தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 239 திருகுரங்கனில் முட்டம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 239 வது தேவாரத்தலம் திருகுரங்கனில் முட்டம். புராணபெயர் திருக்குரங்கணின் முட்டம். மூலவர் வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர். இறைவன் இத்தலத்தில் சிறிய லிங்க உருவில் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை மிகச் சிறியதாக உள்ளது. சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் இறையார் வளையம்மை. இவள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். வாலி, இந்திரன், எமன் ஆகியோர் சிவனை வணங்கும் முன்பு அம்பாளை வணங்கினார்கள். அவர்களுக்கு அருள் செய்யும்படி சிவனிடம் அம்பாள் பரிந்துரை செய்தாள். எனவே அம்பாளுக்கு இப்பெயர் வந்தது. தன்னை வணங்குபவர்களுக்கு வளைந்து கொடுத்துச் செல்பவள் என்ற பொருளில் இப்பெயரால் அழைக்கப்படுகிறாள். திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியிருக்கிறார். தலமரம் இலந்தை. தீர்த்தம் வாயசை தீர்த்தம், காக்கைமடு தீர்த்தம். இந்த தீர்த்தம் எமன் சிவபூஜை செய்வதற்காக காக்கை உருவில் இருந்தபோது தன் அலகினால் பூமியைக் குத்தி உண்டாக்கிய தீர்த்தம்.

இக்கோயில் பாலாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. மதிற்சுவருடன் கூடிய ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்திருக்கிறது. வாயிலைக் கடந்தவுடன் பலிபீடமும், நந்தி மண்டபமும் இருக்கக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள்வாயிலைக் கடந்து சென்றால் நேரே மூலவர் வாலீஸ்வரர் சந்நிதி உள்ளது. இறைவன் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். உள்பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதர், பைரவர், சூரியன், நவக்கிரகம், துர்க்கை, சப்தமாதர்கள், நால்வர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள விநாயகர் தாமரை மலர் பீடத்தின் மேல் இருக்கிறார். இந்த பீடத்திற்கு கீழே ஆவுடையாரும் இருக்கிறது. இந்த அமைப்பு விநாயகரை சக்தி தாங்கிக் கொண்டிருக்கும் வடிவம் ஆகும். இங்கு சாந்த முகத்துடன் இருக்கும் விஷ்ணு துர்க்கையின் வலது கையில் பிரயோகச் சக்கரம் இருப்பதுடன் இடக்கையில் சக்கர முத்திரையும் இருக்கிறது. இவள் காலுக்கு கீழே மகிஷாசுரன் இல்லை.

தனது பதினாறாவது வயதில் இறக்கும்படியான வரம் பெற்றிருந்த மார்க்கண்டேயர் சிவதல யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு பதினாறு வயதாகியபோது எமதர்மன் அவரைப் பிடிக்க வந்தான். அவனிடம் இருந்து தப்பிச் சென்ற மார்க்கண்டேயர் சிவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அப்போது எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. தன் பணியை சரியாக செய்யாததால் சிவன் அவரது பதவியை பறித்தார். தன் பதவியை இழந்த எமதர்மன் சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் சிவன் பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தன் தரிசனம் கிடைக்கப்பெற்று இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகம் வந்த எமன் காகம் வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார். கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால் தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன். அவன் தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம், தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாபவிமோசனம் தருவதாகவும் அதுவரையில் பூமியில் சிவதலயாத்திரை மேற்கொள்ளும்படியும் கூறினார். அவரது சொல்கேட்ட இந்திரன் அணில் வடிவில் பூலோகம் வந்தான். இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார். இதனைக்கண்ட எமன் இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வணங்கினர். சிவன் இம்மூவருக்கும் காட்சி தந்ததோடு எமன் இந்திரன் இருவருக்கும் சாபவிமோசனமும் கொடுத்தார். பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே சுயம்புவாக எழுந்தருளினார். தலமும் குரங்கு அணில் முட்டம் என்றானது. (முட்டம் என்றால் காகம் என்று பொருள்).

கோயில் முன்மண்டப சுவர்களில் இம்மூவரும் வழிபட்ட சிற்பங்கள் இருக்கிறது. சிவனை வழிபடும் முன்பு காக வடிவில் இருந்த எமதர்மன் தன் அலகால் நிலத்தில் கீறி தீர்த்தம் உண்டாக்கினார். பின் அதில் மூவரும் நீராடி சிவனை வணங்கினர். இந்த தீர்த்தம் பிறைச்சந்திர வடிவில் கோயிலின் மூன்று புறங்களிலும் சூழ்ந்திருக்க நடுவில் சிறிய பாறையின் மீது சிவன் வீற்றிருக்கிறார். கல்வெட்டில் இத்தலம் காலியூர்க் கோட்டத்து இருகழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரமான குரங்கணில்முட்டம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார் என்றும் கொய்யாமலர் ஈசுவரதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் சகம் 1451-ல் பூஜைக்காக கிருஷ்ணதேவராயர் பல்லவபுரம் கிராமத்தை இக்கோயிலுக்கு அளித்ததாக குறிப்புள்ளது. திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இத்தலத்தை குரங்கணின்முட்டம் என்றும் பறவாவகைவீடு (முக்தி கிடைக்கும் தலம்) என்றும் சொல்லி பதிகம் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 238 காஞ்சிபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 238 வது தேவாரத்தலம் காஞ்சிபுரம். புராணபெயர் கச்சிநெறிக்காரைக்காடு. மூலவர் சத்தியநாதசுவாமி, சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர், காரை திருநாதேஸ்வரர், சத்யநாதர், திருக்காலீஸ்வரர், காரைத்திருநாதர். இறைவன் இத்தலத்தில் இறைவன் மேற்கு பார்த்து சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சத்யநாதசுவாமி சற்றே சிவந்த நிறத்தில் காட்சியளிக்கிறார். உற்சவஅம்பாள் பிரமராம்பிகை. காஞ்சிபுரத்து சிவதலங்களில் உள்ள சிவனுக்கு, காஞ்சி காமாட்சி அம்மனே பொதுவான அம்பாளாக இருப்பதால் இங்குள்ள கோயில்களில் அம்பாள் இல்லை. இங்கு கருவறையிலேயே சுவாமிக்கு அருகே தெற்கு பார்த்தபடி உற்சவ வடிவில் அம்பாள் இருக்கிறாள். உற்சவராக இருந்தாலும் மூலவருக்கு உரிய பூஜைகளே இவளுக்கு செய்யப்படுகிறது. விழாக் காலங்களில் இவளை வெளியே கொண்டு செல்வதில்லை. அம்பாளுக்கு காரார்குழலி என்ற பெயரும் உள்ளது. தலமரம் காரைச்செடி. தீர்த்தம் இந்திர, சத்யவிரத தீர்த்தம். இவ்வாலயம் இருக்கும் பகுதி முழுவதும் காரைச்செடி காடாக இருந்த காரணத்தால் காரைக்காடு என்று பெயர் பெற்றது. இக்காலத்தில் இப்பகுதி திருக்காலிமேடு என்ற பெயருடனும் இவ்வாலயம் திருக்காலீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. இந்திரன் வழிபட்ட காரணத்தால் இத்தலம் இந்திரபுரி என்றும் வழங்கப்பெறுகிறது.

