ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -13

ராமனும் சீதையும் வனம் செல்வது உறுதியாகி விட்டது. தனக்கு உரிய செல்வங்கள் அனைத்தையும் சீதை தானம் செய்துவிட்டாள். அரச உடைகளை களைந்து தபஸ்விகளுகான உடைகளை அணிந்து கொண்டு கிளம்ப ஆயத்தமானார்கள். லட்சுமணன் ராமரின் முன்னிலையில் வந்தான். தங்களுடன் நானும் வருகிறேன். தங்களை விட்டு பிரிந்நிருப்பது என்னால் இயலாத காரியம். தங்களையும் அண்ணியாரையும் காவல் காத்துக்கொண்டு தங்களுக்கு காட்டில் கனிவகைகளை தேடிக்கொடுத்து பணிவிடைகளை செய்கிறேன். என்னையும் அழைத்து செல்லுங்கள் என்றான் லட்சுமணன்.

தந்தை கைகேயியிடம் வரங்களை கொடுத்து சிக்கிக் கொண்டிருக்கின்றார். பரதன் ஆட்சி செய்துகொண்டிருப்பான். மாயையில் சிக்கிக்கொண்டிருக்கும் கைகேயியின் பிடியில் கௌசலையும் சுமித்ரையும் இருப்பார்கள். கைகேயி இவர்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பில்லை. நீயும் என்னுடன் வந்துவிட்டால் கௌசலைக்கும் சுமித்ரைக்கும் பணிவிடைகள் செய்ய யாரும் இருக்கமாட்டார்கள் இங்கிருந்து அவர்களை பார்த்துக்கொள் என்றார். தாய் தந்தைக்கு செய்யும் சேவை மிகப்பெரிய தர்மமாகும் இந்த தர்மத்தை செய்து கொண்டு இங்கேயே இரு என்றார்.

அண்ணா கைகேயி மாயையால் மயங்கி இருக்கிறாள். ஆனால் தங்களின் தம்பி பரதன் தங்களுடைய மகிமையால் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுப்பதோடு கௌசலையையும் சுமித்ரையையும் கௌரவமாக பார்த்துக்கொள்வார். இதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம். மேலும் கௌசலையை சார்ந்து இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பார்த்துக்கொள்ளும் வல்லமை அன்னை கௌசலையிடம் இருக்கிறது. இதற்காகவே ஆயிரக்கணக்கான கிராமங்கள் அவரிடம் இருக்கிறது. உங்களை விட்டு என்னால் எப்படி பிரிந்து இருக்க முடியாதோ அது போலவே என்னைவிட்டும் தங்களால் பிரிந்து இருக்கமுடியாது. உங்களுடைய வெளியில் இருக்கும் உயிர் நான் என்று ஏற்கனவே சொல்லியிருக்கின்றீர்கள். அப்போதே என்னை தங்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் என்னையும் அழைத்துச்செல்வதற்கு தாங்கள் அனுமதி அளித்துவிட்டீர்கள். இப்போது என்னை தடுக்காதீர்கள் என்னையும் தங்களோடு வர அனுமதியுங்கள். தங்களுக்கு பின்னே கையில் வில் ஏந்தியவனாக நான் உங்களுடன் காட்டிற்கு வருவேன் என்றான் லட்சுமணன்.

ராமர் லட்சுமணனையும் காட்டிற்கு அழைத்து செல்ல சம்மதித்தார். லட்சுமணனிடம் அரச உடைகளை களைத்து தவஸ்விகளுகான உடைகளை அணிந்து கொள். ஜனகரின் வேள்விச்சாலையில் வருணபகவான் நமக்கு அளித்த இரண்டு விற்கள் எவ்வளவு அம்புகளை எடுத்தாலும் குறையாத அம்பாறத்தூணிகள் சூரியனைப்போல ஒளி வீசும் வாள் ஆகியவற்றை வசிஷ்டரிடம் கொடுத்து வைத்திருக்கின்றோம். வசிஷ்டர் இருப்பிடம் சென்று அவரிடம் கொடுத்து வைத்திருந்த அரிய அஸ்திரங்களை எடுத்துக்கொண்டு தன்னோடு வருமாறு கட்டளையிட்டார் ராமர். மூவரும் தசரதரிடம் விடை பெற்றுக்கொள்வதற்காக அவர் இருப்பிடம் சென்றார்கள்.

