ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 6

ராமர் எப்படியும் நாம் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து இந்த ராட்சசர்கள் அனைவரையும் அழித்து நம்மை வந்து மீட்பார் என்று மன தைரியத்தில் இருந்த சீதை ராட்சசிகளிடம் பேச ஆரம்பித்தாள். சூரியனை சுற்றி அதனுடைய பிரகாசம் சுற்றி நிற்பது போல் நான் எனது ராமனை சுற்றியே நின்று கொண்டிருப்பேன். நீங்கள் ராமரைப் பற்றிய தவறான தகவல்களை தெரிந்து வைத்துக் கொண்டு பேசுகின்றீர்கள். ஒரு மனித பெண்ணை ஒரு ராட்சசன் விரும்புவது முறையில்லை. ஒரு மனித பெண் எப்படி ராட்சசனுடன் இருக்க முடியும். நீங்கள் சொல்வது அனைத்தும் பாவகரமான வார்த்தைகளாக இருக்கிறது என்றாள். இதனைக் கேட்ட ஒரு ராட்சசி சீதையிடம் பேசி பிரயோஜனம் இல்லை அவளைத் தின்று விடலாம் என்றாள். இன்னொரு ராட்சசி அவள் மார்பை கிழித்து இதயத்தை நான் நின்று விடுகிறேன் என்றாள். ராவணன் சீதை எங்கே என்று கேட்டால் சீதை துக்கத்தில் இறந்து விட்டாள் என்று சொல்லி விடலாம். இதனால் ராவணன் இனி எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக தூங்குவார். இப்போது இவளை நாம் அனைவரும் பங்கிட்டு சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இருப்போம் என்று ஒவ்வொரு ராட்சசியும் தனது பங்கிற்கு சீதையின் ஒவ்வொரு பாகமாக சொல்லி தின்று விடுவதாக அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ராட்சசிகளின் கொடூரமான பேச்சை கேட்ட சீதை ராமரை நினைத்துக் கொண்டாள். தண்ட காருண்ய காட்டில் 14000 ராட்சசர்களை சில கனங்களில் கொன்ற ராமர் ஏன் இன்னும் என்னை மீட்டு போக வரவில்லை நாம் இருக்கும் இடம் இன்னும் அவருக்கு தெரியவில்லையா தெரிந்தால் சும்மா இருப்பாரா என்று நினைத்துக் கொண்டே வாய்விட்டு அழுதாள். சீதையின் அழுகையை கண்டு கொள்ளாத ராட்சசிகள் அவளை பயமுறுத்தி தங்கள் வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று எண்ணி சீதையை எப்படி திண்பது என்று சீதை முன்பாக அவளை பயமுறுத்தி பேசிக்கொண்டே இருந்தார்கள்.

ராமரைப் பற்றி சீதை பல வகையில் நினைக்க ஆரம்பித்தாள். ராட்சசன் நம்மை தூக்கி வந்ததும் நாம் அவரை பிரிந்த துக்கத்தில் தவத்தில் ஈடுபட்டு ஆயுளைக் கழித்து விடலாம் என்ற எண்ணத்தில் காட்டில் தவத்தில் அமர்ந்து விட்டாரோ என்று நினைத்தாள். மனம் துக்கத்தில் இருக்கும் போது அமைதியாக தவம் செய்ய முடியாது ஆகவே தவத்தில் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தாள். அதன் பிறகு நம் மீது ராமருக்கு அன்பு குறைந்து விட்டதோ அதனால் நம்மை தேடி வரவில்லையோ என்று நினைத்தாள். நம் மீது ராமர் காட்டும் அன்பு உண்மையானது அவர் நம்மை மறக்க மாட்டார். இப்படி ஒரு எண்ணம் நமக்கு வரக்கூடாது. இந்த எண்ணம் பாவமாகும் என்று நினைத்தாள். அதன் பிறகு ராவணன் நம்மை ஏமாற்றி தூக்கி வந்தது போல் ராமரையும் லட்சுமணனையும் ஏமாற்றி யுத்தம் செய்து கொன்றிருப்பானோ என்று நினைத்தாள். ராமர் மிகவும் அறிவும் வலிமையும் உடைய வீரர். அவருடன் லட்சுமணனும் இருக்கின்றான். அவரை எப்படி ஏமாற்ற நினைத்தாலும் அவரை ஏமாற்றி யுத்தம் செய்து வெற்றி அடைய முடியாது என்று நினைத்தாள். அதன் பிறகு நான் இல்லாத துக்கத்தில் ராமர் இறந்து விட்டாரோ அப்படி இருந்தால் அவர் சொர்க்கத்திற்கு சென்றிருப்பார். நான் அவரை பிரிந்த துக்கத்தில் இன்னும் உயிரோடு இருக்கிறேனே நான் எவ்வளவு பெரிய பாவியாக இருக்கிறேன். இப்போதே எமது உயிரை விட்டுவிட்டு ராமர் இருக்கும் சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என்று தனது தலை முடியில் மரத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டு உடலை விட்டு விடலாம் என்று எண்ணினாள். அப்போது திரிஜடை என்ற ராட்சசி அங்கு வந்து ராட்சசிகள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள். சீதையின் முன்பாக அவளை பயமுறுத்தி இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று கண்டித்தாள். நான் ஒரு கனவு கண்டேன் கேளுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தாள்.

ராமாயணம் 4. சுந்தர காண்டம் பகுதி – 5

சீதை தொடர்ந்து ராவணனிடம் பேசினாள். ராமர் ராட்சசன் ஒருவனை அழித்து விட்டார் என்ற பயத்தில் தானே அவர்கள் இல்லாத நேரம் பார்த்து என்னை நீ தூக்கிக் கொண்டு வந்தாய். அவர்களுக்கு முன்பாக உன்னால் நான் இருக்கும் இடத்திற்கு அருகில் கூட உன்னால் வர முடியாது. இதுவே உன்னுடைய வீரம் என்பதை நான் தெரிந்து கொண்டேன். நீ என்னிடம் கூறிய உன்னுடைய செல்வங்கள் ஜஸ்வர்யங்கள் போகங்கள் என ஒன்றும் எனக்கு தேவை இல்லை. அவற்றை வைத்து நீ எனக்கு ஆசை காட்ட வேண்டாம். இதனால் உனக்கு ஒரு பயனும் இல்லை. நான் சக்கரவர்த்தியின் திருமகன் ராமருக்கு உரியவள். ராமரை விட்டு நான் விலக மாட்டேன். உனக்கு ஒரு நல்ல அறிவுரை சொல்கிறேன் கேட்டுக்கொள். முதலில் ராமரிடம் சென்று மன்னிப்பு கேட்டு என்னை அவரிடம் ஒப்படைத்து விட்டு அவரின் கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள். ராமர் உன்னை மன்னிப்பார். அவரை சரணடைந்து அவருடைய அன்பை பெற்றுக் கொள். சரணடைந்தவர்களை அவர் ஒன்றும் செய்ய மாட்டார். உன்னை சுற்றி இருப்பவர்களில் உனக்கு நல்ல புத்தி சொல்கின்றவர்கள் ஒருவர் கூட இல்லையா? ஏன் இவ்வாறு கெட்ட காரியங்கள் செய்து உனக்கு கெடுதலை உண்டாக்கிக் கொண்டு உன்னை நம்பி இருக்கும் மக்களுக்கும் அழிவை தேடிக் கொடுக்கிறாய். அரசன் ஒருவன் தன் மனதை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் போனால் அவனுடைய நாடும் நகரமும் செல்வமும் சீக்கிரம் அழிந்து போகும். உன்னுடைய பொறுப்பை புரிந்து கொண்டு உன்னுடைய எண்ணத்தை விட்டுவிட்டு உன்னையும் உன் அரசையும் காப்பாற்றிக்கொள் இல்லையென்றால் ராம லட்சுமணர்களின் அம்பு சீக்கிரமே இந்த இலங்கையை அழிக்கும் என்று சொல்லி முடித்தாள்.