ஆலயம் மேற்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும் அதையடுத்து 3 நிலை கோபுரத்துடனும் அமைந்திருக்கிறது. முகப்பு வாயில் வழியே கோபுரத்தை நோக்கிச் செல்லும் போது இடையில் நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். கோபுர வாயிலைக் கடந்து உள்சென்று வெளிப் பிராகாரத்தை வலம் வரலாம். உள் வாயிலைக் கடந்து சென்றால் கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிராகாரம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைச் சுற்றில் நால்வர், இந்திரன், புதன், பைரவர், விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள். அதையடுத்து கஜலட்சுமி ஆகிய மூலத் திருமேனிகள் உள்ளன. துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் தரிசித்து உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். மூலவர் செம்மண் நிறத்தில், கரகரப்பாக, சற்று உயர்ந்தும், பருத்தும் காணப்படுகிறார். அருகில் அம்பாள் உற்சவத் திருமேனி வைக்கப்பட்டுள்ளது. சூரியனின் மூலத் திருமேனியும் உள்ளேயே உள்ளது. நடராஜர் சபையும் இங்குள்ளது. இந்திரன் இங்குள்ள இறைவனை வழிபட உண்டாக்கிய தீர்த்தம் இந்திர தீர்த்தம். இது தற்போது வேப்பங்குளம் என வழங்கப் பெறுகிறது. தட்சிணாமூர்த்தி சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுக்கு ஞானம் போதித்த நிலையில்தான் காட்சிதருவார். இங்கு அவருக்கு கீழே 7 சீடர்கள் இருக்கின்றனர். நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு முகமாக திரும்பியிருக்கிறது.

தாய் தந்தையை பிரிந்திருந்த புதன் இத்தலத்திற்கு வந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டார். தனக்கு கிரகங்களில் ஒரு பதவி கிடைக்க அருளும்படி சத்யநாதரிடம் வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன் உரிய காலத்தில் கிரகப்பதவி கிடைக்கப்பெறும் என்று அருள்புரிந்தார். புதன் இத்தலத்தில் பிரகாரத்தில் சுவாமிக்கு வலதுபுறத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். தேவர்களின் தலைவனான இந்திரன் தனது தவத்தினால் விரும்பிய வடிவம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். ஒருசமயம் கவுதம மகரிஷியின் மனைவியான அகல்யா மீது அவனுக்கு ஆசை ஏற்பட்டது. எனவே அகல்யாவை கவுதமரிடம் இருந்து பிரித்து அவளிடம் செல்ல வஞ்சக எண்ணம் கொண்டான். இதற்காக ஒருநாள் அதிகாலையில் கவுதமரின் ஆசிரமத்திற்கு சென்று சேவல் போல கூவினான். பொழுது விடிந்தது என நினைத்த கவுதமர் வெளியில் சென்று விட்டார். இத்தருணத்திற்காக காத்திருந்த இந்திரன் அவர் சென்ற சிறிது நேரத்தில் அவரைப் போலவே உருவத்தை மாற்றிக் கொண்டு அகல்யாவிடம் சென்றான். இதனிடையே ஏதோ மாயையால் தான் கிளம்பி வந்திருப்பதை உணர்ந்த கவுதமர் ஆசிரமத்திற்கு திரும்பினார். அவரைக் கண்ட இந்திரன் பூனை போல வடிவத்தை மாற்றி தப்பிக்கப் பார்த்தான். அவனது வஞ்சக எண்ணத்தை ஞானதிருஷ்டியால் உணர்ந்த கவுதமர் அவனது உடல் முழுக்க கண்களைப் பெற்று திரியும்படி சபித்ததோடு அகல்யாவையும் கல்லாக மாற்றி விட்டார். சாபம்பெற்ற இந்திரன் பூலோகம் வந்து பல தலங்களிலும் சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். அவன் இத்தலத்திற்கு வந்தபோது, காரைச்செடிகளின் மத்தியில் சிவன் காட்சி தந்து அவனது சாபத்தை போக்கி காரைத்திருநாதர் என்ற பெயரும் பெற்றார். இந்திரன், புதன், திருஞானசம்பந்தர் வழிபட்டுள்ளனர். .திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 237 காஞ்சிபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 237 வது தேவாரத்தலம் காஞ்சிபுரம். புராணபெயர் திருக்கச்சி அனேகதங்காவதம். மூலவர் கச்சி அனேகதங்காவதேஸ்வரர், கச்சி அநேகதங்காபதம், அனேகதங்காவதேஸ்வரர், அனேகபேஸ்வரர். இறைவன் இத்தலத்தில் வட்டவடிவ ஆவுடையார் மீது பெரிய லிங்கத் திருமேனியுடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் காமாட்சி. தீர்த்தம் தாணு தீர்த்தம். அநேகதங்காபதம் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. ஒன்று வடநாட்டில் ஹரித்வார், கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கெளரிகுண்டம் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டும். மற்றொன்று காஞ்சிபுரத்திலுள்ள இத்தலம். வடநாட்டில் உள்ள அநேகதங்காபதம் சிவஸ்தலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட இத்தலம் கச்சி அநேகதங்காபதம் என்ற பெயரால் வழங்குகிறது.

இவ்வாலயம் வடக்கில் ஒரு சிறிய கோபுரத்துடன் கூடிய முகப்பு வாயிலுடனும் கிழக்கில் மற்றொரு முகப்பு வாயிலுடனும் காணப்படுகிறது. ராஜகோபுரமும் கிடையாது. இந்த வாயில்கள் வழியே நுழைந்தால் ஒரு விசாலமான வெளிச் சுற்று உள்ளது. கிழக்கு வாயிலின் உள்ளே சென்றவுடன் பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் தேவாரம் பாடிய மூவர் சந்நிதி உள்ளது. மேற்கு வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், வடமேற்குப் பகுதியில் வள்ளி தெய்வானையுடன் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளனர். அனேகதம் என்றால் யானை. யானை முகத்தையுடைய விநாயகர் பிரதிஷ்டை செய்த லிங்கம் என்பதால் சுவாமி அநேகதங்காவதேஸ்வரர் எனப்படுகிறார். விநாயகருக்கு அநேகதங்காவதர் என்றும் பெயர் உண்டு. விநாயகப் பெருமானால் வழிபடப்பட்ட அநேகதங்காபதேஸ்வரரை வழிபடுவர்கள் கொடிய துன்பமாகிய பிறவித்துயர் தீர்ந்து இறைவனின் திருக்கயிலாயத்தை அடைவார்கள் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது.

பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி தடாகத்தில் நீராடச்சென்றபோது நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு வல்லபை என பெயரிட்டு வளர்த்து வந்தார். சிவபக்தையாக இருந்த அவளை இரண்ய அசுரனான கேசி பிடித்துச் சென்றான். வல்லபை தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். அப்போது அம்பிகை சிவனிடம் விநாயகன் அசுரர்களை அழித்து வெற்றி பெற அருள் செய்ய வேண்டும் என்றாள். சிவன் இத்தலத்தில் தன்னை வணங்கிவிட்டு சென்றிட அசுரர்களை வெற்றி கொள்ள வலிமை உண்டாகும் என்றார். விநாயகரும் அசுரர்களை அழிக்க செல்லும் முன்பு இவ்விடத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் வல்லபையை மீட்டு வந்தார். சிவன் அம்பாள் இருவரும் விநாயகருக்கு இத்தலத்திலேயே வல்லபையை மணம் முடித்து வைத்தனர். விநாயகர் வல்லபையை மணம் முடித்த தலம் என்றாலும் இங்கு தனிச்சன்னதியில் விநாயகர் மட்டுமே பெரிய மூர்த்தியாக இருக்கிறார். அவருடன் வல்லபை இல்லை. குபேரன் தன் முற்பிறவியில் செய்த புண்ணியபலனால் அருந்தமனின் மகனாப்பிறந்து அளகைக்கு அரசனானான். அசுரகுருவான சுக்கிரன் அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தான். எனவே இங்கு சிவனை வேண்டி தன்னை காக்கும்படி வேண்டினான் குபேரன். சிவன் அவனுக்காக சுக்கிரனை விழுங்கி அவனது கர்வத்தை அடக்கினார். இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. குபேரன், விநாயகர், சுந்தரர் வழிபட்டுள்ளனர். சுந்தரர் சிவனை கச்சி அநேகதங்காவதமே என்று பதிகம் பாடியுள்ளார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 236 திருஓணகாந்தன்தளி, ஓணகாந்தேஸ்வரர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 236 வது தேவாரத்தலம் திருக்கச்சிமேற்றளி. புராணபெயர் திருவோணகாந்தன் தளி. மூலவர் ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர், ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் காமாட்சி. தலவிருட்சம் வன்னியும், புளியமரமும். தீர்த்தம் ஓணகாந்த தீர்த்தம், தான் தோன்றி தீர்த்தம். கோவில் 3 நிலை இராஜ கோபுரத்துடன் காட்சி தருகிறது. ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும் மூன்று சிவலிங்கங்களும் உள்ள சிறப்பு மிக்க ஆலயம் இதுவாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ஓணன், காந்தன் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன. முதல் சந்நிதியில் மூலவரின் பின்புறம் கருவறைச் சுற்றில் சிவன் உமையம்மையின் திருமணக் கோலத்தைக் காணலாம். ஓணேஸ்வரர் சந்நிதி அர்த்த மண்டபத்தில் சுந்தரர் மற்றும் இறைவனின் திருப்பாத தரிசனம் காணலாம்.

அடுத்து 2-வது சந்நிதியில் காந்தேஸ்வரர் தரிசனம் தருகிறார். 3-வது கருவறையில் சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே சிறு கோவிலாக உள்ளது. இது பிற்காலப் பிரதிஷ்டையாகும். இத்தலத்திலுள்ள வயிறுதாரிப் பிள்ளையார் சந்நிதியை திருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் 2 வது பாடலில் குறிப்பிடுகிறார். மற்றொரு விநாகயரான ஓங்கார கணபதியும் காந்தேஸ்வரர் சந்நிதியில் வெளியே காணப்படுகிறார். இவரின் சிலையில் பக்தியுடன் காது வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்கிறது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்கள் உடன் இருக்க வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். முருகர் தனது மயில் வாகனத்தில் அமர்ந்தபடி தனது இரு தேவியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மனே பிரதான அம்பாளாக வீற்றிருப்பதால் இத்தலத்திலுள்ள சிவன் ஆலயங்களில் அம்பாளுக்கு என்று தனி சந்நிதி இருப்பதில்லை. திருஓணகாந்தன்தளி ஆலயத்திலும் அம்பாள் சந்நிதி தனியாக இல்லை.

ஒரு காலத்தில் அசுர வேந்தனான வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவர்களில் ஓணன் என்பவன் அப்பகுதியில் சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றிற்கு தன் ரத்தத்தால் அபிஷேகம் செய்து கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்றான். இதே போல் காந்தனும் மற்றொரு லிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப் பெற்றான். இப்பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான். பிற்காலத்தில் சிவனின் தோழரான சுந்தரர் இப்பகுதிக்கு வந்தார். மூன்று லிங்கங்கள் வெட்ட வெளியில் பூமிக்குள் பதிந்து இருந்தன. அசுரர்களுக்கும் கூட பக்தி இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டவும் லிங்கங்களுக்கு பாதுகாப்பு தரவும் கோயில் எழுப்ப விருப்பம் கொண்டார். அதற்குரிய பொன் பொருள் வேண்டி சிவனைப் பாடினார். அவரது பாட்டில் மயங்கிய இறைவன் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும் போது பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டார். அதையறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க சுந்தரர் அவற்றைப் பெற்றார். பின்னர் லிங்கங்களை வெளியே எடுத்து கிடைத்த பணத்தில் கோயில் எழுப்பினார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 235 திருக்கச்சிமேற்றளி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 235 வது தேவாரத்தலம் திருக்கச்சிமேற்றளி. மூலவர் திருமேற்றளீஸ்வரர், திருமேற்றளிநாதர், இரண்டாவது மூலவர் ஓதவுருகீஸ்வரர். சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலில் இரண்டு தனித்தனி மூலஸ்தானத்தில் இறைவன் அருள்புரிகிறார். அம்பாள் திருமேற்றளிநாயகி.. தலவிருட்சம் மா, தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம். இத்தலத்தின் தலவிநாயகர் சித்திவிநாயகர். கோயில் 3 நிலை ராஜகோபுரத்துடன் உள்ளது. மேற்கு நோக்கிய சிவதலம் ஆகையால் மேற்றளி எனவும் திருமால் சிவனை நோக்கி தவமிருந்ததால் (மேலான-தளி) மேற்றளி என அழைக்கப்படுகிறது.

திருமேற்றளீஸ்வரரே இங்கு பிரதானம். ஆனாலும் கோயிலின் ராஜகோபுரமும் பிரதான வாசலும் ஓதவுருகீஸ்வரருக்கே உள்ளது. இவருக்கு நேரே உள்ள நந்திக்குத்தான் பிரதோஷ வழிபாடுகளும் நடக்கிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியின் கீழ் இருக்கும் முயலகன் அவருக்கு இடது பக்கமாக திரும்பியிருக்கிறது. இக்கோவிலின் தெருக்கோடியில் நின்று பாடிய திருஞானசம்பந்தர் அவ்விடத்திலேயே தனிச்சன்னதியில் இருக்கிறார். அனைத்து கோவிலிலும் கையில் தாளத்துடன் காட்சி தரும் சம்பந்தர் இங்கு வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இவருக்கு ஆளுடைப்பிள்ளையார் சம்பந்த பிள்ளையார் என்ற பெயர்களும் உள்ளதால் இவரது பெயராலேயே இப்பகுதி பிள்ளையார் பாளையம் என்றழைக்கப்படுகிறது. இவ்வூருக்கு பச்சிமாலயம் என்றொரு பெயரும் வழங்கப்படுகிறது. திருநாவுக்கரசர் இத்தலத்தை கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால் என்று குறிப்பிட்டு பாடியுள்ளார்.

பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணுவிற்கு சிவனின் லிங்க வடிவம் பெற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. எனவே சிவசொரூபம் கிடைக்க அருளும்படி சிவனிடம் வேண்டினார். இறைவன் காட்சி தந்து நின்ற போது திருமால் சிவசாரூப நிலையை வேண்ட திருஞானசம்பந்தர் இங்கு வருகைதந்து பதிகம் பாடும்போது அது கிடைக்கும் என்றும் அதுவரை இங்கிருந்து தவம் செய்யுமாறும் இறைவன் வரமளித்தார். சிவதல யாத்திரையில் இக்கோவில் வந்த திருஞானசம்பந்தர் தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன்தான் என எண்ணிக்கொண்டு சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில் நின்றவாறே பதிகம் பாடினார். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய விஷ்ணு லிங்க வடிவம் பெற்ற போது திருஞானசம்பந்தர் பாடலை முடித்தார். இறுதியில் அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும் அதற்கு முன்பு பாதமும் இருப்பதை காணலாம். திருஞானசம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர் ஓதஉருகீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். கோயில் உள்ள இத்தெருவின் நடுவில் உற்றுக்கேட்ட முத்தீசர் ஆலயம் உள்ளது. திருஞானசம்பந்தர் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்து கேட்டதாக திருமேற்றளிக் கோயில் புராணவரலாறு உள்ளது. இக்கோயில் காஞ்சிபுரம் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. நூறு ருத்திரர்கள், சீகண்டர், வீரபத்திரர், குரோதர், மண்டலாதிபதிகள் உள்ளிட்ட 116 பேர், புதன் வழிபட்ட ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 234 காஞ்சிபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 234 வது தேவாரத்தலம் காஞ்சிபுரம். பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. மூலவர் ஏகாம்பரநாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் காமாட்சி ஏலவார்குழலி. தீர்த்தம் சிவகங்கை(குளம்), கம்பாநதி. தலமரம் மாமரம். ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மாமரத்திற்கு ஆம்ரம் என்பது வடசொல் அது தமிழில் வழங்கும்போது தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும் கம்பம் என்றும் மருவிற்று. மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் ஏகாம்பரநாதர் என்று இப்பெயர் பெற்றார். முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது இத்தலம்.

இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன. ஏகம்பரநாதருக்கு திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது. காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது. இவரை பிருத்வி லிங்கம் என்று அழைப்பார்கள். இந்த சிவலிங்கத்துக்கு அபிஷேகங்கள் கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.

ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும் எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. பஞ்சபூத தலங்களில் இது நிலத்தைக் குறிக்கும். பஞ்சபூத தலங்களில் இதுமுதல் தலம் ஆகும். உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன் எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும் முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியன் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார்.

அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க இத்தலத்திற்கு அனுப்பினார். இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்து வர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்து விடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற பெயரும் இருக்கிறது. இக்கோவிலில் அம்பாளுக்கு தனி சன்னதி கிடையாது. ஆழ்வார்கள் பாசுரம் பாடிய திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி கோவிலுக்கு உள்ளேயே உள்ளது. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.

கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை என்பவள் பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார். பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு வெண்பாக்கம் என்னும் ஊரில் ஊன்றுகோல் கொடுத்த சிவன் இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணம், கச்சியப்பமுனிவர் அருளிய இரண்டாம் காண்டம் காஞ்சிப்புராணம், கச்சியப்பமுனிவர் இயற்றிய ஆனந்தருத்திரேசர் வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பரநாதர் உலாவும், பட்டினத்துப்பிள்ளையார் அருளிய திருவேகம்ப முடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, ஏகம்பரநாதர் அந்தாதி ஆகிய நூல்கள் இத்தலத்தைப்பற்றிய நூல்களாகும். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் கந்த புராணத்தை இயற்றினார். பின் குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார். திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்.

முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகள் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. இந்தக் கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. கிழக்கு ராஜகோபுரத்தையும் தெற்கு வாயில் பெரிய இராஜ கோபுரத்தையும் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார். மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயர் கட்டியுள்ளார். இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்களான வராகமும் கட்கமும் இருக்கின்றன. இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம் மண்டபம் அதற்கு முன் நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும் அது பிற்காலச் சோழர்களால் திருத்தி கட்டப்பட்டதாகவும் தெரிகின்றது.

இக்கோயிலின் வெளியில் உள்ள மதில் சுவர் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. முன்மண்டபத்தில் ஆதித்த கரிகாலன் சிலை உருவம் உள்ளது. அதற்குத் தாடி இருக்கிறது. திருக்கோயிலுள் முன்னால் இருப்பதும் மேற்குப் பார்வையுள்ளதும் மயானேசுவரர் ஆலயம். அதில் மட்டும் பதினைந்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவைகளில் காகதீயகணபதி கி.பி.1250 சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன், குலோத்துங்கன், ராஜராஜன், விஜயகண்ட கோபாலன், விஜயநகரசதாசிவன் ஆகியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. நடராசர் மண்டபத்தில் புக்கராயன் கி.பி. 1406 கல்வெட்டு மூன்று இருக்கின்றன. ஆயிரங்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன் கி.பி.1469 ஏகம்பரநாதர் காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது. காகதீயகணபதி கி.பி.1250 காலத்தில் அவர் மந்திரி சாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான். மற்றும் விஜயகண்ட கோபாலனது கல்வெட்டு ஒன்றில் அவன் அரசுபெற்றது கி.பி.1250 எனத் தெரிகிறது. காஞ்சிபுரத்தை அச்சுதராயன் கி.பி.1534 ஆண்டு படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி உள்ளது. விஜயநகரமல்லிகார்சுனனுடைய கி.பி.1456 கல்வெட்டு இருக்கிறது. அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 233 திருவண்ணாமலை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 233 வது தேவாரத்தலம் திருவண்ணாமலை. புராணபெயர் திருண்ணாமலை. மூலவர் அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள். தலமரம் மகிழமரம். தீர்த்தம் பிரம்மதீர்த்தம், சிவகங்கை. காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.

கோவிலின் திசைக்கு ஒன்றாக நான்கு கோபுரங்கள் உள்ளது. 5-ம் பிரகாரத்தில் இருந்து 4-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் திசைக்கு ஒன்றாக 4 கோபுரங்கள், 4-ம் பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் கிழக்கில் கிளி கோபுரம் என்று அழைக்கப்படும் கோபுரம் ஒன்று ஆக மொத்தம் 9 கோபுரங்களுடன் இவ்வாலயம் திகழ்கிறது. இவற்றில் கிழக்கு திசையிலுள்ள இராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். இது 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தெற்கு திசை கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்றும் மேற்கு திசை கோபுரத்திற்கு பேய் கோபுரம் என்றும் வடக்கு திசை கோபுரத்திற்கு அம்மணி அம்மாள் கோபுரம் என்றும் பெயர். மனித உடலைப் பொறுத்த வரை மணிபூரகம் என்பது வயிற்றைக் குறிக்கும். வயிற்றுக்காகத்தான் இந்த உலகமே இயங்குகிறது. எனவே ஒட்டு மொத்த உலக இயக்கமும் அண்ணாமலையாருக்குள் அடக்கம். ஆறு ஆதாலத் தலங்களில் திருவண்ணாமலை மணிபூரகத் தலமாக விளங்குகிறது. லிங்கமே மலையாக அமைந்த மலை பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது.

உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம். பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம். அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம். எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம். 9 கோபுரம் 7 பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம். ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை. சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம். கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்று பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார். முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின்போதும் பிரதோச காலத்திலும் திருவண்ணாமலை கிரிவலம் வருகின்றார்கள். பௌவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகஅளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்சக்திகளை தருகிறார். இதனால் பௌவுர்ணமி அன்று கிரிவலம் வருதல் சிறப்பு. இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது. உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது. திருவண்ணாமலை கிரிவலம் என்பது புகழ் பெற்றது. இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர். கிரிவலம் வரும் கிழமைகளும் அதன் பலன்களும் தலவரலாற்றின் படி ஞாயிறு கிரிவலம் வந்தால் சிவபதவிகள் கிடைக்கும். திங்கள் கிரிவலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும். செவ்வாய் கிரிவலம் வந்தால் கடன் வறுமை நீங்கும். தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளையும் நீக்கி சுபிட்சம் பெறலாம். புதன் கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறலாம். வியாழன் கிரிவலம் வந்தால் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம். வெள்ளி கிரிவலம் வந்தால் விஷ்ணு பதம் அடையலாம். சனி கிரிவலம் வந்தால் நவகிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும். அமாவாசை கிரிவலம் வந்தால் மனதில் உள்ள கவலைகள் போகும். மனநிம்மதி கிடைக்கும்.

இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை) புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். 1.இந்திர லிங்கம் 2.அக்னி லிங்கம் 3. எமலிங்கம் 4. நிருதி லிங்கம் 5. வருண லிங்கம் 6. வாயுலிங்கம் 7.குபேர லிங்கம் 8. ஈசான லிங்கம் உள்ளது. கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் அதிகம் உள்ள கோயில் இது. இக்கோயிலில் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில். கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளில் தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இது ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் தத்துவம் ஆகும். பரம்பொருளான சிவனே பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் மலை உச்சியில் ஜோதி வடிவில் காட்சி தருவார். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை. இக்கோவிலில் உள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை விநாயகர் வதம் செய்த போது அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு விநாயகர் சதுர்த்தி திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கின்றது. இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.

மாட்டுப்பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜைகள் நடக்கும். அவ்வேளையில் அண்ணாமலையார் நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார். கோயில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வர். ஆனால் இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள்.

சம்பந்தாண்டான் என்னும் புலவன் அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால் இவர் கம்பத்திளையனார் என்று பெயர் பெற்றார். இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது. இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்ற போது அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். அருணகிரியார் மீது பகை கொண்ட சம்பந்தாண்டான் என்ற புலவன் அவரை தேவலோகத்திலுள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி மன்னன் மூலம் பணித்தான். அதன்படி தனது பூதவுடலை இக்கோயில் கோபுரத்தில் கிடத்திய அருணகிரியார் கிளியின் வடிவில் தேவலோகம் சென்றார். இவ்வேளையில் சம்பந்தாண்டான் அவரது உடலை எரித்து விட்டான். எனவே வருத்தமடைந்த அருணகிரியாரை அம்பிகை தனது கரத்தில் ஏந்தி அருள் செய்தாள். கிளியாக வந்த அருணகிரியார் இங்குள்ள கோபுரத்தில் காட்சி தருகிறார். கிளி கோபுரம் என்றே இதற்கு பெயர். அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறமுள்ள பிரகாரத்தில் அருணகிரிநாதர் இரு கால்களையும் மடக்கி யோக நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு அருணகிரி யோகேசர் என்று பெயர்.

இக்கோயிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் எந்தி கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. அருகில் பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும்விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும் நான்கு முகங்கள் உள்ளன. மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர் அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன் பாதாள லிங்கம் இருக்கிறது.

இக்கோவிலின் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன. அருணைநாயகி திருவண்ணாமலையில் வாசம் செய்ய வந்த கதை இது. திருப்புகழ் தந்த அருணகிரிநாத ர்மேல் சம்பந்தாண்டான் என்னும் மந்திரவாதி வஞ்சம் கொண்டிருந்தான். ஆறுமுகனின் அருளுக்குப் பாத்திரமான அருணகிரிநாதர் முருக தரிசனம் பெற்று வீடுபேறு அடையக்கூடாதென்பதில் குறியாய் இருந்தான் அவன். அவன் வழிபட்டுவந்த காளிதேவி தான் அருணை நாயகி. தன் பக்தனின் வேண்டுதலையேற்று முருகனைத் தன் மடியிலிருத்தி எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டாள் அன்னை. இதைத் தன் ஞானக்கண்ணால் அறிந்த அருணகிரிநாதர் அன்னையை வசப்படுத்த பாடல்களைப் பாடினார். பாடல்களில் அம்பிகை மெய்ம்மறந்திருக்கையில் மடியிறங்கி வந்த முருகன் அருணகிரிநாதருக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இதனால் கோபமடைந்த சம்பந்தாண்டான் அன்னையை நிந்தித்தான். அதுமுதற்கொண்டு சம்பந்தாண்டனின் வழிபாடுகளை ஏற்காமல் திருவண்ணாமலையிலேயே எழுந்தருளி விட்டாள் அருணைநாயகி. திருவண்ணாமலை கொசமடத் தெருவில் அன்னையின் கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயிலில் கருவறையில் காட்சி தருகிறாள் அன்னை நாயகி.

கார்த்திகை பௌர்ணமி தீபத்தன்று மாலை 6.00 மணிக்கு பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்து வந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து இரண்டு நிமிட தரிசன காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்று விடுவார். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். மலை மீது இருப்பவர்கள் உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3000 கிலோ பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் கோயிலில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கவுரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். இவர்கள் ஏற்றிய இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணலாம். கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால் சிவனின் அருளுடன் மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா. தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு. நெய் எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள் கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.

திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான் அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார். அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது மலையை இடதுபுறமாக சுற்றிவா என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு அத்தீபத்தை பெருமாளாகக் கருதி பிரகாரத்திலுள்ள வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால் பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுகின்ர். நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும். கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள் நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்து விடும்.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது. மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங்களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது. மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம். கோயிலுக்கு உள்ளே பேய் கோபுரத்துக்கு வலது புறத்தில் அடி முடி காணாத பரம் பொருள் அண்ணாமலையார் பாதம் உள்ளது. பாதத்தை சுற்றியுள்ள துண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது.

திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி. இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும். இது ஏகத்தை குறிக்கும். மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும். இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும். மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும். இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும். திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுவதால் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் பழக்கம் இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. ஒன்று இப்போது உள்ள சாலை வழி 2வது மலையை ஒட்டிச் செல்லும் பாறைகள் முட்கள் மிகுந்த கடினமான பாதை. மலையைச் சுற்றியுள்ள பாதை ஜடாவர்ம விக்கிரம பாண்டியனால் கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது.

திருவண்ணாமலையில் மக்கள் கி.மு 1 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே நகரமைத்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். திருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்று என்பதற்கான குறிப்புகள் சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது.