பூந்தானம் நம்பூதிரி

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பூந்தானம் நம்பூதிரி என்பவர் சிறந்த குருவாயூரப்பன் பக்தர். இவர் இந்தியாவின் கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் கீழாற்றூரில் வசித்து வந்தார். இவர் தனது 20 வயதில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அவர் சந்தனா கோபாலம் ஓதி மூலம் குருவாயூர் இறைவனைப் பாடித்துதித்தார். பின்னர் இவருக்கு ஒரு மகன் பிறந்தார். அதற்கான ஒரு வீழா ஏற்பாடு செய்து அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அனைவரும் வந்தனர். ஆனால் விழா ஆரம்பிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே குழந்தை இறந்துவிட்டது. துயரமடைந்த பூந்தானம் குருவாயூர் கோயிலில் தஞ்சம் அடைந்து பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். மனம் உடைந்த பூந்தானத்தின் மடியில் குருவாயூரப்பன் ஒரு குழந்தையாக ஒரு கணம் இருந்து ஆறுதல் படுத்தினார். சிறிய கிருஷ்ணர் நம் இதயத்தில் நடனமாடுகையில் நமக்கு சொந்தமான சிறியவர்கள் தேவையா என்று கிருஷ்ணரை தனது மகனாக கருதி ஞானம் அடைந்தார். இதனை ஞானப்பனா என்னும் நூலில் எழுதியிருக்கிறார்.

அவர் தினமும் தனது ஊரிலிருந்து காட்டு வழியே தொலைதூரம் நடந்து குருவாயூருக்குச் சென்று குருவாயூரப்பனை தரிசனம் செய்வார். அவ்வாறு செல்கையில் ஒரு நாள் வழியில் சில கொள்ளைக்காரர்கள் அவரைத் தடுத்துத் தாக்கினர். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார்கள். அவர் மனமோ தன் விரல்களில் உள்ள மோதிரத்தை அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று பயந்தது கண்களை மூடி குருவாயூரப்பா குருவாயூரப்பா என்று உரத்துக் கூறினார். சிறிது நேரத்தில் புதியதான மலரின் மணம் காற்றில் வீசியது. கண் திறந்து பார்த்தபொழுது மாங்காட்டச்சன் என்ற திவான் குதிரை மேல் வேகமாக வாளைச் சுழற்றிக் கொண்டு வந்தார். அவரைக் கண்டதும் கொள்ளையர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். மனம் நெகிழ்ந்த பூந்தானம் உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன் என்று கேட்டார் அவரும் உன்னுடைய கையில் இருக்கும் மோதிரத்தை எனக்குக் கொடு என்று கூறினார். மோதிரம் களவு போய்விடக் கூடாது என்று பயந்த பூந்தானம் இப்போது தயங்கி திகைத்து செய்வதறியாது அந்த மோதிரத்தை திவானுக்குப் பரிசாக அளித்தார். திவான் அவரைத் தன் குதிரையில் ஏற்றிக் கொண்டு குருவாயூர் எல்லையில் விட்டுவிட்டுச் சென்றார்.

அதே நேரம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய குருவாயூரப்பன் அர்ச்சகரே என் கையில் ஒரு மோதிரம் இருக்கும் அதைப் பூந்தானத்திடம் கொடுத்து விடுங்கள். கொள்ளையர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்ற மாங்காட்டச்சன் உருவில் சென்று அவரிடம் இருந்து விளையாட்டாக மோதிரத்தைப் பெற்றேன் என்று கூறினார். பூந்தானம் குருவாயூர்க் கோயிலை நெருங்கும்போது அர்ச்சகர் ஓடி வந்து பூந்தானத்தின் காலில் விழுந்தார். தன் கனவில் குருவாயூரப்பான் சொன்னதைக் கூறி மோதிரத்தை அவரிடம் கொடுத்தார். மோதிரத்தைப் பார்த்த பூந்தானத்திற்குப் புல்லரித்தது. முந்தைய இரவு மாங்காட்டச்சனிடம் கொடுத்த அதே மோதிரம்தான் அது தன்னைக் காப்பாற்ற குருவாயூரப்பனே மாங்காட்டச்சனாக வந்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.

தனது இறுதிகாலம் வந்ததை உணர்ந்த அவர் தான் சொர்க்கத்திற்கு புறப்பட போவதாகவும் தன்னுடன் வர விருப்பம் உள்ளவர்கள் வரலாம் என்றும் அறிவித்தார். கிராம மக்கள் அனைவரும் மறுத்துவிட்டனர். இறுதியில் நோய்வாய்ப்பட்ட மனைவியை பராமரித்த ஒரு வேலைக்காரி மட்டுமே அவருடைய பரலோக பயணத்தில் அவருடன் சேர்ந்து கொண்டதாக அவரது புராண வரலாறு தெரிவிக்கிறது. ராகவியம், விஷ்ணுவிலாசம் சமஸ்கிருதத்தில் சீதாராகவம் மலையாளத்தில் விஷ்ணுகீதா பஞ்சதந்திரம் ஆகிய நூல்களை இயற்றியிருக்கிறார்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -12