சீதை பேசியதில் கோபமடைந்த ராவணன் கர்ஜனையுடன் பேசினான். உன் மீது நான் வைத்திருக்கும் அன்பே உன்னை இப்போது காப்பாற்றியது. இல்லை என்றால் நீ பேசிய பேச்சிற்கு உன்னை கொன்றிருப்பேன். உனக்கு நான் கொடுத்த காலம் முடிய இன்னும் 2 மாதம் மட்டுமே இருக்கிறது ஞாபகம் வைத்துக்கொள். அதற்குள் நீ சம்மதிக்கவில்லை என்றால் ஏற்கனவே நன் சொன்னது போல் என் சமையல் அறையில் உன்னை எனது சமையல் கலைஞர்கள் சமைத்து விடுவார்கள் ஜாக்கிரதை என்று கத்தினான். ராவணனுடைய கோபம் அதிகரித்ததை கண்ட அவனது மனைவிகளில் ஒருத்தியான தான்யமாலி என்பவள் ராவணனிடம் உங்களை அடையும் பாக்கியம் இந்த மானிட பெண்ணிற்கு இல்லை. இவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை. இவளது பேச்சிற்கு நீங்கள் ஏன் கோவப்படுகின்றீர்கள் வாருங்கள் நாம் செல்லலாம் என்று வற்புறுத்தி ராவணனை அழைத்தாள். ராவணன் சீதையை காவல் காக்கும் ராட்சசிகளிடம் எப்படியாவது இவளை நீங்கள் என் வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டு அங்கிருந்து கிளம்பி தனது மாளிகைக்கு திரும்பினான்.

சீதையை சுற்றி ராட்சசிகள் நின்று கொண்டார்கள். ராவணன் முன்பு தைரியமாக பேசிய சீதை சுற்றி நெருங்கி நிற்கும் ராட்சசிகளின் அகோர உருவங்களை கண்டு பயந்து நடுங்கினாள். ராட்சசிகள் சீதையிடம் பேச ஆரம்பித்தார்கள். உலகம் முழுவதும் புகழும் வீரரான ராவணன் உன்னை விரும்பும் பொழுது நீ வேண்டாம் என்ற சொல்வாய் மூட பெண்ணே. ராவணனை யார் என்று தெரிந்துகொள். பிரம்மாவின் புத்திரரான புலஸ்த்திய பிரஜாபதியினுடைய பேரன் ராவணன். விச்ரவஸ் ரிஷியின் மகன். அவர் சொல்படி கேட்டு நடந்து கொள் இல்லை என்றால் உன்னை கொன்று விடுவார்கள் என்றாள் ஒரு ராட்சசி. இன்னோரு ராட்சசி தேவர்களை எல்லாம் யுத்தம் செய்து துரத்தியடித்த வெற்றி வீரன் ராவணன் உன்னை தேடி வருகின்றார். சூரியனும் அக்னியும் வாயுவும் கூட ராவணனை கண்டு பயப்படுவார்கள். ராவணனுக்கு சமமான வீரன் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை இது உனக்கு தெரியவில்லையா? தானாகவே ஒரு பாக்கியம் உன்னை வந்து சேருகிறது அதை வேண்டாம் என்று நீ சொல்வது மடத்தனமாக இருக்கிறது. கர்வப்பட்டு அழிந்து போகாதே அவர் சொல்படி நீ கேட்காவிட்டால் நீ பிழைக்க மாட்டாய் என்றாள். ஒவ்வோரு ராட்சசிகளாக மாற்றி மாற்றி சீதையிடம் பேசிக்கொண்டே இருந்தார்கள். ராவணனைப் பற்றி பெருமையாகவும் ராமரை சிறுமைப்படுத்தியும் தங்களால் இயன்ற வரை அமைதியாகவும் சில நேரங்களில் பயமுறுத்தியும் பேசினார்கள். இறுதியில் ஒருத்தி சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி விட்டோம் இனி உன்னுடைய விருப்பம் என்று கூறினார்கள்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 4

அனுமன் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் தன் உருவத்தை அதற்கேற்றார் போல் மாற்றிக்கொண்டு சென்று தேடி பார்த்தார். இலங்கை நகரம் முழுவதும் தேடி விட்டார். ராவணன் மாளிகை முழுவதும் தேடி விட்டார். சீதை எங்கும் காணவில்லை. என்ன செய்வது என்று அனுமனுக்கு தெரியவில்லை. சீதையை ராவணன் கொன்றிருப்பானோ என்ற சந்தேகம் அனுமனுக்கு வந்தது. இனி என்ன செய்வது சீதையை காணாமல் கிஷ்கிந்தைக்கு திரும்ப முடியாது. எடுத்துக் கொண்ட காரியத்தை முடிக்காமல் திரும்ப செல்வது வீரனுக்கு அழகில்லை. இங்கேயே நமது உயிரை விட்டு விடலாம் என்று எண்ணி மனம் சோர்வடைந்து உயரமான ஓர் இடத்தில் அமர்ந்தார் அனுமன். தூரத்தில் பெரிய மதில் சுவருடன் கூடிய அசோகவனம் கண்ணில் பட்டது. இலங்கை நகரத்திற்கு தொடர்பில்லாமல் தனியாக இருந்தது அசோகவனம். இந்த வனத்தில் சீதை இருக்கலாம் என்று புத்துணர்ச்சி அடைந்தார் அனுமன். அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு அசோக வனத்திற்குள் குதித்தார் அனுமன். உள்ளே குதித்ததும் அனுமனுக்கு மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்பட்டது. இங்கு நிச்சயம் சீதையை காண்பேன் என்று புத்துணர்ச்சி அடைந்தார். உயரமான மரத்தின் மீது நின்று கொண்டு சீதையை தேட ஆரம்பித்தார். தூரத்தில் ஓர் மரத்தடியில் கண்ணைக் கூசும் வகையில் பேரழகுடன் பெண் ஒருத்தி அமர்ந்திருப்பதை கண்டார். அவரை சுற்றி அகோர வடிவத்துடன் ராட்சசிகள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். ராட்சசிகளின் நடுவே தெய்வீகமான முகத்தில் நடுக்கத்துடன் கசங்கி அழுக்கு படிந்த உடையில் பயமும் துயரத்தையும் வைத்துக் கொண்டு அழுததினால் முகம் வாடியிருப்பதையும் கண்டதும் இவரே சீதை என்று முடிவு செய்தார்.