அம்மணி அம்மாள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தராவார். இவர் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் வடக்கு கோபுரத்தினை கட்டிய பெருமை உடையவர். இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது. அம்மணியம்மாளின் இயற்பெயர் அருள்மொழியாகும். இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். சைவக் கடவுளான சிவபெருமான் மீது அளவற்ற பக்தியைக் கொண்டிருந்தார். பெற்றோருடன் ஒரு முறை அண்ணாமலைக்கு வந்த போது மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப மறுத்து அண்ணாமலையிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு பருவம் வந்த போதும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தார். திருவண்ணாமலை அருணாச்சலேசுவர் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு அதனைக் கட்ட எண்ணம் கொண்டார். இதற்காகப் பக்தர்கள் செல்வந்தர்களின் உதவியை நாடி கோபுரத்தினைக் கட்டி முடித்தார். அதனால் திருவண்ணாமலையின் வடக்குக் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகின்றது. இவர் பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலையே அறிந்து கொள்ளும் வல்லமை வாய்ந்தவர். நமசிவாய மந்திரத்தினை உச்சரித்து திருநீறு தந்து எண்ணற்றவர்களின் நோய்களையும் வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி கட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டு மனம் வருந்தினார். பின் தாமே முன்வந்து கோபுரத்தினைக் கட்ட முடிவு செய்தார். அதற்கான பொருட் செலவுகளை நன்கொடைகள் மூலம் பெற்றார். ஒரு முறை செல்வந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கோபுரத்தினைக் கட்ட பணம் கேட்ட பொழுது அச்செல்வந்தர் பணத்தினை வைத்துக் கொண்டு தன்னிடம் பணமே இல்லையென்றார். ஆனால் அண்ணாமலையாரின் அருள் பெற்ற அம்மணி அம்மாள் அச்செல்வந்தரிடம் இருக்கும் தொகையைச் சரியாகக் கூறி அப்பணத்தினை நன்கொடையாகக் கேட்டார். தன்னிடம் இருப்பதை அறிந்து சரியாகக் கூறும் அம்மாளை வணங்கி அச்செல்வந்தர் பணத்தினைக் கொடுத்தார்.

கோயில்களில் சுவாமியை அஷ்டபந்தன மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்வார்கள் இக்கோயிலில் அண்ணாமலையார் ஸ்வர்ணபந்தனம் (சுத்தமான தங்கத்தால் பந்தனம்) பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளார். எத்தனையோ மன்னர்கள் இக்கோவிலில் திருப்பணி செய்துள்ள போதிலும் வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் வல்லாள மகாராஜாவின் பக்தி காரணமாக பாசம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்ததுதான். ஹோய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர் வீர வல்லாள மகாராஜா. கி.பி 1291 -ல் தொடங்கி கி.பி. 1343 ஆம் ஆண்டு வரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தார். இப்பேரரசின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபேடு. இவரது இரண்டாம் தலைநகரம் திருவண்ணாமலை. திருவண்ணாமலை கோவில் புராணமான கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணம் ஹோய்சால வீரவல்லாள மகாராஜாவை வன்னி குலத்தினில் வருமன்னா என்று குறிப்பிடுகிறது.

வல்லாள மகாராஜாவுக்கு பிள்ளை இல்லை என்கிற குறை இருந்தது. இதனை அறிந்த சிவபெருமான் தானே மகனாக பிறக்கும் திருவிடையாலை நிகழ்த்தினார். திருவண்ணாமலையில் இருந்த எல்லா தேவதாசிகள் வீட்டுக்கும் சிவகணங்களை அனுப்பிய சிவபெருமான் வல்லாள மகாராஜாவிடம் சைவத் துறவி கோலத்தில் வந்து தனக்கு ஒரு தேவதாசி வேண்டும் என்று கேட்டார். வல்லாள மகாராஜாவும் தேவதாசியை அனுப்புவதாக வாக்களித்தார். ஆனால் ஊரில் உள்ள எல்லா தேவதாசிகளும் சிவகணங்களுடன் இருந்ததால் வல்லாள மகாராஜாவால் தேவதாசியை கொண்டுவர முடியவில்லை. மன்னனின் கவலை அறிந்த வல்லாள மகாராஜாவின் இளைய ராணி தானே தேவதாசியாக சிவனிடம் செல்ல முன்வந்தார். துறவி வேடத்தில் சிவன் இருந்த அறைக்குள் ராணி நுழைந்த போது குழந்தையாக சிவபெருமான் காட்சியளித்தார். ராணியும் மகாராஜாவும் சிவபெருமானை தமது குழந்தையாக ஏற்றனர். திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார் அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார். அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன. மேலும் ஆண்டு தோறும் இன்றும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார்.

திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இங்குள்ள முருகப்பெருமானுக்கு சார்த்திய வேல் இன்றுமுள்ளது. விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம். அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சி முனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள். வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது.

அடி முடி காண முடியாதபடி ஆக்ரோஷமாக தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறிய போது அவரிடம் விஷ்ணுவும், பிரம்மாவும் இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்? என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன் மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பாள் சந்நிதியில் திருஞானசம்பந்தர் பதிகம், பாவை, அம்மானைப் பாடல்களின் கல்வெட்டுக்கள் உள்ளன. திருவாசகத்துள் திருவெம்பாவை என்ற பனுவல் இத்தலத்துப் பெண்கள் ஒருவரை ஒருவர் வழிபாட்டுக்கு காலையில் எழுப்பிச் சென்றதை அடிப்டையாகக் கொண்டது.

இத்தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இக்கோவில் தலபுராணம் அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார். அண்ணாமலை வெண்பா குருநமசிவாயர் பாடியது. சைவ எல்லப்ப நாவலர் எழுதிய அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், குருநமச்சிவாயர் எழுதிய அண்ணாமலை வெண்பா மற்றும் தேவாரம், திருவாசகம், பதினொராந்திருமுறை, பெரியபுராணம், கந்தபுராணம், திருப்புகழ், சோனசைலமாலை, திருவருணைக்கலம்பகம், அருணாசல புராணம், அருணாசல மகாத்மிய வசனம், அருணகிரி அந்தாதி, அண்ணாமலை வெண்பா, திருவருணை அந்தாதி, அண்ணாமலை சகதம், சாரப்பிரபந்தம், கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, சோணாசல சதகம், திருவருணைக்கலிவெண்பா, திருவருட்பதிகம், அருணாசலேசுவரர் பதிகம் -1, அருணாசலேசுவரர் பதிகம் – 2, உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேசர் நவகாரிகை மாலை, உண்ணாமுலையம்மன் வருகைப்பதிகம், அருணாசல சதகம், அருணாசல அட்சரமாலை, அண்ணாமலையார் வண்ணம், திருவண்ணாமலைப் பதிகங்கள், அண்ணாமலைப் பஞ்ச ரத்னம், திருவருணைத் தனி வெண்பா, அட்சரப் பாமாலை, அருணாச்சலேசுவரர் உயிர் வருக்கம் படைத்தற் பாமாலை, அருணசல அட்சரமாலை, அருணாசலநவ மணிமாலை, அருணாசல பதிகம், அருணாசல அஷ்டகம், அருணாசல பஞ்சபத்தனம் ஆகியவை இச்சிவாலயத்தின் புகழைப் பாடுகின்ற நூல்களாகும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது. இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள் ரகசியங்கள் வெளிவரும்.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 4-ம் நூற்றாண்டில் கருவறை செங்கல்லால் கட்டப்பட்டது. 5-ம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது. 6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் இது. 6, 7, 8-ம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார். அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார். ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது. 9-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 817-ம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார். பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10-ம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள் தான் இந்த பிரகாரங்களைக் கட்டினார்கள். அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கி இருந்தது. 11-ம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின.

முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான். 1063-ம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது. 12-ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். 13-ம் நூற்றாண்டில் சிறு சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா, கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள் வாரி வழங்கினார்கள். 14-ம் நூற்றாண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். அந்த நூற்றாண்டில்தான் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன. 1340-ம் ஆண்டு முதல் 1374-ம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹொய்சாள மன்னர் வீரவல்லாளன் இந்த திருப்பணிகளைச் செய்தார். 15-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை ஆலயத்துக்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள். திருவண்ணா மலை ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில்தான்.

