பெரிய அரச வம்சமத்தை சேர்ந்த புத்தர் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசியானார். ஒரு ஊருக்குள் சென்றபோது கோவணமும் கையோட்டையும் பார்த்த மக்கள் சிரித்தார்கள். கேலி செய்து அவர் மீது கல் வீசினார்கள். அரச போகத்தை விட்டு விட்டு இப்படி பிச்சைக் காரனைப்போல திரிகிறாயே என்று கேலி செய்கிறார்கள். புத்தரிடம் எந்த சலனும் இல்லை. மக்களின் நீண்ட நேர கேலிக்கு பிறகு இறுதியில் குற்ற உணர்வு உண்டாயிற்று. புத்தர் அமைதியாகவே இருந்தார். மக்களோ தங்கள் செய்கைகளால் தாங்களே மனம் நொந்து சன்னியாசியே நாங்கள் இவ்வளவு அவமானப் படுத்தியும் நீங்கள் அமைதியுடன் ஆனந்தமாக இருக்கின்றீர்கள். எவ்வாறு தங்களால் இப்படி இருக்க முடிகிறது என்று கேட்டார்கள்.
அமைதியாக அவர்களை பார்த்த புத்தர் நான் இங்கு வருவதற்கு முன்னர் வேறொரு ஊருக்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள் ஆளுக்கு ஒரு இனிப்பு பொட்டலத்தை எனக்கு கொடுத்தனர். நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி பல காலங்கள் ஆகிவிட்டன. அதனால் அவற்றை நான் ஏற்கவில்லை. அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம் என்று கேட்டார். யார் யார் கொண்டு வந்தார்களோ அவர்களுக்கே அந்த இனிப்பு சொந்தம் என்றனர் மக்கள். இப்போது நீங்கள் செய்த அவமானங்களையும் நான் ஏற்கவில்லை அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம் என்று கேட்டார் புத்தர். எங்களுக்குத்தான் என்றார்கள் மக்கள். சரி நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்பினார் புத்தர்.