அனுமன் சீதையை பார்த்துவிட்டேன் என்று துள்ளி குதித்தார். அடுத்து என்ன செய்யலாம் என்று சுற்றிலும் பார்த்தார். சீதையை பார்த்த மகிழ்ச்சியில் இருந்த அனுமன் அவரின் நிலையை கண்டதும் மிகவும் துக்கமடைந்தார். அப்போது இருட்டு மறைந்து காலை சூரியன் மெல்ல வெளிவந்தது. வேத மந்திரங்கள் முழங்க ராவணன் எழுப்பப்பட்டான். காலையில் எழுந்ததும் தன் படை பரிவாரங்களுடன் சீதையை பார்க்க ராவணன் வந்தான். இரவில் தூங்கும் பொது கண்டதை விட இப்போது மேலும் பராக்கிரமசாலி போல் ராவணன் அனுமனுக்கு தெரிந்தான். நடப்பவற்றை அறிந்து கொள்ள அனுமன் மரத்து இலைகளுக்கிடேயே தன்னை மறைத்துக் கொண்டார். சீதை ராவணனை கண்டதும் பெரும்காற்றில் மரங்கள் நடுங்குவதை போல நடுங்கினாள். சீதையிடம் ராவணன் பேச ஆரம்பித்தான். அழகியே என்னை கண்டதும் ஏன் நடுங்குகிறாய் நான் உன் மேல் வைத்திருக்கும் அன்பை நீ தெரிந்து கொள். என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். உன்னுடைய முழுமையான அன்பு என் மீது வரும் வரையில் நான் உன்னை தொட மாட்டேன். உன் விருப்பத்திற்கு மாறாக இங்கு எதுவும் நடக்காது. வீணாக தூக்கத்துடன் இருந்து உன் உடலை ஏன் நீ வருத்திக் கொள்கிறாய். உனக்கு சமமான அழகி இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை. நகைகள் வைர வைடூரியங்கள் அணிந்து பட்டு துணிகளை அணிந்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய நீ ஏன் உன் அழகையும் வயதையும் வீணடித்துக் கொள்கிறாய். நான் இருக்குமிடம் நீ வந்து சேர்ந்து விட்டாய். என்னுடன் சேர்ந்து நீ சகல சந்தோசங்களையம் போகங்களையும் அனுபவித்து மகிழ்ச்சியுடன் இருக்கலாம். நீயே பட்டத்தரசியாக இருந்து என் அந்தப்புரம் முழுவதையும் அதிகாரம் செய்து நீயை தலைவியாக இருக்கலாம். தவத்திலும் செல்வத்திலும் புகழிலும் ராமனை விட நானே மிகவும் மேம்பட்டவன் என்பதை தெரிந்துகொள். காட்டில் மரவுரி தரித்துக் கொண்டு இருக்கும் ஒருவனை இனியும் நம்பாதே. இனி நீ அவனை நீ கண்ணால் பார்க்க முடியாது. அவன் இங்கு வரமட்டான். என் சொல்லை கேட்டால் சகல ஜஸ்வர்யங்களையும் அனுபவிக்கலாம் என்று சீதையிடம் ராவணன் நயத்துடன் கூறினான்.

அனுமன் ராவணன் பேச்சில் மேலும் துள்ளிக்குதித்தார். இவரே சீதை என்பது உறுதியாகி விட்டது என்று ஆனந்தப்பட்டார். ராவணனின் பேச்சிற்கு சீதை தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு பதில் கூறினாள். நீ செய்வது பேசுவது அனைத்தும் தகாத காரியமாக இருக்கிறது. நான் யார் என்பதையும் என் பிறந்த வீடு புகுந்த வீட்டின் வரலாற்றை அறிந்து கொண்டு பேசு. என்னை பற்றிய உன் எண்ணத்தை உடனே மறந்துவிடு. வேறொருவன் மனைவி எப்போதும் உன் மனைவியாக முடியாது. தர்மத்துடன் உன் மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருந்து உன் உயிரை காப்பாற்றிக்கொள். இல்லையென்றால் அவமானத்தையும் துக்கத்தையும் நீ விரைவில் அடைவாய் தெரிந்து கொள் என்று மேலும் சீதை பேசினாள்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 3

அனுமன் நகரத்திற்குள் தனது இடது காலை வைத்ததும் இலங்கை நகரத்தை காவல் காத்துக் கொண்டிருந்த அதிதேவதை அனுமனின் முன்பு வந்து யார் நீ என்று இறுமாப்புடன் அதட்டலாக கேட்டாள். அதற்கு அனுமன் நான் சாதாரண வானரன் இந்த நகரத்தின் அழகை கண்டு ரசித்துப் பார்க்க வந்தேன். ஆசை தீர இந்த நகரத்தை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பிச் சென்று விடுவேன் என்று கூறினார். என்னை மீறி இந்த நகரத்திற்குள் யாரும் செல்ல முடியாது என்னை வெற்றி பெற்றால் மட்டுமே செல்ல முடியும் என்றாள் அதிதேவதை. அனுமன் நான் உள்ளே செல்வேன் என்னை தடுக்க நீ யார் என்று கேட்டார். அனுமனின் கேள்வியால் கோபமடைந்த அதிதேவதை அனுமனை ஒர் அடி அடித்தாள். இதனால் கோபம் கொண்ட அனுமன் அதிதேவதை ஒரு பெண் என்பதால் தனது இடக்கையால் லேசாக குத்தினார். அனுமனின் லேசான குத்தில் கீழே சுருண்டு விழுந்தாள் அதிதேவதை. கலங்கிப் போன தேவதை தனது இறுமாப்பை அடக்கிக் கொண்டு பார்க்கிரமம் உடையவரே இந்த இலங்கையை பாதுகாத்துக் கொண்டிருக்கும் அதிதேவதை நான். ஒரு முறை பிரம்மாவிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு பிரம்மா எப்பொழுது ஒரு வானரன் தனது பராக்கிரமத்தினால் உன்னே அடக்குகின்றானோ அப்பொழுது ராட்சசர்களுக்கு அழிவு காலம் வந்து விட்டது என்பதை உணர்ந்து கொள் என்று கூறியிருந்தார். அதன்படி இப்பொழுது நீங்கள் உங்கள் பராக்கிரமத்தினால் என்னை அடக்கி விட்டீர்கள். இதனால் ராட்சசர்களுக்கு அழிவு காலம் வந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டேன். இப்போது நீங்கள் உங்கள் விருப்பப்படி இந்த இலங்கை நகரத்திற்குள் சென்று உங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தாள்.

அனுமன் நகரத்திற்குள் காலை வைத்ததும் எதிரியின் தலை மீது தன் காலை வைப்பது போலிருந்தது அனுமனுக்கு. குபேரனின் நகரத்திற்கு இணையாக அழகுடனும் செல்வச் செளிப்புடனும் இருந்தது நகரம். மாளிகைகள் வீடுகள் அனைத்தும் தங்கத்தாலும் நவரத்தினங்களாலும் ஜொலித்தது. வீதிகள் அனைத்தும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நகரத்திற்குள் கொடூரமான வடிவத்துடன் வில் அம்பு கத்தி என்று பல விதமான ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு கவசத்துடன் வீரர்கள் பலர் நகரத்தை காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் அகோரமாகவும் பல நிறங்களையும் பல வடிவங்ளையும் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். ஒவ்வோரு மாளிகையாக அனுமன் தேடிக்கொண்டே வந்தார். எங்கும் சீதையை பார்க்க முடியவில்லையே என்று அனுமன் வருத்தமடைந்தார்.