16-ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு, திருவண்ணாமலை கோவில் மிக மிக பிடித்து போய் விட்டது. திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றினார். அவர் மற்ற மன்னர்கள் போல ஒன்றிரண்டு திருப்பணிகள் செய்யவில்லை. இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். 217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம், சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள், கதவுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் கிருஷ்ணராயன் என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில. 1529-ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர், கிழக்கு ராஜகோபுரத்தை 1590-ல் கட்டி முடித்தார்.

குறுநில மன்னர்கள் பலரும் சிவனடியார்களும் சிறு சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இன்று 9 கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது. கோபுரங்கள் அனைத்தும் 1370-ல் கட்டத் தொடங்கப்பட்டு 1590-ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னர்கள் மட்டுமில்லாமல் மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், அரசு பிரதிநிதிகள், சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சாள, சம்புவராய, விஜயநகர, தஞ்சை மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். 14-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களை சந்ததித்தது என்றாலும் அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது.

கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் செய்து வரும் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள். மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும் சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு உண்டு. 1179-ம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர். அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12.06-1903, 4-6-1944, 4-4-1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்திருக்கின்றனர். மன்னர்களில் கிருஷ்ண தேவராயரும், பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் செய்த திருப்பணிகள் அளவிட முடியாதது. இன்று நாம் திருவண்ணாமலை ஆலயத்தை பார்க்கிறோம் என்றால் அதற்கு பல மன்னர்களிடம் இருந்த அண்ணாமலையார் மீதான பக்தியே காரணமாகும். சுப்பிரமணிய சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது. அருகிலேயே அருணகிரிநாதரின் திருவெழுகூற்றிருக்கை கல்வெட்டில் உள்ளது. விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் மேலும் பல சித்தர்கள், முனிவர்கள், வழிபட்டுள்ளனர். சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

OLYMPUS DIGITAL CAMERA

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -17

அர்ஜுனன் எழுந்து விராட நகர மன்னனிடம் இப்பொழுது இங்கு சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவர் யுதிஷ்டிரன். அவர் தேவலோகத்தில் தேவேந்திரனுடைய சிம்மாசனத்திலும் அமர தகுதி வாய்ந்தவர். அத்தகையவர் தங்கள் சிம்மாசனத்தின் மீது அமர்வதற்கு தடை ஏதுமில்லை என்றான். மன்னன் இதைக்கேட்டு வியப்புற்றான் சிறிதுநேரம் மன்னனின் நாவில் பேச்சு ஏதும் எழவில்லை. பிறகு இவர் யுதிஷ்டிரர் என்றால் என்னுடைய அரண்மனையில் வந்து இங்கு தங்கி வேலைபார்த்தவர்கள் யார் எனக்கேட்டான். வேலையாட்களாக வந்தவர்களும் தானும் குருவம்சத்தின் பாண்டவ சகோதரர்கள் என்றும் சைரந்திரியான பணிப்பெண் திரௌபதி என்றும் அர்ஜுனன் அறிமுகப்படுத்தினான்.

உத்தரன் தன் தந்தைக்கு போரில் நடந்தவைகள் அனைத்தும் சொல்ல ஏற்ற நேரம் வந்துவிட்டது என்று எண்ணினான். விராட நகரத்தை காப்பாற்றுவதற்காக போர் புரிந்தவன் அர்ஜுனன் அவனுக்கு தேரோட்டியாக நான் இருந்தேன். அர்ஜுனன் இங்கு அப்பாவி போன்றே இருந்து வந்தான் ஆனால் போர்க்களத்தில் தெய்வீக ஆற்றல் படைத்தவனாக அவன் நடந்து கொண்டான். ஒற்றை ஆளாக இருந்து கொண்டு கௌரவ போர் வீரர்களையும் அவனுடைய சேனைகளையும் அவன் விரட்டினான். நம்முடைய அரசாங்கத்தை காப்பாற்றியவன் அர்ஜுனனே என்றான்.

யுதிஷ்டிரனை பார்த்து விராட மன்னன் ஒரு வருட காலம் தங்களை இன்னார் என்று காட்டிக் கொள்ளாது என்னுடைய அரண்மனையில் வசித்து வந்துள்ளீர்கள். நான் தங்களுக்கு காட்டிய அரைகுறையான உபசாரத்தை குறித்து என்னை மன்னித்து அருளும்படி வேண்டுகிறேன் என்னுடைய நாட்டில் தங்கள் தங்கியபடியால் தெய்வீகம் நிலைபெற்றிருந்தது அதனால் முறையாக மழை பெய்துள்ளது. நலன்கள் யாவும் முன்னனிக்கு வந்து கேடுகள் யாவும் பின்னணிக்கு போயிருக்கிறது. நாடு சௌபாக்கியமே வடிவெடுத்துள்ளது. என்னையும் என்னுடைய ராஜ்யத்தையும் எனக்கு சொந்தமாக உள்ள ஏனைய அனைத்தையும் தங்களிடம் சமர்ப்பிக்கின்றேன் என்றான். யுதிஷ்டிரன் மன்னனின் கையைப் பிடித்துக் கொண்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கின்றோம். தங்களுடைய நகரிலேயே எங்களுடைய ஓர் வருட அக்ஞாத வாசம் என்னும் கடினமான பகுதியை மிக மகிழ்வுடன் கழித்து வந்தோம். வேற்றார்களாக நாங்கள் இங்கு வந்தோம் எங்களை அன்போடு தாங்கள் பராமரித்தீர்கள். உங்களோடு உறவு பூண்டதை முன்னிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என்றான்.

விராட மன்னன் அர்ஜுனனைப் பார்த்து என்னுடைய மகளான ராஜகுமாரி உத்தரை என்பவள் உன்னிடமிருந்து இசையையும் நடனத்தையும் நன்கு கற்றுக் கொண்டாள். அவளை மணந்து கொண்டு என்னை கண்ணியப்படுத்த வேண்டும். இதை தவிர வேறு எந்தவிதமான இணக்கத்தை கொண்டும் நான் திருப்தி அடைய மாட்டேன். எனது மகளை திருமணம் புரிந்து கொள்வதன் வாயிலாக உறவினர் என்னும் பந்தம் எப்பொழுதும் நம்மிடையே உறுதி பெறுகிறது என்றான். அதற்கு அர்ஜுனன் உத்தரையை எப்பொழுதும் என் மகளாகவே பாவித்து வந்திருக்கின்றேன். அந்த இணக்கம் தெய்வீக இணக்கத்திற்கு நிகரானது. அந்த மனப்பான்மையை நான் இப்பொழுது மாற்ற இயலாது. ஆயினும் அவளை என்னுடைய மருமகளாக நான் ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய மகன் அபிமன்யுவுக்கு அவள் மனைவியாவாள். எனது மகனுக்கு திருமணம் செய்வதன் வாயிலாக உங்களுடைய விருப்பம் நிறைவேறுகிறது. அத்துடன் இக்குழந்தையோடு நான் வைத்துள்ள குரு என்னும் ஆச்சாரிய இணக்கத்திற்கும் பங்கம் ஏதும் வராது என்றான். அர்ஜுனன் கூறியது அனைவருக்கும் மன திருப்தியை உண்டு பண்ணியது.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -16