ராமரின் பேச்சைக்கேட்ட சீதை பெரும் கோபத்துடன் தர்மம் அனைத்தும் அறிந்த தாங்கள் இவ்வாறு கூறுவது எனக்கு வியப்பை தருகிறது. கணவன் வேறு மனைவி வேறு என்று தங்கள் பிரித்து கூறிகின்றீர்கள். ராமர் வனவாசம் செல்ல வேண்டும் என்றால் அப்போது ராமரின் பாதியாக இருக்கும் சீதைக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அதுவே தர்மம் காட்டிற்கு வந்தால் துக்கப்படுவேன் என்று தாங்கள் எண்ண வேண்டாம் வனவாசத்தை மகிழ்ச்சியுடனேயே அனுபவிப்பேன். உங்களுடன் இருக்கும் போது வனவாசம் என்பது எனக்கு விளையாட்டாகவே இருக்கும். உங்களுடன் இருந்தால் சொர்க்கமும் எனக்கு வேண்டாம். என்னை விட்டு பிரிந்து செல்லாதீர்கள். நீங்கள் என்னை விட்டு பிரிந்தால் மரணித்துவிடுவேன். நீங்கள் செல்லும் காட்டுப்பகுதிக்கு நான் உங்களுக்கு முன்னே சென்று கல் முள் என்று அனைத்தையும் விலக்கி நல்ல பாதையை தங்களுக்கு அமைத்து தருவேன் என்னையும் தாங்கள் அழைத்துச்செல்லுங்கள் என்றாள்.

ராமர் சீதையிடம் காட்டிற்கு நீ என்னுடன் வந்தால் கொடூரமான விலங்குகள் இருக்கும். அரண்மனையில் சுகமாக வாழ்ந்துவிட்டு காட்டில் மண் தரையில் படுக்கவேண்டி இருக்கும். என்று காட்டில் வாழ்ந்தால் வரும் பிரச்சனைகளை சொல்லி வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

சீதையின் கண்களில் நீர் பெருகியது. புலி சிங்கம் போன்ற விலங்குகள் கூட தங்களை கண்டால் தூரமாக விலகிச்செல்லும். தாங்கள் என் அருகில் இருந்தால் நீங்கள் சொல்லும் மழை புயல் காற்று வெயில் என்று அனைத்தையும் என்னால் பொருத்துக்கொள்ள முடியும். நீங்கள் இல்லாமல் இந்த அரண்மணையில் உள்ள சுகங்கள் கூட எனக்கு துக்கமாக இருக்கும். நான் ஜனகரின் மகள். என் தாயும் தந்தையும் எனக்கு கணவன் மனைவிக்கான தர்மத்தை பற்றி சொல்லியிருக்கிறார்கள். கணவன் இருக்கும் இடத்திலேயே மனைவி இருக்க வேண்டும் இதுவே தர்மம். கணவன் செல்லும் பாதையை பின்பற்றி செல்ல வேண்டும் இதுவே என் தந்தை எனக்கு சொன்னது. நீங்கள் உங்கள் தந்தையின் வாக்கை நீங்கள் மீற மாட்டீர்கள். அது போல் என் தந்தை எனக்கு சொல்லிக்கொடுத்த தர்மத்தை நான் மீற மாட்டேன். மேலும் ஒரு செய்தியை சொல்கிறேன். நான் குழந்தையாக இருக்கும் காலத்தில் ஜோதிடர்களை வைத்து என் ஜாதகத்தை என் தந்தை கணித்தார். அப்போது அவர்கள் சில வருடங்கள் வனவாசத்தில் இப்பெண் இருப்பாள் என்று சொல்லியிருக்கின்றார்கள். நான் தனியாக வனவாசம் செய்ய முடியாது. அதற்கான சூழ்நிலையும் ஏற்படவில்லை. இப்போது சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அதனை நான் பயன் படுத்திக்கொள்கிறேன். என்னை தடுக்காதீர்கள். நானும் உங்களுடன் வருவேன் என்று தீர்க்கமாக சொன்னாள் சீதை.

சீதையின் வேண்டுதலை ராமரால் மறுக்க முடியவில்லை. உன்னை அழைத்துச்செல்கிறேன் இருவரும் செல்வோம். உன்னுடைய நகை மற்றும் உனக்கு உரிய பொருள்கள் அனைத்தையும் இல்லாதோர்க்கும் உனது பணியாட்களுக்கும் தானம் அளித்துவிட்டு சாதாராண உடைகளை அணிந்துகொள் இவை அனைத்தையும் விரைவாக செய்துவிடு நாம் விரைவில் அயோத்தியை விட்டு கானகம் செல்லவேண்டும் என்று சீதையிடம் கூறினார். சீதை மகிழ்ச்சியில் திளைத்து தனது உடைமைகளை தானம் கொடுக்க ஆரம்பித்தாள்.

தொடரும்……..