அனுமன் விண்ணையே முட்டும் அளவிற்கு பெரிய மாளிகை ஒன்றை கண்டார். அங்கு ராவணனின் பறக்கும் புஷ்பக விமானம் இருந்தது. இந்த விமானம் பிரம்மாவிடம் இருந்து குபேரன் பெற்றிருந்தான். அதை ராவணன் கொண்டு வந்து வைத்திருந்தான். புஷ்பக விமானத்தை பார்த்த அனுமன் இது ராவணனின் மாளிகையாக இருக்கும் என்று எண்ணி இங்கு சீதை இருக்கலாம் என்று ராவணனின் மாளிகைக்குள் நுழைந்தார். சமைக்கும் இடம் உணவருந்தும் இடம் என்று ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தார் எங்கும் சீதையை காணவில்லை. பெண்கள் மட்டும் இருக்கும் அறைக்கு அவர்களின் அனுமதி இல்லாமல் செல்லக்கூடாது என்ற தர்மத்தையும் மீறி பெண்களின் அறைக்குள்ளும் சென்று பார்த்தார் அங்கும் சீதை இல்லை. ஓர் அறையில் தங்கத்தினாலும் வைரத்தினாலும் செய்யப்பட்ட ஒரு கட்டிலில் ஓர் மலை போல் ஒர் ராட்சசன் படுத்திருந்தான். அவனுடைய ரூபத்தை கண்டு அனுமன் ஒரு சில கனம் பிரம்மித்து நின்று பார்த்தார். யானையின் தும்பிக்கை போன்ற கைகளும் மார்பில் விஷ்ணுவின் சக்ராயுதம் மற்றும் இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட வடுவும் இந்திரனின் ஐராவதன் யானையின் தந்தம் குத்தப்பட்ட தழும்புடன் இருப்பதை பார்த்த அனுமன் படுத்திருப்பது ராவணன் உன்பதை தெரிந்து கொண்டார். அனுமன் சுற்றிலும் பார்த்தார் பல பெண்கள் அந்த அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் தலைவி போல் இருந்த பெண்ணின் அழகும் முக லட்சணமும் அவை சீதையாக இருக்குமோ என்று அனுமனுக்கு சந்தேகம் வந்தது. அடுத்த கனம் இது என்ன மடமை சீதையை தவறாக நினைத்து விட்டோமே ராமரை பிரிந்த சீதை துக்கத்தில் இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு ராவணனின் அந்தப்புரத்திலா தங்கியிருப்பாள். இது சீதை கிடையாது என்று முடிவு செய்தார்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 2

அனுமன் கூறியதை கேட்ட சுரஸை என்னை தாண்டி யாரும் செல்ல முடியாது இது பிரம்மாவினால் எனக்கு கொடுக்கப்பட்ட வரம் எனது வாய்க்குள் சென்று வெளியே வர முடிந்தால் நீங்கள் செல்லலாம் என்று தனது வாயை திறந்து வைத்துக் கொண்டாள் சுரஸை. அனுமன் தன் உடலை மேலும் பத்து மடங்கு பெரியதாக்கி கொண்டு எனது உடல் செல்லும் அளவிற்கு உனது வாயை திறந்து கொள் என்றார் அனுமன். சிரஸை தன் உடலை அனுமன் உடலை விட இருபது மடங்கு பெரியதாக்கிக் கொண்டாள். சாமர்த்தியசாலியான அனுமன் சில கனத்தில் தனது உடலை கட்டை விரல் அளவிற்கு சிறியதாக்கிக் கொண்டு வேகமாக சுரஸையின் வாய்க்குள் புகுந்து வேகமாக வெளியே வந்து சுரஸையின் முன்பாக நின்றார். ராட்சசியே ராம காரியத்தை முடித்ததும் உனது வாய்க்குள் புகுவேன் என்று முன்பு நான் கொடுத்த உறுதி மொழியை இப்போதே நிறைவேற்றி விட்டேன். பிரம்மாவினால் உனக்கு கொடுத்த வரத்தையும் நான் மீறவில்லை. இப்பொது நான் உன்னை தாண்டி செல்கிறேன் உன்னால் முடிந்தால் என்னை தடுத்துப்பார் என்றார். உடனே சுரஸை தனது சுய உருவத்தை அடைந்து தேவர்கள் உங்களது பராக்கிரமத்தையும் சாமர்த்தியத்தையும் பார்ப்பதற்காக என்னை அனுப்பியிருந்தார்கள். விரைவில் ராம காரியத்தை முடிப்பீர்களாக என்று வாழ்த்தி அனுமன் செல்ல வழி கொடுத்தாள்.

அனுமன் கருடனுக்கு நிகரான வேகத்தில் சென்று கொண்டிருந்தார். அனுமனுக்கு அடுத்த சோதனை வந்தது. ராட்சச பிராணி ஒன்று அனுமனை பார்த்து இன்று உணவு கிடைத்து விட்டது என்று அனுமனின் நிழலைப் பிடித்து இழுத்தது. தன்னை யாரோ பிடித்து இழுப்பது போலவும் தனது வேகம் குறைவதையும் உணர்ந்த அனுமன் தன்னைச் சுற்றிப் பார்த்தார். கடலில் இருக்கும் ஒரு ராட்சச பிராணி தன் நிழலை பிடித்து இழுப்பதை பார்த்தார். இந்த பிராணியை பற்றி சுக்ரீவன் ஏற்கனவே சொல்லியிருப்பது அனுமனுக்கு நினைவு வந்தது. நிழலைப் பிடித்து இழுத்து சாப்பிடும் சிம்ஹிகை என்ற பிராணி என்று தெரிந்து கொண்டு தன் உடலை மேலும் பெரிதாக்கினார். பிராணியும் தன் உடலை பெரிதாக்கிக் கொண்டு அனுமன் உள்ளே செல்லும் அளவிற்கு தனது வாயை திறந்து கொண்டு அனுமனை நோக்கி விரைந்து வந்தது. அனுமன் தன் உடலை சிறியதாக்கிக் கொண்டு மனோ வேகத்தில் பிராணியின் வாய் வழியாக அதன் வயிற்றுக்குள் புகுந்து தனது நகங்களால் வயிற்றை கிழித்து ராட்சச பிராணியை கொன்று வெளியே வந்தார். பிராணி இறந்து கடலில் மூழ்கியது. தனது உடலை பழையபடி பெரியதாக்கி இலங்கை நோக்கி சென்றார். தூரத்தில் மரங்களும் மலைகளும் அனுமனுக்கு தெரிந்தன. இலங்கை வந்து விட்டோம் என்பதை அறிந்தார். இவ்வளவு பெரிய உருவத்துடன் இலங்கை சென்றால் தூரத்தில் வரும் போதே நம்மை கண்டு பிடித்து விடுவார்கள் யாருக்கும் தன்னைப்பற்றி தெரியக்கூடாது என்று எண்ணிய அனுமன் தனது இயற்கையான உருவத்திற்கு மாறி இலங்கையில் உள்ள லம்பம் என்னும் மலை சிகரத்தின் மீது இறங்கினார்.

