மகாபாரதம் 8. கர்ண பருவம் பகுதி -3

கர்ணன் நள்ளிரவில் துரியோதனனை மீண்டும் சந்திக்க சென்றான். எல்லா விதத்திலும் அர்ஜுனனுக்கு மிக்கவனாக நான் இருக்கிறேன் என்பதை உணர்கிறேன். ஆயினும் அர்ஜூனன் யுத்தத்தில் சிறப்பான போர்வீரனாக மிளிர்வதற்கு காரணம் கிருஷ்ணன். அர்ஜூனனுக்கு சாரதியாக கிருஷ்ணன் அமைந்திருப்பதால் தான் அவன் நன்கு சமாளிக்கிறான். நீ எப்படியாவது சல்லியனை சரிப்படுத்தி எனக்கு சாரதியாக இருக்க உதவி புரிய வேண்டும். சல்லியன் எனக்கு சாரதியாக அமைந்தால் அது நான் செய்த பாக்கியம் ஆகும். இந்த யுத்தத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று கர்ணன் துரியோதனனிடம் கூறினான். அதிகாலையிலேயே எழுந்த துரியோதனன் சல்லியனிடம் சென்று அவன் முன்னிலையில் அடியற்ற மரம் போல் அவன் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். தங்களின் அந்தஸ்திற்கு நிகரானவன் கர்ணன் இல்லை. அர்ஜுனனை வெல்ல நீங்கள் கர்ணனுக்கு தேரோட்டும் பொறுப்பை நீங்கள் எடுத்துக் கொண்டால் நமது வெற்றிக்கு சாதகமாக அமையும் என்று வேண்டி கேட்டுக்கொண்டான்.

கடும் கோபம் கொண்ட சல்லியன் துரியோதனா நான் ஒரு அரசன். கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன். என் நிலை இறங்கி நான் அவனுக்கு தேர் ஒட்டுவதா என்று கடிந்தான். துரியோதனனோ நீங்கள் கர்ணனை விட மேலானவர் தான். நான் தங்களை அவமதிக்கவில்லை சல்லியரே. கர்ணன் அஸ்திரங்கள் உபயோகத்தில் அர்ஜுனனை விட மேலானவன். தாங்கள் ரதம் செலுத்துவதிலும் குதிரைகளை கட்டுக்குள் வைப்பதிலும் கிருஷ்ணருக்கு நிகரானவர். கிருஷ்ணன் அனைவருக்கும் முதலானவன். அவனை யுத்தத்தில் வெல்ல யாராலும் இயலாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அர்ஜூனனுக்கு சாரதியாய் கிருஷ்ணர் இருக்கிறான். நீங்கள் கிருஷ்ணருக்கு சமமான திறமை வாய்ந்தவர். தாங்கள் கர்ணனுக்கு ரதம் ஓட்டினால் உங்களுக்கு அது அவமானம் தராது. மாறாக பேரையும் புகழையும் தான் தரும் என்று நயவஞ்சக வலை விரித்தான்.

போர் ஆரம்பிக்கும் முன்பாக பாண்டவ படைக்கு ஆதரவாக போரில் கலந்து கொள்ள வந்த சல்லியன் துரியோதனனின் விருந்து உபசரிப்பால் ஏமாற்றப்பட்டு கொடுத்த வாக்கினால் கௌரவர்களுக்கு போரிட சென்றவன். இதை அவன் யதிஷ்டிரரிடம் கூறிய போது சல்லியனின் நிலை அறிந்து கௌரவர்களுக்காக போர் செய்ய அனுமதித்தார். அப்போது யதிஷ்டிரர் ஒரு உதவியை சல்லியனிடம் கேட்டார். கர்ணனுக்கு சல்லியன் தேரோட்டியாக வரும் நிலை வரும் போது கர்ணனும் அர்ஜுனனும் போர் புரிய நேர்ந்தால் அப்போது அர்ஜுனனை பாராட்டியே பேச வேண்டும். இது கர்ணனின் மனஆற்றலை குன்றச் செய்யும் என்பதே அந்த உதவி. நிச்சயம் செய்வதாக வாக்களித்தார் சல்லியன். யுதிஷ்டிரரிடம் கொடுத்த வாக்குப்படி இப்போது சல்லியனுக்கு சூழ்நிலை அமைந்தது. மேலும் சல்லியன் தன்னை கிருஷ்ணருனுடன் ஒப்பிட்டு பேசியதால் மனம் மகிழ்ந்தார். கர்ணனுக்கு தேரோட்ட ஒரு நிபந்தனையோடு அதற்கு ஒப்புக்கொண்டார்.

யுத்தத்தில் கர்ணன் தவறு செய்தால் கண்டிப்பேன். அந்த நேரம் நான் என்ன சொன்னாலும் கர்ணன் அதைக் கேட்டுக்கொள்ள வேண்டும். என்னை அவமதிப்பது போல் அவன் நடந்தால் நான் அவனுக்கு சாரதியாய் இருக்க மாட்டேன். இதற்கு சம்மதம் எனில் கர்ணனுக்கு தேர் ஓட்ட நான் சம்மதிக்கிறேன் என்றார். துரியோதனனும் கர்ணனும் அவரின் நிபந்தனைக்கு ஒப்புகொண்டதால் சல்லியன் கௌரவ போர் தளபதியான கர்ணனுக்கு தேரோட்டி ஆனார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.