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -11

லட்சுமணன் பேசியது கௌசலைக்கு ஆறுதலாக இருந்தது. ராமர் கௌசலையிடம் பேசினார். தாயே காட்டிற்கு தாங்கள் என்னுடன் வருவது சரியாக இருக்காது. கணவனுடன் மனைவி இருப்பதே தர்மம். நான் சென்றதும் தந்தைக்கு உதவியாக தாங்கள் இருந்து தந்தையை பார்த்துக்கொள்ளுங்கள். தாங்களும் என்னுடன் வந்துவிட்டால் தந்தை மேலும் வருத்தப்படுவார். அது அவரின் உடல் நிலையை பாதிக்கும். நான் தனியாகவே செல்கிறேன். பதினான்கு வருடங்களில் திரும்பி வந்துவிடுவேன். நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள் வாழ்ந்திருப்போம். அதுவரை பொருத்திருங்கள் என்றார்.

லட்சுமணனைப் பார்த்து பேச ஆரம்பித்தார் ராமர். என் மீது நீ வைத்திருக்கும் அன்பை நான் அறிவேன். நீ சொல்லும் யோசனை முற்றிலும் தவறு. கோவம் மனிதனின் முதல் எதிரி. அதனை இப்பொழுதே நீ விட்டுவிடு. உன்சக்தியை நான் அறிவேன். அனைவரையும் தோற்கடித்து இந்த ராஜ்யத்தை நீ எனக்காக சம்பாதித்து கொடுப்பாய். எனக்கு உன் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் தந்தையின் உத்தரவு தர்மமாக இருந்தாலும் அதர்மமாக இருந்தாலும் அவராக கூறியிருந்தாலும் வேறு யாருடைய தூண்டுதலினால் கூறியிருந்தாலும் அதனை நிறைவேற்றுவது என் கடமை. தந்தை கைகேயிக்கு கொடுத்த வாக்கை மீறினால் இத்தனை ஆண்டு காலம் அவர் செய்த பூஜைகள் யாகங்கள் தானதர்மங்கள் அனைத்தும் பயனில்லாமல் போகும். தந்தையுன் வாக்கை காப்பாற்றுவது மிகப்பெரிய தர்மம். இந்த தர்மத்தை செய்யாமல் வேறு எதனை செய்தாலும் இதற்கு ஈடு ஆகாது என்று கௌசலையையும் லட்சுமணனையும் சமாதானப்படுத்தினார் ராமர். கௌசலையிடம் விடைபெற வணங்கினார் ராமர். மங்கள மந்திரங்களை சொல்லி தந்தையின் ஆணையை செய்து முடித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பி வரவேண்டும் என்று திலகமிட்டு வாழ்த்தி விடைகொடுத்தாள் கௌசலை. ராமர் சிரித்துக்கொண்டே பதினான்கு வருடங்களையும் சுலபமாக கழித்துவிட்டு வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு சீதையை பார்க்க தான் இருந்த மாளிகைக்கு கிளம்பினார்.

சீதையிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு காட்டிற்கு செல்லும் நெருக்கடியில் இப்போது ராமர் இருந்தார். ராமருடைய வருகையை பார்த்து ஆவலோடு காத்திருந்தாள் சீதை. ராமர் அரசனாக பட்டாபிஷேகம் செய்யும் எந்த அறிகுறியும் இல்லாமல் வருவதை கண்டு சிறிது குழப்பமடைந்தாள் சீதை. பட்டாபிஷேகம் செய்யும் இன்று தங்களுடன் இருக்கும் வெண்குடை சமாரம் எங்கே? பாடகர்கள் ஓதுவார்கள் எங்கே? தாங்களுடன் வரும் தங்களது சேவகர்கள் எங்கே? என்று கேள்விகளாக கேட்டுக்கொண்டே இருந்தாள் சீதை. ராமர் சீதையிடம் பொருமையாக சொல்ல ஆரம்பித்தார். எனது தந்தை கைகேயிக்கு கொடுத்த வரத்தை காப்பாற்ற பதினான்கு வருடங்கள் காட்டிற்கு சென்று தவம் செய்யப்போகிறேன். பரதன் அரசனாகப்போகின்றான். நீ அமைதியாக அரண்மணையில் வாழ்ந்திருந்து உனது மாமியார் மாமனாருக்கு பணிவிடைகள் செய்து பரதனை அரசனாக அங்கிகரித்து வந்தனை செய்வாயாக என்று சீதையிடம் சொல்லி முடித்தார் ராமர்.

புத்தர்

புத்தர் இறக்கும் காலம் நெருங்கியதும் அவருடைய சீடர்கள் அழுது அரற்றிக் கொண்டிருந்தார்கள். புத்தர் அவர்களிடம் அழுவதை நிறுத்துங்கள். நீங்கள் அழுவதை பார்த்தால் நான் இதுவரை சொல்லிக் கொடுத்ததை எல்லாம் நீங்கள் சரியாகக் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன் என்றார்.

தலைமைச் சீடரான ஆனந்தா புத்தரிடம் நீங்கள் எங்களை விட்டு போகப் போகிறீர்கள். அதை நினைத்து வருத்தப்படாமல் எப்படி இருக்க முடியும் என்றார். அதற்கு புத்தர் நான் சொன்னதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டிருந்தால் உங்களுக்குள் இருக்கும் ஒளியே உணர்ந்து இருந்தீர்களேயானால் அழுவதற்கு எந்த தேவையும் இருக்காது. அமைதியாக இருக்கும் அந்த சீடரைப் பாருங்கள். அவரால் எப்படி அழாமல் உட்கார்ந்து இருக்க முடிகிறது என்று கேளுங்கள் என்றார்.