ராஜகுமாரன் உத்தரன் தந்தையின் முன்னிலையில் வந்து வணக்கம் செலுத்தினான். கனகன் யார் என்பதை இப்போது ராஜகுமாரன் அறிந்ததினால் கனகனுக்கு தக்க மரியாதை செலுத்தினான். கனகனின் முகத்தில் காயம் ஆகி இருப்பதை பார்த்த ராஜகுமாரனுக்கு வருத்தம் உண்டாயிற்று. இந்த சான்றோரை காயப்படுத்தியது யார் என்று அவன் அதிகார தோரணையுடன் கேட்டான். அதற்கு ஒரு சுருக்கமான விளக்கம் சொல்லி இது அவ்வளவு முக்கியமான நிகழ்ச்சி அல்ல என்று அரசன் அதை ஒதுக்கி வைத்தான். தந்தை இவர் யார் என்று உங்களுக்கு தெரியாது இவர் காலில் விழுந்து தயை கூர்ந்து அவருடைய மன்னிப்பை பணிந்து கேட்டுக்கொள்ளுங்கள் அப்படி செய்யாவிட்டால் நாம் அனைவரும் ஒழிந்துபட்டு போவோம் என்று அரசரிடம் வற்புறுத்தி கூறினான். அரசனும் ராஜகுமாரன் சொன்ன படியே நடந்து கொண்டான். ஏனென்றால் இது வரையில் சாதாரண ஆளாக தென்பட்ட ராஜகுமாரன் இப்போது திடீரென்று வெற்றிவீரனாக தென்பட்டான்.

அரசர் வெற்றிவிரனான உத்தரனை தழுவிக்கொண்டு அருமை செல்வா செயற்கரிய வீரச் செயலை நீ சாதித்ததை என்னால் நம்ப முடியவில்லை. அசைக்க முடியாத கௌரவ சேனையை எப்படி தோற்கடித்தாய். பசுக்களை எல்லாம் எவ்வாறு மீட்டெடுத்தாய் என்று விளக்கமாக கூறு அதை கேட்க ஆவலாக இருக்கின்றேன் என்றார். அதற்கு உத்தரன் இச்செயலை செய்தது நான் இல்லை. நானோ தயங்கிக்கொண்டிருந்தேன். அப்போது பராக்கிரமே வடிவான ராஜகுமாரன் ஒருவன் இந்த வீரச்செயலை சாதித்தான். விரைவில் அவன் இங்கு வந்து அனைத்து விஷயங்களையும் விளக்குவான் என்றான்.

ராஜகுமாரன் கௌரவர்களை எதிர்க்க புறப்பட்ட பொழுது ராஜகுமாரன் உத்தரனுடைய தங்கை உத்தரை தனது இசைகுருவான பிருஹன்நளாவிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தாள். போர்க்களத்தில் தனது சகோதரன் வெற்றி அடைந்த பின் எதிரிகளின் பட்டுத்துணிகள் சிலவற்றை பறிமுதல் செய்து தனக்கு கொண்டு வரவேண்டும் என்று அவள் வேண்டினாள். அவளுடைய சகோதரன் உத்தரனும் பிருஹன்நளாவின் செயலால் வெற்றி பெற்றான். பிருஹன்நளா கௌரவர்கள் மயக்கத்தில் இருக்கும் போது பறிமுதல் செய்த பட்டு துணிகளை வெற்றியின் சின்னமாக அவளுக்கு கொடுத்தாள். தன்னுடைய இசை ஆசிரியரிடமிருந்து அவைகளை பெற்று அவள் பெருமகிழ்ச்சி அடைந்தாள்.

மூன்று நாட்களுக்கு பிறகு பாண்டவ சகோதரர்களும் திரௌபதியும் நீராடிவிட்டு ராஜவீதியில் உடை அணிந்து கொண்டு ராஜ சபை மண்டபத்திற்கு போனார்கள். அங்கு அரசனுக்குரிய சிம்மாசனத்தின் மீது ஏறி யுதிஷ்டிரன் அமர்ந்து கொண்டான். ஏனைய சகோதரர்கள் அவரவர்கள் அந்தஸ்துக்கு உரிய ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்கள். வழக்கம் போல் விராட மன்னன் மந்திரி பிரதானிகள் புடைசூழ சபைக்கு வந்தான். வந்தவன் தான்னுடைய சிம்மாசனத்தின் மீது கனகன் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். கனகா என்னுடைய ராஜசபையில் பகடை விளையாடுபவனாக உன்னை வைத்து நேசித்து வந்தேன். இப்பொழுது ராஜரீதியில் உடையணிந்து கொண்டு என்னுடைய சிம்மாசனத்தின் மீது அமர்ந்து இருக்கின்றாய் இப்படி நடந்துகொள்வது உனக்குப் பொருந்தாது. உன்னுடைய உயிரை காப்பாற்ற விரும்பினால் ஏன் இப்படி நடந்து கொண்டாய் என்ற சரியான காரணத்தைக் கூறு என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் புன்னகை பூத்த பாங்கில் ஒன்றும் பேசாது அரசரை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஓம் நமோ நாராயணாய நம

ஒரு நாள் அக்பர் அரசவையில் இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா என்று அக்பர் பீர்பாலிடம் கேட்டார். அதற்கு பீர்பால் அரசே அவருக்கு ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் என்று பதில் அளித்தார். ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததர்காவா உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும் நீர் கூறியது போல் ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும் என்று கேள்வி கேட்டார். இதற்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார். அதை பார்த்ததும் அக்பருக்கு பீர்பால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று மகிழ்ச்சி அடைந்தார்.

ஒரிரு நாட்கள் சென்றன. அக்பரும் அவர் குடும்பத்தாரும் அவர்களுடன் பீர்பாலும் சில மெய் காப்பாளர்களும் கங்கை கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர். அக்பரின் மூன்று வயது பேர குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த பீர்பால் படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் பீர்பால் படகோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும் சைகை காட்டிவிட்டு அக்பரின் பேரனை கங்கையில் தூக்கி போட்டுவிட்டார். பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார். அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான். படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பீர்பால் என்ன இது நீயா இப்படி என் பேரனை கொல்ல துணிந்தாய். என்னால நம்பவே முடிலவில்லை. என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீர்ல தூக்கி போட்டீர் சொல்லும் என்றார் கோபமாக. பீர்பால் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்தி தெரியனும் என்பதற்காக அப்படி செய்தேன் அரசே என்றார். அக்பர் பீர்பாலே என்ன விளையாடுறியா நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் உமது திருமாலை நான் தெரியுறதுக்கும் என்ன சம்மந்தம்

பீர்பால் அரசே என்னை மன்னியுங்கள். நீங்க அன்று ஒரு நாள் உங்கள் கடவுள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்றணுமான்னு கேட்டிங்களே. சிறிது யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10 சேவகர்கள் இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிற்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன் அரசே எங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார். அக்பர் கொஞ்சம் கோபம் தணிந்து அப்படி இல்லை பீர்பால் என் பேரன் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கின்றேன். நீங்கள் திடிரென்று தண்ணீர்ல அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார்

பீர்பால் புன்னகையுடன் அரசே இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே ஒரு குழந்தை மீது இவ்வளவு அன்பு இருக்கும் போது அண்ட சாகசரங்களையும் ஆளும் எங்கள் திருமாலுக்கு தன்னை நம்பும் உயிர்கள் மீது எவ்வளவு அன்பு இருக்கும் ஆகையால் தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான். அரசே இப்பொழுது புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று நான் நீரில் வீசிய உங்கள் பேரனை காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே என்றார். அக்பர் இல்லை பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். உங்கள் கடவுளை பற்றி தவறாக எண்ணி இருந்தேன் உங்கள் கடவுள் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.

Image result for திருமால் முதலை