அனுமன் சுற்றிலும் பார்த்தார். இலங்கையின் வளம் குபேரனின் அழாகபுரியை போல் ஜஸ்வர்யத்தின் உச்சத்தில் இருந்தது. திருகூட மலையில் ராவணனின் கோட்டை தாமரை நீலோத்பலம் என்னும் மலர்களால் அகழி போல சுற்றி அழகுடன் இருந்ததை கண்டார். இலங்கை நகரத்தை விருப்பப்படி உருவத்தை மாற்றிக் கொள்ளும் வலிமையான ராட்சசர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். அனுமன் நிதானமாக யோசித்தார். நாம் யார் எங்கிருந்து வந்திருக்கின்றோம் எதற்காக வந்திருக்கின்றோம் என்று யாருக்கும் தெரியாத வகையில் சீதையை தேட வேண்டும் என்று முடிவு செய்தார். பகலில் சென்றால் யார் கண்ணிலாவது பட்டு விடுவோம் என்று இரவு வரை காத்திருந்த அனுமன் மிகவும் சிறிய உருவத்திற்கு மாறினார். இலங்கையின் நகரத்திற்குள் நுழைய முற்பட்டார். இவ்வளவு காவல் இருக்கும் நகரத்திற்குள் புகுந்து எப்படி சீதையை தேடுவது என்ற வருத்தமும் விரைவில் சீதையை பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் சென்றார் அனுமன். விரோதியின் கோட்டையின் நுழைவு வாயில் வழியாக செல்லக்கூடாது என்ற யுத்த நியதியின்படி வேறு வழியாக ராம காரியம் நிறைவு பெற வேண்டும் என்று எண்ணி தனது இடது காலை வைத்து இலங்கை நகரத்திற்குள் நுழைந்தார் அனுமன்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 1

ராம காரியமாக செல்லும் அனுமன் வானரங்களிடம் பேசினார். இலங்கை செல்லப் போகிறேன். அங்கு சீதையை காணவில்லை என்றால் அங்கிருந்து தேவலோகத்திற்கு தாவிச் சென்று தேடுவேன். அங்கும் இல்லை என்றால் சீதையை தூக்கிச் சென்ற ராவணனை கட்டி இழுத்துக் கொண்டு வருவேன். தேவைப்பட்டால் இலங்கை மொத்த நகரத்தையும் பெயர்த்தெடுத்து வந்து விடுவேன் என்றார். தன்னை கருடனாகவே பாவித்துக் கொண்டு ராம பாணத்தில் இருந்து வேகமாக வெளியேரும் அம்பு போல் அனுமன் வேகமாக தாவினார் அனுமன். அனுமன் ஆகாயத்தில் செல்லும் வேகத்தில் அங்கிருக்கும் மேகக்காற்று எழுப்பிய சத்தங்கள் பெருங்கடலை நடுங்கச் செய்தது. சூழ்நிலைக்கு ஏற்ப சாமர்த்தியமும் அறிவும் சிந்தனை வேகமும் கொண்ட அனுமனுக்கு வழியில் சில சோதனைகள் வந்தது. வானவீதியில் செல்லும் அனுமனை முனிவர்கள் வாழ்த்தினார்கள்.

ராம காரியமாக செல்லும் அனுமனை பார்த்த கடலரசன் அனுமனுக்கு உதவி செய்ய எண்ணினார். கடலின் நடுவில் அனுமன் இளைப்பாறிச் செல்வதற்கான ஏற்பாடுகளை செவ்வோம் இதனால் அனுமன் மேலும் புத்துணர்ச்சியுடன் செல்வார் என்று எண்ணினார். தனது கடலுக்குள் இருக்கும் மைனாகம் என்னும் மலையிடம் தண்ணிருக்குள் இருந்து மேலே வந்து அனுமனுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். கடலரசன் கேட்டுக் கொண்டதால் மைனாகம் என்னும் மலை தண்ணீரில் இருந்து விரைவாக மேலே இருந்து வந்தது. கடலுக்கு நடுவே தானாக மேலெழுந்து வரும் மலையைப் பார்த்து இந்த மலை நமக்கு நடுவே ஒர் இடையூறாக இருக்கிறது என்று எண்ணிய அனுமன் மிகவும் வேகத்தோடு அந்த மலையை மேகத்தை தள்ளுவது போல தள்ளினார். அனுமனால் தள்ளப்பட்ட மலையானது அனுமனின் வேகத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்து பெரிதும் ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தது. மலை வடிவில் இருந்து மனித உருவத்தை பெற்று அனுமனிடம் பேசத் தொடங்கியது.

ராம காரியமாக செல்லும் தங்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் கடலரசன் என்னை வெளியே வருமாறு கேட்டுக் கொண்டார். இங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டுப் பிறகு செல்லுங்கள் என்றது மைனாகம் மலை. அதற்கு அனுமன் உங்கள் வரவேற்பினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் எனக்கு இங்கு தங்குவதற்கு நேரம் இல்லை. நான் இங்கு தங்கிச் சென்றால் ராம காரியம் மேலும் தாமதமாகும். நான் விரைவாக செல்ல வேண்டும். உங்களை எனது வேகத்தால் தள்ளியதாலும் இங்கு தங்க மறுப்பதாலும் என் மீது கோபம் கொள்ளாதீர்கள் என்று மலையை கடந்து சென்றார் அனுமன். அனுமனின் பராக்கிரமத்தை பார்த்த தேவர்கள் மேலும் அனுமனின் வலிமையையும் சாமர்த்தியத்தையும் பார்க்க விரும்பினார்கள். அதனால் நாகமாதாவான சுரஸையிடம் ராம காரியமாக அனுமன் கடலை தாண்டிக் கொண்டிருக்கிறார் அவர் செல்லும் வழியில் சென்று இடையூறு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு நாகமாதா சுரஸையும் சம்மதித்து அனுமன் தாண்டிக்கொண்டிருக்கும் இடத்திற்கு சென்றாள்.

ராம காரியமாக செல்லும் அனுமனின் முன்பாக கொரமான பெரிய ராட்சச உருவத்தை எடுத்த நாகமாதா சுரஸை அனுமனை தடுத்து நிறுத்தினாள். வானர வீரனே இன்று தெய்வங்களின் அருளால் எனக்கு நீ உணவாக கொடுக்கப் பட்டிருக்கிறாய். உன்னை சாப்பிடப் போகிறேன் எனது வாய்க்குள் நீயாக சென்றுவிடு என்றாள். அவளை வணங்கிய அனுமன் ராம காரியமாக இப்பொழுது நான் இலங்கைக்கு சென்று கொண்டிருக்கிறேன். நான் இங்கு உனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்கின்றேன். இலங்கையில் சீதையை கண்டதும் அச்செய்தியை ராமரிடம் சொல்லி விட்டு மீண்டும் உன்னிடம் வந்து உனது விருப்பப்படி வாய்க்குள் செல்கிறேன். இப்பொழுது ராம காரியத்துக்கு செய்யும் உதவியாக எனக்கு வழி விடுவாயாக என்று கேட்டுக் கொண்டார்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 24