அமைதியாக இருந்த சீடர் கூறினார் எனக்குள் இருக்கும் ஆன்மாவை அறிந்து கொள்ள புத்தர் உதவினார். நானே சாகப் போவதில்லை என்கின்ற போது புத்தர் எப்படி சாக முடியும்? புத்தர் இங்கேதான் இருக்கப் போகிறார். இதுவரை புத்தர் ஒரு சிறு உடலுக்குள் அடங்கிக் கிடந்தார். ஒரு நதி கடலில் கரைந்து விடுவதைப் போல அவர் இந்தப் பிரபஞ்சத்தில் கரைந்து விடப் போகிறார். இந்தப் பிரபஞ்சம் முழுக்க பரவியிருக்கப் போகிறார். எனக்கு இது பெரு மகிழ்ச்சியைத் தருகிறது என்றார். இதனை எப்படி அறிந்து கொண்டாய் என்று அவரிடம் அனைவரும் கேட்டார்கள்.

என்னுடைய ஆன்மாவை நான் தெரிந்து வைத்திருப்பதால் புத்தர் இந்த உடலை விட்டு பிரபஞ்சத்தில் கலக்கப்போவது எனக்கு தெரிந்திருக்கிறது. அவர் சொன்னதையெல்லாம் நான் கேட்டு உள்வாங்கிக் கொண்டேன் . நீங்கள் அதனை உள்வாங்கவில்லை அதனால்தான் அழுகிறீர்கள் என்றார். புத்தர் மீண்டும் பேசினார். உனக்கு நீயே ஒளியாவாய் என்று புத்தர் கூறி விட்டு இந்த பிரபஞ்சத்தில் கலந்து விட்டார்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -10

ராமர் தன்னுடன் வந்த வெண்குடை சமாரம் என்று இளவரசனுக்கு உரிய அனைத்து சுகங்களும் தனக்கு வேண்டாம் யாரும் தன்னை பின் தொடர வேண்டாம் என்று சொல்லிவிட்டு தாய் கௌசலையின் மாளிகையை நோக்கி லட்சுமணனுடன் தனியாக செல்ல ஆரம்பித்தார். லட்சுமணன் கண்கள் சிவக்க கோபத்துடன் ராமரை பின் தொடர்ந்தார்.

கௌசலையின் மாளிகையில் அனைவரும் ராமரின் பட்டாபிஷேகத்தை காணச்செல்வதற்கு மகிழ்ச்சியுடன் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். ராமர் வந்ததை கண்ட கௌசலை ராமனை கட்டியணைத்து வரவேற்றாள். ராமருக்கு உரிய ஆசனத்தில் அமரச்சொன்னாள். ராமர் தாயே இந்த ஆசனத்தில் என்னால் அமர இயலாது. புல்லை பரப்பி உட்கார வேண்டிய தவஸ்வி தான். தங்களுக்கு வருத்தம் தரக்கூடிய செய்தியை கொண்டு வந்திருக்கின்றேன். தங்களையும் சீதையையும் லட்சுமணனையும் பிரிந்து காட்டிற்கு செல்லப்போகிறேன். தாங்கள் இச்செய்தியை பொருத்துக்கொண்டு என் செயலுக்கு ஆசி கூறி எனக்கு விடை கொடுக்கவேண்டும் என்று நடந்தவற்றை விரிவாக எடுத்துக்கூறி இன்றே நான் காட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லி முடித்தார்.

ராமர் சொன்னதை கேட்ட கௌசலை அம்பினால் தாக்கப்பட்ட பெண்மானைப்போல கீழே விழுந்தார். எனக்கு பிள்ளையாக பிறக்காவிட்டால் உனக்கு இந்த தூன்பம் வந்திருக்காது. தசரதர் ஆட்சியில் இருக்கும் போது மூத்த பட்டத்து அரசிக்கான எந்த சுகத்தையும் கண்டதில்லை. உன் சிற்றன்னைகளே அனைத்தையும் அனுபவித்தனர். அவர்களின் பணிப்பெண் போலவே நான் நடத்தப்பட்டேன். என் கணவர் என்னை சற்று தள்ளியே வைத்திருந்தார். நீ என்னுடன் இருந்த காரணத்தால் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது நீயும் என்னை விட்டு பிரிந்தால் என் கதி என்ன ஆகும் என்று எனக்கு தெரியவில்லை. நிச்சயமாக மரணித்து விடுவேன். கன்றின் மேல் உள்ள பாசத்தால் கன்றைத்தொடர்ந்து செல்லும் பசுவைப்போல் உன்னை தொடர்ந்து வருகிறேன் என்னையும் அழைத்துச்செல் என்று அழுதபடி சொன்னார்.

