பிரம்ம யக்ஷன்

சாத்தனார் ஐயனார் அய்யனார் சாஸ்தா அரிகரபுத்திரன் ஐயன் பிரம்மசாத்தன் சாத்தன் சாத்தையா என்று பல பெயர்களை உடைய இவர் ஊர் தெய்வமாக வணங்கப்படுகின்றார். சமணர்களுடைய கோயில்களில் இவரை இன்றும் காணலாம். பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாக சமணர்கள் இன்றும் இவரை வழிபடுகின்றனர். இடம் புஷ்பநாதர் ஜெயின் கோவில். திருப்பனமூர் திருவண்ணாமலை. காலம் 15 ஆம் நூற்றாண்டு.

வாயு பகவான் வெவ்வேறு அவதாரங்கள்

ஒரே சிற்பத்தில் ஹனுமன் பீமன் மத்வாச்சாரியார். வெவ்வேறு யுகங்களில் வாயுபகவானின் வெவ்வேறான அவதாரங்கள். அனுமன் ஸ்ரீராமரிடமும் பீமன் கிருஷ்ணரிடமும் மத்வாச்சாரியார் வேதவியாசரிடமும் பக்தி கொண்டவர்களாக திகழ்ந்தனர். இடம் உடுப்பி கர்நாடக மாநிலம்.

சதுர்புஜ பைரவர்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள இந்து பௌத்த சிங்கசாரி கோவிலில் இருந்து சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சதுர்புஜ பைரவரின் கற்சிற்பம். நான்கு கரங்களில் சூலம் உடுக்கை குத்துவாள் மற்றும் உடைந்த கபாலம் ஏந்தியுள்ளார். முண்டமாலையுடன் கபாலத்தின் மீது தன் வாகனமான நாயுடன் கம்பீரமாக நிற்கின்றார்.

சண்டேசர்

சிவபெருமான் சண்டேச அனுக்கிரக மூர்த்தியாக வந்து விசாரசருமருக்கு திருத்தொண்டர்களின் தலைவர் பதவியான சண்டேசுர பதவியை கொடுத்தருளி தனது திருமுடியிலுள்ள கொன்றை மலரை எடுத்து விசாரசருமருக்குச் சூடி அருளினார். சண்டேசுவர பதவியைப் பெற்றமையால் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவரை சண்டேசர் சண்டிகேசுவர் என்றும் அழைக்கப்படுகிறார். இடம் ஸ்ரீராமேஸ்வர கோவில் நரசமங்கலம் சாமராஜ்நகர் தாலுக்கா கர்நாடக மாநிலம்.

அக்னிபகவான்

அக்னிதேவர் ஒரு கையில் அக்கமாலையும் மறு கையில் அமுத கலசமும் ஏந்தி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். தலையில் தீ ஜ்வாலாவுடன் நீண்ட தாடியுடன் இருக்கிறார். இடம்: சுந்தரேஸ்வரர் கோவில். மேலப்பழுவூர் அரியலூர் மாவட்டம்.

சூரிய பகவான்

காஷ்யப முனிவருக்கும் அவரது மனைவி அதிதிக்கும் மாகா மாதம் 7 ஆம் தேதி சூரிய பகவான் பிறந்தார். இந்நாள் சூரிய ஜெயந்தியாகவும் ரத சப்தமியாகவும் கொண்டாடப்படுகிறது. 7 ஆம் நாள் ரத சப்தமியின் அடையாளமாக சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வருகிறார். இங்குள்ள ஏழு குதிரைகள் சூரியனின் நாளான ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன. இடம்: கேதாரேஸ்வரர் கோவில் ஹலேபீடு ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

நந்தி தேவர்

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரம் கோயிலில் உள்ள நந்தி தேவரின் அழகிய சிற்பம். கரிகாலசோழன் காலத்தில் கட்டப்பட்ட சிற்பம். காலம் 2 ஆம் நூற்றாண்டு.