அனுமன் அமைதியாக அனைவருக்கும் நடுவில் வந்து நின்றார். அனுமனிடம் ஜாம்பவான் பேச ஆரம்பத்தார். எல்லா சாஸ்திரங்களையும் அறிந்த வீரனே தனியாக ஏன் பேசாமல் அமர்ந்து இருக்கின்றாய். பேச்சிலும் பலத்திலும் நம் அனைவரையும் விட முதன்மையானவனாக இருக்கும் நீ சுக்ரீவனுக்கு சமமானவன். கருடன் கடலை தாண்டி பறப்பதை நான் பார்த்திருக்கின்றேன். அந்த கருடனுடைய சிறகுகளின் பெரும் பலம் உனது தோள்களுக்கும் உண்டு. பராக்கிரமத்திலும் வேகத்திலும் கருடனுக்கு நிகரானவன் நீ. உனது தாயார் அஞ்சனை தேவலோகத்து தேவதை ஆவாள். ரிஷி ஒருவரின் சாபம் காரணமாக வானரமாக பிறந்தாள். அவளுக்கும் வாயுதேவனுக்கும் மானச புத்திரனாக பிறந்தவன் நீ. வாயு தேவனுக்கு சமமான வீரியமும் பலமும் உன்னிடம் இருக்கிறது. நீ சிறு குழந்தையாக இருக்கும் போதே சூரியனை பார்த்து அது ஒரு பழம் என்று எண்ணி அதை பிடிப்பதற்காக ஆகாயத்திற்கு தாவிச் சென்றாய். நீ பயமின்றி வானத்திற்கு தாவுவதைப் பார்த்த தேவராஜன் இந்திரன் மிகவும் கவலை கொண்டு யார் இவன் இப்படி தாவுகிறான் என்று தன்னுடைய வஜ்ராயுதத்தை உன் மீது வீசினான். வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட நீ ஒரு மலை மீது விழுந்தாய். பலத்த அடிபட்ட உன்னை கண்ட உனது தந்தை வாயு பகவான் கோபப்பட்டு தனது தொழிலான காற்றை வெளியிடுவதை நிறுத்தி விட்டார். இதனால் உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஜீவன்கள் அனைத்தும் பிராண வாயு இன்றி தவித்துப் போனது. தேவர்கள் வாயு பகவானிடம் கோபம் தணிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனாலும் வாயுபகவானின் கோபம் குறையவில்லை. அதன் பிறகு பிரம்மனும் இந்திரனும் வாயுதேவனிடம் உனது மகனுக்கு எந்த ஆயுதத்தாலும் மரணம் வராது. அவன் விருப்பப்பட்டால் மட்டுமே அவனுக்கு மரணம் நிகழும். அது வரை மரணம் அவனை நெருங்காது என்ற வரத்தை கொடுத்தார்கள். இதனால் நீ சிரஞ்சீவி என்னும் பட்டத்தை பெற்றாய். இந்த பட்டத்தையும் பலத்தையும் பெற்ற நீ மற்றவர்களை போல் துஷ்பிரயோகம் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறாய். இந்த கடலை தாண்டுவது உனக்கு பெரிய காரியமில்லை.

ராம காரியத்திற்காக உனது பராக்கிரமத்தை காட்டும் நேரம் வந்து விட்டது. உன்னால் விரும்பிய அளவிற்கு உனது உடலை பெரிதாக்கிக் கொள்ள முடியும். கடலை தாண்டும் சக்தியுடைய நீ ஏன் அமைதியாக இருக்கிறாய்? உன்னை நாங்கள் அனைவரும் சரணடைகிறோம் அனுமனே இனியும் தாமதிக்க வேண்டாம். உன்னுடைய உண்மை பலத்தை அறிந்து கொண்டு அதனை செயல்படுத்து. ஒரே தாவலில் இந்த கடலை தாண்டி இலங்கையை சென்றடைந்து ராம காரியத்தை செய்து முடித்து வானரங்களின் துயரை தீர்ப்பாய் என்று அனுமனின் பராக்கிரமத்தை ஜாம்பவான் தட்டி எழுப்பினான். ஜாம்பவன் சொல்லி முடித்ததும் அனுமன் தன்னுடைய சக்தியை உணர தொடங்கி அதனை வெளிக்காட்டினார். வானரங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அனுமனின் உடலும் தேஜசும் வளர்ந்து கொண்டே இருந்தது. அதனை கண்ட அங்கதனும் அனைத்து வானரங்களும் வியந்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ராம காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று அனுமன் சங்கல்பம் செய்து கொண்டார். நம்பிக்கையுடன் ஆவேசமாக ஜாம்பவானிடம் பேச தொடங்கினார் அனுமன். நீங்கள் சொன்னபடியே இந்த கடலை தாண்டுவேன். ராவணன் தூக்கிச் சென்ற சீதையை தேடிக் கண்டு பிடித்துவிட்டு திரும்பி வருவேன். இது நிச்சயம் சந்தேகம் வேண்டாம் நான் வரும் வரையில் இங்கேயே எனக்காக காத்திருங்கள் நாம் அனைவரும் ஒன்றாக கிஷ்கிந்தைக்கு செல்வோம் என்றார். அதன்பிறகு கடல் தாண்டி இலங்கை செல்வதற்கு தகுந்த இடத்திற்கு சென்று மனதை ஒரு நிலைப்படுத்தினார். சூரியனையும் இந்திரனையும் வாயு தேவனையும் பிரம்மாவையும் தியானித்து வணங்கினார். உடலை இன்னும் பெரிதாக்கிக் கொண்டு பூமியை தன் காலால் மிதித்து கைகளால் அடித்து இலங்கைக்கு தாவினார் அனுமன்.

கிஷ்கிந்தா காண்டம் முற்றியது அடுத்து சுந்தர காண்டம்

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 23

ராம காரியத்தை செய்த சம்பாதி கழுகிற்கு முனிவர் சொன்னது போல் புதிய சிறகுகள் மீண்டும் முளைக்க ஆரம்பித்தது. வசீகர அழகுடன் பிரகாசித்த கழுகு சிறகுகளை அடித்து பறந்து மகிழ்ச்சி அடைந்து அங்கதனிடம் பேச ஆரம்பித்தது. சூரியனால் எரிக்கப்பட்ட எனது சிறகுகள் ராம காரியத்தை செய்து முடித்ததும் முனிவர் சொன்னபடி மீண்டும் முளைத்து விட்டது. வாலிபப் பருவத்தில் எனக்கிருந்த பராக்கிரமமும் வலிமையும் மீண்டும் எனக்கு கிடைத்து விட்டது. முனிவரின் வாக்கு சத்திய வாக்கு என்று நிருபிக்கப்பட்டு விட்டது. இந்நிகழ்ச்சியே நீங்கள் சீதையை காண்பீர்கள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதற்கான சான்று. இனி உங்கள் காரியத்தை தொடருங்கள் என்று சொல்லி விட்டு கடற்கரையில் தம்பி ஜடாயு கழுகிற்கு கிரியைகள் செய்து திருப்தி அடைந்தது சம்பாதி கழுகு.

