ராமாயணம் பால காண்டம் பகுதி -1

புண்ணிய கங்கை நதிக்கு வடக்கே கோசல ராஜ்யம் மிகப்பெரியதாக இருந்தது. அந்த ராஜ்யத்திற்குள் சராயு நதி ஒடிக்கொண்டிருந்தது. கங்கையின் உப நதி சராயு நதியாகும். கோசல ராஜ்யத்தை ஆண்டு வந்த அரசர்கள் அனைவரும் சூர்ய குலத்தை சேர்ந்தவர்கள். இந்த வம்சத்தில் மனுச்சக்கரவர்த்தி, இக்ஷ்வாகு மன்னன், மந்தாதா, சிபிச்சக்கரவர்த்தி, சகரர், பகீரதர், நகுஷன், ரகு, அஜன் ஆகிய மன்னர்கள் மேன்மை தாங்கிய மன்னர்களாக மிளிர்ந்திருந்தனர். கோசல ராஜ்யத்திற்கு அயோத்ய பட்டணம் தலைமை நகரமாக இருந்தது. அயோத்ய என்ற சொல்லுக்கு யுத்தத்தில் அசைக்க முடியாதது என்று பொருள். அக்காலத்தில் இந்த நகரம் யாரிடமும் எவ்விதத்திலும் தோல்வி அடைந்தது இல்லை.

சூர்ய குலத்து அரசர்களுள் அஜமகா ராஜனுக்கும் இந்துமதிக்கும் மகனாகப்பிறந்த தசரத சக்கரவரத்தி கோசல ராஜ்யத்தை ஆண்டுவந்தார். தசம் என்றால் 10 என பொருள்படுகிறது. ரதம் என்பது தேரை குறிக்கிறது. தசரதன் என்னும் பெயர் ஒரே நேரத்தில் 10 தேரை வழிநடத்த வல்லவன் என்ற பொருள்படுகிறது. தசரத சக்கரவரத்தி ஆண்சிங்கத்தை ஒத்த உடல் வலிமையை பெற்றிருந்தான். இவருக்கு கௌசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள்.

மன்னன் ஒருவனிடம் இருக்க வேண்டிய மாண்புகள் அனைத்தும் தசரத சக்கரவரத்தியிடம் இனிது அமைந்திருந்தது. நெடுங்காலம் செங்கோல் தாங்கி ஆட்சி புரிந்துவந்தார். அவர் ஆட்சியில் தருமம் தழைத்தோங்கியது. தடுக்க முடியாத பாங்கில் போர் வாய்த்த போது அதை தசரத சக்கரவரத்தி திறமையுடன் சமாளித்தார். தேவர்களின் நலனுக்காக அசுரர்களை எதிர்த்து போர்புரிந்த சிறப்பை தசரத சக்கரவரத்தி பெற்றிருந்தார். போர் இல்லாத காலத்தை குடிமக்களை நலனுக்காக நன்கு பயன் படுத்திக்கொண்டார். தம்முடைய குடிமக்களை தந்தையின் பாங்கில் நன்கு பராமரித்து வந்தார். குடும்ப காரியம் ஆனாலும் நாட்டிற்கான காரியம் ஆனாலும் சான்றோர்களையும் முனிவர்களையும் அணுகி அவரகளுடன் நன்கு ஆலோசித்து அதன் பிறகே முடிவு செய்வார். இவருக்கு உதவியாய் இருந்த மந்தரிகள் அனைவரும் ஆட்சித்திறமை வாய்க்கப்பெற்றவர்களாக இருந்தார்கள்.

நான்கு வேதங்களைக்கொண்டு வேதியர்கள் இயற்றும் வேள்விகளில் இருந்த வந்த புகைகள் வானத்தில் மேகக்கூட்டம் போல் காட்சியளிக்கும். நாட்டில் பருவமழை சரியான அளவிற்கு பொழிந்து நாடு செழிப்புடன் இருந்தது. குடிமக்கள் நன்கு கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். ஒழுக்கத்திலும் நன்கு நிலை நின்றவர்களாக இருந்தார்கள். குடிமக்கள் நாட்டின் செல்வத்தை வளர்ப்பதில் ஊக்கம் மிகப்படைத்த உழைப்பாளிகளாக இருந்தார்கள். அனைவரின் உள்ளத்திலும் ஆனந்தம் குடிகொண்டு திருப்தி நிறைந்திருந்தது. தசரத சக்கரவரத்தியின் ஆட்சியில் மனிதர்களின் முயற்சியும் தெய்வ சம்பத்தும் ஒன்று கூடி பூலோக வைகுண்டம் போல் கோசல ராஜ்யம் காட்சி கொடுத்தது. கோசல நாட்டின் வளம் காரணமாக வறுமை என்பதே இல்லை. ஆகையால் தானதர்மங்களும் தனியாக இல்லை. அனைவரும் சத்தியத்தை கடைபிடித்து பொய் பேசாத காரணத்தால் உண்மை என்ற ஒன்று தனியாக இல்லை. நாட்டில் கள்வர்களே இல்லாத காரணத்தால் காவலர் என்ற ஒருவர் தேவையற்றவராக இருந்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.