கௌசலையின் அழுகையினால் வருந்திய லட்சுமணன் பேச ஆரம்பித்தான். பெரியன்னையே சிற்றன்னையின் சொல்லிற்கான ராமர் காட்டிற்கு செல்வது எனக்கும் சம்மதமில்லை. நாட்டைவிட்டு காட்டிற்கு செல்லும் அளவிற்கு ராமர் குற்றம் ஒன்றும் சொல்லவில்லை. அவரிடம் மறைமுகமாக கூட யாரும் இதுவரை ஒர் குற்றத்தை கண்டதில்லை. வயோதிகரான தந்தையின் குணம் மாறிவிட்டது. கைகேயின் துர்செயலால் அவர் ஒன்றும் பேசாமல் இருக்கிறார். அவருடைய காலம் கடந்துவிட்டது. மக்கள் அனைவரும் ராமரை சிம்மாசனத்தில் பார்க்க ஆவலாக இருக்கின்றார்கள். அண்ணா உடனே அரச பட்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு உத்தரவு தாருங்கள். எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழித்துவிடுகிறேன் என்று கோபத்துடன் கூறினான் லட்சுமணன்.

மதனந்தேஸ்வரர் மதூர் சித்தி விநாயகர்

கேரள மாநிலம் மதூரில் இருக்கிறது மதனந்தேஸ்வரர் கோயில். சிவனுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் என்றாலும் மக்கள் சித்தி விநாயகர் கோவில் என்றே அழைக்கின்றனர்.

ஒருமுறை மதூர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி இனப்பெண் ஒருவர் தனது பசுக்களுக்காகப் புல் அறுக்க காட்டுக்குச் சென்றார். அங்கு புல் அறுத்துக் கொண்டிருக்கும் போது அங்கு திடீரென சுயம்பு லிங்கம் ஒன்று வெளிப்பட்டது. உடனே அந்தப் பெண் ஓடி வந்து லிங்கம் வந்த அதிசயத்தை தன் இனத்தின் மூத்தவர்களிடம் கூறினாள். அவர்கள் மதூர் அரசனான மயிபாடி ராமவர்மாவிடம் சொன்னார்கள். சுயம்பு லிங்கம் கிடைத்தது குறித்து சந்தோஷத்தில் ராமவர்மா உடனடியாக அங்கே சிவனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப உத்தரவிட்டார். எந்த இடத்தில் கோவில் கட்டுவதென மன்னர் ஆன்மீக குருக்களையும் ஜோதிடத்தில் அறிந்த பெரியவர்களையும் வரவழைத்து ஆலோசனை கேட்டார். தீவிரமாக ஆலோசித்த பின் கோவில் கட்டுவதற்கான புள்ளியை எப்படித் தீர்மானிப்பதென வாக்குச் சொன்னார்கள். எந்தப் பெண்மணிக்கு முதன்முதலாகச் சுயம்புலிங்க தரிசனம் எங்கு கிடைத்ததோ அங்கு அந்த பெண்மணியை வரவழைத்து வந்து அவரது கையில் புல்லறுக்கும் கதிரறிவாளை கொடுக்கவேண்டும். அங்கிருந்து அதைத் தூரமாக தூக்கி வீசவேண்டும் என்றார்கள். அரசனும் அதன்படி செய்ய உத்தரவிட்டான். அப்பெண்மணி வீசிய கதிரறிவாள் மதுவாணி ஆற்றங்கரையோரம் சென்று விழுந்தது. அந்த இடத்திற்கு அனைவரும் சென்று பார்க்கையில் அங்கு பேரதிசயமாக புலியும் பசுவும் ஒரே இடத்தில் வாய் வைத்து நீரருந்திக் கொண்டிருந்தன. புலிக்கு இரையாகக் கூடிய பசுவுடன் புலி ஒற்றுமையாக நீரருந்தியது என்றால் அந்த இடம் புனிதமானது தான் என்று முடிவெடுத்து அங்கு சிவாலயம் எழுப்பினார்கள். மதனந்தேஸ்வரர் என்ற பெயரில் எழுந்த அந்த சிவாலயத்தில் பூஜை புனஸ்காரங்களைச் செய்விக்க நம்பூதிரி குடும்பத்தார் வரவழைக்கப்பட்டார்கள்.