சீதை இருக்கும் இடமும் ராட்சசன் ராவணன் இருக்கும் இடமும் சம்பாதி கழுகின் வழியாக வானரங்களுக்கு தெரிந்து விட்டது. சுக்ரீவனிடம் பொய் சொல்வதற்கு இது போதும் என்று வானரங்கள் எண்ணினார்கள். சம்பாதி கழுகு சொன்னதை மட்டும் வைத்துக் கொண்டு சீதையை நேரில் பார்க்காமல் சூக்ரீவனிடத்தில் இந்த செய்தியை சொல்ல முடியாது. சீதையை தேடும் காரியத்தை நிறுத்தி கிஷ்கிந்தைக்கு செல்வது சரியல்ல என்று அங்கதன் கூறினான். 100 யோசனை தூரம் கடல் தாண்டி இலங்கை சென்று பார்த்தால் மட்டுமே ராம காரியம் செய்து முடித்தது போல் இருக்கும். 100 யோசனை தூரம் தாண்டிச் சென்று சீதையை நேரில் எப்படி பார்ப்பது என்று தெரியாமல் வானரங்கள் திகைத்தார்கள். வானரங்கள் மறுபடியும் கவலையில் மூழ்கினார்கள். அங்கதன் பேச ஆரம்பித்தான். எந்த காரியம் என்றாலும் எப்படி சாதிக்கலாம் என்று எண்ண வேண்டும். தைரியத்தை இழக்க வேண்டாம். உங்கள் தாவும் சக்திகளைப் பற்றி சுக்ரீவன் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். வானர வீரர்களே யார் யாருக்கு அதிகமான தூரம் தாவும் சக்திகள் உள்ளது? உங்களுடைய தாவும் சக்திகளைப் பற்றி ஒவ்வோருவராக சொல்லுங்கள். அதன் பிறகு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் என்றான் அங்கதன். கஜன் என்ற வானரம் நான் பத்து யோசனை தூரம் தாண்டுவேன் என்றான். கவாஷன் என்ற வானரம் நான் இருபது யோசனை தூரம் தாண்டுவேன் என்றான். ஒவ்வோரு வானரமாக அதிகமான யோசனை தூரத்தை சொல்லிக் கொண்டே வந்தார்கள். இறுதியில் அனைவரையும் விட மூத்தவரான ஜாம்பவன் பேச ஆரம்பத்தான். இளமையில் நான் 100 யோசனை தூரத்திற்கும் அதிகமான தூரத்தை தாண்டி இருக்கிறேன். இப்போது முதுமை தன்மை காரணமாக என்னால் 90 யோசனை தூரம் மட்டுமே தாண்ட முடியும். ஆனால் இலங்கை 100 யோசனை தூரம் இருக்கிறது. என்னால் அங்கு செல்ல முடியவில்லேயே வயதாகி விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. இளமையோடு இருந்தால் நிச்சயமாக இந்நேரம் தாண்டியிருப்பேன் என்று அங்கதனிடம் கூறினான்.

சீதை இருக்கும் இலங்கைக்கு 100 யோசனை தூரம் தாண்டி இலங்கையை என்னால் சென்று சேர முடியும் என்றான் அங்கதன். அனைத்து வானரங்களும் அங்கதனின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தார்கள். உடனே அங்கதன் சீதையை கண்டபின் உடனடியாக மறுபடியும் அங்கிருந்து திரும்பவும் இவ்வளவு தூரம் தாவும் சக்தி எனக்கு இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை என்றான். அதற்கு ஜாம்பவான் அங்கதா அதைப் பற்றி நீ சந்தேகப்பட வேண்டியதில்லை. உனது தந்தையான வாலிக்கு இருந்தது போலவே அளவற்ற சக்தி உனக்கும் உண்டு. உன்னால் 100 யோசனை தூரம் மட்டுமல்ல அதனை தாண்டியும் உன்னால் சென்று விட்டு மீண்டும் திரும்ப வரவும் முடியும். அதற்கேற்ற சக்தி உன்னிடம் உள்ளது. ஆனால் இந்த காரியத்தை யுவராஜாவாகிய நீ செய்தால் சரியாக இருக்காது. நீ மற்றவர்களுக்கு உத்தரவிட்டு அனைத்து காரியங்களையும் செய்து முடித்தல் வேண்டும். இதுவே ராஜநீதி ஆகும். இச்செயலை செய்ய சரியான நபர் அனுமனே. அதோ ஒரு ஓரத்தில் மௌனமாக அமர்ந்திருக்கும் அனுமனே இக்காரியத்தை செய்து முடிக்கும் திறமை பெற்றவன் என்று சொல்லி அனுமனை அருகில் அழைத்து வந்தான் ஜாம்பவான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 22

அனுமன் அங்கதனிடம் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு செய்வோம். நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று தைரியம் கூறினார். கடற்கரையில் கும்பலாக உணவில்லாமல் அமர்ந்திருந்த வானரங்களை அருகில் மலை மீதிருந்த கழுகரசன் சம்பாதி பார்த்துக் கொண்டிருந்தான். சிறகுகள் இழந்து பறக்க முடியாமல் பட்டினியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த கழுகரசன் சம்பாதி இத்தனை வானரங்கள் உணவில்லாமல் பட்டினியால் ஒரே இடத்தில் இறந்து போகப் போகின்றார்கள். நமக்கு இன்று உணவு சுலபமாக கிடைத்து விட்டது என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தது. அப்பொழுது வானரங்கள் ஒருவருக்கொருவர் தசரதன் இறந்தது முதல் ராமர் காட்டிற்கு வந்தது சீதையை ராவணன் தூக்கிச் சென்றது ஜடாயு கழுகு இறந்தது என்று அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்பேச்சில் ஜடாயு இறந்து விட்டான் என்ற செய்தியை கேட்டதும் திடுக்கிட்டது கழுகு. எனது தம்பி ஜடாயு இறந்து விட்டானா என்று அது பற்றி மேலும் தெரிந்து கொள்ள கழுகரசன் சம்பாதி ஆர்வமடைந்தது. என் அன்புக்குரிய அருமை தம்பி ஜடாயு பற்றி பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் யார் நடந்தது என்ன என்று விவரமாக சொல்லுங்கள் என்று மலை மீதிருந்து கத்தியது.

அனுமன் பறக்க முடியாமல் இருந்த கழுகை கீழே தூக்கிவர ஒரு வானரத்தை கேட்டுக் கொண்டார். கீழே வந்த கழுகரசன் சம்பாதி பேசத் தொடங்கியது. கருடனும் அருணனும் அண்ணன் தம்பிகள். அண்ணன் கருடனுக்கு நானும் ஜடாயுவும் இரண்டு குமாரர்கள். நானும் ஜடாயுவும் சிறு வயதிலிருந்தே நாங்கள் பெற்ற அபார சக்தியை அனுபவித்துக் கொண்டு இருந்தோம். ஒரு நாள் ஆகாயத்தில் போட்டு போட்டுக் கொண்டு மேலே கிளம்பினோம். சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரித்தது. சிறுவனான ஜடாயு மிகவும் சோர்வடைந்தான். வெப்பம் ஜடாயுவை எரித்து விடும் போலிருந்தது. உடனை எனது சிறகுகளை விரித்து ஜடாயுவை காப்பாற்றினேன். அவன் உயிர் பிழைத்தான். எனது சிறகுகள் எரிந்து பறக்க முடியாமல் இந்த மலை மேல் விழுந்தேன். இந்த மலையின் மீது இருந்த நிசாகர் என்ற முனிவரிடம் எனக்கு விமோசனம் கேட்டேன். முக்காலமும் உணர்ந்த அவர் ராம அவதாரத்தை இறைவன் விரைவில் எடுப்பார். அப்போது ஓர் ராம காரியத்தை நீ செய்வாய். அப்போது உனது சிறகுகள் பழையபடி வந்து உனது இளமை திரும்பும் ராமரை காணும் பாக்கியம் உனக்கு உண்டாகும் என்றார். அதன்படி ராமரை பார்க்கவும் ராம காரியம் செய்வதற்காகவும் இங்கே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ஜடாயு இறந்து விட்டான் என்று தாங்கள் பேசிக் கொண்டிருந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. என்னுடைய தம்பி எப்படி இறந்தான் சொல்லுங்கள் என்றான் கழுகரசன் சம்பாதி.