ஒரு கோடி தேவர்கள் சிற்பங்களாக

உனகோடி என்பதன் நேரடி பொருள் ஒரு கோடிக்கு ஒன்று குறைவு (9999999) என்று பொருளாகும். இது ஒரு வங்காள மொழிச் சொல் ஆகும். இது ஒரு பழமையான சைவத்தலமாகும். இங்கு பாறைகளில் புடைப்புச் சிற்பங்களும் கற்சிற்பங்களும் காட்சியளிக்கின்றன. இந்த சிற்ப உருவங்கள் இரண்டு வகைகளாக உள்ளன. ஒன்று பாறையில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள். இரண்டு கல் சிற்பங்கள். கல்லில் வெட்டப்பட்ட சிற்பங்களுக்கு மத்தியில் சிவனின் தலையும் பிரம்மாண்டமான விநாயகர் சிற்பமும் சிறப்பாக குறிப்பிடப்பிடத்தக்கன. கால பைரவர் என அழைக்கப்படும் இந்த சிவனின் சிலை சுமார் 30 அடியைவிட உயரமானதாக உள்ளது. இதில் கலை நயமிக்க சிவனின் தலை மட்டும் சுமார் 10 அடி உயரம் உள்ளது. சிவன் சிலையின் இருபக்கத்திலும் இரு பெண் தெய்வங்களின் முழு உருவங்கள் உள்ளன. அதில் ஒன்று சிங்கத்தின் மேல் அமர்ந்த துர்க்கை. அருகே நந்தி உருவமும் உள்ளது. நந்தி உருவம் அரைப்பகுதி தரையில் புதைந்துக் காணப்படுகிறது. இது போன்ற பல்வேறு கல் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த செதுக்கல்கள் அழகிய நிலப்பரப்பு வனப்பகுதியில் அமைந்துள்ளன சுற்றிலும் பசுமையான தாவரங்கள் உள்ளன. இது சிற்பங்களுக்கு அழகு சேர்க்கிறது. திரிபுரா மாநிலத்தில் உனகோடி அகர்தலாவில் இருந்து வடகிழக்கில் 178 கிமீ தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் உள்ள எல்லாச் சிற்பங்களும் குல்லு கம்ஹார் என்று சிற்பியால் வடிக்கப்பட்டவை. அவர் பார்வதியின் பக்தர். பார்வதியும் சிவபிரானும், சிவகணங்களுடன் இந்த வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது தன்னையும் அழைத்துச் செல்லும்படி வேண்டினார் இந்தச் சிற்பி. ஈசனால் இதை ஏற்க முடியவில்லை. பக்தனின் கோரிக்கையை நிறைவேற்ற விரும்பிய அன்னை பக்தனுக்கு ஒரு நிபந்தனை விதித்தாள். இரவு முடிவதற்குள் ஒருகோடி உருவங்களைச் செதுக்கச் சொன்னாள். பார்வதியின் அருளால் விடிவதற்குள் கோடிக்கு ஒன்று குறைவாகவே சிற்பி செதுக்கி முடித்தார்.

இந்த சிற்பங்களுக்கு இன்னோரு புராண கதையும் சொல்லப்படுகிறது.

சிவபெருமான் ஒரு கோடி தேவர்களுடன் காசிக்குச் செல்லும் வழியில் இந்த இடத்தில் இரவு தங்கினார். பின் அனைத்து தேவர்களையும் சூரியன் உதிக்கும் முன் எழுந்து காசிக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். காலையில் சிவனைத் தவிர வேறு யாரும் சோம்பல் காரணமாக எழுந்திருக்கவில்லை. எனவே அனைவரையும் கற்களாக மாறும்படி சபித்து விட்டு காசிக்கு தானே தனியாக புறப்பட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் பிரபலமான அசோகாஷ்டமி மேளா என அழைக்கப்படும் ஆயிரக்கணக்கான பயணிகள் கலந்து கொள்ளும் திருவிழா ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.

பழமையான நவகிரகங்கள்

சிலி சான்டியாகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 1100 ஆண்டுகள் பழமையான நவகிரகங்கள் கொண்ட சிற்பம். இடமிருந்து வலமாக சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் சுக்கிரன் சனி ராகு மற்றும் கேது. ராகுவின் தலையில் பல நாகங்கள் கோபுரங்கள் போல் இருப்பதை காணலாம்.