ஒரு நாள் பூஜை செய்ய வந்த நம்பூதிரிமார்களில் பெரியவர்கள் எல்லாம் சிவ வழிபாட்டில் ஆழ்ந்திருந்தனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்களுக்கு பூஜை முடிந்த நேரங்களில் விளையாட ஆரம்பித்தார்கள். அந்த ஆலயத்தின் வேறொரு இடத்தில் கற்சுவற்றில் விநாயகர் உருவம் ஒன்றை வரைந்து வைத்துக் கொண்டு தம் வீட்டுப் பெரிய ஆண்கள் சிவனுக்கு வழிபாடு செய்வதைப் போலவே சிறுவர்களும் விநாயகருக்கு வழிபாடுகளும் பூஜைகளும் நடத்தத் தொடங்கினார்கள். பொழுது போக்காகத் தொடங்கிய குழந்தைகளின் பூஜையில் வினாயகரை கண்ட பெரியவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். கற்சுவரில் வரையப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்த விநாயகர் புடைப்புச் சிற்பம் போல வளர்ந்து பெரிதாக பெரும் சிலை வடிவம் பெற்றிருந்தார். குழந்தைகளின் சித்திரத்தில் இருந்து உருவான சுயம்பு மூர்த்தி என்பதால் அரசன் அவருக்கும் சிவனைப்போலவே பூஜை புனஸ்காரங்கள் நடத்த உத்தரவிட்டார்.

கேரளாவில் கும்பலா என்ற ஊரை ஆண்ட முதலாம் நரசிம்மன் பாண்டிய மன்னனுடன் போரிடச் சென்றபோது இந்த விநாயகரை வேண்டிக் கொண்டு சென்று வெற்றி வாகை சூடினார். அதன் நினைவாக இக்கோயிலில் ஒரு விஜய ஸ்தம்பத்தை நிறுவினார். அதை இன்றும் காணலாம். 1.68 மீட்டர் உயரத்தில் தெற்கு பார்த்து உள்ளது. இந்நாட்டு மன்னர் காசி சென்று வந்ததன் அடையாளமாக காசி விஸ்வநாதரையும் தட்சிணாமூர்த்தியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்.

ஒருமுறை மைசூர் மன்னன் திப்பு சுல்தான் இங்கு படையெடுத்து வந்தான். அந்தப் படையெடுப்பின் போது திப்பு இந்துக் கோவில்கள் பலவற்றைச் சிதைத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான். பல ஆயிரம் இந்துக்களை வாள் முனையில் முஸ்லீமாக மாற்றினான். மாறாதவர்களை கொன்று குவித்தான். அவ்வேளையில் இந்தக் கோவிலிலும் நுழைந்து அவன் உபதேவதைகளை எல்லாம் சிதைத்து விட்டு கருவறை விநாயகரை நோக்கி முன்னேறிச் செல்கையில் திடீரென அவருக்கு தொண்டை வறண்டு தாகம் எடுத்திருக்கிறது. உடனே திப்பு கோவில் வளாகத்தில் இருந்த சந்திராசலா என்கிற கிணற்றுக்குச் சென்று அங்கிருந்த நீரை அருந்தினான். நீரை சிறிது அருந்தியவுடன் போரை நிறுத்தி விட உத்தரவிட்டு கருவறைச் சிலையை சேதப்படுத்தாமல் அப்படியே விட்டுச்சென்று விட்டான். இன்றும் இக்கோவிலின் தென்மேற்கு மூலையில் இருக்கும் சந்திராசலா கிணற்றுச் சுவரில் திப்பு தன் வாளால் கீறிய தடம் இருக்கிறது. இப்படி இந்தக் கோவிலைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் அனைத்தும் கோவிலின் தல புராணத்தில் இடம்பெற்றுள்ளன.

மூன்றடுக்கு அமைப்பில் உருவாக்கப்பட்ட இந்தக் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் நடக்கும் நாட்களில் அந்த அபிஷேக நீர் வெளியேற வழியே இல்லை. இங்கு அபிஷேக நீர் அப்படியே பூமிக்குள் புதையுண்டு செல்ல சுரங்கம் அமைத்திருக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு திடம்பு மூர்த்தி என்று சொல்லப்படக்கூடிய உற்சவ மூர்த்தியின் எடையானது மிக அதிகம். எனவே உற்சவ மூர்த்தி ஊர்வலமென்பது இந்தக் கோவிலுக்கு கிடையாது.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -9

ராமன் எந்த சலனமும் இல்லாமல் கைகேயியிடம் கம்பீரத்துடன் பேச ஆரம்பித்தார். பெற்றோர்களிடமிருந்து வரும் ஆணையை செயல்படுத்துவது மகனின் கடமை. என் தந்தை மட்டுமல்ல தாங்கள் எனக்கு ஆணையிட்டாலும் கொளுந்து விட்டு எரியும் தீயில் குதிப்பேன். ஆழ்கடலில் மூழ்குவேன். விஷத்தையும் அருந்துவேன். எனக்கு எந்த ஒரு வருந்தமும் இல்லை. தாங்கள் ஆணையிடுங்கள் அதற்கு அடிபணிந்து அச்செயலை இப்போதே செய்து முடிக்கிறேன் என்றார்.