அனுமனும் அங்கதனும் ராமனைப் பற்றியும் ராவணன் சீதையை தூக்கிச் சென்றது பற்றியும் தங்களைப் பற்றியும் அனைத்தையும் விரிவாக கழுகரசன் சம்பாதியிடம் சொல்லி ராமருக்கு எப்படி உதவுவது சீதை இருக்குமிடம் கண்டுபிடிக்க தங்களுக்கு ஏதேனும் வழிவகைகள் தெரிந்தால் சொல்லுங்கள் என்று சம்பாதி கழுகிடம் கேட்டுக் கொண்டார்கள். அனைத்தையும் கேட்ட கழுகரசன் சம்பாதி எனது தம்பி ஜடாயுவை கொன்ற ராவணனை அழிக்க துடிக்கிறேன். சிறகில்லாத வயதான என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. ராவணனை அழிக்க உங்களுக்கு நான் உதவுகின்றேன். எனக்கு ராம காரியம் செய்யும் பாக்கியம் இப்போது கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைந்தது சம்பாதி கழுகு. எனக்கு ஞானதிருஷ்டி தெரியும் அதன் வழியாக பார்த்து சீதையும் ராவணனும் எங்கிருக்கிறார்கள் என்று சொல்கிறேன் என்று தான் காணும் காட்சிகளை விவரிக்க ஆரம்பித்தது சம்பாதி கழுகு. இலங்கையை பற்றியும் ரவணனின் படை பலங்கள் அவனுடைய செல்வம் மாட மாளிகைகள் அங்கிருக்கும் தோட்டத்தில் சீதையை சுற்றி ராட்சசிகள் பாதுகாப்பாக நின்று காவல் காப்பது என கடல் தாண்டிய இலங்கையில் நடக்கும் காட்சிகள் அனைத்தையும் விவரமாக கூறியது சம்பாதி கழுகு. வானரங்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர். இனி சுக்ரீவன் நமக்கு தண்டனை கொடுப்பான் என்ற பயம் இல்லை. சீதை இருக்குமிடம் தெரிந்து கொண்டோம் என்று உற்சாகம் அடைந்தனர்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 21

அனுமன் கூறிய அனைத்தையும் கேட்ட பெண் தவசி இந்த குகையின் சக்தி உங்களுக்கு தெரியவில்லை. இதில் உள்ளே வந்த அந்நியர்கள் மறுபடியும் உயிருடன் வெளியில் செல்ல முடியாது. இங்கேயே வாழ்ந்து மாண்டு போவார்கள். இந்த குகையை விட்டு உங்களால் வெளியே போக முடியாது. நீங்கள் வந்த காரணம் பெருங்காரியமாக இருப்பதால் இங்கிருந்து வெளியேற உங்களுக்கு உதவி செய்கிறேன். நீங்கள் அனைவரும் கண்களை முடிக்கொள்ளுங்கள். எனது தவ வலிமையால் நீங்கள் சென்று சேர வேண்டிய சரியான இடத்திற்கு உங்களை சென்று சேர்க்கிறேன் என்றார். வானரங்கள் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டனர். தவஸ்வி அவர்கள் அனைவரையும் தன் தவ வலிமையால் நாட்டின் எல்லையிலுள்ள ஒரு கடற்கரைக்கு கொண்டு சேர்த்தாள். அனைவரும் ஓர் கடற்கரையில் இருப்பதை உணர்ந்தார்கள்.

அனுமனிடன் அப்போது ஒரு வானரம் பேச ஆரம்பித்தான். சுக்ரீவன் நமக்கு கொடுத்த ஒரு மாத காலம் நிறைவடைந்தது. சீதையை பற்றிய எந்த தகவலும் அறிந்து கொள்ளாமல் இப்போது நாம் கிஷ்கிந்தைக்கு சென்றால் சுக்ரீவன் நமக்கு மரண நண்டனை விதிப்பான். எனவே நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு ஒர் உபாயம் சொல்லுங்கள் என்று கூறினான். வானரம் சொன்னதை ஆமோதித்த அங்கதன் பேச ஆரம்பித்தான். ராமருடைய ஆணைக்கு பயந்து தான் சுக்ரீவன் எனக்கு யுவராஜா பட்டத்தை தர ஒப்புக் கொண்டான். சுக்ரீவனுக்கு என் மேல் அன்பு கிடையாது. அங்கே போய் உயிரை விடுவதை விட தவஸ்வி சுயம்பிரபாவினுடைய குகைக்குள் மறுபடியும் சென்று அங்கேயே சுகமாக வாழ்வோம். அங்கு நமக்கு வேண்டியது அனைத்தும் இருக்கிறது. அங்கு சுக்ரீவன் உட்பட யாரும் உள்ளே நுழைய முடியாது. நாம் சந்தோஷமாக ஆயுள் முழுவதும் காலம் கழிக்கலாம் என்று கூறினான். அங்கதனை சொன்னதே சரி என்று பல வானரங்கள் கூறினார்கள்.

அனுமனுக்கு இந்த யோசனை சரி என்று தோன்றவில்லை. ஏன் இப்படி தகாத வார்த்தைகளை பேசுகிறீர்கள். நம்முடைய குடும்பங்களை விட்டுவிட்டு இந்த குகைக்குள் சாப்பிட்டு தூங்கி உயிர் வைத்துக் கொண்டிருப்பதில் பலன் ஒன்றும் இல்லை. சுக்ரீவனுக்கு அங்கதனின் மேல் விரோதம் ஒன்றும் இல்லை. சுக்ரீவன் மிகவும் நல்லவன் அவனை பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. நீங்கள் சொல்வது போல் நாம் இப்போதிருந்து இந்த குகையில் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தால் லட்சுமணனுடைய கோபத்தில் வரும் ஓர் அம்பிற்கு இந்த குகை தாங்காது. லட்சுமணன் ஒரு அம்பிலேயே இந்த குகையை பொடிப் பொடியாகி ஒன்றும் இல்லாமல் செய்து விடுவான். ஆகையால் இந்த யோசனையை விடுங்கள். சுக்கீரவிடத்தில் நடந்தவற்றைச் சொல்லி நாம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என்றார் அனுமன்.

அனுமன் சொன்னதை கேட்ட அங்கதன் சுக்ரீவனுக்கு என் மீது இரக்கம் கிடையாது. வாலியை எப்படி கொன்றான் யோசித்துப் பாருங்கள். நான் உயிருடன் இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. ஏதாவது காரணத்தை சொல்லி என்னை அழிப்பதே அவருடைய எண்ணம். எந்த அரசனும் தனது ராஜ்யத்துக்கு இடையூறாக இருக்கும் ஒருவரை எப்படி அழிப்பது என்று எண்ணுவார்கள். சுக்ரீவன் அது போலவே என்னை கொல்வான். என் தாய் ஏற்கனவே வாலியை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். இப்போது என்னையும் சுக்ரீவன் கொன்று விட்டால் என் தாய் என்ன ஆவாள் என்று எனக்கு தெரியவில்லை நான் என்ன செய்வேன் என்று கதறி அழ ஆரம்பித்தான். கிஷ்கிந்தைக்கு சென்று உயிரை விடுவதை விட நான் இங்கேயே என் உயிரே விடுகிறேன் என்று சொல்லி தர்ப்பைப் புல்லை கடல் மணலில் பரப்பி அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு உயிர் நீக்கும் சங்கல்பம் செய்து கொண்டு கிழக்கு முகமாக பார்த்து அங்கதன் அமர்ந்து கொண்டான். யுவராஜன் செய்த காரியத்தை கண்ட பல வானரங்களும் தாங்களும் அப்படியே உயிரை விடுகிறோம் என்று சங்கல்பம் செய்து கொண்டு அங்கதன் பின்னே அமர்ந்து விட்டார்கள்.