ளச் சொன்ன காட்சி. இடம் திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில் மயிலாடுதுறை.

காலசம்ஹாரமூர்த்தி

மிருகண்டு ரிஷியும் அவரது மனைவி மருத்மதியும் சிறந்த சிவபக்தர்கள். சிவபெருமானிடம் ஆண் குழந்தை வேண்டும் என வேண்டி பிரார்த்தித்தார்கள். இறைவன் அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்து அவர்களுக்கு இரண்டு விருப்பங்களைக் கொடுத்தார். ஒன்று குறுகிய ஆயுளுடன் ஒரு புத்திசாலி மகனைப் பெறலாம் அல்லது குறைந்த புத்திசாலித்தனம் கொண்ட நீண்ட ஆயுளுடன் ஒரு மகனைப் பெறலாம். குறுகிய ஆயுளாக இருந்தாலும் புத்திசாலி மகன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளின்படி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டார்கள். அவனுக்கு 12 வயது வரை ஆயுள் இருந்தது. மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடன் இருந்தான். அவன் 12 வயதை எட்டியபோது ​​​​யம தூதர்கள் மார்க்கண்டேயனை அழைத்துச் செல்ல வந்தார்கள். அவன் மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை தீவிர பக்தியுடன் உச்சரித்துக் கொண்டிருந்தான். இதனால் அவனது உயிரை தூதர்களால் எடுக்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த யமன் நேரில் வந்து மார்க்கண்டேயனைச் சுற்றி தனது கயிற்றை வீசினார். அந்த கயிறு சிவலிங்கத்தைச் சுற்றி விழுந்து மார்க்கண்டேயனோடு சிவலிங்கமும் வந்தது. யமனின் இந்தச் செயல் சிவபெருமான் பக்தனைக் காக்க யமனை காலால் உதைத்தார். மஹாமிருதுஞ்சய மந்திரத்தின் சக்தியால் மார்க்கண்டேயனை சிவபெருமான் கால சம்ஹாரமூர்த்தியாக வந்து மரணத்திலிருந்து பாதுகாத்தார்.

மஹாமிருத்யுஞ்சய மந்திரம் என்பது மூன்று வார்த்தைகளின் கலவையாகும். மஹா என்றால் பெரியது. மிருத்யுன் என்றால் மரணம். ஜெயா என்றால் வெற்றி. மரணத்திலிருந்து பெரிய வெற்றி என்று பொருள். காலனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்த காலசம்ஹாரமூர்த்தியின் இந்த சிற்பம் கருப்பு சலவைக்கல்லால் ஆனது. இடம் பீகார்.

நரசிம்மர்

தன்னை சரணடைந்தவர்களின் குறைகளை அவர்கள் மனதில் நினைத்த மாத்திரத்தில் வந்து அருளும் கருணை உள்ளம் கொண்ட நரசிம்மர் இரணியனை வதம் செய்யும் காட்சி. தன்னை அழிக்க முடியாத வரம் பெற்ற இரண்யகசிபு ஆணவம் தலைக்கேறி ஹரி என்ற கடவுள் எங்கே? என்று பிரகலாதனை துன்புறுத்த நாராயணன் தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என பிரகலாதன் கூறினான். அருகிலிருந்த தூணை இரண்யகசிபு எட்டி உதைக்க தூணில் நரசிம்மரின் பயங்கர உருவம் தோன்றியது. இரண்யனைப் பற்றிப் பிடித்து தனது கால்களுக்குக் குறுக்கே கிடத்தி ஆவனது உடலை இரு கூறாக பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொண்டது. இக்கதையைச் சித்தரிக்கும் உயிரோட்டமுள்ள நரசிம்மரின் சிற்பம். இடம் சிகாகிரீசுவரர் கோவில் குடுமியான்மலை புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ராமர் அனுமன்

சீதையை இலங்கையில் கண்டதற்கு சாட்சியாக சீதை தந்த கணையாழியை ராமரிடம் கொடுக்கும் அனுமன். இந்த சிற்பத்தில் ராமர் ஒரு கால் மீது இன்னோரு கால் மடக்கி வைத்து அமர்ந்திருப்பதும் தனது அம்புகளை வைக்கும் அம்பறாத்தூணியில் அம்புகள் இருப்பது தெளிவாகத் தெரியும் வண்ணம் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. இடம் திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் திருக்கோவில். மயிலாடுதுறை மாவட்டம்.