ராமர் இவ்வாறு சொன்னதும் கைகேயி நமது காரியத்தை சுலபமாக சாதித்துவிடலாம். நாம் நினைத்த காரியம் இனிது முடியப்போகிறது என்று மகிழ்ச்சியுடன் மகா பயங்கரமான செய்தியை ராமரிடம் சொல்ல ஆரம்பித்தாள். முதல் வரமாக உனக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தில் பரதனுக்கு முடிசூட்டி அரசனாக்க வேண்டும். இரண்டாவது வரமாக நீ தவம் செய்யும் பொருட்டு காட்டிற்கு 14 வருடங்கள் வனவாசம் செல்லவேண்டும். இதுவே நான் உனது தந்தையிடம் கேட்ட வரம். இதனை கொடுக்க உனது தந்தை மறுத்தால் கொடுத்த சத்தியத்தில் இருந்து மீறியவர் ஆவார். இந்த இரண்டு வரங்களும் என்னால் மாற்ற முடியாத திட்டங்களாகும் என்று சொல்லி முடித்தாள். ஆனால் ராமரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.

என் தந்தையின் சத்தியத்தை காப்பாற்றும் பொருட்டு இப்போதே அரச உடைகளை களைந்து மரவுரி தரித்து காட்டுக்கு செல்கின்றேன். என் தந்தையின் வாக்கை எனது வாக்காக காப்பாற்றுவது எனக்கு கிடைத்த பாக்கியம். அதனை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவேன். பரதனுக்காக எதையும் விட்டுக்கொடுத்து பரமசந்தோசத்தை அடைவேன். இதனால் எனக்கு எள் அளவும் வருத்தம் இல்லை. பரதனை தூதுவர்கள் மூலம் அழைத்து வரச்செய்து குறித்த நேரத்தில் முடிசூட்டி விடுங்கள். பரதன் அரசாள்வது எனக்கு மகிழ்ச்சியே. எனது தந்தை தாயாரிடமும் சீதையிடமும் லட்சுமனனுடனும் விடைபெற்று செல்லவேண்டும். அதற்கான கால தாமதத்திற்கு மட்டும் சிறிது அனுமதி தாருங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டான். ராமருடைய முகத்தில் சிறிதளவும் வருத்தத்திற்கு உண்டான அறிகுறி கூட கைகேயிக்கு தெரியவில்லை. ராமரை பார்த்து திகைப்படைந்தாள். உடன் சென்ற லட்சுமனனுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பம் தெளிவாக புரிந்தது. தாய் தந்தையை எதிர்த்து பேச இயலாமல் மிகவும் துன்பத்தில் மூழ்கியவனாக தென்பட்டான். தசரதர் ராமர் நிலை என்ன ஆகுமோ என்று நடுநடுங்கிப்போய் பேச வார்த்தைகள் வராமல் அமர்ந்திருந்தார்.

ராமர் தசரதரையும் கைகேயியிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து லட்சுமனனுடன் தனது தாய் கௌசலையை பார்க்க சென்றார். கைகேயி தனக்கு பின்னால் வரும் வரப்போகும் துக்கத்தை அறியாமல் தன்னுடைய திட்டம் வெற்றி அடைந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள்.

இறைவன்

ஒரு ராஜா தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார். திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும். மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார். ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது. காட்டு வழியே வரும்போது திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள். மந்திரியும் காவலர்களும் வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நின்று விடுகிறார்கள். எங்கிருந்தோ ஆறு இளையர்கள் வந்து அவர்களை காப்பாற்றுகிறார்கள்.

மந்திரியுடன் ஆறு இளையர்களும் ராஜாவிடம் வருகிறார்கள். ராஜாவும் மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம் உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்று கூறுகிறார். முதல் இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான். இரண்டாவது இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான். மூன்றாவது இளைஞன் தான் வசிக்கும் கிராமத்தில் சாலைகள சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான். நான்காவது இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான். ஐந்தாவது இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான். அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன ராஜா ஆறாவது இளைஞனைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான். இளைஞன் சற்று தயங்குகிறான் ராஜா மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான். அரசே எனக்கு பொன் பொருள் என்று எதுவும் வேண்டாம். வருடம் ஒரு முறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும் என்று சொன்னான். ராஜாவும் இவ்வளவு தானா என்று முதலில் கேட்டான். பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை தெரிந்து கொண்டான். ராஜா அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால் அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும். அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும். வேலைக்காரர்கள் வேண்டும். அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும். சொல்லப் போனால் முதல் ஐந்து இளைஞர்களும் கேட்து எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும் என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,

இந்தக் கதையில் கூறிய ராஜாதான் அந்த இறைவன். பொதுவாக எல்லோரும் இறைவனிடம் கதையில் கூறிய முதல் ஐந்து இளைஞர்களைப் போல் தனக்கு வேண்டிய செல்வம் திருமணம் குழந்தைகள் வேலை ஆரோக்கியம் என்று கேட்பார்கள். கடைசி இளைஞனைப் போல் இறைவனே நம்மிடம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும்.